சாராவிற்கு பனிப்புகை விலகியிராத காலைகளில் பசிய இலைகளில் தேங்கியிருக்கும் பனித்துளியைப் பருக மிகவும் பிடிக்கும்.ஜோ இந்த வினோத பழக்கத்தை கிண்டலடிப்பான்.'பூனைக்குட்டிகளின் சாபம் வாங்கிக்கொள்ளாதே' என பயமுறுத்துவான். சாரா தன் கண்களிமைத்துப் புன்னகைப்பாள்.இரு கண்களையும் வேகமாய் இமைத்துவிட்டு புன்னகைப்பது சாராவின் தனியடையாளம்.அவள் இந்த நளினங்களை எங்கிருந்து, யாரிடமிருந்து பெற்றாள் என ஜோ சில தேநீர் அருந்தும் மாலைகளில் யோசித்துக் கொண்டிருப்பான்.
சாரா கோபித்தோ,முகம் சுருங்கியோ,ஒருபோதும் கண்டதில்லை.பிடிக்காத ஒன்றினை எதிர்கொள்ளும் நொடியில் சின்னதாய் ஒரு நெற்றிச்சுருக்கம் உடனே அதையும் அவசரமாய் மாற்றிக்கொள்வாள்.ஜோ விற்கு சாராவுடன் வசிப்பது மிகவும் இணக்கமாயிருந்தது.அதீத அன்போ, அதீத வெறுப்போ, எதிர்பார்ப்போ, ஏமாற்றங்களோ, இல்லாமல் இயல்பாய், மிருதுவாய் நகரும் நாட்கள் வெகுசுவாதீனமாய் இருந்ததவனுக்கு. ஜோவிற்கும் சாராவிற்குமான பொதுப்புள்ளிகள் இருவருமே மாற்றங்களை பெரிதாய் விரும்புவதில்லை. தினந்தோறும்களில் சலிப்பும் ஏற்படுவதில்லை.விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையினை இருவருமே வெறுத்ததால் வாலசைத்து நகரும் நாய்குட்டியினைப்போல் நாட்கள் ஓடிப்போனது.
ஒரு நாளில் மழை துவங்கிய விடியலின் நசநசப்பில் ஜோ விற்கு சாராவும், சாராவிற்கு ஜோ வும் பரஸ்பரம் அலுத்துப்போனார்கள்.(இப்போது இந்த வீட்டில் யாரை அனுப்பிவிட்டு யாரை வைத்துக்கொள்வதென கதை சொல்லி சிறிது குழம்பினான் பின்பு தானொரு ஆண் என்பதினை உணர்ந்து சாராவை அனுப்பிவிட்டான்)

சாராவிற்கு நிறைய நண்பர்கள்.சிறிது நேரம் யோசித்து ஆனெட் வீட்டிற்குப் போவதாய் முடிவெடுத்தாள்.ஆனெட் சாராவினை எதிர்பார்க்காதது அவளின் விரிந்த சிறுவிழியில் தெரிந்தது.கடற்கரைக்கு வெகு சமீபமான ஆனெட்டின் வீடு சாராவிற்குப் பிடித்திருந்தது.மிகப்பெரும் சன்னல்கள் வழியே மழை சிறு கோடுகளாய் கடலில் இறங்கிக் கொண்டிருந்தது.சாராவிற்கு கடைசியாய் எப்போது அழுதோம் என யோசிக்கத் தோன்றியது. சன்னல் திரைச்சீலைகளை கெட்டியாய் பிடித்தபடி கடலைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள்.நினைவில் வரவில்லை.அறைக்கதவை சாத்தி விட்டு அதிரும் இசையை நிரப்பினாள்.சத்தம் வெளியில் கேட்காதென உறுதிபடுத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.பல வருடங்களாய்த் தேங்கி இருந்த த/கண்ணீர் விழிகளின் வழியிறங்கி அறையை நிறைத்தது. அறையிலிருந்த அனைத்தும் எடையிழந்து மிதக்கத் துவங்கின.
அறை வெகு நேரமாய் தட்டப்படுவதை உணர்ந்த சாரா நிரம்பியிருந்த கண்ணீரை வழித்தெடுத்து சன்னல்வழிக் கொட்டினாள்.திரைச்சீலைகளை அகல விரித்தாள் கண்ணீர் கழுவிய அறையும் சாராவும் சூரிய ஒளி பட்டு மினுமினுத்தனர். திருப்தியாக கதவைத் திறந்தாள்.ஆனெட் உணவிற்காக அழைக்க வாயெடுத்தவள் திடீரெனப் பிரகாசிக்கும் சாராவைப் பார்த்துப் பிரம்மித்தாள்.சாராவின் கண்கள் நீல நிற ஒளி யினை உமிழ்ந்தன.ஆனெட்டின் இதயம் பனிக்கட்டியாக உருகத் துவங்கியது.தாங்க இயலாத பிரம்மிப்போடு சாராவினை அணைத்துக் கொண்டாள்.சாரா ஆனெட்டின் முகமேந்தி உதடுகளில் மென்மையாய் முத்தமிட்டாள்.
ஜோ இந்த யாருமில்லாத கணத்தை நேசித்தான்.எதனிலிருந்தோ விடுபட்ட உணர்வை உணரமுடிந்தது. இது இத்தனை நாளாய் எங்கிருந்தது எனப் பிதற்றினான்.'பெண் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சுமை' எனக் கத்தினான். வைன்கள் மட்டுமே இருந்த குளிர்ப்பெட்டியை எட்டி உதைத்தான்.அலமாரி கலைத்து. அவளுக்குப் பிடிக்காத உடையணிந்து கிளம்பினான். தானின்று மிக வசீகரமாயிருப்பதாய் நம்பினான்.ஸ்ட்ரிப்டீசை வெறித்தபடி பியரும் ரம்மும் கலந்ததாய் இரண்டு ரவுண்ட அடித்தான். மேலதிகமாய் நாலு ஷாட் டகீலா அடித்தான்.பேரரிடம் தாட்டியான கருப்பு தேசப் பெண்ணொருத்தி வேண்டுமென்றான். பேரர குனிந்து ஆசோல் எனத் திட்டியதில் வெளிறி வெளிவந்தான்.ரத்தம் தெறிக்க ஒரு வலிமையான பெண்ணைப் புணர வன்மம் கொண்டான்.சாலையோரப் பெண்ணொருத்தி அவனின் நிலை கொள்ளாமையுணர்ந்து அவளிருப்பிடம் அழைத்துப் போனாள்.மிகுந்த எழுச்சிகளோடு அவளை உண்ண வெறிகொண்டான்.உடல் சுத்தமாய் அவன் எண்ணங்களோடு ஒத்துழைக்கவில்லை.போராடித் தோல்வியுற்றவனைப் பார்த்து அவள் சிரிக்கவாரம்பித்தாள்.அவளின் வெண்கலச் சிரிப்பு அக்குறுகலான அறையின் சுவர்களில் மோதிப் பட்டுத் தெறித்தது.காதுகளைப் பொத்திக் கொண்டான்.வாரிச்சுருட்டிபடி வெளிவந்தான். மிகவும் அவமானமாய் உணர்ந்தான்.நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினான்.
சாரா இப்போதெல்லாம் பனித்துளி குடிப்பதில்லை.ஆனெட் வீட்டில் செடிகளோ மரங்களோ இல்லை சன்னல்களின் முன்பு விரிந்திருந்தது கடல்.விழித்தெழுந்தவுடன் புகைக்கும் பழக்கமும் எப்படியோ வந்து விட்டிருந்தது. புகையும் தேநீருமான காலைகள் பனித்துளி காலைகளைப் போலவில்லை என்றாலும் இந்த மெல்லிய போதையும் பிடித்தமானதாகத்தான் இருந்தது. ஆனெட் சாராவைக் கொண்டாடினாள்.தானெப்போதும் சந்தித்திராத பேரழகியென நள்ளிரவுகளில் புலம்பினாள்.தன் நாவுகள் மிகப்பெரும் புனிதம் செய்தவை எனப் பிதற்றினாள்.சாராவிற்கும் ஆனெட்டின் பைத்தியம் பிடித்திருந்தது. புதுமையாகவிருந்தது.மிக விடுதலையாய் உணர்ந்தாள்.இருப்பினும் பழகிய உச்சங்களில்லாத நொடிகளில் அவளுக்கு ஆனெட்டை எட்டி உதைக்கத் தோன்றியது.ஒரு நாள் விடியலில் எட்டி உதைத்தே விட்டாள்.சற்றுத் தள்ளி விழுந்த ஆனெட் ,மிக அவமானமாய் உணர்ந்தாள்.சாராவின் துணிகளை பெட்டியில் அடைத்து, அவள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிக் கதவை மூடினாள்.

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் சாரா நடுச் சாலையில் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்லச் சிரிப்படங்கி மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த மீன் வாலையும், இறக்கைகளையும், சாரா அணிந்திருந்தாள்.அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவள் கடலில் நீந்தி, வானத்தில் பறந்தாள். ஒரே சமயத்தில் வானத்திலும், கடலிலும் சாராவிருந்தாள்.கடல் விரிந்து வானம் தொட்டதா இல்லை வானம் குறைந்து கடல் தொட்டதா என்பதை உணர அங்கே எதுவுமில்லை.கடலும் வானமும் சேர்ந்து மொத்தமும் நீலமாயிருந்தது.