Thursday, August 21, 2008

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...


சாரா
விற்கு பனிப்புகை விலகியிராத காலைகளில் பசிய இலைகளில் தேங்கியிருக்கும் பனித்துளியைப் பருக மிகவும் பிடிக்கும்.ஜோ இந்த வினோத பழக்கத்தை கிண்டலடிப்பான்.'பூனைக்குட்டிகளின் சாபம் வாங்கிக்கொள்ளாதே' என பயமுறுத்துவான். சாரா தன் கண்களிமைத்துப் புன்னகைப்பாள்.இரு கண்களையும் வேகமாய் இமைத்துவிட்டு புன்னகைப்பது சாராவின் தனியடையாளம்.அவள் இந்த நளினங்களை எங்கிருந்து, யாரிடமிருந்து பெற்றாள் என ஜோ சில தேநீர் அருந்தும் மாலைகளில் யோசித்துக் கொண்டிருப்பான்.

சாரா கோபித்தோ,முகம் சுருங்கியோ,ஒருபோதும் கண்டதில்லை.பிடிக்காத ஒன்றினை எதிர்கொள்ளும் நொடியில் சின்னதாய் ஒரு நெற்றிச்சுருக்கம் உடனே அதையும் அவசரமாய் மாற்றிக்கொள்வாள்.ஜோ விற்கு சாராவுடன் வசிப்பது மிகவும் இணக்கமாயிருந்தது.அதீத அன்போ, அதீத வெறுப்போ, எதிர்பார்ப்போ, ஏமாற்றங்களோ, இல்லாமல் இயல்பாய், மிருதுவாய் நகரும் நாட்கள் வெகுசுவாதீனமாய் இருந்ததவனுக்கு. ஜோவிற்கும் சாராவிற்குமான பொதுப்புள்ளிகள் இருவருமே மாற்றங்களை பெரிதாய் விரும்புவதில்லை. தினந்தோறும்களில் சலிப்பும் ஏற்படுவதில்லை.விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையினை இருவருமே வெறுத்ததால் வாலசைத்து நகரும் நாய்குட்டியினைப்போல் நாட்கள் ஓடிப்போனது.

ஒரு நாளில் மழை துவங்கிய விடியலின் நசநசப்பில் ஜோ விற்கு சாராவும், சாராவிற்கு ஜோ வும் பரஸ்பரம் அலுத்துப்போனார்கள்.(இப்போது இந்த வீட்டில் யாரை அனுப்பிவிட்டு யாரை வைத்துக்கொள்வதென கதை சொல்லி சிறிது குழம்பினான் பின்பு தானொரு ஆண் என்பதினை உணர்ந்து சாராவை அனுப்பிவிட்டான்)

சாரா போன பத்து நிமிடத்தில் நசநச மழை நின்றது.விட்டுக்கொடுத்தல் என்ற நேரடிப் பெயரில் இல்லாமல் நிறைய விசயங்களை சாராவிற்காக மாற்றிக் கொண்டது அப்போதுதான் அவனுக்கு உறைக்க ஆரம்பித்தது.நடு வீட்டில் அமர்ந்து சிகரெட் பிடித்தான்.அவனுக்கு மிகவும் பிடித்தமான, இசைத்து வெகுநாளாகியிருந்த, குளிரில் ஒரு மூலையில் ஒண்டிக்கிடந்த பியானோ வை எவ்வித இசைக்குறிப்புகளின் துணையில்லாமல் அதிர்க்க ஆரம்பித்தான்.பியானோ அதிர்வில் வீடு தலைகீழானது.அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டான்.பியானோவின் மீது கால் தூக்கிப்போட்டுப் புகைத்தபடி சுயமாய் இன்பித்தான்.உச்சதிர்வில் உள்ளடங்கிய எழுச்சிகளை மீண்டுமெழுப்பும் பொருட்டு எழுந்து நின்றுக்கத்தினான். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.........ஏற்கனவே தலைகீழான வீடு இப்போது ஒட்டிக்கொண்டிருந்த இடத்திலிருந்து உதிர ஆரம்பித்தது.உதிர்வுகளிலிருந்து ஒரு துகளென செந்நிறப்பூனையொன்று பியானோவின் மீது குதித்தது.தன் கூறிய நகங்களினால் பியானோவை இசைக்க ஆரம்பித்தது.விட்டிருந்த நசநச மழை பெருமழையின் வடிவம் கொண்டு நேரடியாய் அறை நிறைத்தது.

சாராவிற்கு நிறைய நண்பர்கள்.சிறிது நேரம் யோசித்து ஆனெட் வீட்டிற்குப் போவதாய் முடிவெடுத்தாள்.ஆனெட் சாராவினை எதிர்பார்க்காதது அவளின் விரிந்த சிறுவிழியில் தெரிந்தது.கடற்கரைக்கு வெகு சமீபமான ஆனெட்டின் வீடு சாராவிற்குப் பிடித்திருந்தது.மிகப்பெரும் சன்னல்கள் வழியே மழை சிறு கோடுகளாய் கடலில் இறங்கிக் கொண்டிருந்தது.சாராவிற்கு கடைசியாய் எப்போது அழுதோம் என யோசிக்கத் தோன்றியது. சன்னல் திரைச்சீலைகளை கெட்டியாய் பிடித்தபடி கடலைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள்.நினைவில் வரவில்லை.அறைக்கதவை சாத்தி விட்டு அதிரும் இசையை நிரப்பினாள்.சத்தம் வெளியில் கேட்காதென உறுதிபடுத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.பல வருடங்களாய்த் தேங்கி இருந்த த/கண்ணீர் விழிகளின் வழியிறங்கி அறையை நிறைத்தது. அறையிலிருந்த அனைத்தும் எடையிழந்து மிதக்கத் துவங்கின.

அறை வெகு நேரமாய் தட்டப்படுவதை உணர்ந்த சாரா நிரம்பியிருந்த கண்ணீரை வழித்தெடுத்து சன்னல்வழிக் கொட்டினாள்.திரைச்சீலைகளை அகல விரித்தாள் கண்ணீர் கழுவிய அறையும் சாராவும் சூரிய ஒளி பட்டு மினுமினுத்தனர். திருப்தியாக கதவைத் திறந்தாள்.ஆனெட் உணவிற்காக அழைக்க வாயெடுத்தவள் திடீரெனப் பிரகாசிக்கும் சாராவைப் பார்த்துப் பிரம்மித்தாள்.சாராவின் கண்கள் நீல நிற ஒளி யினை உமிழ்ந்தன.ஆனெட்டின் இதயம் பனிக்கட்டியாக உருகத் துவங்கியது.தாங்க இயலாத பிரம்மிப்போடு சாராவினை அணைத்துக் கொண்டாள்.சாரா ஆனெட்டின் முகமேந்தி உதடுகளில் மென்மையாய் முத்தமிட்டாள்.

ஜோ இந்த யாருமில்லாத கணத்தை நேசித்தான்.எதனிலிருந்தோ விடுபட்ட உணர்வை உணரமுடிந்தது. இது இத்தனை நாளாய் எங்கிருந்தது எனப் பிதற்றினான்.'பெண் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சுமை' எனக் கத்தினான். வைன்கள் மட்டுமே இருந்த குளிர்ப்பெட்டியை எட்டி உதைத்தான்.அலமாரி கலைத்து. அவளுக்குப் பிடிக்காத உடையணிந்து கிளம்பினான். தானின்று மிக வசீகரமாயிருப்பதாய் நம்பினான்.ஸ்ட்ரிப்டீசை வெறித்தபடி பியரும் ரம்மும் கலந்ததாய் இரண்டு ரவுண்ட அடித்தான். மேலதிகமாய் நாலு ஷாட் டகீலா அடித்தான்.பேரரிடம் தாட்டியான கருப்பு தேசப் பெண்ணொருத்தி வேண்டுமென்றான். பேரர குனிந்து ஆசோல் எனத் திட்டியதில் வெளிறி வெளிவந்தான்.ரத்தம் தெறிக்க ஒரு வலிமையான பெண்ணைப் புணர வன்மம் கொண்டான்.சாலையோரப் பெண்ணொருத்தி அவனின் நிலை கொள்ளாமையுணர்ந்து அவளிருப்பிடம் அழைத்துப் போனாள்.மிகுந்த எழுச்சிகளோடு அவளை உண்ண வெறிகொண்டான்.உடல் சுத்தமாய் அவன் எண்ணங்களோடு ஒத்துழைக்கவில்லை.போராடித் தோல்வியுற்றவனைப் பார்த்து அவள் சிரிக்கவாரம்பித்தாள்.அவளின் வெண்கலச் சிரிப்பு அக்குறுகலான அறையின் சுவர்களில் மோதிப் பட்டுத் தெறித்தது.காதுகளைப் பொத்திக் கொண்டான்.வாரிச்சுருட்டிபடி வெளிவந்தான். மிகவும் அவமானமாய் உணர்ந்தான்.நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினான்.

சாரா இப்போதெல்லாம் பனித்துளி குடிப்பதில்லை.ஆனெட் வீட்டில் செடிகளோ மரங்களோ இல்லை சன்னல்களின் முன்பு விரிந்திருந்தது கடல்.விழித்தெழுந்தவுடன் புகைக்கும் பழக்கமும் எப்படியோ வந்து விட்டிருந்தது. புகையும் தேநீருமான காலைகள் பனித்துளி காலைகளைப் போலவில்லை என்றாலும் இந்த மெல்லிய போதையும் பிடித்தமானதாகத்தான் இருந்தது. ஆனெட் சாராவைக் கொண்டாடினாள்.தானெப்போதும் சந்தித்திராத பேரழகியென நள்ளிரவுகளில் புலம்பினாள்.தன் நாவுகள் மிகப்பெரும் புனிதம் செய்தவை எனப் பிதற்றினாள்.சாராவிற்கும் ஆனெட்டின் பைத்தியம் பிடித்திருந்தது. புதுமையாகவிருந்தது.மிக விடுதலையாய் உணர்ந்தாள்.இருப்பினும் பழகிய உச்சங்களில்லாத நொடிகளில் அவளுக்கு ஆனெட்டை எட்டி உதைக்கத் தோன்றியது.ஒரு நாள் விடியலில் எட்டி உதைத்தே விட்டாள்.சற்றுத் தள்ளி விழுந்த ஆனெட் ,மிக அவமானமாய் உணர்ந்தாள்.சாராவின் துணிகளை பெட்டியில் அடைத்து, அவள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிக் கதவை மூடினாள்.

இரவு ஆடையோடு வெளிவிழுந்த சாரா நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினாள். ஏற்கனவே அவளால் வழித்தெடுத்து வெளிக்கொட்டப்பட்டிருந்த கண்ணீர், தரையிலிருந்து கண்களுக்குள் பாயவாரம்பித்தது.

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் சாரா நடுச் சாலையில் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்லச் சிரிப்படங்கி மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த மீன் வாலையும், இறக்கைகளையும், சாரா அணிந்திருந்தாள்.அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவள் கடலில் நீந்தி, வானத்தில் பறந்தாள். ஒரே சமயத்தில் வானத்திலும், கடலிலும் சாராவிருந்தாள்.கடல் விரிந்து வானம் தொட்டதா இல்லை வானம் குறைந்து கடல் தொட்டதா என்பதை உணர அங்கே எதுவுமில்லை.கடலும் வானமும் சேர்ந்து மொத்தமும் நீலமாயிருந்தது.

21 comments:

லேகா said...

எளிய மொழியாடலில் நாவென்ன இலக்கியம் வாசித்து போன்ற அனுபவம்..மழைநேரத்து ரயில் பயணம் போல இனிமையா இருக்கு!!

ஆனெட் சாராவைக் கொண்டாடினாள்.தானெப்போதும் சந்தித்திராத பேரழகியென நள்ளிரவுகளில் புலம்பினாள்.தன் நாவுகள் மிகப்பெரும் புனிதம் செய்தவை எனப் பிதற்றினாள்.சாராவிற்கும் ஆனெட்டின் பைத்தியம் பிடித்திருந்தது. புதுமையாகவிருந்தது.மிக விடுதலையாய் உணர்ந்தாள்.//

நிரந்தர விடுதலை ஆகாமல் போனது சோகம்..

MSK / Saravana said...

வாசித்தேன். மிக மெதுவாய். மிக மிக மெதுவாய்..

ஏதோ அமைதியாகி, நிசப்ததில் உறைந்தது..

இனி வார்த்தைகளில்லை

Ayyanar Viswanath said...

லேகா மற்றும் சரவணக் குமார் நன்றி...

Anonymous said...

வாசித்துக் கிழித்தேன் டவுசரை
மெதுவாய் மிக மெதுவாய் மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்

தமிழன்-கறுப்பி... said...

பதிவு என்ன சொல்ல வருது தல...

தமிழன்-கறுப்பி... said...

இதுக்கு என்ன தீர்வு...

ரௌத்ரன் said...

அட...
அய்யனார் எனக்கு இந்த மேஜிக்கல் ரியலிசமெல்லாம் தெரியாது...ஆனா இந்த மாதிரி எழுத்தை Auto Writing னு சொல்லிக்குவேன்.தலை எது வால் எதுனு சொல்ல முடியாது.பேனாவ எழுத விட்டுட்டு வேடிக்கை பாக்கனும்.
கோட்டோவியம் மாதிரி..மனசுல வர்ற எல்லாத்தையும் காறி துப்பிட்டு அக்கடான்னு கூறைய பார்க்கற இந்த மனோநிலை ரொம்ப சௌகரியமா இருக்கு....

Ayyanar Viswanath said...

அண்ணாச்சி..கிழ்ந்த டவுசரை தைக்கிறா மாதிரி ஒரு கவ்வல் கவுஜ போடவா :)

தமிழன்
எதையும் தீர்வா திட்டவட்டமா எப்பவும் சொல்றதில்லைங்க :)

ரெளத்ரன்
புதிய பேர்லாம் கண்டுபிடிச்சிருக்கிங்க :)
புத்திய காலி பண்றது நல்லதுதான் ஒருவகையில

தமிழன்-கறுப்பி... said...

/தமிழன்
எதையும் தீர்வா திட்டவட்டமா எப்பவும் சொல்றதில்லைங்க :)
\
இப்படி சொன்னா எப்படி எழுதுகிற உலகத்துல இருந்து விலகி இருக்க முழுமையக முடிகிறதா? :)

சென்ஷி said...

வாசிப்பின் அருமை என்பது உணர்தலின் அவசியத்தில் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை கட்டியங்கட்டி கூறும் அருமையான படைப்பு..

என்ன சொல்ல..! அய்யனார் படைப்புகளின் மேல் பொறாமை வருகிறது என்று மீண்டும் சொல்வதைத்தவிர :(

சென்ஷி said...

//ஆசிப் மீரான் said...
வாசித்துக் கிழித்தேன் டவுசரை
மெதுவாய் மிக மெதுவாய் மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்
//

இதுக்குத்தான்... டவுசரை கிழிக்கறதுக்கு முன்னாடியே ஊசியை தேடி வச்சுக்கணுங்கறது :))

KARTHIK said...

// மேலதிகமாய் நாலு ஷாட் டகீலா அடித்தான்.//

அது ஏனோ தெரியல உங்க ஹீரோக்கள் எப்போதுமே டக்கீலவையே விரும்பி அடிக்குறாங்க.

மொழிநடை நல்லாருக்குங்க.

குசும்பன் said...

மீண்டும் பயர் படத்துக்கு கதை ரெடி:))

manjoorraja said...

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் ஐ லவ் யூ ஜோ என்று சாரா ரத்ததில் எழுதியிருந்த எழுத்துக்கள் காய்ந்துபோய் ஜோவை பார்த்து சிரித்தன. அதையும் தாண்டி நடுச் சாலையில் சாரா அழுதுகொண்டிருப்பது மங்கலாக தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்ல மெல்ல அந்த சிரிப்பு அழுகையாய் மாற ஆரம்பித்தது. அந்த அழுகை பெரும் அழுகையாய் மிகவும் உக்கிரத்துடன் அறையை நிறைத்தது. நீண்ட நேரத்தை விழுங்கிய அந்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாக கேவல்களுடன் அடங்குகையில் மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த தங்க நிற இறக்கைகளை சாரா அணிந்திருந்தாள். அவளை உடனே பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவனை பைத்தியம் கொள்ளும் நிலைக்கு தள்ளியது. அவளை மீண்டும் அழைத்துவரவேண்டும் என்ற வேகத்துடன் வெளியில் செல்ல கதவை திறந்தான். அங்கே சாரா அழுதப்படி நின்றுக்கொண்டிருந்தாள்

கிருத்திகா ஸ்ரீதர் said...

"""Blogger மஞ்சூர் ராசா said...

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் ஐ லவ் யூ ஜோ என்று சாரா ரத்ததில் எழுதியிருந்த எழுத்துக்கள் காய்ந்துபோய் ஜோவை பார்த்து சிரித்தன. அதையும் தாண்டி நடுச் சாலையில் சாரா அழுதுகொண்டிருப்பது மங்கலாக தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்ல மெல்ல அந்த சிரிப்பு அழுகையாய் மாற ஆரம்பித்தது. அந்த அழுகை பெரும் அழுகையாய் மிகவும் உக்கிரத்துடன் அறையை நிறைத்தது. நீண்ட நேரத்தை விழுங்கிய அந்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாக கேவல்களுடன் அடங்குகையில் மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த தங்க நிற இறக்கைகளை சாரா அணிந்திருந்தாள். அவளை உடனே பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவனை பைத்தியம் கொள்ளும் நிலைக்கு தள்ளியது. அவளை மீண்டும் அழைத்துவரவேண்டும் என்ற வேகத்துடன் வெளியில் செல்ல கதவை திறந்தான். அங்கே சாரா அழுதப்படி நின்றுக்கொண்டிருந்தாள்"

நல்ல வேளை இப்படி முடிச்சுடுவீங்களோன்னு பயந்தேன்.. பயந்த மாதிரி எதுவும் நடக்கல... நன்றி... :)

Ayyanar Viswanath said...

தமிழன் விலகி இருக்கிறது என்பதைவிட முழுமையான ஒன்று என்பது இருக்கவேமுடியாதுன்னு நம்பி இருக்கிறதுதான் என்னோட நிலை..

சென்ஷி :நன்றி

கார்த்திக்:கதைசொல்லி திணிக்கிற சில விசயங்களில டகிலாவும் ஒண்ணா இருக்கலாம் :)

Ayyanar Viswanath said...

குசும்பர் : :@

சுந்தர்:உங்க முடிவு பெரும்பாலும் எல்லாரலும் யூகிக்கப்படும் ஒண்ணுதானே ..அதான்

கிருத்திகா : :)

தமிழன்-கறுப்பி... said...

சரி...

முழுமையான ஒன்று என்பது இருக்க முடியாது என்பதுதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்...

விலகி இருத்தல்அல்லது நீங்கள் சொன்னது போலமுழுமையாக இல்லாமல் இருத்தல் யதார்த்தத்துக்கு அவசியமாகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

very interesting!

Anonymous said...

/* அய்யனார் said...
குசும்பர் : :@

சுந்தர்:உங்க முடிவு பெரும்பாலும் எல்லாரலும் யூகிக்கப்படும் ஒண்ணுதானே ..அதான்
*/

யோவ்! இதுக்கெல்லாம் முடிவை மாத்தினா ரொம்ப செயற்கையா இருக்குது!

ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

எத்தனை ஆஸிப் வந்தாலும் திருந்தமாடிங்க போல....

~நொந்தவன்

ச.முத்துவேல் said...

கட்டுப்பாடுகளுக்குப் பின்னணியில்
அன்பு இருக்கிறது.
அந்த அன்பும் ஒரு கட்டத்தில்
அலுத்துப்போய்,வெறுப்பாகிவிடுகிறது.
அதாவது,கடவுள் விலகி,உள்ளிருக்கும் பிசாசு
தலை தூக்குகிறது.
பிசாசு சீக்கிரமே கடவுளைத் தேடவைத்துவிடுகிறது.

(அட! ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் பார்க்கிறேன்.
ஒரு நவீன கவிதை! பிறகுதான் வரிகளைப் படிக்கட்டுகளாக அடுக்கினேன்.என்ன சரிதானா?)

Featured Post

test

 test