Sunday, August 20, 2017

குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்



கன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்த்திருந்த அளவிற்கு முழுமையான படம் இல்லை என்றாலும் மிக முக்கியமான பின்னணியைக் கொண்ட படம். இயக்குனர்  உளவியலில் சற்றுத் தேர்ந்திருந்தால்  - குறைந்தபட்சம் ஃப்ராய்டியல் அளவிற்காவது- சிறப்பானதாக வந்திருக்கும். ஆனாலும் இதுவரை திரையில் பேசாத சிக்கலைப் பேசும் வகையிலும் சில நல்ல தருணங்களைக் கொண்ட வகையிலும் முக்கியமான திரைப்படமாகிறது.

மலையாள சினிமா கலைப்படைப்புகளால் அறியப்பட்டதைக் காட்டிலும் சாஃப்ட் போர்ன் எனப்படும் சீன் படங்களால்தான் வெகுசனப் பரப்பில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்பட்டது. இன்று சன்னி லியோனிற்கு திரண்ட கூட்டம் திடீரென்றெல்லாம் உருவாகிவிடவில்லை. இந்தக் கூட்டத்தின் முந்தின தலைமுறை  அன்று  ஷகிலாவிற்காக திரையரங்குகளில் கூடியது. கேரள சூப்பர் ஸ்டார்களின் திரையுலக எதிர்காலத்தையே ஒன்றுமில்லாததாக்கும் வலிமை ஷகிலாவிற்கு இருந்தது. அழகிற்கு எந்தப் பஞ்சமும் இல்லாத கேரளத்தில் காமத்தின் பஞ்சம் மட்டும் எப்போதும் இருக்கிறது.

 போர்ன் படங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் சுருங்கிவிட்டபின்பு அதை வெளியிட மட்டுமே இருந்த கன்யகா டாக்கீஸ் மாதிரியான திரையரங்கங்களின் தேவை முடிவிற்கு வருகிறது. கடந்த பத்து வருடங்களில்  ஆயிரக் கணக்கில் திரையரங்குகள் கேரளத்திலும் தமிழகத்திலும் மூடப்பட்டன. இதில் ஐநூறாவது 90 களில் கோலோச்சிய போர்ன் படங்களுக்கான பிரத்யேகத் திரையரங்குகளாக இருக்கலாம்.

குய்யாலி மலைக் கிராமத்தின் கன்யகா டாக்கீஸும் இப்படித்தான் கட்டுப்படியாகாமல் மூடப்படுகிறது. அதன் முதலாளியான ஆலேன்சியருக்கு வேறு சில குடும்பப் பிரச்சினைகளும் தொடர்ந்து நெருக்கடியைத் தரவே - மனைவியையும் இழந்த அவர் - தியேட்டரை சர்ச் சிற்கு எழுதிவைத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒரு கதை.

டாக்கீஸ் இருந்த இடத்தில் புதிதாக தேவாலயம் கட்டப்படுகிறது. ஒரு பாதிரியார் கிராமத்திற்குள் வருகிறார். அவர் எதிர்கொள்ளும் சிக்கல் இன்னொரு இழையாக சொல்லப்படுகிறது.

மூன்றாவது இழை அதே கிராமத்தைச் சேர்ந்த லேனாவின் பிரச்சினைகளைப் பற்றியது. லேனாவின் மிகப் பிரமாதமான நடிப்பால் இந்த இழையே என்னை அதிகம் ஈர்த்தது. ஹோம் நர்ஸாகப் பணிபுரிவதாக தந்தையிடம் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் லேனா ஒரு போர்ன் நடிகை. சந்தர்ப்பவசத்தால் இந்த துறைக்குள் தள்ளப்படுகிறாள். மாமாக்களாலும் ஏமாற்றுக்காரர்களாலும் வறுமையாலும் சூழப்பட்ட அவளது வாழ்வு இப்படியாகிறது.

பாதிரியாருக்கு போர்ன் பட நாயகிகள் எழுப்பும் போலி விரகதாப ஒலிகள் காதுக்குள் கேட்க ஆரம்பிக்கின்றன. பக்திமானான அவர் அதைக் கேட்டமாத்திரத்தில் நடுங்க ஆரம்பிக்கிறார். லேனாவின் குளி சீன் காட்சித் துண்டு ஒன்றை அவள் ஊர் இளைஞர்கள் பார்த்துவிடுகிறார்கள். நள்ளிரவில் அவள் வீட்டின் முன்பு சூழந்து கொண்டு பைக்கில் ஹார்ன் அடித்தும் அவளை வர்ணித்துமாய் அவமானமடைய வைக்கிறார்கள். அவள் அடுத்த நாள் ஊரைவிட்டு வெளியேறுகிறாள். பாதிரியார்  மனநல நிபுணர்களை நாடியும் பிரச்சினை தீராமல் தியேட்டர் முதலாளி ஆலேன்சியரை வரவழைக்கிறார். இருவருமாய் ஒரு பயன்படுத்தாத அறையைத் திறக்கிறார்கள். அதிலிருந்து ஏராளமான பெண்களின் விரகதாப ஒலிகள் கேட்க ஆரம்பிக்கின்றன. படம் முடிந்து போகிறது.

திரைப்படத்தில் இடையூடாக சில விஷயங்கள் பதிவாகின்றன. குய்யாலி கிராமத்தின் இளம் பெண்கள் ஆண்களுடன் ஓடிப் போகிறார்கள். அந்தக் குடும்பம் அவ்வளவு துக்கத்தையும் அவமானத்தையும் அடைகிறது. ஆலேன்சியரின் இரண்டு பெண்களுமே ஓடிப் போகிறார்கள். ஆலேன்சியரின் மனைவி அந்தத் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.

காமமும் ஏமாற்றமும் பிணைந்தே இருக்கிறது. தன் உடலைக் காட்சிப் பொருளாக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பெண்களின் போலி விரகதாப ஒலிகள் கடவுளின் கருவறை எங்கும் எதிரொலித்தபடி இருக்கின்றன. இதை எதிர்கொள்ள முடியாத நொய்ந்த மனங்கள் சிதைவுற்றும் ஓடிஓளிந்துமாய் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன.

No comments:

Featured Post

test

 test