Tuesday, August 15, 2017

பல்ப்


இனிமேலாவது இலக்கிய இதழ்கள் வெளியிடும் கதைகளின் வடிவில் சிலவற்றை எழுத  வேண்டும்.  அதை அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி வெளியிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதேச் சூழலில் புழங்கும் பத்து நபர்கள் கொண்ட  இலக்கிய எழுத்தாளர் குழாமில் பதினோராவது ஆளாக இணைந்து கொள்ள வேண்டும். இவர் இந்த வழி வந்தவர். இவரே பின்நவீன யுகத்தின் புதுக் கதை சொல்லி போன்றப் புகழாரங்களை  வென்றெடுக்க வேண்டும் போன்ற ஆசைகளெல்லாம் எனக்கும் இருக்கிறதுதான் . ஆனால் எப்போதுமே இருக்கும் குரங்குப் புத்தி அதைச் செய்ய அனுமதிப்பதில்லை. அது இப்படித்தான் ப்லாக்கில் உட்கார்ந்துகொண்டு  குறுநாவலை எழுதச் சொல்கிறது. போகட்டும் இவ் விளையாட்டை கடைசியாய் இந்த ஒரே ஒரு முறை ஆடிவிட்டு நிறுத்திக் கொள்வோம்.

பல்ப். அடுத்த குறுநாவலின் தலைப்புதான்.

பல்ப் நாவலின் முடிச்சு ஐந்து வருடங்களுக்கு முன்னால் மனதில் வந்து விழுந்தது. அதே வேகத்தில் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். இந்த நாவல் கீழ்கண்ட தளங்களில் இயங்குகிறது.

1. இது ஒரு நாவல் எழுதுவதைப் பற்றிய நாவல்.
2. பல பல்ப் நாவல்களின் தொகுப்பு.
3. பல்ப் நாவலாசிரியர்கள் குறித்தும் அதை எழுதுவது குறித்துமான நாவலாக இது இருக்கும்.
4. இலக்கிய எழுத்து மற்றும் எழுத்தாளர்களைப் பற்றியும் இந் நாவல் பேசுகிறது
5. இலக்கிய எழுத்து மற்றும் பல்ப் எழுத்து இரண்டையும் எதிர் எதிரே வைத்து விளையாடும் ஆட்டமாக இது இருக்கும்.
6. இந்த இரண்டு வகை எழுத்தின் போலித்தனங்களைக் குறித்துப் பேசும் நாவலாக இது இருக்கும். மேலும்  ஒட்டு மொத்த எழுத்தாளர்களின் போலித்தனங்களைக் குறித்து பேசும் நாவலாகவும் இருக்கும்.


குழப்பமாக இருக்கிறதல்லவா. சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். இது எழுதுபவர்களைப் பற்றிய மற்றும் எழுதுவதைப் பற்றிய நாவல்.

“அப்படியென்றால் போலிகளைப் பற்றிய போலித்தனங்களைப் பற்றிய நாவலா?”

தெரியாது. ஆனால் ஒரு உண்மை என்னவெனில் இந்நாவலுக்கு
ஆரம்பத்தில் போலி எனத் தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். ஆனால் அது போளி எனவும் நம் அறிவார்ந்த சமூகத்தில் புரிந்து கொள்ளப்படும் என்பதால் பல்ப் எனும் ஆங்கிலப் பெயரையே வைத்துக் கொண்டேன். தமிழ் சினிமாவைப் போல தமிழ் நாவல்களுக்கு வரியும் கிடையாது விலக்கும் கிடையாது என்பதால் எந்த மொழியிலும் தலைப்பு வைத்துக் கொள்ளும் சுதந்திரம் எழுதுபவருக்கு இருப்பது பாக்கியம்தான் அல்லவா!

எழுத்தாளர்களைப் பற்றிய நாவல் என்பதால் பல சமகால எழுத்தாளர்களின் சாயலை இந்நாவலில் பார்க்க முடியும். அவை யாவும் கற்பனையே. உண்மையென நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

No comments:

Featured Post

test

 test