Wednesday, August 23, 2017

பல்ப் 2. முதலிரவுத் திருப்பம்

"இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

விக்ரம் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டான்.

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும், புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் விக்ரமும் மறுமுனையில் இன்று காலை அவன் மனைவியான வேதவல்லியும் அமர்ந்திருந்தார்கள்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

விக்ரம் வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

அவன் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது. 

அவள் அதே இறுக்கமாய் பதிலளித்தாள்.

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்த விக்ரம் சமாதானமாய் கேட்டான்

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

தலை நிமிர்ந்தவள்

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி. தவிர, நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு, கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க, உங்களுக்கு இருக்க பேர், கூடியிருக்க சொந்தக்காரங்க  இப்படி எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி. ஆனா ஒண்ணு எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும், எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

விக்ரம் இலகுவானான். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே அவனுக்குப்  பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெதுவாக சொன்னான்

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல, காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல் கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல.. அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

விக்ரம் பேசப்பேச வேதவல்லி  நிமிர்ந்து அவனை இன்னும் ஆழமாகப் பார்த்தாள்

பேசி முடித்தவன் அவள் தன்னையே ஆழமாகப் பார்ப்பதை உணர்ந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

அறையை மீண்டும் மெளனம்  சூழ்ந்தது.  சில நிமிடங்களுக்குப் பிறகு விக்ரம், 

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தான். வேதவல்லியின் வீட்டில்தான் முதலிரவு. அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். 

அதைப் புரிந்து கொண்டவள் அவனுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தனர். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. 

விக்ரம் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஆழமாய் உள்ளிழுத்தான். வேதவல்லி பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ, நான் வந்திடுறேன்” என்றான்

பதிலுக்குப் புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தான்.

வேதா உதட்டைப் பிதுக்கினாள்.

விக்ரம் தொடர்ந்தான்

 “என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் அவனால் பார்க்கமுடியவில்லை. புகையை இன்னும் ஆழமாய் உள்ளே இழுத்தான். நிலா மேகங்களுக்கிடையில் போய் ஒளிந்து விளையாட ஆரம்பித்தது. அந்த சிகரெட் புகை அவ்வளவு அடர்த்தியாய் காற்றில் கலந்தது.

 விக்ரம் ஒரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறான். அவனுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தான். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதாம். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தான். அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த அசோக்கின் நட்பு கிடைத்தபின்புதான் கதைகளை அச்சில் வெளியிடுவது குறித்தே யோசித்தான். அதற்கு முன்பு அப்படி ஒரு எண்ணம் விக்ரமுக்கு இருக்கவில்லை. அசோக்  கதைகளை படித்துவிட்டுப் பரவசமடைந்தான். அதோடு நிற்காமல் கைக் காசைப் போட்டு மாத நாவலாகவும்  பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காப்பிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. இருவரும் அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டார்கள். தற்சமயம் பெளர்ணமி இரவில் இதழ் மாதம் இருபத்தைந்தாயிரம் காபிகள் வரை விற்கின்றது. இருபத்தைட்டு வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டான். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய்  பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் வேதவல்லியை மணந்து கொண்டான். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை விக்ரமின் சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

அடுத்தடுத்து இரண்டு சிகரெட்டுகளை புகைத்து முடிந்ததும், விக்ரம் கீழே இறங்கலாம் என்றான். 

இருவருமாய் அறைக்குத் திரும்பினார்கள். வேதவல்லி இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டார்கள். அவளின் அருகாமை வாசனை அவனைக் கிறக்கியது. மெல்லத் தயங்கித் தயங்கி அவளைத் தொட்டான். அவள் இசைந்து கொடுப்பதைப் போல பட்டது. விக்ரம் இப்போது எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளை அணுகினான். அடுத்த அரை மணிநேரம் மூர்க்கமாய் கலவி கொண்டார்கள். அவனுக்கு முதன் முறை கிடையாது. ஆனால் இவ்வளவு திருப்தியான கலவியை அவன் இதற்கு முன்பு அடைந்திருக்கவில்லை. படுக்கையிலேயே இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். இவளுக்கும் இது முதல் முறையாய் இருக்காது என்கிற எண்ணம் அவன் மனதில் வந்து விழுந்தது. சிகரெட் முடியும் போது அந்த எண்ணம் தீர்க்கமாய் வலுப்பெற்றது. அவனால் உறங்க முடியவில்லை. மெல்ல  மெல்ல அந்த எண்ணம் அருவெருப்பாய் மாறத் துவங்கியது.  வேதவல்லியை உற்றுப் பார்த்தான். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து வைத்தான். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி அவளை மீண்டும் பார்த்தான். உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தாள். அந்தக் கோலம் அவனை ஆத்திரப்படுத்தியது.  அவள் காட்டிய ஈடுபாடும் இந்த லஜ்ஜை இல்லாக் கோலமும் அதுவரை அவன் கற்பனை செய்து வைத்திருந்த அடக்க ஒடுக்கமான பெண் பிம்பத்தைத் தகர்த்தது. தான் ஏமார்ந்துவிட்டோம் என மருகினான். உடனடியாய் அவள் கழுத்தை நெறித்துக் கொன்று விடும் வேகம் அவனிற்குள் பெருகியது. அதன் பின் விளைவுகளை யோசித்தவன் மெல்ல நிதானமாகி, இதுவரைக்குமாய் அவன் எழுதிய க்ரைம் கதைகளில் எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test