Tuesday, July 11, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று

"தீதிலிருந்து நன்மைக்கு 
இருளிலிருந்து ஒளிக்கு 
இறப்பிலிருந்து பெருநிலைக்கு”







வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தார்கள். புளிய மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல ரமா தன் மகளோடு நின்று கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்து விட்டேன். அவசரமாய் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்து கொண்டே நடந்தேன். பின்னால் வண்டியின் ஹார்ன் சப்தம் கேட்டது. பல்லைக் கடித்தேன். சனியன் அவளாகத்தான் இருக்கும். திரும்பினால், அவளேதான்.

காலை ஊன்றி நின்றிருந்தாள். என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.

“ வண்டில வந்து உக்காரு ” என்றாள்.

நீ போ என முறைப்பாய் சொன்னேன்.

வந்து உக்கார் என அழுத்தமாய் சொன்னாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் போய் அமர்ந்தேன். வண்டியைக் கிளப்பினாள்.

”யாராவது பாக்கப்போறாங்க” என இரைந்தேன்.

”குடிச்சிட்டு தெருவில விழுந்து கெடக்கும்போது இந்த எண்ணம் வந்தா பரவால்லடா “

அமைதியானேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கோரிமேட்டுத் தெரு வழியாய் வண்டி தண்டராம்பட்டு சாலையை அடைந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  என் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இறங்கிக் கொண்டேன்.

இனி வேட்டவலம் ரோடு வழியாய் போகவே கூடாது என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன்

ரமா பின்னாலேயே வந்தாள். அம்மா, ரமாவைப் பார்த்து சிரித்தாள்.

”வா ரமா, இவன எங்க புடிச்ச?” என்றாள்.

”தொர என்ன பாத்துட்டும் பாக்காத மாதிரி நைசா திரும்பிப் போனாரு இழுத்துட்டு வந்துட்டேன்”

அவளை முறைத்தேன்.

அவளே கேட்டாள்

“சாவுலாம் நல்ல படியா முடிஞ்சதா ”

”ம்ம்”

”பாவம் அந்த அக்கா, இனிமேலாச்சும் நல்லா இருக்கட்டும்”

நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.

”ரவி, நேத்துதான் அம்மா மொத்த கதையும் எனக்கு சொன்னாங்க. நீ அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிடு.., ஊர் உலகத்துல பொண்ணா இல்ல, நல்லதா நாம பாப்பம்.”

எனக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். அம்மா போனாள்.

”பூக்காரம்மா வீட்டுக்காரரா.., ஓ வாங்க வாங்க” என்றாள்.

யாரென்று எட்டிப் பார்த்தேன். சாமி

ஏனோ திடீரென நிம்மதி படர்ந்தது. கண்டிப்பாக இவனிடம் சரக்கு இருக்கும்

”வா சாமி” என்றேன்

ரமா எழுந்து நின்றாள்

அட உக்காரும்மா என்றபடியே சாமிநாதனும் உள்ளே வந்து அமர்ந்தான்.

”வாத்தி நீ கெளம்பு. வா என்னோட”.

அதற்காக காத்திருந்தேன்.

போலாம் சாமி என எழுந்து கொண்டேன்.

”போய் பட்னு கால்ல வூந்திரு”

”யார் கால்ல?”

”உம் பொண்டாட்டி கால்லதான்”

”என்ன ஒளற்ற சாமி”

”உம் பொண்டாட்டி எங்கூட்லதான்யா இருக்கா, வந்து சமாதானமா பேசி கூட்டிட்டு வந்துரு”

எனக்கு திகைப்பாய் இருந்தது.

”அவ எப்படி உங்கூட்ல?”

”நேத்து ஏரில வூந்து சாவப் போயிருக்கா.  நல்ல வேளையா வீட்லயும் நானும் அங்க இருந்தோம். பேசி கூட்டி வந்து வீட்ல வச்சிருக்கோம்”

”அவ என்ன சாவடிக்க பாக்குறா சாமி. அவளைப் போய் கூப்டு வந்து என்ன பன்றது.., சாவறதா?”

”வாத்தி, உனக்கு தெரியாதது இல்ல. ஆயிரம்  இருந்தாலும் இந்த வாழ்க்கய வாழ்ந்துதான ஆவனும்.., அதோட இல்லாம. சின்ன பொண்ணு.., உலகம் தெரியாது.., நாமதான் சொல்லித்தரணும்., ”

 சாமி பேசிக் கொண்டே போனான்.

சாமி இவ்வளவு பொறுப்பாய் பேசுபவனா என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவன் பேச்சில் கரைந்தாள்.

”நான் வரேன்., நான் வந்து அவள கூட்டிட்டு வரேன்., ரமா நீயும் வா போகலாம்.,, என எழுந்தாள்.

நான் உள்ளே போய் படுத்துவிட்டேன்.

மூவரும் வெளியே வந்தபோது சரியாய் அங்கையின் அம்மாவும் அப்பாவும்  வந்து சேர்ந்தார்கள்.

சரியான நேரத்துல வந்தீங்க என்றான் சாமி

”இருங்க வாத்தியையும் கூப்டு போய்டலாம். எல்லாத்தையும் பேசினா தீர்த்திட முடியாதா என்ன!”

உள்ளே வந்தவன் என்னை எழுப்பினான். நான் பலமாய் மறுத்துவிட்டேன்.

”அவ வர்ரதுல எனக்குப் பிரச்சின இல்ல. போய் கூட்டி வாங்க”

என திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

சாமி வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. துர்க்காவும் அங்கையும் அதிலிருந்து இறங்கினார்கள்.

வாசலில் இருந்த கும்பலைப் பார்த்து அங்கை தயங்கி துர்க்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.

துர்க்கா  நின்றிருந்தவர்களைப் பார்த்து

“உள்ள போய் பேசலாம் ” என்றாள்

இருக்கைகள் அனைவருக்கும் போதாது. ரமா உள்ளே போய் பாய் கொண்டு வந்து தரையில் விரித்தாள்.

சாமி என்னை வந்து எழுப்பி, ஒம் பொண்டாட்டியே வந்துட்டா எனச் சொல்லிச் சிரித்தான்.

நம்ப முடியாமல் எழுந்து வெளியில் வந்தேன்.

பாயில் அங்கையும் துர்க்காவும் அமர்ந்தார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.

துர்க்கா பேச ஆரம்பித்தாள்.

”நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் எந்த கோபதாபமும் இல்லாம இத அப்படியே முடிச்சுக்கலாம்”

அம்மா பதறினாள். முடிச்சுக்கலாம்னா?

”உங்க புள்ளைக்கு வேற பொண்ண பாருங்கம்மா”

”என்னம்மா இப்படி சொல்ற.,” என்ற அம்மாவின் குரலை மீறி

அங்கையின் அப்பா சத்தமாய் கத்தினார்.

“ நீ யாரு இத சொல்ல”

துர்க்கா அவருக்காய் திரும்பி நிதானமாய் சொன்னாள்.

“இனிமே இவளுக்கு எல்லாம் நான் தான். இவள பெத்து வளத்தீங்க அதுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கறேன். இனிமே இவள பத்தின கவல உங்களுக்கு வேண்டாம்.”

அங்கையின் அம்மா மெளனமாக இருந்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் அம்மனைப் போலவே தான் இருந்தாள்.

துர்க்கா என்னை நிமிர்ந்து பார்த்து.

“ரவி நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல இவளுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னு எழுதி கொடுத்திடுறோம். ஒரு பேப்பர் எட்த்தா”

”அதுக்கு அவசியம் இல்ல.., அங்கைக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணட்டும் ”

எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டேன்.

அங்கை, அவள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்,

“நான் இவங்களோட கொஞ்ச நாள் இருக்கம்மா”

அங்கையின் அம்மா எழுந்து கொண்டாள்.

அவளின் அப்பா கத்த ஆரம்பித்தார்,

“ என்னா வேல பாத்துட்டு என்னா திமிரா இருக்கா பார்”  என்றபடியே அங்கையை அடிக்கப் பாய்ந்தார்.  அங்கையின் அம்மா அவரை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ரமா தன் மகளின் பள்ளிப் பேருந்து வந்துவிடும் எனச் சொல்லியபடியே   கிளம்பினாள்.

துர்க்கா, சாமியிடம் சொன்னாள்

”நாங்க வெளியூர் போறம். அப்புறமா வருவோம். நீ வீட்டையும் கடையையும் பத்திரமா பாத்துக்க”

சாமிக்கு திகைப்பாய் இருந்தது. மறைத்துக் கொண்டே சரியென தலையாட்டினான்.

ரவியின் அம்மாவிடம் அங்கையும் துர்க்காவும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்கள். அரச மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்தது.

துர்க்கா, அங்கையைப் பார்த்துக் கேட்டாள்.

“அந்த பஸ்ஸ  உன்னால புடிக்க முடியுமா.?”

அங்கை தீவிரமாய் முடியும் என்றாள்

இருவரும் பேருந்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.


- முற்றும்



ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது


”அசதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
மிருத்யோர்மா அமிர்தம் கமய ”


 ”நீ சாப்ட்டு கெளம்பிடு”

நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.

எழுந்து அவள் அருகில் போனேன். அடுப்பருகில் உட்கார்ந்திருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தேன். எழுந்தவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்

”இன்னிக்கு காலைலதான் நான் புதுசா பொறந்த மாதிரி தோணுச்சி., விடிகாலைல பெஞ்ச மழையில என் துக்கம் எல்லாம் போய்டுச்சி., இனிமே எனக்கு எல்லாம் நீதான்.., உன்ன விட்டு எங்கயும் போவப்போறதில்ல”

”சொன்னா கேள் ரவி. எனக்கு நேத்து ஒரு ராத்திரி உன்னோட இருந்தது வாழ்நாள் முழுக்க போதும்.., நீ வாழ வேண்டிய பையன்.., கெளம்பு”

”நான் எங்க போவேன். எல்லாமும் அடைஞ்சு போச்சு. இனி எனக்கு வாழ ஒரு பிடிமானமும் இல்லங்கிறப்பதான் இது நடந்தது. இத விட மாட்டேன்”

எனப் பிடியை இறுக்கி முரட்டுத்தனமாய் அவளை முத்தமிட்டேன்.

என்னை விலக்கித் தள்ளி நின்று கொண்டாள்.

”நான் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை எல்லாம் பீ முத்திரத்த அள்ளி அள்ளியே போய்டுச்சி. நீ வேற புதுசா உள்ள வந்து அதே குழிக்குள்ள தள்ளாத ரவி”

”என்ன சொல்ற?”

”உனக்கு புரியலையா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை வேணாம். நல்லவேளையா குழந்தைங்க எதுவும் பொறக்கல. பொறக்கற மாதிரியும் எதுவும் நடக்கல. அப்படியே நான் போய்டுறேன்”

”எங்க போவ நீ., யார் இருக்கா உனக்கு?”

”எனக்கு நான் போதும் ரவி. காரியம் முடிஞ்சதும் இந்த வீடு, இருக்கிற கொஞ்ச நெலம் எல்லாத்தையும் வித்துட்டு எங்காய்ச்சும் போய்டுவேன்”

”எங்காச்சும்னா எங்க? ஏன் இப்படி உளற்ற., உனக்கு இந்த ஊர்ல என்னோட இருக்க கூச்சமா இருக்கும்., நாம இங்க இருந்து போய்டலாம்., கீழ்பெண்ணாத்தூர்ல ஒரு வீடு எடுத்து தங்கிக்கலாம். என் ஸ்கூல் பக்கமா., நாம ரொம்ப நல்லபடியா ஒரு வாழ்க்க வாழலாம் அமுதா.., ப்ளீஸ் ”

”போதும் ரவி. போதும். எனக்கு நானா மட்டும் வாழ ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே ரொம்ப தூரம் ரயில்ல போகனும்னு ஆச தெரியுமா? ஆனா இதுவரைக்கும் நான் ரயில்ல கால் கூட வச்சதில்ல.”

”நான் கூட்டிப் போறேன் அமுதா. உனக்கு என்னல்லாம் பிடிக்குமோ எனக்கு என்னலாம் பிடிக்குமோ எல்லாத்தையும் சேந்து பண்ணலாம்.”

”சொன்னா புரிஞ்சிக்க ரவி. நீ போய் உம் பொண்டாட்டி கால்ல விழுந்து வீட்டுக்கு கூட்டிப் போய் நல்ல படியா வச்சுக்க. அம்மாவ பத்திரமா பாத்துக்க. பத்து நிமிசம் அப்படி உக்கார். சாப்டு கெளம்பிடு”

பதிலையும் எதிர்பார்க்காமல் அமுதா அடுப்பருகில் போய் உட்கார்ந்து கொண்டு தீயை அதிகப்படுத்தினாள்.

அவள் குரலிலிருந்த உறுதி என்னை நிலை குலைய வைத்தது. எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து செருப்பைப் போட்டேன். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பினேன்

ரவி என்றபடி வெளியில் வந்தவளிடம்

சாவு வீட்டுக்கு வந்துட்டு சொல்லிட்டுப் போவ கூடாது என்றபடி அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன்.

என் வாழ்க்கை அவ்வளவுதான்  எனத் தோன்றியது. போய் மூச்சு முட்ட அந்த மூத்திர ஒயின்ஷாப்பில் குடித்து மட்டையாக வேண்டும் என்கிற வெறி வந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டிருந்தேன். அரை மணி நேரம் நின்றும் பேருந்து வரும் வழியைக் காணோம். ஒரு மண்பாடி லாரி என்னைக் கடந்தது. வெறி பிடித்தவன் போல அதன் பின்னே ஓடினேன். மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்ததை ஓட்டுனர் தாமதமாய் கவனித்து வண்டியை நிறுத்தினான். பாய்ந்து ஏறிக் கொண்டேன். இதயம் உடைந்துவிடுவது போல திம் திம் என அதிர்ந்தது. இன்னோரு கையயும் ஒட்ச்சுக்கணுமா என  அவன் என்னை திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

0

அங்கை கண்  விழித்தபோது துர்க்கா தயாராய் காபி போட்டு வைத்திருந்தாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வந்து அந்தக் காபியைக் குடித்தாள். ஒரே ஒரு அறைதான். அதை ஒட்டினார்போல் தடுப்புச் சுவர் மட்டும் வைத்த சமையலறை. வீட்டிற்குப் பின்னால் தனியாக கழிவறையும்  குளியலறையும் இருந்தன. ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த உணர்வு அங்கைக்குத் தோன்றியது. இத்தனைக்கும் நேற்று இரவு மட்டும்தான் அங்கு தங்கியிருந்தாள். சொல்ல முடியாத பிணைப்பை எப்படி முதல் சந்திப்பிலேயே சங்கமேஸ்வரனிடம் உணர்ந்தாளோ அப்படி ஒரு பிணைப்பை துர்க்காவிடமும் கண்டாள். அவளிடம் கோவில் சிலைகளின் சாயல் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சாகப்போன தன்னை காக்க வந்த தெய்வமாக அவளை நினைத்தாள். அவள் அணைப்பு அத்தனை ஆதூரமாக இருந்தது. யாரோ அருகில் வருவதை உணர்ந்துதான் நேற்று அவள் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.

 ஏரிச் சரிவிலிருந்து இறங்கி வந்த சாமி நாதன் துர்க்காவைப் பார்த்து திகைத்தான்.

” இங்க என்ன பன்ற, ஒடம்பு சரியில்லன்னு வீட்ல படுத்திருந்த”

துர்க்கா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“ ஏரில வூந்து சாவலாம்னு வந்தேன்” எனச் சொல்லி சிரித்தாள்

அங்கை  திடுக்கிட்டு நெஜமாவா எனும்படிப் பார்த்தாள்.

”நெசந்தான் நானும் இங்க சாவலாம்னுதான் வந்தேன்”

சாமி அவளைப் பார்க்காமல்  மெதுவாய் சொன்னான்.

“நீ சாகறதுக்கு முன்னாடி என்ன கொன்னுட்டு அப்புறம் சாவு. இந்த ஈனத்தனமான வாழ்க்கை  நீ  எனக்கு போட்ட பிச்சதான”

துர்க்கா எதுவும் பேசவில்லை. அங்கைக்காய் திரும்பி

இவரு என் வூட்டுக்காரு என்றாள்.

அங்கை சாமியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். சாமி அங்கையை அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.

“நீ ரவி வாத்தியார் சம்சாரந்தானே?”

அங்கை மருண்டாள்.

”உன் போட்டவ வீட்ல பாத்தனே., இங்க இன்னாமா பன்ற?”

துர்க்கா இடையிட்டாள்

”யாரு ரவி?”

”அட அன்னிக்கு உன்ன பாத்து மெரண்டு ஓடினானே”

துர்க்காவிற்கு நினைவு வந்தது.

“ஓ ராம்சாமி வாத்தியார் மொவன்”

”அவனேதான்”

”அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தன்.., இவ்ளோ லட்சணமான பொண்டாட்டிய கூட பாத்துக்காத அவன்லாம் இன்னா மனுசன்”

”அவனுக்கு ஏதோ கிறுக்கு. ஆனா சரியாய்டுவான். சரி கெளம்புங்க போலாம். இருட்டப் போவுது”

சூரியன் மேற்கில் இறங்கியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. மறுபடியும் கொண்டுபோய் ரவி யிடம் விட்டு விடுவார்களோ என அங்கைக்குப் பயமாக இருந்தது. தயக்கமாய் எழுந்து கொண்டாள்.

துர்க்கா சாமிக்காய் திரும்பி

“நாங்க வீட்டுக்கு போறோம். நீ இவங்க வீட்டுக்கு போய் அங்கை எங்களோட இருக்குன்னு சொல்லிடு. பயப்பட வேணாம்னு பாத்து பதமா சொல்லிட்டு வா”

சாமி, அங்கையிடம் அவள் வீட்டு முகவரியை வாங்கி கொண்டான். அரசு கலைக்கல்லூரி வரை ஒன்றாய் நடந்து போனார்கள். பிறகு சாமி அங்கை வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தான். இவர்கள் தேனிமலைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருட்டத் துவங்கியிருந்தது. துர்க்கா கறி சாப்பிடுவியாம்மா என்றதற்கு அங்கை தலையாட்டினாள். வழியில் கோழிக்கறி வாங்கிக் கொண்டாள்.  வீட்டை அடைந்தார்கள்.

வூடு சின்னதுதான் உனக்கு புடிக்குமோ இன்னாவோ என்றபடியே துர்க்கா பூட்டைத் திறந்தாள். அங்கை அவள் தோளில் கை போட்டு அணைத்து சிரித்தாள்.

துர்க்கா பரபர வென சமையலை ஆரம்பித்தாள். அவள் எதுவும் கேட்காமலேயே அங்கை நடந்த கதை மொத்தத்தையும் சொன்னாள்.  அவளின் சிறு பிராயம் முதல் இன்று மதியம் நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னாள். துர்க்காவிற்கு அவள் கதைகளைக் கேட்க கேட்க அழுகை முட்டியது. தன் இள நிழலாய் அவளிருந்தாள். ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு. சாப்பாடு ஆய்டுச்சி சாப்டுடலாம் என்றாள்.

கறிக்குழம்பின் மணம் அந்தச் சிறுவீட்டை நிறைத்தது. அஙகையும் துர்க்காவும் தட்டு நிறைய கறியையும் சோறையும் வாரிப்போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். அவர்களின் மொத்த துக்கமும் உணவாய் தட்டிலிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட்டார்கள். வயிறும் உள்ளமும் நிறைந்ததில் அங்கை,

என் வாழ்நாளில இப்படி ஒரு ருசியான சாப்பாட்ட சாப்டதில்ல என்றாள்.

துர்க்கா  சிரித்துக் கொண்டே அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு  பின் வாசலுக்குப் போனாள். தட்டிலிருந்த எலும்புகளை வாரி ஜீஜீஜீ என நாயைக் கூப்பிட்டு அதற்கு வைத்தாள். கையைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கை அதற்குள் பாயை விரித்திருந்தாள். இருவரும் படுத்துக் கொண்டார்கள். முன் கதவையும் பின் கதவையும் திறந்துவிட்டிருந்தார்கள். வெக்கை இல்லை. குளுமையாய் காற்று வீசியது.

“பக்கத்துல எங்கயோ மழ பெய்யுதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அங்கை.

“ம்ம் பெய்யும்”  என்றபடியே துர்க்கா உறங்கிப் போனாள்.

அங்கையும் தூக்கத்திலாழ்ந்தாள்.

காலையில் சமையல் செய்யும் ஓசைதான் அங்கையை எழுப்பியது. எழுந்து காபிக் குடித்துக் கொண்டிருக்கும்போது சாமி வந்தான். துர்க்கா அவனைப் பார்த்து

“குளிச்சிட்டு வா சாப்டுட்டு கடைய போய் தொற” என்றாள்

சாமி அவளையே பார்த்தான்.

“ஏன் அந்த சாமியாரு இல்ல?”

”அவரு வூட்டுக்கு போய்ட்டாரு”

சாமிக்கு சகலமும் புரிந்தது போலிருந்தது. வேறு எதுவும் கேட்காமல் பின் வாசலுக்குப் போய் குளித்தான். உள்ளே வந்து இட்லியையும் நேற்று மீந்திருந்த கறிக்குழம்பையும் சாப்பிட்டான். கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

துர்க்கா அவனை நிறுத்திச் சொன்னாள்,

“வாடின பூவ காளியம்மன் கோவிலுக்கு கொடுத்திரு. நான் ஜோதி மார்கெட் போய்ட்டு உதிரி வாங்கிட்டு கடைக்கு வரேன்”

சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. கடைசியில் அவள் தன்னை மன்னித்தே  விட்டாள். வெளியே வெயில் சுத்தமாய் இல்லை. மேகம் அடர்ந்திருந்தது. சாலையில் யாரோ பேசிக் கொண்டார்கள்.

“ரெயில்வே கேட்டுக்கு அந்தாண்டலாம் மழயாம்.., விடிகால்ல வேளனந்தலு, ஆவுரு கிட்ட லாம் ஊரப்பட்ட மழையாம்.., ”

இன்னொருத்தர் சொன்னார். ” அப்ப  இங்கயும் வரும். ”

சாமி உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தான்.

- மேலும்

Monday, July 10, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது

சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்க ஆரம்பித்தான். ரமணாசிரம நூலகத்தை ஒட்டியுள்ள இறக்கமான சாலை  நடக்க ஏதுவாக இருந்தது. இந்தச் சாலையில் மட்டும் இன்னும் மரங்கள் இருக்கின்றன. காலை வெயில் தெரியாத அளவிற்கு மரங்கள் அச்சாலையை மூடியிருந்தன.  மயிலின் அகவலோசை அந்த அமைதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது.  தாமரை நகர் வேலைக்குச் செல்லும் மனிதர்களால் அடர்ந்திருந்தது. இருசக்கர வாகனங்களின் ஓசை சாலையை நிறைத்தது. வெயில் முகத்தில் வந்து இறங்க சாமி மிக சோர்வாய் உணர்ந்தான்.

நேற்று சாயந்திரம்  ரவியின் வீட்டிலிருந்து மிதமாய் இறங்கினான். நடந்து நடந்து மலை சுற்றும் பாதையிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்காய் வந்தான்.  அங்கு எந்தக் காலத்திலும் காற்று அவ்வளவு குளுமையாய் இருக்கும். கிளை விரித்துப் படர்ந்திருந்த  கல்யாண முருங்கை மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துவிட்டான். சாமி இந்த நகரை நடந்து நடந்தே தேய்த்தான். அவனால் அரை மணி நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கிட்டத்தட்ட உயிருக்குப் பயந்துதான் திருவண்ணாமலைக்கு வந்தான். அன்று அதிகாலை சங்கராபுரத்திலிருந்து இவர்களைச் சுமந்து வந்த லாரி தேனிமலையில் இறக்கிவிட்டது. அவன் ஆயா வீடு நினைவிற்கு வரவே துர்க்காவுடன் முதலில் அங்குதான் போனான்.அங்கு அவனை உட்காரச் சொல்லக் கூட யாருமில்லை. துர்க்கா அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளாக அக்கம் பக்கம் விசாரித்து காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாள். கழுத்தில் போட்டிருந்த தாலி மட்டும்தான் தங்கம். அதை யோசிக்காமல் போய் விற்றுவந்தாள். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையையும் செய்தாள். ஒரு கடை வைத்து உட்கார்ந்த பிறகுதான் வாழ்வு நிமிர்ந்தது. சாமி அப்போதும் ஊரைச் சுற்றி வந்தான். இதோ இன்றளவும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

முகத்திலறையும் சூரியனை ஒரு கையால் மறைத்துக் கொள்ள முயன்றபடியே வேக வேகமாய் நடந்து வீட்டை நெருங்கினான்.  கதவு சாத்தியிருந்தது. வாசல் கூட்டவில்லை. வெளியூர் எங்காவது போய்விட்டாளா என யோசனையாய் அருகில் வந்தவன் கதவில் பூட்டு இல்லை என்பதை கவனித்தான். துர்க்கா துர்க்கா என அழைத்தபடியே கதவை வேகமாய் தட்டினான். உள்ளே அவள் வரேன் என மெல்ல முனகும் ஓசை கேட்டது.

“இன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லயா, கதவ தெற மே”

 கதவு திறந்தது

துர்க்கா சிவந்த விழிகளுடன் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

”என்னா ஒடம்புக்கு?”

”ஒண்ணுல்ல. அந்த மாடத்துல அம்பது ரூபா இருக்கு எடுத்துட்டு போ ”  எனச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

சாமி ஒரு கணம் அவமானத்தில் கூசினான். பின்பு சகஜநிலைக்குத் திரும்பி விளக்கு மாடத்தில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் அவள் மேல் பரிவு எழுந்தது. தன்னை நினைத்துக் குறுகினான்.  அதற்குள் தண்டராம்பட்டு சாலையைத் தொட்டு விட்டிருந்தான்.  சிற்றுண்டிக் கடை ஒன்றைப் பார்த்து நின்றான். உள்ளே நுழைந்து பத்து இட்லிகளையும் நான்கு வடைகளையும் கட்டிக் கொண்டான். வீட்டிற்குத் திரும்பி நடந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. துர்க்கா எழுந்துவிட்டிருந்தாள். இவன் திரும்பியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி இட்லிப் பொட்டலத்தை நீட்டினான். துர்க்கா எதுவும் பேசாமல் வாங்கி அதைப் பிரித்து ஒரு வட்டிலில் ஐந்து இட்லிகளையும் இரண்டு வடைகளையும் போட்டு அவனிடம் நீட்டினாள்.  அவளும் கீழே  உட்கார்ந்து கொண்டு அந்த இலையிலேயே சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். நேற்று மதியமும் இரவும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை.  இருவரும் எதுவும் பேசாமல் உண்டார்கள். சாப்பிட்டதும் சாமி எழுந்து கொண்டான். கட இன்னிக்கு தெறக்கலயா என மட்டும் கேட்டான். துர்க்கா இல்லை என தலையசைத்தாள்.

அப்ப ரெஸ்ட் எடு எனச் சொல்லியபடி வெளியேறினான்.  நடக்கையில்  ஏதோ ஒரு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு அவனிற்குள் தோன்றி மறைந்தது.

அவன் போனதும் துர்க்கா கதவை அடைத்தாள். பாயை விரித்துப் போட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.  இப்படி ஒரு துக்க உணர்வை அவள் வாழ்நாள் முழுக்க அனுபவித்ததில்லை. தன்னை திடமானவளாக தைரியமானவளாகத்தான் நினைத்துக் கொள்வாள். அதன் படி நடந்தும் கொள்வாள். நேற்று  அகத்திய மாமுனியை ஆட்டோவில் ஏற்றிவிட்ட பிறகு ஏனோ அவள் மனம் அதற்கு முன்பில்லாத பாரத்தை உணர்ந்தது. நினைவு முழுக்க அவரோடு நடந்த முதல் காட்டுக் கலவியே நிறைந்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாய்  இதேப் பாயில் நிகழ்ந்த கலவிகளையும் நினைத்துக் கொண்டது. எவ்வளவு ஆழமான உறவது. மாமுனி அத்தனை பரிசுத்தமானவராக இருந்தார். அவரோடு முழுமையாய் முயங்கினாள். முழுமையாய் வாழ்ந்தாள். பத்து நாட்கள் இருக்குமா? தான் இழந்த எல்லாமும் தனக்குத் திரும்பி வந்து விட்டதாய் உணர்ந்தாள்.

இந்த நொடி வரை சாமிநாதனை அவள் மன்னிக்கவில்லை. அவனோடு படுக்கவும் இல்லை. அந்தத் தெருவின் எல்லா காமக் கண்களையும் அவள் அசாதாரணமாகக் கடந்தாள். அவளுக்கு யாரைப் பிடித்திருந்ததோ அவர்களோடு கூடினாள். ஆனாலும் அவர்களை தூரத்திலியே வைத்திருந்தாள். மாமுனியைத்தான் முதன் முறையாய் வீட்டிற்குள் அனுமதித்தாள். அவரின் அமைதியும் களங்கமின்மையும் அவளிற்குள்  உறைந்திருந்த ஒரு மென்மையை கண்டறிந்தது. காதலுணர்வு என்பதை முதன் முறையாய் உணர்ந்தாள். அதில் மூழ்கியும் திளைத்தாள். பத்தே நாட்களில் எல்லாம் போனது. துர்க்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருங்குரலில் உடைந்து அழுதாள். சூரிய வெப்பம் ஓடுகளில் இறங்கி அவ்வீட்டைத் தகிக்கச் செய்தது. உயிர் வாழ்வதின் மீது அவளுக்கு முதன்முறையாய் அலுப்பு தோன்றியது. அப்படியே உறங்கிப் போனாள்.

0

அங்கை கண்விழித்தபோது நேரம் உச்சியைக் கடந்திருந்தது. யாரும் அவளை எழுப்பவில்லை. நேற்று முழுக்கத் தூங்கியிருக்கிறாள். முந்தின நாள் பின்னிரவில் வீட்டிற்கு வந்து படுத்ததுதான். அப்படி ஒரு தூக்கம். நேற்று மதியம் விழிப்பு வந்ததும் எழுந்து போய் குளித்துவிட்டு லேசாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டாள். இரவு முழுக்கத் தூங்கி இதோ இன்றையப் பகல் முழுக்கத் தூங்கியும் சோர்வும் அசதியும் அவளை விட்டு நீங்கவில்லை.  வீட்டில், அமைதி இருளைப் போல நிரம்பி இருந்தது. உடல் வலி தாங்க முடியாததாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து போய் குளித்தாள். குளிர் நீர் பட்டதும் மனம் சற்று சாந்தமானது. வெகு நேரம் குளித்தாள். முந்தா நாள் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் மீண்டும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு தலையை அழுத்தின. அங்கைக்கு ஏனோ மீண்டும் சமுத்திர ஏரிக்கரைக்குப் போக வேண்டும் போலிருந்தது. அவளும் சங்கமேஸ்வரனும் கலவிய மரத்தடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். உடையணிந்து கொண்டாள். வாசல் கதவு மூடியிருந்தது. அப்பா வேலைக்குப் போய்விட்டிருப்பார். தம்பி பள்ளிக்கூடத்திற்கு. அம்மா கடைக்கு ஏதாவது போயிருக்கலாம். வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாமா என யோசித்தாள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அங்கை உள்ளே போய் தம்பியின் நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்தாள். கோவிலுக்குப் போகிறேன் என எழுதி கதவிடுக்கில் வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினாள்.

உச்சி வெயில் மண்டையில் இறங்கியது. நேற்று மதியம் லேசாய் சாப்பிட்டிருந்ததோடு சரி. வயிறு எரிந்தது. பசியிலும் சோர்விலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மயங்கி விழுந்துவிடுவோமோ எனப் பயந்தாள். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறையில் சாதம்,  ஈயக் குண்டானிலிருந்து அகலக் கிண்ணத்தில் கஞ்சி வடிந்து கொண்டிருந்தது. நிமிர்த்தினாள். சூடு ஆறியிருந்தது. அம்மா நேரத்திலேயே போய் இருக்க வேண்டும். கையினாலேயே சாதத்தை எடுத்து வடிந்திருந்த கஞ்சிப் பாத்திரத்தில் போட்டு கரைத்துக் குடித்தாள். காலி வயிறு சப்தம் எழுப்பியது. நிதானமாய் குடித்துவிட்டு சாதத்தைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முன்பு போலவே வெளியே வந்தாள். தகிக்கும் வெயிலை அவள் பொருட்படுத்தவில்லை பத்தடி நடந்ததும்தான் செருப்பு போடாமல் வந்ததை தார்ச்சாலை நினைவுபடுத்தியது. திரும்பி வீட்டிற்குப் போக அலுப்பாக இருந்தது. சாவப் போகும்போது செருப்பெதுக்கு என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். உண்மையாகவேவா சாகப் போகிறோம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். திடீரென சாவின் மீது ஆசை வந்தது. செத்துதான் போனால் என்ன?  ஒரு வேளை சங்கமேஸ்வரனும் அங்கிருப்பானோ? நேற்றுப் போனவன் இன்று வரும் என்னை ஆசையாய் கட்டிக் கொள்வானில்லையா திடீரென அவள் மனம் துள்ளியது. தானும் இதே சாலையில் வேகமாய் வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுந்து செத்து விடலாம் என முடிவு செய்தாள். ஆனால் ஆனால் அதற்கு முன்பு அந்த இடத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும். அங்கை சமுத்திர ஏரிக்கரையை நோக்கி நடந்தாள்.

0

துர்க்கா மூச்சிற்காக ஏங்கினாள். அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு மற்ற ஆண்களைப் போலவே அத்தனை ஆசையுடன் அவளை விழுங்கப் பார்த்தது. கால்களை உதறி உதறி நீரின் மேற்பரபரப்பிற்கு வந்து மீனைப் போல வாயைத் திறந்து காற்றிற்கு ஏங்கினாள். ஆனால் நொடிக்கும் குறைவாய் அவள் உடலை நீர் உள்ளே இழுத்தது. தண்ணீரை மேலும் குடித்தாள். உடல் வீங்க வீங்க மேலே வரும் வழிகளனைத்தும் அடைத்துக் கொண்டன. கடைசி சுவாசத்திற்கான வாய்ப்பு அறுபட்டபோது துர்க்காவிற்கு விழிப்பு வந்தது. அலறி எழுந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது.  அறை தகித்துக் கொண்டிருந்தது. எழுந்து போய் அடைந்திருந்த கதவுகளைத் திறந்தாள். துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டு துண்டைக் கட்டிக் கொண்டு பின் வாசலுக்குப் போய் குளித்தாள்.

என்ன மாதிரியான கனவிது. அந்த நீர்ப்பரப்பு அவ்வளவு பெரிதாய் இருந்தது. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோம். யோசிக்க யோசிக்க அது சமுத்திர ஏரி என்பது அவள் நினைவிற்கு வந்தது.  ஒரு அடர்ந்த மழைக்காலத்தில் அவள் அங்கு போயிருக்கிறாள். அந்தப் பரந்த நீர்பரப்பை லேசான பயத்தோடு பார்த்து வந்திருக்கிறாள். பூக்கடை வைத்தபிறகு அவள் உலகம் சுருங்கிப் போனது. கடையையும் வீட்டையும் தாண்டி எங்கும் போவது கிடையாது.  ஏனோ இன்று அவளுக்கு அங்கே போக வேண்டுமெனத் தோன்றியது. குளித்து விட்டு வந்ததும் உடையணிந்து கொண்டாள்.  தலைவார பொறுமையில்லாமல் கூந்தலை உதறி பெரிய கொண்டை போட்டுக் கொண்டாள். சாந்து பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கதவை சாத்தி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த செருப்பை இழுத்து கீழே போட்டு காலில் அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வெயில் உக்கிரமாய் இருந்தது.  பசி வயிற்றைக் கிள்ளியது பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள். தாமரை நகர் தாண்டி, அரசுக் கல்லூரிக்கு குறுக்கில் நடந்து சமுத்திர ஏரி செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்தாள். இடைப்படும் கிராமத்தில் நிறைய மரங்களிருந்தன. வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. ஏரிக்கரை அடிவாரப் பாதையில் அடர்ந்த மரங்கள் துவங்கும் இடத்திற்கு வந்ததும் அவள் மனம் சமாதானமாகியது. உயர்ந்த மரங்களின் குளுமையும் காற்றும் அவள் பசியை மட்டுப்படுத்தியது. மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த அரச மரமொன்று முதலில் வந்தது. இந்தச் சரிவில் ஏறிப்போய்  நீர்ப்பரப்பை வெயிலில் பார்க்க அலுப்பாய் இருந்தது. மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு மாலையானதும் ஏரி மீது ஏறலாம் என்கிற நினைப்பில் அரசமரத்தடிக்காய் சென்றாள்.

அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான பறவைகளும் கிளிகளும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எறும்பில்லாத இடமாய் பார்த்து அமர்ந்தவள் சுற்று முற்றம் பார்த்தாள். யாரும் கண்ணிற்குத் தென்படவில்லை. தொலைவில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. முந்தானையை அவிழ்த்து தரையில் போட்டுப் படுத்துக் கொண்டு கண் மூடினாள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. தூக்கத்தில் விழ இருந்தவளை வெடித்த அழுகைக் குரலொன்று அடித்து எழுப்பியது. அரண்டு எழுந்தவள் அழுகை வந்த மரத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தாள். அங்கை மண்ணில் குப்புற விழுந்திருந்தாள். அவள் துக்கம் அழுகையாய் வெடித்திருந்தது. பதறிய துர்க்கா ஓடிப்போய் அவளைத் தூக்கினாள்

யார் யார் மா நீ ? ஏன் இங்க வந்து கிடக்குற என்றவளை அங்கை நிமிர்ந்து பார்த்தாள்.  துர்க்காவின் அகலப்பொட்டும் ஆகிருதியான உடலும் அவளை என்னவோ செய்ய அம்மா எனக் கதறியபடியே அணைத்துக் கொண்டாள். துர்க்கா அவளை அணைத்தபடியே மண்ணில் அமர்ந்தாள். அவளை வாரி மடியில் போட்டுக் கொண்டு முதுகை நீவினாள். அழதாடா அழாதடா எனத் தட்டினாள். அங்கை தன் வாழ்நாளில் உணர்ந்திராத வெதுவெதுப்பை சமாதானத்தை உணர்ந்தாள். எழ மனமில்லாமல் எழுந்து அமர்ந்தாள். துர்க்கா அவள் கூந்தலைக் கோதி மண்ணைத் தட்டிவிட்டு புடவையில் ஒட்டி இருந்த மண்ணையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அங்கை மீண்டும்  அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

துர்க்காவிற்கு அந்தப் பெண் மீது அளவில்லா வாஞ்சை தோன்றியது. அடிக்கடிப் பார்த்த முகமாகத்தான் இருந்தது. அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

“உனக்கு என்னனாலும் அம்மா இருக்கண்டா.., அம்மா இருப்பண்டா எப்பவும்..”

 என்றெல்லாம் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அங்கை படாரென எழுந்தாள்.

“நான் இங்க  சாகலாம்னுதான் வந்தன்.   ஏன்னு தெரியல உங்களப் பாத்ததும் சாகிற எண்ணம் போய்டுச்சி. உங்களோடவே  வந்து இருந்துடவா?”

”வந்துடு தங்கம். சத்தியமா சொல்றேன் என்னோட வந்துடு. எனக்கும் யாருமே கெடையாது “

துர்க்காவும் உடைந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

ஏரிச்சரிவிலிருந்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கைதான் முதலில் கவனித்து யாரோ வராங்க எனச் சொல்லியபடி அணைப்பிலிருந்து விலகினாள்.

துர்க்கா திரும்பிப் பார்த்தாள். சாமிநாதன் சிவப்புத் துண்டை தலைக்கு தலைப்பாகயாய் கட்டிக் கொண்டு வெயிலில் குளித்தெழுந்து வந்து கொண்டிருந்தான்.

- மேலும்


Saturday, July 8, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு


காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,

" அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி. என்னால முடில நீ போய்ட்டு வந்துரு" எனப் படுத்துவிட்டாள்.

நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார். வீட்டு ஹாலிலேயே குடித்து விட்டு போட்டிருந்த நான்கு குவாட்டர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. நான் ரகசியமாய் வீட்டில் குடிப்பேனே தவிர இப்படி வெளிப்படையாய் குடித்தது இதுவே முதன் முறை. இனிமேல் ரகசியமாய் இருந்து என்னாகப் போகிறது என்கிற வெறுப்பு. சாமி ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் பழைய வாழ்க்கை. சிறு பிராயம். மூங்கில் துறைப்பட்டுக் கதை. துர்க்காவை மணமுடித்த கதை. பாண்டல வாழ்க்கை. அவர் கொடிகட்டிப் பறந்தது. பின் வீழ்ந்தது. என எல்லாமும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் பெரியசாமி செத்தாரா பொழச்சாரா என்கிற கேள்வியை மட்டும்தான் கேட்டேன். அவன் பொழச்சதனாலதான் எங்கள யாரும் தேடி வரல என்றார் சாமி.

துர்க்காவிற்கு அங்கை பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கை ஒரு பூச்சி. ஏதேதோ பகற்கனவுகளில் மூழ்கியிருந்த பேதைப் பெண். நான் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவள் எனக்காக உயிரையே கொடுத்திருப்பாள். எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன். சில நாட்கள் போகட்டும். மெதுவாய் போய் அவள் காலில் விழுந்து கெஞ்சியாவது திரும்ப இந்த வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும். இந்தக் குடி எழவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுத்தமாய், மிகத் தூய்மையாய் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும். என் நேற்றை திரும்பிப் பார்க்க எனக்கே கூசியது.

 அதிகாலையிலே போதை சுத்தமாகத் தெளிந்தது. கைவலி இல்லை. கழுத்தில் மாட்டியிருந்த கயிறை அறுத்துவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வேளானந்தல் கிளம்பினேன். இந்தக் கையை வைத்துக் கொண்டு பஸ் ஏறிப் போவது சிரமம். அரச மரத்தடி ஆட்டோ ஸ்டேண்டிற்குப் போனேன். என்னோடு ஐந்தாவது வரை படித்த சங்கர் அங்கிருந்தான். என்னைப் பார்த்து

"இன்னா வாத்தி" என சிரித்தான்.

"வேளானந்தல் போய்ட்டு வரலாமா அமுதாக்கா வூட்டுக்காரர் செத்துட்டார் டா"

அவன் பரபரப்பானான்.

"அய்யோ எப்ப?"

நேத்து எனச் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோவைக் கிளப்பி இருந்தான். ஏறி அமர்ந்து கொண்டேன். வேட்டவலம் சாலையில் ஆட்டோ விரைந்தது. சங்கர் மெதுவாகக் கேட்டான்.

" கைல ன்னா கட்டு? "

"கீழ வூண்டண்டா"

" குட்ச்சிட்டு வண்டில இருந்து வூண்டியா? இன்னாபா ரொம்ப குடிக்கறன்னு கேள்விபட்டேன்."

  ம்ம். ஆமாடா."

"  உனுக்கு இன்னா கொற? கவுர்மெண்ட் வேல. கண்ணுக்கு லெட்சணமா பொண்டாட்டி. சொந்த வூடு. அப்புறம் இன்னாடா?

"ஒண்ணும் இல்லடா. ஏதோ கிறுக்கு. வுடு. "

"ம்ம். எல்லாம் அப்படித்தான் பேசிக்கிறாங்க. நீ சின்ன வயசுல இருந்தே பட்ச்சுகினே இருப்ப. அதான் இப்படி. "

"எப்படி?"

" ஹாங் லூசாயிட்ட இல்ல அத சொன்னேன்."

 எனக்கு சிரிப்பு வந்தது. ஃப்ரியா வுட்றா டேய் என்றேன் 

"சரி சரி கைல ஏதாவது வச்சிருக்கியா?"

"   என்னது?"

" இல்லடா நீ எப்பவும் சரக்கும் கையுமாதான் இருப்பன்னு சொல்லிகிட்டாங்க. சாவுக்கு வேற போறம் அதான்" என இளித்தான்.

 ரெயில்வே கேட்டை வண்டி தாண்டி இருந்தது.

" கைல இல்லடா போற வழில வாங்கிக்கலாம்."

நல்லவேளையாக கடை எதுவும் திறந்திருக்கவில்லை. அப்புறம் பாத்துக்கலாம்டா நீ ஓட்டு என்றேன். வேளானந்தலுக்குள் வண்டி நுழைந்தது. மிகச் சிறிய கிராமம். சாவு வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் எதுவுமில்லை. சாவு மேளம் உக்கிரமாய் இருந்தது. பாட்டுக்கார லட்சுமி உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பத்துப் பதினைந்து பெண்கள் முதுகை சேர்த்தணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அமுதாக்கா பிணத்தின் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். பெயருக்கு கூட அவள் அழுததாய் தோன்றவில்லை. எங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்த மாலையை பிணத்தின் கழுத்தில் போட்டேன்.

அமுதாக்கா எழுந்து வந்து வா என்றாள். அம்மாவுக்கு முடில என்றேன். நீ வந்ததே பெரிசு என புன்னகைக்க முயன்றாள். மேளம் அடிப்பவர்களிடம் போய் பத்து ரூபாய் கொடுத்தேன். பறை உக்கிரமாய் ஒலிக்க ஆரம்பித்தது. பாடை கட்டும் ஏற்பாடுகளை யார் பார்க்கிறார்கள் என விசாரித்தேன். ஒருவர் அதற்கான முயற்சியில் இருந்தார். அவரிடம் இருபது ரூபாய் தாளொன்றை நீட்டினேன்.

அவர் பூ வோணும் சார் கொஞ்சம் தென்னங்கீத்து வேணும் என்றார்.

சங்கரை அழைத்து இருநூறு ரூபாய் கொடுத்தேன். அவனுக்கு கோட்டர் வாங்கிக் கொண்டு பூ வாங்கி வரச் சொன்னேன். இளிப்பாய் நகன்றான்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் போய் கத்தியைத் தேடி எடுத்துக் கொண்டு தோப்பிற்குப் போனேன். மரம் ஏறத் தெறிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா என்றதற்கு இரண்டு இளைஞர்கள் முன் வந்தனர். போய் தென்னங் கீற்றுகளை வெட்டி வந்தோம். பாடை தயாரானது. சங்கர் பூக்கூடையை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆட்டோவில் போய் படுத்துக் கொண்டான்.

பிணம் கிளம்பியது. கழியின் முன் பாகத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு போனோம். குழி தயாராக இருந்தது இறக்கி வைத்துவிட்டு சடங்குகளை கவனித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அமுதாக்கா வீட்டை நீரால் கழுவி இருந்தாள். அங்கிருந்த சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடன் யாருமே இல்லை. எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள். சங்கரிடம் மேலும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தந்து போய்விடச் சொன்னேன். அம்மாவிடம் நாளை வருவதாய் சொல்லச் சொன்னேன். அதற்குள் அமுதாக்கா குளித்திருந்தாள். என்னையும் குளிக்கச் சொன்னாள். அணிந்திருந்த உடையோடு போய் தலைக்கு நீரூற்றிக் கொண்டேன். ஒரு புது வேட்டியை எடுத்து வைத்திருந்தாள். கட்டிக் கொண்டு வெறும் உடம்போடு வாசலில் அமர்ந்தேன். அமுதாக்கா யாரையோ அழைத்து பால் வாங்கி வரச் சொன்னாள். ஏழு மணி வாக்கில் எவர் சில்வர் டம்பளரில் டீ வந்தது . களைத்திருந்தேன். டீயை அமிர்தமாய் குடித்தேன்.

அமுதாக்காவும் ஒரு புதுப்புடைவையை அணிந்து கொண்டு உலை வைத்திருந்தாள். இருள் அடர்ந்து வந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவள் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாள் என்கிற எண்ணம் வந்து போனது. எட்டு மணி வாக்கில் சுடச்சுட சாதத்தையும் குழம்பையும் எடுத்து வந்து வாசலில் வைத்தாள். அவளையும் சாப்பிடச் சொன்னேன். சேர்ந்து சாப்பிட்டோம். சாவு வீட்டின் காமம் துலக்கமாய் என்னுடலில் ஏறியது. குண்டு பல்பு வெளிச்சத்தில் அமுதா ஒளிர்ந்தாள். வெளியே பாய் கொண்டு வந்து போடச் சொன்னேன். அவள் மறுத்து உள்ளே வந்து படுக்கச் சொன்னாள். ஒரு புதுப் பாயை அந்தச் சிறுவீட்டின் நடுவில் விரித்து தலையணைகளைப் போட்டாள். சாவு வீட்டுப் பூ வாசம் இன்னும் மீதமிருந்தது. உடலளவிலும் மனதளவிலும் நான் நசுங்கி இருந்தேன்.

வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு,  தன் புடவையைக் களைந்து விட்டு என்னருகில் வந்து படுத்துக் கொண்டாள். நான் மிக மெதுவாய் மிக ஆழமாய் அவள் உதடுகளில் முத்தினேன். அவ்வளவு தவிப்போடும் அவ்வளவு ஆசையோடும் என்னை ஏந்திக் கொண்டாள். அதுவரை எனக்குப் பழகிய உடல்கள் யாவும் உடலின் பழக்கங்களைப் போலவே இல்லை. அத்தனை புத்தம் புதிதாய் ஒரு கதவு திறந்தது. உடலின் மாய வெளி எங்கள் இருவருக்குமாய் திறந்து கொண்டது. அத்தனை துக்கங்களையும் அதுவரைக்குமான இழப்புகளையும் நாங்கள் பறிமாறிக் கொண்டோம். ஒரு தேவ ரகசியம் உடைந்து எங்களை எங்களுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருந்தது. என் எல்லா பாவங்களும் அவள் உதட்டு நீரில் கரைந்தன. நான் மேலும் மேலும் எழுந்தேன். கரைந்தேன். அவளுடலில் தஞ்சமடைந்தேன். வறண்டு போன அவளின் உணர்வுகளனைத்தும் துளிர்த்தன. ஆழ்ந்த கலவிக்குப் பிறகு எங்களின் வெற்றுடல்கள் ஓய்ந்தன.

அதிகாலையில் கூரையின் மீது மழைத்துளி விழுந்த சப்தம்தான் என்னை எழுப்பியது. அப்படி ஒரு உறக்கம். என் வாழ்நாள் முழுக்கத் தூங்கியிராத உறக்கம். பால்யத்திற்குப் பிறகு அவ்வளவு ஆழமாய் போதையில்லாது உறங்கியிருக்கிறேன்.  மின்னல் வெட்டியது. படுத்த வாக்கிலேயே அவ் வெளிச்சத்தில் அமுதாவின் முகம் பார்த்தேன். அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். யுகங்களாய் தீர்ந்திரா அலைவுறல்களின் முடிவு அவள் முகத்தில் துலக்கமாய் தெரிந்தது. இனி எழவே போவதில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அதைக் கலைக்காது அந்த வீட்டின் மிகப் பழைய பின்  கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இருள் விலகியிருக்கவில்லை. இடுப்பில் இருந்த வேட்டியையும் அவிழ்த்தெறிந்து விட்டு மழையில் போய் நின்றேன். உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. நானொரு புதுப் பிறப்பெடுத்தேன்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு

" ஐயோ என்ன விட்டுடு"

என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவன் கடைசி நினைவு. ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவன் சுத்தமாய் மயங்கினான். மரண பயம் உறைய இன்னொரு மூலையில் பெரியசாமி மண்டை உடைந்து கிடந்தார். இரத்தம் வழிந்து அவர் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை மாற்றியிருந்தது. அவர் மண்டையைப் பிளந்த உலக்கை துர்க்காவின் கையில் இருந்தது. போதைக்கு அவள் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்ததால் பச்சாதாபங்கள் காணாமல் போயிருந்தன. திருட்டுத் தாயோலிங்களா என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் மூச்சிரைத்தது. உலக்கையை எறிந்துவிட்டு வெளித் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இவர்கள் போட்ட சப்தம் கேட்டு சற்றுத் தொலைவில் இருந்த பெரியசாமி கவுண்டர் வீட்டு விளக்குகள் சடாரென எரிந்தன. நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இவள் ஒரு பிசாசைப் போல வெளியே அமர்ந்திருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே ஓடினார்கள். அய்யய்யோ எனக் கத்தியபடியே பெரியசாமியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கார எட்றா கார எட்றா எனக் கத்தினார்கள். கவுண்டர் வீட்டுப் பெண்கள் சூழ்ந்து கொண்டு கதற ஆரம்பித்தார்கள். அந்த இரவு அலங்கோலமாய் கிடந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.

 சாமிநாதனை யாரோ எழுப்பிப் பார்த்தார்கள். அவன் மயங்கி இருந்தான். செத்துட்டானா என சந்தேகித்து மார்பில் காதை வைத்துக் கேட்டார்கள். உசிரு இருக்குது. இவனையும் வண்டில தூக்கி போடுங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க என்பதைக் கேட்க யாருமில்லை. வண்டி ஏற்கனவே மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தது. துர்க்காவை கவுண்டர் வீட்டுப் பெண்கள் உலுக்கிக் கொண்டிருந்தனர். என்னாச்சின்னு சொல்லுடித் தேவ்டியா முண்ட என அவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்கள். துர்க்கா உறைந்திருந்தாள். அவளை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. திருட்டு முண்ட குடிபோதையில இருக்கு என ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்தார்கள். துர்க்கா அப்படியே சரிந்தாள். 

 ழைய பெட்டியில் ஒன்றையும் தேற்ற முடியாத ஆத்திரத்தில் வெளியே வந்த சாமிநாதன் நேராய் பெரியசாமி கவுண்டர் வீட்டு முன்பு போய் நின்றான். அவர் வெளியில் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்து முன்பு போல சிரிப்பதில்லை. என்ன சாமி எனப் பொதுவாக கேட்டார். சாயந்திரம் வீட்டுப் பக்கம் வாங்க, உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் எனச் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குப் போனான். துர்க்கா இன்னும் எழவில்லை. அவள் உறங்கும் கோலம் பார்த்ததும் இவனிற்குள் ஆத்திரம் முசுமுசுவென மூண்டது. இவ ஆங்காரத்த மொதல்ல அடக்கனும். சாமியின் மூளை தீவிரமாக யோசித்தது. கட்டிலுக்கு கீழே வைத்திருந்த விஸ்கி பாட்டிலகளில் ஒன்றை வெளியே இழுத்து, மூடியைத் திருகி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். வெளியில் போய் உட்கார்ந்து கொண்டான். 

துர்க்கா அவன் அரவம் கேட்டு விழித்தாள். அவளின் தினசரியைத் துவங்கினாள்.சாமி மெதுவாக குடித்தான். சமையல் ஆனதும் உள்ளே வந்து சாப்பிட்டான். மீண்டும் வெளியில் போய் அம்ர்ந்து கொண்டான். துர்க்கா அவனைப் பொருட்படுத்தவில்லை. வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். மதிய சாப்பாட்டை ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்து விட்டு வந்தாள். அசதியில் மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். நான்கு மணி வாக்கில் பெரியசாமி வந்தார். 

இன்னா சாமி ஒரு மாதிரி இருக்கயே என்றபடியே திண்ணையில் அமர்ந்தார். சாமி அதுவரை மனதிற்குள் தீட்டிக் கொண்டிருந்த கணக்கை செயல்படுத்த ஆரம்பித்தான். 

இன்னிக்கு பவுர்ணமி காளி அப்படியே முழுசா எனக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கா அவள அமைதிபடுத்தத்தான் கொஞ்சம் போல குடிச்சேன் என்றபடியே திரும்பி பின்னால் வைத்திருந்த புட்டியை எடுத்து, தயாராய் வைத்திருந்த டம்ப்ளரில் கொஞ்சம் போல ஊற்றி பெரியசாமியிடம் நீட்டினான். குடிங்க என்றான். பெரியசாமி தயங்கினார். பொழுதோடவா என்றார். அட அடிங்க ஒண்ணும் ஆவாது என்றான். அவர் வாங்கி வாயில் சரித்துக் கொண்டார். நல்லாருக்கே என்றவரிடம் ஸ்காட்ச் என இளித்தான். இன்னொன்னு போடுங்க என்றபடி இரண்டாவது ரவுண்டை அதிகமாய் ஊற்றிக் கொடுத்தான். அதையும் வாங்கி ஒரெ மூச்சில் இழுத்தார். 

 சாமி தெம்பானான் அவன் நினைத்ததை விட இவர் பெருங்குடிதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டே 

 "கேக்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க இவ்ளோ சொத்துக்கும் வாரிசே இல்லாம இருக்கே என்னன்னாவது யோசிச்சீங்களா?" 

" எல்லாரும் கேக்குற கேள்விதான் சாமி, ஆனா என்ன செய்ய? காலம் கடந்திருச்சே., அவளுக்கும் ஒரு பொண்ணுக்கு மேல பொறக்கல..,"  

"சரி அதுல போய் என்ன இன்னொன்னு கட்டுங்க"  

"அட போய்யா., இந்த வயசுல  போய் " 

"என்னா வயசு போங்க. ஆள் பாக்க கிண்ணுதான இருக்கீங்க" 

 பெரியசாமி க்ளாசை நீட்டினார். இன்னொன்னு போடு. 

  சாமி ஆவலாய் நிரப்பிக் கொடுத்தான். அதையும் ஒரே மூச்சில் இழுத்து விட்டு எழுந்து போய் காறித் துப்பிவிட்டு வந்தார். 

 சாமி,  துர்க்கா எனக் கத்தினான். 

தூங்கிக் கொண்டிருந்தவள் அரண்டு எழுந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்த்ததும் சாமி இளித்தான். 

"கட்ச்சிக்க ஏதாவது எட்த்தாமே., அதிசியமா கவுண்டர் நம்மூட்டுக்கு வந்திருக்கார்" 

சேலையை சரியாகப் போடாமல் வந்து நின்றதால் துர்க்காவின் முலைகள் பளிச்செனத் தெரிந்தன. பெரியசாமி அவளை அப்போதுதான் முதன் முறையாய் பார்ப்பதுபோல அவ்வளவு ஆசையாகப் பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்து அவசரமாய் துர்க்கா உள்ளே திரும்பிப் போனாள். காய்ந்த மல்லாட்டை இருந்தது. அதை வறுத்து எண்ணெய் மிளகாய்த்தூள் போட்டு ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தாள். பெரியாசாமி கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். காரம் மூளையை எட்டியதும் ஹா என்னம்மா இருக்கு என்றார். 

 சாமி அடுத்த ரவுண்டை ஊற்றியபடியே 

"எல்லாம் நம்ம ட்ரைனிங்தான். அருமையா சமைப்பா, அத விட அருமையா குடிப்பா. போதையாயிட்டா அத விட அருமையா என்ன மேல தூக்கி போட்டுட்டு பண்ணுவா" 

எனச் சொல்லியபடி பெருங்குரலில் சிரித்தான். முகத்தை சுளித்த துர்க்கா அவசரமாய் உள்ளே போனாள். பெரியசாமிக்கு போதை ஏறியிருந்தது. அவன் சொன்னதைக் கேட்டதும் குறும்பாய் சிரித்தார். 

"உன்ன மட்டும்தான் பண்ணுவாளா?" என்றார். 

"உங்களுக்கும் வேணுமா?" என நேரடியாக ஆரம்பித்தான். 

அவர் லேசாக தடுமாறினார். 

"இதுல போய் என்ன கவுண்டரே. உள்ள போங்க" என்றான். 

பெரியசாமிக்கு உடல் முறுக்கியது எழுந்து உள்ளே போனார். துர்க்கா கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்தாள். என்ன வேணும் என்றாள். நீதாம்மே என ஆசையாய் அவள் மீது பாய்ந்தார். துர்க்கா இதை எதிர்பார்திருந்தாள். மேலே வந்து விழுவதற்குள் ஒதுங்கிக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்தவர் சுதாரித்துக் கொண்டு எழுந்தார். 

"இத பாரு நீ இப்ப இருக்கிறது என் வூடு. இன்னும் உனக்கு என்ன வோணும்னு கேளு தரேன். நான் யார்னு தெரியுமில்ல" 

என மீசையை நீவினார். 

 துர்க்கா நிதானமாய் சொன்னாள். "என் வூட்டுக்காரனுக்கு புத்தி பிசகிடுச்சி. உங்க மரியாதைய காப்பாத்திகிட்டு வெளிய போய்டுங்க" என்றாள். 

 பெரியசாமி ஆத்திரமானார். என்னடி பெருசா பத்தினி வேசம் போடுற என எழுந்து அவளைப் பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தார். துர்க்கா அவரைப் பிடித்து தள்ளினாள். தடுமாறியவரை எட்டி உதைத்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்தவரால் எழ முடியவில்லை. சத்தம் கேட்டு சாமி உள்ளே ஓடிவந்தான். துர்க்காவிற்கு ஆத்திரம் முற்றியிருந்தது. 

"அடத் தேவ்டியாபையா கட்ன பொண்டாட்டியவா கூட்டி கொடுக்கிற?" எனக்கத்தியபடியே அவன் மீது பாய்ந்தாள். சாமி அவளை மடக்கினான். அதே நேரம் பெரியசாமி சுதாரித்துக் கொண்டு எழுந்து  பின்புறமாய் அவள் சேலையை உருவி கைகளை பின்னால் வளைத்துக் கட்டினார். சாமி இன்னொரு பாட்டிலைத் திறந்து அவள் வாயில் ஊற்றினான். துர்க்கா முரண்டு பிடிப்பதை நிறுத்தியிருந்தாள். நிதானமாய் குடித்தாள். மயங்கியதைப் போல் உட்கார்ந்தாள். சாமி கள்ளச் சிரிப்புடன் வெளியேறினான். பெரியசாமி துர்க்காவை கட்டிலில் தள்ளி, பாவாடையே மேலே ஏற்றினார். அவள் அழகின் பிரம்மாண்டம் பார்த்த உடனேயே அவருக்கு கழண்டது. ஏற்கனவே பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்ததால் உடல் விதிர்த்திருந்தது. அவளைத் தொடக் கூட இயலாமல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியேறினார். 

துர்க்கா கைகளை விடுவித்துக் கொண்டாள். சேலையை அணிந்து கொண்டாள். சமையலறைக்குப் போய் மூலையில் வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சாமி அடுத்த ரவுண்டை பெரியசாமிக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். வந்து நின்றவளை இருவரும் கவனிக்கவில்லை. துர்க்கா உலக்கையை ஓங்கி பெரியசாமி மண்டையில் நச்சென இறக்கினாள். அலறக் கூட இயலாமல் அதிர்ச்சியில் சரிந்தார். சாமி மிரண்டான். அடுத்த அடி இறங்குவதற்குள் சுதாரித்து திண்ணையில் இருந்து இறங்கி ஓடினான். அவள் உலக்கையை எறிந்தாள். முதுகைப் பலமாய் தாக்கி தலைக் குப்புற விழுந்தான். 

சப்தம் வெளியில் கேட்கும் என யூகித்தவள் ஒரு கையால் பெரியசாமியின் தலைமுடியையும் இன்னொரு கையால் சாமியின் தலைமுடியையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டாள். பெரியசாமி எழுந்து கொள்ள முயன்றார். சாமி கூப்பாடு போட்டான். துர்க்கா மீண்டும் வெளியில் போய் விழுந்து கிடந்த உலக்கையை எடுத்து வந்து பெரியசாமி தலையில் இன்னொரு பலமான அடியை இறக்கினாள். அவர் முழுமையாய் மயங்கினார். சாமி தவழ்ந்து வந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.  

"போதைல புத்தி பிசகிடுச்சி மன்னிச்சு வுட்ரு" எனக் கதறினான். கால்களாலேயே அவனை விலக்கியவள். மார்பில் ஓங்கி மிதித்தாள். உலக்கையை வயிற்றில் இறக்கினாள். வலி தாங்க முடியாமல் மல்லாந்தவனின் மார்பில் இன்னொருமுறை ஆழமாய் மிதித்தாள். 
அவன் மூர்ச்சையானதும் உலக்கையை எறிந்துவிட்டு வெளியில் போய் அமர்ந்து கொண்டாள்.

அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
 சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.

எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.

"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு" எனக் கதறினான்.

துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.

"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க" என நடுங்கினான்.

துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.

சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.

 - மேலும்

Thursday, July 6, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு

’எழுந்து வூட்டுக்கு போம்மா’

அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது. எங்கும் இருள். திக்பிரம்மைப் பிடித்தவளாய் மானிற்கு சமீபமாய் அங்கை மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆசிரமத்தின் வாயிலைப் பூட்டியிருந்தார்கள். அங்கையை வெளியே அனுப்பிவிட்டால் காவலுக்கு இருப்பவரும் போய் படுத்துக் கொள்வார். அவளை அவருக்குப் பல வருடங்களாய் தெரியுமென்பதால் மிக சமாதானமாகவும் அன்பாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் அசையவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் எனப் போய் படுத்துக் கொள்ளவும் முடியாது. அதிகாலையிலேயே தியான அறையைச் சுத்தம் செய்து பூஜை செய்ய ஆட்கள் வந்துவிடுவார்கள். இவளைப் பார்த்தால் தன்னுடைய வேலை போய்விடும். முதியவர் இதையெல்லாம் சொல்லி மன்றாடிப் பார்த்தார். ஆனால் அங்கை எங்கேயோ காணாமல் போயிருந்தாள். அவளுக்குத் தன்னைச் சுற்றி நிகழ்வதெதுவும் பிரக்ஞையில் இல்லை.

அங்கைக்கு கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது. உடலும் மனமும் மொத்தமாய் வெதும்பிப் போய் இருந்தன. ஒரு பூவின் ஆயுளை விடக் குறைவானதாய் இருந்தது அவள் வாழ்க்கை. நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது. இன்று மதியம் பனிரெண்டு மணி வாக்கில்தான், இதே இடத்தில்தான் சங்கமேஸ்வரனைப் பார்த்தாள். முன்னிரவில் எல்லாமும் முடிந்து போயிற்று. காலங்களைக் கடந்து வந்து சேர்ந்தவன் அரை நாளிற்குள் முற்றுப் புள்ளியாகிவிட்டான். அங்கை வெடித்து அழுதாள்.

வளும் ரவியுமாய்த்தான் சங்கமேஸ்வரன் உடலை மடியில் தாங்கிக் கொண்டார்கள். ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் உடன் ஏறினார்கள். சங்கமேஸ்வரன் தலை இவள் மடியில் இருந்தது.  அவன் முகத்தில் வலியின் சுவடே தெரியவில்லை. அவ்வளவு நிச்சலனமாய் இருந்தது. மானு மானு எனக் கதறியபடியே அவன் முகத்தைத் தட்டினாள். நெஞ்சில் பலமாய் அறைந்தாள். ஒரு சலனமும் இல்லை. பயத்தின் விஷ நகங்கள் அவள் நெஞ்சில்  ஆழமாய் கீற ஆரம்பித்தன. ரவி ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அரசு மருத்துவமனை அருகாமையில்தான் இருந்தது. விரைந்த ஆட்டோ ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனையை எட்டியது. உடன் வந்த இருவர் அவசரமாய் கீழே இறங்கி சங்கமேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கை வாயிலிலே நின்றுவிட்டாள். எல்லாமும் முடிந்ததை அவள் உணர்ந்திருந்தாள். அவனின் சலனமே இல்லாத தூங்கும் முகம் அவளுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது. ரவி அங்கையை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போனான். பைக்கில் இருந்து விழுந்துட்டோம் எனச் சொல்லி அவளை இருக்கையில் இருத்தி மருந்து போட வைத்தான். அங்கைக்கு சில சிராய்ப்புகளைத் தவிர ஒன்றுமில்லை. ரவியின் இடது கை வீங்கி யிருந்தது. அசைக்க முடியாத அளவிற்கு வலி. அவனை அட்மிட் செய்து கொண்டார்கள். அங்கை அதையெல்லாம் கவனிக்காது வெளியே வந்தாள்.

சங்கமேஸ்வரனை தூக்கிக் கொண்டு ஓடியவர் வெளியே நின்று கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும் நெருங்கி வந்து

“உசிரு நிக்கலமா அப்போவே பட்டுனு பூட்டு கீதுமா” என்றார்.

அங்கை அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்தது. அவர் அவளைத் தொட்டு உலுக்கி

”அவரு உங்க வூட்டுக்கார்ரா? யாரண்டயா சொல்லனுமா? ”

என ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். அங்கை அப்படியே நடக்க ஆரம்பித்தாள்.

”த., இந்தாம்மா.., ம்மா.., ”

என அவர் இவளை விதம் விதமாக கூப்பிட்டுப் பார்த்து ஓய்ந்தார். அங்கைக்கு காதுகள் அடைத்துக் கொண்டன. கண்கள் இருட்டின. கால்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன. மனம் எண்ணம் எல்லாமும் உறைந்து போயிருந்தது. மழையால் ஊரே நசநசத்திருந்தது. கிழிந்த உடைகளோடும் தலைவிரி கோலத்தோடுமாய் பஜாரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. வாகன நெரிசல் காமராஜர் சிலையருகில் அதிகமாக இருந்தது. அங்கை பிரதான சாலையின் நடுவில் அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனங்களின் ஒலிப்பான்கள் அலறின. ஒரு பேருந்து அவளுக்கு வெகு சமீபமாக வந்து நின்று பாங்க் என அலறியது அப்படியே மல்லாக்க விழுந்தவள். சுய நினைவை இழந்தாள். யாரோ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சற்று முன்பு மருந்திட்ட அதே செவிலியர் குழாமிடம் அவளைச் சேர்த்தனர். அவளைத் திட்டிக் கொண்டே ரவிக்கு அருகில் இருந்த ஒரு படுக்கையில் அவளைக் கிடத்தினார்கள். முதலுதவிகளை ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கை கண் விழித்தாள்.  இடது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். தனக்கு நேர்ந்த சகலமும் கண் முன் ஓடியது. சாதாரணமாய் திரும்பியவள் பக்கத்துப் படுக்கையில் இருந்தவனை உற்றுப் பார்த்தாள். அது ரவி. அவனும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. மெல்ல நரம்பில் ஏறிக் கொண்டிந்த ஊசியைப் பிடுங்கினாள்.  சகலத்திற்கும் காரணமான ரவியைத் தன் கைகளால் கொன்று தீர்த்துவிடும் வெறி அவள் நரம்புகளில் ஏறியது. படுக்கையிலிருந்து இறங்கியவளின் உடலில் அசாத்திய வலு குடியேறியிருந்தது. மெல்ல நடந்து போய் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். யார் இவன்? ஏன் அவளுடைய வாழ்வில் நுழைந்தான்? எதற்கு அவளைப் பார்த்து வெருண்டும் மருண்டும் ஓடினான். அவள் தன்னை அவனுக்குத் தர தயாராகத்தான் இருந்தாள். தன் புள்ளி மான் கனவுகளை அப்படியே விட்டுவிட்டு அவனோடு சேர்ந்து வாழ விரும்பியும் இருந்தாள். பாவி  அவளின் அருகாமைக்கு கூட வரவில்லை. அங்கை வைத்த கண் வாங்காமல் ரவியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். போதையில் துவளும் அவன் உடல் நினைவில் வந்து எரிச்சலையும் ஆத்திரத்தையும் இரட்டிப்பாக்கியது. அவனை கைகளால் நெறித்துக் கொல்வதே சரியாக இருக்கும். அவளின் இருப்பு அவன் நினைவை அசைத்துப் பார்க்க மெல்லக் கண் விழித்தான்.

எனக்கு ஒண்ணும் இல்ல அங்க என்றான்.  அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள்.

 "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

என்ன, என்ன சொல்ற? என்கிற அவன் பதட்டத்தைப் பொருட்படுத்தாது  உரத்தக் குரலில் கத்தினாள்

"நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி"

தடுமாறி எழ முயன்றவனின் மீது பாய்ந்தாள். அவன் கழுத்தை நெருக்கினாள். அவ்வளவு ஆழமாக, அவ்வளவு ஆசையாக அவனது கழுத்தை இறுக்கினாள். அவன் தொண்டைக் குழி நசிக்கும் நொடிக்கு முன்னர்   யாரோ அவளை, அவன் மீதிருந்து இழுத்துக் கீழே போட்டனர். ரவி நெஞ்சே வெடித்துவிடும்படி  இருமி அவன் உயிரைக் காத்துக் கொண்டான். தன்னுடைய எந்த ஆசையுமே நிறைவேறாமல் போன அங்கை வெடித்து அழுதாள்.

யாரோ போலிசைக் கூப்பிடச் சொன்னார்கள். ரவியின் அம்மாவின் முகம் தென்பட்டது. அங்கை நிதானத்திற்கு வந்தாள். மெல்ல வெளியே நடக்க ஆரம்பித்தாள். இரவு அடர்ந்திருந்தது. கடைகளை மூடி விட்டிருந்தார்கள். மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. அப்படியே நடக்க ஆரம்பித்தாள். மாடுகளும் பன்றிகளும் நாய்களும் சுதந்திரமாக சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தன. அங்கையின் கால்கள் அவளை சேஷாத்ரி ஆசிரமத்தில் இருக்கும் மானிடமே கூட்டிச் சென்றன. காவலர் கேட்டை அடைத்திருந்தார். இவள் அந்தக் குறுகலான காம்பவுண்டின் மேல் ஏறி உள்ளே குதித்தாள். என்ன ஏது என ஓடிவந்தவர் இவளின் கோலத்தைப் பார்த்துப் பதறினார்.

‘என்னம்மா இப்படி வந்து நிக்குற என்னாச்சி.., என்னாச்சி..,?

 என்கிற கேள்விகளைப் பொருட்படுத்தாது உறங்க ஆரம்பித்திருந்த மானின் அருகாமையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்த முயன்று சலித்துப் போன முதியவர் நுழை வாயிலுக்கு சமீபமாய் நடந்து வந்தார். கேட்டில் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல் பட்டது.
யாரு என்றபடியே முன்னால் சென்றார். ஒரு பதின்மன் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்.

”எங்கக்காவ காணம் தாத்தா” என்றான்

அவனை அவருக்கு தெரிந்திருந்தது.

”இங்கதான்யா இருக்கா.  வா.., உள்ள வா.,  வந்து சீக்கிரம் கூட்டிட்டு போ! ” என்றபடியே கதவைத் திறந்து விட்டார்.

அங்கையின் தம்பி ஓட்டமும் நடையுமாக அங்கை அருகில்போய் நின்றான்.

அக்கா எழுந்து வீட்டுக்கு வா!

எனக் கெஞ்சினான். அங்கை அழுது ஓய்ந்திருந்தாள். சற்றுத் திடமானாள். எழுந்து கொண்டாள்.

வா! போலாம் என்றபடியே முன்னால் நடந்தாள்.  பின் சடாரென நின்று மீண்டும் மானிடம் நடந்து வந்து அதைக் கடைசி முறையாய் பார்த்துக் கொண்டாள். உடலைக் குலுக்கிக் கொண்டாள்.

வாயிலை நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். பெரியவர் நிம்மதியாய் அவர்கள் இருவரையும் வெளியில் விட்டு கதவைப் பூட்டிக் கொண்டார்.

நள்ளிரவில் இருவரும் வீட்டை அடைந்திருந்தனர். அங்கையின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர். அரசல் புரசலாய் அவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது. உள்ளே நுழைந்த அங்கை எதுவும் பேசாமல் அவர்கள் முன் நின்றாள். இனி மீண்டும் ரவி வீட்டிற்குத் தான் போகப்போவதில்லை என்றாள். ரவியும் இங்கு வரக்கூடாது என்றாள். அவர்கள் ஒன்றும் பேசாமல் திகைத்து நின்றனர். அங்கையற்கன்னி உள்ளறைக்குப் போய் அங்கிருந்த மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பாய் ஒன்றை எடுத்து உதறி தரையில் போட்டுப் படுத்துக் கொண்டாள்.

- மேலும்



Wednesday, July 5, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து


”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த”

மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

’யார் மா நீ?  ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு எழுந்திரு’

மாமுனி எவ்வளவு விலக்கியும் அந்தப் பெண் அவரின் கால்களை விடாமல் கெட்டியாகப் பிடித்தபடி தரையில் புரண்டு கொண்டிருந்தாள்.

ஐயோ என்னயே யார்னு கேட்டிட்டியே என்றபடி இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாளே தவிர அவரின் கால்களை விட்டபாடில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவருக்கு அடையாளமும் பிடிபடவில்லை. திகைத்து நின்றிருந்தார்.

கட்டுவதற்கு உதிரிப் பூ அம்பாரமாய் குவிந்திருந்தது. இன்று கொஞ்சம் பிந்தி விட்டது. தாமதமாய்த்தான் வந்து கடையைத் திறந்தார்.  வழக்கம்போல் உட்கார்ந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்தார். இன்று பவுர்ணமி நாள் வேறு. காலையிலேயே மக்கள் மலை சுற்ற ஆரம்பித்திருந்தார்கள்.  காலை பத்து மணிக்கே பவுர்ணமி நேரம் துவங்கிவிடுவதால் மக்கள் நடமாட்டம் அதிகமாகியிருந்தது. இந்தப் பெண் கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, குனிந்து பூக்கட்டிக் கொண்டிருந்த மாமுனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மாமுனி அவளைப் பார்த்திருக்கவில்லை. அவசர அவசரமாக பூத் தொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒன்று உறுத்த நிமிர்ந்து பார்த்ததுதான், எதிரில் நின்று கொண்டிருந்தவள்,  ஐயோ மாமா எனக் கதற ஆரம்பித்தாள்.

“உங்களத் தேடாத ஊரில்ல, போகாத தெசையில்ல, கடேசில பக்கத்துலயே இருந்திருக்கீங்களே” என்றபடியே உள்ளே ஓடிவந்து மாமுனியைக் கட்டிக் கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள மாமுனி பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவளை உதறித் தள்ளி தூரத்தில் போய் நின்று கொண்டாலும் அவள் மீதிருந்த வாசனையை அவர் ஏற்கனவே அறிந்திருப்பதாகத் தோன்றியது. குழப்பமாய் நின்றுகொண்டிருந்தவரின் பாதங்களில் விழுந்தவள் அவற்றை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டுக் கதற ஆரம்பித்தாள்.

மாமுனி என்ன செய்வதென்றுத் தெரியாமல் நின்று கொண்டிருந்தார். நல்ல வேளையாய் துர்க்கா காலைச் சாப்பாட்டோடு கடைக்குள் நுழைந்தாள். கீழே விழுந்து கிடந்தவளை முதலில் அவள் கவனிக்கவில்லை. உள்ளே நுழைகையில் உணர்ந்து தடுமாறி நின்றாள்.

”யார் மா நீ ஏந்திரி ஏந்திரி இன்னா இங்க வந்து கெடக்குற?”

என்ற துர்க்காவின் கண்டிப்பான குரல் கேட்டவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். தலைகுனிந்தபடியே,

“நான் இவரோட சம்சாரங்க” என்றாள்.

துர்க்கா மாமுனியை கண்களால் விசாரித்தாள். மாமுனி அவசர அவசரமாக மறுத்து தலையாட்டினார்.

துர்க்கா அந்தப் பெண்ணை அங்கிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தாள். மாமுனியிடம் எதிரில் இருக்கும் கடைக்குப் போய் டீ வாங்கி வரச் சொன்னாள். அவர் அகன்றதும் கேட்டாள்.

”எந்த ஊர்மா நீ? பேரு என்ன?”

”எம் பேரு பூங்காவனங்க. சொந்த ஊர் துரிஞ்சாவரம். இவரு எம் புருசங்க. ஆறு மாசத்துக்கு முன்னால வீட்ட விட்டு ஓடியாந்துட்டாருங்க.”

”அப்படியா? ஆறு மாசமாவா காணம். ஏன் ஓடியாந்தார்?”

”ஆமாங்க இன்னியோட ஆறாவது பவுர்ணமிங்க. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அவரு கெடச்சிரனும்னு வேண்டிகிட்டுதாங்க மலை சுத்துவன். இன்னிக்குதாங்க அந்த அண்ணாமலையான் கண்ணத் தொறந்திருக்கான்.  இவருக்கு லேசா கிறுக்குங்க. படிச்ச கிறுக்கு. ஏதேதோ புக்குலாம் படிச்சி இப்படி ஆயிருச்சிங்க. நான் தான் அகத்தியரு, மகாமுனி அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிட்டே இருப்பாருங்க. சமயத்துல சொந்த நெனவே இருக்காது”

துர்க்கா அகத்தியர் என்ற சொல்லைக் கேட்டதுமே இவள் சரியானவள்தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

”அவருக்குதான் உன் நெனவே இல்லையே ஊருக்கு கூட்டிப் போய் மட்டும் என்ன செய்வ?”

”ஐயோ அப்படியே வுட்டுப் போய்ட சொல்றீங்களா? புள்ள குட்டிலாம் இருக்குதுங்க. வூடு வாசல் நெல புலம் எல்லாம் இருக்குதுங்க.  ஒரு வருசத்துக்கு மிந்தி நல்லாத்தாம் இருந்தார். ஊர்லயே கடுமையான ஒழைப்பாளி. கூடாத ஆளுங்களோட கூடி இப்படி ஆய்டுச்சு. ஆரம்பத்துலயே பாகாயத்துக்கு ரெண்டு மூணு முற கூட்டிப் போய் வந்தம். மாத்திர சாப்டா சரியா இருப்பாருங்க. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாவும் ஆய்டுச்சி. ஆனா போவ போவ மாத்திர சாப்டா தூங்கிட்டே இருக்கம். மண்ட வலி அதிகமா இருக்குன்னு சாப்பிடுறத நிறுத்திட்டாருங்க”

துர்க்காவிற்கு துலக்கமாய் புரிந்தது. இவரை எப்படி இவளோடு அனுப்பி வைப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.

” நீ வேற ஒத்த பொம்புளயா இருக்க,  வரமாட்டேன்னு அடம் புடிச்சா எப்படி கூட்டி போவ?”

”ஏதாச்சிம் சொல்லி கூட்டிட்டு போவனுங்க. புள்ளைங்க அப்பனப் பாக்காம ஏங்கிப் போய் கெடக்குதுங்க. அவங்களப் பாத்தா இவருக்கு எல்லா ஞாபகமும் வந்துரும்.  நீங்க கொஞ்சம் தொணைக்கு வர முடியுமா?”

துர்க்கா யோசித்தாள். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. இந்த சாமிநாதனையும் காணவில்லை. கடையைப் பூட்டி விட்டு போகவும் முடியாது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே மாமுனி டீ க்ளாசுடன் வந்தார். இருவருக்கும் கொடுத்தார்.

துர்க்கா அவரைப் பார்த்து கேட்டாள்.

“நல்லா பாரு இவங்கள தெரில உனக்கு?” என்றாள்.

மாமுனி இல்லையென தலையசைத்தார். அந்தப் பெண்ணுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

இரு வரேன் என்றபடி துர்க்கா கடையை விட்டு வெளியே வந்தாள். இரமணாசிரமம் ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி நடந்தாள். ஆட்டோவின் பின் சீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த முருகனைத் தட்டி எழுப்பினாள்.

அவன் கோபத்தை மறைத்துக் கொண்டே  இன்னா யக்கா என்றபடியே எழுந்தான்.

”முருகா ஒரு உதவி, என் கடையில இருக்கும்ல ஒரு சாமி ”

”ஆமா”

”அவர் பொண்டாட்டி அவர தேடி வந்திருக்கா. ஆனா அவருக்கு அவள அடையாளம் தெரில.”

”ஐயயே நெசமாவா?”

”ஆமா நல்லா விசாரிச்சுட்டேன். இவருக்குதான் எல்லாம் மறந்து போச்சு. நீ போய் கொஞ்சம் அவங்க ஊட்ல விட்டுடேன்”

”சரிக்கா. எங்க போவனும்?”

”துரிஞ்சாவரம்”

”மல்லவாடி - துரிஞ்சாவரமா?”

”ஆமா முருகா”

”அக்கா இன்னிக்கு பவுர்ணமி. சவாரி நெறய இருக்கும்.”

”அட ஒரு மணி நேரத்துல வந்திரலாம் போ. அந்தப் பொம்பள ரொம்ப அழுவுது”

 ”செரி போறேன். துட்டு”

”வா தரேன்”

என்றபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்

வண்டியைக் கிளப்பியவன். துர்க்கா பூக் கடை முன்பு வண்டியை நிறுத்தினான்.

இறங்கியவள் பூங்காவனத்தை முதலில் ஏறச் சொன்னாள். அவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறினாள்.

துர்க்கா மாமுனியை ஏறச் சொன்னாள்.

மாமுனி அவசர அவசரமாக தலையசைத்தார். நான் அகத்தீஸ்வரம்  போகனும்.  நாளைக்கு கிளம்பிருவேன். கமண்டலம் மேல ரமணர் கிட்ட இருக்கு. இன்னிக்கு ராத்திரி அத வாங்கிட்டு கிளம்பனும்.  என நிதானமாகச் சொன்னார்

துர்க்கா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.  நீ இப்ப இவங்களோட போ. நான் ரமணர் கிட்ட கமண்டலத்த வாங்கிகிட்டு நைட்டு அங்க வரேன் என்றாள்.

மாமுனி மிரட்சியாய் போய் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார்.

”முருகா வீட்ல பத்திரமா விட்டுடு ”

என்றபடியே ஜாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுத்து நூறு ரூபாயை அவனிடம் நீட்டினாள்.

முருகன் வாங்கிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

பூங்காவனம் துர்க்காவைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மாமுனி உள்ளே போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

இவளுக்கு ஏனோ உள்ளுக்குள் உடைந்தது. சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள். குரலைக் கனைத்துக் கொண்டு பூங்காவனத்திடம் கேட்டாள்.

”இவரு பேரு என்னமா?”

அவள் சொன்னாள்

”அய்யனாருங்க”.


- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு


நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க முடிந்தாலும் இடது கையை அசைக்க முடியாத அளவிற்குக் கட்டுப் போட்டிருந்தனர். குழந்தைகளின்  அழுகையும் இரைச்சலுமாய் அந்த சூழல் அத்தனைக் கொடூரமானதாக இருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்து பெட்டில் ஒரு முதியவரின் கால் மாட்டில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்து பரபரப்படைந்தாள்.

”இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாங்க. இரு கூட்டியாரேன்.”

எனச் சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள்.  அந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தார் போலிருந்தது.  எங்கே மறுபடியும் அங்கையைக் கூட்டி வந்து விடுவாளோ, அவள் வந்து கழுத்தை நெறிப்பாளோ எனப் பயமாக இருந்தது. நல்ல வேளையாக உள்ளே ஓட்டமும் நடையுமாக வந்தது அம்மாதான். படபடப்பாய் வந்து தலையைத் தடவினாள்.

“ஒண்ணுமில்லடா மூட்டுதான் நழுவியிருக்காம். எலும்புலாம் எதுவும் உடையல. சீக்கிரம் சரியாகிடும்”

எனக்கு உடனே அங்கிருந்து ஓடிப்போக வேண்டும் போலிருந்தது.

“அப்புறம் என்னம்மா வா வீட்டுக்குப் போகலாம்” என எழுந்தேன்.

”இருடா டாக்டர் வந்ததும் அவர் கிட்ட கேட்டுட்டு போய்டலாம்.”

அதுவரைக்குலாம் இங்க இருக்க முடியாது என எழுந்தவனை டேய் டேய் என்றபடியே என்னைப் பிடித்து இழுத்து படுக்கையில் அமர வைத்தவள். இது யார்னு தெரியுதா பார்டா என சின்னச் சிரிப்போடு கேட்டாள். நான் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அக்கா. தூக்கிவாரிப் போட்டது. அமுதா அக்காவா இவள். ஒடுங்கிப் போயிருந்தாள். அந்தச் செழுமையும் மினுமினுப்புமான முகம் இப்படியா வற்றிப் போகும். என்னால் ஆற்றாமையை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அமுதாக்கா என சத்தமாகவே கத்திவிட்டேன். ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. நானும் உடைந்தேன். அம்மாதான் எங்கள் இருவரையுமே தேற்றினாள். பக்கத்து பெட்டிலிருந்த முதியவரின் உடல் ஒரு முறை சப்தமாய் இருமி அடங்கியது. அமுதா ஒரு நொடி வெறுப்பாய் அவரை நோக்கி விட்டு மீண்டும் அவ்வளவு கருணையோடு என்னைப் பார்த்தாள். புரிந்து கொண்டேன்.

அழுகையைத் துடைத்துக் கொண்டு அமுதா கேட்டாள்.

”இத்தன வருசமா இருக்கனா செத்துட்டனான்னு கூட யாரும் நினைச்சுப் பாக்கல இல்ல?”

அம்மா ஏதோ சொல்ல முயன்றாள். நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.

”நானும் மறுபடியும் அந்தப் பக்கம் வரமுடியாமப் போய்டுச்சி யார் சாவுக்கும் சொல்ல முடியல”

அம்மா அடடா என உச்சுக் கொட்டினாள். நீ கூட ரொம்ப வத்திட்டியேம்மா என்றாள் வாஞ்சையுடன்.

"ம்ம் என் காலம் போச்சு. ஆனா வாழ வேண்டிய பையன். உனுக்கு என்னடா ஆச்சு. உன் கழுத்த நெறிச்சி கொல்லப் பாத்தாளே அவ யாரு உம் பொண்டாட்டியா?"

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

அம்மா அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஐயோ எம்புள்ள வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டனே"

 என வயிற்றில் அறைந்து கொண்டாள். அதுவரைக்குமில்லாத கோபம் அடிவயிற்றிலிருந்து மேலெழுந்தது.

"இப்ப வாய மூடப் போறியா இல்லையா?" எனக் கத்தினேன்.

என்ன ஏதுன்னு எனக்கும் தெர்லக்கா இனிமேதான் விசாரிக்கனும் என அமுதாவிடம் சொன்னேன். அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. நான் வீட்டுக்குப் போறேன் என எழுந்து கொண்டேன். அதுவரை உடலில் சட்டை இல்லை என்பதே பிரக்ஞையில் இல்லை. அதானால் என்ன. நடக்க ஆரம்பித்தேன். பின்னாலேயே அமுதாக்காவும் அம்மாவும் ஓடி வந்தனர். நான் நிதானமாய் திரும்பி வீட்டு சாவி கொடு என்றேன்.

டாக்டர பாத்துட்டு போய்டலாம்டா என அம்மா கெஞ்சினாள். நீ பாத்துட்டு மருந்து மாத்திர வாங்கிட்டு வா. நான் முன்னால போறேன். சாவி எங்க என்றேன். அம்மா சற்றுச் சமாதானமாய்  பக்கத்து வீட்ல இருக்கு என்றாள். வெற்றுடம்போடு கட்டுப் போட்ட கையைக் கழுத்தில் மாட்டியபடி வெளியே வந்தேன்.

சாமி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“அட வாத்தி நூறாசுய்யா உனக்கு” என இளிப்பாய் நெருங்கி வந்து அணைத்தார். ஏனோ அந்த நேரத்தில் சாமியை அவ்வளவுப் பிடித்தது.

“இங்க இருக்க முடியல வீட்டுக்குப் போலாம்” என்றேன்.
“எலும்பு கிலும்பு ஒடஞ்சிருச்சா?
“இல்ல மூட்டுதான் நழுவி இருக்காம்”
“ஹா அப்ப ஒண்ணும் இல்ல வூட்டுக்கு போலாம். காசு வச்சிருக்கியா போய் வாங்கியாந்திர்ரேன்”
“வீட்ல இருக்கும் எடுத்துக்கலாம். இப்ப ஒரு ஆட்டோவ கூப்டு” என்றேன்

சாமி போய் ஆட்டோவைக் கூட்டி வந்தார். பதினோரு மணி வெயில் முற்றியிருந்தது. நேற்று  முழுக்க ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறேன். அங்கையின் ஆத்திரம் மிகுந்த முகமும்  என்னை நெறித்த அக் கைகளின் வலிமையும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து விழுந்தது. என்னால் சுத்தமாய் நம்ப முடியவில்லை. அதுவா அங்கை. அவ்வளவுச் சாதுவான முகத்திற்குப் பின்னால் இப்படியொரு உணர்வா புதைந்திருந்தது. ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சாமிக்காய் திரும்பி இடுப்புல ஏதாவது வச்சிருக்க என்றேன். ஒரு வாய் இருக்கும். என்றபடியே வேட்டி இடுப்பு மறைவிலிருந்து ஒரு கோட்டர் பாட்டிலை எடுத்தார். பிடுங்கி வாயில் சரித்துக் கொண்டேன்.  நெஞ்சு எரிந்து நரம்பை அமைதிப் படுத்த முயன்றது. போவட்டும் என வாய்விட்டு சொல்லிக் கொண்டேன்.

”உன்ன இடிச்சவன் செத்துட்டானாமே?” என்றார் சாமி

 ”நான் செத்திருக்கலாம் சாமி”  குழப்பமாய் பார்த்தார்.

என்னா வாத்தி? என்றார்.

“நான் ஏன் சாவலன்னு நேத்து எம் பொண்டாட்டி வந்து என் கழுத்த நெறிச்சி சாவடிக்க பாத்தா சாமி.”

”அப்ப வண்டி ஓட்டியாந்தவன்?

”எம் பொண்டாட்டி லவ்வராம்” என் கண்ணில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்தது

சாமி ஆழமாய் மூச்சை இழுத்து விட்டார். என் தோளின் மேல் கை போட்டு அணைப்பாய் உலுக்கியபடியே சொன்னார்.

”எம் பொண்டாட்டியும்தான் என்ன சாகடிக்கப் பாத்தா. உனுக்குப் பரவால்ல அவளுக்கு எத்தினி லவ்வர்னே எனக்கு தெரியாது. அவளோட இப்பத்தி லவ்வர் கிட்ட அம்பது ரூபா வாங்கிதான் இந்த கோட்டரையே வாங்கினேன். இதுல போய் என்னபா” என்றார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெளியே வெயிலில் நகரும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் கடைசிச் சுவட்டையும் இந்தச் சூரியன் இன்று அதிகாலையிலேயே தின்றுத்  தீர்த்துவிட்டிருக்கிறது. திருவண்ணாமலை ஒரு வெயில் நகரம்தான்.

- மேலும்

Featured Post

test

 test