Monday, May 1, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினான்கு

சங்கமேஸ்வரன் திகைத்து நின்றான்.  இயற்கை உபாதைக்காக புதர் மறைவிற்காய் சென்ற மலர்செல்வியைக் காணோம். இருள் வேறு கவிந்து வருகிறது. இன்னும் பல காத தூரம் இந்தக் கானகத்தின் வழியே நடந்து செல்ல வேண்டும். குமார பர்வதத்தின் அடர்த்தியும் இதில் வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகளின் கடும் விஷத்தன்மை குறித்தும் அறிந்திருந்தான். ஒரே ஒரு பச்சைத் தவளை தன் எச்சத்தை உமிழ்ந்தாலும் என்னாகும் என யோசிக்க யோசிக்க பயம் அடிவயிற்றைக் கவ்வ ஆரம்பித்தது. இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவு செய்தவனாய் நடந்து செல்ல வேண்டிய பிரதான தடத்தில், ஒரு கொத்துத் தீக் கொன்றை மலர்களை அடையாளத்திற்காய் வைத்து விட்டு புதரை நோக்கி நடந்தான்.

கழுத்தளவு வளர்ந்திருந்த புதருக்குப் பின்னால் நீரின் சலசலப்புக் கேட்டது. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு சப்தம் வந்த திசைக்காய் நடந்தான். நடக்க நடக்க சப்தம் பெரிதாகிக் கொண்டே வந்தது. மலர் மலர் என பெருங்குரலில் கத்திக் கொண்டே நடந்தான். பெரும் நீர்ச் சப்தத்தில் அவன் குரல் அமுங்கிப் போயிற்று. நடந்து கொண்டிருந்தவன் திடுக்கிட்டு நின்றான்.  பத்தடி தூரத்தில் காட்டாறொன்று மண்குழம்பலாய் சிவப்பு நிறத்தில் நுரைத்துப் பொங்கி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரட்சியடைந்தான். மலர் இங்கு வர வாய்ப்பில்லை என உணர்ந்தவனாய்  வந்த திசைக்காய் திரும்பி ஓட ஆரம்பித்தான். மூச்சிரைத்தது. கால் முட்டி வரைக்கும் செடிகள் வளர்ந்திருந்தன. வரும்போது இப்படி இல்லையே என்கிற எண்ணம் பாதி தூரம் ஓடிவந்த பிறகுதான் தோன்றியது.  வேரொரு திசைக்காய் ஓடினான்.   அதுவும் தவாறான திசையெனத் தோன்றியது. பாதையோரத்தில் கழுத்தளவு  வளர்ந்திருந்த புதர்களைக் காணவே இல்லை.  காட்டாற்றை நோக்கி நடந்த பாதையையும் காணவில்லை.  தடமே இல்லாத வனத்தில் வெகு சீக்கிரத்தில் அவனும் தொலைந்து போனான்.

மலர்களை அடையாளம் வைத்து விட்டு வந்த பிரதான சாலையை எப்பாடுபட்டும் கண்டறிய முடியவில்லை.  மரங்களும் செடிகளும் கொடிகளும் மெல்ல மெல்ல நகர்ந்து எல்லா வழிகளையும் மறைத்துக் கொண்டதைப் போலத் தோன்றியது . எந்தத் திசை, எந்த வழி என பார்த்துக் கொண்டிருக்கும்போதே சடுதியில்  இருள் பிரம்மாண்ட ராட்சதனைப் போல் வந்து, மொத்த வனத்தையும் மூடியது. எல்லா நம்பிக்கைகளையும் ஆற்றலையும் இழந்த சங்கமேஸ்வரன் அருகில் ஏற வாகாய் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி இலைகள் இல்லாத கிளையில் அமர்ந்து கொண்டான்.

இருள் கண்களுக்குப் பழகியப் பிறகு பார்வை கூர்மையடைந்தது. அசைவுகள் துலக்கமாய் தெரிந்தன. கூடுதலாய் எங்கிருந்தோ படையென வந்த மின்மினிப் பூச்சிகள் இருளுக்கு வெளிச்சத்தை வாரி வழங்கின. சங்கமேஸ்வரனின் பயம் சற்றுக் குறைந்தார்போல் தோன்றியது. மீண்டும் மலர், மலர்செல்வி என இருளின் திசைகளுக்குள் குரலைச் செலுத்திப் பார்த்தான். சில பட்சிகள் மரங்களிலிருந்து எழும்பிப்  பறந்து மீண்டும் அமர்ந்தன. தூரத்தில் ஓநாய்களின் பதிற்கூவல் கேட்டது. அவ்வளவுதான். சகலமும் முடிந்து போனதாய் உணர்ந்தான். சோர்வும் பசியும் துக்கமும்  அவனை மண்டின.

இந்த வனத்தின் அடர்த்தியையும் ஆபத்தையும் உணர்ந்திருந்தும் மலர்ச்செல்வியின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தது எவ்வளவு பெரிய இடரில் முடிந்திருக்கிறது எனக் குமைந்தான். எல்லா தெய்வங்களையும் மனம் வேண்டிக் கொண்டது. எந்தத் திசையில் விடியும் எனத் தெரியாமல் எல்லாத் திசைகளையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அசலான கானகம் உயிர் கொள்ள ஆரம்பித்தது.

0

சங்கமேஸ்வரன் திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெருவைச் சேர்ந்தவன். திருவூடல் தெருவிலிருந்த மலர்ச்செல்வியை அவள் பருவமெய்தும் முன்பிலிருந்து காதலித்து வருகிறான். மலர்செல்வியோ அவனை ஏறிட்டும் பார்த்தாள் இல்லை. அவனுடைய காத்திருப்புகள்  மற்றும்  பிரயத்தனங்களிற்குப் பிறகு தன்னை மேற்குத் தொடர்ச்சி மலைச் சமவெளிகளுக்கு அழைத்துச் சென்று வந்தபிறகு அவனைக் காதலிப்பதாய் சொல்கிறாள். மகிழ்ச்சியடையும் சங்கமேஸ்வரன் உடனே ஒப்புக் கொள்கிறான். அவளோ தான் செல்ல வேண்டிய இடங்களைக் குறித்து ஓர் துல்லியக் கற்பனையைக் கொண்டிருக்கிறாள். மனிதர்களின் கால்தடங்கள் பதிந்திராத அசலான கானகத்திற்குள் சென்று வர வேண்டுமென அவள் விரும்பினாள் போலும்.

சங்கமேஸ்வரன் பரிந்துரைந்த வழக்கமான இடங்களை அவள் மறுத்தாள். இந்தப் பயணத்திற்கான திட்டமிடல்கள் ஒரு வருடம் நீண்டன. ஒவ்வொரு முறையும் சங்கமேஸ்வரன் ஒரு இடத்தின் அல்லது கானகத்தின்  பெயரோடு அவளைக் காண வருவான், அவளோ அதைக் கேட்டு சில நிமிடங்கள் அசையாமல் நின்று கொண்டிருப்பாள். பின்பு மெல்லத் தலையசைத்து மறுத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிடுவாள். குஜராத் எல்லையில் துவங்கி கன்னியாகுமரி வரைக்குமாய் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு சமவெளிப் பகுதியையும் ஆராய்ந்து அவன் கொண்டு வந்த பெயர்கள் அனைத்தையும் அவள் நிராகரித்தாள். மிகவும் சோர்ந்து போன சங்கமேஸ்வரன் தன்னை இதிலிருந்து காக்கும்படியும் அவளே ஒரு இடத்தை சொல்ல வேண்டியுமாய் அவளைக் காணச் சென்றிருந்தான்.

மலர்செல்வி அன்று பர்வதமலைக்குச் சென்றுவிட்டிருந்தாள். அவன் உள்ளுணர்வில் பர்வதம் என்கிற சொல் எப்படியோ உள் நுழைந்தது. மிகவும் பரபரப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வரைபடத்தை இணுக்கிணுக்காய் மீண்டும் ஆராயத் துவங்கினான். அவன் கண்ணில் பட்டது அந்தப் பெயர். குமார பர்வதம் அல்லது புஷ்பகிரி.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. ஆறு மணி ஆகக் காத்திருந்தான். ஆனதும்,  தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு திருவூடல் தெருவிற்குப் போனான். மலர்செல்வி அவள் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் இவன் வண்டியை அவளுக்கு சமீபமாய் நிறுத்தி அருகில் வா என கண்களால் அழைத்தான். மலர்செல்வி அருகில் போனாள். அவன் கிசுகிசுப்பாய் சொன்னான்.

“நாம் செல்லப் போகிற இடத்தின் பெயர் குமார பர்வதம் அல்லது புஷ்பகிரி ”

”மீண்டும் சொல்”

”குமார பர்வதம்”

மலர்செல்வி கைகளில் வைத்திருந்த கோலப்பொடிப் பாத்திரத்தைக் கீழே நழுவ விட்டாள். அணிந்திருந்த நைட்டியிலேயே கைகளைத் துடைத்துக் கொண்டு , உட்கார்வதற்கு வாகாய் அந் நைட்டியை சற்று மேலேற்றி அவன் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். போகலாம் என்றாள். அவன் எங்கெனக் கேட்கவில்லை. சீறலாய் வண்டியைக் கிளப்பினான்.

அந்த வண்டியிலேயே ஆறு நாட்கள் பயணித்து அவர்கள் குமார பர்வதத்தை வந்தடைந்தனர். முதல் இரண்டு நாட்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலை முதல் மாலை வரை கானகத்தில் அலைந்து விட்டு அவர்கள் தங்கியிருக்கும் சோமவார்பேட்டைக்கு வந்து விடுவார்கள். இன்றுதான் அவள் தன்னுடையை கனவைச் சொன்னாள். சிறு வயதிலிருந்து அவளைத் துரத்தும் ஒரு கனவு என அந்தக் காட்சியை  விவரித்தாள்.

விரிந்த பசும் சமவெளி. நெடுந்தொலைவிற்கு மரங்களோ புதர்களோ இல்லாத வெறும் புல்வெளி. அந்தப் புல்வெளியின் எல்லையில் ஒரு நதி மெல்லிய கோடாய் வழிவது தெரிகிறது. புல்வெளியின் மத்தியில் ஓர் புள்ளிமான். தகதகவென மஞ்சளாய் மின்னும்  சூரியனின் தங்க ரேகைகள் அப்புள்ளிமானின் மீது விழுகிறது. அந்த ஒற்றைப் புள்ளிமான் சலனமில்லாமல், தலையைக் கூடத் தூக்கிப் பார்க்காமல் அமைதியாய் புல்லை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். அவ்வளவுதான் அந்தக் கனவு.

மலர்ச்செல்வி அப்புள்ளிமானைத் தினசரிக் கனவில் கண்டாள். ஒருமுறையாவது அக்கனவை நேரில் பார்த்துவிட வேண்டுமென பைத்தியமாய் இருந்தாள். சதா அவள் நினைவில் அக்காட்சியே தங்கியிருந்தது. குமார பர்வதம் என்கிற பெயரைக் கேட்டதும் அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. மனம் அநிச்சையாய் அக்கனவைத் தனக்குள் நிரப்பிக் கொள்ள உடல் அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. இதோ இந்தக் கானகம் அவ்வளவு அழகோடு இருந்தாலும் அவள் கனவில் கண்டக் காட்சியை இன்னும் காண முடியவில்லை. இதுவரை எவரிடமும் சொல்லாத தன் அந்தரங்கக் கனவை, ஆசையை சங்கமேஸ்வரனிடம் சொன்னாள்.
சங்கமேஸ்வரன் உடனே  அதற்கு சம்மதித்தான். இன்றே அதைக் கண்டு விடலாம் என பரபரப்படைந்து சம்வெளிகளின் இடம் குறித்து விசாரித்து வரக் கிளம்பினான்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் மலையின் தெற்குப் பகுதிக்காய் நடக்க ஆரம்பித்தான். இம்மலைச்சரிவில்  நீண்ட பசும் புல்வெளி இருப்பதாகவும் அதன் முடிவில் ஓர் நதி ஓடுவதாகவும் சொன்னான். மலர்செல்வி கண்கள் மினுங்க அவளைப் பார்த்தாள். நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் மிதந்தபடியே, அக்காட்சியைக் கண்டதும் தன்னைத் தருவதாக அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். அதுவரை அவளைத் தொட்டிராதவன்  இழுத்து அணைத்து உதடுகளில் முத்தமிட்டான். மீதி, மலைக்கு அந்தப் பக்கம் எனச் சிரித்தான். அவளும் சிரித்து அவனைத் தழுவிக் கொண்டாள்.

காலை ஆரம்பித்த அவர்களின் மலைப் பயணம் நீண்டு கொண்டே சென்றது. மலை உச்சியை அவர்களால் அடையவே முடியவில்லை. இதோ இதோ என மாலை வந்துவிட்டதே தவிர மலையுச்சி வரவில்லை. இருவருமே சோர்ந்து போயினர். இனித் திரும்பவும் முடியாது என்கிற எண்ணமும் சங்கமேஸ்வரனின் மனதைப் பயமாய் கவ்வியது. அப்போதுதான் இயற்கை உபாதைக்காய் மலர்செல்வி புதர்களின் பின்புறம் சென்று காணாமல் ஆனாள்.

0

மரக்கிளையில் இருளில் வெளவாலைப் போலத் தொங்கி கொண்டிருந்த சங்கமேஸ்வரனுக்கு மரண பயம் மெல்ல விட்டுப் போயிற்று. மலர்செல்வி இனி உயிருடன் கிடைப்பாள் என்கிற நம்பிக்கைகள்அற்றுப் போயின. முதலில் தென்படும் விலங்கிற்குத் தன்னைத் தந்துவிடலாம் என மனதளவில் தயாரானான். அப்படியே உறங்கியும் போனான்.

ஓர் பறவையின் அலறல் சப்தம் கேட்டு விழித்தான். விடிய ஆரம்பித்திருந்தது. காட்சிகள் துலங்கின. இருள் மெல்ல விலக ஆரம்பித்திருந்தது. மரக்கிளையில் எழுந்து நின்று கண்களைத் திறந்தவனுக்கு பெரும் புல்வெளி ஒன்று காணக் கிடைத்தது. மலையுச்சிக்கு சமீபமாய் இருப்பதை உணர்ந்தான். சோர்வாய் இறங்கி நடந்து  பத்து நிமிடத்தில் மலையுச்சியை அடைந்தான்.

காலைச் சூரியன் மேலெழ ஆரம்பித்திருந்தது. கோடையாதலால் பனிப் பொழிவுகள் ஏதும் இல்லை. வெளிர் நீல வானத்தில் தங்கப் பிழம்பாய் சூரியன் மேலெழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டவன் உச்சியிலிருந்து பார்த்தான். அவனிற்கு முன்பு ஓர் பசுஞ் சமவெளி விரிந்திருந்தது. சமவெளிக்கு அப்பால் நதியுமிருந்தது. அவன் அக்காட்சியில் உறைந்தான்.

தொலைவில் விலங்கொன்று மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தது. என்ன விலங்கு என்பதைக் காண முடியவில்லை.  ஆனால் அது இன்னொரு உடலை சுமந்து வந்து கொண்டிருந்தது.  பார்ப்பதற்கு மனித உடல் போல் தோன்றியது. சங்கமேஸ்வரன் பித்துப்  பிடித்தவனைப் போல  அந்த விலங்கை நோக்கி ஓட ஆரம்பித்தான். நெருங்க நெருங்க காட்சித் துலங்கிற்று. அஃதொரு புள்ளி மான்.  வெறி கொண்டவனைப் போல அச்சரிவில் புயலாய் ஓடி அம்மானை நெருங்கினான். அம்மானின் உடலில் மலர்ச் செல்வி கிடந்தாள். மான் அவளுடலை ஏந்திக் கொண்டிருந்தது.

சங்கமேஸ்வரன் மூர்ச்சையானான்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test