Tuesday, April 25, 2017

எஸ்.எல்.பைரப்பா

இன்று கன்னட எழுத்தாளர் பைரப்பாவைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்புகளை வாசித்தேன். அவர் இணைப்புக் கொடுத்திருந்த வலம் கட்டுரையையும் வாசித்தேன்.  ஒரு வித இறுக்கமும் அமைதியின்மையும் தோன்றவே பைரப்பாவின் விக்கிப் பக்கத்தை நிதானமாய் வாசித்து முடித்தேன். குடும்பம் சிதைகிறது நாவலை வாசித்த  உடன் நான் எழுதிய சில குறிப்புகள் நினைவிற்கு வரவே அதையும் வாசித்தேன். மனம் அமைதியடைந்தது. ஒரு எழுத்தாளரைப் பற்றி, அவர் வாழ்வு மற்றும் படைப்புகளைப் பற்றி அடுத்தவர் உருவாக்கிக் கொள்ளும் வெவ்வேறு சித்திரங்கள் இவை. மற்றவர் நிலைப்பாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு என்னுடையது என்ன என்பதை இப்படி எழுதிப் பார்த்துக் கொள்கிறேன்,

நான் ஒரு எளிய வாசகன். படைப்புகளின் வழியாய் எழுத்தாளரை அறிந்து கொள்ள முற்படுபவன். படைப்புகள் மட்டுமே அறியப்பட்டால் கூடப் போதும் என நினைப்பவன். அதே சமயம் தகுதியுள்ள எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அங்கீகாரங்களும் கிடைக்க வேண்டும் என விரும்புபவன். 

அங்கீகாரம் என்பது பரவலாய் வாசிக்கப்படுவதா, நிறுவனங்களால் தரப்படும் விருதுகளைப் பெறுவதா அல்லது  இவரைத்  தவிர்த்துவிட்டு இம்மொழியின் இலக்கியத்தை அளவிட்டு விட முடியாது எனும் மதிப்பீடா என்றால் நான் மூன்றாவதையே தேர்ந்தெடுப்பேன். மற்ற இரண்டையும் விட மதிப்பீடே ஒரு எழுத்தாளரின் பங்களிப்பை முக்கியமானதாக்குகிறது. அந்த மட்டில் பைரப்பா ஏற்கனவே கன்னட இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவர்.  மேலதிகமாய் பத்மஸ்ரீ, சாகித்ய அகடாமி உள்ளிட்டப் பலவிருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடைய சமீபத்திய நாவலான ஆவரணா வெளியாவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்திருக்கிறது. என்னளவில் பைரப்பா ஒரு முழுமையான மற்றும் முழுமையடைந்த எழுத்தாளர். 

பைரப்பாவின் சுயசரிதை நூலான பித்தி யில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர் இளமைக்கால நிகழ்வுகளும் -  குடும்பம் சிதைகிறது நாவலும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்ட  அமைதியின்மைக்கும் இதுவே காரணம்.  

குடும்பம் சிதைகிறது, வாசிப்பவரை மிகவும் துயரத்திலாழ்த்தும் நாவல். இவ்வளவு துயரங்களா என்கிற தவிப்பும் பரிதாபமும் வாசிக்கையில் நம்மைத் தொந்தரவு செய்யும். அத்தனை குரூரங்களும் பைரப்பாவிற்கு நேர்ந்தவை எனும்போது உண்மையிலேயே மனம் பதறித்தான் போகிறது. 

தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது எழுத்து வாழ்விலும் பைரப்பா குழு அரசியல் வாதங்களால் பழி வாங்கப்பட்டிருக்கிறார். ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது என்பது அவர் வாசிக்கப்படாமல் போவதை விடத் துயரமானது. 

தமிழில் பிரதானமாக இருக்கும் பிராமண மோகம் பைரப்பாவின் எழுத்துகளில் கிடையாது. நம் சூழலில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடியும். மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. பிறகு எப்படி பைரப்பா தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என்பது தெரியவில்லை.

தற்சமயம் பைரப்பாவை இந்துத்வ சக்திகள் தாங்கிப் பிடிப்பதும் நிச்சயம் இன்னொரு தவறான அடையாளப்படுத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

கன்னடத்தில் நிகழும் இலக்கிய குழு அரசியல் விஷயங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் பைரப்பாவின் இரண்டு நாவல்களைத் தவிர்த்து வேறெதையும் வாசித்ததும் இல்லை. எனவே திட்டவட்டமாக எதையும் கூற விரும்பவில்லை. இப்போதைக்கு பைரப்பாவின் மற்ற படைப்புகளைத் தேடி வாசிக்க வேண்டும். மற்றவைப் பிறகு.




Wednesday, April 19, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதிமூன்று

கத்திய மாமுனி எங்கெங்கோ அலைந்து திரிந்து இரமணாசிரமம் வந்துச் சேர்ந்தபோது அதன் கேட்டை சாத்தியிருந்தார்கள். சாலையை ஒட்டி இருக்கும் எல்லாக் கடைகளும் ஏற்கனவே அடைந்திருந்தன. என்னச் செய்வதெனத் தெரியாமல் திகைத்த மாமுனிக்கு யோகி ராம்சுரத் குமார் நினைவு வந்தது. அவரின் ஆசிரமத்திற்காய் நடக்கத் துவங்கினார். பத்தடி நடந்ததும் குழம்பினார். அவருக்கு யோகியின் இருப்பிடம் தெரியவில்லை. இரவு மங்கலான வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. நினைவில் யோகியின் சுருட்டுப் புகை வாசனையைக் கொண்டு வந்துவிட்டால் போதும், அந்த வாசனையே இடத்திற்குக் கூட்டிப் போய்விடும். சாமி மூக்கை ஆழமாய் உள்ளிழுத்தபடி நடந்து கொண்டிருந்தார்.

வேப்பம் பூக்களின் மணம் காற்றில் அடர்ந்திருந்தது. அந்த இறக்கமான தெரு, கரடுமுரடாக இடறியது. மாமுனி சற்றுத் தடுமாறித்தான் நடந்துக் கொண்டிருந்தார். திடீரென வேப்பம்பூ வாசனை மாறி மல்லிகைப் பூவின் மென் வாசம் நாசியைத் தீண்டியது. சன்னமான கொலுசொலி கேட்டது. சாமி நின்றுவிட்டார். எதிரில் துர்க்கா வந்து கொண்டிருந்தாள்.

நிலவொளி சரியாக அவள் முகத்தில் இறங்கியதில் அணிந்திருந்த மூக்குத்தி நடையின் அசைவிக்கேற்ப மின்னி மின்னி மறைந்தது. மாமுனி அவ்வெளிச்ச அசைவைப் பார்த்தார்.  உதடுகள் தாமாக ஓரிதழ்பூ ஓரிதழ்பூ என முணுமுணுக்க ஆரம்பித்தது. விழிகள் துர்க்காவின் மீது நிலைக்குத்தின. என்ன செய்கிறோம் என்பதை சுத்தமாய் மறந்திருந்தார். அவர் கால்கள் உடலை இழுத்துக் கொண்டு போய் துர்க்காவின் முன் நிறுத்தின.

துர்க்கா அதட்டினாள். யாரு?

மாமுனி எதுவும் பேசவில்லை

அட நவுருஎன அவரை கைகளால் நகர்த்திப் பார்த்தாள் முடியவில்லை

மாமுனி அவள் முன் சிலை போல நின்றிருந்தார்.

இரண்டடிப் பின் வாங்கிய துர்க்கா மாமுனியை நிமிர்ந்து பார்த்தாள்.

மாமுனியின் விழிகள் அவளை என்னவோ செய்தன.

உடன் வந்த சிறுமிக்காய் திரும்பி

பாப்பா நீ வூட்டுக்கு போ நா வந்திர்ரேன்என்றாள்

சிறுமி, சீக்கிரம் வா என சலித்துக் கொண்டே இருவரையும் விலக்கி முன் நடந்தாள்.

துர்க்கா மாமுனியின் கைகளைப் பற்றி

வா போலாம்என்றாள்.

துர்க்கா கைகளைப் பிடித்த தருணத்திலேயே மாமுனியின் உடல் குளிர்ந்துவிட்டது. தன்னை முழுவதுமாய் மறந்துவிட்டு அவளோடு நடந்தார். பிடித்த அவர் கைகளை விடாமல் பிரதான செங்கம் சாலைக்கு வந்தாள். மலை சுற்றும் பாதைக்காய் நடக்க ஆரம்பித்தாள். உறங்க ஆரம்பித்திருந்த ஹவுஸிங் போடிற்குள் நுழைந்து மலையும் குறுங்காடும் துவங்கும் பகுதிக்காய் நடந்தாள். நிலவு அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கால்களில் காரைப்பழச் செடியின் சுள்ளிகள் இடறின. மழைக்காலங்களில் தண்ணீர் வரும் சிறு ஓடையில் மணல் நிறைந்திருந்தது. அவ்வோடையில் நடக்க ஆரம்பித்தாள். மாமுனியால் உடன் நடந்து வர இயலா வண்ணம் பாதை இருந்தது. கிட்டத்தட்ட துர்க்கா அவரை இழுத்துக் கொண்டு போனாள். மலை துவங்கும் இடத்திலிருந்த பெரும் பாறைக்கடியில் போய் அமர்ந்தாள். நிலவால் பார்க்க முடியா இருட்டு அங்கிருந்தது. அதைத் தேடித்தான் இவ்வளவு தூரம் வந்தாள். மேலும் அந்த இருள் அங்கிருக்கும் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிதானமாய் தன் உடைகளை விடுவித்தாள். பய பந்து ஒன்று வயிற்றிலிருந்து மேலெழுவதை மாமுனி உணர்ந்தார். 

அந்தக்காரத்தில் அவளின் நிர்வாண உடல் கரைந்தது. வா எனக் கை நீட்டினாள். மாமுனி நடுங்கியபடி அவள் உடல் மீது பாய்ந்தார். அவரின் உடல் வியர்வையில் குளித்திருந்தது. குருட்டு வெளவாலாகியிருந்தார். கனிகளை மட்டுமே கொண்டிருந்த பெரும் பழமரமொன்று வெளவாலை இழுத்து அணைத்துக் கொண்டது. கிளை இலை வேர் எங்கும் கனிகள். வெளவாலின் குருட்டுக் கண்களால் கனிகளைக் காணமுடியவில்லை. அதன் சிறு வாயால் எத்தனைக் கனிகளைச் சுவைக்க முடியும்?. வெளவால் அரற்றியது. பைத்தியமானது. தாங்க முடியவில்லை எனக் கதறி அழுதது. கருணைமிக்க அம்மாமரம் எழுந்து அமர்ந்து, வெளவாலை முழுவதுமாய் தன் அமுதம் சுரக்கும் பூக் காம்பினுள் தள்ளியது. அம்மாமுதத்தில் விழுந்த வெளவால் தன் ஆயிரம் வருடப் பிறவியின் பயனை அடைந்தது. இளைப்பாறட்டும் என துர்க்கா, மாமுனியின் களைத்திருந்த கிட்டத்தட்ட சவமாகியிருந்த உடலைத் தன் மீது போட்டுக் கொண்டு விரித்திருந்த அவளின் உடைகளின் மேல் படுத்தாள்.

மலைப் பாம்பொன்று தன் நெடியத் தூக்கத்திலிருந்து பசியோடு விழித்தெழுந்தது. பாறைக் கற்களும் முரட்டு வேர்கள் கொண்ட மஞ்சம் புற்களும் சூழந்திருந்த அதன் உடலை அசைக்க முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன் தலையைத் தூக்கி உடலைச் சுருட்டிப் பின் நீட்டியதில் சில கற்கள் பெயர்ந்து மலைச் சரிவில் உருண்டன. பந்து வடிவில் ஒரு கல் துர்க்காவின் மீது படர்ந்திருந்த மாமுனியின் தலையில் சொத் தென வந்து விழுந்தது. மாமுனி அலறி அந்த ஆழத்திலிருந்தும் அவளின் பருண்ம உடலிலிருந்தும் துள்ளியபடி வெளியே வந்து விழுந்தார்.  

மாமுனி அருகில் விழுந்ததை உணர்ந்த துர்க்கா சலனமில்லாமல் எழுந்தாள். அவரை உலுக்கி எழுப்பிப் பார்த்தாள். தலையைத் தொட்டுப் பார்த்தாள். சொத சொத வென இரத்தம் அப்பிக் கிடந்தது. சற்றுப் பரபரப்பாகித் முதலில் தன் உடைகளை அணிந்து கொண்டாள்.  நிலவொளிக்காய் அவரை வெளியே இழுத்து முகத்தைத் தட்டியபடியே மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சிருந்தது. தலையையைச் சோதித்தாள். சிறிய காயமாகத்தான் தோன்றியது. சேலைத் தலைப்பைக் கிழித்து தலைக்கு ஒரு கட்டு போட்டாள். பெண்ணுடலையே தொட்டுப் பார்த்திராத ஒரு மனிதனாக இவன் இருந்திருப்பானோ என எண்ணிணாள். ஒரு சின்னப் புன்முறுவல் அவள் கடைவாயில் ஒட்டிக் கொண்டது.  எழுந்து பிரதான சாலைக்காய் நடக்க ஆரம்பித்தாள்.

ஆயிரம் கைகளைக் கொண்ட சிம்மவாகினி, அகத்தியர் வசிக்கும் மூடிய குகையின் முன்பு வந்து இறங்கினாள். நெடுந்தொலைவைப் பறந்தே கடந்து வந்திருந்த அவளின் வாகனமான அச்சிங்கம் கடும் சோர்வில் இருந்தது. பெருங்குரலில் தன் வருகையைச் சொன்னது. குகைக்குள் கண்மூடித் தியானத்தில் இருந்த அகத்தியர் அதன் கர்ஜனையைக் கேட்டுக் கண் விழித்தார். தன் நூறு வருட தியானம் ஒரு நொடியில் பாழானக் கோபத்தில் வெளியே வந்தவர் சிம்மவாகினியைக் கண்டு வியந்தார். அவளின் ஆயிரம் கைகளிலும் ஆயிரம் கொலைக்கருவிகள் இருந்தன. அப்போர்க்கோலத்தை உணர்ந்து நடுநடுங்கினார். பாதம் விழுந்து தொழுதார். தாயே என்னைத் தேடி வந்த நோக்கம் என்ன என்று வினவினார். சிம்மவாகினி அவரிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிங்கத்திடம் சொன்னாள். உன் பசியாறிக் கொள். சிங்கம் அவரின் மீது பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட அகத்தியர் அலறியபடியே எழுந்து ஓடினார். அவரின் சகல வித்தைகளும் மறந்து போயின. உயிர் பயத்தில் குழம்பியவர் மலையாய் உருமாரும் மந்திரத்தைச் சொல்வதற்குப் பதில் மானாய் வடிவெடுக்கும் மந்திரத்தைச் சொல்லிவிட்டார். சடுதியில் அகத்திய மாமுனி செழித்து வளர்ந்த புள்ளி மானாய் வடிவெடுத்தார். சிங்கத்தின் பசியுடன் ஆசையும் சேர்ந்து கொண்டது. ஒரேப் பாய்ச்சலில் அப்புள்ளிமானின் அழகியக் கழுத்தைக் கவ்வியது. மாமுனியின் மூச்சுத் திணறியது. உயிர் பயம் மாபெரும் அலறலாய் அடிவயிற்றியில் எழும்பியதே தவிர வாயிலிருந்து வெளிவரவில்லை. திக்கித் திணறி அம்மா என்கிற அலறலோடு எழுந்தார். அருகிலிருந்த காகங்கள் அவரின் சப்தத்தால் பயந்து எழும்பிப் பறந்தன. சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசியது. மாமுனிக்கு ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. தலையை ஏதோ அழுந்தியது. தொட்டுப் பார்த்தார். கட்டுப் போடப்பட்டிருந்தது. இரத்தம் தலையிலும் கழுத்திலும் காய்ந்திருந்தது. தலை வலியும் பசியும் சேர்ந்து கொண்டன.

மெல்ல மெல்ல இரவு நிகழ்ந்தவை யாவும் ஒவ்வொன்றாய் அவரின் நினைவிற்கு வந்தது. உடலில் படபடப்புத் தொற்றிக் கொண்டது. தானொரு நர உடலைத் தேர்ந்தெடுத்தது போல தெய்வத்திற்கெல்லாம் தெய்வமானவளும் அப்பெண் உடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறாளோ? எத்தகைய தவறை இழைத்திருக்கிறேன். மாமுனி பயத்திலும் குற்ற உணர்விலும் நடுங்கினார். மிகச் சிரமப்பட்டு எழுந்து நின்றார். போதும் இந்த விளையாட்டுக்களென அவருக்குத் தோன்றியது. கண் மூடி மீண்டும் தன் ஸ்தூல உடலுக்குச் செல்லும் மந்திரத்தைச் சொல்லிக் கண்விழித்தார். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஐயோ இதென்ன கொடுமை என்று அலறியவராய் மீண்டும் மீண்டும் மந்திரத்தை உச்சரித்துப் பார்த்தார். பசிதான் வயிற்றைக் கிள்ளியதே தவிர ஒன்றும் சம்பவிக்கவில்லை. மாமுனிக்கு எல்லாம் புரிந்தார் போலிருந்தது. இதிலிருந்து விடுபட அவளைச் சரணடைவதே ஒரே வழி என உணர்ந்தவராய் வந்த வழியிலேயே திரும்ப நடக்க ஆரம்பித்தார். அம்மையை எங்கே சென்று தேடுவேன் என அரற்றிபடியே நடந்து கொண்டிருந்தார். காலையிலேயே வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. வியர்த்து வழிய பிரதான சாலையை நோக்கி நடையைத் துரிதப்படுத்தினார்.


Tuesday, April 18, 2017

விமர்சனமும் சுயமும்






தற்செயலாக இருபது வெள்ளைக்காரர்கள் குறுநாவல் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனத்தை வாசித்தேன்.  திண்ணை இணையப் பத்திரிக்கையில் இரா. ஜெயானந்தன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் எழுதியிருக்கிறார். சமீபமாகத்தான் கண்ணில் பட்டது.  வழக்கமான விமர்சன சொற்களைப் பயன்படுத்தாமல் அவர் மனதிற்கு என்ன பட்டதோ அதை எழுதியிருக்கிறார்.

இருபது வெள்ளைக்காரர்கள் - புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானே போகவில்லை.  எழுதுவதோடு எழுதுபவனின் வேலை முடிந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன்.  புத்தகம் பார்த்தீர்களா என்கிற சாதாரணக் கேள்வியைக் கூட  நண்பர்களிடம்  வெகு கவனமாகத் தவிர்த்தேன். என்னுடைய எந்த முயற்சியும் இல்லாமலேயே இருபது வெள்ளைக்காரர்கள் அது  சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தது. படைப்பு அதற்கான வாசகரைத் தேடிக் கொள்ளும் என்பதெல்லாம் உண்மைதான். மேலதிகமாய் இத்தொகுப்பின் மூன்று குறுநாவல்களையும் இணையத்தில்தான் எழுதினேன். உடனுக்குடன் அதை வாசித்தவர்கள் தங்களின் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.

பழி எழுதப்பட்ட காலத்தில் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல புதிய வாசகர்கள் அறிமுகமானார்கள். நானுமே பழியைப் பித்து நிலையில்தான் எழுதினேன். இன்றளவும் எனக்கு பிடித்த நாவல் பழிதான்.  பழி தந்த பரவசத்தை  இனி எப்போதுமே அடையமுடியாது எனதான் நினைக்கிறேன்.  முதல் நாவல் என்பதால் தோன்றிய எண்ணம் மட்டுமில்லை என்பதை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள். காமமும் வன்முறையும் அதன் ஆழத்திலிருந்து வெளிப்பட்டன. பழியை இரண்டு பாகங்களாக எழுதினேன். இரண்டாம் பாகத்திற்கு அதிகம் உழைக்க வேண்டி இருந்தது. நான் ஒருபோதும் சென்றிருக்காத ஆந்திராவின் பல பிரதேசங்களில் கதை நிகழ்ந்தது. கோதாவரியாறு தொடங்கி கங்காவரம் வரை ஊர்களை கூகுலில் பிடித்தேன். மேப்பைத் துருவித் துருவி கதை நிகழ வேண்டிய களங்களை அமைத்தேன். தெலுங்கு வார்த்தைகள் அனைத்தையும் நண்பர் கென்னிடமிருந்து பெற்றேன். ரோட் மேப் இன்று வரை மனப்பாடமாகி இருக்கிறது. உண்மையிலே பழியை சாகஸ மன நிலையில்தான் எழுதினேன். அப்படியே அது எழுத்திலும் வந்தது. இன்றளவும் நேர்ப் பேச்சில்  பழியைப் பற்றி யாராவது பேசுகிறார்கள். பயங்கரமான ரைட்டப் என்பது அவர்களிடமிருந்து வரும் முதல் சொல். அதை ஏன் யாரும் அச்சில் கட்டுரையாக எழுதவில்லை என்பது எனக்குத் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அது அவசியமும் இல்லை.  ஒன்றை எழுதும்போது பெரும் பரவசத்தை விடவா, அதைப் பற்றி பிறர் எழுதி வாசிப்பதில் வந்துவிடப் போகிறது?

மழைக்காலம் நிறையப் பெண் வாசகர்களைத் தந்தது. அதில் பயன்படுத்திய கவிதைகள், புதுவை நகரம், மழை, காமம், பேச்சு, போதை, இளமையின் ஊசலாட்டம் என மிதமான வாசிப்புற்குத் தேவையான எல்லாமும் இருந்தன.  என் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்தை எழுதிப் பார்க்க விரும்பினேன்.  எழுத எழுத அது வேறு வடிவத்தைப் பெற்றது. பழிக்கு அப்படியே நேரெதிராய் அந்நாவல் இருந்தது.  பெயர் உட்பட மழைக்காலம் நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மாற்றவில்லை. அப்படியே இருந்தது, அப்படியே எழுதினேன். சில நண்பர்கள் தாமதமாகப் படித்து அடப்பாவி என்றனர். சிரித்துக் கொண்டேன்.

இருபது வெள்ளைக்காரர்கள் இன்னொரு தளம். சுதந்திரத் தன்மையின் மீதிருக்கும் என் விருப்பமும்  அதற்கு நேரெதிரான குமாஸ்தா வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து இதை வடிவமைத்திருக்கும் என எண்ணுகிறேன். இதன் திரைக்கதை வடிவம் இன்னும் நன்றாக வந்திருக்கிறது. பார்ப்போம்.

அச்சில் பழியைத் தனியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை எழுதி முடித்த உடன் நான்கு குறுநாவல்களையும் தனித் தனியாக அச்சில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஓரிதழ்ப்பூ வை எழுதும் இந்நாட்களில் மனம் முழுக்க திருவண்ணாமலை அடிவாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறது. அகத்திய மாமுனியை  வேறு அங்கு அலையவிட்டிருக்கிறேன். முன்பு வரைவு செய்திருந்த வடிவம் மாறிப் போய்விட்டது. கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் தீவிரத் தன்மை அடைந்திருக்கிறது. விரைவில் முடித்துவிடுவேன் என நம்புகிறேன்.

இந் நான்கு குறுநாவல்களுக்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

திண்ணையில் விமர்சனம் எழுதிய ஜெயானந்தன் அவர்களுக்கு நன்றி.



Monday, April 17, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பனிரெண்டு


காலைச் சூரியன் சுட்டெரித்து எழுப்பியது. நேற்று முன்னிரவில் இங்கே வந்து விழுந்தவன் தான். மொட்டை மாடியில் காய்ந்த வேப்பம் பூக்கள் சிதறிக்கிடந்தன.தலையணையும் ஒரு போர்வையும் அருகில் கிடந்தது. அந்த சாமியாருக்கு உணவு கொண்டு வந்தவள். ஐயோ என்ன மாதிரிப் பெண் அவள்... அம்மன்... சாமியேதான். நினைக்க நினைக்கப் பயமாக இருந்தது. நேற்றிரவு மூச்சிரைக்க ஓடிவந்து நேராய் மாடிக்குப் போய் படுத்துக் கொண்டதை அங்கையற்கன்னி பார்த்தாள். ஆனால் பார்க்காதது மாதிரி இருந்தாள். எப்போது இந்த தலையணையும் போர்வையும் இங்கு வந்ததெனத் தெரியவில்லை. கீழிறங்கி வந்தேன். வீடு அப்படி ஒரு மெளனத்தில் இருந்தது. அம்மா இல்லை. இவள் அடுக்களையில் மும்முரமாக இருந்தாள் அவசரமாகப் போய் குளித்துவிட்டு உடைகளை அணிந்து கொண்டேன் . அங்கை கேட்டுக் கொண்டதால் பேருக்கு டேபிளில் வைத்திருந்ததைக் கொரித்துவிட்டு வெளியேறினேன். சுவாசம் சீரானதைப் போல் பட்டது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். வழக்கமாகப் போகும் பஸ்ஸில் ஏறவில்லை. மயிர்புடுங்கி ஸ்கூலு என வாய்விட்டுசொல்லிக் கொண்டேன். சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய் இருந்தது. அங்கையாய் இருக்கும். சட்டென ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“போடாங்கோத்தா” என வண்டியில் விரைந்த எவனையோ சத்தமாய் திட்டினேன். வழக்கமாகப் போகும் மூத்திர பாருக்காய் நடக்க ஆரம்பித்தேன். இந்த ஏப்ரல் மாதத்தைக் கடந்து விட்டால் போதும். மே மாதம் முழுக்க வேலைக்குப் போக வேண்டியதில்லை. மனம் மிக உற்சாகமாக இருந்தது. காலை வெய்யிலுக்கு உடல் வியர்த்து வழிந்தது. பார் இன்னும் திறந்திருக்க வில்லை. பத்து மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. சலிப்பாய் சாலையோர புளிய மரத்தடிக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். புகையை ஊதியதும் முதுகிற்குப் பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது. மிக மென்மையான ஒரு குரல்.

“கொஞ்சம் அந்தப் பக்கம் போய் புடிக்கிறீங்களா?”

 திரும்பிக்கூடப் பார்க்காமல் சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தேன். தலைகுனிந்தபடி நகர நினைத்தவனை மீண்டும் அக்குரல் தடுத்தி நிறுத்தியது.

 “ஏய் ரவி ”

 துணுக்குற்றுத் திரும்பி நிமிர்ந்து பார்த்தேன். ரமா நின்று கொண்டிருந்தாள். காலத்தின் எந்த ஒரு அசெளகரியமும் அவளிடமில்லை. சொல்லப்போனால் காலம் அவளை இன்னும் அழகாக்கி விட்டிருந்தது. ரமா என்னோடு ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிக் கடைசி வருடம் வரை ஒன்றாகப் படித்தவள். கடைசி வருடத்தின் தேர்வுகள் கூட எழுதாமல் நல்ல வரன் கிடைத்ததென்று திருமணம் செய்து கொண்டுப் போனவள். எனக்கிருந்த ஒரே தோழி. எனக்கிருக்கும் இந்தப் பூ பைத்திய நினைவுகளின் காரணகர்த்தா.

 இல்லையென மறுத்து விட்டு நகர்ந்துவிட நினைத்தும், புன்னகையையும் ஆச்சரியத்தையும் என்னாலேயே கட்டுப்படுத்த இயலவில்லை.

” எப்படி இருக்க?”  எனக் கேட்டுவிட்டேன்.

“ பாத்தா எப்படி தெரியுது?” எனப் பளிச்சென சிரித்தாள்.

 அவள் அணிந்திருந்த வெளிர் நீலப்புடவை வெயிலில் மினுமினுத்தது. குட்டைக் கூந்தலின் சில முடிகள் கழுத்து வியர்வையில் ஒட்டிக் கொண்டிருந்தன. சின்னக் கண்கள் மினுங்க நெற்றி சுருக்கி என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். என் காலடியில் உலகம் நழுவுவது போலிருந்தது. மெல்ல மீண்டு,

 "நீ இங்க என்ன பன்ற?" என்றேன்.

 "இதென்ன கேள்வி இது என் ஊர்" என்றாள்.

 அம்மா பஸ் வந்திடுச்சி என்றபடியே ஒரு சிறுமி ஓடி வந்தாள். எங்களுக்கு அருகில் ஒரு தனியார் பள்ளிப் பேருந்து வந்து நின்றது. இவதான் என் பொண்ணு மலர் எனச் சொல்லிக்கொண்டே அவளைத் தூக்கிப் பேருந்தில் ஏற்றி விட்டாள். பேருந்து நகர்ந்ததும் குழந்தை எனக்கும் சேர்த்துக் கை அசைத்தது. புன்னகையுடன் கை அசைத்தேன். எனக்காய் திரும்பியவள்,

 “நாம பேச எக்கச்செக்க கத இருக்கு எங்கயாச்சிம் போய் உட்காரலாமா” எனக் கேட்டாள். எனக்குத் திகைப்பாய் இருந்தது. எங்கு அமர்ந்து பேசுவது எனத் தெரியவில்லை. இந்த தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்து விடும் நோக்கில்,

எனக்கு ஸ்கூல் என இழுத்தேன்.

 ”எதா இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு தள்ளிப்போடு இப்ப என்னோட வா” என்றாள்.

அவளோடு சேர்ந்து நடக்க கூச்சமாக இருந்தது. எல்லா முகங்களும் தெரிந்த முகங்கள்.

“நான் சாயந்திரம் வீட்டுக்கு வரேன். நீ இப்ப போ” என்றேன்

”நான் ஊருக்கு வந்து ஒரு மாசமாச்சு உன்னப் பாக்க ரெண்டு மூணு சாயந்திரம் உங்க வீட்டுக்கு வந்து போனேன் உனக்கு நடுராத்திரிதான் சாயந்திரமாமே அப்படியா?”

”ஓ  அம்மா என்கிட்ட சொல்லவே இல்லையே”

”நீ மரியாதையா இப்ப என்னோட வா”

”வீட்டுக்கு வேணாம் ரமா, நான் ரமணாசிரமம் போறேன். நீ அங்க வந்துடு”

”சரி நான் வீட்டுக்கு போய் வண்டி எடுத்து வர்ரேன். இங்கயே நில்லு . சேர்ந்து போய்டலாம்.”

”ஒண்ணும் வேணாம் நான் போறேன். நீ பின்னால வண்டில வா”

என்றதற்கு சிரித்தாள்.

“ஏண்டா இப்படி பயப்படுற. உன் பொண்டாட்டிகிட்ட போய் யாராச்சும் ஏதாச்சும் சொல்லிடுவாங்களா?”

என்றவளை முறைத்துவிட்டு “சீக்கிரம் வந்து சேரு” என்றபடி நடந்தேன்.

பள்ளி விடுமுறை நாட்களில்  என்னுடைய  சைக்கிளில் ரமா வை உட்கார வைத்துக் கொண்டு ரமணாசிரமம் போவேன்.  ஆசிரமம் தான் எங்களின் வியப்புகளை இரட்டிப்பாக்கும் இடம். மயில்கள், குரங்குகள், நாகலிங்கப் பூ, பாதம் கொட்டைகள், மாங்காய் என ஒவ்வொன்றுமே ஓர் அபூர்வ நினைவாக இன்றுத் தங்கிப்போனது. ரமா என் கண் முன்னால்தான் பருவமடைந்தாள். ஓர் மழைநாளில் சைக்கிளிலிருந்து சிறுவர்களாய் வழுக்கி விழுந்த நாங்கள் எழும்போது எங்கள் பால்யத்தைத் தொலைத்துவிட்டு எழுந்தோம். ஆனாலும்  எப்போதும் போலத்தான் இருந்தோம். என்னோடு சைக்கிளில் ஆசிரமம் வருவதற்கு பதிலாய் அவள் சைக்கிளில் தனியாக வந்தாள். மற்றபடி எங்கள் வீடுகள் இருவருமே புழங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்தன. மேலதிகமாய் அப்போது நான் அமுதா அக்காவின் மீதுதான் காதல் வயப்பட்டிருந்தேன். சீக்கிரம் வளர்ந்து  அமுதா அக்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்ததே தவிர கூடவே இருந்த ரமாவின் மீது ஈர்ப்பு வரவில்லை.

அமுதா அக்காவின் திருமணத்தன்று நான் ரகசியமாய் அழுதேன். பெண், காதல் குறித்தெல்லாம் புதிய திறப்புகள் அப்போது நிகழ்ந்தன. நண்பர்கள், விளையாட்டு, படிப்பு என வெவ்வேறு விஷயங்கள் உள்ளே வர அமுதா அக்காவை மறந்தே போனேன். பதினோராம் பனிரெண்டாம் வகுப்புகளில் சக மாணவர்கள் என்னையும் ரமாவையும் இணைத்துக் கிசுகிசுப்பார்கள் அதை உள்ளூர நான் ரசித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. சில நேரிடையான கிண்டல்களுக்கு கோபத்தை மறுப்பாய் வைத்தேன்.  ரமாவும் அப்படித்தான் இருந்தாள் என நினைக்கிறேன். திடுதிப் பென்று அவள் போனது சில நாட்கள் பித்துப் பிடிக்க வைத்தது. ஒருவேளை நான் ரமாவைக் காதலித்தேனோ என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது  ’நட்பு வேறு காதல் வேறு’  ’நட்பு காதலை விட புனிதமானது’  ’தோழியைக் காதலிப்பது பாவம்’  என்றெல்லாம் போதிக்கும் தமிழ் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலம். அதையெல்லாம் பார்த்திருந்த நான் மீளமுடியாக் குற்ற உணர்வில் கிடந்தேன்.

சோக ஒலிப் பின்னணியில் ’என் நட்பை அசிங்கப்படுத்திட்டியேடா’ என ரமா கலங்கிய கண்களோடும் கலைந்தத் தலைமுடியோடுமாய் அலறும் கனவெல்லாம் கண்டு விழித்துக் குற்ற உணர்வை இரட்டிப்பாக்கிக் கொள்வேன். பின்பு அவள் என் தோழி மட்டுமே ஒருபோதும் காதலிக்கவில்லை என திரும்பத் திரும்ப மனதிடம் கூறி இழந்த என் புனிதத்தை எனக்கு நானே மீட்டுக் கொண்டேன்.

நடக்கும்போது இந் நினைவுகள் மேலெழுந்து புன்முறுவலை வரவழைத்தன. ரமாவின் திருமணத்திற்கு நான் போகவில்லை. அம்மாதான் போய் வந்தாள். ஒருவேளை நான் ரமாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தாள் எல்லாமும் சரியாக இருந்திருக்கும் எனத் தோன்றியது.  எவ்வளவு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறேன் என்பதை யோசிக்க யோசிக்க ஆத்திரமும் இயலாமையும் ஒரு சேர எழுந்தது. அப்படியே திரும்பி ஒயின் ஷாப்பிற்கு போய் மூக்கு முட்டக் குடிக்கும் எண்ணம் தோன்றியது. ஆசிரம வாசலுக்கு வந்துவிட்டிருந்தேன்.  எனக்கு முன்னால், வண்டியை நிறுத்திவிட்டு நுழை வாயிலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். மெதுவாக தலையசைத்து  வா என்றாள்.

எழுந்த பெருமூச்சை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளோடு நடந்தேன்.

“இங்க எல்லாமே மாறிடுச்சி இல்ல?” என்றாள்.

எனக்குப் பெரிதாய் மாற்றம் ஒன்றும் நிகழ்ந்திருப்பதாய் தோன்றவில்லை. இருந்தாலும் ம் என்றேன்.

நாகலிங்கப் பூ மரத்தைக் கடக்கையில் இது மட்டும் அப்படியே இருக்கு, இந்தப் பூவும் வாசனையும் என்றபடியே கீழ விழுந்து கிடந்த சிலப் பூக்களை குனிந்து எடுத்தாள். இரண்டைத் தலையில் வைத்துக் கொண்டாள்.  ஒருப் பூவைக் கையில் வைத்து முகர்ந்தாள்.

“ஹப்பா மயக்குது டா” என்றாள்.


சிரிப்பு வந்தது.  அவளிடம் அதே பாவணை. அதே வியப்பு.

”நீ மார்கோ சோப் மாதிரி ரமா, மாறவே இல்லை.”

”ம்ம் அதான் எனக்கும் சேத்து நீ மாறி இருக்கியே.  என்னடா ஆச்சு உனக்கு?”

”ஓ, நீ எனக்கு அட்வைஸ் பண்ணதான் இங்க வர சொன்னியா? சரி நான் கிளம்புறேன்”

”அட்வைஸ்லாம் இல்ல எரும, உன் மூஞ்ச ஒடைக்கதான் வர சொன்னேன்”

கோபத்தில் அவள் முகம் சுருங்கி இன்னும் சிறியதாகிருந்தது. நெற்றியைச் சுருக்கியதில் புருவம் இணைந்து கொண்டது. அவளை அப்படிப் பார்க்க சிரிப்பு வந்தது. பதில் எதும் சொல்லாமல் நடந்தபடியே ஆசிரமத்தின் பின்புறம் போனோம். முன்பு பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த ஆசிரமத்தின் மருத்துவ சாலை பூட்டிக் கிடந்தது. இரமணர் வளர்த்த காகம் மற்றும் பசுவின் சமாதிக்கு அருகில் அமர்ந்தோம். ஆலமரங்கள் மிகப் பெரிதாய் வளர்ந்துவிட்டிருந்தன.

பேச்சை ஆரம்பித்தாள்.

”ரவி, நீ மனச விட்டு சொல்லு உனக்கு என்னப் பிரச்சின? அந்தப் பொண்ணு அவ்ளோ அழகா இருக்கா, பாக்கவும் ரொம்ப அமைதி,  அப்புறம் என்னடா உனக்கு பிரச்சின?”

”அதான் பிரச்சின”

”எது?”

”அழகா இருக்கிறது”

”நீ என்ன பைத்தியமா?”

”ஆமா. இத விடு ரமா. வேற பேசுவோம். நீ எப்போ வந்த இங்க? எங்க உன் புருசன்?”

”அவருக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு. போய் செட்டிலாகி அப்புறம் எங்கள கூட்டிப்பார். எப்படியும் ஆறு மாசம் ஆகும் ”

”ம்ம்”

”நான் நல்லாருக்கண்டா. உன்ன இப்படி பாக்கதான் கஷ்டமா இருக்கு”

...

”நான் இன்னொன்னு சொல்றேன் ரவி கேக்குறியா?”

”ம்ம்”

”உனக்கு அவளப் புடிக்கலனா அவகிட்ட பேசி சரிபண்ண முடியுமா பார். இல்ல ஒத்துவரலனா, சட்டப்படி பிரிஞ்சிட்டு வேற வேலய பார். குடிச்சிட்டு ஊர சுத்துறது எப்படிடா சரியாகும்?  கேட்கவே கொடுமையா இருக்கு. நீ எவ்வளவு நல்லவன் தெரியுமா ரவி”

அவள் பேசப்பேச உள்ளுக்குள் உடைந்தது. இங்கிருந்து ஓடிவிட வேண்டும், மட்டையாகும் வரை குடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

”அவ பாவம் ரமா, என் பிரச்சினைக்காக அவ வாழ்க்கைய ஏன் கெடுக்கனும்”

”இப்ப மட்டும் அவ வாழ்க்கைய கெடுக்காமயா இருக்க. நீ போனா இன்னொருத்தன் வருவான். அவன் கூட அவ சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே”

”சரி அப்ப நீ பேசு. அவளுக்கு சம்மதம்னா டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணலாம்”

”ரைட் நான் பேசுறேன், ஆனா உன் பிரச்சின என்னன்னு எங்கிட்டயாச்சும் சொல்லேன்”

”உங்கிட்ட சொல்ல முடியாது ரமா”

”ஏண்டா உனக்கு அவளோட செக்ஸ் வச்சிக்க முடியலயா? உடம்புல ஏதாச்சும் பிரச்சினயா?”

நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.

“அவ மோகினி ரமா. அவ உடம்புல பூப் பூக்குது. உன்ன மாதிரியே”

”என்ன மாதிரியா? என்னடா உளற்ற”

”அன்னிக்கு நீ சைக்கிள்ள இழுந்து விழுந்து ஏஜ் அட்டண்ட் பண்ண தெரியுமா? அப்பதான் உன் கால் நடுவுல இருந்து பூ பூத்தத பாத்தேன்”

”ரவி என்னடா ஏதேதோ பேசுற. ப்ளட் வந்ததுடா. அவ்வளவுதான். இந்த உலகத்துல இருக்க எல்லா பெண்களுக்கும் கருப்பை வளர்ச்சியை தெரிவிக்கிற ஒரு சிம்ப்டம். அவ்ளோதான் விஷயம். அங்க பூ பூக்குது அது இதுன்னு உளறாதே”

”நான் பாத்தேன் ரமா. உனக்கும் அங்கைக்கும் ரத்த கலர்ல அந்த இடத்துல பூ பூத்தது. நான் ஒவ்வொரு முறையும் அங்கையோட மேட்டர் பண்ண ட்ரை பண்ணும்போதெல்லாம் அந்த பூ குறுக்குல வருது”

ரமா அதிர்ச்சியை மறைத்துக் கொண்டது தெரிந்தது.

”ஏதாவது டாக்டர பாக்கலாமா ரவி?”

”என்ன பைத்தியம்னு சொல்றியா?”

”இல்லடா இது ஏதாவது போபியா வா  இருக்கலாம். சீக்கிரம் சரி பண்ணிடலாம் டா “

”இல்லடி வேற பொண்ணுங்ககிட்ட இந்த பிரச்சின இல்ல.”

அதற்கு மேல் ரமா ஒன்றும் பேசவில்லை.

”சரி வா போகலாம் பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்துருவா”

என்றபடியே எழுந்தாள்.

நானும் எழுந்து கொண்டேன். எங்கள் பொதுவான நண்பர்கள் குறித்துப் பேசிக்கொண்டோம். யார் யார் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற தகவல்களை அடுக்கிக் கொண்டு வந்தாள். எனக்கு ஒருவர் குறித்து கூடத் தெரிந்திருக்கவில்லை.

“நீ ஏண்டா யார்கூடயும் காண்டாக்ட்ல இல்ல”  எனக்கேட்டதற்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.

“அப்படியே இருந்துட்டேன்” எனச் சொல்லி சிரித்தேன்.

முறைத்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள்.

“நான் போறேன். நீ சாயந்திரம் அஞ்சடிச்சா வீட்ல இருக்கனும். நான் ஆறு மணிக்கு வருவேன். ஒருவேள நீ இந்த விஷயத்த அவகிட்ட சொன்னா சரியாகும்னு நினைக்கிறேன். எல்லாம் சரி பண்ணிடலாம்  நீ தயவு செஞ்சி குடிக்காதே. சரியா ” என்றாள்

மெல்லக் கை அசைத்துச் சிரித்து சரி என்றேன்

இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு இருந்திருக்கலாம் என ரமா போனபிறகுத் தோன்றியது.

- மேலும்




Sunday, April 16, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினொன்று


ங்கையற்கன்னி ரவியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்அறைக்குள் சங்கோஜமாய் உள்ளே நுழைந்தவன் அந்தப் பார்வையை எதிர்கொள்ளத் தடுமாறினான்தலையைக் குனிந்துகொண்டே கட்டிலின் விளிம்பில்  அமர்ந்தான். அவள் கட்டில் நடுவில் சம்மணமிட்டு அமர்ந்து அவனின் நரிமுகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்தாக்கப்பட்டவனாய் தலை நிமிர்ந்தவன் அவள் மீது பாய்ந்தான்அவளின் வாசனை கிறுகிறுப்பை உண்டாக்கியது அவளின் திண்மமும் குளிர்ச்சியும் வெடவெடக்க வைத்தது. பயத்தை மீறிப் புடவையை விலக்கினான். மென்னிருளில் இரு தாமரை மலர்கள் குப்பென அவள் மார்பில் பூத்தன. வெருண்டவன் பின் வாங்கினான். அவசரமாய் அவளின் பாவாடையை சுருட்டி மேலேற்றினான். கண்களை மூடிக் கொண்டான். அவன் கற்பனை மிகுந்தது. அவள் கால்களை விரித்து உள்நுழையப் போனவனை ஏதோ தடுத்தது. கண் விழித்தால் அவள் யோனியிலிருந்து ஓரே இதழைக் கொண்ட மாமலர் ஒன்று மேலெழுந்து நின்றது. ரவி மிரண்டான். கட்டிலில் இருந்து கீழே விழுந்து, தட்டுத் தடுமாறி எழுந்து கதவைத் திறந்து கொண்டு ஓடினான். அங்கையற்கன்னி எதுவுமே நடவாதது போல் தன் உடைகளை சரிசெய்து கொண்டு சரியாய் படுத்துக் கொண்டாள். உடனடியாய் கனவு அவளைத் தழுவியது. புள்ளி மானுடல் கொண்ட மனிதனை அவள் மார்புறத் தழுவிக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்து அவள் அந்த வீட்டுடன் தன்னைப் பொருத்திக் கொண்டாள். அவள் பிறந்த வீட்டை விட விசாலமாகவும் துப்புரவாகவும் இருந்தது. வீட்டிற்குப் பின்னால் சிறிய தோட்டமிருந்தது. நிறைய மரங்களும் செடிகளும் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன. வீட்டு வேலைகள் என்று பெரிதாய் எதுவும் இருக்கவில்லை. காலைச் சமையல் முடித்துக் குளித்துவிட்டு ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நாள் முழுக்க மாமரத்தடியிலும் சீதாப்பழ மரத்தடியிலும் உட்கார்ந்திருந்தாள். மாலையானதும் வீட்டு முற்றத்தில் ஏற்றி விடப்பட்டிருக்கும் முல்லைக்கொடியில் பூத்து மணந்த மலர்களை பறித்து, மாலை கட்டி எடுத்துக் கொண்டு சேஷாத்ரி ஆசிரமத்திற்குப் போய் அவளின் புள்ளிமான்குட்டியைப் பார்த்து வந்தாள். அவளின் நாள் அவளின் நாளாகவே இருந்தது.

ஒவ்வொரு முறையும் ரவி அவளை நெருங்கிப் பின் இயலாமல் ஓடுவதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருவகையில் நிம்மதியாக இருந்தாள். மேலும் அந்த மானுடலோனின் விளையாட்டுக்கள் இவையென நம்பினாள். இன்னும் இன்னும் அப்புள்ளி மானுடலானை நினைத்து மருகினாள். நினைவில் அவன் முகம் கிடைத்துவிட மெனக்கெட்டாள். ஒரு தருணத்திலாவது கனவில் வரும் அம்முகத்தை நேரில் பார்த்துவிடமாட்டோமா எனக் கிடந்து ஏங்கினாள்.

பூங்காவனத்தம்மாளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ரவியை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள வைத்தது தவறோ என வருந்த ஆரம்பித்தாள். ரவியும் அங்கையற்கன்னியும் சிரித்துப் பேசி அவள் பார்த்ததே இல்லை. அவர்கள் ஒன்றாக படுப்பதில்லை என்பதும் அவளைப் பெரிதும் வாட்டியது. அங்கையற்கன்னி அழுத்தக்காரி, ஒரு வார்த்தையைக் கூட அவளிடமிருந்து பிடுங்க முடியவில்லை. ரவியைப் பார்ப்பதே பெரும்பாடாக இருந்தது. அதிகம் குடிக்கிறான் இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புகிறான் என்பதும் அவளை என்னவோ செய்தது. இருவரையும் சில நாட்கள் தனியாக விட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றவே புதுவையில் இருக்கும் அண்ணன் வீட்டிற்குப் போய் பத்து நாள் தங்கிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.

அங்கையற்கன்னி இன்னும் சுதந்திரமாக உணர்ந்தாள். ரவி காலையில் கிளம்பிப் போனால் பெரும்பாலும் நள்ளிரவு தட்டுத் தடுமாறி வருவான். எப்போதும் உடன் இருக்கும் அத்தையும் இல்லாததால் முழுமையாய் விடுபட்ட மன உணர்வில் திளைத்தாள். காலை உணவை முடித்துக் கொண்டு ஆசிரமம் போய்விடுவாள். அந்தப் புள்ளிமான் குட்டி நன்றாக வளர்ந்திருந்தது. இப்போது அது ஒரு கர்வமிக்க ஆண் மானாகத் திரிந்து கொண்டிருந்தது. அங்கைக்கு அம்மானின் மீதான வாத்சல்யம் மறைந்து காமம் கிளர்விட ஆரம்பித்திருந்தது. மானைப் பார்த்துக் கொண்டும் அதைத் தொட்டுத் தடவிக் கொண்டும் இருப்பது பெரும் கிளர்ச்சியாக இருந்தது. அம்மான் அவளோடு மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது. அவள் தூரத்தில் வரும்போதே நன்றாக வளர ஆரம்பித்திருக்கும் தன் கிளைகள் அதிர அதிர ஓடிவரும். அவளும் அதன் கழுத்தை அணைத்துக் கொள்வாள். ஆசிரமத்திற்கும் வழக்கமாய் வருவோருக்கும் அவளையும் மானையும் நன்கு பரிச்சயமாகி விட்டிருந்தது. மான் மேய்க்கும் பெண் என்கிற கிண்டல் பெயரும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது.

இன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. என்றுமில்லாத பரபரப்பு வேறு அவளைத் தொற்றிக் கொண்டது. நேற்றிரவும் ரவி அவளைத் தொட முயன்று இயலாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். போர்வையையும் தலையணையையும் கொண்டு போய் அவனை சரியாகப் படுக்க வைத்து விட்டு வந்தாள். வழக்கத்திற்கு மாறாய் அதிகாலையில் மான் எப்படி இருக்கும் எனப் பார்க்க விரும்பினாள். ஆனால் ஆசிரமத்தை திறந்திருக்க மாட்டார்கள் அங்கிருப்பவர்கள் தன்னை மேலும் ஏளனமாகப் பார்க்கக் கூடும் என்பதால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை மாற்றினாள். ஒரு பெருமூச்சோடு எழுந்து குளிக்கப் போனாள்.  குளித்து விட்டு வந்தவள் சமையலறைக்குப் போய் இட்லி ஊற்றி வைத்தாள். பொழுது பளபள வென விடிந்தது. இட்லித் தட்டை இறக்கி  இட்லிகளை எடுத்து ஹாட்பாக்ஸில் வைத்து மூடினாள். சட்னியையும் அரைத்து கிண்ணத்தில் மாற்றி டேபிளில் வைத்தாள். உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டாள். ஏழு மணி ஆனது. ரவி கீழிறங்கி வந்தான். எதுவும் பேசாது பாத்ரூமில் புகுந்து கொண்டான். இவள் பீரோவிலிருந்து நூறு ரூபாய் எடுத்து அயர்ன் பண்ணி டேபிளில் வைத்திருந்த அவன் சட்டைப் பாக்கெட்டில் வைத்தாள். ஏனோ அவன் மீது பரிதாபமாக இருந்தது. பாவம் என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். குளித்து விட்டு வந்தவன் அவசரமாக உடையணிந்து கொண்டு வெளியே கிளம்பினான். சாப்பிட்டு போங்க என மெல்லமாய் அங்கை சொன்னதை புறக்கணிக்காது பெயருக்கு டேபிளில் அமர்ந்து இரண்டு இட்லிகளைப் பிட்டு வாயில் போட்டுக் கொண்டு வெளியேறினான். அங்கை அந்நிமிடத்திற்காக காத்திருந்தாள். அவசரமாய் பூட்டை எடுத்துக் கொண்டு கதவைத் தாழிட்டு வெளியேறினாள். 

ஆசிரமத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள். என்றுமில்லாதப் பதட்டம். ஆட்டோ வந்தால் கூட ஏறிப் போய்விடலாம் எனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு நடந்தபடியே ஆசிரமம் வந்து சேர்ந்தாள். பூங்காவிற்கு இடையில் தியானம் செய்யப் போடப்பட்டிருக்கும் திண்டிற்காய் மானின் உருவம் தெரிந்தது. அருகில் செல்ல செல்ல இரண்டு மானுடல்களைப் பார்த்தாள். அவள் வாசனையை உணர்ந்த முதல் மான் திரும்பிப் பார்த்து அவளை நோக்கி ஓடிவந்து உரசியது. அதன் கழுத்தைத் தடவிக் கொண்டே இரண்டாவது மானைப் பார்த்தாள். அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அந்தப் புள்ளிமானுடலுக்கு மனித முகம். மெல்ல எழுந்து வந்து அவளைப் பார்த்து புன்னகைத்து என் பெயர் சங்கமேஸ்வரன் என்றான். அங்கையற்கன்னிக்கு உள்ளே ஏதோ உடைந்தது. அவனை ஆரத் தழுவிக் கொண்டு, கண்களில் நீர் வழியத் தேம்பியபடி ஏன் இத்தனைத் தாமதம் என்றாள்.

- மேலும்


Wednesday, April 12, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பத்து


சாமி தெறித்து ஓடின வாத்தியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தார். வாயில் மென்றுகொண்டிருந்த சோற்றுப் பருக்கைகள் துர்க்கா மீது தெறித்தது.


“ஏ சோத்த வாயில வச்சிகினு என்னா சிரிப்பு” துர்க்கா நொடித்தாள்.


“பாருடி அந்த பைத்தியக்காரன உன்ன நெலா வெளிச்சத்துல பாத்து மிரண்டு ஓடுறான்”


“ஐயே நீ வேற.. ஏதோ போத.. ஓடுது.. லூசு..யார் பையன்?”
“உனக்கு தெரியல? “


“தெர்லயே”


உனக்கு எங்க ஒலகம் தெரியுது.. ராம்சாமி வாத்தியார் மொவன்”


“அட அவரு செத்துட்டாரு இல்ல?!”


“ஆமா..பையனுக்கு ஏதோ கிறுக்கு. பொம்பள கிறுக்கு. ஒரு வாட்டி கூட்டி போய் மந்திரிச்சி வுடுறியா?”


“அட நீ வேற ரொம்ப சின்ன புள்ளையாட்டம் இருக்கு”


“நாளைக்கு வந்து உன்ன சாமி ம்பான்”


“சர்தான…”


“என்ன சர்தான்?”


“எல்லா பொம்பளயும் சாமிதான”


சாமி ஒரு கணம் தடுமாறினார்.


சரி நேரமாச்சு நீ கெளம்பு என்றார்.  எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள். சிறுமி எல்லா பாத்திரங்களையும் ஏற்கனவே கூடைக்குள் வைத்திருந்தாள். இருவரும் சாமிக்கு முதுகு காட்டி ரவி ஓடிய திசைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.

சாமி நாதன் துண்டை உதறி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நிலவொளி இன்னும் பிரகாசமாக அந்த மைதானத்தை நிறைத்தது. சாமி படுத்த வாக்கிலேயே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார். தூக்கம் வரவில்லை. வயிறு நிறைந்திருந்தாலும் போதை இல்லாததால் மூளை விழிப்பாக இருந்தது. சாமி, தன் முதல் கலவியை நினைத்துக் கொண்டார்.

0

சாமி என்கிற சாமிநாதனின் பூர்வீகம் தேனிமலை. சரியாய் பள்ளிக்கூடத் தெரு. பிரசவத்திலேயே அம்மா இறந்து போக, ஆயா வீட்டில் தான் வளர்ந்தான். மனைவி செத்துப் போன துக்கத்தில் தூரதேசம் போன அப்பா திரும்பி வரவில்லை. ஆயா அவனைப் பத்து வயது வரை வளர்த்தது. அதற்கு மேல் அதனாலும் முடியவில்லை. யாரிடமாவது வேலைக்கு சேர்த்துவிடச் சொல்லி அக்கம் பக்கம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜவுளி வியாபாரத்திற்காக மூங்கில் துறைப்பட்டு அடிக்கடி செல்லும் கோவிந்தன் அங்குப் பிரசித்தமாக இருந்த ஒரு ஜோசியரிடம் இவனைச் சேர்த்துவிட்டார். சாமிநாதனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடம் போவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தயாராக இருந்தான். மூங்கில் துறைப் பட்டு ஜோசியர் அவனைத் தன்னோடு வைத்துக் கொண்டார்.

ஜோசியர் தனி ஆள். சாமிநாதன் அவரோடு இருந்த பதினைந்து வருடத்தில் ஒருவர் கூட உறவு எனச் சொல்லிக் கொண்டு அவரைப் பார்க்க வந்ததில்லை. கரும்புத் தோட்டங்கள் தாண்டி மரங்களடர்ந்த ஏரிக்கு சமீபமாய் ஒரு குடிசையில்தான் அவருடைய ஜாகை. அது யாருடைய நிலம் என்பது கூட சாமிநாதனுக்குத் தெரியாது. ஜோசியர் அபூர்வமாகத்தான் பேசுவார். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை அவனுக்கு வேலைகள் இருந்து கொண்டிருக்கும். குடிசைக்குப் பின்னால் சிறிய தோட்டம் ஒன்றிருந்தது. கீரைச் செடிகள், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பராமரிக்க வேண்டியதும் இவன் வேலைதாம்.

சாமி அதிகாலையில் ஜோசியரோடே எழுந்து கொள்வான். மணியக்காரர் நிலத்தில் பம்பு செட்டு அதிகாலை நான்கே முக்காலுக்கு இறைக்க ஆரம்பித்துவிடும். காலைக் கரண்ட் ஆறு மணி வரைதாம். ஐந்து மணிக்கு ஜோசியரோடு குளித்து விட்டு வருபவன், ஆட்கள் அமர்வதற்காக போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளைத் துடைத்து, முற்றத்தைக் கூட்டி, தோட்டத்தை ஒழுங்கு செய்து நிமிர்கையில் ஆறு மணி ஆகிவிட்டிருக்கும். சூரியன் மேலெழ ஆரம்பிக்கும்போது ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம், வரன் அமையுமா எனக் கேட்பது, வீடு நிலம் குறித்தான சந்தேகங்கள், வீட்டில் சுப துக்க காரியங்களுக்கான ஆலோசனைகள் இவைதாம். எட்டு அல்லது அதிகபட்சம் ஒன்பது மணிக்கெல்லாம் கூட்டம் கலைந்துவிடும்.

அதற்குப் பின்பு ஜோசியரும் இவனுமாய் பழைய சாதத்தில் மோர் ஊற்றி, தோட்டத்துச் செடியில் தொங்கிக் கொண்டிருக்கும் பச்சை மிளகாயை பறித்து வந்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ஒரு கடி மிளகாய்க்கு இரண்டு உருண்டை சோறு இறங்கும். சாப்பிட்டதும் ஜோசியர் குடிசைக்கு எதிரில் புங்கை மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் போய் படுத்துக் கொள்வார். சாமிக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் அடுத்தடுத்த வேலைகள் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும். மாலை அடுப்பெரிக்கத் தேவையான சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டுவருவதும், மாட்டுச் சாணம் எடுத்து வந்து பிசைந்து எருமட்டை தயாரிப்பதும் அவனுடைய முற்பகல் வேலைகள்.

ஊரிலிருக்கும் அத்தனைக் கால்நடைகளும் ஏரிக்கரைக்குதான் மேய வரும். காலை ஒன்பது மணி வாக்கில் மாடுகளை மந்தையாக ஓட்டிக் கொண்டு அவன் வயதையொத்த சிறுவர்களும் சிறுமிகளும் மாட்டின் பின்னால் வருவார்கள். சாணியள்ளப் போகும் சாக்கில் அவர்களோடு விளையாடிவிட்டு வருவான். ஏராளமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சீசனுக்குத் தகுந்தார் போல விளையாட்டுகள். இந்த சீசன் என்பது என்ன, எப்படி துவங்கும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. கோட்டி புல்லை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்கும்போது யாராவது ஒரு பயல் கோலி குண்டை விளையாடினால் அன்றிலிருந்து வேறு சீசன் துவங்கிவிடும். செதுக்குவது என்கிற விளையாட்டுதான் சீசனில் அடிக்கடி வரும். சிகெரெட் அட்டையில் செய்த சதுரமான அட்டையை மண்ணிற்குள் புதைத்து வைத்து, அதைச் சுற்றி வட்டமாய் பெரிய கோட்டைப் போட்டு விட வேண்டும். பின்பு அம்மண் குவியலில் புதைந்துள்ள பண மதிப்பு கொண்ட சிகரெட் அட்டைகளை ஒரு சதுர அல்லது முக்கோணக் கல்லால் செதுக்கி வட்டத்தை தாண்டி வெளியே வரவழைக்க வேண்டும். சிகரெட் அட்டைக்கேற்ப பண மதிப்பு. எளிதில் கிடைக்கும் சிசர்ஸ் அல்லது சார்மினார் அட்டைகளுக்கு மதிப்பு பத்து, சாதா கோல்ட் ப்ளேக் சிகரெட் மதிப்பு ஐம்பது. கிங்க்ஸ் சிகரெட் அட்டை மதிப்பு நூறு. யாரிடம் அதிக பணம் இருக்கிறதோ அவனே வென்றவன். சாமி ஜெயித்த சிகரெட் அட்டைகளை ஜோசியருக்கு தெரியாமல் குடிசையின் பின்புறத்தில் உள்ள எரவாணத்தில் சொருகி வைத்திருப்பான்.

எவ்வளவு சுவாரசியமான ஆட்டமாக இருந்தாலும் பனிரெண்டு மணி அவனுக்குத் தெரிந்துவிடும். சூரியன் தலைக்கு நேராய் வந்துவிட்டிருக்கும் அல்லது மண்ணில் எச்சிலைத் துப்பிப் பார்ப்பான். எச்சிலை மண் வேகமாக இழுத்துக் கொண்டால் பனிரெண்டு மணி என அர்த்தம். வேகவேகமாக கொண்டு வந்திருக்கும் புட்டுக் கூடையில் சாணிக் குவியலை அள்ளிப் போட்டுக் கொண்டு குடிசைக்குத் திரும்புவான். அப்போது ஜோசியர் எழுந்து பூஜையில் ஆழ்ந்திருப்பார். வீட்டிலேயே வைத்திருக்கும் சாமி படங்களுக்கு நண்பகல் பூஜை. சரியாய் பணிரெண்டு மணிக்கு மந்திர உச்சாடனங்களை சொல்லி காளியையும் மாரியம்மனையும் வழிபடுவார். அந்நேரத்தில் சாமிநாதன், கொண்டு வந்த சாணியை உருட்டி அதற்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கற்களில் வட்டமாகத் தட்டிக் கொண்டிருப்பான். மனம் முழுக்க விளையாட்டில் குவிந்திருக்கும்.

உச்சிக்கு சமையல் கிடையாது. துணிகளை துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சாயந்திர சமையலுக்கு காய்கறிகளை நறுக்குவது போன்றவை இவன் வேலைகள். ஜோசியர் பூஜை முடித்து பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். நோட்டில் ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார். அங்கும் இங்குமாய் நடந்து வேலைகளைப் பார்க்கும் சாமிநாதனுக்கு எதையும் அவர் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனும் எதையும் கேட்டுக் கொள்வதுமில்லை.

மாலை நான்கு மணிக்கு மேல் விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும். பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் கைவசம் இருக்கும் விளையாட்டு சாமான்களோடு நேராய் ஏரிக்குத்தான் வருவார்கள். ஒரே கூச்சலும் சப்தமுமாய் இருக்கும். சாமி எப்படியாவது அந்த சமயத்தில்  நழுவி விடுவான். இரண்டு குழுவாகப் பிரிந்து கொண்டு  கோட்டி புல் அடிப்பது, தோற்றுப் போன அணியை கஞ்சி வாங்குவது என ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பேந்தா கோலி விளையாட்டு கோட்டி புல் விளையாட்டைப் போல சப்தமானது அல்லதான் என்றாலும் நுணுக்கமானது. இந்த இரண்டு விளையாட்டுக்களையும் தாண்டி செதுக்குவது மிகுந்த உற்சாக சப்தத்தை வரவழைக்கும்.

இப்படியாய் இருள் கவியும் வரை விளையாடிக் கழிப்பான். ஒப்புக்காக மாலை நேரத்திலும் கூடை வழிய வழிய சுடச்சுட மாட்டுச் சாணத்தை சேகரித்துக் கொண்டு வருவான். ஜோசியர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்கிற பயம் அவனுக்கு இருந்தது. ஆனால் ஜோசியர் எதையும் சொல்வதில்லை. அங்கிருந்த பதினைந்து வருடங்களில் அவனைக் கடிந்தோ அறிவுறுத்தியோ அவர் ஒருவார்த்தை கூடச் சொன்னதில்லை. சாமிநாதனும் அப்படி நடந்து கொண்டான்.

மாலையில் வரும் ஓரிருவருக்கும் ஜாதகம் பார்த்துவிட்டு ஜோசியர் சமைக்க ஆரம்பிப்பார். பெரும்பாலும் கீரைக் குழம்பு, சோறு, ஒரு பொரியல் இருக்கும். அவையும் தோட்டத்தில் கிடைத்தவையாக இருக்கும். ஆனாலும் அவ்வளவு ருசியாகச் சமைப்பார். சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கெல்லாம் மரத்தடியில் கிடக்கும் கட்டிலைத் தூக்கி வந்து குடிசை முற்றத்தில் போட்டு ஜோசியர் படுத்துவிடுவார். சாமிநாதன் குடிசைக்குள் பாயை விரித்துப் படுத்துக் கொள்வான். பதினைந்து வயதுவரை அவனது நாட்கள் இதே வரிசையில் இதே ஒழுங்கில்தான் கழிந்தது. கோவில் திருவிழா, தீபாவளி பொங்கலுக்கு புதுத் துணி, அபூர்வமாய் சினிமா இதைத்தாண்டி வேறெதுவும் நடந்துவிடவில்லை.

பதினைந்தாவது வயதில் ஆயா செத்துப் போனதாய் தகவல் வந்தது. போய் வெறுமனே பிணத்தின் முன்னால் நின்றுவிட்டு வந்துவிட்டான். அவன் உறவினர்கள் குறித்தோ சொத்து குறித்தோ எதுவும் தெரியவில்லை. எவரும் அவனைக் கண்டுகொள்ளவும் இல்லை.
இருந்த ஒரே சொந்தமும் போனது என்கிற வருத்தம் உள்ளூர இருந்தது. தான் இனியொரு முழு அநாதை என்கிற எண்ணமும் வந்து போனது.
பெரும்பாலும் இரவில் இந்த எண்ணம் மேலெழுந்து வரும். சன்னமாய் அழவும் செய்வான். என்னவோ ஆயா சாவிற்குப் போய்விட்டு வந்த பின்பு அவன் தன்னை பெரிய ஆளாகி விட்டதாய் நினைத்துக் கொண்டான். அன்றிலிருந்து விளையாடப் போவதை நிறுத்தி விட்டான். ஜோசியர் வருபவர்களுக்கு ஜோசியம் சொல்வதை உற்றுக் கேட்க ஆரம்பித்தான். குடிசைக்குள் ஒரு பழைய பெட்டியில் பழைய பஞ்சாங்கங்கள், ஜாதகப் பலன் தொடர்பான புத்தகங்களை எடுத்து, எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தான். பல விஷயங்கள் அவனுக்குப் புரியவில்லை. இது என்ன எப்படி என ஜோசியரிடம் கேட்கவும் தயங்கினான். அப்படி ஒரு பேச்சோ உரையாடலோ அவர்களிடம் இருந்ததே இல்லை. எல்லாம் குழப்பமாய் தோன்றும்போது சாமிக்கு ஜோசியர் மீது ஆத்திரமும் கோபமும் வந்தது. தன் வாழ்வையே அவர் சீரழித்து விட்டதாய் எண்ணினான். ஆனால் அந்தக் கோபத்தை அவர் மீது காண்பிக்கவோ, அங்கிருந்தோ கிளம்பவோ அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. ஒரே மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒரு நண்பகலில் மணியக்காரர் நிலத்து கிணற்றடிக்காய் நடந்து போய்கொண்டிருந்தான். கிணத்திற்குள் மார்பு வரை ஏற்றிக் கட்டிய பாவாடையோடு லட்சுமி நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கும் அவன் வயதிருக்கும் பல வருடங்களாய் பார்த்த பெண் தான் என்றாலும் அவளை இப்படி இதற்கு முன்பு பார்த்ததில்லை. சாமிக்கு முதன் முறையாய் காதலுணர்வும் காம உணர்வும் ஒரே சமயத்தில் மேலெழுந்தது. அதுவரை அவன் கனவில் கூட பெண்ணைப் பற்றி யோசித்ததில்லை. ஏற்கனவே தெரிந்த பெண் என்பதால் என்ன லட்சுமி குளிக்கிறியா எனக் கேட்டபடியே கிணறில் இறங்கினான். லட்சுமியும் நீயும் குளிக்க வரியா என சாதாரணமாக கேட்டாள். சாமிக்கு உடல் புல்லரித்தது. நீருக்கு சமீபமான திட்டில் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான். குறு முலைகள் நீரில் நனைந்து சன்னமான நீலப் பாவாடையோடு ஒட்டிக் கொண்டிருந்தன மொட்டுப் போன்ற காம்புகள் துலக்கமாய் தெரிந்தன. சாமியின் உடலில் என்னவோ ஆனது. ஒரு புது உலகம் அவனுக்காய் திறந்து கொண்டது. அந்த நிமிடத்திலிருந்து அவன் லட்சுமியைக் காதலிக்க ஆரம்பித்தான்.

மேலும்



Featured Post

test

 test