Thursday, March 23, 2017

நாய் அடிக்கிற கோல்


நேஷ்னல் புக் ட்ரஸ்ட் 1995 இல் வெளியிட்டிருந்த கன்னடச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதே தொகுப்பில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் ’க்ளிப் ஜாயிண்ட்’ என்கிற கதையை மட்டும் வாசித்து விட்டு தொகுப்பை மூடியது நினைவிற்கு வந்தது. இத் தொகுப்பின் பிற கதைகளோடு ஒப்பிடுகையில் ’க்ளிப் ஜாயிண்ட்’ சுமாரான கதைதான். பெயர் பிரபலமடைவதின் நன்மை இதுதான் போலும். பிரபலத் தன்மையில் விழாதவன் என்கிற நம்பிக்கைகள் என்னைப் பற்றி இருந்தாலும் சில விஷயங்களில் விழுந்துதான் விடுகிறேன்.

சொல்ல வந்தது பி.லங்கேஷ் என்பவர் எழுதிய ’ஓய்வு பெற்றவர்கள்’ என்கிற சிறுகதை குறித்து. ஒரே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இரண்டு முதியவர்களின் மன விகாரங்களை ஒரு எழுத்தாளன் எதிர் கொள்ள நேரிடும் சந்தர்ப்பம்தான் இச்சிறுகதை. கொஞ்சம் காட்டமாக, படாரென முகத்தில் அடிக்கும் உவமைகளோடு இக்கதை எழுதப்பட்டிருப்பதுதான் என்னை உட்கார்ந்து இதை எழுத வைக்கிறது. இரண்டு முதியவர்களை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஞாயிற்றுக் கிழமை நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் கொஞ்சம் தடிப்பாக உயரமாக இருந்தான்.(....) இன்னொருவனுக்கு அதே வயது. ஒல்லியாக நாய் அடிக்கிற கோலைப் போல இருந்தான்
. இந்த உவமையில் திடுக்கிட்டு வாசிப்பதை நிறுத்தி சிரித்துவிட்டேன். நாய் அடிக்கிற கோல் எவ்வளவு பிரமாதமான உவமை!. ஒரு மனிதனை இப்படி விவரிக்க இயலுமா என ஆச்சரியமாக இருந்தது. கதை சமகால சூழலுக்கும் சரியாகப் பொருந்திப் போகும் அரசுப் பணி ஊழல்களை தோலுறிக்கிறது. லஞ்சத்தில் ஊறித் தடித்த தோல்களைக் கொண்ட மனிதர்களை இழிகிறது. கூடவே வெற்றியடைய முடியாத எழுத்தாளனின் தோல்விப் புலம்பல்களையும் சேர்த்துக் கொள்கிறது. இக்கதை பிடித்துப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எழுதுகிறவன் ஒரு வகையான விசித்திரப் பிராணி; அதனாலேயே பல சமயங்களில் தன் வாலின் நிழலைப் பிடிக்க முயன்று தளர்ந்து போகும். அடர்த்தியான காட்டு வழியே குறிக்கோள் என்பதே இல்லாமல் சும்மா நடந்து கொண்டே போகும். உடம்பில் கொழுப்பை வளர்த்துக் கொண்டு இந்த மிருகம் தாவரம், மாமிசம், பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் செரித்துக் கொண்டு, பால் சொரிந்து சுமை குறைந்த எருமையைப் போல கலங்கிய நீரில் விழுந்து பத்து வட்டமடிக்கும்.
சாகித்ய அகடாமி விருது பெற்ற P.Lankesh ஒரு இயக்குனரும் கூட. நான்கு திரைப்படங்களை இயக்கியிருப்பதாய் விக்கி சொல்கிறது - தவறாக ஒரு மலையாளப் படத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறது. இவரின் பிற படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா? எனத் தேட வேண்டும். இதுவரைக்குமாய் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கன்னடப் படைப்புகளையும் தேடிப் பிடிக்க வேண்டும்.

 மிகை என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

No comments:

Featured Post

test

 test