Monday, December 11, 2017

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு



தினசரிகளின் துல்லியம்
     
     புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள்



உள்ளே..

1.   தினசரிகளின் துல்லியம் - முரகாமி
2.   அன்னா கரேனினா
3.   பார்போஸோ வின் குரங்கு
4.   நிகழை முழுமையாய் வாழ்தல்
5.   இருளில் மறைந்திருக்கும் யானை
6.   ஆஸ்விட்ஸ் வதை முகாம்
7.   குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்
8.   புதிர்களின் சுழல்
9.   பப்பாளிக்காயின் மணம் 
10.  அகி கரிஸ்மாகி – புகைக் கலைஞன்
11.  யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பவ – பிறப்பு
12.  லார்ஸ் வோன் ட்ரையர்
13.  மணிரத்னம்
14.  கேம் ஆஃப் த்ரோன்ஸ்
15.  எஸ்.எல். பைரப்பா
16.  இரு வேட்டைக் கதைகள்
17.  அசோகமித்திரன்
18.  பி. லங்கேஷ்
19.  நூரி பில்கே சிலான்
20.  தமிழக அகதிகள்
21.  வாசிப்பும் விமர்சனமும்
22.  ஹோ ஷியோ ஷீன் (hou hsiao-hsien)
23.  ஜீ.முருகன்
24.  ஜெயலலிதாவும் செய்தி வெறியும்
25.  நீட்ஷேவின் குதிரை
26.  ஆஸ்கர் 2017
27.  தந்தையர்களைக் கொல்லுதல்
28.  இலக்கியப் பட்டியலின் அரசியல்
29.  மைக்ரோ திரைப்படக் குறிப்புகள்
30.  காட்சிகளின்றி காணுதல்
31.  துபாய் சர்வதேசத் திரைப்பட விழா
32.  கங்கைப் பருந்தின் சிறகுகள்
33.  தீக்கிரை – இன்செண்டீஸ்
34.  சிக்கவீர ராஜேந்திரன்
35.  ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்
36.  இயற்கையின் சமீபம்


 

துல்லியங்களுக்கு முன் :

இவை 2014 ஆம் வருடத்திலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் மைக்ரோக் குறிப்புகள். ஃபேஸ்புக், ப்ளஸ், ப்லாக் என கண்ட இடத்தில் எல்லாம் கிறுக்கி வைத்தவை. இவற்றைத் தொகுப்பாக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டி ஒட்டும் வேலைகளை இந்தத் தொகுப்பு கோரியது. நிதானமாக செய்தேன். இதனோடே பழைய நினைவுகளில் ஊறவும் பிடித்திருந்தது.

சம இணைய கால உலகில் திரைப்படங்கள் குறித்தோ இயக்குனர்கள் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ – குறித்து என்பது குறித்து நீட்டி முழக்கி எழுதுவது - அபத்தம் எனத்தான் தோன்றுகிறது. வணிகப் பத்திரிக்கைகள், இலக்கிய இடை நிலை இதழ்களில் இந்தக் குறித்துத் தொடர்பான நிறைய கட்டுரைகளைப் பார்க்க முடியும். டெம்ப்ளேட் எழுத்தாளர்கள் அதே கீறல் விழுந்த ரெக்கார்டாய் சினிமா குறித்தும் புத்தகங்கள் குறித்தும் எழுதுவதை ஒரு சின்னப் பரிதாபத்தோடு கடந்து போவேன். எனக்குத் தெரிந்து முழுக்கதையையும் எழுதப்பட்டுவிட்ட சினிமா விமர்சனங்களை யாரும் வாசிப்பதில்லை. பக்கங்களை நிரப்ப ஒளிப்பதிவு அபாரம், நடிகையின் அருமையான முக பாவம் என்றெல்லாம் பிதற்றலாய் எழுதி வைப்பார்கள். வாசிக்கப் பாவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பிலுள்ள குறிப்புகள் பக்கம், வடிவம், வாசக கவனம் என்பன போன்ற இடையூறுகள் எதுவும் இல்லாதக் குறிப்புகள். என் மன உணர்வுகளை கண்டமேனிக்கு எழுதி வைத்திருக்கிறேன். மற்ற சிரத்தையாய் எழுதப்பட்ட கட்டுரைகள் உருவாக்கும் பரிதாப உணர்வை இக் குறிப்புகளில் நீங்கள் பெற முடியாது என நம்புகிறேன்.

கன்னட இலக்கியம் குறித்தான அதிகக் கட்டுரைகளும் குறிப்புகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. என்னை தொந்தரவு செய்த படங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். கவனமாக சுயதம்பட்டங்களைக் களைந்திருக்கிறேன். கடந்த மூன்று வருடங்களில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும் கடந்து வந்திருக்கிறேன். இணைய குழாயடி சண்டைகளிலிருந்து மீண்டிருக்கிறேன் என்பதை இக்குறிப்புகள் அறியத் தருகின்றன. நிஜமாகவே மகிழ்கிறேன்.
மற்றபடி இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வரும். அந்தத் தொகுப்பில் இதிலிருக்கும் நிதானம் இருக்காது என நினைக்கிறேன். பார்ப்போம்.

கிண்டில் அபாரமாக இருக்கிறது. ஏழு புத்தகங்களை இறக்கியிருக்கிறேன். இது எட்டாவது புத்தகம். இன்னும் நிகழ்திரையும், உரையாடலினியும், கட்டுரைத் தொகுப்பும் நிலுவையில் இருக்கின்றன. நானே அட்டைகளை வடிவமைக்கிறேன். நானே தொகுக்கிறேன். நானே திருத்தங்களை செய்கிறேன். நானே கிண்டிலில் பதிவேற்றுகிறேன். எல்லாம் நானேதான்.

நீங்கள் வாசியுங்கள்

மிக்க அன்புடன்

அய்யனார் விஸ்வநாத்
டிசம்பர் 11, 2017

துபாய்.

Tuesday, November 14, 2017

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா







கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX


பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகத் தற்செயலானது. இதில் ஆர்வம் என்கிற ஒன்றைத் தவிர வேறெந்த இலாபக் குறிக்கோள்களும் இல்லை. எத்தனை பேர் வாங்குகிறார்கள் பார்ப்போமே என்கிற சிறுபிள்ளைத்தனமான ஆவல் மட்டும்தான் இக்கணத்தில் மேலோங்கி இருக்கிறது. கினோகுனியா என்கிற பெயர் தமிழ்ச் சூழலுக்கு வெளியில் இருந்ததால் அதையே இந்தத் தொகுப்பிற்கானப் பெயராய் தேர்ந்தெடுத்தேன். இருப்பின் அடிப்படையிலும் இலக்கிய மடங்களின் அங்கீகார அடிப்படையிலும் தமிழ் சூழலுக்கு வெளியே நானும் என் எழுத்தும் இருப்பதாலும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
சிறுகதைகள் என்னுடைய களம் கிடையாது. மரபான ஒரே ஒரு சிறுகதையைக் கூட நான் இன்னமும் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் முத்திரைக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத ஒன்றுமில்லை.
இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற அலுப்புதான் என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. என் கதைகள் எந்த மரபின் தொடர்ச்சியுமல்ல நானும் எந்தப் பள்ளியையும் சார்ந்தவன் கிடையாது. (அதற்காக வானத்திலிருந்து குதித்தது / தவன் என்றும் பொருளில்லை) இந்த மரபும் பள்ளிகளும் எனக்கு அலுப்பூட்டுவதாய் இருக்கின்றன. எனவே என் விருப்பத்திற்கு எழுதுகிறேன். அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசிப்பவரின் பாடு.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் ஏற்கனவே கற்பனையாக எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் மோட்டு வளையைப் பார்த்துக் கற்பனையைப் பிராண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுத முயற்சிக்கவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான். இலக்கிய குருமார்கள் சொந்த அறிதலை பொதுவிற்குக் கடத்துவதே கலை என்பார்கள். அது அவர்களின் அறிதல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தூக்கிப் போடுங்கள். மின் பிரதியின் வசதியே நொடியில் அழித்துவிடலாம் என்பதுதான்.
மற்றபடி இத்தொகுப்பை என்னால் இயன்ற அளவிற்கு பிழையில்லாமல் கொண்டு வர முயன்றிருக்கிறேன். முதல் கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது. அது மட்டுமே மற்ற ஒன்பது கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். இத்தொகுப்பில் வரும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள். ஓரிதழ்ப்பூ அச்சிலும் கிண்டிலிலும் ஜனவரியில் கிடைக்கும். அதற்கு முன்பு இத் தொகுப்பு வருவதில் மகிழ்ச்சி.

கினோகுனியா அமேஸான் கிண்டில்


மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
13 நவம்பர் 2017
துபாய்

Thursday, November 9, 2017

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கிண்டில் வெளியீடு

https://www.amazon.in/dp/B0778TCFP4



எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ கவிதைத் தொகுப்பை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே என் வலைப் பக்கத்தில்  PDF ஆகத் தரவிறக்கிக் கொள்ளும்படி வைத்திருந்தேன். அமேஸான் விதிமுறைகளின் படி அதை நீக்கி இருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சிதான். வெளியிடுகையில் இலவசமாகத் தரும் வசதி அமேசானில் இல்லை. எனவே  அதன் ஆரம்ப விலையான 49 ரூ. இது சரிவரும் எனத் தோன்றினால் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு என அடுத்தடுத்து கொண்டு வருவேன். இந்த எண்ணம் தோன்ற மாமல்லனே காரணம். அவருக்கு என் நன்றி. 

கவிதைகள் மலிந்த இக்காலகட்டத்தில் கவிதைத் தொகுப்பை அச்சில் வெளிக் கொண்டு வரக் கூச்சமாக இருந்தது. எனவே மூன்றாண்டுகளுக்கு முன்பு ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ தொகுப்பை பிடிஎப் ஆக மாற்றி வலையில் ஏற்றினேன். இப்போது வாசிக்கவும் நன்றாக இருப்பது போல் தோன்றவே இந்த கிண்டில் வெளியீடு. மேலும் எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே என்கிற உடனடி ஆவலும் இந்த வெளியீட்டுக்கான இன்னொரு காரணமாக இருக்கலாம்.

உரையாடலினி தொகுப்பிற்குப் பிறகு எழுதிய கதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். கூகுல் பஸ் காலகட்டத்திலிருந்து எழுதிக் குவித்த சினிமா விமர்சனங்களையும் அலுவலக வெட்டி நேரத்தில் தொகுக்க வேண்டும். இப்படியாக இணையத்தில் எழுதிக் குவித்தவைகளை தனித் தனி தொகுப்புகளாக கிண்டிலில் கொண்டு வரப் பார்க்கலாம். நிச்சயமாக இத்தொகுப்புகளில் ஓசிதானே என்கிற அசட்டை மனப்பான்மை இராது. ஒரு கறார் ஆசாமியின் உயிர்ப்புதான் என்னை இன்னும் இயங்க வைக்கிறது. அந்த நேர்த்தி தொகுப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

பொதுவாக என்னுடைய ஒரு நாள் என்பது வழமையைத் தாண்டி எதுவுமே நிகழாத ஒன்றாகத்தான் இருக்கும். அல்லது அப்படி நான் வைத்துக் கொள்வேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வளவு பரபரப்பு. மனிதர்களாலும் நிகழ்வுகளாலும் நிறைந்த நாட்கள் இவை. மனநிலை வாய்க்கும்போது ஒவ்வொரு பரபரப்பையும் விலாவரியாக எழுதப் பார்க்கிறேன்.

Thursday, October 5, 2017

அகி கரிஸ்மாகி - புகைக்கலைஞனின் நிரம்பி வழியும் கோப்பை





கடந்த ஒரு மாதமாக பின்லாந்த்தைச் சேர்ந்த இயக்குனரான அகி கரிஸ்மாகி யின் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பதினைந்து படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் வெளிவந்த The Other Side of Hope மட்டும் கிடைக்கவில்லை. அகியின் மொத்த படங்களுமே மிக நேரடியான படங்கள். பின்லாந்தின் சூழலை வாழ்வியலை  மக்களைப் பற்றி மிகக் குறைவான காட்சி மொழியின் வழியாய் ஆழமான சலனங்களை உருவாக்குகின்றன. தனிப்பட்ட வகையில் என்னைப் புரட்டிப் போட்ட இயக்குனர்களான  டோனி காட்லிஃப், ஹோ வரிசையில் அகியும் இடம்பெறுகிறார். இவரது திரைப்படங்களின் முகத்திலறையும் நேரடித் தன்மை அசாத்தியமான திறப்பை அளிக்கிறது.

திரைப்படங்களைத் தவிர்த்த இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் குணாதிசயமும் குறைந்த பட்ச சுரணையோடு வாழ விரும்பும் அனைவரையும் ஈர்த்துவிடும் ஒன்று. இவரது நேர்காணல்களைத் தேடிப் பார்த்தேன். அவ்வளவு உயிர்ப்பும் தனித்தன்மையும் கொண்ட அசல் மனிதன். ஒரு போதும் அதிகாரத்திற்கோ வெளிப்பூச்சுகளுக்கோ மசியாத கலைஞன்.

நேற்று இரவு 1996 இல் வெளிவந்த Drifting Clouds படத்தைப் பார்த்து முடித்தேன். இத் திரைப்படத்தில் துக்கமும் ஏமாற்றமும் இழப்பும் இசையாக மட்டும் வெளிப்படும். இவரது திரைப்படங்களில் ஒரே ஒரு வார்த்தை கூட மிகையாய் இருக்காது.  இவ்வளவு மினிமலாகவும் ஒரு கதையை சொல்ல முடியும் என்பதுதான் அகியின் தனித் தன்மை. திரைப்படங்களில் நான் விழுந்து விழுந்து தேடிக் கொண்டிருக்கும் பிராந்திய அசல் தன்மை இவரது எல்லாத் திரைப்படங்களிலும் நிரம்பி வழிகிறது.

அகி ஆஸ்கர் விருதுகளை நிராகரித்தார். உலக நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அமெரிக்க பெரியண்ணனின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மேலும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாத கலைஞன் என்பதால் வெகுசனப் பரப்பில் அதிகம் அறியப்படவில்லை. அதைக் குறித்து அகிக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ ஒரு பிராதும் கிடையாது. அவரது பியர் கோப்பை இன்னும் இன்னும் நிரம்பி வழிகிறது. லீ ஹார்வி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.

அகி கரிஸ்மாகியின் பதினேழு படங்களில் Ariel 1988 மற்றும் The Man Without a Past 2002 இவை இரண்டும் அதிகமான விமர்சகர்களின் பாரட்டைப் பெற்றிருக்கிறது. அகிக்குமே ஏரியல் மிகப் பிடித்தப் படம். எனக்கோ இதுவரை பார்த்த பதினைந்துமே பிடித்திருக்கிறது. Crime and Punishment, 1983 படம் துவங்கி 2011 இல் வெளிவந்த லீ ஹார்வி வரை அத்தனையுமே பிரமாதமான மிக முக்கியமான படங்கள்.  முடிந்த வரையில் ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக எழுதப் பார்க்கிறேன்.






Wednesday, September 20, 2017

துப்பறிவாளனும் தமிழ் சினிமாவும்


துப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம் செய்திருந்தால் இது ஒரு  தமிழ்ப்படமாகி இருக்கும் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட ஞானத் தெறிப்புகள் கிடைத்தன.

1. விஷால் காஸ்ட்யூம் சரியில்லை. யுத்தம் செய் சேரனைப் போல துப்பறிவாளன் விஷாலையும் சாதாரண பேண்ட் சட்டை செருப்பில் காண்பித்திருக்கலாம். டைரடக்கருக்கு கருப்பு கண்ணாடி பிடித்தால் ஹீரோவும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன? ஸ்கார்ஃபும் கருப்பு கண்ணாடியும் தமிழ் சினிமாவுக்கு அந்நியமானது. முதல் காட்சியிலேயே இது நமது சினிமா இல்லை என்பது தெளிவாகிறது.

2. விஷால் வீட்டு ஹால் முழுக்க இங்கீலீஷ் புத்தகங்கள். பெயிண்டர்கள் பயன்படுத்தும் குதிரை மாதிரி ஒரு உயரமான ஸ்டூல், இதெல்லாம் யார் வீட்டில் இருக்கிறது. மேலும் தமிழில் படமெடுக்கும் மிஷ்கினுக்கு ஒரே ஒரு தமிழ் புத்தகத்தைக் கூட அந்த ஷெல்பில் வைக்க வேண்டும் எனத் தோணவில்லையே, இது நம்மை அவமானப்படுத்தும் செயல். தமிழ்ப்பட துப்பறிவாளன் வீட்டு ஹாலில் கண்ணாடி ஷோ கேஸ் இருக்க வேண்டும். அதில் சில பல விருதுகள், கோப்பைகள், விளையாட்டுகளில் ஜெயித்த பதக்கங்கள் மினுங்க வேண்டும். மேலும்  சுவரில் ரஜினி அஜித் போன்ற பிரபலங்களுடன் விஷால் நின்று கொண்டிருப்பதைப்போல புகைப்படம் எடுத்து  மாட்டி இருக்க வேண்டும். இதுவே தமிழ் சினிமா தோற்றத்தைக் கொண்டு வர உதவும்.

3. கதாநாயகியிடம் துடைப்பத்தைக் கொடுப்பது ஆணாதிக்க தடித்தனம். ஏன் வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து சிம்பாலிக்காக லவ்வை சொல்லி இருக்கலாமே?

4. ஒவ்வொரு கொலையும் விபத்தைப் போல இருக்க வேண்டும் அவ்வளவுதானே, மிக எளிது மண்பாடி லாரியை விட்டு அவர்களை மோதிவிட வேண்டியதுதான். தமிழில் இதுவே மரபு.  இதற்குப்போய் செயற்கை மின்னல், விஷ ரெசின், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என அடித்து விடுகிறார்கள். முடியல. வெளிநாட்டுப்படங்களைப் பாருங்கள் தப்பில்லை. ஆனால் அதை தமிழுக்கு ஏற்றார்ப்போல் மாற்றுங்கள் அப்போதுதான் நீங்கள் இயக்குனர்.

5. ஒரு வில்லன் மொட்டையை போலிசார் சூழ்ந்து கொள்கிறார்கள். மொத்த போலிஸார் முன்னிலையில் அந்த மொட்டை நடு ரோட்டில் மண்டி போட்டு உட்கார்ந்து கத்தியால் வயிறை அறுத்துக் கொள்கிறான். அடப்பாவிகளா இது ஹரகிரி. ஜப்பானிய மறவர்கள் தங்களை மாய்த்துக் கொள்ளும் முறை. இதைப் போய் திருடனுக்கு கொடுத்து அந்தக் கலாசாரத்தை இழிந்ததோடு மட்டுமில்லாமல் அட்டைக் காப்பியையும் அடித்திருக்கிறார்கள். அநியாயம். வெட்கம். வில்லன் கழுத்தில் சயனைட் குப்பி இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் பாலபாடம். பிடிபட்டால் எடுத்துக் கடித்து விட வேண்டும். இதுகூடவா இயக்குனருக்குத் தெரியாது. அட ஜெராக்ஸ் மிஷ்கினே.

6. பிரிட்ஜில் பீர்தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு பிணம் இருக்கிறது. பாத்ரூமில் நடிகையின் குளிசீன் வைக்கலாம் இவர்களோ பிணத்தை துண்டு துண்டாக அறுக்கிறார்கள். வில்லன் அத்தனை முட்டையையும் உடைத்து ஆஃப்பாயில் போட்டு எடுத்து வீசுகிறான். கோபம் வந்தால் முட்டையை எடுத்து நேரடியாக வீசலாமே ஏன் ஆஃப் பாயில் போட்டு வீசுகிறான்? அட ஆஃப் பாயில்களா. வெளிநாட்டுப் படங்களில் வன்முறையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் நாஜிக்களால் துன்பபட்டு மனதளவில் வன்முறையாய் இறுகி இருக்கிறார்கள். எனவே வன்முறையை அப்பட்டமாய் காண்பிக்கிறார்கள். தமிழர்களாகிய நீங்கள் தமிழ்நாடு எனும் சொர்கத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்கு என்ன போய் வன்முறை? நீங்கள் கூடி கும்மிதான் அடிக்க வேண்டும். கொலை பண்ணக் கூடாது.

7. விஷால் பெட்டிக் கடையில் போய் மார்ல்ப்ரோ கேட்கிறார். மிஷ்கின் ப்ரோ, வெளிநாட்டு பொட்டிக் கடைகளில்தான் மார்ல்ப்ரோ. நம்ம ஊர் பெட்டிக் கடைகளில் ஒரு கிங்க்ஸ் கொடுங்க என்றுதான் கேட்கவேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தட்டச்ச கை வலிக்கிறது. இறுதியாக சுரேஷ் கண்ணன் பாணியில் ஒரு பஞ்ச்

”பிட்சாவுக்கு தொட்டுக்க சாஸ் கொடுங்க மிஷ்கின், சாம்பார் கொடுக்காதீங்க ப்ளீஸ்”


Saturday, September 9, 2017

பப்பாளிக்காயின் மணம்


வியட்நாமின் நிலப்பகுதி எனக்குப் பிடித்தமானது. திரைப்படங்களில் ஆவணப்படங்களில் பார்த்ததுதான். நேரில் சென்றதில்லை. ஆனால் வியட்நாமின் மீதான உள்ளார்ந்த விருப்பம் என்னை விரைவில் அங்கு கொண்டு செல்லுமென்றே நம்புகிறேன். சேற்றுப் புதைவுகளில் ஆசுவாசமாக அசைபோடும் எருமைகளை காணும்போதெல்லாம் ஒரு சிறு புன்னகை தொற்றிக் கொள்கிறது. வருகிறேன் செல்லங்களே என அவைகளிடம் மிக ரகசியமாய் சொல்லிக் கொள்கிறேன். தலைக்கு சிறு குடையை கட்டிக் கொண்டு விடாத மழையைப் பொருட்படுத்தாது வயல்களில் வேலை பார்க்கும் மினுங்கும் கண்களைக் கொண்ட மனிதர்களை நேரில் பார்க்க வேண்டும்.

 THE SCENT OF GREEN PAPAYA என்கிற இந்தப் படம் வியட்நாமின் நிலக்காட்சிகளைப் பதிவு செய்யவில்லை. மாறாய் எளிய மனிதர்களின்  வாழ்வை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.
வீட்டு வேலைக்குப் போகும் சிறுமியின் பதினைந்து வருட வாழ்வுதான் இந்தப்படம். அவளின் சின்னஞ்சிறு உலகம் அவள் கண்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. கவித்துவம் என்கிற சொல்லிற்கு இந்தப் படம் நியாயம் செய்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம், அவ்வளவு நுணுக்கம், அவ்வளவு நெகிழ்வு. மைய சரடாக அன்பு இருக்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பாராத, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழமான அன்புமிக்க மனிதர்களை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடும் வாழ்க்கை முறையும் மனிதர்களும் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள்தாம். தைவானிய இயக்குனரான HSIAO-HSIEN HOU  வின் படங்களில் நான் விழுந்து கிடந்த காலத்தை இந்தப் படம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தது. தைவான் படங்களில் வரும் வீடும் மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட  ஹோ வின் அதே திரைப்பட மொழியை Anh Hung Tran ம் கையாண்டிருக்கிறார்.


ட்ரான் இயக்கத்தில் வெளிவந்த நார்வேஜியன் வுட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன். முரகாமியின் அதே புகழ்பெற்ற நாவல்தான். நாவல் தந்த உணர்வை திரைப்படத்தில் பெற முடியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன. குறிப்பாக காற்று படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக மாறியிருக்கும். முழுமையானப் படமாக இல்லாததால் இயக்குனர் யார் என்பதைக் கூடப் பார்க்கவில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு தேடிப்பார்த்ததில்தான் நார்வேஜியன் வுட் இயக்குனர் என்பது தெரியவந்தது. இவரின் மற்ற படங்களை தேடிப்பார்த்தேன். Cyclo வும் THE VERTICAL RAY OF THE SUN  திரைப்படமும் கிடைத்தது. மூன்றிலும் ட்ரான் மனைவியே பிரதான கதாபாத்திரம். க்ரீன் பப்பாயா படத்தைத் தொடர்ந்து சைக்லோவைப் பார்த்தேன். வியட்நாம் விளிம்பு நிலை மனிதர்களை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். கீரீன் பப்பாயா தந்த உணர்வை நீட்டிக்கச் செய்ய மனம் விரும்பியதால் பாதியில் நிறுத்திவிட்டேன்.

என் திருவண்ணாமலை வீட்டில் நிறைய பப்பாளி மரங்கள் இருந்தன.  இம்மரமும் அதன் அகல இலைகளும் பால்சொட்டும் பப்பாளிக் காயும் என் பால்யத்தோடு தொடர்புடையதால் திரைப்படத்தோடு ஒன்றிப் போக முடிந்தது. கிட்டத்தட்ட அந்தப் பச்சை வாசனையை திரையின் வழியாகவே முகர்ந்து விட முடிந்தது. 

Monday, September 4, 2017

அரச பயங்கரவாதம்

அனிதாவின் தற்கொலை மொண்ணை தமிழ் சமூகத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.  எல்லா அதிகார மட்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பனர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது. சமூக வலைத் தளங்களில் ஒரு பக்கம் இந்தப் பயங்கரவாதத்திற்கெதிரான கூக்குரல்கள், ஓலங்கள், எதிர்ப்புகள் நிரம்பினாலும் அதற்குச் சமமாய் இதை நீர்த்துப் போக வைக்கும் விஷம் தோய்ந்த பரப்புரைகளும் சம பங்கிற்கு உள்ளன. இரண்டு நாட்களாய் எல்லாவற்றையும் தவறவிடாமல் படித்து ஆட்களை அடையாளம் கண்டு கொள்கிறேன். பனிரெண்டு வருடங்களாய் இங்கு புழங்குவதால் மனிதர்களை ஓரளவிற்கு சரியாகவே யூகிக்க முடிகிறது.

அனிதா சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் ஆளும் பார்ப்பனிய அரசோடு போராடித் தோற்றுப் போய்த்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். அவளுக்கு தற்காலிக நம்பிக்கைகளை ஊட்டிய, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஒவ்வொரு அரசியல் வாதியும் இதற்குப் பொறுப்பு. இதுவரை மூடர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்த நம் தேசம், இப்போது மதவெறி பிடித்த மூடர்கள் வசம் இருப்பதால் இங்கே நீதி என்பது வெறும் கனவு மட்டுமேதான்.

எடப்பாடி, பன்னீர், ஸ்டாலின் ஆகிய மூவரும் இந்தச் சின்னஞ்சிறு தளிரின் மரணத்திற்கு நேரடிப் பொறுப்பு. இந்தக் கையாலாகத கொலைகாரர்களை ஆளத் தேர்ந்தெடுத்த நாமும் இந்தப் பிஞ்சை மறைமுகமாய் கொலை செய்தோம்.


Tuesday, August 29, 2017

LIVIN லிவின் - இணையத் தொடர்

நண்பன் சித்து பகிர்ந்திருந்த சுட்டியைப் பிடித்துப் போய் இந்த லிவ் இன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். இதுவரை பதினோரு பாகங்களை யூடியூபில் பதிவேற்றி இருக்கிறார்கள். அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள் என்பதால் முதல் அமர்வில் ஆறு பாகங்களும் அடுத்த அமர்வில் ஐந்து பாகங்களுமாய் ஒரே நாளில் பார்த்துவிட வாய்த்தது. அதிகம் மெனக்கெடாத வழக்கமான 'ஹால் ட்ராமா'தான் என்றாலும் உரையாடலில் தென்பட்ட சுவாரசியமும் சமகால விஷயங்களை உள்வாங்கிய இளைஞர்களின் வெளிப்பாடு என்பதாலும் மிகவும் பிடித்துப் போய்தான் பார்த்தேன்.

ஒரு வகையில் இந்தத் தொடர் எனக்கு 'கேம் ஆஃப் த்ரோன்' ஜூரத்திலிருந்து வெளியேற உதவியது. இதில் ஒரு சுவாரசிய முரண் என்னவென்றால்  இந்த மொத்தக் குழாமும் 'கேம் ஆஃப் த்ரோன்' தொடரின் தீவிர ரசிகர்கள் போல. பெயர் உருவம் புத்திசாலித்தனம் உட்பட அப்படியே GOT சாமை, சாமிநாதனாக உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். போதாத குறைக்கு Her திரைப்படத்தின் AI காதலியும் சாமோடு சேர்ந்து கொள்கிறாள். ”அடப் போட்டோ காப்பிப் பசங்களா!” எனத் திட்ட முடியாத அளவிற்கு இதையெல்லாம் இவர்கள் வெளிப்படையாக, உரையாடலாக சொல்லிவிடுகிறார்கள். நாமும் So What! எனக் கடந்து இவர்களோடு ஒட்டிக் கொள்ள முடிகிறது.

ஜங்க் ஃபுட், பியர், வீடியோ கேம், உலகத் திரைப்படங்கள், முரகாமி, சேர்ந்து வாழ்தல், பிடித்ததைச் செய்தல், சோம்பலாய் சந்தோஷமாய் இருத்தல் என சமகால ’அப்பர் க்ளாஸ்’ இளைஞர்களை இந்தத் தொடர் திகட்டத் திகட்ட முன் நிறுத்துகிறது.

சகலரையும்  ’ப்ரோ’ என அழைக்கும் சம உலகமாக இந்த இளைஞர்களின் உலகு மெல்ல மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. நிஜமாகவே சென்னை வாழ்வு இப்படி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்போலத்தான் தோன்றுகிறது. குழாயை சரி செய்ய வரும் ப்ளம்பர்,  ஹரீஷை ”ஹாய் ப்ரோ” என அழைப்பதும் ஹரிதாவுடன் கடலை போடுவதும் பார்க்கவே நன்றாக இருந்தது. அய்யர் பாஷையில் அங்கலாய்க்கும் மாமியை சாம் ’ரேஸிஸ்ட் பீபுள்’ எனத் திட்டுகிறான். ஒரிஜினல் புத்திசாலிகள் இந்த ITத் துறையில் ஏமாற்றப்படுவது குறித்து, வீட்டைத் துறந்து வெளியில் இடம் சரிப்படாமல் அலையும் இளைஞர்கள் குறித்தெல்லாம் சாம் கதாபாத்திரம் மூலம் பேசியிருக்கிறார்கள்.

எழுத்தாளராகும் கனவில் இருக்கும் ஹரிதா கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. ஹரீஷ், சாம், சித்தார்த், ஹரிதா அப்பா, ஹரீஷ் அக்கா, வீட்டு உரிமையாளர், அவர் மனைவி என விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்தாம். பட்ஜெட் பிரச்சினைகள் இருக்கக் கூடும் என்றாலும் ஒரு தொடருக்குப் போதுமான கதாபாத்திரங்கள் இல்லை என்பது முழுமையற்ற தன்மையை உருவாக்குகின்றது. பதினோராவது பகுதியில்தான் மியா வருகிறாள். அவளும் சாமைப் போலவே இருப்பது ஏமாற்றம். தொடரின் சுவாரசியத்தைக் கூட்ட முரண்களையும் நிகழ்வுகளையும் உருவாக்க வேண்டியது அவசியம். புதிதாக எந்த சம்பவங்களும் நிகழாமல் வெறுமனே டிவி முன்னால் அமர்ந்து தின்று குடித்து விளையாடிப் படம் பார்த்து நகர்வதால் அலுப்பும் தட்டுகிறது. இந்தக் குழுவினர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

இணையத் தொடர் என்பதால் சென்ஸார் பிரச்சினைகள் கிடையாது. ஃபக், பாஸ்டர்ட், மேட்டர் என வெளிப்படையாக ஜாலியாகப் பேசிக் கொள்கிறார்கள். ஹரீஷ், தன் அக்கா தொடர்ந்து குடைச்சலைக் கொடுக்கவே ஃபக் ஹர் என்கிறான். உடனே ஹரிதா கூல் ஜேமி லானிஸ்டர் என்கிறாள். இதெல்லாம் ஒரு சின்னப் புன்னகையை வரவழைத்தது.

ஹரீஷ் எடுக்கும் புகைப்படங்களை விட அவன் உதவியாளனான சித்தார்த் எடுக்கும் புகைப்படங்கள் இன்னும் நுணுக்கமாகவும் உயிர்ப்பாகவும் இருக்கிறது. ஆக அடுத்த தலைமுறை இளைஞர்கள் இன்னும் சுதந்திரமாகவும் உயிர்ப்பாகவும் இருப்பார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.

சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற, ஆண்பெண் பாகுபாடில்லாத, திருமணம்- பந்தம் போன்ற நமுத்த விஷயங்களில்லாத, சுதந்திரமான, இளமை மின்னும் ஒரு வாழ்வைப் பார்க்க நிஜமாகவே நன்றாக இருக்கிறது.




புதிர்களின் சுழல் - முல்ஹாலன்ட் ட்ரைவ்

எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதைப் போன்ற உணர்வை சில படங்கள் தரும். முல்ஹாலண்ட் ட்ரைவ் அதில் முதன்மையானது. சில வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு குழம்பியது - திகைத்தது - ’வாட் த ஃபக்’ எனப் புலம்பியது - இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்த நாள் இணையத்தில் தேடி விமர்சனங்களை, விளக்கங்களை வாசித்தும் நிறைய இடைவெளி இருப்பதைப் போல் தோன்றியது. படம் பார்த்த நண்பர்களிடம் பேச முனைந்தாலோ, அவர்களின் புரிதல் இன்னும் அகலபாதாளத்தில் இருந்தது. அப்படியே அதைக் கடந்து போய்விட்டேன். நேற்று ’மேக்’ திரும்பி வந்ததும் ஒரு நல்ல படம் பார்ப்போமே எனத் துழாவியதில் முதலில் கண்ணில் பட்டது இந்தப் படம்தான். அரைமணி நேரம் பார்ப்போம் என ஆரம்பித்து முழுமையாய் முடித்துவிட்டுத்தான் தூங்கப் போனேன். இந்த முறை இன்னும் சில விஷயங்கள் தெளிவாகின.

தமிழில் முல்ஹாலண்ட் ட்ரைவ் படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்களா என இன்று கூடத் தேடி ஓய்ந்து போனேன். இல்லை. அல்லது என் கண்ணில் படவில்லை. முதல் முறை தவறவிட்டு இரண்டாம் முறை தெளிவான சில விஷயங்கள்,

1. பெட்டியும் டயானாவும் ஒருவர்தாம்.  நயோமி வாட் இரண்டு கதாபாத்திரங்களிலும் அபாரமான வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

2. படத்தின் கடைசி இருபது நிமிடங்களான டயானா பகுதி மட்டும்தான் நிஜம். மற்றவை எல்லாம் கனவு.

3. காபிக் கடையின் பின்புறம் வெளிப்படும் உருவம் பேய் கிடையாது. ஒரு சாலையோர மனிதன்.

நமக்குத் தேவைப்படும் கதையானப் படமாக முல்ஹாலண்ட் ட்ரைவ் ஐ இப்படிப் புரிந்து கொள்ளலாம்.

டயானா வும் கமீலாவும் உறவில் இருக்கிறார்கள். இருவருமே ஹாலிவுட்டில் நடிகைகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டயானாவின் வாய்ப்பை கமீலா இயக்குனரை மயக்கிப் பறித்துக் கொள்கிறாள். அவர் மீது காதல் வயப்படுகிறாள். ஒரே நேரத்தில் காதலையும் கதாநாயகி வாய்ப்பையும் இழந்த டயானா, கமீலாவைக் கொன்று பழி தீர்க்க விரும்புகிறாள். அதற்காக ஒரு அடியாளை நாடுகிறாள். அவனும் அதற்கு சம்மதிக்கிறான். வேலை முடிந்ததும் ஒரு சாவியை அவள் வீட்டில் வைத்துவிடுவதாய் சொல்கிறான். டயானா உறங்கச் செல்கிறாள். அவள் காணும் கனவுதான் பெட்டிக்கும் ரீட்டாவிற்கும் இயக்குனருக்கும் நிகழும் சம்பவங்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணின் அழைப்பு மணியில் எழும்  டயானா வீட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் சாவியைப் பார்க்கிறாள். கமீலாவைக் கொன்ற குற்ற உணர்வு அவளுக்குள் பல மாய பிம்பங்களை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடுகிறது. அவள் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு இறந்து போகிறாள்.

இதுதான் மேலோட்டமான கதை. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. என் பழகிய மூளைக்கு கதை என்ற ஒன்று - லாஜிக் என்ற ஒன்று - தேவைப்படவே இந்தப் படத்தை இப்படிச் சுருக்கிப் புரிந்து கொண்டேன். ஆனால் படம் நிச்சயமாக மேலே சொன்ன கதை மட்டுமே இல்லை.

இதில் வரும் நீல நிறப் பெட்டி மற்றும் சாவியை மட்டும் வைத்துக் கொண்டே இதை ஒரு அறிவியல் புனைக் கதையாவும் புரிந்து கொள்ளலாம். பேக் டு த ஃபியூச்சர், ஜூமாஞ்சி மாதிரியான இணை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் படமாகவும் முல்ஹாலண்ட் ட்ரைவ் திரைப்படப்படத்தைப் பார்க்கலாம். காலங்களைக் கடந்து செல்லப் பயன்படும் காலயந்திரம் போல அந்த நீலப்பெட்டியையும் சாவியையும் புரிந்து கொள்ளலாம்.  முதல் காட்சியிலிருந்து அந்த நீலப்பெட்டியின் சாவி கைக்கு கிடைக்கும் வரை ரீட்டாவிற்கும் இயக்குனருக்கும் ஏராளமான துன்பங்கள் நிகழ்கின்றன. பெட்டிக்கு மட்டுமே எல்லாம் சரியாக நிகழ்கின்றன. ரீட்டா சாவியால் அக் காலயந்திரத்தை திறக்கும் முன்னரே பெட்டி மறைந்து போகிறாள்.  திறந்ததும் ரீட்டாவும் மறைந்து போகிறாள். ரீட்டா - கமீலா என்கிற புகழ்பெற்ற நடிகையின் சமகாலக் கொண்டாட்ட வாழ்விற்குள் வந்துவிடுகிறாள். அங்கு எல்லாமும் சரியாக இருக்கிறது. ஆனால் பெட்டி என்கிற டயானாவின் வாழ்வு துயரமாக இருக்கிறது.

இப்படியாக ஏராளமானக் கதைகளை காண்போரே உருவாக்கிக் கொள்ளும் சாத்தியங்கள் கொண்ட படமிது. இதே போல பன்முக சாத்தியம் கொண்ட ’இன்செப்ஷன்’ மாதிரியான  திரைக்கதைகள் வந்தாலும் முல்ஹாலண்ட் ட்ரைவில் இருக்கும் விரிவும் ஆழமும் புதிருக்கான பின்னணி மன உளவியலும்  தனித் தன்மை கொண்டவை. கனவுகள் குறித்து ஆரோய்வோருக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு ஆய்வுக் களமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் இன்னும் தெளிவடையாத குழப்பங்கள் ஏராளம் உண்டுதான் என்றாலும் புகைமூட்டமாக இருந்த மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.

அடுத்த முறை வழக்கம்போல் தனியாகப் பார்ப்பதற்குப் பதில்  கொஞ்சம் விவரமான நபருடன் கொண்டாட்ட மனநிலையில் இந்தப் படத்தைப் பார்த்தால் இன்னும் தெளிவடையாத கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.



Thursday, August 24, 2017

பல்ப் 3. பல்ப்பின் இலக்கியக் காதல்

”நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.”  

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?”

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி, கெறங்குற”

 “இல்லடா, நீ வா நேர்ல பேசலாம்”  

விக்ரம் கைப் பேசியைத் துண்டித்தான்.

லேனா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். விக்ரமைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் வெகுசன எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், புகழ் பெற்றிருக்கும் விக்ரமின் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். லேனா விக்ரமின் ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். அவன் இந்தப் பேட்டியை வாசித்திருந்தாலும் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என அந்த மாத பெளர்ணமி இரவில் இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டான். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அவன் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே லேனாவை கண்டபடி வசைந்தும் அவனைப் புகழ்ந்துமாய் எழுதப்பட்டிருந்தன. விக்ரமே வியந்து போனான். திடீரென அவனுக்கு இக்கடிதங்களோடு லேனாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அழைத்து அத்தனைக் கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி, காரில் வைக்கச் சொன்னான். அசோக்கிடம் கேட்டு அவளின் முகவரியைத் தேடிப் பிடித்தான். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தான்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். லேனாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் லேனாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி லேனா ஹாலிற்கு வந்தாள். யாருங்க? எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான். சந்தன நிற லேனா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான விக்ரம்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். அவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாகச் சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தான்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டியக் கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான். வரேன்”

விக்ரம் சொன்னதை அவள் நம்பவில்லை. அவன் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள். எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறியவன் கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தான். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “ எனக் கேட்டாள்

ஒரு கை பிடிங்க” என்றான்.

லேனா தன் இடத்தில் இருந்து அசையாமல், மாலா எனக் குரல் கொடுத்தாள்.

உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். அந்த மூட்டையை இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டனர்.
“என்னங்க இதெல்லாம்?” எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்துக் காண்பித்தான்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி, இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே அவள் பதிலை எதிர்பாராமல் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறினான். லேனா கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு அந்தக் கடிதங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் காரில் அமர்ந்துகொண்டு கண்ணாடியைச் சரி செய்து அவளைப் பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினான்.

அந்த சந்திப்பிற்குப் பிறகு லேனாவை விக்ரம் மறந்து போனான்.எழுத்தில் கவனத்தைத் திருப்பினான்.  ஆனால் அசோக்கின் கொதிப்புதான் அடங்கவில்லை. இலக்கிய எழுத்து என்பது வெறும் ஜோடனை அல்லது பாவனை மட்டும்தான் என அசோக் ஆழமாய் நம்பினான். மேலும் ஒரு எழுத்திற்கு இலக்கிய அந்தஸ்தைக் கொடுப்பது எது என்பது குறித்தும் அவனிற்குள் கேள்விகள் இருந்தன. அதிக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் எளிய மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே மாத நாவலை மலிவான தாளில் விலை குறைவாய் கொடுக்கிறோம் அதற்காக அது தரமில்லாததாகிவிடுமா என்றெல்லாம் இரவு குடி சந்திப்புகளில் விக்ரமுடன் மருகிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தான். விக்ரமின் இரண்டு நாவல்களைத் தொகுத்து ஒரே புத்தகமாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு கொண்டு வந்தான். அந்த வருட புத்தகக் கண்காட்சியிலும் ஸ்டால் போட முடிவெடுத்தான். இப்படித்தான் பெளர்ணமி இரவில் பதிப்பகம் உருவானது. அட்டையின் பின்பக்கத்தில் பிரபலங்களின் ப்ளர்ப் புகழாரங்கள் தாங்கிய அடுத்தடுத்த ஐம்பது புத்தகங்கள் தயாராகின. புத்தகக் கண்காட்சி துவங்கியதும் தினமும் மாலையில் விக்ரமை ஸ்டாலுக்கு வரச் சொன்னான். விக்ரமும் சிரத்தையாய் கண்காட்சிக்கு சென்று வந்தான். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் திக்குமுக்காடினான். அசோக்கும் உற்சாகத்தில் மிதந்தான். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான்.

“சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான், நம் புத்தகங்கள்தாம்” என்ற அவன் உற்சாககுரலை விக்ரமால் நம்பக் கூட முடியவில்லை.

கூட்டம் குறைவாக இருந்த ஒரு மாலையில் கண்காட்சியைச் சுற்றிய வரப் போனபோது லேனாவைப் பார்த்தான். ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் லேனா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளைப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தான். பேச்சினூடாய் விக்ரமை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் அவனையும் வரவேற்றார். லேனாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு விக்ரமைப் பிடிக்காதது ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானான். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, லேனா தன் உரையை முடித்த போது கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து, நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை விக்ரம் சொன்னான்.

கூட்டத்தில் ஒரு குரல்ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. 

அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. நேராக லேனாவிடம் போய், ”நன்றாகப் பேசினீர்கள்” என்றான்.

புன்னகைத்தாள்.

“இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது” என கிசுகிசுத்து விட்டு வெளியேறினான்.

 டுத்த நாள் காலை விக்ரமிற்கு சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தான். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி அவன் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் விக்ரம் நிலைதடுமாறி கீழே விழுந்தான். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த விக்ரமை மார்பில் மிதித்தனர். விக்ரமின் அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். வெளியில் காரைத் துடைத்துக் கொண்டிருந்த ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். வேலையில் கவனமாக இருந்த பாலன், இவர்கள் மூவரும் உள்ளே சென்றதையோ அங்கு நடந்த களேபரத்தையோ கவனிக்கவில்லை. சுதாரித்துக் கொண்டவர் உள்ளே ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்குத் தொலைபேசினார். அசோக்கிடம் விவரத்தைச் சொல்லி விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தில் அசோக்கும் போலிசும் வந்து சேர்ந்தனர். போலீசார் மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். விக்ரமின் அம்மா ரத்தம் வழிந்த அவன் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. விக்ரம் எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தான். பதறிய அவன் அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னான். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. விக்ரம் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு அசோக்குடன் கிளம்பினான். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன்.

ஸ்டேசனில் ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. விக்ரம் குழம்பினான். கான்ஸ்டபிளபிடம் அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கேட்டான்,

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?”

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது

விக்ரம் குழப்பமாய் பார்த்தான்

ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன்.

”நீங்களாம்?” என மற்ற இருவரையும் பார்த்துக் கேட்ட விக்ரமை நக்கலாய் பார்த்துவிட்டு

”நான் தான் காட்டுச்சித்தன்” என்றான் ஒருவன். இன்னொருவன் முறைத்துக் கொண்டே ”மித்ராங்கி” என்றான்.

விக்ரமிற்கு மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றான்

“நீ லேனாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” காட்டுச்சித்தன் கத்தினான்

புரிந்து கொண்ட விக்ரம் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றான்.
மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனான். அசோக்கிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் லேனா” என்றான்.

அப்ப லேனா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுங்க என்றான் அசோக். 

“கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா” என சொல்லிவிட்டு விக்ரம் வெளியேறினான்.

எஸ்.ஐ தொலைபேசியில் ”ரைட்டர் லேனாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே” என சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. அவனுக்கு லேனாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது பாலனைக் கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னான். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னான். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் விக்ரம் “

“ஆமாங்க”

“லேனா பேசுறேன் “

அமைதியாக இருந்தான்.

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போனா அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

”…..”

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி விக்ரம், இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

விக்ரம் அவளை மேலும் கோபப்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். உடனே அசோக்கிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னான். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் முன் அனுபவம் இருந்திருக்கும்போல, எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் காலை விக்ரமிற்கு அவளோடு மேலும் விளையாடிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது. மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு லேனா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தான். லேனாதான் திறந்தாள். மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள். அவளின் இரவு உடை உடல், அவனையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் போய் அமர்ந்தான்.

மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தான்

“போலிஸ் ஸ்டேசனுக்கு உங்களை வரவழைச்சதுக்கு சாரிங்க, பப்ளிஷர் அசோக் உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது”

“அவர்தான் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பாவே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா, இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தான்

அடுத்தடுத்த தினங்களில் இருவரும் நெருக்கமாகி விட்டனர். தினம் பேசிக் கொண்டனர். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என இருவரும் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. விக்ரம் மீது லேனாவிற்கு ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. பல்ப் எழுதுகிறன் இவ்வளவு படித்திருப்பான் என அவளால் நம்பவே முடியவில்லை. லேனாவின் உடலை மட்டுமே ஆரம்பத்தில் கவனித்த விக்ரம் மெல்ல அவளின் குணத்தையும் கவனிக்க ஆரம்பித்தான். எல்லா வகையிலும் அவள் மிகச் சிறந்தவள் என அவனிற்குத் தோன்ற ஆரம்பித்தது. லேனாவிற்கு விக்ரமை விட இரண்டு வயது அதிகம். திருமணமும் டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். லேனாவுடைய முதல் நாவல் 
நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. லேனாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி விருதும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் அவள் கொடுத்த பேட்டி வாயிலாக விக்ரம் அறிமுகம் நிகழ்ந்தது. இப்படியே போய்கொண்டிருந்த நட்பு ஒரு மாலை அறுந்தது.

 அன்று மாலை ஏழு மணிக்கு லேனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க விக்ரம்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க?”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் விக்ரம் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினான். கதவைத் திறந்த லேனா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் அவனிற்கு சிலிர்க்கும். உள்ளே நுழைவதற்கு முன்பே அவன் மீது சரிந்தாள். விக்ரம் அப்படியே அவளை அள்ளிக் கொண்டான். இருவரும் ஆழமான காதலில் விழுந்தார்கள். நிறையப் பயணித்தார்கள். குடித்தார்கள். கொண்டாடினார்கள். ஆனால் அவர்களது வேலைகளில் கவனமாகவும் இருந்தார்கள்.

 “சார் வந்துட்டோம்” பாலனின் குரல் அவன் நினைவுகளைத் திருப்பக் கொண்டுவந்தது.

நேற்று லேனா போனை வைத்த உடனேயே மனம் அவளோடு போய் ஒட்டிக் கொண்டது. சில மாதங்களாக இருவரும் சந்தித்திருக்கவில்லை. விடிந்ததும் பாலனை எழுப்பி ஊட்டி போவதாகச் சொன்னான். வண்டியை மெக்கானிக்கிடம் எடுத்துக் கொண்டு போய் சரிபார்த்துவிட்டு வரச் சொன்னான். எல்லாம் முடிந்து காலை பத்து மணிக்கு கிளம்பினார்கள். கோவை வந்து சேர மாலையாகிவிட்டது. கோவையைத் தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு பாலன் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தவன் மெதுவாகப் போகச் சொன்னான். லேனா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. லேனா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு  நாவலை இருவருமாய்த்தான் எடிட் செய்தனர். 

கார் மெதுவாக வந்து சேர்ந்தது. ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கிய விக்ரம் மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டான். லேனாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனான்.

-    மேலும்



Featured Post

test

 test