Tuesday, December 9, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 1

சிக்கவீர ராஜேந்திரனை இவ்வளவு தாமதமாக வாசித்ததை எண்ணி வருந்தினேன். குடகுப் பகுதிக்கு செல்வதற்கு முன்னால் இந்நாவலை வாசித்திருந்தால் அந்தப் பிரதேசங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மடிகேரியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களையும் தேடிப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். போகட்டும். அடுத்த பயணத்திலாவது குடகுப் பகுதியை முழுமையாய் பார்க்க வேண்டும். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை குறிப்பாய் மடிகேரி, நால்கு நாடு மற்றும் அப்பங்குள அரண்மனைகளை பார்த்து வர வேண்டும். 

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் ஸ்ரீநிவாச என்கிற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் 1956 இல் கன்னடத்தில் எழுதப்பட்டது. வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்நாவலைச் சொல்லலாம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் நான்லீனியர், மெட்டா போன்ற உத்திகளை மிக அசாதரணமாக நாவலில் கையாண்டிருக்கிறார். நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், மிகச் சாதாரணமான பேச்சு மொழியும், வாசிப்பின்பத்தின் உச்சிக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நாவலின் சரளமான தமிழாக்கம் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்கிற கவனமே ஏற்படாதவாறு அத்தனை நேர்த்தியாக இருந்தது. 
ஹேமா ஆனந்ததீர்த்தன் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஹேமா ஆனந்ததீர்த்தன் பலவருடங்களுக்கு முன்பு மாத நாவல்களை மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு சில நாவல்களை வாசித்த நினைவும் இருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனை மொழிபெயர்த்ததின் மூலம் அவரின் தமிழிலக்கியப் பங்களிப்பு மிக முக்கியமானதாகிறது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலுக்காக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஞானபீட விருதைப் பெற்றார். கன்னடத்தின் ஆஸ்தியாகக் கருதப்படும் மாஸ்தி குறித்து விக்கியில் சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்தேன். மொத்தம் 123 நூல்களை கன்னடத்திலும் 17 நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தன்னுடைய 95 ஆவது வயதில் பிறந்த தினத்தன்றே இயற்கை எய்தியிருக்கிறார் (ஜூன் 06,1891 – ஜூன் 06 1986) புதுக்கன்னடச் சிறுகதை வடிவம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்காகவே காத்துக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.

குடகின் கடைசிக் குறுநில மன்னனான சிக்கவீர ராஜேந்திரனின் வாழ்வைத் (பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்) தொகுத்து எழுதப்பட்ட நாவல்தான் இது. இந்நாவலில் ஆசிரியரும் கதாபாத்திரமாக வருகிறார். சிக்கவீர ராஜேந்திரனின் மகளைச் சந்தித்தது, அவள் மூலமாய் ஆவணங்களைப் பெற்றது, மொத்தமாய் திரட்டிய தகவல்களைக் கொண்டு இதை ஒரு நாவலாய் எழுத ஆரம்பிப்பது என நாவல் எழுதப்பட்ட கதையை நாவலுக்கு உள்ளேயே கொண்டுவந்திருக்கிறார். மேலும் கதை சொல்லப்படும் முறை மரபான ஆரம்பம் முதல் இறுதி வரையாய் இல்லாது, பிரச்சினைகள் துவங்கும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பித்து இடை இடையே மூன்று தலைமுறை கதையைச் சொல்லி, பல புதிர் சுவாரசியங்களை உள்நுழைத்து, பின்பு அவை ஒவ்வொன்றாய் அவிழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் சம காலத்திலும் புத்தம் புது வடிவமாகப் போற்றப்படுவது. இதை அறுபது வருடங்களுக்கு முன்பு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பயன்படுத்தியிருப்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

தென் கர்நாடகத்தின் மிகச் செழிப்பான பகுதியான குடகு காவிரியின் பிறப்பிடம். காவிரி மட்டுமில்லாது பத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சிற்றாறுகள் பாயும் மலைப் பகுதி. இங்கு வசிப்பவர்கள் குடகர்கள் எனப்பட்டனர். ஆனாலும் எந்த ஒரு காலத்திலும் இப்பகுதியை குடகர்கள் அரசாண்டதாக வரலாறு கிடையாது. குடகர்கள் அரச பதவியை வலிந்தே ஏற்காமல் இருந்ததாக நாவலில் வரும் மந்திரியான போபண்ணா கதாபாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக செழிப்பான பகுதியான குடகு, பக்கத்து அரசுகளான மலையாளம், மைசூர், மங்களூர் போன்றவற்றின் பொறாமையைப் பெற்றிருந்ததாலும் மலைக் காடென்பதால் குடகை வெற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. கதம்ப, கங்க, சோழ, சாளுக்கிய, ஹேய்சால வம்சங்கள் ஆண்டபிறகு கேரி அரச வம்சம் இருநூறு வருடங்கள் குடகை ஆட்சி புரிந்தது. கடைசியாக உடையார்களின் அரசாட்சி இருந்தது. அதன் கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன் குடகுப் பகுதி ஆங்கிலேயர் வசம் போக காரணமாக இருந்தான். அந்த சம்பவங்களைத்தான் இந்நாவல் பேசுகிறது. 

வரலாற்று நாவல்கள் இதுவரை நம் மீது படிய வைத்திருக்கும் அத்தனை மரபு மிகைகளையும் இந்நாவல் அடித்து நொறுக்கியிருக்கிறது. சதா போகத்தில் திளைக்கும் முரட்டுக் குடிகார அரசனை பார்க்க மிக நெருக்கமாக இருந்தது. நம்முடைய பெரும்பாலான வரலாற்று நாவல்கள் மிகையான ஜோடனைகள் நிறைந்தவை. அதிகாரச் சார்பு கொண்டவை. மன்னனை வீரதீரபராக்கிரம் பொருந்திய சாகச நாயகனாக மட்டுமே நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தவை. தமிழில் இந்தப் போக்கு அலுப்பூட்டும் அளவிற்கு எழுதப்பட்டு சமகாலத்தில் மட்டுமல்லாது என்றென்றைக்கும் போற்றப்படும் தமிழ் அடையாளங்களாக உருவாக்கப்பட்டன.  

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும் நாவல்கள் மட்டுமே இந்த அயற்சியூட்டும் வரலாற்று நாவல் பொய்மைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றின. ஆனாலும் இவ்விரண்டு நாவல்களும் சிக்கவீர ராஜேந்திரன் நாவல் தந்த களிப்பைத் தரவில்லை. வரலாற்றுப் புனைவை இப்படி நேரடியான மக்கள் மொழியில் எழுத முடியும் அதிலேயும் மன்னன் என்பவன் மக்களில் ஒருவன் தான். அவனும் இன்னொரு மனிதனைப் போலவேதான் இருப்பான் - பேசுவான் - நடந்து கொள்வான். சதா கெட்டவார்த்தைகளை அள்ளி வீசுவான் என்பதெல்லாம் நமக்குப்/ எனக்குப் புதிதுதான். 

தொட்ட வீர ராஜேந்திரன் இந்த வம்சத்தின் மிகச் சிறந்த அரசனாகப் போற்றப்பட்டான். குடகு மக்களின் விருப்பத்தையும் அன்பையும் பெற்ற ஒரே அரசனாக தொட்டவீர ராஜேந்திரனே கருதப்பட்டான். சூழ்ச்சியால் அவனிற்குப் பிறகு ஆட்சிக்கு வரும் தம்பி லிங்கராஜன் மற்றும் லிங்கராஜனின் மகனாகிய சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இம்மூன்று தலைமுறைக் காலத்தின் வரலாறு சுருக்கமாகவும் சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சி குறித்து விலாவரியாகவும் நாவலில் பேசப்படுகிறது.

வீழும் காலம் என்பது அதிகார வாழ்வில் மிக முக்கியமான பகுதி. ஒரு வம்சம் வீழ்ச்சியடையும்போது மக்கள் உடனடியாய் அந்த வீழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஆர்வமடைவார்கள். அதிகாரம் தன் தரைத்தளத்திற்குக் கீழே சாமான்யர்களால் நெருங்க முடியாத ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இரகசியங்களின் மீதான விருப்பம் நம்மை கதைகளை எழுதவும் வாசிக்கவும் தூண்டுகிறது. அப்படித்தான் பலப்பல வரலாற்றுப் புனைவுகள் கதைகளாக எழுதப்பட்டன. மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் இன்னொரு நாவலான ”சென்னப்பசவ நாயக” நாவலும் ஷிமோகா பகுதியின் கடைசி நாயக்க மன்னின் வீழ்ச்சியைத்தான் பேசுகிறது. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.கண்டிப்பாக சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். மாஸ்தி தன் சிறுகதைகளுக்காகத்தான் அதிகம் பேசப்பட்டார்.

-    
-  மேலும்


No comments:

Featured Post

test

 test