Tuesday, December 30, 2014

ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்


எனக்கு திகில் படங்களைப் பிடிக்காது. இன்றளவும் ஏகத்திற்கும் வெளிவந்து கொண்டிருக்கும் ஹாலிவுட் பேய் படங்கள் இந்த ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம். பதின்ம வயதில் இங்க்லீஷ் படங்கள் என்றாலே பேய்படங்கள் தான். எங்கள் நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஆங்கிலப் பேய் படங்களின் பெரும் ரசிகர். மாதத்திற்கு ஒரு பேய்படம் பார்த்துவிட்டு வந்து எங்களுக்குப் படு திகிலாய் கதை சொல்லிக் கொண்டிருப்பார். அழகி திரைப்படத்தில் எம்ஜிஆர் படக் கதை சொல்லும் ஆசிரியரை நினைவிருக்கிறதா? இவரும் கிட்டத்தட்ட அதே மிகை உணர்வோடுதான் கதையளப்பார். சில்வர் புல்லட், ஈவில் டெட் -ஒன், டூ ,த்ரீ போன்ற படங்கள் மீதெல்லாம் உயிரையே வைத்திருந்தோம். சிரமப்பட்டு காசு சேர்த்து டெக் மற்றும் கேசட்டுகளை தேடிப் பிடித்து கலர் டிவி இருக்கும் நண்பன் வீட்டில், எல்லோரும் தூங்கின நள்ளிரவில், பார்த்து பயந்து, தூங்கிக் கொண்டிருக்கும் அக்கம் பக்கத்தாரை, குறிப்பாக பதின்மப் பெண்களை விழிக்கச் செய்ய வேண்டுமென்றே அலறிய காலமும் உண்டு. பின்பு தொடர்ச்சியாய் பேய் படங்களாய் பார்த்து அலுத்து அந்த வகைமைப் படங்களின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வந்தது.

சமீபமாய் இரண்டு பேய் படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஸ்வீடிஷ் திரைப்படமான Let the Right one In (2008) ஐ ஒரு பிசாசின் கதை எனத் தெரியாமலேயேதான் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கி இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். பனி விரவிய இருள் பாலத்திற்கு அடியில் ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் சிறுமி, அங்கு அசமஞ்சமாய் வரும் ஒரு வழிப்போக்கரை அருகில் அழைத்து, அவர் மீது தாவி கழுத்தை உறிஞ்சும் காட்சியில் கிட்டத்தட்ட உறைந்தே போனேன். பேய் கதைகளை விட ரத்த காட்டேரிகளின் கதைகள் கூடுதல் திகிலானவை.



ஹாலிவுட்டில் Vampire திரைப்படங்கள்தாம் மலிவானவை. பயமுறுத்துகிறோம் என்கிற போர்வையில் பெரும்பாலனவை அருவருப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. மாறாய் ஜெர்மன் மொழியில் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கின் இயக்கத்தில் வெளிவந்த Nosferatu the Vampyre திரைப்படம் நம்மிடையே ரத்தக் காட்டேரி தர வேண்டிய அசலான பயத்தை ஏற்படுத்தியது. ரத்தக் காட்டேரியாகவே வாழ்ந்திருந்த க்ளாஸ் கின்ஸ்கியை மறக்க முடியுமா? கிட்டத்தட்ட Let the Right one In - ஐயும் ஹெர்சாக்கின் திரைப்படத்திற்கு அருகாமையில் வைத்துப் பேசலாம். Vampire ஆக நடித்திருக்கும் பனிரெண்டு வயது சிறுமி தன் அசாதாரண நடிப்பால் நம் கண்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப் போடுகிறாள். காட்சிகளின் மேலடுக்கில் இத்திரைப்படம் திகில் படமாகவும் அடிநாதமாய் அற்புதமான இளம் காதல் கதையாகவும் பிணைந்திருப்பதால் நம்மிடயே ஆழமான தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது.

Let the Right one In உலகம் முழுக்க தரப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மலைப்பூட்டும் அளவிற்கு இத்திரைப்படம் குவித்திருக்கும் விருதுகளின் மூலம்தான் இப்படத்தைக் கண்டடைந்தேன். இது தந்த திகைப்பும் பரவசமும் விநோதமாக இருந்தது. சென்ற மாதமே பார்த்திருந்தாலும் இன்று வரை அதன் தாக்கம் நீங்கவில்லை. உடல் சோர்ந்திருந்த நேற்றிரவும் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தமுடியாமல் முழுப் படத்தையும் பார்த்து விட்டே தூங்கினேன்.

இத்திரைப்படம்  Tomas Alfredson என்கிற எழுத்தாளரின் இதே பெயரில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நாவலை ஒட்டி எடுக்கப்பட்டது. எழுத்தாளரே திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரத்தின் புற நகர் பகுதியான ப்ளாக்பெர்க்கில் இத்திரைப்படத்தின் சம்பவங்கள் நிகழ்கின்றன. உறைபனியும் இரவும் மெளனமான கட்டிடங்களும் இந்த திகில் படத்திற்கு அசாதரணமான பின்புலத்தைத் தந்திருக்கின்றன.

ஆஸ்கர் என்கிற பனிரெண்டு வயது சிறுவனுக்கும் அவன் பக்கத்து அடுக்ககத்திற்கு புதிதாய் குடிவரும் Eli என்கிற அவன் வயதை ஒட்டிய சிறுமிக்கும் ஏற்படும் நட்பு மெல்ல ஆழமான உறவிற்கு நகர்கிறது. அவள் மனித ரத்தத்தின் மூலம் உயிர் வாழும் ரத்தக் காட்டேரி என ஆஸ்கர் அறிந்துகொண்ட பின்பும் அவர்களிடையே ஏற்பட்ட பிணைப்பு விலகுவதில்லை. இதற்கு மேல் இத்திரைப்படத்தின் கதையை சொல்வது உசிதமல்ல. பரபரப்பும் திகிலும் இணைந்த பரவசமான அனுபவத்தை நிச்சயம் இத்திரைப்படம் தரும். ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, எடிட்டிங், காஸ்டிங் என எல்லா பிரிவுகளிலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ரத்தக் காட்டேரியினால் கடிபட்டு உயிர்பிழைத்தோர் தன்னளவில் ரத்தக் காட்டேரியாய் மாறிவிடும் வழமைகள் இத்திரைப்படத்திலும் தொடர்கிறதுதான் என்றாலும் அதை எவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள். ரத்தக் காட்டேரியை அடையாளம் கண்டுகொள்ளும் ஏழெட்டுப் பூனைகள் சிலிர்த்துக் கொண்டு ரத்தக் காட்டேரியால் கடிபட்டுப் பிழைத்து வரும் தம் எஜமானியின் மீது பாயும் காட்சி சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.



இரத்த வாடை அடிக்கும் Eli யின் அறை, அவள் பகலில் வெளியே வராதது, பாத்டப்பில் இருள் மூடிக்குள் சுருண்டு தூங்குவது, மரத்தின் மீதும் கட்டிடங்களின் மீதும் பரபரவென ஏறுவது, காற்றில் பறப்பது, ஆட்களின் கழுத்தைக் குறிபார்த்துக் கடிப்பது போன்ற காட்டேரியின் புனைவியல்புகளை முடிந்தவரை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கண்களில் ஆழமான அமைதியும் பேரழகும் கொண்ட ELI என்கிற பதின்மப் பெண் ஒரு பேயைப் பார்க்கிறோம் என்ற எண்ணமே எழாதவாறு நம்மைக் கடைசிவரைப் பார்த்துக் கொள்கிறாள்.

ஆஸ்கரை எப்போதும் வம்பிழுக்கும் சக மாணவர்களின் இறுதிக் காட்சி ரத்த சகதியைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அவள் ஆஸ்கர் மீது வைத்திருக்கும் ஆழமான காதலை நியாயப்படுத்தவும் அந்தக் காட்சி தேவையானதாக இருந்தது. ஆட்களைக் கொன்று அவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு இரத்தம் உறிஞ்சும் காட்சிகள் எல்லை மீறாமல் அழகியலோடு படமாக்கப் பட்டிருந்தன. இவை போன்றவையே இத்திரைப்படத்தை மற்ற படங்களிலிருந்து தனித்து அடையாளப்படுத்துகிறது.

0

தமிழ்ப் பிசாசு துபாயில் வெளியாகவில்லை. இணையப் பக்கங்களில் பிசாசைப் பார்த்து மிரண்ட நண்பர்களின் நிலைத் தகவல்கள் மற்றும் உடனுக்குடன் எழுதப்பட்ட ஏராளமான சினிமாக் கட்டுரைகள் ஆகியவை நல்ல பிரின்டிற்காகக் கூட காத்திருக்க விடாமல் பிசாசைத் திருடிப் பார்க்க வைத்தன. மிஷ்கின் மீது எனக்கு சாய்வுகள் உண்டு என்பதால் இத்திரைப்படம் பார்த்து முடித்த உடன் எழுந்த உணர்வுகளை எழுதவில்லை. ஆனால் வெகுசன ரீதியிலான இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மிஷ்கின் நிச்சயம் இந்த வெற்றிக்குத் தகுதியான ஆள்தான்.

பிசாசு படம் துவங்குவதற்கு முன்பு திரைப்படத்திற்கான பின்புலத் தகவல்களுக்காக மிஷ்கின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் போய் அங்கிருக்கும் மனோதத்துவ பேராசியரோடு தங்கி கலந்து உரையாடியதாக அறிந்திருந்தேன். மேலும் பாலா வின் தயாரிப்பு என்பதால் மிஷ்கினுக்கு பொருளாதார ரீதியில் நிறைய சுதந்திரம் கிடைக்கும். எனவே வெகுசன / வெற்றி நிர்பந்தங்கள் இல்லாமல் குப்ரிக்கின் The Shining போன்ற சைக்காலஜிகல் த்ரில்லர் படமாக பிசாசு இருக்கும் என நானாகவே நினைத்துக் கொண்டு படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். பிசாசு என் எதிர்பார்ப்பின் அருகாமைக்குக் கூடப் போகவில்லை. ஜெயமாலினி காலத்து கவர்ச்சிப் பிசாசை மிஷ்கின் தன் அழகியல் சட்டகத்திற்குள் கொண்டு வந்து சமகால அழகுப் பிசாசாக மாற்றிவிட்டிருக்கிறார். இது எல்லாத் தரப்பையும் பூர்த்தி செய்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனெனில்  மிஷ்கின்
பிசாசு பற்றிய பழங் கதைகளை  பிசகாமல் அப்படியே தந்திருப்பதால் வழக்கமான பழக்கத்தையே இயல்பாகக் கொண்டிருக்கும் வெகுசன மன உணர்வுகள் இத்திரைப்படத்தோடு சுலபமாய் ஒன்றிப் போயின. 

மிஷ்கினின் திரை மொழி நாம் அறிந்ததுதான். தாழ் காமிராக் கோணங்கள், விலாவரியான மிட்ஷாட், அவர் படங்களில் மட்டுமே வரும் ஆட்டோக்காரர்கள், சாலையோர மனிதர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் அவர்களின் பிரத்யேகமான அவசர வசன உச்சரிப்பு, ஏற்கனவே நாம் அறிந்திருந்த நடிகர்களின் இன்னொரு பரிமாணம், அவர்களின் நாடகீய பாவணைகள், உருக வைக்கும் பின்னணி இசை, இரவு, சுரங்க நடை பாதை, சென்னை மத்யமர் குடியிருப்புப் பகுதியின் வீதிகள் போன்ற அச்சுப் பிசகாத மிஷ்கின் பாணிப் படத்தில் புதிதாய் பேய் வந்திருக்கிறது. இந்தப் பேய்தான் இதுநாள் வரை மிஷ்கினை கடுமையாக விமர்சித்தவர்களின் வாயை மூடவைத்திருக்கிறது என்பது சற்று அபத்தமான நிதர்சனம்தான்.

பேய் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது அடிப்படை. பிசாசே லாஜிக்கை மீறின வடிவம்தானே ஆக பிசாசு படத்திற்குள் லாஜிக்கையெல்லாம் கொண்டு வர மெனக்கெடவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தையும் சற்று புத்திசாலித்தனமான திருப்பத்தையும் கதையாக எடுத்துக் கொண்டு சமீபமாய் தமிழ் மனங்களை ஆக்ரமித்திருக்கும் பேய் பற்றையும் தனக்கு நன்றாகக் கைவரும் திரைமொழியில் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். சற்று யோசித்தால் ஒருவேளை மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் தந்த மன ரீதியிலான உளைச்சல்களால் கடுப்பாகி தமிழ் ரசிகர்களான உங்களுக்கு எல்லாம் இவ்வளவு போதும் என பிசாசை எடுத்திருக்கிறாரோ என்றெல்லாம் படம் பார்த்து முடிந்ததும் தோன்றியது.

மிஷ்கின் தன் தனித்துவமான திரை மொழிக்காக சித்திரம் பேசுதடியிலிருந்து பிசாசு வரை பேசப்படும் இயக்குனராக இருக்கிறார். இனி அவர் அழுத்தமான திரைக்கதைகளை நோக்கி நகர வேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். பிசாசை ஒரு உற்சாக டானிக்காக எடுத்துக் கொண்டு மிஷ்கின் பிராந்தியம் சார்ந்த, குறிப்பாய் தமிழ் சூழல் சார்ந்த கதைகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
0

இந்த ஃபேஸ்புக் காலத்தில் தமிழ் அறிவு சூழலையும் தமிழ் சினிமா எனும் பிசாசு பிடித்திருப்பதை  மிகுந்த எரிச்சலோடு அவதானித்து வருகிறேன். தமிழின் முக்கிய அறிவுஜீவிகள் என என்னால் கருதப்பட்ட பலரும் வெளிவரும் அத்தனை மொக்கை தமிழ் சினிமாக்களையும் பார்த்து ஃபேஸ்புக்கில் படுபயங்கரமான விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. அதோடு நில்லாமல் சற்று சுமாரான படங்களையும் கண்டமேனிக்குப் புகழ்ந்து தள்ளுவதையும் பார்த்து -  திகில் படங்களைப் பார்த்தே திகிலடையாத நான்- கடும் பீதியடைகிறேன்.  தமிழின் அறிவு ஜீவிகளை பிடித்து உலுக்குவது ஃபேஸ்புக்கின் லைக் பேயா? அல்லது தமிழ்சினிமா எனும் பிசாசா? எனப் பிரித்தறியக் கடினமாக உள்ளது. இந்தப் பேயால் அந்தப் பிசாசு உயிர்தெழுகிறதா? அல்லது நிஜமாகவே இவர்களைத் தமிழ் சினிமா பிசாசுதான் பிடித்ததா? என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. மிஷ்கினுக்கு வைத்த வேண்டுகோளைப் போலவே தமிழ் அறிவு ஜீவிகளுக்கும் தமிழ் சினிமா எனும் பிசாசைக் கைவிட்டு வரும் புத்தாண்டிலாவது மனம் திரும்புங்கள் எனக் கேட்டுக் கொள்வோம்.

0


Tuesday, December 16, 2014

இயற்கையின் சமீபம்

Alamar (2009)  -  திரைப்படத்தை முன் வைத்து :


ஏழு வயதில் கடல் பார்த்த பிரம்மிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு  கோடை விடுமுறைக்குப் புதுச்சேரி சித்தப்பா வீட்டிற்குப் போயிருந்தபோதுதான் முதன் முறையாய் கடலைப் பார்த்தேன். புதுவைக் கடல் சீற்றம் மிகுந்தது. காந்தி சிலைக்கு சமீபமாய் அப்போது ஓரளவிற்கு மணற்திட்டிருந்தது. கடலில் பயமில்லாமல் இறங்கி, சீறிவரும் அலைகளை பிரம்மிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என் உயரத்திற்கு வரும் அலைகளை நெருங்கவோ, குறைவாய் இருந்த மணற்திட்டில் கால் பதிந்து அலைநுரையை கையில் அள்ளவோ பயமில்லாமல் இருந்தது. கிராமத்தில் வளர்ந்ததால் ஐந்து வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன்.  ஆறு, குளம், ஏரி குட்டை என எங்கே நீரைப் பார்த்தாலும்  நிஜாரைக் கழட்டி எறிந்துவிட்டு குதிக்கும் வழக்கமிருந்தது. விடுமுறை நாட்களில் நாள் முழுக்க நீரில் கிடந்து செம்பட்டை ஏறிய தலைமுடியோடு திரிந்த பால்யம் என்னுடையது. கடல் சிறுவர்களுக்கு எவ்வளவு பெரிய பரவசத்தைத் தரும் என்பதை நானாகவும் என் குழந்தைகளின் மூலமும் அறிந்திருக்கிறேன். Alamar என்கிற இந்த மெக்சிகன் திரைப்படம் ஒரு சிறுவனின் கடல் அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது. அந்த அனுபவங்கள் வழக்கமாய் யாருக்கும் கிடைக்காத அபூர்வ அனுபவமாக அச்சிறுவனுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களான நமக்குமாய் அமைகிறது.

தாயுடன் இத்தாலியில் வசிக்கும் சிறுவன் நேதன், விடுமுறைக்குத் தன் தந்தையும் தாத்தாவும் வசிக்கும் மெக்சிகோவின் Banco Chinchorro கடலுக்குப் போய் வருவதுதான் கதை. Banco Chinchorro வைக் கடல் என்பதை விட பவழத் தீவு (Atoll) எனக் குறிப்பிடுவது பொருத்தமானது. மோதிர வடிவில் இருக்கும் இக்கடற்பரப்பு காயலைச்( lagoon) சுற்றி இருக்கும். ஏராளமான நீர்தாவரங்களையும் இயற்கையின் பேரெழிலையும் கொண்ட பிரதேசம். இந்தப் பகுதியின் மொத்த அழகையும் இத்திரைப்படம் தன்னில் பொதிந்து வைத்திருக்கிறது. அத்துடன் மூன்று தலைமுறை ஆண்களின் மகத்தான அன்பையும் மிக மென்மையாய் பேசுகிறது. காயலுக்கு சமீபமாய் கடலில் மர வீடமைத்து நேதனின் தந்தையும் தாத்தாவும் வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்  படகில் போய் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். நேதனின் தந்தையும் தாத்தனும்  மீன்களைப் பற்றியும் அவற்றைப் பிடிக்கும் முறைகளைப் பற்றியும் சமைக்கும் முறைகளைப் பற்றியும் அவனுக்குச் சொல்லித் தருகிறார்கள். தூண்டிலிட்டு பாரகுடா மீன் வகைகளையும் கடலுக்கு அடியில் போய் lobster களை யும் தந்தையும் தாத்தனும் பிடித்து வருகிறார்கள். தந்தை தன் மகனுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான். பறவைகளைப் பற்றி அவற்றின் இயல்பு பற்றிச் சொல்லித் தருகிறான். இயற்கையோடு இணக்கமாக எவ்வாறு இருப்பது என்பதை சொல்லித் தருகிறான். முதலைகளை கண்டு அஞ்சாதிருப்பது அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வரும் cattle egret பறவையொன்றோடு விளையாடுவதென நேதன் ஒவ்வொரு நாளையும் அத்தனைப் புத்துணர்வோடு கழிக்கிறான். தாத்தா தன் மீனவ வாழ்வைக் குறித்தும் இயற்கைக்கு சமீபமாக இருக்கும் ஆனந்தம் பற்றியும் மகனோடு பேசுகிறார். அவர்களின் உரையாடலில் மீனையும் ஸ்ட்ராங் காஃபியையும் பறவைகளையும் கடலையும் தாண்டி வேறொன்றும் இருப்பதில்லை. இயற்கையின் இன்னொரு அங்கமாகவே அம்மனிதர்களின் வாழ்விருக்கிறது. இயற்கையைக் கண்டு அஞ்சாமல் அதனோடு இரண்டறக் கலப்பது குறித்து தாத்தனும் தந்தையும் சிறுவனுக்குக் கற்றுத் தருகிறார்கள்.

Pedro González-Rubio என்கிற இயக்குனரின் இயக்கத்தில் 2009 இல் வெளிவந்த இத்திரைப்படம் ஆவணப்படத்தின் சாயல் கொண்டது. பிரம்மிக்க வைக்கும் ஒளிப்பதிவு, இயற்கையின் அசலான பின்னணி ஒலிகள் என இத்திரைப்படம் நம்மை ஒரு மகத்தான அனுபவத்திற்குக் கூட்டிச் செல்கிறது. அதோடில்லாமல் நம் குழந்தைகளுக்கு நாம் தர வேண்டியது என்ன என்பதை இப்படத்தின் தந்தையும் தாத்தனும் உணர்த்துகிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் குழந்தை வளர்ப்பின் பயங்கரங்கள் கண் முன் வந்து போயின. அக்கறை எனும் பெயரில் என் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதின் அறியாமை குறித்து வெட்கினேன். இத் திரைப்படம் நிறைய பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு அல்லது அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டியது என்ன என்பது குறித்தான புதுத் திறப்பாக இருக்கும். எனக்கு இருந்தது.

0


எது என்னுடைய உண்மையான வாழ்வு? எப்போது நான் முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்? என்ன செய்தால் அதில் என்னால் முழுமையாகத் திளைக்க முடியும்? என்கிற கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. இதே கேள்விகளை வெவ்வேறு சூழலில் பல வருடங்களாக என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதுவுமே என்னை முழுமையாய் இட்டு நிரப்புவதில்லை. எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தப்பி ஓடுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று தற்காலிகத் தீர்வாக இருந்தது/ இருக்கிறது. முழுமையான என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். முழுமை இல்லாமற் போகட்டும் ஆனால் பிடித்தம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும்தானே? என்ன செய்தால் என் நிகழ் பிடித்தமானதாக அமையும் என்கிற தொடர்ச்சியான தேடலில் இயற்கைக்குச் சமீபமாக இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறேன். ஏதோ இந்தப் பாலையில் நாட்கள் கழிவதால் ஏற்பட்ட எதிர் ஈர்ப்பு என்று இதை சுலபமாய் தாண்டிப் போக முடியாத அளவிற்கு நாள்பட நாள்பட இந்த எண்ணம் வலுப்படுகிறது. ஆம் இயற்கையின்  அருகாமையில் இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும். இத்திரைப்படத்தில் வருவது போல கடலில் வீடமைத்து மீன் பிடித்து உண்டு வாழ்வது என் இயல்பிற்கு மிக நெருக்கமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு மலைக் கிராமத்தில், சிறு வீட்டில், உயர்ந்த மரங்களுக்கு நடுவில் வசித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் கண்விழித்ததும், சற்றுத் தொலைவிலிருக்கும் மலையருவிக்கு நடந்து போய் குளித்துவிட்டுத் திரும்புவதாய் அமையும் காலை வேளைகளை நினைத்துப் பார்க்கிறேன். நிச்சயம் இது முழுமையாகத்தான் இருக்க முடியும். குறைந்த பட்சம் பறவைகள் ஒலிப் பின்னணியில் எங்களூர் மலையடிவாரத்தில் அடர்ந்த மரங்களை வளர்த்தும், தாவரங்களை வளர்த்துமாய் நிகழை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே என் முழுமையாய் இருக்க முடியும்.


Monday, December 15, 2014

ப்ராமின் டாமினேஷன்


மலையாள மற்றும் வங்காளப் படைப்புகளின் அறிமுகத்தோடு ஒப்பிடுகையில் கன்னட இலக்கியமும் சினிமாவும் எனக்கு அத்தனை பரிச்சயம் கிடையாது. பைரப்பா, அனந்தமூர்த்தி, கிரீஷ்காசரவள்ளி, கிரீஷ்கர்னாட் மற்றும் விவேக் ஷன்பேக், போன்ற சொற்ப ஆளுமைகளின் படைப்புகளை அறிந்திருந்ததோடு சரி. சமீபத்தில் வாசித்த சிக்கவீர ராஜேந்திரன் நாவல் கன்னட இலக்கியத்தின் மீது பெரும் விருப்பம் ஏற்படக் காரணமாயிருந்தது. மனதளவில் என்னைக் கன்னடனாக உணரத் தொடங்கும் அளவிற்கு படைப்புகளின் வழியாய் அந்நிலங்களில் காலபேதமின்றி உலவிக்கொண்டிருக்கிறேன். கர்நாடகத்தின் நிலக்காட்சியும் மக்களும் பண்பாடும் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. பைரப்பா எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது நாவலையும் இன்று காலை வாசித்து முடித்தேன். இந்திய சுதந்திரத்திற்கு முன்னரான கிராம வாழ்வை குறிப்பாக தும்கூர் பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நாவல் வழியாய் மிகக் கச்சிதமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணடிமைத்தனம், அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, ப்ளேக் போன்ற கொள்ளை நோய்கள், பஞ்சம், என மக்கள் மிகக் கடுமையான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிட்ட கதையை ஒரு பிராமணக் குடும்பத்தை மையமாக வைத்து பைரப்பா மிக அசலாகச் சித்தரித்திருக்கிறார்.

சமூக வலைத் தளங்களை பிராமண நோய் பீடித்திருப்பதாலோ அல்லது தற்செயலாகவோ ”கன்னட இலக்கியத்தில் ப்ராமின் டாமினேஷன் அதிகம்” என்றொரு தகவலை தோழி வழியாய் அறிய நேர்ந்தது. அவசரமாய் விக்கியில் தேடிப் பார்த்தால் பைரப்பா பிராமணர்தான். எங்குதான் ப்ராமின் டாமினேஷன் இல்லை என சமாதானமாகிக் கொண்டேன். கல்வி அவர்களிடம் இருந்ததால், முதலில் கல்வி கற்றவர்கள் அவர்கள்தாம் என்பதால் அறிவுச் சூழலில் அவர்களின் இருப்பு மிகுந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் இருக்கும் சொற்ப ஆளுமைகளில் சொற்பமே சொற்ப ஆட்களைத் தவிர்த்து அனைவருமே பிராமணர்கள்தாம். ஏன் இந்திய அளவில் கூட எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவுப்புல ஆளுமைகளில் தொண்ணூறு சதவிகிதம் உயர்சாதியினர்தாம். இதில் புதிய ஆட்கள் உள்ளே வருவது, புதுச் சிந்தனைகள் உள்ளே வருவது போன்றவை மிக மெதுவாகத்தான் நிகழும். அனேகமாய் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகலாம். அந்த ஐம்பது ஆண்டுகளை நூறு ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய பத்ரிக்களும் ஜெயமோகன்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் உயர் சாதியினரின் ஆயுளும் மற்ற சாதியினரின் ஆயுட் காலமும் ஒன்றாகவே இருப்பதால் மாற்றங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது நிகழ்ந்து விடும் என நாம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்.

தமிழில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை  யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கன்னடத்திலும் மலையாளத்திலும் இந்தப் போக்கு இல்லை. பெரும்பாலான உயர்சாதியினர் படைப்புகளில் சுயசாதி விமர்சனம் அடிப்படையான ஒன்றாக இருந்தது. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடிகிறது. மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் பிராமணர் அல்லத ஜெயகாந்தன் போன்றோர் கூட தங்களின் பெரும்பாலான படைப்புகளை பிராமண மொழியில்தான் எழுதினர். நம் சூழலைப் பொருத்த வரை பிராமண மோகம் என்பது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது தலைமுறை தலைமுறையாய் நம்மிடையே கடத்தப்பட்டிருக்கிறது. அறிவு, கலை எனும் பாவணையில் விமர்சனமே இல்லாத அழகியல் படைப்புகள்தாம் நம் மூளைகளில் மேன்மையானவையாய் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒரு கும்பல் மிகத் தெளிவாகவே இன்றும் செய்து வருகிறது. அவர்களின் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றனவே தவிர மனநிலை என்னவோ ஒன்றுதாம்.

தமிழ் மனசாட்சியின் குரல் என தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஜெயமோகனுக்கு பார்ப்பான் என வசைவதும் பறையன் என வசைவதும் ஒன்றல்ல என்கிற அடிப்படை கூட  எப்படி புரியாமல் போனது என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. சமூக அவலம் அல்லது சமூக அறம் குறித்த விஷயங்களை ஜெயமோகன் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தே பெறுவதால் சுய சாதி விமர்னம் கொண்ட, முற்போக்குப் பேசும் பிராமணர்கள் யாராவது அவரின் பக்கத்து வீட்டிற்கு குடி போய் பிராமணர்களின் சமகால நிலையைப் புரிய வைக்க வேண்டுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஆதரவு அணியிலும் எதிர் அணியிலும் ஒரே சாதியினரைக் கொண்ட சூழலாக நமது தமிழ்சூழல் இருக்கிறது. ஜெ குறிப்பிடும் இடைசாதி வெறியர்களின் குரல் கருத்துத் தளத்திற்கு இன்னும் எட்டவில்லை அல்லது அவர்களின் குரல் முற்போக்கு பிராமணர் குரல் அளவிற்குத் தெளிவாக இல்லை. தலித்களின் குரலைக் கேட்கவோ காதுகளே இல்லை.


Wednesday, December 10, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 2

வீரராஜன் கோழையோ சோம்பேறியோ அல்ல. விளையாட்டிலும் துப்பாக்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்றவன். சிறுவயதில் வீரராஜனுக்கு கிடைத்த அளவுகடந்த சுதந்திரம், தாயின் அரவணப்பின்மை, தந்தையின் சரியான வழிகாட்டலின்மை போன்றவைகள் அவனை முரட்டு இளைஞனாக வளர வழிவகுக்கிறது. வீரராஜனுக்காக எதையும் செய்யத் துணியும் சக விளையாட்டுத் தோழனான நொண்டிப் பசவனின் அளவு கடந்த மரியாதையும் பக்தியும் விசுவாசமும் வீரராஜனை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன. பெண்பித்து, மதுமயக்கம் என சகல போகங்களிலும் மிக இளம் வயதிலேயே வீரராஜன் எல்லையற்றுத் திளைக்கிறான். மகனின் போக்கைக் கண்டு திகைக்கும் தந்தை குடகு வம்சத்தை சேர்ந்த துணிச்சலும் கம்பீரமும் நற்குணங்களும் கொண்ட பெண்ணான கெளரம்மாவை வீரராஜனுக்கு மணம் முடித்து வைக்கிறான். தந்தைக்குப் பிறகு அரியணை ஏறியதும் அவனின் தீய குணங்களும் இரட்டிப்பாகின்றன.

கெளரம்மா வீரராஜனின் அத்தனை மூடத்தனங்களையும் தாங்கிக் கொள்கிறாள். வீரராஜன் மீது மக்களுக்கும் மந்திரிகளுக்கும் ஏற்படும் அசெளகர்யங்களை முடிந்தமட்டில் கெளரம்மா தீர்த்து வைக்க மெனக்கெடுகிறாள். வீரராஜனுக்கு இருக்கும் ஒரே பலகீனமான மகள் பாசத்தை வைத்து ஓரிரு நற்காரியங்களை அவளால் சாதித்துக் கொள்ள முடிந்தாலும் அவனின் தீமைக் குணங்கள் ஒரு எல்லைக்கு மேல் அவளை நகரவிடாமல் செய்து விடுகிறது.

முப்பத்தைந்து வயதிலேயே வீரராஜன் மூப்படைந்து விடுகிறான். அளவு கடந்த பெண் இன்பத்தால் ஆண்மையையும் இழக்கிறான். சதா பசவனுடன் இழந்த ஆண்மையை மீட்டெடுக்க மருத்துவ வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். இருந்த போதிலும் கண்ணில் படும் பெண்டிரை கவர்ந்து வரச் சொல்லி அரண்மனையில் வைத்துக் கொள்கிறான். இந்த மீறல் எல்லை தாண்டி அசலூர் உயர்குடிப் பெண்கள் மீதும் பாய்கிறது. இத்தகவல் ஆங்கிலேயர் அரசிற்குப் போக வீரராஜனுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது. அரண்மனை வரவு செலவை கவனித்துக் கொள்ளும் செட்டியார் குடும்பத்துப் பெண்கள் மீதும் சிக்கவீர ராஜன் தன் கவனத்தைத் திருப்ப குடகின் மிக முக்கியஸ்தர்களும் மந்திரிகளும் மன்னன் மீது அதிருப்தியும் கோபமும் அடைகின்றனர்.

தங்கை தேவம்மாவும் மைத்துனன் சென்ன பசவனும் தனக்கு எதிராக கலகம் செய்யத் துணிவதாகக் கருதி வீரராஜன் தங்கையை அரன்மணைக்குள் சிறை வைக்கிறான். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கும் சென்ன பசவன் தகுந்த நேரம் பார்த்து வீரராஜனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு தன் மனைவியை ராணியாக்க முயற்சிகளை எடுக்கிறான். அதற்காக தொடர்ச்சியாக பெங்களூரை ஆளும் ஆங்கில அரசிற்கு கடிதங்களை எழுதுகிறான்.

சிக்கவீர ராஜனின் பெரியப்பாவும் அவர் மகனும் குடகின் நிலை சரியில்லை எனவும் மக்கள் துயரடைகின்றனர் எனவும் சென்ன வீரன் மூலம் கேள்விப்பட்டு குடகிற்கு  வருகின்றனர். அங்கிருக்கும் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசி மன்னனை பதவியிலிருந்து இறக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

மன்னனின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உள்ளூர் இளைஞர்கள் காவிரி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணி திரள்கின்றனர்.

வீரராஜனின் தகப்பன் லிங்கராஜன் தாசி குலப் பெண்ணான பாப்பாவை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துவிட்டு குழந்தை பிறந்ததும் அரண்மனையை விட்டு விரட்டிவிடுகிறான். அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை வளைத்து அரண்மனை சேவகர்களிடம் வளரவிடுகிறான். பல வருடங்கள் கழித்து பாப்பா பகவதியாகத் திரும்பி வருகிறாள். அரசனை வீழ்த்தி அவளின் குழந்தையை அரசனாக்க முயற்சிகளை எடுக்கிறாள்.

வீரராஜனின் தன் உண்மை ஊழியனான நொண்டி பசவனை மந்தியாக்குகிறார். இது மற்ற முக்கிய மந்திரிகளான போபண்ணாவிற்கும் லக்‌ஷ்மி நாரயணய்யாவிற்கும் பிடிக்காமல் போகிறது. அரசன் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிக மோசமான நிலையை அடைகின்றன.

இப்படியாக எல்லாத் திசைகளில் இருந்தும் சிக்கவீர ராஜனுக்கு எதிரிகள் முளைக்கின்றனர். இதுபோன்ற சூழல்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் வீழ்த்திய வெள்ளை அரசு குடகையும் மிக எளிதாக தன்னுடையதாக்கிக் கொள்கிறது. மைசூரைப் போல குடகும் வெள்ளையரிடம் போய்விடக்கூடாதென குடகின் மந்திரிகள் ராணி கெளரம்மாவை அரியணையில் ஏற்றும் முயற்சிகளும் பலிக்காமல் குடகு ஆங்கிலேயர் வசமே போகிறது.

சிக்கவீர ராஜன் தன் தங்கையின் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பிறகு புத்தி பேதலித்து படுக்கையில் வீழ்கிறான். அப்போதிலிருந்து கடைசியாகப் பசவன் அவன் கையாலே கொல்லப்படுவது வரை நடைபெறும் சம்பவங்கள் யாவும் பரபரப்பும் வேகமும் மிகுந்தவை. இந்தப் பகுதியை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு Downfall திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஹிட்லரின் கடைசிப் பத்து நாட்களை பேசும் மிகக் கச்சிதமான ஜெர்மானியப் படமது. ஹிட்லர் மெல்ல மெல்ல சுற்றி வளைக்கப்படும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எத்தனை சுவாரசியமும் திருப்பமும் வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் சிக்க வீர ராஜேந்திரன் நாவலின் கடைசிப் பக்கங்கள் இருந்தன.

ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் சிக்க வீர ராஜேந்திரனுக்கும் இடைய நிகழும் கடிதப் போர் நாவலில் மிக முக்கியமான பகுதி. நாசூக்காகவும் மிக விவரமாகவும் வெள்ளையர்கள் குறு நில மன்னர்களுக்கு கொடுத்த அழுத்தம் கடிதங்களில் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் தங்கள் விரோதத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குழுவினர் மடிகேரிக்கு வந்து விருந்தினர்களாகத் தங்கி விட்டுப் போவார்கள். ஆங்கிலப் பெண்களுக்கு இந்திய அணிகலன்கள் மீது பெரும் விருப்பம் இருந்தது. ராஜ பரம்பரை நகைகளை சன்மானம் பெறுவதற்காக மன்னர்களுக்கு முன் நடனமாடவும் உறவு கொள்ளவும் தயாராக இருந்தனர். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறியிருப்பதை சம்பவங்களாக ஆசிரியர் விவரித்திருப்பார்.
0

நாவலில் நொண்டிப் பசவன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயதில் சக விளையாட்டுத் தோழர்கள் அவனை வெறுத்து ஒதுக்க வீரராஜன் மட்டும் பசவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வான். அந்த நன்றியும் விசுவாசமும் பசவனுக்கு சாகும் வரை தொடரும். வீரராஜன் சிறைபிடிக்கப்படும்போது தன்னுடைய அவசர மூடத்தனத்தால் பசவன்  தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தவறாகப் புரிந்து கொண்டு அவனை சுட்டு வீழ்த்தி விடுவான். ஆனாலும் அரசனுக்கு ஏதும் நேரக்கூடாது என்ற எண்ணத்தோடே பசவன் மடிந்து போவான். பசவனுக்கு  அவன் பிறப்புப் பின்னணி தெரியாமலே போய்விடும். நாய்களையும் மிருகங்களையும் வளர்ப்பவன். பிறப்பால் நாவிதன் என்றெல்லாம் மற்ற மந்திரிமார்களால் இகழப்பட்டவன், அரசன் லிங்கராஜனின் மகன் தான் என்பது அவன் இறப்பிற்குப் பிறகே தெரியவரும். 

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு புறமும் தியாகமும் நன்றிவிசுவாசமும் ஒருபுறமுமாய் ஏராளமான கதாபாத்திரங்கள் நாவல் நெடுகப் பயணித்திருக்கின்றன. தொட்டவீர ராஜனின் நண்பரான கிழவர் உத்தய்ய தக்கன், சென்ன பசவனுக்காக உயிரை விடும் சோமன், ராணி கெளரம்மாஜி, தீட்சிதர், மந்திரிகள் போபண்ணா, லக்‌ஷ்மி நாரயணய்யா, உத்தய்யன், தொட்டவ்வா என விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் உதாரணமாய் பல கதாபாத்திரங்கள் மேன்மையாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ராணி கெளரம்மாஜிக்கு அரசாள எல்லாத் தகுதியுமிருந்தும் கணவனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு அந்த இடத்தில் அமர மாட்டேன் என தீர்க்கமாய் மறுத்துவிடுகிறாள். ராஜ வாழ்க்கை போனபின்பும் காசியில் தொடர்ச்சியாய் நோன்பிருந்து பூஜைகள் செய்து உயிரை விடுகிறாள். கெளரம்மாஜி குடகின் மனசாட்சியாக குடகர்களின் மேன்மை குணங்களின் ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

ஆங்கிலேயர் குடகை கைப்பற்றிய பிறகு பனாரஸில் சில காலம் வசிக்கும் வீரராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதன் மூலம் வெள்ளையரின் நன்மதிப்பை சம்பாதித்து மகளை ராணியாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அதுவும் தோல்வியடையவே இங்கிலாந்திற்கு செல்கிறான். அங்கு ராஜனின் மகள் ஒரு ஆங்கில அதிகாரியை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குப் பிறந்த பெண் இந்தியா வந்து இந்த நாவலை எழுதும் ஆசிரியரிடம் பின் கதைகளைக் கூறுவதாக நாவல் நிறைவடைகிறது.


0




Tuesday, December 9, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 1

சிக்கவீர ராஜேந்திரனை இவ்வளவு தாமதமாக வாசித்ததை எண்ணி வருந்தினேன். குடகுப் பகுதிக்கு செல்வதற்கு முன்னால் இந்நாவலை வாசித்திருந்தால் அந்தப் பிரதேசங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மடிகேரியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களையும் தேடிப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். போகட்டும். அடுத்த பயணத்திலாவது குடகுப் பகுதியை முழுமையாய் பார்க்க வேண்டும். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை குறிப்பாய் மடிகேரி, நால்கு நாடு மற்றும் அப்பங்குள அரண்மனைகளை பார்த்து வர வேண்டும். 

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் ஸ்ரீநிவாச என்கிற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் 1956 இல் கன்னடத்தில் எழுதப்பட்டது. வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்நாவலைச் சொல்லலாம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் நான்லீனியர், மெட்டா போன்ற உத்திகளை மிக அசாதரணமாக நாவலில் கையாண்டிருக்கிறார். நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், மிகச் சாதாரணமான பேச்சு மொழியும், வாசிப்பின்பத்தின் உச்சிக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நாவலின் சரளமான தமிழாக்கம் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்கிற கவனமே ஏற்படாதவாறு அத்தனை நேர்த்தியாக இருந்தது. 
ஹேமா ஆனந்ததீர்த்தன் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஹேமா ஆனந்ததீர்த்தன் பலவருடங்களுக்கு முன்பு மாத நாவல்களை மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு சில நாவல்களை வாசித்த நினைவும் இருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனை மொழிபெயர்த்ததின் மூலம் அவரின் தமிழிலக்கியப் பங்களிப்பு மிக முக்கியமானதாகிறது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலுக்காக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஞானபீட விருதைப் பெற்றார். கன்னடத்தின் ஆஸ்தியாகக் கருதப்படும் மாஸ்தி குறித்து விக்கியில் சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்தேன். மொத்தம் 123 நூல்களை கன்னடத்திலும் 17 நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தன்னுடைய 95 ஆவது வயதில் பிறந்த தினத்தன்றே இயற்கை எய்தியிருக்கிறார் (ஜூன் 06,1891 – ஜூன் 06 1986) புதுக்கன்னடச் சிறுகதை வடிவம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்காகவே காத்துக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.

குடகின் கடைசிக் குறுநில மன்னனான சிக்கவீர ராஜேந்திரனின் வாழ்வைத் (பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்) தொகுத்து எழுதப்பட்ட நாவல்தான் இது. இந்நாவலில் ஆசிரியரும் கதாபாத்திரமாக வருகிறார். சிக்கவீர ராஜேந்திரனின் மகளைச் சந்தித்தது, அவள் மூலமாய் ஆவணங்களைப் பெற்றது, மொத்தமாய் திரட்டிய தகவல்களைக் கொண்டு இதை ஒரு நாவலாய் எழுத ஆரம்பிப்பது என நாவல் எழுதப்பட்ட கதையை நாவலுக்கு உள்ளேயே கொண்டுவந்திருக்கிறார். மேலும் கதை சொல்லப்படும் முறை மரபான ஆரம்பம் முதல் இறுதி வரையாய் இல்லாது, பிரச்சினைகள் துவங்கும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பித்து இடை இடையே மூன்று தலைமுறை கதையைச் சொல்லி, பல புதிர் சுவாரசியங்களை உள்நுழைத்து, பின்பு அவை ஒவ்வொன்றாய் அவிழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் சம காலத்திலும் புத்தம் புது வடிவமாகப் போற்றப்படுவது. இதை அறுபது வருடங்களுக்கு முன்பு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பயன்படுத்தியிருப்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

தென் கர்நாடகத்தின் மிகச் செழிப்பான பகுதியான குடகு காவிரியின் பிறப்பிடம். காவிரி மட்டுமில்லாது பத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சிற்றாறுகள் பாயும் மலைப் பகுதி. இங்கு வசிப்பவர்கள் குடகர்கள் எனப்பட்டனர். ஆனாலும் எந்த ஒரு காலத்திலும் இப்பகுதியை குடகர்கள் அரசாண்டதாக வரலாறு கிடையாது. குடகர்கள் அரச பதவியை வலிந்தே ஏற்காமல் இருந்ததாக நாவலில் வரும் மந்திரியான போபண்ணா கதாபாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக செழிப்பான பகுதியான குடகு, பக்கத்து அரசுகளான மலையாளம், மைசூர், மங்களூர் போன்றவற்றின் பொறாமையைப் பெற்றிருந்ததாலும் மலைக் காடென்பதால் குடகை வெற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. கதம்ப, கங்க, சோழ, சாளுக்கிய, ஹேய்சால வம்சங்கள் ஆண்டபிறகு கேரி அரச வம்சம் இருநூறு வருடங்கள் குடகை ஆட்சி புரிந்தது. கடைசியாக உடையார்களின் அரசாட்சி இருந்தது. அதன் கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன் குடகுப் பகுதி ஆங்கிலேயர் வசம் போக காரணமாக இருந்தான். அந்த சம்பவங்களைத்தான் இந்நாவல் பேசுகிறது. 

வரலாற்று நாவல்கள் இதுவரை நம் மீது படிய வைத்திருக்கும் அத்தனை மரபு மிகைகளையும் இந்நாவல் அடித்து நொறுக்கியிருக்கிறது. சதா போகத்தில் திளைக்கும் முரட்டுக் குடிகார அரசனை பார்க்க மிக நெருக்கமாக இருந்தது. நம்முடைய பெரும்பாலான வரலாற்று நாவல்கள் மிகையான ஜோடனைகள் நிறைந்தவை. அதிகாரச் சார்பு கொண்டவை. மன்னனை வீரதீரபராக்கிரம் பொருந்திய சாகச நாயகனாக மட்டுமே நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தவை. தமிழில் இந்தப் போக்கு அலுப்பூட்டும் அளவிற்கு எழுதப்பட்டு சமகாலத்தில் மட்டுமல்லாது என்றென்றைக்கும் போற்றப்படும் தமிழ் அடையாளங்களாக உருவாக்கப்பட்டன.  

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும் நாவல்கள் மட்டுமே இந்த அயற்சியூட்டும் வரலாற்று நாவல் பொய்மைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றின. ஆனாலும் இவ்விரண்டு நாவல்களும் சிக்கவீர ராஜேந்திரன் நாவல் தந்த களிப்பைத் தரவில்லை. வரலாற்றுப் புனைவை இப்படி நேரடியான மக்கள் மொழியில் எழுத முடியும் அதிலேயும் மன்னன் என்பவன் மக்களில் ஒருவன் தான். அவனும் இன்னொரு மனிதனைப் போலவேதான் இருப்பான் - பேசுவான் - நடந்து கொள்வான். சதா கெட்டவார்த்தைகளை அள்ளி வீசுவான் என்பதெல்லாம் நமக்குப்/ எனக்குப் புதிதுதான். 

தொட்ட வீர ராஜேந்திரன் இந்த வம்சத்தின் மிகச் சிறந்த அரசனாகப் போற்றப்பட்டான். குடகு மக்களின் விருப்பத்தையும் அன்பையும் பெற்ற ஒரே அரசனாக தொட்டவீர ராஜேந்திரனே கருதப்பட்டான். சூழ்ச்சியால் அவனிற்குப் பிறகு ஆட்சிக்கு வரும் தம்பி லிங்கராஜன் மற்றும் லிங்கராஜனின் மகனாகிய சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இம்மூன்று தலைமுறைக் காலத்தின் வரலாறு சுருக்கமாகவும் சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சி குறித்து விலாவரியாகவும் நாவலில் பேசப்படுகிறது.

வீழும் காலம் என்பது அதிகார வாழ்வில் மிக முக்கியமான பகுதி. ஒரு வம்சம் வீழ்ச்சியடையும்போது மக்கள் உடனடியாய் அந்த வீழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஆர்வமடைவார்கள். அதிகாரம் தன் தரைத்தளத்திற்குக் கீழே சாமான்யர்களால் நெருங்க முடியாத ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இரகசியங்களின் மீதான விருப்பம் நம்மை கதைகளை எழுதவும் வாசிக்கவும் தூண்டுகிறது. அப்படித்தான் பலப்பல வரலாற்றுப் புனைவுகள் கதைகளாக எழுதப்பட்டன. மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் இன்னொரு நாவலான ”சென்னப்பசவ நாயக” நாவலும் ஷிமோகா பகுதியின் கடைசி நாயக்க மன்னின் வீழ்ச்சியைத்தான் பேசுகிறது. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.கண்டிப்பாக சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். மாஸ்தி தன் சிறுகதைகளுக்காகத்தான் அதிகம் பேசப்பட்டார்.

-    
-  மேலும்


Sunday, November 30, 2014

கூண்டுப் புளி

நேற்று இரவு முழுவதும் ஒரு நொடி கூட என்னால் தூங்க முடியவில்லை. ஒரு முழு இரவையும் கொப்பளிக்கும் எண்ணங்களோடும், குற்ற உணர்வோடும், இயலாமையோடும் கழித்தது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். வாழ்வில் ஏரளமான தூங்க முடியாத நிசிகள் இருந்திருக்கின்றனதாம் என்றாலும் விடியலில் எப்படியாவது தூக்கம் இழுத்துக் கொண்டுவிடும். ஆனால் நேற்று அப்படி ஒன்று நிகழவேயில்லை. மனம் குழப்பத்திலும் கழிவிரக்கத்திலும் சஞ்சலித்தபடியே இருந்தது. இப்படியான போராட்ட மனநிலைக்கான காரணத்தை எழுதக் கூச்சமாக இருக்கிறது. வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றபடியே இருக்கிறது. இனி தனியாகக் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இணையத்தைத் திறப்பதில்லை என்கிற கறாரான முடிவிற்கும் வந்திருக்கிறேன். வெள்ளி இரவு நிலையில்லாமல் உளறிக் கொட்டி ஒரு ஆன்மாவின் முகச் சுளிப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளானதை எண்ணி வெட்குகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக என் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியிருக்கிறேன். கூகுல் ப்ளஸ் என்னை அத்தனை விகாரங்களோடும் ஏற்றுக் கொண்டு விட்ட இடம் என்பதால் முதல் நாள் உளறி அடுத்த நாள் அழிப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அதைக் குறித்து வெட்கமேற்படாதவாறு வழமை பார்த்துக் கொள்கிறது.

என் தனிமையை எந்த அளவிற்கு கொண்டாடுகிறேனோ அந்த அளவிற்கு அதைக் கண்டு பயப்படுபவனாகவும் இருக்கிறேன். கட்டவிழ்த்த வனாந்திர வெளியும் சுதந்திரமும் என்னை அதிக உற்சாகமடைய வைக்கும் அதே நேரத்தில் அந்த மிகு வெளி குறித்து மிரட்சியும் அடைகிறேன். எனக்கு கூண்டுதான் சரியாக இருக்கும். கூண்டில்தான் என்னால் மனச் சமாதானங்களோடு வாழ்ந்து கொள்ள முடிகிறது. கூண்டின் பாதுகாப்பு குறித்து அதன் வழமைகள் குறித்து அதன் சோம்பல் தன்மை குறித்து இந்தப் புளிக்கு மிகுந்த ஆசுவாசங்கள் இருக்கின்றன. செய்ய ஒன்றுமே இருக்காத வாழ்வை எப்படி ஒரு மனம் விரும்ப முடியும்? ஒரு நாள் முழுக்க எதையுமே செய்யாமல் கடத்தும் தடித்தனம் எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த தடித்தனத்தில் ஊறி மூளையும் உடலும் மட்கிக் கொண்டிருக்கிறது. இலைகள் மட்கினால் சரி. மரமே மட்குவதை என்ன செய்து சரி செய்ய முடியும்?

 சும்மா இருப்பதுதான் பெரிய விஷயமாகிற்றே. "கிட சும்மா" என சமாதானமாகிவிடலாமென்றாலும் சதா பகற் கனவில் மூழ்கும் மனதின் ஓயாத பேராசையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதென்ன சுயமிது? இத்தனை ஆசைகளையும் கனவுகளையும் இதன் ஆழத்தில் யார் வந்து கொட்டியிருப்பார்கள்? மனம் பேராசையின், சுயப் பெருமிதத்தின், பகட்டு வெளியின் நாயகனாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. போகுமிடமெல்லாம் ராஜாதி ராஜப் பின்னணிக் குரல் காதில் விழுந்து கொண்டே இருக்கவேண்டுமென விரும்புகிறது. பச்சையாக சொல்வதென்றால் சில சினிமாக்காரர்களின் பகட்டு வாழ்வை அருகிலிருந்துப் பார்த்துவிட்டு தானும் அதுபோல மாறிவிட இந்தப் புளி கொட்டையைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாப் பித்திலிருந்து வெளிவர புத்தக வாசிப்பைத் துரிதப்படுத்தி யிருக்கிறேன். என் நமுத்த வழமைகளில் இருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். மாலையில் கர்ம சிரத்தையாய் நடப்பது. இசை கேட்பது. புத்தகம் படிப்பது. குறைவாய் படம் பார்ப்பது. குறைவாய் உண்பதென திடீரென வாழ்வு நம்ப முடியாத ஒழுங்கிற்கு திரும்பிவிடும். அந்த கணத்திற்காக காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றும் இல்லை. ஃபேஸ்புக்கைத் தொலைத்திருப்பதால் மீண்டும் வலைப்பூ வில் நாட்டம் செல்லத் துவங்கியிருக்கிறது. எழுதாமல்தான் நான் துருப்பிடித்துப் போனேன். இனி எழுதி எழுதி என்னை மீளக் கொணர்வேன்.



Tuesday, November 25, 2014

தீக்கிரை - Incendies 2010


எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜுலை மாத வெயில் மதியத்தில்தான் இந்த நாட்டிற்கு வந்தடைந்தேன். இந்த நகரத்தின் நிறம், சாம்பல் வெண்மையாக இருந்தது. இவ்வளவு பிரகாசமான ஒளி வெள்ளம் நிரம்பிய நகரத்தைப் பார்க்க விநோதமாகவும் இருந்தது. நீல வானம் மற்றும் வெண்ணிற மேகங்கள் என்பதெல்லாம் என் ஆதிக் கனவானது. வெகு தொலைவிற்குப் புழுதிய மண்டிய, கலங்கலாய் நீலம் தெரியும் விரிந்த வெளிதான் என் வானமாகிற்று. கண் கூசும் வெயில் பிறகு குளிர் கண்ணாடிகளுக்கு பின் பாந்தமானது. பிறகெப்போதுமே இந்நகரம் முதன்முறை தந்த விநோத நிற உணர்வைத் திரும்பத் தரவேயில்லை. மறந்து போன முதல் முத்த உணர்வைப் போலவே இந்நகரகம் தன் வழமைக்குள் என்னை அழுத்திக் கொண்டது. Incendies திரைப்படம் வாயிலாக எனக்கந்த உணர்வுகள் திரும்பக் கிடைத்தன. இந்த மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறத்தை இத்திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. லெபனான் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் சந்து பொந்துகள், மலைப்பாதைகள் எங்கும் சோர்வோடுயும் துயரத்தோடும் சுற்றி அலைந்துவிட்டுத் திரும்பிய மனநிலையும் பெற்றேன்.

Incendies திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் The Bridges of Madison County திரைப்படத்தை நினைவுபடுத்தின. படத்தின் பிரதானக் கதாபாத்திரமான நவ்வல் மார்வன் திடீர் வலிப்பு வந்து இறந்து போகிறாள். அவளின் மகள் ஜீனும் மகன் சைமனும் இரட்டைக் குழந்தைகள். அவர்களிற்கு உயிலாக சில வேண்டுகோள்கள் அவளின் மேலாளரும் வக்கீலுமான லேபெல் வழியாய் வந்தடைகிறது. அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரனும் தகப்பனும் இருப்பதாகவும் அவர்களிடம் சேர்க்கச் சொல்லி இரண்டு தனித்தனி கடிதங்களை வக்கீல் இருவரிடமும் தருகிறார். நவ்வல் தன் உடல் வழக்கமான கிறிஸ்துவ முறைகளின் படி புதைக்கக் கூடாதெனவும், உடைகளைக் களைந்துவிட்டு மண்ணில் முகத்தைத் திருப்பி வைத்து (புட்டங்களை இந்த உலகிற்குக் காட்டியபடி) புதைக்க வேண்டுமெனவும் உயிலில் கேட்டுக் கொண்டிருக்கிறாள். மேலும் தர வேண்டிய கடிதங்களை உரியவர்களிடம் சேர்த்துவிட்டுப் பின்பு வந்து தன் கல்லறையில் சிலுவை நட்டு பெயரைப் பொறித்து வைக்கலாம் அதுவரை தன் கல்லறை அப்படியேதான் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இது இரட்டையர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. தாயின் மரணத்திற்குப் பிறகு அவளைப் பற்றியதான புதிர்கள் மகள்களுக்கு ஆதூரமாகவும் மகன்களுக்கு அசூசையாகவும் இருப்பது உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் ஆண் மனப்பான்மைகளில் ஒன்று. சைமன் அவ்வாறே அதை வெளிப்படுத்துகிறான். தாயின் வேண்டுகோளின் படியெல்லாம் யாரையும் தேடிக் கொண்டு போக முடியாது. அவள் சொன்னபடி இறப்புச் சடங்குகளை செய்யவும் முடியாது என மறுக்கிறான். ஜீன் அவனைத் தேற்ற முயற்சிக்கிறாள். பிறகு தானே கிளம்பி தாயின் பழைய வாழ்க்கையைத் தேடிப் போகிறாள்.

நவ்வல் மார்வனின் முன் கதையும், எப்போதுமே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் தாயின் சொந்த நிலங்களில் அவளின் தடயங்களைத் தேடி மகள் ஜீன் அலைவதும் லெபனான் நாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திரைப்படத்தில் வரும் நகரங்களுக்கும் ஊர்களுக்கும் கற்பனைப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். நவ்வல் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவள் என்பதும் நேரடியாக சொல்லப்பட வில்லை. முஸ்லீம் குழுவிற்கும் கிறிஸ்தவ குழுவிற்கும் இடையே நிகரும் போராக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மிகக் குரூரமாக சுட்டுக் கொல்லப்படுவதை அழுத்தமாய் சொல்லியிருப்பதன் மூலம் பாலஸ்தீன- இஸ்ரேல் பின்னணிக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிய வரும். ஆனால் மிகக் கவனமாய் அதன் அரசியல் எல்லைகளுக்குள் போவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் மூலம் அனுக இயலக்கூடிய சிக்கலாக இந்த யுகாந்திரப் பிரச்சினை இல்லாதிருப்பதால் அது குறித்த நெருடலும் எனக்கு இல்லை. அவ்வளவு எளிமையாய் பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சினையை பேசிவிட முடியாதுதானே. ஆனால் போரின் விளைவுகளை, வலியை மிக ஆழமாய் நம்மால் கடத்த இயலும். இத்திரைப்படமும் அதைத்தான் செய்திருக்கிறது.

தாயின் பின்புலத்தைத் தேடி வரும் ஜீனிற்கு தாயின் உறவினர்கள் ஒருவருமே உதவ முன் வருவதில்லை. அவளைப் பற்றி பேசுவதையும் தவிர்க்கிறார்கள். தங்களின் குடும்பத்திற்கு தீராத களங்கத்தை நவ்வல் உண்டாக்கி விட்டதாய் ஆத்திரப்படுகிறார்கள். இடைவெட்டாய் நவ்வலின் முன் கதையும் ஜீனுடன் பயணிக்கிறது.

நவ்வல் ஒரு முஸ்லீம் இளைஞனுடன் காதற் கொண்டு ஓடிப்போகத் திட்டமிடுகிறாள். அவளின் சகோதரர்கள் அந்த இளைஞனைக் கொன்று அவளையும் கொல்ல வரும்போது பாட்டியினால் காக்கப்படுகிறாள். நவ்வல் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பதபதைக்கும் பாட்டி குழந்தை பிறந்த பின்பு அவளை வேறொரு நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதாக சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் அடையாளத்திற்காக குழந்தையின் குதிகாலில் மூன்று புள்ளிகளை பாட்டி பச்சை குத்துகிறாள்.பின்பு உடனடியாய் அக்குழந்தையை அநாதை விடுதியில் சேர்ப்பித்து விடுகிறாள். நவ்வலும் வேரொரு நகரத்திற்குப் போய் வசிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளால் குழந்தையின் நினைவிலிருந்து மீளமுடியாமல் தேடிக் கொண்டு வருகிறாள். மிக குரூரமான போர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழியில் பல்வேறு கொடுமைகளை சந்திக்க நேரிடும் நவ்வல் இந்தப் போர்களுக்கு காரணமான ஒரு தலைவனை கொன்று விடுகிறாள். பதினைந்து வருட சிறை தண்டனையும் பெறுகிறாள். இரவில் சதா பாடிக்கொண்டிருக்கிறாள். அதனால் பாடும் பெண் என்கிற அடையாளத்தைப் பெறுகிறாள். தண்டனை இறுதிக் காலத்தில் அங்கு வரும் சிறைக் காவலன் ஒருவன் நவ்வல் பாடுவதை நிறுத்த தினம் மிகக் குரூரமாக வன்புணர்கிறான். அதனால் கருத்தரிக்கும் நவ்வல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். பிரசவ தாதியின் உதவியால் அக்குழந்தைகளை சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெற்றுக் கொண்டு கனடா வந்தடைகிறாள்.

ஜீன் இந்த கதையைப் பலரின் வழியாய் கண்டடைகிறாள். ஜெயிலில் பணியிருந்த முதியவர் சிறையில் நவ்வலுக்கு குழந்தை பிறந்ததாக சொல்கிறார். உடைந்து போகும் ஜீன் தன் சகோதரனை தொலைபேசியில் அழைத்து எல்லா விஷயங்களையும் சொல்லி அழுகிறாள். வக்கீலோடு சைமனும் வந்து சேர்கிறான். மூவரும் சில அதிகாரிகளின் தொடர்பு மூலம் விரிவாய் தேட பல புதிர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அவிழ்கின்றன. சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் இந்தத் திரைப்படம் தந்த அதிர்ச்சித் திருப்பத்தைப் போல வெறெந்த படமும் தரவில்லை. தேடிக்கொண்டிருந்த உண்மை சகோதரனின் வாயிலாய் அறிந்த பிறகு ஜீனின் கேவல் எழுந்தடங்கும் காட்சி நினைவில் அப்படியே உறைந்து விட்டது. 

நவ்வல் மார்வனாக லுப்னா அஸெபெல் என்கிற பெல்ஜிய நடிகை நடித்திருக்கிறார். ஏற்கனவே இவரை டோனி காட்லிஃபின் Exils (2004) திரைப்படத்தின் கதாநாயகியாகப் பார்த்திருக்கிறேன். நைமா என்கிற கதாபாத்திரம் ஜிப்சி வாழ்வின் அத்தனை பரவசங்களையும் நமக்குத் தரும். எப்படி காட்ஜோ டிலோ வின் ரோமைன் தூரிசையும் ரோனா ஹார்ட்னைரையும் மறக்கவே முடியாதோ அப்படியே எக்ஸில் நைமாவையும் சீக்கிரம் மறந்து விட முடியாது. லுப்னா அஸெபெலிற்கு இன்செண்டிஸ் மிக முக்கியமான திரைப்படம். இந்த நவ்வல் கதாபாத்திரம்தான் இதுவரைக்கும் அவர் பெற்றிருக்கும் அனைத்து விருதுகளையும் தந்திருக்கிறது.

 இன்செண்டீஸ் 2010 இல் வெளிவந்த கனேடியத் திரைப்படம். Wajdi Mouawad என்கிற லெபனான் எழுத்தாளரின் இதே பெயரில் வெளிவந்த நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. Denis Villeneuve இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமகாலப் புது இயக்குனர்களில் டெனிஸ் மிக அதிகம் பேசப்படக்கூடியவராக இருக்கிறார். இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கி இருக்கும் டெனிஸ் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

Sunday, November 23, 2014

கங்கைப் பருந்தின் சிறகுகள்


ஒவ்வொரு முறை ஊரிலிருந்து திரும்பும்போதும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்கு அங்கிருந்த நாட்களில் ஏமார்ந்த அனுபவங்களை மிகுந்த கொதிப்போடு அசைபோட்டுக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் என் அறியாமை குறித்த அவமானம் இருந்தாலும் பிறரை ஏமாற்றுவதை, பிறர் பொருளை எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் திருடும் மனநிலையை, எம் மக்கள் எவ்வாறு பெற்றனர்? என்பது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பேன். இந்நாட்களில் ஊரில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதன் மூலம் பெறும் ஏமார்ந்த அனுபவங்கள் சற்று அதிகமாகவே உள்ளன. பார்க்கும் எல்லா மனிதர்கள் மீதும் இயல்பாகவே ஒரு அவநம்பிக்கை வந்து படிகிறது. கிரகித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலுமே கூட சதுரங்க வேட்டை திரைப்படம் தரும் ’உனக்கு கத்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு நினைச்சிக்கோ’ வென அந்த சூழலை,அனுபவத்தைத் தாண்டிப்போக வேண்டியதாக இருக்கிறது. 

இந்த நகரீயத்திற்கு முன்பு, இந்த பொருள்மயவாதத்திற்கு முன்பு, உலக முதலாளிகள் இந்தியாவின் சந்து பொந்துகளை ஆக்ரமிப்பதற்கு முன்பு, எம் மக்களின் மனநிலை இப்படி இல்லை. அடுத்தவரை ஏய்த்துப் பிழைப்பதை திறமை என்கிற பெயரிட்டு அழைக்கும் ஈனத்தனங்கள் வந்தடைந்திராத காலமும் வாழ்க்கைமுறையும் நமக்கு இருந்தது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் மக்களின் இந்த மன நகர்வைப் பேசுகிறது.  கிராமங்களுக்கு சாலைகள் போடப்படுவது மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமேயல்ல என்கிற புள்ளியிலிருந்து அந்த கிராம மக்களின் வாழ்வு முறையின் மாற்றத்தை மிகத் துல்லியமாய் சொல்கிறது. இந்திய தேசத்தின் வரைபடத்தில் மிகச்சிறிய புள்ளியாய் இருக்கும் ஒரு கிராமத்தின் வாழ்க்கை மாற்றங்களுக்கான காரணமும் ஒட்டு மொத்த தேசத்தின் மாற்றங்களுக்கான காரணமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோமோ என்னவோ.

இந்திய செவ்வியல் நாவல்களில் இருக்கும் பொதுத்தன்மைகளில் நிலக்காட்சிகள் குறித்த விவரணைகள் எனக்குப் பிடித்தமானவை. அக்னி நதியாகட்டும், நீலகண்டப் பறவையைத் தேடி நாவலாகட்டும் நிலக்காட்சிகளைப் பதிவு செய்வதில் அவ்வளவு மெனக்கெடலைச் செய்திருக்கின்றன. பருவகால மாற்றங்கள், அதற்கேற்ப மாறும் மக்களின் வாழ்வாதார வேலைகள். சடங்குகள், வழிபாடுகள் என அந்தப் பிரதேசத்தின் மொத்த பண்பாட்டு/ பயன்பாட்டு தகவல்களையும் வாழ்வோடு ஒட்டிக் கதையாக சொல்லப்பட்டுவிடுகின்றன. இந்தத் தன்மை வெறும் புனைவெழுத்து வாசிப்பாக மட்டும் நின்றுவிடாமல் மானுட வாழ்வு குறித்த ஆவணமாகவும் மாறுகிறது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவலும் இதே தன்மையைக் கொண்டிருக்கிறது. சோனாய் ஆறு இந்நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே இடம் பெற்றிருக்கிறது. சோனாய் ஆற்றை மையமாக வைத்து மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது.

மேராபூர் கிராமத்தில் வசிக்கும் போக்ராம் கடின உழைப்பாளி. பருவ காலத்திற்கேற்ப நெல், கடுகு, சணல் மற்றும் ரெடிமேட் துணிகளை பக்கத்து ஊர் சந்தைகளில் விற்றுப் பிழைப்பு நடத்தும் வியாபாரி. மனைவி, குழந்தைகள், இளம் தங்கை மற்றும் முதிர்ந்த தாய் என ஒரு சிறு குடும்பத்தை நிர்வகிப்பவன். போக்ராமின் தங்கை வாசந்தி சகோதரனின் நண்பனான தனஞ்செயன் என்கிற இலட்சியவாத இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். அவனுடைய சோகம் நிரம்பிய முன் கதையும், ஊர்மக்களுக்காக அயராமல் உழைக்கும் அவனின் நற்குணங்களின் மீதும் காதற் கொள்கிறாள். ஊர்மக்களுக்கு ஹோமியோபதி வைத்தியம் செய்வதோடு நிற்காமல் அக்கிராம மக்களின் எல்லா அரசு சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்பவனாகவும் தனஞ்செயன் இருக்கிறான்.

தேர்தலுக்கு முன்பு கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் சாலைகள் மிக விரைவில் போடப்படுகின்றன. இதனால் பட்டணத்தில் பொருட்கள் வாங்கி உள்ளூர் சந்தைகளில் விற்று இலாபம் பார்க்கும் போக்ராமின் தொழில் நசிவடைகிறது. மேலும் பட்டணத்திலிருந்து பெரு முதலாளிகள் நேரடியாகவே பொருட்களை மக்களிடமிருந்து வாங்கவும் பல்வேறு நகரங்களிலிருந்து சிறு சிறு முதலாளிகள் தங்களின் பொருட்களை உள்ளூர் சந்தைகளில் விற்கவும் படையெடுத்து வருவதால் போக்ராமின் வியாபாரம் மொத்தமாகவே நசிந்து போகிறது. விரக்தியடையும் போக்ராம் குடும்பத்தாரிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறான். இதற்கிடையில் தேர்தலில் போட்டியிடும் வக்கீல் ஒருவர் போக்ராமை தனக்காக பிரச்சாரம் செய்ய அழைக்கிறார். போக்ராமிற்கு புதிய வாசல் ஒன்று திறக்கிறது. நிறைய பணம், பொய், புரட்டு என ஆள் சடுதியில் மாறிப்போகிறான். மக்களிடம் செல்வாக்கு பெற்ற உள்ளூர் தலைவர் ஒருவரை எதிர்த்து வக்கீல் நிற்கிறார். தனஞ்செயன் மக்கள் தலைவருக்கு ஆதரவளிக்கிறான். இதனால் போக்ராமிற்கும் தனஞ்செயனுக்கும் விரோதம் முளைக்கிறது. தேர்தலில் வக்கீலே ஜெயிக்கிறார். போக்ராமிற்கு நிறைய காண்ட்ராக்ட்களை வழங்குகிறார். போக்ராம் மிகப்பெரும் செல்வந்தனாகிறான். தங்கை வாசந்திக்கு செல்வாக்கான குடும்பத்திலிருந்து மாப்பிள்ளைப் பார்த்து நிச்சயம் செய்கிறான். வேறு வழியில்லாமல் வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போக திட்டமிடுகிறாள். ஒரு அதிகாலையில் படகுத் துறையில் அவளை அழைத்துப் போக தனஞ்செயன் காத்திருக்கிறான். வீட்டைவிட்டு வெளியேறும் வாசந்தி படகுத் துறையை அடைவதற்கு முன்பு அவள் விரலில் அணிந்திருக்கும் நிச்சய மோதிரத்தை ஒரு கணம் பார்க்கிறாள். தாயின் மீதும், குடும்பத்தாரின் மீதும் பாசமும் கடமையும் நினைவை அழுந்த மீண்டும் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். அதனால் அவளடையும் வாழ்க்கை மாற்றத்தை சமூக மாற்றப் பின்புலத்தோடு இந்நாவல் முன் வைக்கிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பான காலகட்டத்தின் கிராம வாழ்வியல் மாற்றங்களை விலாவரியாகப் பேசினாலும் மக்களிடமிருந்த தீண்டாமை, அறியாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற இந்தியப் பொது பிரச்சினைகளும் நாவலில் பேசப்படுகின்றன. பெண் செய்யும் தவறு ஆணையும் குடும்பத்தையும் பலி வாங்கும் என்பது போன்ற நீதிகள் மூத்த பெண்களின் வாயிலாக இளம் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கற்பு நெறி மிக ஆழமாக பெண் மனங்களில் பதிய வைக்கப்படுகிறது. வாசந்தியின் கனவணான மதுரா, நற்குணங்களையும் மனைவி மீது மிகுந்த அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போகத் துணிந்தவள் என்பதைக் கேள்விப்பட்டவுடன் விரக்தியடைகிறான். மனைவியை வெறுத்து ஒதுக்குகிறான். ஒட்டு மொத்த சமூகமே தன்னைக் கேலியாக பார்ப்பதாய் கழிவிரக்கம் கொண்டு மடிகிறான். இலட்சியவாதமும் நேர்மையும் துணிவும் கொண்ட தனஞ்செயன் விதவைக் காதலியை, எல்லாம் இழந்து அநாதரவாய் நிற்கும் காதலியை, அவளாகவே வரத் துணிந்த பின்பும் ஏற்கத் தைரியமில்லாதவனாய் ஓடிப்போகிறான்.

புதுக்கணவனையும், பிரசவிக்கையில் குழந்தையையும், தாயையும் இழந்த வாசந்தி மாமனார் மாமியார் வீட்டிலேயே தஞ்சமடைகிறாள். சதா சோனாய் ஆற்றைப் பார்த்தபடியும், ஊர் நிலவரங்களையும் இன்னும் பல வேடிக்கைக் கதைகளையும் பேசும் வேலைக்காரி மூலம் அவள் பொழுது நகர்கிறது. அவள் வழியாய் தனஞ்செயனோடு சேரும் முயற்சிகளும் தோல்வியடைய உள்ளூரில் காதலிக்கும் இன்னொரு ஜோடி ஓடிப்போக தன் நகையை விற்றுப் பணம் கொடுத்து நிறைவடைகிறாள். கிராம இளைஞர்கள் பிழைப்பிற்காய் பட்டணம் நோக்கி நகரும் மாற்றத்தோடு நாவல் முடிகிறது.

கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் அஸாமி மொழியில் லக்‌ஷ்மி நந்தன் போரா என்பவரால் 1963 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது. திருமதி துளசி ஜெயராமன் இந்நாவலை 1975 இல் மொழிபெயர்த்திருக்கிறார். Ganga Chilonir Pakhi என்கிற நாவலின் பெயரிலேயே 1976 இல் திரைப்படமாக வெளிவந்தது.



வாசந்தி என்கிற இளம்பெண்ணின் துயரக் கதை என்கிற ஒரே வரிதான் இந்நாவல் என்றாலும், ஏராளமான வங்க நாவல்களில், சத்யஜித்ரே சினிமாக்களில் பேசப்பட்டுவிட்ட கைம்பெண் துயரம் குறித்து பேசும் இன்னொரு நாவல் என்றாலும் அஸ்ஸாம் போன்ற அதிகம் அறியப்படாத பகுதியின் வாழ்க்கை முறையை, மக்களின் பண்பாட்டு விழுமியங்களோடு மிக நேர்மையாய் எழுத்தில் கொண்டுவந்தமைக்காக இந்நாவல் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வாசந்தி தனஞ்செயன் மீது காதல் வயப்படும் முற்பகுதி எனக்குப் பல குறுந்தொகைப் பாடல்களை நினைவுபடுத்தின. இயற்கையும் காதலும் படபடப்பும் துயருமாக இந்நாவலின் காதற்பகுதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. நாவலின் தலைப்பு இருத்தலியல் சார்ந்த படிமமாக துலக்கப்படுகிறது. தலைப்பிற்கான பொருத்தமாய் நாவல் இப்படியாய் முடிகிறது

பருந்தின் சிறகுகளில் ஆறு பருவங்களின் வர்ண ஜாலங்கள் நிரம்பியிருந்தன. உயிர் வாழும் ஆசை மிகவும் தீவிரமாக அப்பருந்தின் சிறகுகளில் படபடத்தது. சோனாய் நதியின் மீது மேலும் கீழுமாகப் பறந்து செல்லும் கங்கைப் பருந்து நதியில் மீன் நீந்துவதற்கான சைகை காட்டியது கங்கைப் பருந்தின் சிறகுகள் படபடக்க அதன் காற்று வாசந்தியின் உடலிலும் பட்டது. ஆனால் அந்தக் காற்று அசைவற்று நின்றுவிட்டது. அழகிய சோனாய் நதி எப்போதும் போல் பாய்ந்து கொண்டேயிருந்தது.







Monday, November 10, 2014

உன்னத எழுத்தின் அய்ம்பது தடைக்கற்களும் ஒரே ஒரு உண்மையும்


    நிகழ்திரை யின் கடைசிக் கட்டுரை என்று எழுதினேன் என தேடிப்பார்க்க வேண்டும். கடந்த டிசம்பர் மாத துவக்கமாக இருக்கலாம். அதற்குப் பிறகு ஒன்றுமே எழுதவில்லை. இந்த தேக்கம் எப்படி வந்தது? இவ்விரல்களால் இந்த எழுத்துக்களைத் தட்டச்சி எத்தனை மாதங்களாயிற்று? நான் எழுதாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என யோசித்துப் பார்த்ததில் உடனடியாய் அய்ம்பது காரணங்களைப் பட்டியலிட முடிந்தது. இதில் ஒரே ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என அந்தரப்பட்சி கத்திக் கதறிச் சொல்கிறது. அதைக் காரணம் கேட்டவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளவும்.

 1. மனம் ஒன்றவில்லை.

 2. எழுத ஒன்றுமேயில்லை.

 3. எழுத பயமாக இருந்தது.

 4. எழுதத் தயக்கமாக இருந்தது.

 5. இனி உண்மையை எழுத முடியாதெனத் தோன்றியது.

 6. பாவணைகளின் மீது பெரும் சலிப்பு வந்தது.

7. எழுத்தென்பதே பாவணையாகத்தான் இருக்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை விழுந்தது.

8. என்னை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

9. எனக்குத் தனிமை தேவைப்பட்டது.

10. என் சுற்றங்களை எனக்குப் பிடிக்கவில்லை.

11. இந்த மெய்நிகர் உலகம் அலுப்பூட்டியது.

 12. எழுத்துக்கள் வழி உருவாகும் அல்லது எழுத்துக்களால் உருவாகும் உணர்வுகள் அத்தனையும் போலித்தனமானவை எனத் தோன்றியது.

 13. இணையம் வழியோ அல்லது அச்சு வழியோ எழுத சலிப்பாக இருந்தது.

 14. எழுத, என்ன எழுத, எழுதி என்ன ஆக, என ஒரு புள்ளியில் விழுந்த அவநம்பிக்கை பன்மடங்காகப் பெருகியது.

 15. எழுத சோம்பலாக இருந்தது.

 16. என்னால் புதிதாக எதுவுமே எழுத முடியாதெனத் தோன்றியது.

 17. இனி புதிதாக எழுத எதுவுமே இல்லை எனவும் தோன்றியது.

 18. நானும் எழுத வேண்டும் என்கிற உந்துதலை வாசித்த எந்த எழுத்துக்களுமே தரவில்லை.

 19. என் வாழ்வில் சிக்கல்களே இல்லை.

 20. என்னை இந்த வாழ்வும் மனிதர்களும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். 

21. நான் சக மனிதர்களை தவிர்க்க விரும்புகிறேன்.

 22. என்னிடம் சுயநலம் மிகுந்தது.

 23. பேராசை புகுந்தது.

 24. உச்சபட்ச சோம்பலனாக மாறிப்போனேன்.

 25. காணும் காட்சிகள் யாவற்றையும் வார்த்தைகளாய் மாற்றி அதில் சில புனைவு சுவாரஸ்யங்களை நுழைத்தோ அல்லது பழைய மிகப்பழைய நினைவுகளில் திளைத்து அதில் சமபங்கு பகற் கற்பனையைப் புகுத்தி எழுத்துக்களாய் மாற்றியோ திருப்தியடையும் நிகழின் மீது மிகுந்த பரிதாபம் எழுந்தது. 

26. என் முதல் நாவல் பழி மீதிருக்கும் வசீகரம் குறையவேயில்லை.

 27. பழியைத் தாண்டி என்னால் எழுத முடியாதெனத் தோன்றியது.

 28. என்னை இந்த முட்டாள் சமூகம் கொண்டாடவேயில்லை.

 29. குறிப்பாக ஃபேஸ்புக் பெண்களுக்கு என்னைத் தெரியவேயில்லை. பிறகு எழுதி என்னாகப்போகிறதென எழுதாமல் இருந்து விட்டேன்.

 30. நான் எந்தக் குழாமிலும் இல்லாததால் என் பெயர் எல்லாத் தரப்பிலும் மிகக் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. அந்த சிரமத்தை அவர்களுக்கு ஏன் வைப்பானேன்?

 31. சமகால எழுத்து சல்லிப் பயல்களிடம் சிக்கிக் கொண்டதால் எழுதவில்லை.

 32. இலக்கியத்தை காசாக்கி விளம்பரமாக்கி சந்தி சிரிக்க வைக்கும் வியாபாரிகள் மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் எழுதாமல் இருப்பது எனக்கும் எழுத்திற்கும் நல்லது.

33. வாசிப்பதை விட, எழுதுவதை விட , சினிமா பார்க்கப் பிடித்திருந்தது

34. வலைப்பூவில் எழுதி, அதற்குப் பொருத்தமாய் ஒரு படம் தேடி, போஸ்ட் செய்து, கூகுல் பள்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இணைப்பு கொடுத்து அதிகபட்சம் முந்நூறு பேரை படிக்க வைப்பதால் என்னாகி விடப்போகிறது?

35. தமிழ் இணைய சமுகத்திற்கு தமிழ் சினிமாதான் சகலமும். இந்த ஆட்டு மந்தைகள் வாசிக்க ஏன் இந்தனை பிரயத்தனம்?

36. சும்மா இருக்கப் பிடித்திருந்தது.

37. எழுத நிறைய இருந்தும் எழுதாமலிருப்பதுதான் உன்னதம். அது தன்னிலிருந்து தானாய் மிகுந்து வரவேண்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.

38. எழுத்து ஆன்மாவிலிருந்து உருவாகவேண்டும். காலையெழுந்தவுடன் கக்கூஸ் என்பது மாதிரி ஆகிவிடக் கூடாது.

39. ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்ப எழுதாதே

40. சினிமா பற்றியே எழுதாதே. ஏற்கனவே யாரும் சினிமா தாண்டி சிந்திப்பதேயில்லை.

41. தமிழ் சினிமாவிற்கும் அதில் பணிபுரிவோருக்கும் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் மிரட்சியடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளனாய் என்னைக் கூசிச் சுருங்கச் செய்கிறது.

42. இலக்கியம் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் இருந்த கவர்ச்சியும் விருப்பமும் போய்விட்டது.

43. வளவளவென எழுதாதே. எழுத்து கச்சிதமாக இருக்க வேண்டும். மிகக் குறைவாக ஆனால் ஆழமாக எழுதுவதே எழுத்து. இது மினிமலிச காலம்.

44. குமாஸ்தா வாழ்வின் இன்பங்களில் திளைப்பதால் எழுதவில்லை.

45. குடும்பம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால் எழுதவில்லை

46. நான் வெறுப்பில் திளைக்கிறேன்

47. சதா காமத்தில் உழல்கிறேன்

48. பொறாமை மிகுந்திருக்கிறது.

49. இணையத்தில் எங்கு திரும்பினாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களாகவே காணக் கிடைக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை அறிவு சமூகத்தில் எழுதாமலிருப்பதே தனித்துத் தெரிவதற்கான ஒரே வழி.

50. அலுவலக கணினியில் தமிழ் தட்டச்சு கடந்த ஒரு வருடமாக செயல்படவில்லை.

Wednesday, January 15, 2014

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கவிதைத் தொகுப்பு - அய்யனார் விஸ்வநாத்






இக்கவிதைகள் தனிமையின் இசை மற்றும் நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளிற்குப் பிறகு எழுதப்பட்டவை. 2010 ஆம் வருடத்திலிருந்து  2013 வரைக்குமான கவிதைகள் (இப்படிச் சொல்வது சரியா எனத் தெரியவில்லை. கவிதை மனதில் விழுவது காலத்திற்கப்பாற்பட்டது இல்லையா?) ஆனால் இவை இந்த வருட இடைவெளிகளில்தான் எழுதப்பட்டன. கவிதை குறித்த பெரும் சலிப்புகள் மிகுந்த காலத்தில் இவை மின் தொகுப்பாக வந்திருக்க வேண்டாம்தான், ஆனால் ஒரு எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டிய அழுத்தத்தில் இவை இந்த வடிவத்தைப் பெறுகின்றன. இணையத்தில் எழுத ஆரம்பித்த புதிதில் கவிஞன் என்கிற பிரம்மைகள் எனக்கிருந்தன, காலப்போக்கில் அந்த அசட்டு பிம்பம் தன்னை அழித்துக் கொண்டது. எனக்கு எழுத வருகிறது என்பதைத் தாண்டி இக்காலகட்டத்தில் வேறெந்த எண்ணமும் இல்லை.

இத் தொகுப்பில் டேபிள் டென்னிஸ் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் யாவும் கோபி கிருஷ்ணன் பாதிப்பில் எழுதப்பட்டவை. இக்கவிதைகளுக்கும் அவரின் படைப்புலகத்திற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லையென்றாலும் கூட இவற்றை எழுதும் மனநிலையை கோபி கிருஷ்ணனின் படைப்புகளே தந்தன. மற்றபடி இச்சிறு தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் எனக்குப் பிடித்தமானவை. பிடிக்காதவற்றைச் சேர்க்கவில்லை. மொத்த கவிதைகளையும் வாசிக்கும்போது அதில் பருவமும் கால நிலையும் இணைப்புச் சங்கிலியாக / பின் இயங்கும் மனநிலைக் காரணியாக இருந்ததைப் போலத் தோன்றியது எனவே வஸந்தம், வேனில், பனி, டேபிள் டென்னிஸ் என்கிற உப தலைப்புகளில் இக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறேன். இப்பாலையில் மழை மிகக் குறைவென்பதால் மழை இடம்பெறவில்லை அல்லது மழை மனநிலை வாய்க்கவில்லை.

மனிதர்களை எனக்குப் பிடிக்காது எனத் தலைப்பு வைத்துவிட்டு யாருக்காவது சமர்பிப்பது அபத்தம் இல்லையா? ஆனாலும் டேபிள் டென்னிஸ் கவிதைகளை மட்டும் கோபிகிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். மற்றவை யாவும் எனக்கே எனக்கு மட்டும்தான்.


Thursday, January 2, 2014

நிகழ் திரையின் பத்து கட்டுரைகள்










நிகழ் திரையின் பத்து கட்டுரைகள்



1. டோனி காட்லிஃப் : அறியாமையின் களிநடனம்

2. குவாண்டின் டராண்டினோ : வசீகர வன்முறையாளன்

3. கிம்-கி-டுக் : கனவின் வழி தப்புதல்

4. தகேஷி கிடானோ : கலையின் பன்முக தரிசனம்

5. ஹோ ஷியோ ஷீன் : பால்யத்தின் வாசனை

6. அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இனாரித்து : மரணத்தைப் பின் தொடர்தல்

7. எமிர் கஸ்தூரிகா : நிகழைப் பிடுங்கி கனவில் எறிதல்

8. மைக்கேல் ஹானெக்கெ : பிறழ்வின் வன்முறை

9. ஹயாவோ மியாசாகி : இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்

10. அனுராக் காஷ்யப் : மரபின் மீறல்

Featured Post

test

 test