Wednesday, February 27, 2013

கடைசி நாளில் மழை... 2


திருச்சூரிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம் எட்டுமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறது. பத்துமணிக்கு சாலையில் ஒன்றும் இல்லை. அந்த சாலை இருப்பதே கூட காலையில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பல வளைவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தோப்பை வந்தடைந்தோம். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவில் இரண்டு வீடுகள். கேரளப் பாரம்பரிய வீடுகளில் ஒன்றான நாலுகட்டில் வீடொன்றும் மண்ணால் மட்டுமே கட்டப்பட்ட கெஸ்ட் அவுஸ் ஒன்றும் எங்களுக்காய் காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு சொந்தக்காரரான திவாகரன் திருவண்ணாமலையில் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார். அவர் மகன் தன் நண்பர்கள் சகிதமாய் எங்களை வரவேற்றான். அந்த இரவில் பயணக்களைப்பையும் மீறி அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள் யாருமே தூங்கவில்லை. அந்த இரண்டு வீடுகளின் நேர்த்தியை அங்குலம் அங்குலமாய் சிலாகித்துக் கொண்டிருந்தோம். , முற்றத்து மாடம், கல்தூண்கள் குறிப்பாய் அந்த மண்வீடு பற்றி திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தோம். மண் வீட்டை எப்படிக் கட்டினோம் எவ்விதம் இவ்வளவு அழகாய் வந்தது என்பதை பத்தாவது முறையாக ஒரே பதிலை சலிக்காமல் ஆர்வமுடன் அப்பதின்மன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.


காலைச் சூரியன் தான் அந்த தோப்பின், அந்தப் பழைய வீட்டின் முழு அழகையும் எங்களுக்கு உணர்த்தியது. அந்த வீட்டின் மாடியின் மீது நின்று கொண்டு ஜெயஸ்ரீ தந்த தேநீருடன் மரங்களுக்கு இடையில் மேலெழும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பவா அதிகாலையிலேயே வெட்டுக்கல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டிருந்தார். கேரளத்தின் அழகான வீடுகள் எல்லாமும் வெட்டுக்கல்லில் தான் கட்டப்படுகின்றன. அல்லது வெட்டுக்கல்லால் கட்டப்படும் எல்லா வீடுகளும் தனித்த அழகைக் கொண்டிருக்கின்றன. இக்கற்கள் எங்கே கிடைக்கும் எப்படித் திருவண்ணாமலைக்குக் கொண்டுபோவது என கேட்கப்போன பவா தன் வாசகரோடு திரும்பவந்தார். தேசாபிமானியில் பவா எழுதிய தொடரைப் படித்திருந்த ஒரு முதிர்ந்த வாசகர் பவாவைக் கண்டுகொண்டு அவரோடு பேசிக்கொண்டே வீடுவந்தார். அந்த வீட்டின் சூழலோ என்னவோ எல்லாருமே நிறைவாய் பேசிக்கொண்டிருந்தோம். தூண்களுக்கு சமீபமாய் அமர்ந்துகொண்டு சந்துரு தோழர் கோழிச் சண்டைக் கதைகளை விலாவரியாய் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஆடுகளம் படத்தை ஒட்டிய நுட்பமான விவரிப்பாய் நீண்டு கொண்டிருந்தது. பவாவின் முதிர் வாசகர் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார். தன் சகோதரனும் மலையாளத்தில் எழுதுபவர்தான் என்றார்.

எல்லோருமாய் கிளம்பி அவர் வீட்டிற்குப் போனோம். மிகச் சாதாரணமான அந்த வீட்டு முகப்பைத் தாண்டி உள்நுழைந்தோம். பிரதான வீட்டின் முற்றத்தில் சாய்வு இருக்கைகளில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். வாரப்பத்திரிக்கைகளும் தினப்பத்திரிக்கைகளும் இருக்கைகளுக்கு முன்பிருந்த சிறு மேசை மீது கிடந்தன. அந்த எழுத்தாளர் எழுந்து எங்களை வரவேற்றார். தன் பெயர் மாடாம்பு குஞ்சுகுட்டன்  என அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவர் சொன்ன செய்திகள் எல்லாமும் எங்களை வியப்பில் ஆழ்த்தின. மலையாளத்தில் இருபது நாவல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகடாமி விருது பெற்றவர். தவிர ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்த கருணம் படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதற்காக தேசிய விருது பெற்றவர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகாமையிலிருந்த வீட்டின் பழமை எங்களை ஈர்த்தது. ஆம் 300 வருடப் பழமையான தரவாடு அது. ஒரு வீடு முன்னூறு வருடங்கள் இருக்கமுடியும் என்பதே திகைப்பாக இருந்தது. அவ்வப்போது அவ்வீட்டைப் பழுது பார்த்துக் கொண்டு அதன் பழமை சிதையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பிரதான வீட்டில்தான் நூலகம் இருந்தது. குறுகலான மண்படிகள் வழியாய் அவ் வீட்டின் முதல் தளத்தை அடைந்தோம். அவரின் மிகப் பழைய விஸ்தாரமான நூலகம் எங்களை வரவேற்றது. ஏராளமான புத்தகங்கள் மிகப் பழைய வாசனையுடன் உயிர்த்திருந்தன. அவர் பயன்படுத்திய பேனாக்கள், இங்க்புட்டிகள், எல்லாமும் காலத்தை அழித்துக் கொண்டு அப்படியே இருந்தன. இந்தப் பயணத்தின் மொத்த உன்னதத்தையும் அந்த நூலகம் எங்களுக்குத் தந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. சமகாலப் படைப்புகளையும் பார்க்க முடிந்தது. எழுத்தாளரின் தந்தை யானை வைத்தியம் அறிந்தவர். அந்தப்பகுதியில் பிரபலமானவர். சுவரில் மாட்டப்பட்டிருந்த அவரின் புகைப்படங்கள் இன்னும் இன்னும் பழமையைக் கண்முன் கொண்டுவந்தன.


ஒரு மிகப் பழைய வீட்டில் மூன்று பெரியவர்கள் முற்றத்து சாய்விருக்கைகளில் அமர்ந்துகொண்டு யாருக்காவது காத்துக் கிடக்கும் காட்சி எனக்குள் ஒரு ஓவியம்போல படிந்துபோனது. வெளியேறவே மனமில்லாமல்தான் அவ்வீட்டை விட்டு வெளியேறி விடை பெற்றோம்.

அதிகாலைக் குளிரை சுமந்துகொண்டு வீடுவந்தேன். போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவனை மெல்ல அணைத்தபோது கண்ணைத் திறக்காமல் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். எங்கபா போன? என்றான். கடந்த இரண்டு வருடத்தில் அவனை விட்டுப் பிரிந்திருந்த முதல் மூன்றுநாட்கள். இடையிடையே என்னைக் கேட்டு அழுததாக சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரத்திற்கு பயல்களை விட்டு நகரவில்லை.

புத்தகக் கண்காட்சியை ஒட்டி சென்னைக்குப் போனேன். என்னுடைய பால்ய நண்பர்களில் பெரும்பாலானோர் சென்னையில்தான் வாசம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அவர்களின் வீடுகளுக்குப் போகாதது குறித்து குறைபட்டுக் கொள்வார்கள். அதையும் நிவர்த்தி செய்துவிடும்பொருட்டு ஒரு நாளைக்கு ஒரு நண்பன் வீடு எனப் பிரித்துக் கொண்டு தங்கினேன். ஏழு வயதிலிருந்து நாங்கள் நண்பர்கள். இன்று வரை எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. எங்களை இணைத்திருந்த பால்ய நட்புச் சங்கிலி கண்ணாடியினால் ஆனது. அக்கண்ணாடியில் சதா மது நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஆக எங்கள் இரவுகள் முழுவதும் மதுவால் நிரம்பின.  இதனால் சென்னையில் சந்திக்க விரும்பியிருந்த இணைய நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில் கூட அழைக்க முடியாமல் போனது. ஒரு மதியமும் இன்னொரு மாலையும் புத்தகக் கண்காட்சிக்குப் போக வாய்த்தது. எழுத ஆரம்பித்து அதன் மூலமாய் நட்புத் தொடர்புகள் ஏற்பட்ட புதிதிலிருந்தே புத்தக கண்காட்சியின் மீது ஒரு ஏக்கம் இருந்தது. அங்கு நடக்கும் சந்திப்புகள் குறித்தெல்லாம் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு நாமும் அவசியம் போகவேண்டும் என நினைத்துக் கொள்வதுண்டு. அச்சில் எழுத்து வந்தபோது இந்த ஆர்வம் இன்னும் இரட்டிப்பானது. ஆனால் நேரில் அப்படி எதுவுமே இல்லை. கற்பனை தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த விஷயம். கற்பனையை விட இன்பம் தரக்கூடிய இன்னொன்று கிடையவே கிடையாது. கண்காட்சிக்குப் போன இரண்டு நாட்களில் நண்பர்களை சந்திக்க முடிந்ததுதான் ஒரே ஆறுதல். சந்தித்த நண்பர்களில் வாசுவைத் தவிர அனைவரையுமே முதன்முறையாய் சந்தித்தேன். மிஷ்கின் அலுவலகத்தில் ஒரு நாள் இரவு போனது.

திருவண்ணாமலை வந்ததும் மீண்டும் அடுத்த நிகழ்விற்கு தயாரானோம். எஸ்கேபி கல்லூரியில் இரண்டு நாட்கள் திரைப்பட விழா

- மேலும்

Monday, February 25, 2013

கடைசி நாளில் மழை பெய்தது - 1

விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி நாளில் கிளம்புவதற்கு ஆறு மணிநேரங்களுக்கு முன்புதான் மழையை தரிசிக்க முடிந்தது. பயல்களாகிய நாங்கள் பெரியவர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து மழையில் நனைந்து குதூகலித்தோம். திருவண்ணாமலையிலிருந்த ஒவ்வொரு நாளுமே புதிதாகத்தான் இருந்தது. எதிர்பார்த்திராத பல விஷயங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளுமே ஒரு வியப்பைத் தக்க வைத்திருந்தது. பவா வும் ஷைலஜாக்காவும் ஒரு நாளை அப்படியே சாதாரணமாய் கடந்து போய் விட அனுமதிக்கவே இல்லை. ஏராளமான நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், புதுப்புது மனிதர்கள் என ஒரு நொடி கூட சலிப்போ அலுப்போ இல்லாமல்தான் கடந்தது.

 ஊருக்குப் போய் சேர்ந்த அடுத்த நாள் மதியவாக்கில் வம்சிக்குப் போனேன். என் வருகையை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. பவா வைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டேன். எல்லோரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது. முருகன் காரில் எல்லோருமாய் கிளம்பி ஒரு நிச்சயதார்த்த விழாவிற்குப் போய் பிரியாணி சாப்பிட்டோம். மலையைப் பின்புறமாக சுற்றிக்கொண்டு சமுத்திர ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் ஆனந்த் காயத்ரி வசிக்கும் நிலத்திற்குப் போனோம். அங்கங்கு சிறுசிறு குடில்கள், மண்ணால் செய்த உருவபொம்மைகள், நிறைய பூச்செடிகள், பழமரங்கள் என இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த வயல்வெளி ஒரு சின்னஞ்சிறு சோலையாக மாறியிருந்தது. ஒரு பெரிய கொட்டகைக்கு அடியில் ஆனந்தும் காயத்ரியும் ஆதித்யாவும் பிற நண்பர்களோடு குழுவாய் சமைத்து, மண்தரையில் அமர்ந்து அந்த எளிய உணவை சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாய் வாழ்ந்துவிடுகிறார்கள். என்னுடைய வழக்கமான வீடு பற்றிய கற்பிதங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. ஒரு ஓலைக் கொட்டகைக்குள் அமர்ந்துகொண்டு, இடையறாது வீசிக்கொண்டிருக்கும் காற்றின் தழுவலை அனுமதித்தபடி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் உன்னதம் என்பதை மீண்டும் எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னுடைய வருங்காலம் பற்றிய கனவு கூட இதுமட்டுமேதான். இதை எவ்வளவு சீக்கிரம் அடைகிறேன் என்பதுதான் என் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். எனக்காக இங்கே ஒரு துண்டு நிலம் தன் எல்லா அற்புதங்களையும் உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது என்பதை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டேன்.

 இரண்டு நாட்கள் கழித்து கேரளாவிற்குப் போனோம். ஒரு டெம்போ ட்ராவலரில் பவா மற்றும் ஜெயஸ்ரீ குடும்பத்தாருடன் பயணம். பவாவிற்கு உணவு குறித்த பிரக்ஞை அதிகம். முதல்நாளே அரூர் ஹோட்டலுக்கு போன்செய்து இவ்வளவு பேர் வரப்போகிறோம் எல்லாமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற தகவலைத் தந்துவிட்டிருந்தார். நாங்கள் போய்சேர்ந்த போது எல்லாமும் இருந்தது. ஒரு முழு ஆட்டின் சகல பாகங்களையும் தனித்தனியே விதம்விதமாய் சமைத்துத் தருகிறார்கள். ருசியும் அற்புதம். அந்தக் காலை வேளையில் வயிறு புடைக்க சாப்பிடமுடிந்தது. திருப்பூரை நெருங்க நெருங்க அரங்கசாமி யிடமிருந்து தொடர் அழைப்புகள். மதிய உணவை அவருடனும் அவர் பயல்களுடனும் வைத்துக் கொண்டோம். கேரள எல்லையில் ஒரு சிற்றூரில் பவாவின் வாசக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மாலைச் சந்திப்பில் கலந்துகொண்டோம். பவா பாவண்ணனின் பயணம் கதையையும் ஜெமோவின் ஊமைச் செந்நாய் கதையையும் சொல்லி முடித்தபோதுதான் எங்களை ஏற்கனவே இரவு சூழ்ந்திருந்ததை உணர்ந்தோம். ராத் தங்கல் அருண் வீட்டில். ஊர் பெயர்களெல்லாம் மறந்துவிட்டேன். வளைந்து நெளிந்து போகும் மங்கை மேகக் கூந்தல் பாதைகள். தெருவிளக்குகள் ஏதுமற்ற அசல் இருள் பயண முடிவில் ஒரு தன்னந்தனி வீட்டை அடைந்தோம். எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த நட்பின் இணக்கங்கள் நல் உணர்வைத் தந்தன.

  மீண்டும் காலையில் வளைந்து நெளிந்து செல்லும் அதே பாதைகளில் பயணம். வழிநெடுக பசுமையின் ஊழித் தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டே பயணித்தோம். பவாவின் நண்பர் அருணின் இரப்பர் தோட்டங்களை மலையேறிப் பார்த்தோம். மாலை போர்ட்கொச்சினில் நடைபெற்றுக் கொண்டிருந்த பினாலே வைப் பார்க்கப் போனோம். கண்களை விரிய வைத்த நிகழ்வு அது. உலகின் பல பாகங்களிலிருந்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் இடம்பெற்றிருந்தன மாயாவின் படைப்புகளை கண்டேன். அந்த இடமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மிகப் பழைய பிரெஞ்சுக் கட்டிடங்கள். தொட்டடுத்து கடல். புகைப்படங்கள், ஓவியங்கள், அசைபடங்கள், டாக்குமெண்டரிகள், நுண்கலைகள் என சகலமும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தன. வல்சனை சந்தித்துப் பேசினோம். அவர் காட்சிக்கு வைத்திருந்தவற்றைப் பார்த்து வியந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை என மிகை உணர்ச்சி ததும்ப ஷைலஜாக்காவிடம் சொன்னேன்.

  ஃபோர்ட்கொச்சினின் Ambiance எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட பாண்டிச்சேரியின் வார்ப்பு. இந்த பிரெஞ்சுக்கார கிராதகர்கள் எங்கே போனாலும் தமக்கான தனித்தன்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனந்தின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் எங்களுக்கு உவப்பில்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் என்னால் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள முடியும். இந்த ஆறுவருட அயல்வாழ்வில் என் தோல் தடித்துவிட்டது. ஆனால் பவா மிகத் தூய்மையான திருவண்ணாமலைவாசி. அவரால் ஒருபோதும் நகர நெருக்கடிக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட முடியாது. நண்பர்களைத் தொடர்புகொண்டு திருச்சூரை அடுத்திருக்கும் ஒரு நண்பர் வீட்டில் தங்க முடிவு செய்தோம். நாங்கள் எடுத்த முடிவின் மகத்துவம் குறித்து அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 மேலும்

Featured Post

test

 test