Tuesday, November 6, 2012

அத்தியாயம்- ஏழு

என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது. இதே இவர்கள் ஒரு காலத்தில் என் பேச்சைக் கேட்க கியூவில் நின்றார்கள். அந்தி சாய்வதற்கு முன்னமே ரம் புட்டிகளை இடுப்பில் மறைவாய் சொருகிக்கொண்டு வந்துவிடுவார்கள். மலையடிவாரம், வயல்வெளி, சந்தடியில்லாத ரயில்வே கேட் என தினம் ஒரு இடம். ஆறு மணிக்கு பேச ஆரம்பித்தால் முடிய பத்து பதினோரு மணி ஆகும். நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பேன். வருபவர்கள் கையிருப்பிற்கேற்ப ஸரக்கை வாங்கி வந்துவிடுவார்கள். கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். முப்பத்தைந்தைக் கடந்தவர்களின் கேள்விகளில் செக்ஸ் அல்லது ஆன்மீகம் தாண்டி வேறெதுவும் இருக்காது. கூட்டுக் கலவி, நிர்வாணம், சுதந்திரம் பற்றியெல்லாம் அசராமல் பேசுவேன். எதையாவது அச்சுபிச்சுவென்று சொல்லிவிட்டாலும் இறுதியில் ஓஷோ இப்படித்தான் சொல்றார் என முடிப்பேன். "இண்டலக்ட்ஸ் ஆர் காம்ளிகேடட் யு "நோ என்பேன். கூட்டம் வாயைப் பிளக்கும். எந்த மாதிரியான கேள்வியையும் ஓஷோ, ரமணர், வாத்சாயனர், கொக்கொகே சாஸ்திரம் என்பதில் போய் முடித்தால்தான் கேட்டவர்களுக்கு நிம்மதி.

 மதங்கள்- குறிப்பாய் இந்து மதம், திராவிடம், பெரியார், தமிழக அரசியலின் இன்னொரு பக்கம், சினிமா கிளுகிளுப்பு,நடிகை நியூஸ்கள் இதெல்லாம் முப்பதைத் தொடுபவர்களின் தளம். நடிகைகளைப் பற்றி பேசும்போது மட்டும் ஒரு செயற்கையான உற்சாகத்தை பேச்சில் வரவழைத்துக் கொள்வேன். அட்டு பீசான நடிகையை பேரழகி என சிலாகிப்பேன். உச்ச நட்சத்திரங்களும் இயக்குனர்களும் அவள் காலில் விழுந்து கிடந்தார்கள் என்பேன். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பிசினெஸ்மேன் அவளுக்குத் தங்கத்தில் ப்ரா செய்து கொண்டு போனான் என்பேன். அந்த கணத்திலேயே அந்த நடிகைக்கு ஓரிருவர் திடீர் தீவிர ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த நடிகை நடித்த மகா த்ராபையான படங்களின் டிவிடி க்களைத் தேடி அலைவார்கள். காவியத்தைப் பார்ப்பதுபோல் அப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் சிலாகிப்பார்கள். "உங்கள் கண் வழியே அவளைப் பார்த்தேன் அவள் பிரபஞ்சத்தின் பேரழகி" என வாரமலருக்கு கவிதை அனுப்புபவன் அடித்துவிடுவான்.

  புதிதாக குடிக்க ஆரம்பிக்கும் பயல்களுக்கு உரை கொடுப்பதுதாம் இருப்பதிலேயே சுலபம். குடியின் பெருமை பற்றிப் பேசினாலே போதுமானது. விஞ்ஞானப் பூர்வமாய் குடியின் பலன்கள், குடி உடலுக்கு செய்யும் நன்மை, குடிகாரப் பிரபலங்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்த கூத்து. பெண் குடிகாரர்கள், பெருங்குடிகார நடிகைகள் என தகவல்களாய் அள்ளி விட்டாலே போதும். பயல்களுக்கு போதை பன்மடங்காகி காசை ஸரக்கில் விசிறுவார்கள். பெரிய குடி என்பது சிறுபயல்களோடுதான் சாத்தியப்படும். அவர்களுக்கு நானொரு மகாபுருஷனாகத் தெரிந்த காலமும் உண்டு. இந்தக் கூட்டம் தன்னிச்சையாக அமையும். பொதுவாக மாலை எந்தக் குழு சீக்கிரம் வருகிறதோ அவர்களோடு இணைந்து கொள்வேன். என்னைப் போன்ற கலைஞர்கள், சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள் உழைப்பிற்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். உழைத்தால் செக்கு மாட்டு வாழ்கைக்கு மூளை பழகிவிடும். என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியாது என்பது போன்ற வாசகங்களால் இந்த கூட்டத்தைக் கட்டிப் போட்டும் வைத்திருந்தேன். புதுப்பயல்களில் ஓரிருவர் என் மொத்த செலவையுமே ஏற்றுக் கொண்டனர். உணவு, ஆடைகள், நல்ல இருப்பிடம் என எல்லாமும் கிடைத்தது. பல தடிதடியான புத்தகங்களையும் ஓரிருவர் வாங்கிக் கொண்டு வந்து கர்ம சிரத்தையோடு கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த நாவல் குறித்த விமர்சனத்தை மறக்காமல் கேட்பார்கள். அதிரடியாக சொல்வேன். அதில் ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுதினவனின் மூளை கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே செத்துப் போய்விட்டது. கையிருப்பை எல்லாம் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தவன் புளங்காகிதமடைந்து இதல்லவா விமர்சனம் என்று விட்டு முழுத் திருப்தியாகப் போவான்.

  எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது கும்பலில் ஒருவனால் வந்த வினை. ஒருநாள் அவன் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது எனக் கேட்டுவிட்டான். திக் கென்றானாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல். நான் சிந்தனையாளன் மட்டுமேதான். அதை நாவல் எனும் செயலாக்கி அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க தயாராக இல்லை என்றேன். ஒருவருக்கும் அப்பதில் உவப்பில்லாமல் போய்விட்டது. நாவல் எழுதுங்கள் என்பதை அந்தக் குழுவே சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்புத் தாளாமல் மெல்ல முப்பத்தைந்து வயது கும்பலை கைகழுவிவிட்டு முப்பது கும்பலிலும் இருபது கும்பலிலும் மட்டும் தலைகாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியோ இந்த நாவல் பேச்சு மற்றவர்களுக்கும் பரவி நாவல் எழுதுங்கள் நாவல் எழுதுங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களின் தொல்லை தாங்க முடியாது போன ஒரு கட்டத்தில் நாவல் எழுதுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.

  எதை எழுதலாம் என்பது குறித்த சிந்தனைதான் இருப்பதிலேயே நெருக்கடியானது. எப்படி உட்கார்ந்து யோசித்தாலும் ஒரு மண்ணும் மூளையில் உதிக்கவில்லை. சில நாட்கள் எழுத்து குறித்த சிந்தையில் இருப்பதாகச் சொல்லி குடிக்க கூப்பிட்டவர்களை கழற்றிவிட்டேன். ஆனாலும் பக்கிகள் "நாவல் என்னாச்சு சார்?" என்பதைக் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தனர். நாளையடைவில் நாவல் என்னாச்சு சார் என்ற கேள்வியின் மூலமாய் என்னை கேலிசெய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நாவல் என்னாச்சு என்பதை ஒரு வித நமுட்டுச் சிரிப்போடு எல்லாக் குழுவினரும் கேட்கப் பழக ஆரம்பித்த பிறகு அவமானம் தாங்காமல் சரி வருவதை எழுதுவோம் என உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்தி எழுதுவதற்குள் மூச்சு வாங்குகிறது. ஒரு பத்தியிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். சின்ன ர வா? பெரிய ற வா சின்ன ன வா பெரிய ணா வா என்பது குறித்த சந்தேகமே நள்ளிரவு வரை ஓடும்.

  சரி இனி நாவலை வாயால் எழுதுவோம் என பழைய ஃபார்முக்கு வந்தேன். மாலை குடிசந்திப்புகளில் உற்சாகமாய் கலந்துகொண்டேன் உலகத்தின் எந்த மூலையிலும் எழுதப்படாத நாவலை எழுதப்போவதாக சொன்னதும் ஆர்வமானார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த எவராலும் எழுதப்படாத நாவல் தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன நாவல் என்றதற்கும் தயாராய்தான் இருந்தேன். "ஒரே நாவல் ஆனால் பல அடுக்குகள். ஒரு அடுக்கு க்ரைம். ஒரு அடுக்கு இலக்கியம். இன்னொரு அடுக்கு இதை இரண்டையும் எழுதும் நான். அதாவது எழுத்தாளர்களை எழுதும் எழுத்தாளன். எப்படி இருக்கு?" என ஆர்ப்பாட்டமாய் சிரித்தேன்.

  முப்பத்தைந்துகளிடம் "இந்த நாவல் ஒரு அடல்ட்ரி. அதாவது க்ரைம் நாவல் எழுதுபவனின் அடல்ட்ரி. ப்ளஸ் இலக்கிய எழுத்தாளினியின் அடல்ட்ரி ப்ளஸ் க்ரைம் நாவலுக்குள் வரும் ஏராளமான அடல்ட்ரி ப்ளஸ் இலக்கிய நாவலில் வரும் அடல்ட்ரி .. அடல்ட்ரி அடல்ட்ரி அடல்ட்ரி "எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினேன்.

  முப்பதுகளிடம். "இந்த நாவல் ஒரு புதிர். அதாவது maze அதாவது லாப்ரிந்த். அதாவது ஒரு நாவலுக்குள் ஏராளமான புதிரடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலேயும் ஒவ்வொரு பரவசம். புதிர்தன்மை பரவசம் என்லைட்மெண்ட். யா என்லைட்டண்டு" என்றேன்.

  இருபதுகளிடம் "இந்த நாவல் ஒரு கொண்டாட்டம் பரவசம், குடி, பெண், காமம், மேலும் குடி காமம் உடல் அவ்ளோதான் உடலுக்கு பேதம் கிடையாது. ஆணும் ஆணுமான உடல் பெண்ணும் பெண்ணுமான உடல் அல்லது க்ராஸ்ஃப்ங்க்சனல் உடல்" என்றேன்

  ஒரு மாதம் பிழைப்பு ஓடியது. அடுத்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். "எத்தன பக்கம் சார் எழுதி இருக்கீங்க. படிச்சு பாக்கலாமா?"

  "அப்படிலாம் எடுத்த உடனேயே எழுதுற முடியாதுப்பா. ஐரோப்பால ஒரு நாவல பத்து வருஷமா எழுதுவாங்க. ஏன் ஆயுள் முழுக்க ஒரே ஒரு நாவல் எழுதினவங்கலாம் இருக்காங்க. இது என் கனவு நாவல். மெதுவாத்தான் எழுதனும். தவிர அதுக்கான மனநிலை வேணாமா"? கேள்வி கேட்ட கூட்டம் சரியெனப் போய்விடும். இப்படியாக ஒரு மாதம் ஓடியது.

  அதற்கு அடுத்தது நேர்ந்தவைகளை பிறகு சொல்லும் மனநிலை இருந்தால் சொல்லுகிறேன். ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுபோல இவர்கள் என்னைப் பார்த்தாலே ஓடிக் குதித்து தப்பி தலைமறைவாகிவிடுகிறார்கள் அவ்வளவுதான் சொல்ல வந்தது.

  மேலும்

Monday, November 5, 2012

அத்தியாயம் ஆறு

பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது. நேற்று மாலை இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்பகுதியைக் கடந்தோம். பார்த்த உடனேயே பிடித்துப் போன இடம். நாளைய விடியலை இங்கிருந்துதான் துவங்க வேண்டுமென நேற்று காரில் போகும்போதே நினைத்துக் கொண்டேன். அதிகாலையில் விழித்துக் கொள்ளும் பழக்கமெனக்கு. கடந்த இருபது வருடங்களாக ஆறு மணிக்கு மேல் ஒரு நாளும் தூங்கியதாய் நினைவில்லை. பதின்மத்தின் துவக்கங்களில் மிகப் பிடித்தமான வேலையே தூங்குவதுதான். அம்மா கும்பகர்ணி எனத்தான் கூப்பிடுவார்கள். கும்பகர்ணி பெயரை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு வந்தது. என் வாழ்வின் மிகப்பிரமாதமான காலகட்டமது. பள்ளிப் படிப்பு முடித்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மனம் அவ்விஷயங்களை நினைக்க விரும்பாமல் உதறிக் கொண்டு மலையையும் நீர்வெளியையும் பார் என்றது.

துர்கா இந்த மலைநகரத்தைத் தான் தேர்வு செய்தாள். அவள் தேர்வுகளின் மீது எனக்கு மறுபரிசீலனையே இருந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாய் அவளுடைய தேர்வுகளின்படிதான் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. துர்கா என்னுடைய சலிப்பான நிகழையே கிட்டத்தட்ட மாற்றியமைத்தாள். துர்கா... மிதமான குளிர் விரவிய அதிகாலையில் கிசுகிசுப்பாய் அவள் பெயரை உச்சரித்து சிரித்துக் கொண்டேன். அதிகாலை மேகங்கள் சோம்பலாய் நகராமல் நின்றுகொண்டிருந்தன. சலனமே இல்லாத நீர்பரப்பு. பிப்ரவரி மாதத்தின் இளந்தென்றல் காலை. அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். கரையோர உயர் மரங்கள் கிளைகள் முழுக்கப் பூக்களைச் சூடியிருந்தன. என்ன பெயர் என்றெல்லாம் தெரியவில்லை. மஞ்சள் நிறச் சிறுசிறு பூக்கள் காற்றிற்கு தூறலாய் நீரின் மீது விழுந்துகொண்டிருந்தன. துர்காவைக் கேட்டால் இந்த மரங்களின் முழு வரலாறையும் துல்லியமாக சொல்வாள். எப்போது பூக்கும் எப்படிக் காய்க்கும் என்பதையெல்லாம் அவள் சின்னஞ்சிறு கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க மனம் பிரியத்தில் கசியும்.

அப்பாவிற்கு மலை நகரங்கள் பிடித்தமானவை. அவர் தம்முடைய இளம் பிராயத்தை பணத்திற்காய் பாலைவன நாடுகளில் தொலைத்திருந்தார். என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை வருடத்திற்கொருமுறை நிறைய சாக்லேட்டுகளோடு வரும் இளம் அப்பாவின் பிம்பம் நன்றாய் நினைவிருக்கிறது. பாட்டி இறந்த பிறகு எங்களோடே நிரந்தரமாக வந்துவிட்டார். அப்பா மிக நிதானமானவர். வார்த்தைகளை அவ்வளவு கவனமாக, கச்சிதமாகப் பேசுவார். அம்மாவிடம் கூட அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. ட்யூஷன் போகும் காலைகளில் ஸ்கூட்டரில் கூட்டிப் போய் விடும் அப்பா. வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அப்பா. கணக்கு சொல்லித் தரும் அப்பா. ரஜினி படம் கூட்டிப் போகும் அப்பா. கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் கூட்டிப் போகும் அப்பா என எல்லாமும் அப்பாதான். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதும் பொறியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க படிவம் வாங்கப் போன அப்பா சடலமாகத்தான் திரும்பவந்தார். சாலை விபத்து. ஸ்கூட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் போய்விட்டது. இறந்த அப்பாவின் உடலைப் பார்க்கவேயில்லை. பயமாக இருந்தது. இந்த நொடி கூட வயிறு பிசைகிறது. அந்த கணத்தின் தாக்கம் இம்மி அளவு கூட குறையவில்லை. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்குமோ?

தலையை உலுக்கிக் கொண்டேன். சதா பிரச்சினைகளில் மூழ்கித் திளைத்து தன்னை வருத்தி இன்பம் காணும் இம்மனநிலையை விட்டொழிக்கவே முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். பச்சை வாசம். விநோதமான பூக்களின் மணம். மூளை சுறுசுறுப்பானது. இருள் முழுவதுமாய் விலகி பச்சை நிறம் பிரகாசிக்க ஆரம்பித்தது. எங்கெங்கிலும் பச்சை. பசுமை. மரங்கள். பறவைகள் விழித்துக் கொண்டுவிட்டன. ஏராளமான கிளிகள் தென்பட்டன. பெரிய மரங்களின் பொந்துகளிலிருந்து ஓரிரு கிளிகள் எட்டிப்பார்த்தன. திரும்பிப்பார்த்தேன். ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போலிருந்தது. துர்கா விழித்துக் கொண்டு தேடுவாளே எனத் தோன்றியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து இந்த இடம் பத்து நிமிட நடைதான். மீண்டும் உட்காராமல் விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் துர்கா வந்து கொண்டிருந்தாள். த்ரீபைஃபோர்த் டாப்ஸ் சகிதமாக வந்து கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். துர்கா நல்ல கருப்பு. நல்ல உயரம். அவள் தோள் உயரம்தான் இருப்பேன். குட்டை யாக முடிவெட்டிக் கொள்வாள். அடர்த்தியான சுருள் முடி. கொஞ்சம் விட்டு வெட்டிக்கோயேன் என்றாள் ப்ச் என மறுத்துவிடுவாள். பார்த்த உடன் உற்சாகமாக கையசைத்தாள். சிரிப்பு வந்தது. வந்ததும் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.

”வெதர் செம ப்ளசண்ட் இல்ல ”

 ”ம்ம்”

”மைண்ட் ஃப்ரீ ஆகிடுச்சா”

”முழுசான்னு சொல்லிட முடியாது. ஆனா நல்லாருக்கு. தேங்க்யூ”

”ம்ம் சரி சாப்டுட்டு ஒரு குட்டி ரவுண்ட் அடிக்கலாம். பதினோரு மணிக்கு வெயில் அடிக்க ஆரம்பிச்சிடும். ஆக்சுவலா இது ஏழைகளின் ஊட்டிதான் ஸோ எப்பவும் குளிர் இருக்காது “

”அட அப்படி ஒரு பேர் இருக்கா”

”சிலர் சொல்வாங்க. தினத்தந்தில கூட அப்படித்தான் எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்”

விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தோம். துர்கா தோளில் கை போட்டுக் கொண்டேதான் வந்தாள். என் உயரம் அவளுக்கு கை போட்டுக் கொண்டு நடக்கத் தோதாய் இருக்கும். சரிவுக்கு இடப்புறம் ஏலகிரி என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் ஐப் பார்த்தேன். ஒரு மஞ்சள் நிறப் பறவை போர்டின் மேல் சாவகாசமாய் அமர்ந்திருந்தது

”ஏய் அங்கபோரு போர்ட் க்கு மேச்சா ஒரு பறவை.”

”அதுதான் மாங்குயில்”

”அட மாங்குயில் ந்கிறது பறவ பேரா? நான் சினிமாப் பாட்டுன்னு இல்ல நினைச்சேன்”

”ஆமா இது மாம்பழக் கலர்ல இருக்கில்லயா அதான் அந்த பேர் தவிர சார் மாமரத்தை சுத்தியேதான் கிடப்பார்”

”அப்ப பூங்குயில்னும் ஒண்ணு இருக்கா”

”ஓ இருக்கே”

”கூவின பூங்குயில் குருகுகள் இயம்பின னு திருப்பள்ளி எழுச்சிலாம் பாடியிருக்காங்களே”

”எனக்கு ராமராஜன் பாட்டு மட்டும்தான் தெரியும் ”

சிரித்தாள்.

இந்தக் கருப்புப் பெண்கள் சிரிக்கும்போதுதான் எத்தனை வசீகரம். என் தோளைத் தாண்டி நீண்டிருந்த அவளின் விரல்களைப் பிடித்துக் கொண்டேன்.

- அத்தியாயம் ஒன்று வீணாவின் தலைப்பிடப்படாத புதிய நாவல்

”பிரமாதமான துவக்கம் வீணா. மனசு அப்படியே அந்த மலைப்பிரதேசத்துக்கு போய்டுச்சி”

கட்டிலின் ஹெட்போர்டில் தலையணை வைத்துச் சாய்ந்தபடி வீணாவின் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

”மொத்தம் ஐந்து அத்தியாயம் தாண்டா எழுத முடிஞ்சது”

”முடிச்சிட்டேன்னு சொன்ன?”

”இல்ல முடிக்க முடியல. இந்த ரெண்டு பெண்களும் என்ன ரொம்பவுமே தொந்தரவு பன்றாங்க”

”ம்ம் நாவல் எப்படிப் போகும்னு யூகிக்க முடியுது. நீ என்ன லெஸ்பியன் ஃபார்ம் குள்ள போகப் போறியா?”

”தெரியலடா ”

”வேணாம். இதுல நல்ல சென்ஸ் இருக்கு. புரட்சி, உடல்தத்துவம், புண்ணாக்குன்னு சுத்த விட்டுடாதே. பொயட்டிக்கா கொண்டுபோய் மெலோட்ராமடிக்கா முடிச்சிடு”

சிரித்தாள். ”நீ இப்படி சொல்வேன்னு தெரியும்”

”ரைட்டு விடு. ரெண்டுபேருக்கும் நடக்கும் கலவிய பத்து பக்கத்துக்கு ததும்ப ததும்ப எழுதி வை. கோடார்ட், பெலினி, பியானோடீச்சர் எல்லாத்தையும் சைட்ல பாத்துக்க. இருக்கவே இருக்கு டிண்டோ ப்ராஸ் மொத்த படத்தையும் பாத்து உடலதிகாரத்தை களையும் வழிமுறைகளை விளக்கி சுதந்திரத்தின் உச்சத்த துர்கா காளியின் வடிவமாகி தொட்டாள் னு அடிச்சிவிடு. நவீன இலக்கிய வாசகர்கள் சிலிர்த்துட்டு படிப்பாங்க”

”வேற எப்படி எழுத சொல்ற? துர்காவும் ஷங்கியும் வாழ்நாள் முழுக்க தோழிகளாக, அன்பு நிறைந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்னு முடிச்சிடவா? ”

”கூட ஒரு காதல சேத்துக்க. ஒரு ஆண் உள்ளாற பூந்து துர்காவ கல்யாணம் ற பேர்ல ஏமாத்திடுறான். அவன் கூட வாழமுடியாம துர்கா மறுபடியும் ஷங்கி கிட்ட வந்து சேர்ந்துடுறா. சுபம்”

 ”கண்மணி மாத இதழ்ல பப்ளிஷ் பண்ணிடலாமா? காறித் துப்பிடுவேன். ஓடிப்போய்டு.”

”அடங்குடி. நீ என்ன பெர்ஸா எழுதி கிழிச்சிட போற? ஒண்ணு இந்த பேட்டர்ன் இல்லனா பிரெஞ்ச் பாதிப்பு பேட்டர்ன். வேற என்ன சொல்லிட முடியும் இந்த தளத்த வச்சிட்டு”

”அய்யனார், லிசன் நீ ஒரு சாகித்ய அகடாமி வின்னர் கிட்ட பேசிட்டு இருக்க. தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அடையாளம் நானு. மைண்ட்ல வச்சிக்க”

”கண்ணு உனக்கு விருதுகொடுத்தப்ப யார் நடுவரா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்”

”அசிங்கமா பேசாத உன்கூட படுத்திட்டா எல்லார்கூடவும் படுத்துருவேன்னு நினைக்கிறியா?”

”சே அப்படி சொல்லல. ஆனா சாகித்ய அகடாமி விருதுலாம் பெரிய அங்கீகாரம்னு நீ நினைச்சின்னா உன்ன விட முட்டாள் யாரும் கிடையாது. ஒண்ணுமே வேணாம் உனக்கு முன்னாடி யார்யார்லாம் இந்த விருத வாங்கி இருக்காங்கன்னு நீயே கேட்டுப் பாத்துக்க”

சிரித்துவிட்டாள் ”யெஸ். ஐ அட்மிட்”

”அவ்ளோதான் வீணா. இந்த நவீன இலக்கியம் நவீனத்துக்குப் பிறகான இலக்கியம் எல்லாமே பம்மாத்து. ”

”அப்போ பல்ப் எழுத்துதான் நிஜம்னு சொல்லவர்ரியா?”

”இல்ல பல்ப் எழுத்தலாம் எழுத்து ஸ்கேல்ல வச்சிப் பாக்க கூட தகுதி இல்லாதது”

”அப்புறம் ஏன் மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுற?”

 ”எனக்கு வேற எதுவும் தெரியாதே. இது தொழில் வீணா. சமூகம், புரட்சி, இலக்கியம், மேன்மை னு எந்த ஸோ கால்டு ஏமாத்து வேலையும் இல்லாத தொழில். ஐ எண்டர்டைன் பீபிள் தட்ஸ் ஆல். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது”

”ஸப்பா போதும்டா தலவலிக்குது. நீ உன் ரூம்க்கு போ. நான் தூங்க போறேன்”

”பாவி மெட்ராஸ்ல இருந்து மழைல அடிச்சி புடிச்சி நீ கூப்டேங்கிறதுக்காக வந்திருக்கேன். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ரொம்ப அசால்டா கெளம்புன்ற?”

”ஓ அப்படியா சரிங்க சார் கிளம்புங்க சார் நாளைக்கு காலைல பாப்பம் சார்”

கட்டிலிருந்து எழுந்து போய் வீணாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“எப்படி இருக்க பொண்ணே”

”நல்லாருக்கேன் டா”

”சாரி கசாமுசான்னு பேசி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனா”

 ”நோ மேன். நீ உன் பார்வைய சொல்ற இதுல என்ன தப்பு?”

”சரி ஸரக்கு என்ன வச்சிருக்க”

”நோ சரக்கு, நான் எழுதனும். நீ கெளம்பு”

 ”இன்னிக்கு மட்டும். ப்ளீஸ் ப்ளீஸ்”

 ”பாவி மூட கெடுக்காத”

”நோ ஐ கெடுக்கபோவபையிங்க் யூ ஒன்லி”

”கருமம் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. ரெடி பண்ணி வைக்கிறேன்”

”தேங்க்யூ டார்லிங்”

”ஆனா மவனே குடிச்சிட்டு நான் தான் ஒலகத்தின் தலைசிறந்த எழுத்தாளினி. என்னோட ஒரு வரிய படிச்சிட்டு நாள் முழுக்க தேம்பி தேம்பி அழுதேன்னு லாம் அடிச்சி விட கூடாது. இப்ப எப்படி என்ன காய்ச்சி எடுத்தியோ அப்படியேதான் விடியுற வர பேசிட்டு இருக்கனும். ஓகேவா”

”ஓகே மா டன்”

- மேலும்

Saturday, November 3, 2012

அத்தியாயம் - ஐந்து


கோவை தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு ட்ரைவர் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தேன். வீணா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. மெதுவா போங்க போய்டலாம் என்றேன். வீணா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு நாவலை நாங்கள் இருவருமாய்த்தான் எடிட் செய்தோம். எங்களின் முரணான முதல் சந்திப்பிற்குப் பிறகு வீணா நினைவை விட்டு அகன்றே போனாள். மீண்டும் அவளை சென்ற வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்துதான் சந்தித்தேன். ஏற்கனவே வெளிவந்த என்னுடைய மூன்று அல்லது நான்கு மாத நாவல்களை தொகுத்து புத்தகங்களாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு சமீபமாய் பதிப்பிக்க ஆரம்பித்திருந்தோம். விச்சுவின் அடுத்த சக்சஸ்ஃபுல் புராஜக்ட். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான். சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான்.. நம் புத்தகங்கள்தாம் .. என்ற அவன் உற்சாககுரலை என்னால் நம்பக் கூட முடியவில்லை. வாசகர்கள் உன்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற நச்சரிப்பின் காரணமாக ஒரு மாலை அரங்கிற்கு சென்றிருந்தேன். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் தடுமாறிக் கொண்டிருந்தேன். கூட்டம் குறைந்ததும் அரங்கை விட்டு வெளியேறி கண்காட்சியை சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் வீணா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளை எனக்குப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தேன். பேச்சினூடாய் என்னை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் என்னை வரவேற்றார். வீணாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு என்னைப் பிடிக்காதது, ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானேன். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, வீணா தன் உரையை முடித்த போது பலத்த கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை சொன்னேன். கூட்டத்தில் ஒரு குரல்

“ ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. நான் பொருட்படுத்தவில்லை. வீணாவிடம் போய் நன்றாகப் பேசினீர்கள் என்றேன்.புன்னகைத்தாள். இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது என கிசுகிசுத்து விட்டு வெளியேறினேன்.

 அடுத்த நாள் காலை சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி என் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த என்னை மார்பில் மிதித்தனர். அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். ட்ரைவர் ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்கு தொலைபேசினார். விச்சுவை விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். விச்சுவும் போலிசும் வந்து மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அம்மா ரத்தம் வழிந்த என் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தேன். அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னேன். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. ஏன் என்னை வந்து அடித்தார்கள்? என்பது புரியவில்லை. சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன். ட்ரைவருக்கும் வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை

ஸ்டேசனில் விச்சு கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. எனக்கு குழப்பமாய் போயிற்று, பின் அறைக்குப் போனேன். கான்ஸ்டபிளடம் அடிப்பதை நிறுத்த சொன்னேன். மூவரையும் பார்த்து

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது நான் குழப்பமாய் பார்த்தேன் ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

எனக்கு உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன். மற்ற இருவரையும் பார்த்தேன். நான் தான் காட்டுச்சித்தன் என்றான் ஒருவன். இன்னொருவன் மித்ராங்கி என்றான். மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“நீ வீணாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” என்றான் காட்டுச்சித்தன்.

நான் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றேன்

 மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனேன். விச்சுவிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் வீணா” என்றேன். விச்சு நிமிர்ந்து பார்த்தான். அப்ப வீணா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுறேன் என்றான். நான் எதுவும் பேசவில்லை. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா என சொல்லிவிட்டு, எஸ்.ஐ தொலைபேசியில் ரைட்டர் வீணாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே வெளியில் போனேன். வீணாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது ட்ரைவரை கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னேன். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் அய்யனார் “

“ஆமாங்க”

“வீணா பேசுறேன் “

அமைதியாக இருந்தேன்

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போன அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

அமைதியாக இருந்தேன்

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி அய்யனார் இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

உடனே விச்சுவிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னேன். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் அனுபவம் இருந்திருக்கும்போல எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார். அடுத்த நாள் காலை மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு வீணா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தேன். வீணாதான் திறந்தாள். என் மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள்.அவளின் இரவு உடை உடல் என்னையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் அமர்ந்தேன். போலிஸ் ஸ்டேசனுக்கு அவளை வரவழைத்ததிற்காக மன்னிப்பு கேட்டேன். பப்ளிஷர் விச்சு உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது என புளுகினேன்.

“அவர் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பா வே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தேன்.

அடுத்தடுத்த தினங்களில் நெருக்கமாகி விட்டோம். தினம் ஒருமுறையாவது பேசிக் கொண்டோம். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என நாங்கள் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. வீணா மீது ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் என்னை அவளின் பக்கம் ஈர்த்தது உடலாக இருந்தாலும் மெல்ல அவளின் குணமும் எனக்குப் பிடித்துப் போயிற்று. வீணாவிற்கு என்னை விட பத்து வயது அதிகம். திருமணமாகி டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். வீணாவுடைய முதல் நாவல் நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. வீணாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் எங்களின் அறிமுகம் நிகழ்ந்தது.

 ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு வீணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க அய்யனார்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினேன். கதவைத் திறந்த வீணா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

 “சார் வந்துட்டோம்”

ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கினேன். ட்ரைவர் கோவையில் உறவினர் வீட்டுக்குப் போவதாய் சொல்லியிருந்தார். மழையாக இருக்கவே காலையில் போகிறீர்களா என்றேன் இல்ல சார் கிளம்புறேன் ஏதாவது மாற்றம் இருந்தா போன் பண்ணுங்க எனச் சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார்.. மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். வீணாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனேன்.

---மேலும்

அத்தியாயம் – நான்கு


ஸ்வப்னா தன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை பின் புறம் இழுத்துப் பிடித்து குத்திட்டு நிற்பதை கண்ணாடியில் நன்கு தரிசித்தாள். தலையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்துப் பார்த்து காதில் மின்னும் வைரத்தை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். பின்புற மேடுகளை தொட்டுப் பார்த்து உள்ளாடை இல்லையென்பதை இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டாள். ராகேஷிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சன்னமான வெள்ளை டாப்ஸ் மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் கட்டிலின் மேல் கிடந்த டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியேறினாள். ஹாலில் அமர்ந்து கொண்டு 40 இஞ்ச் எல்சிடி திரையை உயிர்ப்பித்தாள். சன் மியூசிக்கில் வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள். காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் குமிழ் வழியாய் பார்த்தாள். பின்பு ஒரு புன்னகையை உதட்டில் பொருத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். 

ராகேஷ்! 

சரியாய் ஐந்தடி ஏழு அங்குலம். கோதுமைக்கும் சற்று கூடுதலான நிறம். வெள்ளை ட்ராக் சூட்டிலிருந்தான். ஆசையாய் அவனை டார்லிங் எனக் கட்டிக் கொண்ட ஸ்வப்னாவை லேசாய் விலக்கினான். 

"வியர்வை யா இருக்கு.. சரி சொல்லு எதுக்கு அர்ஜெண்டா வர சொன்ன?"

" உங்கள நாலு நாளா பாக்காம ஏங்கிட்டேன் ராகேஷ். இன்னிக்கும் பாக்கலனா செத்துடுவேன்னு தோணுச்சி அதான் அர்ஜெண்டா வர சொன்னேன்"

முகத்தைப் பாவமாகவும் கண்களை கிறக்கமாகவும் வைத்துக் கொண்டாள். 

ராகேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்து சொன்னான் 

”ஆனா நான் உன்னப் பார்த்தேன்” 

திகைத்த ஸ்வப்னா ”எங்க” எனக் குழம்பிக் கேட்டாள் 

“நேத்து மதியம் 3 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டல் ரூம் நம்பர் நானூத்து முப்பதில” 

ஸ்வப்னா வெளிறினாள் 

“இல்ல வந்து வந்து” தடுமாறினாள் 

“உன் கூட படுத்தவன் என் அடுத்த படத்தோட புரடியூசர். மறைவா கேமரா வேற வச்சி உன்ன இஞ்ச் இஞ்சா படம் புடிச்சிருக்கான் காமிக்கவா?”

 ஸ்வப்னாவிற்கு குப் பென வியர்த்தது லேசாய் தலை சுற்றுவது போலிருந்தது. 

ராகேஷ் டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டை தேடி எடுத்தான். உள்ளே இருக்கும் சிகரெட்டை எண்ணிப் பார்த்தான். குறைந்திருந்த ஒரு சிகரெட் துண்டை ஆஷ்ட்ரோவோடு எடுத்துக் கொண்டான். கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் பையில் சிகரெட் பாக்கெட்டையும், ஆஸ்ட்ரேவையும் திணித்தான். பின்பு ஸ்வப்னாவை திரும்பிக் கூட பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் அவள் தலைகுப்புற கீழேவிழும் சப்தத்தைக் கேட்க ஒரு நிமிடம் கதவருகில் நின்றான் சப்தம் கேட்டது படிகளில் இறங்க ஆரம்பித்தான். 

- பாய்சன் கனவுகள் பக்கம் முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு 

கழிவறையில் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினேன். இவளுக்கு சிகரெட் பழக்கம் இருக்காதே. பேசாமல் பாலில் விஷம் கலந்து விடலாமா? வேண்டாம். யாராவது சந்தேகப்பட்டு போஸ்ட் மார்டம் அது இதுவென்று போனால் மாட்டிக் கொள்வோம். தேனிலவிற்கு கொடைக்கானல் போய் வாராய் நீ வாராய் ஸ்டைலில் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு விடலாமா? காலை எழுந்ததிலிருந்தே இதே சிந்தனைகள் உழன்று கொண்டே கிடந்தன. தலையை உதறியபடி அலுப்பு தீர குளித்தேன். குளித்து முடித்ததும் வழக்கம் போல் துண்டைத் தேடினேன். பாத்ரூம் கதவை லேசாய் திறந்து அம்மா துண்டு எனக் கத்தினேன். சில நொடிகளில் இவள் துண்டோடு முன் வந்து நின்றாள். காலையில் எழுந்த போது அருகில் இல்லை. எனக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. படுக்கையறை பாத்ரூமில் குளித்திருக்க வேண்டும். ஈர துவர்த்தை கூந்தலுக்குச் சுற்றியிருந்தாள். லேசாய் மஞ்சள் பூசிய வட்ட முகத்தில் பெரிய குங்குமப் பொட்டு. நீல நிறத்தில் மெல்லிய காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் பளபளத்தது. தலையை லேசாய் குனிந்துகொண்டு மென் புன்னகையோடு துண்டை எனக்காய் நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தினேன். ஈரக் கண்ணாடியில் என்னையே ஒரு முறை ஆழமாய் பார்த்துக் கொண்டு மெல்ல முணுமுணுத்தேன்.

”இவளையா கொல்லப் போகிறோம்?”

- மேலும்

Friday, November 2, 2012

அத்தியாயம் – மூன்று

“நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.” 

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி கெறங்குற”

 “இல்லடா நீ வா நேர்ல பேசலாம்” 

கைப் பேசியைத் துண்டித்தேன். வீணா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். என்னைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்னைப் போன்றவர்களின் எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், என் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். வீணா என்னுடைய ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். நான் இதைப் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என என் மாத இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டேன். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் என் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே வீணாவை கண்டபடி வசைந்தும் எனக்கு ஆறுதல் சொல்லியுமாய் எழுதப்பட்டிருப்பதாக உதவியாளர் சொன்னார். எனக்குத் திடீரென இக்கடிதங்களோடு வீணாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அத்தனை கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி காரில் வைக்கச் சொன்னேன். விச்சுவிடம் அவளின் முகவரியைத் தேடிப் பிடிக்கச் சொன்னேன். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் அவள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தேன்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். வீணாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வீணாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி வீணா ஹாலிற்கு வந்தாள். யாருங்க எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தேன். சந்தன நிற வீணா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான அய்யனார்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். எனக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாக சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தேன்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டிய கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான் வரேன்”

நான் சொன்னதை அவள் நம்பவில்லை. என் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறி கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தேன். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “

வெளியில் நின்றபடி ஒரு கை பிடிங்க என்றேன் மாலா எனக் குரல் கொடுத்தாள் உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டோம் என்னங்க இதெல்லாம் எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்தேன்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே கேட்டை சாத்திக் கொண்டு வெளியேறினேன். வீணா மலைத்துப் போய் நின்றதை காரில் அமர்ந்து பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினேன் -

-- மேலும்

Thursday, November 1, 2012

அத்தியாயம் இரண்டு.


“இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல மங்கல் வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

நான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டேன்

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும் புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் இன்று காலை மனைவியான அவளும் அமர்ந்திருந்தோம்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

என் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்தேன்.

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி... தவிர நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு.., கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க.. , உங்களுக்கு இருக்க பேர்..., கூடியிருக்க சொந்தக்காரங்க முகங்கள் எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி... எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும்..., எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

கொஞ்சம் இலேசானதைப் போல் உணர்ந்தேன். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல.. காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே.. சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல்.., கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன். மீண்டும் மெளனம் எங்களைச் சூழ்ந்தது.

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தேன். அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றேன். பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினோம். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன். பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ நான் வந்திடுறேன்”

புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தேன் உதட்டைப் பிதுக்கினாள்

“என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் பார்க்கமுடியவில்லை.

 நானொரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தேன். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதான். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தேன். என் நண்பன் விச்சுதான் என் கதைகளை படித்துவிட்டு கைக் காசைப் போட்டு மாத நாவலாகப் பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காபிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டோம். பெளர்ணமி இரவில் இதழ் மாதம் பத்தாயிரம் காபிகள் வரை விற்கிறது. இருபத்தைந்து வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டேன். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய் தேடிப் பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் இவளை மணந்து கொண்டேன். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

புகைத்து முடிந்ததும் கீழிறிங்கினோம். இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டோம். அடுத்த அரை மணிநேரத்தில் மூர்க்கமாய் கலவி கொண்டோம். எனக்கு முதன் முறை கிடையாது. அவளுக்கும் முதல் முறையாய் இருக்காது என தீர்க்கமாய் நம்பினேன். அந்த நம்பிக்கை மெல்ல அருவெருப்பாய் மாறத் துவங்கியது. எழுந்து உட்கார்ந்தேன். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி, உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தவளைப் பார்த்தேன். இதுவரை நான் எழுதியதிலேயே எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்.

- மேலும்

Featured Post

test

 test