Wednesday, October 24, 2012

Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் Pulp காதலும்

1.

தலைப்பேதான். இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். இடையில் ஏகப்பட்ட தடங்கல். ஒரே மனிதன் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டியிருப்பதன் துர்பலன் தாமதம்தான். அதை விடுங்கள். பிரச்சினைக்கு வருகிறேன். இந்த நாவல் தாமதமாகிக் கொண்டே போவதன் உண்மையான காரணம் இந்நாவலில் வரும் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான். பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதே நாவலில் ஆண் எழுத்தாளர் எழுதும் நாவல்களையெல்லாம் நானே எழுதிவிட்டேன். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட இலக்கிய எழுத்தாளனான என்னால் சற்று சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம்.

சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டு படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!"

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள்.அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்பிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்" என்றேன். மாட்டேன் என்றாள். "நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல் நான் போய்டுறேன்" என்றேன்.  உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும் என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும் என மகிழ்ச்சியில் கத்தினேன். அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே. நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள். "லெஸ்பியன்" என்றேன். ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். "அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். "மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. எதுவும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன்.

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன்.

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். நண்பா இந்தா உனக்கு என் பரிசு என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். இப்போது என்ன செய்கிறாய் எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். தலைப்பு? Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் pulp காதலும். ஒண்ணும் புரியலையே என்றவனிடம் சொன்னேன். எனக்கும் ஒண்ணும் புரியல. எழுதி முடிச்சிட்ட பிறகாவது புரியுதாண்ணு பார்ப்போம். அவன் முறைத்துவிட்டு எழுந்து போய்விட்டான். நான் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி.. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். உற்சாகமாய் இருந்தது அட இதற்குள் நீ எப்படி வந்தாய் எனக் கேட்டேன். தெரியலபா ஆனா உன் பெண் நாவலை எழுதப்போறது நான் தான் என்றாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டேன்.

மேலும்

Wednesday, October 17, 2012

பன்னீர்ப் பூ


டி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாக்கில் நகர்ந்து இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். விழித்துக் கொண்டாள் போல. பதறி எழுந்து “ஏய் டைம் என்ன ஆச்சு?” என்றாள். தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்கு அறைக்குள் வந்தோம். வரும்போதே தூறல் பெரிதாகியிருந்தது. ஈரத் தலையோடு உள்ளே வந்தோம். துடைத்துக் கொள் என துண்டைக் கொடுக்கும்போது மழை சப்தம் அதிகமானதைக் கேட்டுக் கண்ணடித்தாள். "செம்ம சுச்சுவேசண்டா" என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை.

 என்னை உலுக்கி எழுப்பினாள். போலாம்....போலாம்...போலாம்... என மூச்சுவிடாது நச்சரித்தவளை திட்டிய படியே எழுந்து புடவையை உடலிலிருந்து பிரித்துக் கொடுத்தேன். கண்ணை மூடியபடி அவள் புடவைக்காக கைநீட்டிய காட்சியை சிறிது நேரம் நீட்டித்தேன். சிணுங்கி மேலே பாய்ந்து புடவையைப் பிடுங்கிக் கொண்டு அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். எழுந்து கிளம்பினேன். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. குளிருக்கு உடல் மெல்ல நடுங்கியது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தேன். மழை விட்டிருந்தது. சன்னலை ஒட்டியிருந்த மாமரம் கனத்த மெளனத்திலிருப்பதைப் போல் பட்டது. பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வேறொரு பெண்ணாய் வெளியில் வந்தாள். இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டும் கருப்புக் காட்டன் புடவையுமாய் அவளைப் பார்க்க எப்போதோ விரும்பியிருந்தேன். ஏதோ ஒரு சினிமா படத்தில் கதாநாயகி அணிந்திருந்த உடை. பார்த்தவுடன் பிடித்துப் போய் இவளிடம் சொன்னேன். இன்றைக்காய் எடுத்து வைத்திருந்தாள் போல.

 போலாம்பா என அருகில் வந்தவளை மெதுவாய் அணைத்துக் கொண்டேன். சொன்னா கேள்.. போலாம் வா.. டைமாச்சி.. என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளின் உதடுகளை சோம்பலாய் கவ்விக் கொண்டேன். சற்றுத் திமிறி என்னைப் பலவந்தமாய் விலக்கி தன் உதடுகளை உள்ளங் கையால் திரும்பத் திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது அவள் நெற்றி சுருங்கியிருக்கும். அசூசையுமல்லாத கோபமுமல்லாத ஒரு விநோத முக பாவணை வெளிப்படும். எனக்கு இது ஒரு விளையாட்டாய் இருந்தது. அவள் ஒவ்வொரு உதட்டு முத்தத்திற்கும் இப்படி ஆவாள் என்பதுதான் இன்னும் சுவாரசியம்.

 ப்ளீஸ் போலாம் என்றாள். பெருமூச்சு விட்டபடி அறைக்கதவைத் திறந்தேன். வெளியேறினோம்.

தெருவில் மழை நீர் சிறுசிறு குளங்களை உருவாக்கிவிட்டிருந்தது. ஏழு மணிக்கான இருள் சூழ்ந்திருந்தது. கரு மேகங்கள் உடையும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவளின் விரல் பிடித்தேன்.

 “விடு இதென்ன ரோட்ல?”
 .....

 “நீ ஏன் வர? நான் போய்க்கிறனே”

 பதில் சொல்லவில்லை. பிரதான சாலைக்கு வந்தோம். மழையில் எல்லா சிறுநகரங்களும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன.

 “டீ குடிக்கலாமா”

 “வேணாம்டா டைம் ஆகிருச்சி”

 “அப்ப பஸ் ஸ்டாண்ட் உள்ள போக வேணாம் இங்கயே நிப்போம்”

திருத்தணியிலிருந்து வரும் பேருந்து நின்றது. ஏறிக் கொண்டோம். கூட்டம் இல்லை. முன் வரிசை சீட்டுகள் தவிர்த்துப் பின்னிருக்கைகள் காலியாகக் கிடந்தன. மொத்தப் பேருந்தே நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. சன்னல்கள் அடைக்கப்பட்டு மெல்லிருளாய் கிடந்தது. இடப்புறம் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம். சன்னலை மேலேற்றினாள். ஈரக் காற்று முகத்தை விசிறியது. திருவள்ளூர் ரயில்வே பாலத்தைக் கடந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. முகமும் ஆடைகளும் நனையத் துவங்கியதும் சன்னலை மூடினாள். எனக்கு மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

 என் வலக்கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். குளிர்தில்ல என சிரித்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையில் அவளின் கேசம் நெற்றி தோள் எல்லாம் நனைந்திருந்தன.

 “ஈரமான பூ போல இருக்க நீ” என்றேன்.

 “என்ன பூ? ரோஜாவா? இல்ல உனக்கு பன்னீர்பூ தான பிடிக்கும் ஈரப்பன்னீர் பூவா நானு?”

 “இல்லடி நீ பன்னிப்பூ”

என்றதும் வெடித்துச் சிரித்தாள்.

“நான் பன்னி சரி ஆனா நீ எரும. ஹப்பா! என்ன வெயிட்டு”

 நடத்துனர் அருகில் வந்ததும் அவசரமாய் கைப்பை திறந்து பணமெடுத்து நீட்டி ஒரு ஐயப்பன்தாங்கல், ஒரு அசோக் பில்லர் என்றாள். டிக்கெட்டை வாங்கி என் சட்டைப் பையில் திணித்தாள். உனக்கு நான் பன்ற கடைசி செலவு. டிக்கட்ட பத்ரமா வச்சிக்க என்றாள். அவள் கண்களை ஆழமாய் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து கண்களை இன்னும் விரித்தாள்.  “நல்லா பாரு. இனிமே உன் பார்வைக்கெல்லாம் மயங்கமாட்டேன்” என்றாள். பின்னால் திரும்பி யாரும் பார்க்கவில்லையென உறுதிபடுத்திக் கொண்டு அவள் உதட்டைக் கவ்வி இழுத்தேன். என் மார்பைப் பிடித்துத் தள்ளி விடுவித்துக் கொண்டு உள்ளங்கையால் உதட்டைத் திரும்பத் திரும்ப அழுந்த துடைக்க ஆரம்பித்தாள். நான் சிரித்தேன்.

 “உன் ஃப்ர்ஸ்ட் நைட்லயும் இப்படித் தான் பண்ணியா?.. “

 “எப்படி?.. “

 உதட்டைத் துடைத்து துடைத்துக் காண்பித்தேன்.

 “அவன் உன்ன மாதிரி கவிஞன்லாம் கிடையாதே. டைரக்ட் மேட்டர்தான். அன்னிக்கு அவசர அவசரமா முடிஞ்சதும் அவசர அவசரமா எழுந்து போய் கப் கப் னு சிகரெட் புடிச்சான். எனக்கு சிரிப்புதான் வந்தது..”

 “அப்ப சிரிச்சயா? “

 “இல்ல ஆனா அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ட நினைச்சி நிறைய நாள் சிரிச்சேன். “

 “இப்ப சிரிப்பு வருதா”

 “இல்ல” ..

இரண்டு நிமிடம் அநிச்சையாய் மெளனத்திற்குப் போய் மீண்டோம்.

 மீண்டும் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

 “நைட்டு என்னடா பசங்களோட சரக்கடிக்க போறியா?”

 “தெரில. அடிப்பேன்னுதான் நினைக்கிறேன்.” 

“ஓ சோகத்துல இருக்கியோ?”

 “இல்லயே ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என வெறுப்பாய் சொன்னேன். 

முதுகிற்குப் பின்னால் கைவிட்டு என்னுடலை அவளுக்காய் இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 “சாரி கேக்கணுமா உங்கிட்ட”

 “இல்லடி ஆனா என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்”

 “ஐயோ இத நீ லட்சம் முற சொல்லிட்டே நானும் லட்சத்தி ஒரு முற விளக்கம் சொல்லிட்டேன். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்.” 

மெளனமானோம்.

 மழையின் வேகம் சீராய் அதிகரிக்கத் துவங்கியது. சாலையில் ஓடிய நீரைக் கிழித்துக் கொண்டு பேருந்து விரைந்தது. பூந்தமல்லி வந்ததே தெரியவில்லை விசில் சப்தத்தோடு ஐயப்பன் தாங்கல் என்றார் நடத்துனர். இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.அதுக்குள்ளவா வந்திருச்சி என்றாள். நான் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு பேருந்து கிளம்பியது மீண்டும் தன் கையை முதுகிற்குப் பின் துழாவி என்னை இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 நகரம் வெள்ளக் காடாகியிருந்தது. போரூரிலிருந்து பேருந்து ஊர்ந்துதான் போய் கொண்டிருந்தது. நாங்கள் மெளனத்திலிருந்து மீளவே இல்லை. மழையை, பைத்தியம் பிடித்த வாகன நெரிசலை சோடியம் விளக்குகளின் மங்கல் ஒளியோடு பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருந்தோம். கத்திப்பாரா விற்கு ஒரு கிமீ முன்பே வண்டி சுத்தமாய் நின்றுவிட்டது. இறங்கலாம் என எழுந்து கொண்டாள். இறங்கினோம்.

ஆட்டோ, பேருந்து என சகல வாகனங்களும் பெருங்குரலில் கத்திக் கொண்டிருந்தன. பேருந்து வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

 “ரொம்ப டைமாயிருச்சா”

 “இல்லபா பரவால்ல”

 நடக்க நடக்க நெரிசல் குறைந்து கொண்டே வந்தது. எதுவுமே பேசத் தோன்றவில்லை. எல்லாம் தீர்ந்த வெளியில் நடந்து கொண்டிருந்தோம். என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். இது ரோடாச்சே என்றேன். புன்னகைத்து இன்னும் இறுக்கிக் கொண்டாள். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு சமீபமாய் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஐயப்பன் தாங்கல்? என்றோம். ஓட்டுனர் தலையசைத்தார். ஆட்டோவில் அமர்ந்து மீண்டும் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. அடுத்த அரைமணிநேரப் பயணம். ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டது. அந்த பஸ் ஸ்டாப் தாண்டி நிறுத்துங்க என ஓட்டுனருக்காய் குனிந்து சொன்னாள். எனக்காய் நன்கு திரும்பி கடைசியா எனக்கொரு முத்தம் கொடு என்றாள். எனக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த ஏதோ ஒன்று உடைந்து சப்தமாய் அழுகையாய் வெளியேறியது. ஓட்டுனர் திகைத்து சப்தமெழ வண்டியை நிறுத்தினார். முகத்தை மூடிக் கொண்டு அழுத என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் உதட்டிலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். பின்பு மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

 0

Monday, October 1, 2012

குள நடை

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும் உண்டு. நடப்பதற்கு தோதாய் குளத்தைச் சுற்றி இரப்பர் பூசிய நடைபாதை அமைத்திருக்கிறார்கள். நடை பாதை வழியெங்கும் அடர்ந்த செடிகொடிகளும், மரங்களும், ஏராளமான பறவைகளும், குறிப்பாய் சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சிறகடிப்புகளும் உடன் வரும். நடப்பதற்கோ அல்லது இளைப்பாறுவதற்கோ மிகச் சிறந்த இடம். கடந்த ஒரு வருடமாய் வார இறுதி நாட்களில் பயல்களை அழைத்துக் கொண்டு போய்வரும் இடம்தான் என்றாலும் ஒரு முறை கூட நடக்கப் போனதில்லை. ஒவ்வொருமுறையும் பூங்காவிலிருந்து திரும்பும்போது நாளையிலிருந்து நடக்க ஆரம்பிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதோடு முடிந்து போய் விடும். ஆனால் சமீபமாய் வழக்கத்தைப் பொய்யாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

செய்ய ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளை வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் என்னுடைய இயல்பும், மனைவியின் இண்டர்நெட் சமையலறிவும் சேர்ந்து என்னுடலைப் பதம் பார்த்திருக்கின்றன. புளிமூட்டை அல்லது அரிசிமூட்டை கணக்காய் உடல் பெருத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மனிதர்கள் என்னை அடையாளம் கண்டறிய முடியாது திகைப்பதைப் பார்த்து நானும் அவர்களோடே திகைப்பேன். அலுவலகத்தில் நடக்கும் உடல்நல முகாம்களில் வெள்ளைக் கோட்டணிந்த லெபனீஸ் பெண்கள் வயிறைத் தட்டிக் காட்டி சைகையால் குறைத்தே ஆகவேண்டும் என்பார்கள். புன்னகைத்து வைப்பேன். ஆனால் சமீபமாய் நடந்த ஒரு சம்பவம்தான் உடனடியாய் நடக்க தூண்டுதலாக அமைந்தது.

வழக்கமான ஒரு உடல்நல முகாம். அதே வழக்கமான லெக்சர்கள். பிபி, கொலஸ்ட்ரால் சோதனைகள். எல்லாம் முடிந்து ஒருவர் சொன்னார் உங்களின் Metabolic age 45. சற்றுக் கடுப்புடன் என்ன! இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் எனக் கேட்டேன். உங்களின் மிகச்சரியான எடை அறுபது கிலோதான் பதினைந்து கிலோ அதிகமாக இருக்கிறீர்கள் என்றார். கோபப்பட்டு உடனடியாய் முகாமை விட்டு வெளியேறினேன். மாலை க்ரீன் டீ டப்பாக்கள், கொள்ளு சகிதமாய் வீட்டிற்கு போய் மனைவியிடம் என் வயது நாற்பத்தைந்து என்றேன். அடுத்த நாள் காலை காபிக்கு பதிலாய் ஊறவைத்துக் கொதிக்க வைத்த கொள்ளு நீரைத் தந்தாள். அதற்கடுத்த நாள் மாலை நடக்க ஆரம்பித்து விட்டேன்.

உற்சாகமாத்தான் இருக்கிறது. அவ்வப்போது வாங்கும் எலெக்ட்ரானிக் வஸ்துக்களை பயல்களே ‘இரு’ கை பார்த்துவிடுவதால் பாட்டுக் கேட்டு நடக்கும் பெரும்பான்மைகளின் கும்பலில் தனித்துத் தெரிகிறேன். தொடர்புக்கு ஒரு சாம்சங் போன் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது ஆனாலும் அதைப் பேசுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. இயற்கையின் இசையை விட வாத்தியங்களின் இசை பெரிதா என்ன? குளிர்காலம் துவங்கிவிட்டதால் ஏராளமான பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. நடக்கும்போது உடன் வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களுக்கு நிகரேது? மிக ரம்மியம். மாதத்திற்கு மூன்று கிலோ குறைப்பதுதான் இப்போதைய இலக்கு. பத்து நாள் நடந்துவிட்டு பதினோராம் நாள் சுத்த போர்,டைம் வேஸ்ட், இப்ப குண்டா இருந்தா என்ன? என்றெல்லாம் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

Featured Post

test

 test