Wednesday, October 24, 2012

Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் Pulp காதலும்

1.

தலைப்பேதான். இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். இடையில் ஏகப்பட்ட தடங்கல். ஒரே மனிதன் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டியிருப்பதன் துர்பலன் தாமதம்தான். அதை விடுங்கள். பிரச்சினைக்கு வருகிறேன். இந்த நாவல் தாமதமாகிக் கொண்டே போவதன் உண்மையான காரணம் இந்நாவலில் வரும் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான். பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதே நாவலில் ஆண் எழுத்தாளர் எழுதும் நாவல்களையெல்லாம் நானே எழுதிவிட்டேன். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட இலக்கிய எழுத்தாளனான என்னால் சற்று சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம்.

சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டு படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!"

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள்.அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்பிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்" என்றேன். மாட்டேன் என்றாள். "நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல் நான் போய்டுறேன்" என்றேன்.  உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும் என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும் என மகிழ்ச்சியில் கத்தினேன். அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே. நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள். "லெஸ்பியன்" என்றேன். ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். "அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். "மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. எதுவும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன்.

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன்.

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். நண்பா இந்தா உனக்கு என் பரிசு என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். இப்போது என்ன செய்கிறாய் எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். தலைப்பு? Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் pulp காதலும். ஒண்ணும் புரியலையே என்றவனிடம் சொன்னேன். எனக்கும் ஒண்ணும் புரியல. எழுதி முடிச்சிட்ட பிறகாவது புரியுதாண்ணு பார்ப்போம். அவன் முறைத்துவிட்டு எழுந்து போய்விட்டான். நான் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி.. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். உற்சாகமாய் இருந்தது அட இதற்குள் நீ எப்படி வந்தாய் எனக் கேட்டேன். தெரியலபா ஆனா உன் பெண் நாவலை எழுதப்போறது நான் தான் என்றாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டேன்.

மேலும்

6 comments:

Jegadeesh Kumar said...

சுவாரசியமாக இருக்கிறது. இது நாவலில் வருகிறதா? அல்லது நாவல் எழுதப்போவது பற்றிய பிரஸ்தாபமா?

Ayyanar Viswanath said...

ஜெகதீஷ், இந்த அத்தியாயம் நாவலில் வருகிறது. இதைப்போன்ற ஏராளமான குழப்பங்களும் உள்ளன. நானுமே உங்களைப் போல அவற்றை கடந்து கொண்டிருக்கிறேன். :)

madu said...

வாய் விட்டு சிரித்துவிட்டேன். ஒரு பத்தியை படித்த பின்னே இது முன்னுரை அல்ல என்று புரிந்தது.

madu said...

வாய் விட்டு சிரித்துவிட்டேன். ஒரு பத்தியை படித்த பின்னே இது முன்னுரை அல்ல என்று புரிந்தது.

சிவக்குமரன் said...

அய்ஸ், நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பாணி படைப்பு கைவருகிறதோ என சந்தேகம் வருகிறது! சில பல மாதங்களுக்கு பிறகு உங்கள் எழுத்து!

Anonymous said...

I give rise to look on behalf of such a article on behalf of a sustained era, credit a percentage.

Featured Post

test

 test