Thursday, September 13, 2012

குரல்களின் அலைக்கழிப்பு - வவெதொஅவெகு

   ழுத ஒன்றுமேயில்லாத நாட்கள் இவை. நெருக்கடிகளும் சவால்களும் மன அயற்சியும்தான் படைப்பூக்கத்திற்கு மிக நெருக்கமானதாக இருக்குமோ என்னவோ. அப்படி எதுவுமே இல்லாத மனநிலையில் எழுத்தின் மீது பூனை சுருண்டு படுத்துக் கொள்கிறது. தூங்கும் பூனையைப் பார்த்தபடி பூனையை விஞ்சும் பெரிய கொட்டாவியோடு, அசட்டையாய் நகர்ந்து போய் கொண்டிருக்கிறேன். கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் பாகம் இரண்டைப் பார்த்துவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பின்பு யாருக்காக/எதற்காக இதை எழுதுகிறோம்? என்ற கேள்வி எழுந்தது. எப்போதோ இந்த சிக்கலை இங்கு பதிவு செய்துமிருக்கிறேன் ( இவரு பெர்ஸா ஒல்க படம் பார்த்து கிழிப்பாராம் அதை வெலாவரியா எழுதுவாராம் அதுனால இவர பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம் போடாங்க்..) இப்படி ஒரு குரலை அசட்டை செய்துவிட்டுத்தான் சமூக வலைத்தளங்களில் சினிமா பற்றியே தொடர்ந்து வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். டோனி காட்லிஃப் போன்ற பரவலாய் அறியப்படாத மேதைகளைக் குறித்து மட்டுமே குறிப்புகளாக எழுதி வைக்க உத்தேசம்.

தவிர தமிழ் இணையப் பரப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது சலிப்பாகவும் இருக்கிறது. எல்லா மூஞ்சும் தெரிஞ்ச மூஞ்சாகவே இருப்பதன் எரிச்சல் அது. துரதிர்ஷ்டவசமாக புதிய மூஞ்சுகளோடு உரையாடலே நிகழவில்லை. பிஞ்சு மூஞ்சுகள், முத்துன மூஞ்சு என ஓரங்கட்டி விடுகின்றனவோ? என்கிற அச்சம் கூட அவ்வப்போது எழுகிறது. இதன் நீட்சியாய் ட்விட்டரில் போய் குத்த வச்சு உட்கார்ந்து புது மூஞ்சுகளோடு மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த எல்லா இணைய சலம்பல்களும் அலுவலகத்தில் புழங்கும் எட்டு மணி நேரம் மட்டும்தான். வீட்டை நெருங்கிவிட்டால் இணையம் அந்நியம்தான். குழந்தைகளின் மிகத் தூய்மையான உலகத்திற்குள் எந்த நெருக்கடிகளுமில்லாமல் தொலைந்து போய்விட முடிகிறது. குட்டிப் பயல்களின் வீரதீர சாகஸங்களை, ஆச்சரியங்களை, அற்புதங்களைப் பற்றி எழுதச் சொல்லித் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே குமாஸ்தா மனநிலை பீடித்திருக்கும் என்னை, முழுமுதற் குமாஸ்தாவாய் மாற்றிவிடும் செயல் அது என்பதால் தொடர்ந்து மறுத்து வருகிறேன். பயல்களின் உலகை மனம் ததும்பத் ததும்ப மிகை உணர்ச்சியில் எழுத என்னவோ போல் இருக்கிறது. என் சொந்த அனுபவங்களை புனைவுகளின் வழியாகக் கடத்துவதையே விரும்புகிறேன்.

திடீரென யோசித்துப் பார்த்தால் மனிதர்களோடு பழகுவதையே நான் நிறுத்திவிட்டிருப்பதைப் போன்ற தோற்றம் எழுகிறது. அலுவலகம் – வீடு - குடும்பம் என உலகம் மிகவும் சுருங்கிப் போயிற்று. ஆனால் இந்த சுருக்கத்தின் மீது எனக்கு ஒரு பிராதும் கிடையாது. ஏராளமான மனிதர்களோடு, நட்புகள் புடைசூழ வாழ்ந்த காலங்கள் பிற்காலத்தில் மனநெருக்கடிகளையும் குரோதங்களையுமே பரிசாகத் தந்தன. யாரையுமே எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாத இந்நாட்கள் சலனமில்லாமல் படுவேகமாகக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

0

அயல் வாழ்வின் எல்லா வசதிகளையும் முழுமையாய் அனுபவித்துக் கொண்டே ஊருக்குப் போய் உட்கார்ந்து கொள்ளத் துடிக்கும் மனநிலைதான் எப்போதுமிருக்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு என் வளைகுடா ‘டார்கெட்’ சில வருடங்களும் சில லட்சங்களும் மட்டும்தான். ஆனால் இன்று நகர்ந்திருக்கும் எல்லையை சற்று அச்சத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அலிபாபாக் குகையிலிருந்து வெளியேறவே முடியாதோ? என்றும் கூட சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன். “இப்ப அடிச்சிப் பிடிச்சி போகிற அளவுக்கு என்ன வந்தது? இந்தளவுக்கு சொகுசான வேலைய எங்கியாவது எதிர்பாக்கமுடியுமா?” என்பதுதான் நான் உள்ளிட்ட எல்லோரின் கேள்வியும். ஆம் இப்போது என்னதான் வந்தது?

சமகாலத்தின் so called உச்சங்களில், பொருட்களால் நிறைந்த புறவுலகில் முழுமையாய் கரைந்து போகமுடியாதுதான் என் பிரச்சினை. இதையெல்லாமும் தாண்டிய களிப்பு எங்கோ, எதிலோ இருக்கிறது என்பதுதான் என் கற்பிதம். எப்போதும் ஒரு அழைப்புக்குரல் கேட்டபடியே இருப்பதாக உணர்கிறேன். இதெல்லாம் 'சும்மாடா' என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் சப்தத்தைக் கூட்டிவிடுகிறேன். அதுவும் உதவவில்லையெனில் பாரதிராஜா படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு எப்போதும் கேட்டபடியிருக்கும் கடல் அலை சப்தத்தோடு என்னுடைய அழைப்புக் கற்பிதத்தையும் ஒப்பிட்டு பார்த்து சப்தமாய் சிரித்துவிடுகிறேன்.

0

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சமீபமாய் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஆல்பம். எல்லாப்பாடல்களுமே பிடித்திருந்தாலும் ரம்யாவின் குரலில் வரும் சற்று முன்பு பாடல் அடித்துப் போடுகிறது. இந்தக் குரலையும் அதில் வழியும் உணர்ச்சிப் பெருக்கையும் கேட்கும்போது போர்ச்சுகலின் நாடோடி இசைப்பாடல் வடிவமான fado நினைவிற்கு வருகிறது. Fado என்றால் destiny என அர்த்தம். ஐரோப்பாவில் fado இசை வடிவம் மிகப் பிரபலமானது. அமேலியா ரோட்ரிகஸ் என்ற பாடகி இந்த fado பாடல்களின் ராணி. இவரின் குரலில் சில பாடல்களை யூடியூபில் கேட்டுப் பாருங்கள் மிகவும் உணர்ச்சிப் பெருக்கான அனுபவம் வாய்க்கும்.

அமேலியாவின் குரலும் எனக்கு மட்டும் ரகசியமாய் கேட்கும் அழைப்புக் குரலும் ஒரே மாதிரி இருப்பதை சமீபமாய் உணர்கிறேன்.ஆகவே இந்த மொக்கைப் பத்திக்கு குரல்களின் அலைக்கழிப்பு என இலக்கியத் தரமாய் பெயர் வைக்கிறேன்.

Friday, September 7, 2012

வேனிற்காலங்களின் இளவரசி


வேனிற் காலங்களின் இளவரசி
அடுக்குச் செம்பருத்திப் பூவை
வருடிப் போகிறாள்
வெண்மஞ்சளாய் கிளைப்பூத்து
செம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்
வேம்பூவைத் தழுவி
முத்தமிடுகிறாள்
நெருங்குவதற்கு முன்பே புங்கை
அடர்த்தியாய் பூச்சொறிந்ததை
புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறாள்
மழை நனைய
மலர்தலைத் தள்ளிப்போட்டிருக்கும்
பன்னீர் மரத்தை
செல்லமாய் கோபித்து நகர்கிறாள்
பூக்காலங்களின் இளவரசன்
வியர்த்து வந்து
வேனிற்கால இளவரசியின் முன் மண்டியிடுகிறான்.
தன் கருணைக் கரங்களால் அவனை வாரியெடுத்து
மார்புறத் தழுவுகிறாள்
பன்னீர் மரம் குலுங்கி பூப்பூவாய் பூக்கிறது.
 0




வேனிற் காலங்களின் இளவரசி 
மலரிலிருந்து கோபமாய் விழித்தெழுந்தாள் 
உற்சாகமாய் மேலெழ ஆரம்பித்திருந்த 
சூரியனை முறைத்து 
மீண்டும் உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தாள். 
பெருகிப் பெருகி தகித்த 
சுவாசப் பெருமூச்சில் 
தாவர சங்கமங்கள் வேரோடு அழிந்தன. 
குழம்பிய காலநிலையொன்றின் நடுவில் 
அமர்ந்து கொண்டிருந்தவளின் துக்கம் உடைய 
தேம்பி அழ ஆரம்பித்தாள் 
உலகம் வெள்ளக்காடானது 
அதில் 
வேனிற்காலங்களின் இளவரசியும் 
மூழ்கிப் போனாள்.



புகைப்படம்: அமேலியா ரோட்ரிகஸ் போர்த்துகீசிய ஃபேதோ பாடகி

Featured Post

test

 test