Friday, May 4, 2012

Gadjo Dilo aka Crazy Stranger 1997: டோனி காட்லிஃப்


ஸ்டீபன் (Stéphane) என்கிற பாரீஸ் நகர இளைஞன் தன் தந்தைக்கு மிக விருப்பமான பாடகியான நோரா லூகா (Nora Luca) வைத் தேடிப் பயணிக்கிறான். அவனின் தந்தை இறக்கும் வரையிலும் நோரா லூகாவின் பாடல்களை மட்டுமே சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு முக்கியமாகப் படவே நோரா லூகாவைக் கண்டுபிடித்து தந்தையின் மரியாதையை செலுத்தும் நோக்கத்துடன் பயணத்தைத் துவங்குகிறான். தெற்கு ரோமானியாவின் சிறு நகரத்திற்கு வந்தடையும் ஸ்டீபனுக்கும் இசிடோர்(Izidor) என்கிற முதியவரின் வழியாய் அ
றிமுகமாகும் அக்கிராம ஜிப்சிக்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படம். ரோமானிய ஜிப்சிக்களின் வாழ்வை மிக நேரடியாக பதிவு செய்த படம் இது. புனைக்கதைக்கும் ஆவணப்படத்திற்குமான மிகப் பெரும் இடைவெளியை டோனி காட்லிஃபின் படங்கள் குறைக்கின்றன. மக்களின் வாழ்வோடு புனைவாக சிலவற்றை சேர்த்து பதிவதுதான் இவரது பாணி. இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் மிக ஆழமாய் தங்கிப் போய்விட்டன. எதனால் இந்தத் திரைப்படம் என்னை அடித்துப் போட்டது என்பதை சரியாய் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அறியாமையின் களிப்பையும் கொண்டாட்டத்தையும் ஒவ்வொரு காட்சியிலும் பெற முடிகிறது.

இப்படத்திற்கு இசையும் டோனி காட்லிஃப்தான். முழுக்க ரோமானிய ஜிப்சி இசைக் கருவிகளும், நாட்டுப்புற பாடல்களும் படத்தை நிறைத்திருக்கும். ரோமானிய ஜிப்சிக்கள் என அறியப்படுவோரின் ஆதி வேர் இந்தியாவிலிருந்துதான் துவங்குகிறது. வட இந்திய நாடோடிகள் இடம்பெயர்ந்து ரோமானியா முதற்கொண்டு ஐரோப்பா முழுக்க சிதறலாக வாழ்கின்றனர். ஆகவே அவர்களின் இசையிலும் நாட்டுப்புற பாடல்களிலேயும் இந்தியத் தன்மையை உணரமுடியும். மிக நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் நம் நரிக்குறவர்களின் சாயலை ரோமானிய ஜிப்சிக்களிடம் அப்பட்டமாகப் பார்க்க முடியும். உரத்த குரலில் ஆன்மா அதிரும்படி அடியாழத்திலிருந்து கதறி அழுவது போல் பாடுவதுதான் ஜிப்சிக்களின் பிரதான இசை மொழி. இன்னொரு வகையில் நம் ஊர் ஒப்பாரியோடும் இப் பாடல்களின் சாயலைப் பொருத்திப் பார்க்க முடியும். மிகப் பெரிய தந்தி இசைக்கருவிகளை மீட்டுவதிலும் ரோமானிய ஜிப்சிக்கள் தேர்ந்தவர்கள். ரோமானியர்களின் திருமணம், சாவு போன்ற சடங்குகளில் ஜிப்சிக்களின் இசை மிக முக்கியமான இடத்தை வகிக்கும். பனி உறைந்த, வழியேதும் புலப்படாத ஒரு சாலையில் நடந்து, நடந்து ஓய்ந்த ஸ்டீபனின் அறிமுகத்தோடு படம் துவங்குகிறது. எதிர்பாராத விதமாக அவனைக் கடந்து சொல்லும் குதிரை வண்டி ஒன்றில் இளம் பெண்கள் கும்பலாய் அமர்ந்திருக்கின்றனர். சோர்வாய் நடந்து செல்லும் ஸ்டீபனின் அந்நியத் தன்மையும் தோற்றமும் அப்பெண்களுக்கு சிரிப்பை வர வழைக்கிறது. அவர்களின் மொழியான ரோமானியில் அவன் யாரென வினவுகிறார்கள். மொழி புரியாத ஸ்டீபன் பிரெஞ்சும் ஆங்கிலமுமாய் பதில் பேச, அவன் பேச்சும் உருவமும் சிரிப்பை அதிகமாக்குகிறது. தாம் பேசுவது அவனுக்குப் புரியவில்லை என உணர்ந்த பெண்கள் அவனை சிரித்தபடியே வசைகிறார்கள். சிரிப்பும் கும்மாளமும் அப்பெண்கள் கூட்டத்தில் தளும்ப மேலும் பல வசைகளும் கூடலுக்கான அழைப்பையும்( என்னுடையதை நக்க வா, இதோ இவள் இருக்கிறாளா இவள் உன்னுடையதின் மேல் உப்பையும் மிளகையும் தூவி உண்பதில் கெட்டிக்காரி) காற்றில் சிதறவிட்டு அக்குதிரை வண்டியும் பெண்களும் அடர்ந்த மரங்களின் வழியாய் திரும்பி மறைகின்றனர். இன்னொரு ஜீப் ஒன்று அவனைக் கடந்து செல்கிறது. அதனுள் காயம்பட்ட ஒரு இளைஞனை போலீஸார் துப்பாக்கிகள் சகிதமாய் சிறைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனர்.

சூரியன் மறைந்த பின்பு அதே கிராமத்திற்கு வந்தடையும் ஸ்டீபன், மூடப்பட்ட ஒரு விடுதிக்கு வெளியே தனியாய் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் முதியவர் இசிடோரிடம் தங்கும் இடம் குறித்து விசாரிக்கிறான். ஏற்கனவே நல்ல போதையில் இருக்கும் அவர், அவனை வற்புறுத்தி குடிக்க வைக்கிறார். தன்னுடைய மகனை இந்த ரோமானியர்கள் பழி சுமத்தி போலிஸில் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள் எனவும், ஜிப்சிக்களுக்கு இங்கு நீதி கிடையாது எனவுமாய் அரற்றுகிறார். அவர் பேசுவது ஸ்டீபனுக்கும், ஸ்டீபன் பேசுவது அவருக்கும் புரியவில்லை என்றாலும் இசிடோர் அவனை அதிர்ஷ்டம்தான் தன்னிடம் அனுப்பி வைத்ததாக நம்ப ஆரம்பிக்கிறார். நல்ல போதையில் இருவரும் நெருக்கமாகி பாஷைகள் தேவையற்ற மொழியை பேச ஆரம்பிக்கின்றனர். இசிடோர் ஸ்டீபனைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். ஒருவர் மட்டுமே வசதியாக உறங்க இயலும் படுக்கையில் அவனைப் படுக்கச் சொல்லிவிட்டு குதிரை லாயத்தில் போய் படுத்துக் கொள்கிறார்.

அடுத்த நாள் காலை இசிடோர் எழுந்து காட்டிற்கு விறகு சேகரிக்கப் போய்விடுகிறார். தன்னுடைய வீட்டில் ஸ்டீபன் தூங்குவதை மறந்துவிடுகிறார். அக்கம் பக்கம் இருக்கும் சிறுவர்களும், பெண்களும் தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைப் பார்க்கிறார்கள். அவனுடைய ஆகிருதியான உருவம் சிறுவர்களை மிரட்சியடைய வைக்கிறது. அவனை பூதம் என்றும், சிறுவர்களைப் பிடித்துப் போகிறவன் என்றும் கோழிகளைத் திருடுபவன் என்றுமாய் ஆளாளுக்கு நினைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு சிறுவர் குழு வனப் பகுதிக்கு ஓடி இசிடோரிடம் அவன் வீட்டில் ஒரு பூதம் படுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டீபன் எழுந்து வீதியில் நடந்து போகிறான். அங்கு வாழும் மொத்த மக்களும் அவனை விநோதமாய் பார்க்கிறார்கள். தங்களுக்குள் அவனைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள். ஸ்டீபன் உணவு விடுதிக்குப் போய் இசிடோர் தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி சொல்லும் விதமாய் உணவையும் மதுவையும் வாங்கிக் கொண்டு திரும்புகிறான். வீட்டிற்கு வரும் இசிடோருக்கு நேற்றைய சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. ஸ்டீபனை தன் மகனாக பாவிக்கிறார். அதிர்ஷ்டம் அவனைத் தன்னிடம் அனுப்பி வைத்திருப்பதாக சக கிராமத்தவருக்கு சொல்கிறார். அவன் பேசுவதைப் புரிந்து கொள்ள சபீனா வை அழைத்து வரச் சொல்கிறார். சபீனா பெல்ஜியத்தில் சில காலம் வசித்தவள்.ஜிப்சிக் குழாமத்தின் பேரழகி ஆனால் கடுமையாக வசைவாள். ஒரு சிறுவன் இசிடோர் அழைத்து வரச் சொல்வதாய் சபீனாவைப் போய் அழைக்கிறான் அச்சிறுவனைப் பார்த்து ”உன் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குள் ஓடிவிடு” என்பாள். இசிடோர் அழைத்தும் வர மறுத்து விடுகிறாள். இருவரும் கடுமையாய் பாலியல் வசைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள் (உன்னுடையது சுருங்கிப் போகட்டும்)

நாட்பட நாட்பட சபீனா,ஸ்டீபன்,இசிடோர் மூவருக்கும் இடையே மலரும் அன்பும், நட்பும் கொண்டாட்டமும் படத்தின் முக்கியமான காட்சிகளாக நகர்கின்றன. இசிடோர் தலைமையில் ஒரு திருமணத்திற்கு பாடவும் இசைக்கவும் போகிறார்கள். ஸ்டீபன் நோரா லூகாவைப் பற்றி அனைவரிடமும் விசாரிக்கிறான். இசிடோர் தனக்குத் தெரிந்த இசைக் கலைஞரான மிலன் என்பவரைப் பார்க்க அழைத்துப் போகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமீபத்தில் மிலன் இறந்துபோன தகவலை மட்டுமே பெறுகிறார்கள். தன்னுடைய நண்பன் இறந்துபோன துக்கம் தாளாது அவரைப் புதைத்த இடத்தில் சப்தமாய் பாடி இசிடோர் மருகும் காட்சி மனதில் நின்று போகிறது. சபீனாவும் ஸ்டீபனும் கலவி கொள்ளும் காட்சிக்கு நிகரான ஒரு காட்சியை நான் வேறெந்த படத்திலும் கண்டதில்லை. சுதந்திரத்தன்மையின் உச்சமாக இருவரின் கானகக் கலவியை மதிப்பிடலாம். அதிகார வர்க்கங்களின் வெறியாட்டத்தை ஜிப்சிக்களின் நெருக்கடியான வாழ்வை மிகத் துல்லியமாய் பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கும் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் துக்கமானது. 

ஸ்டீபனாகவும் சபீனாவாகவும் நடித்திருந்த Romain duris ம் Rona Hartner ம் இப்படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தனர். இதே ஜோடி டோனி காட்லிஃபின் Children of the Stork படத்திலும் நடித்தார்கள். டோனியின் Exiles படத்திலும் ரோமைன் தூரிஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். ரோமானிய சமூகத்தினர் ஜிப்சிக்களை திருடர்களாக, களவை அடிப்படையாகக் கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால் ஜிப்சிக்கள் உன்னதமான கலைஞர்கள் என்பதை டோனி இப்படத்தில் மிக ஆழமாய் பதிவு செய்திருப்பார்.

சக்கரங்களின் மேல் வீடுகளை வைத்துக் கொள்ள கனவு காணும் ஜிப்சிக்களின் வாழ்வு தருணங்களில் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. இசிடோரின் மகனான அட்ரியானவின் அதிராகத்திற்கு எதிரான சின்னக் குரல் ஒட்டு மொத்த ஜிப்சி குழாமே தடயமில்லாமல் அழிந்து போவதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் தருணங்களில் வாழ்பவர்களுக்கு நிரந்தரங்களின் மீது ஒருபோதும் விருப்பமிருந்தது கிடையாது. நகர்வில் மட்டுமே வாழ்வு உயிர்த்திருப்பதாக ஜிப்சிக்கள் நம்புகின்றனர்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த tutti frutti பாடல்

3 comments:

sugi said...

hello sir!

ரைட்டர் நட்சத்திரா said...

அந்த கலவியில் என்ன ஸ்பெஷல் னு சொல்லவேயில்லை பாஸ். எல்லா படங்களையும் விஞ்சும் அளவுக்கு என்ன இருக்கிறது தெரிந்து கொள்ள ஆவல்.

முஹமது சாதிக் said...

என்ன இருந்தாலும் லாட்சோ டோர்ம் பாதித்த அளவு பாதிக்கவில்லை,விளிம்பு நிலை மனிதர்கள் பேசும் பெண் குறியை கடிச்சவனே;நான் நிறைய தடவை எங்க ஊர் பக்கம் காது குளிர கேட்டு இருக்கிறேன்

Featured Post

test

 test