Friday, January 27, 2012

சிலிர்ப்பு

அடையாளங்களை அழித்துக் கொண்டாயிற்று
சுவடுகளையும் மணற்புயல் மூடிவிட்டிருக்கலாம்
புல்வெளியோர கடற்புறாக்கள்
தாழப் பறந்த
அடர்நீல அந்நியப் பறவைகள்
தடயமில்லாமல் கடந்தன
எவரும் அறியாததைப் போலவே
எல்லாமும் நிகழ்ந்து முடிந்தன
நெடும்பாலையில்
கண நேரச் சிலிர்ப்பிற்கு
உடல் அதிர்ந்தடங்கியது.

நகரும் மலைகள்

சொற்களால் உருவாக்கிய உலகின்
கடைசிச் சொல்லையும்
தீர்த்துவிட்டிருந்தோம்
மெளனத்துடனான உரையாடல்
சாத்தியப்படவேயில்லை
இசைத்தட்டிலிருந்து
வழியும் ஆன்மாவின் இசையை
இரக்கமற்று
நிறுத்திவிட்டு
விலகி நடந்தோம்
மலைகள் நகரும் என்பதை
அந்தக் கணம் வரை
நம்பியிருக்கவில்லை

துரோக மலர்




கணக்கற்ற துரோகங்களை நிகழ்த்தினோம்
யார் யாரை துரோகித்தோம் என்பதை
அத்தனை எளிதில் 
எவராலும் கண்டுணரமுடியவில்லை
நாங்கள் வசித்திருந்த பள்ளத்தாக்கு முழுவதும்
குரூரச் சிவப்பில் துரோகத்தின் மலர்கள். 
பதறி ஓடினோம்
திசைக்கொருவராய் பதுங்கினோம்
விரல்களின் வழி பாவிய வேர்களை
துண்டித்துக் கொண்டோம்
பின்பொரு விடியலில்
தீவின் மேற்கூரையில் நின்றபடி
வெள்ளி நட்சத்திரத்திற்கு
சமீபமாய்
நீலமாய் ஒரு பூ பூத்திருந்ததைப் பார்த்தேன்.

Wednesday, January 11, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 2

நகுலன் கவிதைகளை முன்பே வாசித்திருந்தாலும் இரண்டாயிரத்து ஏழாம் வருட வாக்கில்தான் நகுலன் நாவல்களின் தொகுப்பு - ஐ வாசிக்க முடிந்தது. 1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள், நினைவுப்பாதை, நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பை மொத்தமாய் படிக்க முடிந்தது. வாசித்தவரை நகுலன் கதை என்ற ஒன்றை சொல்ல மெனக்கெடவே இல்லை. நனவோடையில் தன் எண்ணங்களை,கொந்தளிப்புகளை, உதிர்த்துக் கொண்டே செல்கிறார். அது வாசகரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தோ அவை கதையாக, படைப்பாக உருமாறுகிறதா என்பதைக் குறித்தோ நகுலனும் சரி அவர் படைப்புகளும் சரி பெரிதாய் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடுதான் நகுலனின் எழுத்து. நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்தின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் இவரது பிரதான பாத்திரத்தின் இயல்பாய் நாவல்களில் வெளிப்படுகிறது. வளர்ச்சிக்காய் புகழுக்காய் தத்தமது சுயங்களை தொலைக்கும் மனிதர்களின் மீதான எள்ளலும், கோபமும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள். நினைவுப்பாதையில் சிவன் பாத்திரம் யார் சுசீலா? எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார் மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் மனதை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும். ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார். நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.

தன் எழுத்துக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும், கடிதத்திற்கான எதிர்பார்ப்புகளும், தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் புனைவாகவும் பதியப்பட்டிருக்கிறது. எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார். நகுலனின் எழுத்தை நனவோடை உத்தி என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். இன்னும் சிலர் நகுலன் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை எனவும், நோயின் தாக்கத்தால் எழுத்தாய் கொட்டியவற்றை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் பிரம்மிப்பாய் அனுகுகிறார்கள் என்றுமாய் எழுதி வருகிறார்கள். அவை குறித்து தேர்ந்த வாசகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை என்கிற ஒன்று கூரிய வாளினைப் போல இவர் படைப்புகளின் பளபளத்துக் கொண்டிருப்பதை நெருங்கினால் அறிய முடியும். வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

பின்நவீனம் குறித்தான ப்ரக்ஞை தமிழில் ஏற்பட்ட பின்பு பெண்ணியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மொழி போன்ற பல்வேறு திறப்புகள் தமிழில் நிகழ்ந்தன. பல புதிய கவிதைகள் பெண் மொழியில் எழுதப்பட்டன. ஆண் பெண் பேதமில்லாமல் கவிதைகளில் உடல் மொழி பேசப்பட்டது. போலவே தலித் எழுத்துக்களும் வட்டார வழக்குகளும் செல்வாக்கு பெறத் துவங்கின. தமிழில் பின் நவீனத்துவ நாவல் எழுதுவதற்கான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரால் அதில் வெற்றியும் பெற முடிந்தது. அந்த வகையில் ரமேஷ்-ப்ரேம்களின் சொல் என்றொரு சொல் நாவலை பின்நவீனத்துவ நாவல் வகைமையில் சேர்த்து விட முடியும்.

இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது. வார்த்தையாடல்களின் கவர்ச்சியும் மொழியின் வசீகரமும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது. காமமும்,புணர்வும், விலங்குகளின் நடமாட்டங்களும், மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சிகளின் வடிவமாக, அடக்குமுறைகளின் மீறலாக, புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான். காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகின்றன. இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.வாசிப்பின்பம் என்பதை பிரதியோடே உணர முடிவதும். சிதறலாய் கதையல்லாத கதை ஒன்றை சொல்வதும், மய்யமான கதை சொல்லும் பாணியை தகர்த்திருப்பதும் இந்நாவலின் பின்நவீனத்துவ வடிவத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

தொடர்ந்து இறுக்கமான எழுத்துக்களை பற்றியே பேசுவது போன்ற உணர்வை எழுதும் போதே பெற முடிகிறது. இறுக்கத்தைத் தளர்த்த நாஞ்சிலாரைப் பற்றிப் பேசலாம். வெகுசனக் கதைப் பரப்பில் இருந்தபடியே இலக்கியத் தரத்தை தொடும் எழுத்துதான் இவருடையது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான முழு உத்திரவாதமும் இவரது நாவல்களில் காண முடியும். வழக்கமான கதைகளாக இருந்தாலும் அவற்றை தன் கூர்மையான அவதானிப்பால், நுட்பமான விவரணைகளால் நாஞ்சில் தேர்ந்த இலக்கியப் பிரதியாக மாற்றிவிடுகிறார். நாஞ்சிலின் தலைகீழ் விகிதங்கள் அதிகம் பேசப்பட்ட நாவல். தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது. கதையின் சிவதாணுவை சேரன் கச்சிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பார். நாவலை சிதைக்காத நல்லதொரு சினிமாவில் சொல்ல மறந்த கதையும் அடக்கம். அடுத்ததாய் எல்லோருக்கும் பிடித்த இவரின் நாவல் சதுரங்க குதிரைகள் .

என்னளவில் மிகவும் ஒன்றிப்போய் வாசித்த இவரின் படைப்பு எட்டுத் திக்கும் மதயானை ஒரு வகையில் இந்நாவல் என் நாடோடி மனநிலைக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தது. பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின் தகப்பனாரால் அவமானப்படுத்தப்படுகிறான். வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான். உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான். பெரும்பாலும் ரயில் நிலையங்கள், ப்ளாட்பாரங்கள் என நாட்கள் நகர்கின்றன. ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது. போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது. எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள். பல சமயங்களில் இவனே இவனுக்கு எதிரியாகிறான். ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம் தஞ்சமடைகிறன். மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான். நண்பர்கள் வட்டம், புதிதாய் தொழில் ஆரம்பித்தல் என நிலைபெறுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள். அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள். பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான். மிகவும் சாதாரண கதை மாதிரித் தோன்றினாலும் கதையோடு முழுவதுமாய் ஒன்றிப் போக வைக்கும் எழுத்து. நாஞ்சிலின் தனித் தன்மையும் அதுதான்.

என் பாட்டி எங்கள் பகுதியிலேயே நல்ல கதை சொல்லி. ஏராளமான நாட்டுப் புறக் கதைகளையும் இதிகாசக் கிளைக் கதைகளையும் தெரிந்து வைத்திருந்தாள். வெற்றிலை எச்சில் தெறிக்க எல்லா மாலைகளிலும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருக் குழந்தைகள் அனைவரும் படையெனச் சூழ்ந்திருக்க உரத்த குரலில் கதை சொல்லுவாள். அவளின் மகன் வயிற்றுக் கடைசிப் பேரன் என்பதால் மிகுந்த உரிமைகளோடும் பெருமிதங்களோடும் அவள் மடியில் புதைந்து கொண்டு கதை கேட்பேன். தமிழ் இலக்கியத்தில் இத்தகையதொரு பாட்டி- பேரன் மடிப்புதைவு உறவு கி.ராஜநாராயணனுக்கும் அவருடைய வாசகர்களுக்கும் நிச்சயம் இருக்கும். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி கி.ராஜநாயணன்தான். இதை தமிழ் இலக்கிய அறிமுகமுள்ள அனைவரும் வழிமொழிவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. கோபல்ல கிராமம்- கோபல்ல கிராமத்து மக்கள் –அந்தமான் நாயக்கர் இந்த மூன்று நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து பாட்டியின் அருகாமையை மீண்டும் உணர்ந்தேன்.

கோபல்ல கிராமத்தின் விடியல் - கோட்டையார் வீட்டின் சகோதரர்களின் அறிமுகம்-வழிப்பறி- கொள்ளையர்களை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சாகசம்- இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறு என ஒரு தேர்ந்த கதை சொல்லி அடுக்கடுக்காய் கதைகளை உயிர்ப்பித்துக் கொண்டே போகும் மாயம் நாவலில் தொடர்ந்து நிகழும். கிராமங்களில் இயல்பாகவே உலவும் மிகைக் கதைகள், முனிக் கதைகள் படிக்கும்போதே பரவசத்தையும் புன் முறுவலையும் ஏற்படுத்தும். பெண் பிம்பங்கள் குறித்தான மிகு புனைவுகள், இயல்பாய் நடக்கும் காமம், உறவு மீறல், கள்ளம் எல்லாமும் அடுக்கடுக்காய் இக் கதைகளில் சொல்லப்படும்.

நாயக்கர் சமூகம் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்த கதையை விலாவரியாகச் சொல்லி இருப்பார். காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கியது, பசுக்களை கொண்டு விவசாயத்தைத் தழைக்கச் செய்தது, சமூக அடுக்குகளை உருவாக்குவதென நம் முன்னோர்களின் வாழ்வு கதைகளாய் விரியும். கோபல்ல கிராமத்து மக்களில் இந்தியச் சுதந்திரம், மக்களின் வாழ்வில் அரசாங்கத்தின் தாக்கம் எனவாய் வளர்ச்சியடையும். முழுக்க கரிசல் மண்ணின் வாசனையை இக்கதைகளின் வழியாய் நுகர முடியும். யதார்த்த வாதம், வட்டார வழக்கு போன்ற எழுத்து வகைமைகள் தமிழில் செழிக்க விதையாக இருப்பவர் கி.ரா. இவரை அடியொற்றியே ஏராளமான கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் உருவாகினர். கோவில் பட்டியிலிருந்து தமிழிலக்கியத்திற்கு செரிவான படைப்பாளிகள் கிடைத்தனர். கி.ரா ஒரு வாழும் வரலாறு.

பதின்மத்தின் இறுதியில் என்னை மிகவும் சுழற்றியடித்த நாவலாக தி.ஜானகிராமனின் மோகமுள் ஐ சொல்லலாம். பாலகுமாரன் பெண் பிம்பங்களிலிருந்து மெல்ல விடுபட்டு தி.ஜா வின் பெண் பிம்பங்களில் மாட்டிக் கொண்ட தருணம் அது. யமுனாவையும் பாபுவையும் மோகத்தீயில் எரிந்து போகும் மாமியையும் எனக்குள் வாங்கிக் கொண்ட தருணம் அது. யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது. எழுத்து வாசிப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முழுக்க உணர்ந்தே வந்திருக்கிறேன். மோகமுள்ளின் கனவுத் தன்மை தந்த எழுச்சி தி.ஜா வின் புத்தகங்களை தொடர்ந்து தேட வைத்தது. பாலகுமாரனின் காயத்ரிகளை, ஸ்வப்னாக்களை, மரப்பசு அம்மிணி நிர்மூலமாக்கினாள். மரப்பசு அம்மிணிக்குப் பிறகு நிறமிழந்து போன பெண் பிம்பங்களை நினைத்துத் துக்கமாக இருந்தாலும் பதின்மம் முழுக்க பரவசத்தைத் தந்தவர்கள் என்கிற நன்றியும் எனக்கு எப்போதும் உண்டு. அம்மா வந்தாள், செம்பருத்தி, அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம் என தி.ஜா வின் நாவல்கள் அனைத்துமே நாவல்களின் ஒழுங்கமைவிற்கான உதாரணங்கள். தமிழ் நாவலின் வடிவத்தையே தி.ஜா ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்தார்.

தி.ஜாவை வாசித்து முடித்த பின்பு லா.ச.ரா விற்குத் தாவினேன். இன்றைய மனம் பிறழ்ந்த எழுத்துகளுக்கு முன்னோடியாக லா.ச.ராவைச் சொல்லலாம். நிறைவேறாக் காமம், பால்யத்தின் மீதான ஏக்கம், முழுக்க கனவுப் பிரதேசமென லா.ச.ராவின் கதைக் களன் மாயத் தன்மைக்கு அருகாமையில் வருவது. லா.ச.ராவின் எனக்குப் பிடித்த சிறு நாவல் பச்சைக் கனவு மற்றும் கழுகு. அவரின் புகழ் பெற்ற படைப்பான அபிதா வின் மீது எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும் எழுதப்பட்ட வகையில் அபிதா ஒரு சவாலான படைப்புதான். கழுகு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலேயும் ஒரு கவிதை வரும். நான் பற்றிய விசாரணைகள், தத்துவத்திற்கும் இருப்பிற்குமான போராட்டம், பெண், உடல், காமம் குறித்தான மிகைகள் என எல்லாமும் கலந்து கட்டிய தெறித்த எழுத்து லா.ச.ரா வினுடையது. சொற்களில் ஒரு வித லயமும் இசைத் தன்மையும் மிகுந்திருக்கும்.

அசோகமித்திரனை வந்தடைந்த போது சற்று நிதானத்திற்கு வந்திருந்தேன். அல்லது அசோக மித்திரன் இந்த நிதானத்தை வர வழைத்தாரா? என்பதும் தெரியவில்லை. உரத்து சொல்லுதலை, நெகிழ்வை, கரைதலை அசோக மித்திரன் சற்று நிதானப்படுத்துகிறார். எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாத எழுத்து. மிகு கற்பனைகள், உவமை, உதாரணம், கனவு என எதுவுமே இல்லாத நேரடி முகத்திலறையும் எழுத்து. ஒரு வித மிகை மனதோடு இவரை வாசிக்க ஆரம்பித்த புதிதில் இவர் தந்த அப்பட்டம் சற்று எரிச்சலைக் கூட வரவழைத்தது. அமி யின் தண்ணீர் என்னை அசைத்துப் பார்த்த நாவல். கீழ் மத்திய தர வர்கத்தின் கிட்டத்தட்ட விளிம்பு நிலை வாழ்வின் அவலத்தை சன்னமான குரலில் சொல்லும் நாவல். சென்னையின் பொந்து குடித்தன வாழ்வை, தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை, மிகையே இல்லாது புகாரே இல்லாது போகிர போக்கில் சொல்லிப் போன நாவல். யமுனா, தாட்சாயணி போன்ற மிகை பிம்பங்களை கற்பனையில் சுகித்த மனது ஜமுனாவை வியர்வையும் சதையுமாய் எழுத்தில் கண்டபோது வெலவெலத்துப் போனது. என்னை நெடுநாட்கள் அலைக்கழித்த பிம்பம் தண்ணீர் ஜமுனாதான்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் வண்ண நிலவனை வாசித்தேன். வண்ண நிலவனுடைய கடல் புரத்தில் எப்போதைக்குமான பிடித்த நாவல். கம்பா நதி,ரெய்நீஸ் அய்யர் தெரு, எஸ்தர் என எல்லா வ.நி யின் படைப்புகளும் எனக்கு பிடித்தமானவைதாம் என்றாலும் கடல் புரத்தில் தனிதான். சில நாவல்களின் ஆரம்ப வரிகள் மனதில் அத்தனை அழுத்தமாய் பதிந்து போகும். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் நாவலின் முதல் வரி, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் வரி, போலவே கடல் புரத்தில் ‘குருஸ் மிக்கேலுக்கு யாரையும் பிடிக்காது ‘என்கிற முதல் வரி. வண்ண நிலவன் குலசேகரப் பட்டிணத்தில் வாழ்வுச் சுழலின் நிமித்தம் சில மாதங்கள் சைக்கிள் கடை ஒன்றில் பணி புரிய நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பும் கிட்டியது. அப்பாதிப்பில் உருவானதுதான் கடல் புரத்தில். மீனவர்களின் வாழ்வு குறித்தான மிக முக்கியமான பதிவாகவும் இந்நாவலைப் பார்க்கலாம். பிலோமி கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் துரதிர்ஷட முடிவும் மிகப்பெரும் சங்கடத்தைத் தந்தது. நாவல்கள் மூலமாக என்றும் வாழும் கதை மாந்தர்களில் இந்தப் பிலோமி முக்கியமானவள்.

தமிழில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை, அப்பட்டமான மொழியில் பேசிய முக்கியமான நாவல் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே. ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் இந்நாவல், மொழி அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் நம் சூழலின் புதிய திறப்பு. கந்தன் கதாபாத்திரத்தின் மூலமாக மரபான தமிழ் நாவலை சற்றே கலைத்துப் போட்டிருப்பார். இலக்கிய உலகம் பதிவு செய்யத் தவறிய, தினசரி வாழ்வில் நாம் காண மறுக்கும் மக்களின் வாழ்வை ஜி.நாகராஜன் ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருப்பார்.

இதையொட்டி பேசவேண்டிய இன்னொரு முக்கியமான நாவல் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி. மற்றும் இதன் இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால். சற்று வியப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழில் இதைப் போன்ற ஒரு படைப்பு இன்னும் எழுதப்படவில்லை. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு படைப்பை எழுதிவிட்டு எந்தச் சத்தமும் சலம்பலும் இல்லாமல் ஒற்றைத் தனியறையில் வாழ்ந்து கொண்டு, மதுரை தினந்தந்தி அலுவலகத்தில் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரத்தை நினைத்தால் மேதமைத் தனத்தின் மீது மதிப்பு பன்மடங்காகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து உண்மையான கலைஞர்களை நசுக்கும் வாழ்வின் குரூரத்தின் மீதும் வெறுப்பு படராமல் இல்லை.

மலேசியாவின் பினாங்கு நகரத்தின் செட்டித் தெருவை, சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய INA படைகளின் சாகசத்தை தமிழில் சங்க இலக்கிய உரையாடல் சகிதமாய் படிக்க முடியும் என்பதே தமிழ் வாசகருக்கு மிகப்பெரிய உவகைதான். அப்படி ஒரு பெரும் வியப்பும் திகைப்பும்தான் புயலிலே ஒரு தோணி. இலட்சியவாத இளைஞனான பாண்டியன் மற்றும் அவன் சகாக்கள் லேவாதேவி வாழ்விலிருந்தபடியே ஐஎன் ஏ விற்கு ரகசியமாய் உதவுவது. ஜப்பான் மற்றும் சீனப் படைகளை எதிர்கொள்வது என முற்றிலும் புதிய களத்தை, புதுமாதிரியான எழுத்து நடையை புயலிலே ஒரு தோணி நமக்குப் பரிசளிக்கிறது. பினாங்கில் கொடிகட்டிப் பறந்த மதுரைச் செட்டியார்கள் வாழ்வும். பாண்டியனுக்கு ஏற்படும் மெல்லிய காதலும் நாவலிடையே உண்டு. இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால் இலட்சிய வாத மிகைகளும் சாகசங்களும் தீர்ந்து தத்துவத்தில் அடங்குவதை பதிவு செய்திருக்கும். தமிழின் பெரும்படைப்புகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் புயலிலே ஒரு தோணிக்குத்தான்.

கொங்கு வட்டாரத்தின் வாழ்வினை களமாகக் கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.திருச்செங்கோடு பகுதியின் மொழியை, மக்களின் வாழ்வை, குறிப்பாய் சக்கிலிய இன மக்களின் பதிவுகளை தமிழில் நாவல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்தவர் பெருமாள் முருகன். இவருடைய ஏறு வெயிலும் கூளமாதாரியும் என் மனதிற்கு வெகு நெருக்கமான படைப்புகள்.

எண்பதுகளில் வீட்டு வசதி வாரியம் தமிழ் நாடு முழுவதும் விளை நிலங்களை அழித்து விட்டு வீடுகளைக் கட்டியது. எண்பத்தெட்டில் இவ்வாரியம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்கு சமீபமாகவிருந்த வயல்கள், கிணறுகள், தோப்புகள், சிறு சிறு குட்டைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டு மிகுந்த பரப்பளவில் வீடுகளைக் கட்டின. பறவைகளும், சிறுசிறு விலங்குகளும், என் போன்ற சிறாரும் இனி எங்கு போவது என திகைத்துப் போனோம். விவசாயிகள் அனைவரும் காடுகரைகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விட்டு, அதே வீட்டு வசதி வாரியம் கட்டும் கட்டிடங்களுக்கு சித்தாளாகப் போக ஆரம்பித்தனர். இந்த மாபெரும் அவலத்தை கண்கூடாகப் பார்த்திருந்ததால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நாவலாக மாறிப்போனது. விளை நிலங்களை விற்ற விவசாயின் சீரழிந்த வாழ்வுதான் ஏறுவெயிலின் கதை. வன்மம் தகிக்கும் வாழ்வின் உக்கிரத்தை நாவல் முழுக்கப் பதிவு செய்திருப்பார். இவருடைய மற்றொரு படைப்பான கூளமாதாரி சக்கிலிய குடி சிறார்களை முன் வைத்து எழுதப்பட்ட சிறப்பான நாவல்.

இதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட வா.மு.கோமுவின் கள்ளி யும் என்னளவில் முக்கியமான நாவலே. இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றத. இலக்கிய வடிவில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி. கற்பு, ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தை இவரின் கதை மாந்தர்கள் ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள். நள்ளிரவு, விடியல், முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி, பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது. விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது. எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது. கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.

புனைவுத் தளத்தில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். இவரின் கானல் நதி எனக்குப் பிடித்தமான நாவல். குள்ளச் சித்தன் சரித்திரமும் முக்கியமான நாவலே. கானல் நதி இசையை பின்புலமாக கொண்ட நாவல். தனஞ்செய் முகர்ஜி என்றொரு இசைக்கலைஞனின் இசை ஞானம், கல்கத்தா நகர வாழ்க்கை, சரயூ என்கிற பெண்ணின் மீது தோன்றும் நிறைவேறாக் காதல். மேதமைத் தனத்திற்கு பரிசாய் வந்து சேரும் பித்து என வழக்கமாய் யூகிக்க கூடிய தளம்தான் என்றாலும் யுவனின் புனைவு மொழி இந்நாவலின் தரத்தை உயர்த்துகிறது. பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை, அசைவுகளை, துல்லியமாய் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.

எழுத எழுத போதாமை இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பிட ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் பதினைந்து பக்கத்திற்கும் மேலாக ஒரு இதழில் அடைந்து கொள்ள என்னவோ போல் இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் சில முக்கியமான நாவல்களை பட்டியலாக மட்டும் குறிப்பிடுகிறேன். இது என்னுடைய சொந்த அரசியலுக்கு உட்பட்டதுதான்.

1. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
2. காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
3. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. சாயாவனம் - சா. கந்தசாமி
8. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
9. சோளகர் தொட்டி – ச.பாலமுருகன்
10. கருக்கு -பாமா
11. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
12. வெக்கை - பூமணி
13. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
14. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
15. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
16. பாய்மரக்கப்பல் – பாவண்ணன்
17. பாழி – கோணங்கி
18. செடல்- இமையம்
19. தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
20. கொரில்லா – ஷோபா சக்தி
21. ரத்தஉறவு - யூமாவாசுகி
22. அளம் - தமிழ்செல்வி
23. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
24. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
25. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்.
26. பிளம் மரங்கள் பூத்துவிட்டன, ஒப்பந்தம் - வாசந்தி.
27. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி.
28. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி.
29. மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா - பாலகுமாரன்
30. நெடுங்குருதி,யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
31. பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம் – ஜெயமோகன்
32. ராசலீலா, ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா

தமிழ் நாவல் மரபு அதற்கே உண்டான கட்டமைவுகளோடும் அவ்வப்போது மீறல்களோடும் மிகச் சரியாகவே பயணிப்பதாக உணர்கிறேன். முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.

நேசம் & யுடான்ஸ் நடத்தும் கதை, கட்டுரை & குறும்பட போட்டிகள்


புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.


கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.

2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.


3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரை : சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும். யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.

2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ ) இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.

4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.

5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.

7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.

8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.

சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.

Tuesday, January 10, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 1

தமிழ் சிறுகதைகள் எட்டிய உயரத்தை இன்னும் தமிழ் நாவல்கள் எட்டவில்லை என்பது ஒரு சாரரின் கருத்து. இதை முழுவதுமாகவே நிராகரிக்கிறேன். தமிழ் நாவலின் வரலாறு 130 வருடங்களைக் கடந்திருப்பினும் முதல் அறுபது வருடங்களில் எழுதப்பட்ட நாவல்கள் எண்ணைக்கையளவில் மிகவும் சொற்பமானவை. தமிழ் நாவலின் வளர்ச்சி என்று பார்த்தோமானால் அது 1940 திற்குப் பிறகுதான் சீரடைகிறது. ஆக கடைசி எழுபது வருடங்களில் தமிழ் நாவல் சூழலில் நிகழ்ந்திருப்பது நிச்சயம் புலிப் பாய்ச்சல்தான்.

படைப்பாளியாய் எனக்கான தேர்வுகள், அரசியல் பார்வைகள் உண்டெனினும் அவற்றின் தாக்கமில்லாது ஒரு தேர்ந்த வாசகனாய் என் வாழ்வோடு பயணித்த நாவல்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை ஒரு விமர்சனக் கட்டுரையாக எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு மனதின் அனுபவங்களாக எழுதுவதையே விரும்புகிறேன்.

சம காலத்தில் வாசிப்பு என்பது படைப்பிற்கு நிகரான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. படைப்பையும் வாசகரையுமே பிரதானமாகக் கொள்ள வேண்டிய, படைப்பாளியையே தன் படைப்பின் இன்னொரு வாசகராக மாற்றக்கூடிய சூழல் இது. இச்சூழலின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டு படைப்புகளை முன்னிறுத்தியே இந்தக் கட்டுரையை எழுத விரும்புகிறேன். காலகட்டம், தர வரிசை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாது எனக்குப் பிடித்த நாவல்களைப் பகிரும் கட்டுரைதான் இது. ஆகவே எது முதல்? எது இரண்டாவது? என்கிற தொணி இதில் கிடையாது. கால வரிசையையும் கணக்கில் கொள்ளாமல் வெறும் மனப்பதிவாக மட்டுமே இக்கட்டுரையை அனுகக் கோருகிறேன்.

ந்த வருடத்தின் நடு வாக்கில் பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யை வாசித்து முடித்தேன். சென்ற வருட இறுதியில் வாசிக்க ஆரம்பித்த ஆயிரம் பக்க நாவல் இது. ஒப்பீட்டளவில் இதுவரைக்குமான என் வாசிப்பில் மிக அதிக அளவு காலத்தை எடுத்துக் கொண்ட நாவலும் இதுதான். என்னை ஈர்த்த முதல் விஷயமாகச் சுட்ட விரும்புவது இக் கதை இயங்கும் தளம். அந்நிய நிலப்பிரதேசங்களில் துவங்கி, வரலாற்றுப் பயணமாய் இந்தியாவில் நுழைந்து, தொன்மங்களில் முடிவடையும் நெடிய பயணம்தான் இதன் களம். படைப்பாளி தான் வாழ்ந்த, தான் நன்கு அறிந்த, தளங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற என் எண்ணத்தையும் இந்நாவல் மாற்றியமைத்தது. படைப்பு மனதின் எல்லைகள் என நானாகவே நிறுவிக் கொண்ட பல விஷயங்களையும் தாண்டவராயன் கதை தகர்த்தது.

பதினாறாம் லூயி பிரான்சை ஆண்டக் காலக் கட்டத்தில் முதற்கட்டக் கதை சொல்லப்படுகிறது. பல்வேறு வகையான புதிய நிலப்பிரதேசங்கள் துல்லியமாகவும், புனைவாகவும், மாய யதார்த்தமாகவும் நாவலின் நெடிய வழியெங்கும் பதிவாகியிருக்கிறது. மதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் யாவற்றையும் கதையோடு பின்னிப் பிணைத்திருப்பதும் ஒரு முழு படைப்பிற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. ட்ரிஸ்ட்ராம் சதுப்பு நிலப் பெண்ணான எலினார் மீது காதல் கொள்வது- ஒரு மாயக் காட்டில் அவர்களுக்குள் நிகழும் கலவி- அதன் தொடர்ச்சியாய் கண்களை இழந்து விநோத நோய்மையால் பீடிக்கப்படும் எலினார்- அவள் நலம்பெற தேவைப்படும் சிகிச்சைக்காக ட்ரிஸ்ட்ராம் மேற்கொள்ளும் சாகஸப் பயணம் இதான் தாண்டவராயன் கதை. இந்தியாவில் நுழையும் ஆங்கிலேயர்களுக்கு இந்திய செழிப்புகளின் மீது படரும் பேராசை. இந்தியத் தொன்மை வாழ்வு யாவற்றையும் சாக்த, பெளத்த மதப் பின்னணியோடு நிறுவி இருப்பதும் இந்நாவலின் மற்றுமொரு தனித்துவம்.

பா.வெங்கடேசனின் மொழி, அவரின் வரலாறு மற்றும் நிலப்பிரதேசங்களின் மீதான கூர்ந்த அவதானிப்பு இந்நாவலைக் கச்சிதமாய் எழுத வழிவகுத்திருக்கிறது. மேலும் இக்கதையை நிகழ்த்திக் காட்டத் தேவையான அறிதலும், அதற்கான உழைப்பும் வாசிப்பவர்களை பிரம்மிக்கச் செய்து விடுகிறது. இந்நாவலின் அடிநாதம் தீராக் காதல் என்பதாகத்தான் இருக்க முடியும். காதல் மட்டுமே தொன்மங்களில் துவங்கி, நவீனத்தில் கிளைத்து மாயங்களில் திளைக்க முடியும். தாண்டவராயனில் நிகழ்வதும் அதுதான். இந்நாவலுக்கான விரிவான விமர்சனத்தை எழுதி விட வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு. அடுத்த வருடத்திலாவது அதைச் செய்துவிட வேண்டும்.

சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது.

இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் - ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து, அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது

இந்திரா,அண்ணா,எம்ஜிஆ​ர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது.எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு.

இந்த வருடத்தில் படித்த இன்னொரு மிகச் சிறந்த நாவல் பிரான்சிஸ் கிருபா வின் கன்னி. கவிஞர்கள் நாவலெழுதும் போது மொழி கூடுதல் சிறப்பாகிவிடுகிறது. கன்னியில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அதன் மொழிக் கட்டுமாணம். தவிர இந்நாவலில் பதிவாகியிருக்கும் மென் மனம். அதன் மிக மிக அந்தரங்கமான நுட்பம். எதோ ஒரு புள்ளியில் சட்டெனத் தலைகீழாகும் மனதின் விநோதம். இவை எல்லாமும் இந்நாவலில் உண்டு. சந்தனப் பாண்டியின் மனப் பிறழ்விற்கு காரணமாக அமலாவைச் சொல்வதா? சாராவைச் சொல்வதா? அவனின் சிக்கலான் பேரன்புதான் எல்லாவற்றிற்குமான காரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மதங்கள்,சம்பிரதாயங்கள் சாதாரணர்களின் வாழ்வில் நிகழ்த்தும் வன்முறையாகக் கூட இந்நாவலை வாசித்துப் பார்க்கலாம். படைப்பாளியை நன்கு அறிந்திருந்தால் நாவலின் வடிவ அமைப்பை கச்சிதமான ஆட்டோ பிக்சன் எனவும் வரையறுக்கலாம். தேவதேவனும், தாடிக்கார தாத்தனும், கடலும் ,நண்டும் பால்யக் கால அத்தைப் பெண்ணும், பைத்திய வெறுமையும், மிகப்பெரும் வாதையும் நாவல் முழுக்கப் பதிவாகி வாசகர்களை கலைத்துப் போடுகிறது. புனைவிற்கும் நிஜத்திற்குமான ஊடாட்டத்தில் கலங்கித் திரிவது படைப்பு மட்டுமல்ல வாசகரும்தான்..

சில படைப்புகளை எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்போம். பின்பு அதைத் தேடியும் கிடைக்காமல் போனால் அதன் மீது மற்ற எல்லாவற்றையும் விட அதிகமான ஈர்ப்பு இயல்பாகவே படர்ந்து விடும். சம்பத்தின் இடைவெளி எனக்கு அப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாய் தேடி பிறகு நண்பரொருவரின் முயற்சியால் ஒளி நகலாக இந்த நாவல் என் கைக்குக் கிடைத்தது. மரணத்தின் வாசனையை முழுக்க வாசிப்பவர்களால் நுகர இயலும். சாவு பற்றிய கேள்வி, சாவு பற்றிய வரையறைதான் இந்த நாவல். கதை என தனியாய் சொல்ல இதில் ஒன்றுமில்லை. சிக்கலான மனம் ஒன்று சாவைத் தொடர்ச்சியாக சிந்திக்கிறது. சாவை வார்த்தையாக்கி விட அது வாழ்வைப் போராட்டமாக்குகிறது.

திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவல்களில் இது முக்கியமானது. ஒரு வகையில் இந்த நாவல் ஒரு வித போதாமையில் முடிந்து போகிறது. மேலும் அது அப்படித்தான் முடியும். சாவு என்பதை இதுதான் என யாராலாவது அத்தனை எளிதில் வரையறைத்து விட முடியுமா என்ன? சம்பத்தைப் பொறுத்தவரை, சம்பத் தேடிக் கண்டடைந்த வரை. அஃதொரு இடைவெளிதான். அவரின் தேடுதல்தான் இச்சிறுநாவல். தத்துவமும், யதார்த்தமும், நவீன வாழ்வின் வெறுமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நாவலிது. சுருக்கமாக மரணத்தின் மீதான தியானம் என்கிறார் நாகார்சுனன். கதையின் பிரதான பாத்திரம் தினகரன் என்றாலும் அதை சம்பத்தாகப் புரிந்து கொள்ளும் திறப்பும் வாசகருக்கு இருக்கிறது. சம்பத் தினகரனைப் போலத்தான் வாழ்ந்தார் என அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது.
1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம்.
2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம்.
3.சாவு என்பவர் கண்காணிப்பாளர்.
4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான். அந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி என அவனுக்குப் புலப்படுகிறது.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான். என்னால் குழம்பிப் போகத்தான் முடிந்தது.

தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் தொந்தரவு செய்த எழுத்துக்களுள் முதலாவதாக கோபி கிருஷ்ணன் எழுத்துகளையே குறிப்பிட விரும்புவேன். அவர் வறுமையில் வாடினார். அங்கீகாரமில்லாமல் செத்துப் போனார் போன்ற தனிப்பட்ட விஷயங்களால் உருவான மிகை அல்ல இது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட விரும்புகிறேன். கலைஞன் எப்போதும் கலைஞன்தான். வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அவனை என்ன செய்துவிட முடியும்? கோபியின் எழுத்துக்களில் தெரிக்கும் அப்பட்டமான நேர்மை என் ஆன்மாவை நேரடியாய் தொடுகிறது. விமர்சனத்தையே வைக்க முடியாமல் போகும் எழுத்து இவருடையதுதான். கோபியின் டேபிள் டென்னிஸ், உள்ளேயிருந்து சில குரல்கள் இவ்விரண்டையும் நாவல் வடிவில் வைத்துப் பேசமுடியும். இரண்டுமே அதனதன் தளத்தில் உச்சமானவை. காமத்தையும், இயலாமையையும் மனப்பிறழ்வையும் இவரால் துணிவாகவும் நேர்மையாகவும் எழுத முடிந்திருக்கிறது.

உள்ளேயிருந்து சில குரல்கள் நாவலில் முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வார்கள்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கும். 19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் தொகுக்கப்பட்டிருக்கும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திப் பார்க்கலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணத்தால் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.அப்படி ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முடியாதவர்களை சமூகம் ‘பைத்தியம்’ என்கிறது.

நாவலில் சொல்லப்பட்டிருக்கும் 59 நிலைகளில் வரும் எல்லா மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினையும் பயம்தான். வாழ்வைப் பற்றின பயம்.சமூகத்தினை பற்றின பயம்.அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம். கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம். புனிதங்களை மீறுவதன் பயம். புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம். ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

உச்ச மனப் பிறழ்வில் சிதறலாய் கொட்டப்பட்ட வார்த்தைக் கோர்வைகள்தான் டேபிள் டென்னிஸ். காமத்தில் உள்ள பால் வேறுபாடுகளைக் களைவது முதல், அன்பை உறவு எனும் விலங்கிட்டுக் கட்டி வைப்பது வரை சராசரி வாழ்வின் எல்லா முரண்களையும் டேபிள் டென்னிஸ் தொட்டுச் செல்கிறது. “ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்”

எனும் மனதை எப்படிப் பார்ப்பது?

(தொடரும்)

இந்தக் கட்டுரை பண்புடன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது. அங்கும் வாசிக்கலாம்

Sunday, January 1, 2012

தமிழ் சினிமா 2011 : பத்து சிறந்த படங்கள்

கடந்த வருடத்தின் சிறந்த பத்து படங்களை தர வரிசையின் அடிப்படையில் கீழே கொடுத்துள்ளேன்

1.ஆரண்ய காண்டம்
2.ஆடுகளம்
3.அவன் இவன்
4.மயக்கம் என்ன
5.யுத்தம் செய்
6.எங்கேயும் எப்போதும்
7.மெளன குரு
8.அழகர் சாமியின் குதிரை
9.வாகை சூட வா
10.மங்காத்தா

இவை குறித்து சற்று விரிவாகவும் பார்க்கலாம்.

2011 ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம்தான். பத்து படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் தேற்றி விட முடிந்தது. கடந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ஆரண்ய காண்டம்படத்தைச் சொல்லலாம் தமிழின் முதல் neo-noir படம். தமிழின் முதல் black humor படம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகக் கூடிய ஏராளமான முதல் தன்மைகள் படத்தில் இருந்தன. நீளமான, சாவகாசமான காட்சிகள். முடிவுகளில் ஒளிந்திருக்கும் விபரீதம் அல்லது விபரீதத்தில் துவங்கி புன்னகையில் முடியும் காட்சியமைப்பு. இவ்வகை திரை மொழி தமிழிற்குதான் புதிதே தவிர ஹாலிவுட்டில் மிகவும் பழைய உத்திதான். இவ்வகைமையில் quentin tarantino பெயர் போனவர். இவரின் எல்லாப்படங்களுமே கிட்டத்தட்ட இப்படித்தான்.

தமிழின் ப்ளாக் காமெடி படத்திற்கான உதாரணமாய் மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சொல்ல வேண்டிய தர்மசங்கடத்திலிருந்து ஆரண்ய காண்டம் நம்மை காப்பாற்றிவிட்டது. ஒரு நாட்டின் மொழியோ, இன்ன பிற சமாச்சாரங்களோ நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு தேர்ந்த சினிமா காணாமல் போக செய்துவிடுகிறது. ஆரண்ய காண்டமும் தேர்ந்த சினிமாக்களின் பொது மொழியில் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரராக வரும் காளையன் – சோமசுந்தரம்தான். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஆச்சர்யப்பட வைத்தது. “சாராயம் வாங்கிக் கொடுத்தவன் சாமி மாதிரி”யில் துணுக்குற வைத்து “ஒரு ஜமீன்னு கூட பார்க்காம அடிச்சிபுட்டீங்க”ல் நெகிழ வைத்து “நீயும் அப்படிச் சொல்லாதடா வெள்ள குஞ்சி” யில் கரைந்து போக வைத்துவிட்டார். படு புத்திசாலித்தனமான திரைக்கதை, உறுதுணையாய் இசை, உயிரோட்டமான கதாபாத்திரங்கள் எனஆரண்ய காண்டம் ஒரு முழு சினிமாவிற்கான உத்திரவாதம்.

ஆடுகளம்


இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட ஆறு விருதுகளைக் குவித்த படம். கோழிச் சண்டை பின்புலத்தில் நிகழும் துரோகம் வன்மம் யாவற்றையும் படு யதார்த்தமாகவும் கச்சிதமாகவும் பதிவு செய்த படம். யதார்த்தப் படங்கள் வெளித்தோற்றங்களை மட்டுமே, பாவணைகளை மட்டுமே பதிவு செய்யாமல் வாழ்வின் ஆழம் நோக்கியும் நகர வேண்டும். சாதியம் பின்னிப் பிணைந்து கிடக்கும் நம் வாழ்வை விமர்சனங்களோடு பதிவிப்பது அத்தனை எளிதான காரியமில்லை. கமலஹாசன்களால் மெனக்கெடப்பட்டு துதிபாடத்தான் முடிந்ததே தவிர, சாதியத்தின் வன்மத்தை தொட முடியாமலேயே போனது.

ஒரு விளையாட்டுப் பின்னணியில் சாதியத்தின் வன்மங்களை மிக நேரடியாகவும் தெளிவாகவும் பதிவித்ததில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடுகளம் வெண்ணிலா கபடிக் குழுவின் நேரடிச் சாடலை, வீரியத்தை எட்டவில்லை எனினும் ஸ்தூலமாக அதை சரியாய் முன்னெடுத்திருக்கிறது. சாதியத்தின் வழி உருவாகும் கெளரவம் என்பதைக் காக்க வேண்டி, மனிதர்கள் நடத்தும் போராட்டமாகத்தான் இப்படத்தைப் பார்க்கிறேன். இறந்து போன கணவனின் கெளரவத்தை மகன் காப்பாற்றாமல் போய்விடுவானோ எனப் புலம்பும் தாய்கிழவி - அம்மா சாவதற்குள் ஒரு முறையாவது சேவற் சண்டையில் ஜெயித்து கெளரவத்தை நிலைநாட்டி விட துடிக்கும் மகன்- பல வருடங்களாய் சேமித்து வைத்திருந்த பெயர், தான் வளர்த்துவிட்ட சீடனாலே மெல்லத் தேய்வதைப் பொறுக்கொள்ள முடியாத குரு - எல்லாத் தவறுகளையும் தன் மீது சுமத்திக் கொண்டு குருவின் கெளரவத்தைக் குலைக்காமல் ஊரை விட்டு வெளியேறும் சீடன். ஆக இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் இன்னொருவரின் கெளரவத்தை அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட தன் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகின்றன. சாதி இந்தக் கதாபாத்திரங்களினூடே மெல்லிதாய் படந்திருப்பதையும் இயக்குனர் நுட்பமாய் பதிவு செய்திருக்கிறார்.

பொல்லாதவன் தந்த வெற்றியினால் அதே திரைக்கதை உத்தியை ஆடுகளத்திலும் வெற்றிமாறன் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு கதையை எல்லா வகையிலும் சரியாக சொல்ல மெனக்கெடும் உழைப்பும் ஆய்வுகளும் பாராட்டப்பட வேண்டியவை. வெற்றிமாறனுக்கு அது கிடைத்தது.

அவன் – இவன்.
பாலாவின் திரைப்படங்கள் நாயக வழிபாடு என்பதிலிருந்து விடுபடாதவைதாம் என்றாலும் வழக்கமான வெகுசன நாயகத் தன்மைகளிலிருந்து விலகியவை. முரட்டுத்தனமான,ரெளத்ரமான,அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாத, அன்பிற்காக ஏங்குகிற,நன்றி உணர்வும் விசுவாசமும் மிகுந்த பாலாவின் நாயகர்கள் மிக அழுத்தமான தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துவதில் வியப்பேதுமில்லை. தமிழ் சினிமாவில் பாலாவிற்கு நான் மிக முக்கியமான இடத்தை தர விரும்புவதற்கு காரணம் அவர் படங்களில் இருக்கும் அசல் தன்மைக்காகத்தான். வேறெந்த மொழிப் படங்களின் பாதிப்பும், இயக்குனர்களின் சாயலும் பாலாவிடத்தில் இல்லை. அவருக்கு அவரின் சாயல்கள்தாம் பிரதானம். பாலாவின் நாயகர்களைப் போலவே பாலாவின் திரையாக்கமும் மிகவும் தனித்தன்மையானது. கதாபாத்திரங்கள், அவற்றின் சூழல் இந்த இரண்டையும் உருவாக்க அதிகம் மெனக்கெடும் பாலா தொழில்நுட்பம், திரைக்கதை உத்தி போன்றவைகளை நம்புவதில்லை. நேர்கோட்டில் சொல்லப்படும் வழக்கமான திரைமொழிதான் என்றாலும் கச்சிதமான பாத்திரப் படைப்புகளின் மூலமும் சம்பவாமி யுகே யுகே ஸ்டைல் அழித்தொழிப்புகள் மூலமும் பாலாவின் படங்கள் அசாதாரணத் தன்மையை அடைகின்றன.

எஸ்.ராமகிருஷ்ணின் நெடுங்குருதி நாவல் - வேம்பலை கிராமத்தை நினைவுபடுத்தும் சூழல். திருட்டைத் தொழிலாகக் கொண்ட மக்கள், பெண் சாயல் கொண்ட ‘டோங்கிரி’ துள்ளலான ‘வட்ரூபி மண்டையன்’ என சுவாரசியமான மாற்றுத் தாய் சகோதரர்கள். மொழித் திருகல் இல்லாத அச்சு அசலான மனிதர்கள், விசுவாசமாய் இருக்க ஒரு ஹைனஸ் அவரின் கோரமான சாவு, இறுதியில் சூரசம்ஹாரம். சுபம். பாலாவின் அடிநாதம் இவ்வளவுதான். சூழலையும் ஆட்களையும் மாற்றிப்போட்டால் நந்தாவோ பிதாமகனோ அவன் – இவனோ வந்துவிடும். ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் இருக்கும் கச்சிதம்தான் பாலா. ஜி.எம்.குமாரின் குரூரமான சாவிற்கு அழுத்தமான பின்னணி இல்லை என்பதுதான் படத்தின் மீதான என் ஒரே பிராது. மற்றபடி படத்தின் சிறந்த அம்சமாக எனக்குத் தோன்றிய, உரையாடல்களிலேயே மனம் திளைத்துக் கொண்டிருந்தது. சாம்பிளுக்கு ஒன்று

”திங்கிறது பேல்றது பேல்றது திங்கறது இதே வேல இவனுக்கு”
…..

‘மாவு மாதிரி போவுதுமா”

”போவட்டுமேடா அதையெடுத்து வந்திருக்கிறவங்களுக்கு ரொட்டியா சுட்டு தர முடியும்.”

இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வசனம் எழுதப் போய் எதை மாற்றினார்கள்? அல்லது எந்த வகையில் தம் எழுத்தாளுமையை நிரூபித்தார்கள்? என்கிற பரவலான கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் அவன் இவன் பட வசனம் நல்லதொரு பதில்.

மயக்கம் என்ன
பாலா, மிஷ்கின் வரிசையில் எனக்குப் பிடித்த இன்னொரு இயக்குனர் செல்வராகவன். இந்த மூவருக்குமே திரை மொழியில் தனி பாணி உண்டு. எங்கள் படம் இப்படித்தான் அல்லது ஒரு கதையை இப்படித்தான் சொல்வோம் என்பது போன்ற தனித்தன்மை இந்த மூவருக்குமே உண்டு. தனக்கான ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வதில் தவறேதுமில்லை. அந்த பாணியை எந்த அளவிற்கு உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள முடியும் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் இருப்பு அடங்கியிருக்கிறது. மயக்கம் என்ன விமர்சன அடிப்படையில் மிகவும் சராசரிப்படம். ஆனால் இந்தப் படத்தை உயிர்ப்பிப்பது செல்வாவின் திரையாக்கம்தான் என்பதில் சந்தேகமே கிடையாது. செல்வராகவனின் தனித்தன்மைகள் என்ன என்பது குறித்து யோசித்தால் ஒரு பட்டியலையே தயார் செய்து விடலாம்

1.சுய சரிதைத் தன்மை : Self narration களில் இருக்கும் ரகசியத் தன்மை அலாதியானது. இயக்குனரின் சுயசரிதையாகவும் பிரதான கதாபாத்திரத்தின் சுயசரிதையாகவும் பார்க்க முடிகிற இரண்டு திறப்புகள் இருக்கும்.

2.கதாநாயகிகள்: திறமையானவர்கள்,கனிவானவர்கள், தைரியமானவர்கள், ஏற்கனவே ஒரு காதலனைக் கொண்டிருப்பவர்கள். சராசரி ஆண் புனைந்து கொள்ளும் தேவதைகளின் நிஜநிழல் வடிவங்கள்

3.கதை : கதாநாயகி முதல் காதலைத் துறந்து இரண்டாவதாய் குறுக்கிடுபவனின் மீது சலனப்படுவாள். அவனின் பலகீனத்தை இரசிப்பாள். அவனை நிஜமாய் நேசிப்பாள். அவனின் போராட்டங்களை, இயலாமைகளை எளிதாக்கி அவன் இலக்கை அடைய உறு துணையாய் நிற்பாள். காதல் கொண்டேன், 7ஜி, மயக்கமென்ன மூன்று படங்களின் கதையும் இதுதான். களம்தான் வெவ்வேறு. புதுப்பேட்டையிலும் ஆயிரத்தில் ஒருவனிலும் இதே பெண் சாயல்கள் இருந்தாலும் இரண்டின் தளமும் வேறு.

4.மழை நடனம், நெருப்பு நடனம்

5.காமம் குறித்தான அச்சமின்மை, முடிந்தவரை காமத்தை நேரடியாய் அணுகுவது

6.மனப் பிறழ்வு அல்லது பித்து நிலை

7.போதை மற்றும் கொண்டாட்டம்

காமம், பெண், போதை இவை சலிக்காத விஷயங்கள்தாம் என்றாலும் கவனமாகக் கையாள வேண்டிய தளம். செல்வா இந்த தளத்தில் அடித்து ஆடுகிறார்.
மயக்கம் என்ன படத்தின் முதல் பாதியை தனுஷும் இரண்டாம் பாதியை ரிச்சாவும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தோல்விக் கலைஞனின் மேட்னஸ் என்கிற புள்ளிக்கு படத்தை நகர்த்தியிருந்தால் மயக்கம் என்ன கச்சிதமாய் வந்திருக்கக் கூடும். ஆனாலும் செல்வாவிற்கு விக்ரமன் நினைவு வந்திருக்க வேண்டாம்தான்.

யுத்தம் செய்
மிஷ்கினின் தனித்துவமான திரையாக்கத்தில் வந்த த்ரில்லர் படம். அவருக்கே உரித்தான கேமிரா கோணங்கள். ஒரு கதையை இப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவேன் என்பது போன்ற திரை மொழி படத்தின் மிகப்பெரிய பலம். குற்றங்கள் – தண்டனைகள் இவற்றுக்கிடையேயான ஆடுபுலி ஆட்டம்தான் கதையின் ஒன்லைனர். வாயூரிசம் குறித்து தமிழில் பதிவுகள் கிடையாது. அந்த வகையில் யுத்தம் செய் வாயூரிசத்தின் விளைவுகளை அடிநாதமாகக் கொண்டு குற்றங்களை உருவாக்கி அவற்றை மறைப்பதும் கண்டுபிடிப்பதுமான சுவாரசிய விளையாட்டைக் கட்டமைத்திருந்தது. முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு கேவிக்கேவி அழும் சேரனா இது என திகைக்க வைத்த பாத்திரப்படைப்பும் இன்ன பிற கதாபாத்திரங்களின் செய்நேர்த்தித் தன்மையும் மிஷ்கினால் மட்டுமே இயலக் கூடிய சாத்தியங்கள். யுத்தம் செய்யில் பதிவு செய்யப்பட்டிருந்த மார்ச்சுவரிக் காட்சிகள் தமிழில் கிடையவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

துண்டிக்கப் பட்ட கைகளை பொது இடத்தில் காட்சிக்கு வைப்பது, மெல்ல மெல்ல கதாநாயகனும் பார்வையாளர்களையும் புதிரை நோக்கிப் போவது போன்ற த்ரில்லர் தன்மைகள் படத்தின் கச்சிதமான திரைக்கதைக்கு கட்டியம் கூறுகின்றன. படத்தின் இசை,எடிட்டிங் என பல விஷயங்கள் த்ரில்லர் உணர்விற்கு உறுதுணையாக இருந்தது. சில பார்ப்பனியத் தன்மைகள் இடையிடையே எட்டிப் பார்த்தது ”உங்களால இவ்ளோ முடியும்னா படிச்ச எங்களால என்னாலாம் பண்ண முடியும்” என ஜெயப்ப்ரகாஷ் கேட்பது ஆபத்தான விளையாட்டுதான் என்றாலும் நிகழ்ந்த குற்றங்களை கணக்கில் கொண்டு இந்த வசனத்தை தாண்டிப் போகலாம். ஆனால் ஒரு படத்தின் அரசியல் என்பது தவிர்க்கமுடியாதது என்னதான் த்ரில்லர் படம் என்றாலும் அரசியல் ப்ரக்ஞையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எங்கேயும் எப்போதும்

விபத்தைக் களமாகக் கொண்டு இதற்கு முன்பு வந்த சிறந்த படங்களாக ரிதம் மற்றும் அங்காடித் தெருவைச் சொல்லலாம். ரிதம் வேகமான திரைக்கதை இல்லை என்கிற ஒரே குறைதானே தவிர பிரமாதமான கதைக் களம். அங்காடித் தெருவில் விபத்திற்கு பிரதான இடம் இல்லையென்றாலும் தீர்மானிக்கும் சக்தியாக விபத்து இருக்கிறது. அங்காடித் தெருவிலும் ரிதத்திலும் விபத்திலிருந்து வாழ்வு துவங்கும். இதில் விபத்தோடு சில உயிர்கள் அஸ்தமிக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸை முதலில் சொல்லி விட்டு பின்பு அந்தக் க்ளைமாக்சின் உச்ச பதற்றத்திற்காகவே கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள். அஞ்சலி அனன்யா கதாபாத்திரங்கள் யாவும் பாலகுமாரனின் பெண் தன்மைகளைக் காட்சிப் படுத்தியிருந்ததாலோ என்னவோ என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த எல்லோருக்குமே இந்தப் பெண் கதாபாத்திரங்கள் மீது வாஞ்சையும் பிடித்தமும் இருந்ததை பெருவாரியான பஸ்ஸர்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல படம் என்கிற அங்கீகாரத்தை உடனே தந்துவிடும் அளவிற்கு இயக்கம் இருந்தது. அறிமுக இயக்குனர் என்ற வகையில் சரவணனுக்கு எங்கேயும் எப்போதும் நல்லதொரு ஆரம்பம். ஆனால் ஒரு நல்ல திரைப்படம் என்பது வெறும் இரசனை மனோபாவத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதில்லை. இது முழுக்க ஆண்களின் பெண் பற்றிய பகற்கனவு மட்டுமேதான். இன்னொரு வகையில் பெண் மீது நாம் நிகழ்த்தும் வரலாற்று வன்முறையும் கூட.


மெளனகுரு

வருட இறுதியில் வந்த ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுக இயக்குனரான சாந்தகுமார் மிரட்டியிருக்கிறார். ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையில்லாத எந்த இடைச்சொருகலும் படத்தில் கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்கள்- சாமன்யன் பாதிக்கப்படுவது- அதிலிருந்து வெளிவருவது என்பது போன்ற பழைய ஹீரோயிசக் கதைதான் என்றாலும் சொல்லி இருக்கும் விதம் முற்றிலும் மாறுபட்டது. படத்தின் பலம் சின்னச் சின்ன காட்சியமைப்புகளிலும் பாத்திரப் படைப்புகளிலும் முழு கவனத்தை செலுத்தியிருப்பதுதான். குறிப்பாக கர்ப்பிணி போலிஸ் உமா. ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பு. இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழில் இதற்கு முன்பு வந்தது கிடையாது. ஒட்டு மொத்த படத்தையும் சாதாரணமாக இந்தப் பாத்திரம் சுமக்கிறது. அதிகம் நடிக்கத் தேவையில்லாத பாத்திரமென்பதால் அருள்நிதி தப்பிக்கிறார். ஓரம்போ ஜான் விஜய், மனநல விடுதி நண்பர் முருகதாஸ் என நேர்த்தியான நடிகர்கள் படத்தின் ஓட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை நிற்காத திரைக்கதை, சின்ன சின்ன திருப்பங்கள் என மெளன குரு கச்சிதமான படம்.

அழகர்சாமியின் குதிரை

கதைக்கு சொந்தக்காரரான பாஸ்கர் சக்தியே இணை இயக்குனராகவும் பணியாற்றி இருப்பதாலோ என்னவோ அபூர்வமாய் சினிமாவாகும் இலக்கியம், வழக்கமாய் சிதைந்து போகும் அபத்தத்திலிருந்து இந்தப் படம் தப்பிப் பிழைத்திருக்கிறது. ஒரு சின்னப் புன்முறுவல் இல்லாமல் அழகர் சாமியின் குதிரை சிறுகதையைப் படிக்கவே முடியாது அதேப் புன்முறுவல் படமாய் பார்க்கும்போதும் தங்கி இருந்ததுதான் இந்த முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். பாஸ்கர் சக்தியின் கதைகள் அதிக இலக்கிய ஜோடனைகளில்லாத, நேரடியான, யதார்த்தக் கதைகள். சில நுட்பமான பார்வைகளும், அபாரமான கிண்டல்களும் பாஸ்கரின் எல்லாக் கதைகளிலுமே காணக் கிடைக்கும். அந்தக் கதைகளில் அழகர்சாமியின் குதிரை உச்சமானது. அதைத் திரையில் காணும்போது கிடைத்த உற்சாகம் வாசகனுக்கே உரியது.

தொழில் முறை நடிகர்களை அதிகம் பயன்படுத்தாமல், கிராமத்து முகங்களைத் தேடிப் பிடித்துப் போட்டிருப்பது படத்தோடு ஒன்றுவதற்கு உதவுகிறது. எவரின் நம்பிக்கைகளையும் காயப்படுத்தாத, மெல்லிதான கிண்டலொன்று படம் முழுக்க இழைந்திருக்கிறது. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் சில நிமிடங்களே வந்து போகும் அபாரமான கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள். அப்புக்குட்டி மனதை அள்ளுகிறார். குதிரையை காணும் இடமாகட்டும், சைக்கிளை அப்படியே போட்டு விட்டுக் காவல் நிலையத்திற்குப் போய் கதறும் காட்சியாகட்டும் அப்புக் குட்டி அபாரப்படுத்தியிருக்கிறார்.

அப்புக் குட்டி போலிஸ் ஸ்டேசனில் அழும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். அப்படி ஒரு சோகமான காட்சியிலும் அப்புக் குட்டி போலிஸ் என நினைத்து திருடனின் காலைப் பிடித்து அழுவார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாநாயகனை சித்தரித்திருப்பது மாற்றங்களின் மீது நம்பிக்கையை வரவழைக்கிறது.

குதிரை காணாமல் போனதற்காக கிராமத்து மக்கள் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுக்கும் காட்சி, ராமகிருஷ்ணன் அண்ட் கோ வினர் விவகாரமான சிறுவன் பிரபுவை நைச்சியம் பண்ணித் தகவல் வாங்க முயற்சிக்கும் காட்சி, என படம் முழுக்க சப்தமாய் சிரிக்க ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. படத்தில் ஓரிரு குறைகள் இருக்கிறதுதான் என்றாலும் நல்ல நகைச்சுவையும் அழுத்தமான இரண்டாம் பாதிக் கதையும் நல்ல படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறது.

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு படத்தோடு ஒப்பிடுகையில் அழகர்சாமியின் குதிரை சற்றுப் பின் தங்கித்தான் இருக்கிறது என்றாலும் சுசீந்திரன் குழுவினரின் மீது நல்லதொரு நம்பிக்கையை இந்தப் படம் வரவழைத்திருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சரியாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்ததுதான் என்றாலும் வந்தவரை ஓகே என சந்தோஷப் பட்டுக் கொள்ளவும் இதில் நிறைய விஷயங்களிருக்கின்றன.

வாகை சூட வா

சிறார்களின் வாழ்வும் கல்வியும் நசுக்கப்படுவதைக் களமாகக் கொண்ட படம். நல்ல பாடல்கள் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமே இல்லாத கதை சொல்லும் முறை, வழக்கமான தமிழ் சினிமாத்தனங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருந்த பாணி என பல சிறப்புகள் இருந்தாலும் வாகை சூடவா வின் பலவீனமான திரைக்கதை படத்தை மிளிரச் செய்யவில்லை. படத்தில் நிகழ்வுகள்/ சம்பவங்கள் என எதுவுமே கிடையாது. இரண்டே கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை. ஒரு மணிநேரப் படமாக்கி இருந்தால் கச்சிதமாக இருந்திருக்கக் கூடும். சற்குணத்தால் களவாணி போன்று இன்னொரு நேர்த்தியான கமர்சியல் படத்தை தந்திருக்க முடியும்தான் என்றாலும் இப்படி ஒரு முயற்சிக்காக பாராட்டத்தான் வேண்டும்.

மங்காத்தா

தமிழில் எனக்குப் பிடிக்காத நடிகர் விஜய். அவருக்கடுத்த இடம் அஜித்திற்கு. இவ்விருவரும் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூட சில நேரங்களில் யாரிடமாவது பொங்குவேன். ஆனால் மங்காத்தா அஜித் சற்று அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். லும்பன் கேரக்டரை ஹீரோயிசம் இல்லாமல் லும்பனாகவே செய்திருக்கிறார் இதுவும் ஹீரோயிசத்தின் பாகம்தான் என்றாலும் கூட வெங்கட் பிரபுவின் வழக்கமான கும்பலர்களில் ஒருவராய் இணைந்திருப்பது நல்லதொரு மாற்றம்தான். வெங்கட் பிரபு சென்னை 28 ற்குப் பிறகு கதைக்கெல்லாம் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஹாலிவுட் படங்களை சுட்டு காமெடியையும் சுவாரசியத்தையும் சேர்த்து கமர்சியலாக வெற்றி பெற்று விடுகிறார். மங்காத்தாவிலும் அதே அழுகுணி ஆட்டம்தான். guy Ritchie படங்களை பிச்சி பிச்சி மங்காத்தாவாக்கி இருக்கிறார். போரடிக்காத திரைக்கதை மற்றும் அஜித்தின் மாற்று ஆட்டத்திற்காக படத்தைப் பார்க்கலாம். ஏழாம் அறிவு மாதிரியான தமிழர் உணர்வை தீனியாக்கும் படங்களுக்கு மங்காத்தாக்கள் தேவலாம் என்பது என் துணிபு.

தமிழ் திரை நாயகர்களை பொறுத்த மட்டில் சூர்யாவும் விக்ரமும் நம்பிக்கைத் தரக் கூடியவர்கள் என்கிற பார்வையை இந்த வருடம் மாற்றிக் கொள்ள வேண்டியதாய் போயிற்று. போலவே வருட நடுவில் நம்பிக்கை தந்த சுசீந்திரன் வருட இறுதில் சொதப்பி இருக்கிறார். ராஜபாட்டை போன்ற படத்தை அவரால் எப்படி எடுக்க முடிந்தது என்று எரிச்சல்பட வேண்டியதாய் போயிற்று. மதராசப் பட்டினம் விஜய் மீதிருக்கும் கடுப்பு தெய்வத் திருமகளிற்குப் பிறகு இரட்டிப்பாகியிருக்கிறது. அவர் சொந்தமாக எப்போது படமெடுப்பார் என்பதுதான் அடுத்த வருடத்தின் பேராவல். மற்றபடி தமிழ் சினிமாவிற்கு தியாகராஜன் குமாரராஜா, சாந்தகுமார், சரவணன் போன்ற புது இயக்குனர்கள் இந்த வருடத்தில் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்த படங்களையும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.நடிகைகளில் ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் இரும்பு மனுஷி ரிச்சாதான்.அஞ்சலியின் நடிப்பிலும் மெருகு கூடிக் கொண்டிருக்கிறது. அமலா பால் அழகாக இருக்கிறார். இசையைப் பொருத்த மட்டில் வாகை சூட வா விற்கு முதலிடம். மயக்கம் என்ன, ஆடுகளம், தெய்வத் திருமகள் படப் பாடல்கள் பிடித்திருந்தன. பின்னணி இசையில் ஆரண்ய காண்டம் யுவன் கலக்கி இருந்தார். யுத்தம் செய் கே நல்ல அறிமுகம்.

அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.

Featured Post

test

 test