Wednesday, March 9, 2011

அத்தியாயம் நான்கு. ஜிகினா வதை

காலை பத்து மணிக்கு ஹில்வியூ ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். நாளை மாலைதான் ஜிகினா வருவதாய் தகவல். ஹில் வியூ ஐந்து நட்சத்திர வசதி கொண்டது. தனித்தனிக் காட்டேஜ்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கொடைக்கானல் மலை ஏறும்போதே சீராளன் உற்சாக மிகுதியில் திளைத்தான். வழியெங்கும் சீட்டியும் விசிலுமாய் வந்தான். வரவேற்பில் சீராளன்தான் பேசினான். நான்கு படுக்கையறைகள் கொண்ட காட்டேஜை புக் செய்தோம். காட்டேஜ்க்கு பக்கத்திலேயே பார்க்கிங் வசதி இருந்தது. காரை உள்ளேயே ஓட்டிக் கொண்டு போய்விட்டோம். காட்டேஜைச் சுற்றிலும் அழகான தோட்டம். விதம் விதமான பூக்களும், செடிகளும் மென் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. இந்த மலைப்பிரதேசமும் சுத்தமான காற்றும் ரம்மியமாக இருந்தது. என்னால்தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜிகினாவிடம் உண்மையைச் சொல்லி அவளை எங்காவது தலைமறைவாக இருக்கச் சொல்லலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஜிகினா ஒரு குழந்தையைப் போலத் தூய்மையானவள். ஏன் வாழ்வு அவளை இப்படி விரட்டியடிக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.

அவள் அறிமுகப்படுத்திய ஆண்களின் உலகம் மிக விகாரமாய் இருந்தது. பொதுவாகவே ஆண்கள் மீது எனக்குப் பெரியதாய் நம்பிக்கை இருந்ததில்லை. ஆளுமைகள், அரசியல் தலைவர்கள், இளைஞர்கள், கிழவர்கள் என்கிற பாகுபாடுகள் இல்லாது, பணமிருக்கிற எல்லா நாய்களுமே ஜிகினாவை வேட்டையாடின கதைகளைத்தான் அவளுடனிருந்த நான்கு நாட்களிலும் கேட்டுக் கொண்டிருந்தேன். முதலாளிக் கிழவர்கள் பற்றிய கதைகளைச் சொல்லும்போது ஜிகினா உற்சாகமானாள். தமிழ்நாட்டின் கொழுத்த பணக்காரக் கிழவன் ஒருவன், போதைக்குப் பிறகு நீள மறுத்த அவனின் பச்சை மிளகாயை இரவெல்லாம் கையில் பிடித்துக் கொண்டு அழுத கதையை சிரிப்பை அடக்க முடியாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். பெரும்பாலான ஆண்கள் அவளை ஆடைகளில்லாமல் நடனமாடவிட்டு சுயமாய் இன்பித்துக் கொண்டார்களாம். நடிக்க வந்த புதிதில் பிரபல நடிகன் ஒருவன் ஜிகினைவை தலைகீழாய் உத்திரத்தில் கட்டித் தொங்க விட்டு, இரத்தம் தோய வன் புணர்ந்தானாம். இரண்டே வருடங்களில் அட்ரஸ் இல்லாமல் போன அவனை, வீட்டிற்கு வர வழைத்து நாய்களை ஏவிப் பழி தீர்த்துக் கொண்டதாகவும் சொன்னாள். அரசியல்வாதிகள் எப்போதும் கூட்டமாய்த்தான் வருவார்களாம். தகப்பனும் மகனும் ஒரே இரவில் வந்த கதையையும் வெறுப்போடு சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு மூத்த அரசியல்வாதி குடித்த மதுவில், தன் மூத்திரத்தைச் சேர்த்துக் கொடுத்த கதையைச் சொல்லித்தான் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு முறை தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பரம்பரை நடிகன் ஒருவன், சிறுவனாக இருந்தபோதே இவளிடம் வந்து ஆடைகளைக் கழற்றிக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறான். கோபத்தில் இரண்டு அறை கொடுத்து அனுப்பி இருக்கிறாள். சினிமாவில் தளர்ந்து போன பின்பு, அவன் மீண்டும் ஒரு நாள் வந்திருக்கிறான். பனிரெண்டு வயதில் தன்னை அவமானப் படுத்தியதற்கு பழிவாங்குவதற்காக இப்போது வந்திருப்பதாகவும் அவளைக் கதறக் கதற புணரப்போவதாகவும் சொல்லிவிட்டு அவளை அறைந்தானாம். வெகுண்டெழுந்த ஜிகினா கோபத்தைக் காண்பிக்காமல் தன் ஆளுமையை அவன் மேல் பிரயோகித்திருக்கிறாள். அவன் சாகும் நிலையைத் தொட்டவுடன், பயந்துபோய் மூச்சிரைத்துப் பாதியில் எழுந்து ஓடியிருக்கிறான். இதைச் சொல்லும்போதும் அவள் குரலில் கேலியையும் உறுதியையும் ஒருங்கே உணரமுடிந்தது.

ஜிகினாவைச் சந்திக்கும் முன்பு தமிழ்நாட்டின் ஓரிரு ஆளுமைகளின் மீது எனக்கிருந்த மரியாதையும் சுத்தமாய் காணாமல் போனது. அவர்களின் வக்கிரங்களை அவள் சொல்லிக் கேட்டபோது ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்தேன். ஜிகினா கடைசியில் சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ’என் வாழ்வு பரவாயில்லை. என்னை ஓரளவுதான் இவர்கள் சீரழித்தார்கள். என்னை விட சீரழிந்து போனவர்களின் பட்டியல் இங்கு ஏராளம்’ என்றாள். ஒரு இரவு முழுக்கப் பேசியே கழிந்தது. விடியலில் ஜிகினா கமறும் குரலில் இப்படிச் சொன்னாள். ”இந்த அறம்,புனிதம், ஒழுங்கு, கலாச்சாரம், அன்பு, கருணை, நேர்மை போன்ற வார்த்தைங்களுக்கெல்லாம் எந்த அர்த்தமுமில்லை குட்டிப்பையா, நான் வாழ்க்கைல ஒருமுற கூட இந்த உணர்வுகளை அடைந்ததே இல்லை. சரியா சொல்லனும்னா நான் வாழறத விட இழிவானது வேறொண்ணுமில்ல”

இந்த வாக்கியம் பல வருடங்கள் என்னைத் தொந்தரவு செய்தது. என் வாழ்விற்கும் அந்த வாக்கியம் சரியாய் பொருந்துவதாய்த்தான் தோன்றியது. அவ்வப்போது சொல்லிக் கொள்வேன். ”ஆம் என் வாழ்வை விட இழிவானது வேறொன்றும் இல்லைதான்” இடையில் விஜயலட்சுமி சில நம்பிக்கைகளைத் தந்திருந்தாலும், சொற்பகாலமே அந்த நம்பிக்கைகள் இருந்தன. பிறகு ஏற்பட்ட வெறுமை, முன்பை விட மோசமாய் இருந்தது. இப்போதும் கூட ஜிகினாவின் அந்த விடியற்காலை வாசகத்தை நினைத்துக் கொள்வதுண்டு. நான் வாழ்வதை விட இழிவானது வேறொன்றுமில்லை.


தோட்டத்தை ஒட்டிய படுக்கையறையை நான் எடுத்துக் கொண்டேன். எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டேன். காலை உணவு வந்ததும் தாமஸ் அழைத்தான்.
”சாப்பிட வா”.
படுத்த வாக்கிலேயே “வரேன் நீங்க எல்லாம் சாப்பிடுங்க” என்றேன்
தாமஸ் சொன்னான் “ஜிகினாவை நாம கொல்ல வேண்டாம்”
நான் எழுந்து வெளியே வந்தேன் ”நன்றி தாமஸ்”
”உன் முகம் எனக்குத் தெரியும், என்ன பிரச்சின ஆனாலும் பரவால்ல அவள நாம காப்பாத்துறோம்”
நான் உற்சாகமானேன். குணாவும் சீராளனும் புரியாமல் பார்த்தார்கள்.
என்ன? என்றான் குணா
“சொல்றேன். மொதல்ல சாப்டுவோம். நல்ல பசி” என்றபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.
சாப்பிடத் துவங்கினோம்.
புரியாமல் பார்த்த குணாவிடமும் சீராளனிடமும் ”ஜிகினா என்னுடைய நண்பி என்றேன்”. ஓ! என சிரித்தான் சீராளன்.

குணாவின் முகம் இறுகியது போலிருந்தது. நால்வரும் அமர்ந்து சாப்பிட்டோம். பின்பு அவரவர் அறைக்குப் போய் படுத்துக் கொண்டோம். ஒரு மணி வாக்கில் உணவு வந்திருப்பதாய் சீராளன் எழுப்பினான். மேசையில் ரெமி மார்டினும் இருந்தது. குடிக்கும் பிராண்ட் பற்றிய அக்கறைகள் எங்கள் நால்வருக்குமே கிடையாது. பெரும்பாலும் டாஸ்மாக்கில் என்ன கிடைக்கிறதோ அதையே எந்தப் புகாருமில்லாமல் குடித்தோம். அதுவும் கடந்த இரண்டு வருடமாய் குறைந்து போனது. தாமஸ் எல்லாருக்கும் மதுவைக் கலந்தான். எதுவும் பேசிக் கொள்ளாமல் குடிக்க ஆரம்பித்தோம். அறை குளிர்ந்து போயிருந்தது. சன்னலுக்கு வெளியே உறைப்பில்லாத சூரியன் மந்தமாய் தாவரங்களைக் கலவிக் கொண்டிருந்தது. பகல் குடியை பாண்டிச்சேரியில் வெகுவாய் அனுபவித்திருந்ததால், குடிக்கும் போது பாண்டி நினைவு வந்தது. கூடவே விஜியின் முகமும். நினைவுகளை உதறித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

”ஜிகினாவைக் கொல்ல முடியாது. ஆனா கொன்னுட்டா மாதிரி அவனை நம்பவைக்கனும் எப்படி?”
குணா கேட்டான் "ஏன் கொல்ல முடியாது?"
”ஏன்னா அவ ரொம்ப நல்லவ. குழந்த மனசு. நாலு நாள் அவளோட பழகி இருக்கேன்.”
”இதுவரைக்கும் நம்மால கொல்லப்பட்டவங்க மட்டும் என்ன கெட்டவங்களா? இது நம்மோட வேலை அவ்ளோதான்.”
”இதுவரைக்கும் நான் கொன்ன யாரையுமே எனக்குத் தெரியாது. முதல் முறையா எனக்குத் தெரிஞ்ச ஒருத்திய கொல்லனும்ங்கிற நிலமை வரும்போது கஷ்டமா இருக்கு. நெஜமா என்னால ஜிகினாவ சாகடிக்க முடியாது”
”சரி அப்ப நீ ஒதுங்கிக்க. நான் முடிக்கிறேன்.”
நான் திகைத்தேன். ”என்ன குணா இப்படி சொல்ர?”
”இதெல்லாம் வேலைக்காவதுப்பா. நாளைக்கு அந்தத் தாயோலிக்கு விஷயம் தெரிஞ்சதுன்னா, நம்மள ஒண்ணுமில்லாமப் பண்னிடுவான். நாம இன்னும் ரெண்டு வருஷம் மதுரைல இருக்கனும். அவன பகைச்சிட்டு ஒண்ணும் பண்ண முடியாது.”

”நீ சொல்றதும் சரிதான். நான் இத பக்காவா ப்ளான் பண்ரேன். நாளைக்கு இங்க வர்ர ஜிகினா கிட்ட விஷயத்த சொல்லி, உடனடியா எங்காச்சிம் வெளிநாட்டுக்கு அனுப்பிடலாம். ரெண்டு வருஷத்துக்கு எந்த காரணத்தைக் கொண்டும் வெளி உலகத்துக்கு வரக்கூடாதுன்னும் சொல்லிடுறேன். ஒரு வாரம் கழிச்சி ஜிகினாவோட அக்கா போய் ஜிகினாவை காணோம்னு போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கட்டும். போலிஸ் விஷயத்தை மீடியாக்கு சொல்லும். அதன் மூலமா அவ செத்துதான் போய்ட்டான்னு இவனும் நம்பிடுவான்.”

தாமஸ் குறுக்கிட்டான். ”வேலைக்காவது. ஜிகினா கடைசியா வந்த இடம் இதான்னு போலிஸ் இங்க வரும். தங்கி இருந்தவங்க டீடெய்ல்ஸ் கேக்கும். நாம கொடுத்த அட்ரஸ் போலின்னு தெரியவரும். சந்தேக லிஸ்ட்ல வருவோம். நம்ம அடையாளம் இதான்னு நிச்சயம் ஒருத்தனாவது சொல்வான். ரிசப்சன்ல இருக்க லைவ் கேமரால கூட நாம விழுந்திருக்கலாம். ரொம்ப சுலபமா மாட்டிப்போம்.”

நான் சொன்னேன் “அட அவளைக் கொன்னாலும் இதே நிலமைதான். எப்படியும் அவங்க அக்கா கம்ப்ளைண்ட் கொடுக்கத்தான் போறா, போலிஸ் நிச்சயம் இங்க வரும்.”
அமைதியாய இருந்த சீராளன் சொன்னான். ”அப்ப நாம இங்க வந்தது தப்பு நாளைக்கே காலி பண்ணிடலாம்”
நால்வருக்குமே விபரீதம் புரிந்தது. இங்கு வந்தது எத்தனைப் பெரியத் தவறு!
சீராளன் தொடர்ந்தான்
”ஜிகினாவை காப்பாத்தனும்னு நினைக்கிறது டேஞ்சர். இங்க வச்சி முடிச்சாலும் மாட்டிப்போம். நாம நாளைக்கு காலைல கிளம்பிடலாம். ஜிகினா ட்ரிப்பை முடிச்சிட்டு ரிடர்ன் வரும்போது மலைப்பாதைல பிடிச்சிடலாம். ஆனா எப்ப ரிடர்ன் வரா, எப்படி வராங்கிறதலாம் தெரிஞ்சிக்கனும்”

நான் தலையைப் பிடித்துக் கொண்டேன். எப்படிச் சொதப்பி இருக்கிறேன். எப்படி இந்த செண்டிமெண்ட் என் மூளைக்குப் போனது எனத் தெரியவில்லை. ஜிகினா மட்டுமா நல்லவள்? நாங்கள் கொன்ற அனைவருமே நல்லவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். குடும்பம், குழந்தைகள் என சந்தோஷமாய் சமூகத்தில் எவரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்திருக்க கூடும். தனக்குத் தெரிந்தவரைக் கொல்வதுதான் பாவம் என்ற மனநிலை திடீரென எப்படி வந்ததெனத் தெரியவில்லை. அடிப்படையிலேயே என்னிடம் ஏதோ தப்பு இருப்பதாகத் தோன்றியது. மீண்டும் குடித்துவிட்டு சொன்னேன்.

“லேசா தடுமாறிட்டேன். ஜிகினாவை முடிச்சிடலாம். இங்க வச்சி வேணாம். என்னிக்குத் திரும்பிப் போறா? எப்படிப் போறாங்கிற விஷயத்தை நான் தெரிஞ்சிக்கிறேன். மலைப்பாதைலயே வச்சி முடிச்சிருவோம். விபத்து மாதிரி பண்ணிடலாம். யாருக்கும் சந்தேகம் வராது”
“அவன் துண்டு துண்டா வெட்டனும்னு சொன்னான்” என இறுகிய குரலில் சொன்னான் தாமஸ்
நான் அமைதியாக இருந்தேன்.
தாமஸின் அலைபேசி ஒலித்தது.
மதுரைல இருந்து, அவன் தான் என்றபடியே அலைபேசியை உயிர்பித்தான்.
“வந்தாச்சிண்ணே”
…………………..
“அங்கதான் இருக்கோம்”
…………………………..
“வீடியோவா?”
…………
“செர்ணே. பண்ணிடலாம்ணே”
வைத்தான்
”நாம ஜிகினாவை துண்டு துண்டா வெட்டி வீடியோ எடுத்து அவன்கிட்ட கொடுக்கனுமாம்”
நான் துணுக்குற்றேன். மேலும் சொன்னான்
“நம்ம முகம் தெரியாத மாதிரி எடுத்துக் கொடுக்க சொல்றான்”
நான் அதிர்ச்சியாய் கேட்டேன். “இதுக்கு எப்படி தாமஸ் ஒத்துகிட்ட?”
“வேர வழி”
“அதுலாம் முடியாதுன்னு சொல்”
“இனிமே சொல்ல முடியாது. செஞ்சுதான் ஆகனும்.”

குணா சொன்னான் “செஞ்சி முடிச்சப்புறம் சிதறிக் கிடக்கிறத வீடியோவா எடுத்துக் கொடுக்கலாம். அவ்ளோதான் வந்திச்சின்னு சொல்லிப்போம். நமக்கு மட்டும் என்ன வீடியோ எடுக்கனும்னு ஆரம்பத்துலயேவா சொன்னான். மொபைல்லயே எடுப்போம். பெரிசா ஒண்னும் கிளாரிட்டி இல்லாம இருக்கிறது பெட்டர்”

நான் எதையும் சாப்பிடாமல் இன்னும் இரண்டு ரவுண்டுகளை ஒரே கல்பில் அடித்து விட்டுப் போய் படுத்துக் கொண்டேன். போதை விழிகளை ஆக்ரமித்தது.

ஓவியம் : salvador dali

மேலும்

5 comments:

jayaramprakash said...

congrats ayyanar.

Nithi said...

Ayyanaar - really superb story... when will you post next ???

பிரபல பதிவர் said...

மிரட்டுது பாஸ் கத....

முத முறையா இந்த மாதிரி கதை படிக்கிறேன்....

சிறப்பான நடை

PARTHASARATHY RANGARAJ said...

ஜெட்வேகம்... இடையில கேப் விட்றாதீங்க... படிச்சு முடிக்காம எனக்கு தூக்கம் வராது.

அருண் said...

தொடர்ச்சியா எழுதுங்க பாஸ்,அடுத்தது எப்போன்னு மனசு கேக்குது!
-அருண்-

Featured Post

test

 test