Tuesday, March 1, 2011

பழி – குறு நாவல், பாகம் இரண்டு: அத்தியாயம் ஒன்று. ஓய்வு

விழித்து எழுந்தபோது சன்னலுக்கு வெளியே இருள் சூழ ஆரம்பித்திருந்தது. திடீரென, எங்கிருக்கிறோம்? என்ற குழப்பம் வந்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னர்தான் ஆந்திராவிலிருக்கும் உள்ளடங்கிய கிராமத்திற்கு வந்திருப்பது நினைவிற்கு வந்தது. சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். மீண்டும் படுத்துக் கொண்டேன். இனி சிறிது நாட்களுக்கு வேட்டை நாயைப் போல அலைய வேண்டியதில்லை. எந்த நொடியில் எவன் தாக்குவானோ? என அஞ்சிக் கொண்டே ஒவ்வொரு நாளையும் நகர்த்தத் தேவையில்லை. எப்போதுமே என்னை நோக்கி, சரியாய் என் தலையைக் குறி பார்த்து, ஒரு துப்பாக்கித் தோட்டா பாய்ந்து வருவதாக கற்பனை செய்துகொள்வேன். பரிச்சயமான சாலையில் நடந்து போகும்போது கூட, சதா கண்கள் சுழன்றபடியே இருக்கும். எதிர் கொள்ளும் ஒவ்வொரு மனிதரையும் சந்தேகத்தோடுதான் அணுகுவேன். தேநீர் கடையில் எனக்கானத் தேநீரை, வழக்கமான நபர் கலக்கும்போது கூட, கண்ணாடித் தம்ளரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன். என்னை வெற்றி கொள்ள முடியாத, என் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் விஷம் வைத்துக் கொல்லவும் முயற்சிக்கலாம். மதுரையிலிருந்த மூன்று வருடங்களும் இப்படித்தான் போனது. ஒரு அசம்பாவிதத்திற்குப் ( பின்னர் சொல்கிறேன்) பிறகு சீராளனின் சொந்த ஊரான இங்கு வந்துள்ளோம்.

கோதாவரியாற்றுக்கு மிகச் சமீபமான, உள்ளடங்கிய கிராமம் இது. பெயர் சரியாய் வாயில் நுழையவில்லை. காக்கி நாடாவிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தள்ளிய ஊரிது. ராஜமுந்திரி இங்கிருந்து அறுபது கிலோ மீட்டர் தூரம்தான். கொட்டிப் பள்ளித் தாண்டி ஏதோ பள்ளி. பெயர் மறந்து விட்டது. ஆந்திர கிராமங்களுக்கு ஒரு வித வினோத மணமிருக்கிறது. அது இதுவரை அனுபவித்திடாத மனநிலையை உருவாக்குகிறது. மதுரையிலிருந்து கிளம்பி இரண்டு நாட்கள் மெதுவாய் பயணித்து நேற்று இரவு பதினோரு மணி வாக்கில்தான் வந்தடைந்தோம். நானும் குணாவும் மாற்றி மாற்றி வண்டியை ஓட்டினோம். சீராளன் இங்கு வரப்போவதை அவன் உறவினர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்ததால், நாங்கள் தங்குவதற்காக ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீராளன் தன் வீட்டைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. அப்பா, அம்மா, உடன் பிறந்தோர் என யாரும் இல்லை. ஆனால் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் எனச் சொன்னதோடு சரி. நாங்களும் மேலதிகமாய் எதையும் கேட்டதில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாய் நாங்கள் நால்வரும் ஒன்றாக இயங்கினாலும், எங்களின் பின்புலங்களை நேரடியாகப் பேசிக் கொண்டதில்லை. சொல்லப்போனால் ஓய்வாக அமர்ந்து குடித்தோ, சந்தோஷமாகச் சிரித்துப் பேசியோ வருடங்களாகின்றன.

இந்த வீட்டில் ஒரு வினோத மணம் இருந்து கொண்டிருந்தது. என்ன மணம்? என்பதைச் சரியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. கிருஷணகிரியில் படித்த காலத்தில் அதன் சுற்றுப் புறத்திலுள்ள ஆந்திர கிராமங்களுக்குச் சென்றதுண்டு. வேப்பனப் பள்ளி கிராமத்தில் ஒரு பாழடைந்த இராமர் கோயிலுக்குச் சென்றபோது உணர்ந்த வாசனைதான் இது. என்னவென்று சொல்ல முடியாத வாசம். ஆனால் என்னால் பல வாசனைகளை நினைவுப் படுத்திக் கொள்ள முடியும். வெறும் வாசனைகள் மட்டுமே நினைவுகளின் எச்சமாக நின்றுவிட்டதோ எனக்கூடத் தோன்றியதுண்டு.

இந்த வீட்டில் மட்டுமின்றி, எல்லா வீடுகளுக்குமே ஒரு வாசனை இருக்கத்தான் செய்கிறது. என் பாட்டி வீடு முழுக்க வேப்பமர வாசனை இருந்தது. வெயிலின் வெண்மையும், வெக்கையும் சரி விகிதத்தில் கலந்த ஆஸ்பெஸ்டாஸ் வாசனை நிரம்பிய வீடு என் அத்தையினுடையது. அம்மாவின் வீட்டிற்குத்தான் நிறைய வாசனைகள் இருந்தன. முற்றத்திற்கு வந்தால் சாதி மல்லி வாசமும், தோட்டத்திற்குப் போனால் நத்தியாவட்டை வாசமும் எப்போதுமிருக்கும். அம்மாவின் மீது மஞ்சள் வாசமடிக்கும். விஜயலட்சுமியிடம் இருந்தது சந்தனமும், குங்குமமும், வியர்வையும் கலந்த ஒரு வித கிறக்கமான வாசனை. ஹேமாவிடம் ஃபேர் எவர் கிரீம் வாசனை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்தான். வாழ்நாள் முழுக்க ஒரு வாசனை இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த வீட்டின் வாசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நினைவு கிருஷ்ணகிரிக்குச் சமீபமான வேப்பனப் பள்ளி இராமர் கோயிலில் நின்று கொண்டிருந்தது.

அறைக் கதவு மெல்லமாய் தட்டப்பட்டது. எழுந்து போய் திறந்தேன். குணா நின்று கொண்டிருந்தான்.
”எழுந்திட்டியா?”
”ம்ம்” என்றபடியே சோம்பல் முறித்தேன்.
”குளிக்கப் போலாமா? பக்கத்துல கோதாவரி ஓடுதாம்.”
”போலாம்” என்றேன். நானும் கோதாவரியைப் பாடப் புத்தகத்தில் படித்திருந்ததோடு சரி.

தாமசும் சீராளனும் எங்கேயோ போய்விட்டிருக்கிறார்கள். வீடு சற்றுப் பெரியதாகத்தான் இருந்தது. முன் கட்டு முடிந்த பிறகு விஸ்தாரமான, சிமெண்ட் தரை. பின்பு பின்கட்டு ஆரம்பிக்கும். வீட்டின் எல்லையில் குளியலறை இருந்தது. கழிவறை இல்லை. வீட்டு முகப்பில் கம்பி ரேழி போடப்பட்ட இரண்டு மழமழத் திண்ணைகள் இருந்தன. இரு புறமும் உயரமான, தலைகீழ் ப வடிவ காம்பவுண்ட் சுவர் வீட்டிற்கொரு இரகசியத் தன்மையைத் தந்தது.

தெருவிற்கு இறங்கி, ஐம்பதடி நடந்ததும் வயல் தொடங்கியது. இருள் நன்றாக சூழந்துவிட்டிருந்தது. நடக்க நடக்க நெற்பயிர்களின் பச்சை வாசம் நாசியை நிறைத்தது. மின்மினிப் பூச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினுங்கிக் கொண்டிருந்தன. குணா சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு பாக்கெட்டை என்னிடம் நீட்டினான். நானும் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டேன். இருளில் இரண்டு சிகரெட்டுகளும் ஒளிர்ந்தன. சிகரெட் முடியும்போது நீரின் சலசலப்பைக் கேட்க முடிந்தது. வயல்வெளி முடிந்துபோய் அடர்த்தியான மரங்கள் இருளில் பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்தன. கிளிக் கெச்சட்டங்களின் சப்தங்கள் அடைந்து போய் ஓரிரு கோபக்கார கிளிகளின் குரலை மட்டும் கேட்க முடிந்தது. மிகப்பெரிய அரச மரத்தை ஒட்டி சாலைச் சரிவாய் பிரிந்தது. அதில் இறங்கினோம். ஆறு சன்னமாய் ஓடிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் பிரகாசிக்கத் துவங்கியிருந்தன. நான் ஆழமாய் மூச்சை இழுத்து விட்டேன். சுதந்திரத் தன்மையின் உச்சத்தில் மனம் நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு பறவை தற்காலிகமாய் தன் வாழ்வைக் கடன் கொடுத்திருப்பதாய் தோன்றியது. குணா உள்ளாடைகளையும் கழற்றி எறிந்து விட்டு முழு மனிதனாய் ஆற்றில் இறங்கினான். முதல் இருபது வருடங்களை மலைகளிலும் காடுகளிலும் கழித்திருந்த ஒருவன், அழுக்கான பெரு நகரங்களில் இரத்தம் தோய்ந்த கைகளோடு அலைந்து கொண்டிருப்பதன் அவலத்தை நினைத்துக் கொண்டேன். இறங்கின உடனேயே முங்கினான். ஆற்றின் மடியில் போய் படுத்துக் கொண்டிருக்கக் கூடும். நானும் ஆடைகளை முழுமையாய் களைந்துவிட்டு சிறு சிலிர்ப்போடு நீரில் இறங்கினேன். நீர் மேலே வெதுவெதுப்பாகவும், ஆழத்தில் குளிராகவும் இருந்தது. கூழாங்கற்களும் மணலும் பாதங்களை வருடின. கண்களை மூடிக் கொண்டு நீரில் மூழ்கினேன். ஆற்றின் இரகசியமான குவிமணற் முலைகளை ஆழத்தில் போய் கைகளால் தழுவிக் கொண்டேன்.



நட்சத்திரங்களின் பிரகாசம் கூடியது. நிலவின் ஒளியை விட நட்சத்திரங்களின் ஒளி அதிகக் கிசுகிசுப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதிரகசிய ஒளியில் ஆறு, பூப்பெய்திய பதின்மளின் வெட்கங்களைப் போல தளும்பிக் கொண்டிருந்தது. வெகு நேரம் கழிந்திருந்தது. நீரிலிருந்து மேலே வந்தேன். குணா மீனாக மாறிவிட்டிருக்கிறான். இந்த ஆறும், முன்னிரவும் அவனை எத்தனை சாந்தப்படுத்தும்! என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈரமான தலைமுடியை விரல்களால் அழுத்தமாய் சிலுப்பி விட்டுக் கொண்டேன். குவியலாய் கிடந்த உடைகளில் துழாவி, சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். ஈரக் கால்களில் மணற் துகள்கள் ஆசையாய் ஒட்டிக் கொண்டன. வெற்றுடம்போடு மணலில் அமர்ந்து புகைத்தேன். தீக்கங்கைப் பார்த்து குணா மேலெழுந்து வந்தான். செங்குத்தான கருத்த அலையொன்று நடந்து வருவது போலிருந்தது. அருகில் வந்து சிகரெட்டிற்காக விரலை நீட்டினான். தீக் கங்கின் ஒளியில் அவன் குறி ஸர்ப்பமாய் நீண்டிருந்ததைப் பார்த்துப் பார்வையைத் தாழ்த்தினேன்.

பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் வினோதக் கரைவுகள், நிலவில்லாத தெளிந்த வானத்தின் நட்சத்திரப் பிரகாசம், அமைதியாய் ஓடிக் கொண்டிருக்கும் ஆறு, நெடுநேரம் குளித்ததில் துவண்டிருந்த உடல் என எல்லாமுமாய் சேர்ந்து என்னை மிகவும் நெகிழ்த்திக் கொண்டிருந்தன. கனவுப் பிரதேசத்தில் இருப்பதைப் போல மிக லேசானதாய் உணர்ந்தேன். குணாவிடம் ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றவில்லை. அப்படியே அமர்ந்திருந்தோம். உடலின் ஈரம் காய்ந்ததும் மணற் துகறகள் உதிரத் துவங்கின. எழுந்து ஆடைகளை அணிந்து கொண்டோம். வந்த வழியை நோக்கி நடந்தோம்.
0


தெருவில் பத்து அல்லது பதினைந்து வீடுகள் இருக்கலாம். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் நிறைய இடைவெளி இருந்தது. வீடுகளில் குண்டு பல்பிலிருந்து சன்னமாய் ஒளி தரைக்குக் கவிழ்ந்து கொண்டிருந்தது. தங்கியிருக்கும் வீட்டை நெருங்கினோம். திண்ணைகள் இருண்டிருந்தன. முன் கதவு பாதி திறந்திருந்தது. லேசான ஒளி தாழ்வாரத்தின் தரையில் விழுந்து கிடந்தது. தொலைவில் லேசான பேச்சுக் குரல்கள் கேட்டபடியிருந்தன. நகரத்திலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு, இந்தச் சூழல் பேரமைதியாய் இருந்தது. முன் கட்டைத் தாண்டினோம். சிமெண்ட் தளத்தின் நடுவில் நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நடுப்புறமாக மேசை போடப்பட்டிருந்தது. தாமசும் சீராளனும் எதிரெதிரே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் சீராளன் சிரித்தபடியே கேட்டான்.

”குளியல் எப்படி?”

”பேரானந்தம் என்றேன்”

தாமஸ் கண்ணாடித் தம்ளர்களில் மதுவை நிரப்பத் தொடங்கினான். குணா வேகமாய் போய் நின்றபடியே எடுத்துத் தொண்டையில் சரித்துக் கொண்டான். சீராளனின் தலை வருடி
”ரொம்ப வருஷத்துக்குப் பிறது இந்த மாதிரி ஒரு மனநிலை இருக்கு சீராளா. நன்றி” என்றான்

”அட என்னய்யா இப்படிலாம் சொல்லிட்டு... இது நம்ம ஊர் குணா, நிறைவா இரு. எல்லாக் கருமத்தையும் தூக்கிப் போட்டுட்டு, ஒரு மாசம் சத்தமே போடாம வாழ்வோம்.”
நானும் போய் அமர்ந்து கொண்டேன்.

தாமஸ் தம்ளரை நகர்த்தினான். ஓரே மூச்சில் குடித்துவிட்டு மேசையில் சப்தமெழ வைத்தேன்

“தாமஸ் எனக்கு இங்கயே இருந்திடலாம்னு தோணுது. ஏன் வெளிநாட்டுக்கெல்லாம் போய்ட்டு? இப்ப,இந்த நிமிசம் எல்லாத்தையும் நிறுத்திடுவோம். இருக்கிறத சமமா பிரிச்சிட்டு, இந்த ஊர்லயே ஆளுக்கொரு நிலம் வாங்கிப் போடுவோம். ஆத்துத் தண்ணிதான் நல்லா இருக்கே, விவசாயம் பண்ணுவோம். நிலத்துல சின்னதா வீடு கட்டிக்கலாம். எனக்கு என்னவோ இப்ப வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. முடிஞ்சா ஒரு கல்யாணமும் பண்ணிக்கனும்.” முதல் ரவுண்டிற்கே என் குரல் உடைந்திருந்தது.

சீராளன் சந்தோஷமானான். தாராளமா பண்ணலாம். என்ன சொல்ற தாமஸ்?
தாமஸ் அமைதியாக இருந்தான்.

நான் தொடர்ந்தேன். “ஒரு பாரதியார் பாட்டு சொல்லவா? எனக்கு இப்ப சொல்லனும்னு தோணுது.” மூவரும் மெளனமாய் என்னைப் பார்த்தார்கள்.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், சொல்லிவிட்டு மேலும் குடித்தேன். லேசாய் தொண்டையைக் கனைத்துக் கொண்டுச் சொன்னேன்.
“தூணில் அழகியதாய் வரியை விட்டுடுவோம் எனக்கு குடிசை போதும்” இப்போது சப்தத்தைக் கூட்டிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

”பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும்”

நிறுத்தினேன். யார் முகத்திலும் அசைவுகள் இல்லை. நான் மேலும் குடித்தேன்.

தாமஸ் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

“எல்லாமே எல்லாத்தையும் மறந்துட்டு, நல்ல மூட்ல இருக்கோம். கெடுக்க வேணாம்னு பார்க்கிறேன். ஒண்ணுமே இல்ல, நாம ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சி பாத்தாவே, இங்க வாழறது சரிதானான்னு தெரிஞ்சிக்கலாம். போன வாரம் சீராளனுக்கு என்ன ஆச்சி? நினைவிருக்கில்ல? நிமிசத்துல ஒண்ணும் இல்லாம போயிருக்கும். நாம மத்தவங்கள மாதிரி வாழ முடியாதுங்கிறதுதான் உண்மை. எங்காவது கண் காணாத இடத்துக்கு ஓடிப்போய், வேற பேரோட, வேற அடையாளத்தோடதான் வாழ முடியும்.”

இந்த இடத்தில் நிறுத்தி ஆழமாய் புகைத்தான்.
“உயிரோட இருந்தா” என முடித்தபோது நால்வரையும் ஆழமான மெளனம் சூழந்தது.

குணா தம்ளரோடு எழுந்து சிமெண்ட் தரையில் அமர்ந்து கொண்டான். வெளிச்சம் சற்று அதிகமாய் இருந்ததைப் போலிருக்கவே அண்ணாந்து வானம் பார்த்தேன். அரை நிலா மெளனமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தது. எப்போது வந்ததெனத் தெரியவில்லை.

சீராளன் மெதுவாய் சொன்னான். “இந்த இடம் ஒத்தக்கடை தென்னந்தோப்பை நினைவு படுத்துது இல்ல”

தாமஸ் அவசரமாய் கேட்டான் “எத கிழவியையும் காவாயையுமா?”

நான் சிரித்தேன்.

குணா மெதுவாய் முனகினான். ”இல்ல இரத்தத்தையும், தீயையும்”

மீண்டும் எங்களை மெளனம் சூழந்தது.

குணா மெதுவாய் “சாரிபா” என்றான்.

நாங்கள் மூவரும் புன்னகைத்ததை எவரும் பார்த்துக் கொள்ளவில்லை.

- மேலும்

3 comments:

vinthaimanithan said...

வாவ்! செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்துலயே கலக்கல்! 'குறு' வேண்டாம்... 'முழு'வாவே இருக்கட்டும்...ப்ளீஸ்!

Anonymous said...

welcome sir. aarvamaa kaaththittirukkam adichchi thool kelappunka

Anonymous said...

gr8 writing... expecting next chapter soon...

Featured Post

test

 test