Tuesday, November 9, 2010

அத்தியாயம் 6. மலைகளின் தியானம்

கண் விழித்துப் பார்த்தபோது கொல்லி மலை அடிவாரத்தை வண்டி நெருங்கியிருந்தது. சூரியன் நன்கு மேலெழுந்து விட்டிருக்கிறது. என் சட்டையும் லுங்கியும் இரத்தம் ஊறி காய்ந்து மொடமொடவென துருத்திக் கொண்டிருந்தன. வண்டிக்குள் பச்சை இரத்தத்தின் வீச்சம் குமட்டியபடி இருந்தது. சீராளனும் தாமசும் இன்னும் விழித்திருக்கவில்லை. குணா சலனமில்லாது வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். மூங்கில் தோப்புகள் மண்டியிருந்த, மலை ஏறும் பாதைக்கு சமீபமான இடத்தில் வண்டியை நிறுத்தினான். சீராளனையும் தாமசையும் எழுப்பினேன். முதலில் இந்த ஆடைகளை கழற்றி எறியவேண்டும். வழியில் எங்காவது போலீஸ்காரர்கள் சோதனைக்காக மடக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற யோசனை வந்தது. குணாவைக் கேட்டேன்.

“போலீஸ்காரன் எவனாவது நம்மள சும்மா பாத்திருந்தா கூட பிரச்சின ஆகிருக்கும் இல்ல குணா?”
“ம்ம் ரெண்டு மூணு இடத்துல ரூபா கொடுத்தேன். எவனும் வண்டிக்குள்ளலாம் தலய விட்டுப் பாக்கல”
“ம்ம்”

இதே உடைகளோடு வண்டியை விட்டு வெளியில் இறங்கவும் யோசனையாய் இருந்தது. இருவரையும் எழுப்பினேன். சீராளனின் உடைகள் என்னுடையதை விட மோசமாய் இருந்தது. சின்னப் பதற்றத்தோடே எழுந்த தாமஸ் கொல்லிமலை அடிவாரம் வந்திருப்பதைப் பார்த்து சற்று ஆசுவாசமானான். குற்ற உணர்வு மேலிட்டபடி “இந்த ட்ரெஸ்ஸோட நாம இவ்ளோ தூரம் வந்திருக்க கூடாது… வழில எங்காச்சிம் மாத்திட்டிருந்திருக்கனும்… எல்லாருமே நல்ல போதை..” என தலையை கவிழ்த்துக் கொண்டான். “அதுனால என்ன எந்திரிச்சி வாங்க போய் குளிப்போம் என்றான் குணா.

எப்படி இந்த போதையிலும், பதட்டத்திலும் குணா ஏழு மணி நேரம் தொடர்ச்சியாய் வண்டி ஓட்டியிருப்பான் என நினைத்துக் கொண்டேன்.வண்டியிலிருந்து இறங்காமலே அந்த வழியாய் போன ஒரு முதியவரிடம் குளிக்க இங்கு ஏதாவது இடமிருக்கிறதா? எனக் கேட்டோம். அவர் ஒரு ஒற்றையடிப் பாதையைக் காட்டினார். அவர் போகும் வரைக் காத்திருந்து பின் வண்டியிலிருந்து இறங்கினோம்.

நெடுந்தொலைவிற்கு மூங்கில் மரங்கள் புதர்களாய் மண்டிக் கிடந்தன. உயரமான மலை பசுமையைப் போர்த்தியிருந்தது. நடுத்தரப் பாறைக் கற்கள் அங்கங்கே மரங்களுக்கு நடுவில் புல் மூடித் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க வினோதமாய் இருந்தது. இரண்டு மூங்கில் புதர்களுக்கு மத்தியில் கிளைத்துச் செல்லும் இந்த ஒற்றையடிப் பாதை மலை ஓடையொன்றில் முடிந்தது. சற்றுத் தொலைவிலேயே நீரின் சலசலப்பைக் கேட்க முடிந்தது. மலையின் இடுக்குகளிலிருந்து கசிந்து வரும் இந்நீரோடை மிக அந்தரங்கமான, ஆத்மார்த்தமான ஒரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. பாறைகளை அரித்தரித்து ஏராளமான கூழாங்கற்களை இந்த ஓடை உருவாக்கி விட்டிருக்கிறது. அங்கங்கே சிறு சிறு அகலமான குட்டையாய் நீர் தேங்கி, பின் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது . நீரின் உண்மையான நிறம் வெண்மையாகத்தான் இருக்க முடியும். மென் சூரியன் நீரினுள்ளிருக்கும் கூழாங்கற்களில் பட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு உற்சாகம் நால்வரையும் தொற்றிக் கொள்ள நெளிந்து ஊறும் மலைப்பாம்பைப் போல ஓடிக் கொண்டிருந்த ஓடையின் சிறு சிறு நீர் தேங்கலில் இறங்கி அமர்ந்து கொண்டோம்.

காற்றில் பிரத்யேகமான வாசத்தை உணரமுடிந்தது. அபூர்வமான மூலிகைகளின் வாசனையாய் இருக்கக் கூடும். பட்சிகளின் ஒலிகள் மலையடிவாரம் முழுக்க கேட்டபடியிருந்தன. இம் மலைகளில் அரூப வடிவில் எண்ணற்ற சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் வசித்து வருவதாக குணா சொன்னான். நானும் இத் தகவல்களை அறிந்திருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு இம்மலைகளில் கால் போன போக்கில் சுற்றி அலைந்தது நினைவில் வந்தது. வெகு நேரம் நீரில் கிடந்தோம். எல்லாச் சோர்வுகளையும், பாவங்களையும், பழிகளையும் இந்தத் தூயச் சிறுநதி களைந்து விட்டதைப் போல உணர்ந்தேன். மற்ற மூவரின் கண்களில் படிந்திருந்த அசாத்திய அமைதி எனக்கு ஏற்பட்டிருந்த அதே உணர்வையே பிரதிபலித்தது.

பசிதான் நீரை விட்டு அகல முக்கிய காரணமாக இருந்தது. களைந்திருந்த ஆடைகளை தீ வைத்து எரித்தோம். முழுதும் சாம்பலான பின்பு நீரை அள்ளி ஊற்றி அந்த இடத்தின் சுவடுகளை கரைந்து போக வைத்தோம். பின் வண்டிக்குத் திரும்பி கொண்டுவந்திருந்த ஆடைகளை அணிந்துகொண்டோம். குணா வண்டியை செலுத்த ஆரம்பித்தான். சற்று தூரம் கடந்ததும் கீற்றுக் கொட்டகையிட்ட ஒரு சிறு கடையைப் பார்க்க முடிந்தது.
தாமஸ்தான் முதலில் இறங்கிப் போய் சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டான். நாற்பது வயது மதிக்கத்தக்க, தலைப்பாகை கட்டிய ஆளொருவர் எதுவும் இல்லை எனப் பதில் அளித்தார். இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அவர் கையில் திணித்து உணவைத் தயாரிக்கச் சொன்னான்.

அவர் மிகவும் மகிழ்ந்துபோய் கடைக்குப் பின்னாலிருக்கும் தோப்பில் இளைப்பாறுமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு கயிற்றுக் கட்டில்கள் அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்ந்திருந்த மரங்களின் அடியில் போடப்பட்டிருந்தன. கடைக்காரர் இரண்டு மூங்கில் பாயையும் கொண்டு வந்து கொடுத்தார். இலைகள் உதிர்ந்திருந்த பெரு மரத்தின் நிழலில் மூங்கில் பாயை விரித்துப் படுத்துவிட்டேன். குணாவும் தாமசும் கட்டிலில் படுத்த மறுநிமிடம் சன்னமாய் குறட்டை விட ஆரம்பித்தனர். சீராளன் இன்னொரு மரத்தடியில் போய் பாயை விரித்துக் கொண்டான். நேற்றைய இரவில் நிகழ்ந்த அழுத்தங்களிலிருந்து என்னால் அத்தனை சீக்கிரம் வெளியே வரமுடியவில்லை. எவனோ ஒரு தடியனின் காலில் நசுங்கி என் உயிர் போயிருக்கும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். திடீரென என் முன்னால் விரிந்திருக்கும் வாழ்வு படு அபத்தமாகத் தோன்றியது. எதன் நிமித்தமாக இப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதே புரியாமல் இருக்கிறது. ஏதாவது ஒரு சின்னப் பிடி கிடைத்தால் கூட போதும் இந்த இலக்கற்ற வெள்ளோட்ட வாழ்விலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் எது அந்தப் பிடி என்பதும், எந்தத் திசையிலது எனக்காய் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும்தான் என்னால் இதுநாள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நினைவின் அயற்சியோடு எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் தூங்கிப் போனேன்.

குணா சாப்பிட எழுப்பியபோது உச்சி வெயில் என்னுடன் பாயில் படுத்துக் கொண்டிருந்தது. உணவை இங்கேயே எடுத்துவரச் சொன்னோம். இரண்டு மூன்று காட்டுப் பறவைகளை கடைக்காரர் சமைத்திருந்தார். நல்ல பசி. ருசியான உணவுதாம். கடைக்காரரின் முதுகிற்கு பின்னால் சேலையணிந்த உருவம் ஒன்று தெரிந்தது. அவரின் மனைவியாய் இருக்கக் கூடும். மெளனமாய் சாப்பிட்டு முடித்தோம். கடைக்காரர் மீதிப் பணம் என தந்ததை தாமஸ் வாங்கிக் கொள்ளவில்லை. திரும்பி வரும்போது சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லிவிட்டு வண்டிக்கு நகர்ந்தோம். வண்டியை நான் ஓட்டுவதாய் சொன்னேன். குணா மறுத்தான். மலைகளில் பயணிப்பதென்பது அவனுடைய பால்யங்களுக்கு திரும்புவதை போன்றது என மென்மையாய் சொன்னான். எனக்கு இந்த மூவரைப் பற்றி எதுவும் தெரியாது. எவரின் கதையும் தெரியாது. அறிமுகமாகி 24 நான்கு மணிநேரம் கூட ஆகியிருக்கவில்லை. குணாவின் சொந்த ஊர் எதுவெனக் கேட்டேன். உதகமண்டலம் எனப் பதில் வந்தது. சீராளன் ஆந்திரா. தாமஸ் என்ன ஊர் எனக் கேட்கவில்லை. முன் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். நூற்றுப் பத்து கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். ஊட்டியை விடவும் இந்த வளைவுகள் ஆபத்தானவை என உற்சாகமாய் விசிலடித்தான் குணா.
தேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு இந்த கொல்லிமலைச் சாலை நல்ல அனுபவமாக இருக்கும். குணாவின் நினைவில் பால்யம் திரும்பியிருக்க வேண்டும். மிக உற்சாகமாக வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.

அளப்பறிய மகிழ்ச்சியையும் மிகுதியான சவாலையும் இந்த மலைப் பயணங்கள் நமக்குப் பரிசளிக்கின்றன. கண்ணில் தென்படும் மரங்கள் அனைத்தும் மிக உயர்ந்தும், மிகப் பருத்துமாய் புராதனங்களை முன் நிறுத்திக் கொண்டிருந்தன. மலைப் பெண்ணின் காலடியிலிருந்து மெல்ல ஊர்ந்து உச்சிக்கு அடையும் இப்பயணம், கலவிக்கு இணையான திளைப்புகளைத் தந்து கொண்டிருந்தது. மிகை உணர்வில் ததும்பியபடி நானொரு நிர்வாணத் துறவியாய் இவ் வனாந்திரங்களில் அலைந்து கொண்டிருந்த நாட்களை குணாவிடம் சொல்ல ஆரம்பித்தேன்.

பின்புலம் 1.

டிப்ளமோ முடித்த கையோடு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இருந்த குறைவான தொடர்புகளும் விட்டுப் போயின. உடன் படித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நண்பனொருவனின் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்த நாட்களில் தினம் ஏதாவது ஒரு புத்தகத்தோடு மலையடிவாரக் குறுங்காடுகளில் தஞ்சமடைவது வழக்கமாயிருந்தது. அப்படி ஒரு நாளில் சாமியார் ஒருவர் பழக்கமானார். சடை முடியும், நீள தாடியும், பஞ்சு உடலும், ஒட்டிய கன்னங்களுமாய் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அந்த ஜீவனை பெரிதான சுவாரசியங்கள் எதுவும் இல்லாமல்தான் தினம் கடந்துபோவேன். திடீரென ஒருநாள் அவர் என்னிடம் வந்து பேச ஆரம்பித்தார். சதைத் துணுக்கையே காண முடியாத அவரின் ஒட்டிய தேகத்தில், கண்கள் மட்டும் சுடரென என்னேரமும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவரின் கண்களைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது மனம் முழுக்க அவரின் பேச்சில் லயித்திருக்கும். பார்வையின் மூலமே எதிராளியின் ஐம்புலன்களையும் வசீகரிக்கும் சக்தி அவரிடம் இருந்ததாகவே நான் நம்பினேன். அதனால்தான் அவர் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் போய்கொண்டிருந்தேன்.

அவர் தன்னுடையப் பெயரை ஸ்வாமி ப்ரேம் அய்க்கா என சொல்லிக் கொண்டார். அப்படியெனில் பிரபஞ்சத்தை நேசிப்பவன் என்று அர்த்தமாம். அந்தப் பெயரை அவருக்கு வைத்தது ஓஷோ ரஜனிஷ். இவர் ஒரு ஓஷோ சன்னியாசியாகத்தான் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கியிருக்கிறார். புனேவிலிருக்கும் ஓஷோ கம்யூனில் சில வருடங்கள் கழித்திருக்கிறார். ஓஷோவின் தாந்தரீக விளக்கங்களில் போதாமை ஏற்பட்டு தன் வழியைத் தானே தேடிக் கொள்ளும் முடிவில் வெளியே வந்துவிட்டிருக்கிறார். சில இடங்களில் அலைந்து விட்டு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வருடமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதாய் சொன்னார். எனக்கு அவரின் மீது சின்ன சுவாரசியம் ஒன்று ஏற்பட்டது. தாந்தரீகம் என்றால் என்ன? அதன் பயன் யாவை? என்பன போன்ற என் குழந்தைத்தனமான கேள்விகளுக்குக் கூட மிகத் தன்மையாய் பதிலளித்தார்.

ஒரு நாள் சில புத்தகங்களைத் தருவதாய் கூறி என்னை அவர் வசிப்பிடத்திற்கு அழைத்துப் போனார். மலையின் அடிவாரத்தில் ஓடையொன்று அரித்துப் போன கல் பொந்து ஒன்றுதான் அவர் வசிப்பிடம். இரவில் அங்கு தூங்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். சிறு விலங்குகளின் தொந்தரவு ஏற்படா வண்ணம் அச்சிறு குகை பொந்தை பெரிய பலகைக் கல் கொண்டு மூடியிருப்பார். தாந்தீரகமும் பாலுணர்வும் என்கிற தலைப்பில் ஓஷோ பேசியிருந்த தொகுப்பைதான் எனக்கு முதலில் படிக்கத் தந்தார். இது சிறந்த அறிமுகமாக இருக்கும் என்றும் தொடர்ந்து கேள்விகள் எழுந்தால் வேறு சில புத்தகங்களை தருவதாகவும் சொன்னார். பெண்ணுடலே பரிச்சயமில்லாத பத்தொன்பது வயதில் அந்தப் புத்தகத்தை அணுக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காமமென்றால் என்னவென்றே தெரியாமல் எதைக் கருவியாய் கொண்டு, எதைக் கடப்பது? என்கிற யோசனையும் எழுந்தது. ஆனால் அந்த புத்தகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ஸ்வாமி ப்ரேம் அய்க்காவை என்னுடைய குரு என மானசீகமாய் நினைத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டேன்.

அவர்தான் முதன்முதலாய் என்னை கொல்லி மலைக்கு அழைத்து வந்தார். அரப்பளீஸ்வரர் கோயிலைத் தாண்டி நிர்வாணத் துறவிகள் ஆசிரமம் ஒன்று இருக்கிறது. அங்கு சில காலம் அவரோடு தங்கியிருந்தேன். அங்கிருந்தவர்கள் எவரும் சமணர்கள் இல்லை. மகாவீரரை தொழும் வழக்கமும் இல்லாதவர்கள். வேறு எவரையும் தொழும் வழக்கமும் நான் பார்த்தவரை யாரிடமும் இல்லை. தாந்தீரீக மார்க்கத்தில் விருப்பமேற்பட்டு தனித் தனியாய் தங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள்தாம் அங்கு ஒரு குழுவாக இருந்தனர். தியானம்,உடல்,முக்தி போன்றவைதாம் பொது விஷயங்களாக இருந்ததே தவிர வேறெந்த புள்ளியிலும் அங்கிருந்தவர்கள் இணைந்து செயல்பட்டதாய் எனக்கு நினைவில்லை. என்னுடைய நிர்வாண நாட்களை நான் பெரிதும் கொண்டாடினேன். அதீதமான சுதந்திரத்தையும் விழிப்புணர்வையும் அந்த நாட்கள் தன்னகத்தே கொண்டிருந்தன.பகல்களில் இந்த வனம் முழுக்க ப்ரேம் அய்க்காவும் நானும் அலைந்திருக்கிறோம். நிலவொளியில், கானகத்தில், நிர்வாணமாய் அலைந்து கொண்டிருந்த நாட்களில் என் மனதின் அடியாழம் வரை நிம்மதியும் உயிர்ப்பும் விரவி இருந்தது. (இந்த நாவலின் இரண்டாவது பாகத்தில் இப்பகுதியை விளக்கிச் சொல்கிறேன். இப்போதைக்கு இதோடு நிறுத்துகிறேன்.)
0

“நாம இப்ப அங்கதான் தங்கப் போறமா?” என்றான் குணா
ஆமாம் எனப் புன்னகத்தேன்
”உள்ள போவனும்னா துணிலாம் கழட்டிடனுமா?”
தேவையில்லை என சிரித்தேன்

அந்த ஆசிரம நிர்வாகிக்கு என்னை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் யாராவது தங்க வேண்டுமென வந்தால் ஆசிரமத்தில் அனுமதி இருந்தது. இப்போது எப்படி எனவும் தெரியவில்லை. போய் பார்ப்போம் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

அரப்பளீஸ்வரர் கோயிலை தொட்டபோது சூரியன் மலைகளுக்குப் பின்னால் மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தான். பசும் மலையில் மஞ்சள் ஒளிச் சிதறல்கள் ஏகப்பட்ட வண்ணங்களை ஒரே நேரத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அடர்ந்த மரங்களின் பூக்களும், இலைகளும் வெவ்வேறு வண்ணங்களை ஒரே சமயத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வண்டியிலிருந்து கீழே இறங்கிய சீராளன் “ஆசிரமமெல்லாம் வேணாம்யா” என சலித்துக் கொண்டான். “பெண் துறவிகள்லாம் இருப்பாங்கயா” எனக் குறும்பாய் தாமஸ் சொன்னதும் சீராளன் முறைத்தான்.

வண்டியைக் கோயிலை ஒட்டி நிறுத்திவிட்டு சீராய் நீர் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கினோம். ஆற்றின் அடுத்த முனையில்தான் ஆசிரம் இருக்கிறது. இடையே இருக்கும் சிறு பாறைகளின் மீது கால் வைத்தபடி ஆற்றைக் கடந்தோம். பெயர் பலகை எதுவுமில்லாத உயரமான தடுப்பு சுவர் கட்டிய ஆசிரம் ஒன்று எங்களை வரவேற்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் கம்பி வேலிதாம் இருந்தது. துறவிகளுக்கு இடையூறு அதிகரித்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உள்ளே போனேன்.

வரவேற்பரையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சுவாமி ப்ரேம் அய்க்காவின் நண்பன் என சொன்னேன். அவரிடம் ஒரு சிறிய மாறுதல் தெரிந்தது. புன்னகையோடு வரவேற்றார். ”ஸ்வாமி இப்ப இங்க இருக்காரா?” என்றேன். ”இல்லை அமெரிக்காவில் இருக்கிறார் அடுத்த மாதம் வருகிறார்” என மென்மையாய் பதில் வந்தது. எனக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருந்தது. ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ”இங்கு சில நாட்கள் தங்கிப் போக வந்திருக்கிறோம்” என்றேன். தாராளமாக எனப் புன்னகைத்தாள் மேலும் விதிகள் தெரியுமில்லையா என்றாள்.தெரியும் என புன்னகைத்தேன். இரண்டு குடில்களுக்கான சாவிகள் தரப்பட்டன.நன்றி சொல்லிவிட்டு குடிலுக்கு வந்தோம்

”என்னய்யா உங்காளு அமெரிக்கா போய்ட்டானா? என்னய்யா நடக்குது இங்க?” என சிரித்தபடியே கேட்டான் குணா. எனக்கும் ஒன்றும் தெரியாததால் யாருக்குத் தெரியும் என மையமாய் பதில் சொல்லி வைத்தேன். இரவு உணவிற்கு பிறகு அனைவரும் சந்திக்கலாம் என்றபடி நானும் சீராளனும் ஒரு குடிலிற்கும், குணாவும் தாமசும் ஒரு குடிலிற்குமாய் பிரிந்தோம்.

இரவு உணவிற்கு பின்பு நால்வரும் குடிலுக்கு முன்பிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். எங்கிருந்து எப்படித் துவங்குவது என்பதுதாம் யோசனையாக இருந்தது.
”முதல்ல நமக்குள்ள சில ஒழுங்குலாம் வேணும்” என ஆரம்பித்தான் குணா.மூவரும் ஆமோதித்தோம். “குடி, குட்டி இதையெல்லாம் கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கனும்… கசாமுசான்னு குடிச்சிட்டு தேவையில்லாத பிரச்சின பண்னிலாம் மாட்டிக்க கூடாது… யாருக்கும் பெண் சகவாசம் இருக்க கூடாது... தனியா எங்கயும் போய் குடிக்க கூடாது… வேல.. வேல.. வேலதான். நல்லா செட் ஆவுற வரை கொஞ்சம் ஜாக்கிரதயாதான் இருப்பமே” என்றான். எல்லாரும் ஒத்துக் கொண்டோம்.

தாமஸ் ஆரம்பித்தான். “தோப்பு சம்பவம் விபத்துன்னு முடிவாகிடுச்சாம். நம்பத் தகுந்த இடத்தில இருந்து செய்தி வந்திருக்கு. ஸோ மதுரைக்கே போய்டலாம். இன்னொரு வண்டி வாங்குவோம் சிம்மக்கல்ல சின்னதா ஒரு இடம் பாத்து ட்ராவல்ஸ் ஒண்ணு ஆரம்பிப்போம். வண்டிய நாமளே ஓட்டிக்கலாம். சீராளனுக்கு கொஞ்சம் ஆந்திரா கேங்குகளோட தொடர்பு இருக்கு. எனக்கும் மெட்ராஸ் பாண்டிச்சேரி பக்கலாம் ஆளுங்க இருக்காங்க... தனியா பன்ரோங்கிறத எல்லாருக்கும் சொல்லனும்... எந்த பிரச்சினனாலும் டக்குனு முடிச்சி குடுப்பாங்க ங்கிற நம்பிக்கையும் மார்க்கெட்ல கொண்டு வரனும்... இதுக்குலாம் பயங்கரமா உழைக்க வேண்டி வரும்”

பண்ணிடலாம் என்றேன். எல்லாரும் விடுதலையாய் உணர்ந்தோம். திட்டமிடுதலுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். எதைத் திட்டமிடுவது? எப்படி இயங்குவது? என்றெல்லாமிருந்த தடைகள் மெதுவாய் விலகத் துவங்கின. ”ரெண்டு நாள் இங்க தங்கிட்டு இன்னும் பக்காவா ப்ளான் பண்ணிட்டு போவமா?” என்றேன். அனைவரும் ஆமோதித்தனர். ”நம்மோட எல்லா நடவடிக்கைக்கும் ஒரு தெளிவான திட்டத்த வச்சிப்போம். பின்ன வேலய ஆரம்பிப்பம். இந்த இடம் ரொம்ப பிரமாதமான இடம். மனசு புத்தி எல்லாம் ஒரே இடத்துல நிக்கும் இங்க திட்டமிடுறதுதான் வசதி”என முடித்தேன்.

அனைவருமே சுறுசுறுப்பாய் உணர்ந்தோம். இனி வரும் நாட்களை இதே பரபரப்பு ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். எல்லோரும் படுக்கைக்குத் திரும்பினோம்.

ஓவியம். பிகாஸோ
-மேலும்

9 comments:

Katz said...

நல்ல நடை.

யுவா said...

அந்த ஓடை மாதிரியே உங்க நடை. அரிக்கவும், தேங்கவும், வழியவும், மற்றும் பிரகாசித்துப் பிரதிப்பலிக்கவும் செய்கிறது. வாழ்த்துக்கள்!!!

யுவா said...

இந்த தொடரைப் பற்றி எழுதி அறியச்செய்த கேபிளாருக்கு நன்றி.

கவிதா | Kavitha said...

இந்த பகுதி ரொம்ப நல்லா இருக்கு அய்ஸ்... :)

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரே மூச்சில் அத்தியாயம் ஆறு வரை படித்து விட்டேன், நாவல் சுவராசியமாய் செல்கிறது.

Anonymous said...

கொல்லி மலை குளிரை ஸ்பரிசித்தேன். அடுத்த பாகத்தில் இருந்து கதை இன்னும் சூடு பிடிக்கும்னு நினைக்கிறன். சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க பாஸ்.
surya

Anonymous said...

Kalakiteenga Thala.

Ellam episodum mudincha piragu Koodiya seekiram idhu oru periya novela varum endru edirpaarikiren.

Aana episoda seekiram mudichudatheenga please.

Indha part romba nalla irukku, kuripa Osho and Tantric topics :)

Sundar

Unknown said...

அருமை கொல்லி மலை இனிமேதான் சூடு புடிக்குமோ?

Anonymous said...

நல்லருக்கு ,அதற்காக மெகா சீரியல் வேண்டாம் பாஸ்

Featured Post

test

 test