Friday, October 29, 2010

அத்தியாயம் 2.ஆ. சந்தன விஜி

-------------------------------------------------------------------------------------


படியிறங்கி கீழே வரும்போது பிரமாதமான காலைப் புணர்ச்சி ஒன்றைத் தவறவிட்டதாக நினைத்துக் கொண்டேன். லேசாய் முயற்சித்திருந்தாலும் விஜி ஒத்துக் கொண்டிருப்பாள். நல்லதொரு தருணத்தை தவறவிட்டதற்காக சலித்துக் கொண்டேன். சற்று தூரம் நடந்து, பிரதான சாலை வந்ததும் அப்படி நினைத்தது எத்தனை மோசமான எண்ணம் என்பதும் உறைத்தது. கடவுளும் சாத்தானும் நடனமிடும் வெளி என்ற அய்யனாரின் கவிதை வரி நினைவில் வந்தது. லேசாய் புன்னகைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அப்படித்தான் இருக்கிறேன். கடவுளும் சாத்தானுமாய். நல்லதும் கெட்டதுமாய். மேலும் ஒரு மனிதன் அப்படித்தான் இருக்க முடியும் எனவும் தேற்றிக் கொண்டேன். கடற்கரைக்குப் பிரியும் சாலை முக்கில் நின்று சிகரெட் புகைத்தேன். பத்து மணி வெய்யில் கண்களைக் கூசச் செய்தது. இந்த ஊர் வெய்யில் சற்று உக்கிரமாய் சுட்டாலும் அதன் வெண்மையும் பளீர்தனமும் கம்பீரமாய் இருந்தது. விஜயலட்சுமியை நினைக்கையில் உள்ளுக்குள் நிம்மதியும் ஆசுவாசமும் படர்ந்தது. அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணமும் வந்து போனது. இந்த உணர்வு மிகப் புதிதாக இருந்தது. பொதுத் தொலைபேசியிலிருந்து ட்ராவல்ஸைத் தொடர்பு கொண்டு கார் வேண்டுமென்றேன். அவனிடம் பைக்கை எடுத்திருப்பதால் என் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்திருந்தேன். மேலதிகமாய் எதுவும் கேட்காமல் பத்தாவது நிமிடத்தில் காரைக் கொண்டுவந்து விட்டுப் போனான்.


விஜயலட்சுமி சந்தன நிற ஷிபான் புடவைக்கு மாறி இருந்தாள். கையில் ஒயர் கூடையுடன் நடந்து வந்து கொண்டிருப்பதை காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாய் பார்த்தேன். கண்ணாடியில் அவளின் முழு பிம்பம் விழுந்தது. சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். சந்தனமும் குங்குமமுமாய் அவள் மாறியிருப்பதாகத் தோன்றியது. கண்ணாடியில் பிம்பம் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒரு சில நொடிகளில் அவளின் கருணை பொங்கும் பெரிய முலைகள் கண்ணாடியை நிறைத்தன. காரைக் கடந்ததும் நான் லேசாக ஹார்ன் அடித்தேன். திரும்பிப் பார்த்து ஆச்சரியப் புன்னகையொன்றை உதித்தாள். தலையசைப்பில் உள்ள வா என்றேன். கதவு திறந்து முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“கார் இருக்கா உங்ககிட்ட.. எங்க நிறுத்தி வச்சிருந்தீங்க?” என்றவளிடம் வாடகைக் கார் என்றேன்.

“ஓ! எதுக்கு கார்லாம், பைக் லயே போய் இருக்கலாமே” என்றாள். “உனக்கு தெரிஞ்சவங்க யாரும் பாத்துடக் கூடாதுன்னுதான். உன் கழுத்தில தாலி வேற இருக்கே” என்றேன்.

“அதுலாம் ஒண்ணும் பிரச்சின இல்ல… யார் பாத்தா என்ன.. நான் அடுத்தவங்கள பத்தி ரொம்ப யோசிக்கிறதில்ல…இந்த தாலி கதைய இப்ப சொல்லனுமா? என்றதற்கு

அவசியமில்லை எனப் புன்னகைத்தேன்.

கடற்கரைக்கு செல்லும் சாலையிலிருந்த மிஷன் ஆஸ்பத்திரியில் இறங்கிக் கொண்டாள். நான் வண்டியை ஓரமாய் நிறுத்தினேன். அம்மாவ பாக்க வர்ரீங்களா? என்றதற்கு நாளைக்கு வர்ரேன் இப்ப வண்டிய இங்க விட முடியாதே என்றேன்.

“சரி அஞ்சே நிமிஷம் வந்திடுரேன்” என்றபடியே விடுவிடுவென உள்ளே போனாள். அவளின் பின்புற ப வடிவ ஜாக்கெட் முதுகில் சூரியக் கதிர்கள் ஆசையுடன் பாய்ந்ததைக் கண்டேன். அவள் இறங்கிப்போன பின்புதாம் கார் முழுக்க மல்லிகை வாசம் நிரம்பியிருப்பதை உணர்ந்தேன். மூச்சை ஆழமாய் இழுத்தேன். பெண் எத்தனை அற்புதம்! வாசம், உணர்வு, உடல், நினைவு என எல்லாவற்றையும் முழுதாய் நிறைக்கப் பெண்ணால் மட்டும்தான் முடிகிறது. நான்கே நிமிடத்தில் திரும்பி வந்தாள். அவசரமாய் ஏறி உட்கார்ந்து கொண்டாள். முன்பை விட இப்போதவள் குதூகலமானாள்.

“போங்க போங்க வேகமா போங்க இங்கிருந்து ஓஓஓடிடலாம்” என குதூகலித்தபோது குட்டிச் சிறுமியின் மன நிலைக்குத் திரும்பியிருந்தாள். எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான்.

“உங்க கிட்ட ஒண்ணு சொல்லவா நான் கார்ல போறது இதான் முதல் டைம்” என்றாள்
“நானும்தான்” என்றேன்
“அப்ப எப்படி ஓட்டுறீங்க?”
“தெரில அதுவா ஓடுது”
“பொய்யி “
“இல்ல இந்த ஊர்ல இதான் முதல் முற “
“உங்க ஊர் எது?”
“திருநெல்வேலி. அம்பாசமுத்திரம்”
“கல்யாணமாகிடுச்சா?”
“இல்ல “
“அப்பா அம்மாலாம்?”
“யாரும் இல்ல”
“அண்ணன்.. அக்கா.. தங்கச்சி..தம்பி இப்படி யாரும்?”
“யாருமில்ல நான் ஒருத்தன் தான்”
“அய்யோ… என்ன வேல பாக்குறீங்க?
“அது ஒரு வேல.. எப்பவாச்சிம் வரும்.. ஆனா நிறைய பணம் கிடைக்கும்”
“அப்படி என்ன வேல?”
“எல்லா மாதிரியும் வரும். சில டைம் கொலலாம் கூட பண்ணனும்”
“யார் நீங்க?… கொல பன்றீங்க.. என்றபடியே விடாமல் சிரித்தாள்.
எப்படி சிரிக்காம பொய் சொல்ரீங்க இப்படி?”
“ஏய் நிஜம்தான்.. நான் ஒரு கொலகாரன்” என்றேன். அவள் நம்பவில்லை.
“உண்ம சொல்லுங்க என்ன வேல?”
“ஆந்த்ரோபோலஜிஸ்ட் “
“அப்படின்னா?”
“சும்மா ஊர் ஊரா போறது.. மக்கள பாக்கிரது.. பேட்டி எடுக்கிறது. கட்டுரை எழுதுறது. யுனிவர்சிட்டிக்கு அனுப்புறது. அவ்ளோதான்.”
“புரியல. எழுத்தாளரா?”
“ம்ம் அப்படியும் வச்சிக்கலாம்”
“என்னலாம் பேட்டி எடுக்க மாட்டீங்களா?”
“அதுக்குதான கூட்டிப் போறேன்” என சிரித்தேன்.
“அப்போ உங்க வேல விசயமாத்தான் கூட்டுப் போறிங்களா? என் மேல இருக்க பிரியத்தால இல்லயா?”
“சும்மா சொன்னேன். இன்னிக்கு காலைல எனக்கு சாப்பாடு கொடுத்த இல்ல. அந்த மாதிரி எனக்கு யாரும் பண்ணதில்ல. சின்ன வயசுல அம்மாகிட்ட சாப்டது, அதுக்கு பிறகு நீதான்.”

சட்டென அவள் கண்கள் குளமாகின.

“உங்கள பாத்த ஒடனே நெனச்சேன். ஏதாச்சும் பெரிய பிரச்சின இருக்கும்னு. யாருமே இல்லாம இருக்கிறது எவ்ளோ கஷ்டம் இல்ல. நான் உங்கள பாத்துக்கட்டுமா?”
“அதுலாம் கஷ்டம் விஜி”

“நெஜமா சொல்ரேன். நான் உங்கள நல்லா பாத்துக்கரேன். யாருமே இல்லாம தனியா இந்த உலகத்தில வாழுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு தெரியும். அப்பா படிக்கும்போதே இறந்துட்டார். மிச்சம் மீதி இருந்த சொத்தலாம் வித்துதான் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. ஆனா அந்த பாவியோட நான் ஒரு மாசம் கூட வாழல. இல்லாத சித்ரவத பண்ணான். நான் போடான்னு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன். இந்த தாலி ஒரு பாதுகாப்புக்குதான தவிர வேர எதுக்கும் இல்ல” எனச் சொல்லியபடி அழத் துவங்கினாள். நான் காரை ஓரமாய் நிறுத்தினேன். குனிந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதவளின் முதுகில் தட்டி தலையை வருடினேன்.

அவள் எழுந்து கணகளைத் துடைத்துக் கொண்டாள். சன்னல் வழியே வெளியே பார்த்து மிரண்டாள். “காலாப்பட்டுக்கா வந்திருக்கோம்?

“ஆமா. ஏன் பயப்படுற?”
“இதான் அந்த ஆள் ஊர்”
“நாம ஊருக்குள்ள போகப் போறதில்ல. வெளிலதான் பீச் லேண்ட் னு ஒரு ரிசார்ட் இருக்கு அங்க போய் சாப்டலாம்”
“ம்ம்” என்றாள் மிரட்சியாக.
காரை ரிசார்டுக்கு திருப்பியபோதுதான் அவள் முகத்தைப் பார்த்தேன். கண்களில் பீதி படர்ந்திருந்தது.
“விஜி நாம வேர எங்காச்சும் போலாம்”
“ஏன் பரவால்ல இங்கயே போவோம்”
“உன் முகம் சரியில்லயே”
“இல்ல, அதுலாம் ஒண்ணும் இல்ல.. அழுதேன் இல்லயா அதுனால அப்படி இருக்கும்.. போன உடனே முகம் கழுவினா சரியா போகிடும்” என முகத்தை எனக்கு நெருக்கமாய் கொண்டு வந்து புன்னகைத்தாள்.

இங்கு போன மாதம் ஒரு முறை வந்தேன். மூங்கிலாலான சிறு சிறு குடில்கள் தென்னை மர அடர்வுத் தோப்புக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும். நேர வாடகைக்கு குடிலை எடுத்துக் கொள்ளலாம். சற்றுத் தள்ளி நடந்தால் கடல். பாண்டியில் சீற்றமாய் இருக்கும் கடலலைகள் காலாப்பட்டில் சற்றுத் தணிந்திருப்பது போலத் தோன்றும். ஒவ்வொரு குடிலுக்கும் போதுமான அளவிற்கு இடைவெளிகள் இருப்பதால் தொந்தரவில்லாதிருக்கலாம். குடில் மஞ்சம்பில் கூரை வேய்ந்திருந்தது. பக்கத் தடுப்புகள் ஒரே அளவான பச்சை மூங்கில் கழிகளால் நெருக்கமாக பின்னப்பட்டிருந்தது. உட்கார்ந்து உணவருந்த கண்ணாடி பதிக்கப்பட்ட மூங்கில் மேசை ஒன்றும் மூங்கில் நாற்காலிகள் நான்கும் போடப்பட்டிருந்தன. பனை ஓலை தட்டி ஒன்றைக் கொண்டு அந்தப் பெரிய குடிலை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். மிக ரசனையாக கட்டப்பட்ட இந்த குடில் குடித்துவிட்டு சல்லாபிப்பதற்காகவே பார்த்துப் பார்த்து கட்டப்பட்டிருக்கிறது.

ரொம்ப நல்லாருக்கில்ல இந்த இடம் என்றபடி குடிலுக்குள் நுழைந்தோம். உள்ள முகம் கழுவ இடம் இருக்குமா என்றபடி தட்டியை விலக்கி உள்ளே போனாள். நான் பின் தொடர்ந்தேன். முன்னே சென்றவள் இந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவளைப் போல சடாரென பின் பக்கமாய் திரும்பி என்னைக் கட்டிக் கொண்டு தேம்பினாள். இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன். மஞ்சள் நிறப் பூவரசம் பூவினைப் போல அந்த மெல்லிய இருளில் அவள் சுடர்விட்டுக் கொண்டிருந்தாள். பூச்சுக்கள் தீண்டியிராத அவளின் மென் சிவந்த உதடுகளைக் கவ்விக் கொண்டேன். உயரமான பாறையின் மீதிருந்து சலனமற்ற நதியின் மேற்பரப்பைக் கிழித்தபடி நீருக்கடியில் பயணம் புகுவதைப் போலிருந்தது. அவளின் உதடுகளின் வழியாக மெல்ல அவளினுள் பயணித்தேன். நீரின் குளுமையும் தழலின் வெம்மையையும் உடல் முழுக்க சேமித்து வைத்திருந்தாள். பித்தம் உச்சினுக்கேறி அவளை இரு கைகளினால் ஏந்தி அருகில் தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் கிடத்தினேன். விஜி விஜி என அரற்றினேன். அந்த நேரத்தில் என் பைத்தியத்தனம் முற்றியிருந்ததை என்னால் பார்த்துக் கொள்ள முடிந்தது.

விஜி என்னை வாரியெடுத்துக் கொண்டாள். “எனக்குள்ள போ! போ! வென்றும் “என் கிட்ட வந்துடு வந்துடு” என்றுமாய் பிதற்ற ஆரம்பித்தாள். எனக்காக அவளும் அவளுக்காக நானும் இத்தனை வருடங்களாய் காத்துக் கொண்டிருந்ததை உணர ஆரம்பித்தோம். அவளின் சந்தன நிறப் புடவை விலகி அதி சந்தன முலைகள் வெளிவரத் திமிறிக் கொண்டிருந்தன. நான் அவள் மீது ஒரு கரும் போர்வையினைப் போல படர்ந்தேன். எனக்குள் அவள் முழுவதுமாய் ஒடுங்கிக் கொண்டாள். அவளணிந்திருந்த ஜாக்கெட்டின் பொத்தான்களை விலக்கியதும் வெளிச்சம் அறையினுள் நிரம்பத் துவங்கியது. அவளுடலின் மீதிருந்த ஆடைகளை விலக்க விலக்க அறையின் பிரகாசம் கூடியது. மூங்கிலின் பச்சை வாசம் குடிலில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது. அவ்வப்போது கேட்கும் கடலிசைத் தாலாட்டில் தென்னை மரக் கீற்றுகளும் சேர்ந்து கொண்டன. பச்சை வாசத்தோடு அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகைப் பூக்கள் படுக்கையில் நசுங்கித் தத்தம் கடைசிப் பூவுயிர் வாசத்தை அறைக்குத் தந்திருந்தன. பூவில் குளித்திருந்த விஜியின் மென் வியர்வை, நாங்களிருவரும் உடல் நதியில் அமிழ்ந்து மெல்லத் தொலைந்து போய் கொண்டிருப்பதை சன்னமாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.


எத்தனையோ உடல்களைத் தாண்டி வந்தவன்தான் என்றாலும் இவள் எனக்கே எனக்கானவள். இதுநாள் வரைக்குமாய் அர்த்தமில்லாது அலைந்த என் இருப்பின் ஜீவன் இவள்தான். நான் உணர்ச்சிப் பெருக்கில் குழைந்தேன். அவளின் நாபியினைத் திறந்து கொண்டு உள்ளே போய் படுத்துக் கொள்ளும் ஆசைகள் மிகுந்தன.சிவப்பு நிறப் பாவாடையை மேலேற்றி அவள் யோனியினுள் முகம் புதைத்தேன். உணர்வெழுச்சி தாங்கவியலாது விஜி கிறங்கி முனகினாள். அதி வெண்மையும் செம்மஞ்சளும் கலந்து குழைத்த அவளின் தொடைகளை என் தோள்களில் சுமந்தபடி யோனி வழி உள் நுழைந்தேன். என் வாழ்வின் அதி உன்னத முயக்கம் இதுவாகத்தானிருந்தது. கிட்டதட்ட சாவின் விளிம்பை இருவரும் தொட்டு மீண்டோம்.

7 comments:

Mohan said...

அட்டகாசம் அய்யனார்!

நேசமித்ரன் said...

எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான்//

MSK / Saravana said...

கிளாஸ் தல.. இந்த அத்தியாயம் ரொம்பவே அருமை.

எல் கே said...

நன்றாக செல்கிறது கதை.. :)

தமிழ்நதி said...

அய்யனார்,

இப்படியெல்லாம் நாங்கள்(பெண்கள்) எழுதினால் என்னாகும் என்று நினைத்துப் பார்த்தேன். வாசிக்கிறவர்களின் முகம் போகும் போக்கை நினைத்துச் சிரிப்பாக இருந்தது. என்னமோ போ...!

Unknown said...

//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான்.//

அருமையான வரிகள் மிகச் சரியான அவதானிப்பு அய்யனார்.

Saminathan said...

//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான். //

மிக அருமை. மிக உண்மை.

Featured Post

test

 test