Tuesday, October 26, 2010

அத்தியாயம் 2.விஜயலட்சுமி

சில நெருக்கடிகளால் பாண்டிச்சேரியில் ஆறு மாத காலம் தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது.காரணத்தைப் பிறகு சொல்கிறேன். தலைமறைவென்றால் பெரிய பதட்டமான மறைவு ஒன்றும் இல்லை. என் கைத் தொலைபேசி பிடுங்கப்பட்டிருந்தது. நெருக்கமான நண்பர்களிலிருந்து தெரிந்த மனிதர்கள் வரை எவரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனைகள் இருந்தன. அத்தோடு பாண்டிச்சேரியைத் தவிர்த்து வேறு எந்த நகரத்திற்கும் பயணிக்கக் கூடாதெனவும் தடை விதிக்கப் பட்டிருந்தேன்.

இங்கு வருவது இதுவே முதன் முறை. பேருந்து நிலையத்திற்கு சமீபமான ஒரு சிறிய விடுதியில் அறை எடுத்துக் கொண்டுத் தங்கினேன். இரு சக்கர வாகனமொன்றினை(யமஹா rx100)மாத வாடகைக்கு எடுத்துக் கொண்டு நகரம் முழுக்க என் இருப்பிடத்தைத் தேர்வு செய்ய அலைந்தேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வசிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் முதலியார் பேட்டையைத் தெரிவு செய்தேன். முதலியார் பேட்டையைச் சுற்றி வந்ததில் விடுதலை நகர் ஹவுசிங் போர்டு எனக்கு வசதியாக இருக்குமெனத் தோன்றியது. ஒரு பழைய வண்ணம் உதிர்ந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சிறிய போர்ஷனை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன்.

அங்கங்கே காரை உதிர்ந்த சிமெண்ட் தரை. வண்ணமிழந்து வெளிறிபோன சுவர்கள். ஒரே ஒரு சோபா மட்டுமே போட இயலும் ப வடிவ மிகச்சிறிய வரவேற்பறை. ப வின் இரண்டாவது செங்குத்து கோட்டிலிருந்து பிளந்து சென்றால் குறுகலான படுக்கையறை. வரவேற்பரை முடியும் அடுத்த முனையில் வராண்டா மாதிரியான தோற்றத்திலிருப்பதுதான் சமையலறை. சமயலறையின் முடிவில் தகரக் கதவு கொண்ட கழிவறை அதனுள் ஓரமான காலி இடம்தான் குளிப்பறை. இந்த ஹவுசிங் போர்ட் வீடுகளை வடிவமைத்தவன் கையில் கிடைத்தால் முகரையைப் பெயர்த்து விட வேண்டும் என மனதில் கறுவிக் கொண்டேன். வீடுகளின் மீது பெரிய காதல் எதுவும் இல்லையென்றாலும் இந்த அளவிற்கு கோபம் பொங்க காரணம் நான் படித்திருந்த சிவில் எஞ்சினியரிங் டிப்ளமோதான். வாழ்வு ஒழுங்காயிருந்திருந்தால் நல்ல வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்திருப்பேன்.

இருப்பினும் இந்த எலி பொந்தை என் வசதிக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டேன். சமயலறையைக் குளியலறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். முறையே படுக்கையறைச் சுவர்களுக்கு சிவப்பு வண்ணம், வரவேற்பறைக்கு மஞ்சள் வண்ணம், குளியலறையாக மாற்றின சமையலறைக்கும், கழிவறைக்கும் நீல வண்ணம் வாங்கி வந்துப் பூசினேன். தகரக் கதவைப் பெயர்த்து வெளியில் எறிந்தேன். இப்போது இது கொஞ்சம் சுமாரான வசிப்பிடமாகியது. கணினிக்கு ஒரு குறுகிய மேசை, படுக்கையறையில் ஒரு மெத்தை விரிப்பு. உடைகளை, பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு சிறிய மர அலமாரி. உணவு தண்ணீர் போன்றவைகளை வைக்க ஒரு சிறிய குளிர் பெட்டி அவ்வளவுதான். எலிப்பொந்து உல்லாசபுரியானது.

இந்த நாட்களில் செய்ய ஒன்றுமே இல்லாமல் இருந்தது. பகலைக் கொல்ல பெரும்பாடு பட வேண்டியிருந்தது. குடிதான் நேரத்தைக் கொல்ல எனக்கிருந்த ஒரே ஆசுவாசம். பகலில் குடிக்க உகந்த நகரம் பாண்டிச்சேரிதான். பெரும்பாலும் தனலட்சுமி பாரின் உள்ளறை அல்லது எப்போதாவது மிக உற்சாகமான மன நிலை வேண்டி கடற்கரைக்குச் சமீபமாகவிருக்கும் அஜந்தா பாரின் கூரை நிழலடர்ந்த மாடி இவ்விரண்டும்தான் என் பகற் புகலிடங்களாக இருந்தன. விடுமுறை நாட்களை கவனமாய் தவிர்த்து விடுவேன். ஏனோ குடிக்கும்போது நானும் இயற்கையும், நானும் நானும் மட்டுமே லயித்திருக்க விருப்பம். சிதறல்களாய் மனிதர்களை அருகில் காணும்போது குடித்த திருப்தி வருவதில்லை. எப்படி ஒவ்வொரு வாரமும் இந்த நகரம் குடிகாரர்களால் நிறைகிறது என வியப்பாய் யோசித்ததுண்டு.

வசிப்பிடத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்களை பார்த்துப் புன்னகைப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். குறிப்பிட்ட ஒரே நேரத்தில் வெளியில் போவதையும் வருவதையும் மிகக் கவனமாக தவிர்த்ததால் எப்போது போகிறேன்? எப்போது திரும்புகிறேன்? என்ற தகவல்களை பொழுது போகாத பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நான் வெகுநாள் தராமலிருந்தேன். எல்லாம் ஒரு மாதம்தான். அடுத்தவர்களின் இரகசியமறிவதைப் பகல் நேரப் பொழுது போக்காக வைத்திருக்கும் நடுத்தர வயது பெண்களுக்கு சில நாட்கள் சவாலாக இருந்துவிட்டு ‘ஏதோ எழுத்தாளனாம் கதை எழுதுறானாம்’ என்கிற ‘சப்’ சுவாரசியத்தை பக்கத்து போர்ஷன் விஜயலட்சுமி மூலமாய் வரவழைத்து விட்டேன். பகலில் பார்களுக்கு போய்விட்டு இரவில் வெகு நேரம் விழித்திருக்கிறான். என்கிற மேலதிக தகவல் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் விஜயலட்சுமிக்கு அத்தகவல்கள் போதவில்லை என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இங்கு வந்த புதிதில் போதை மிகுந்த ஒரு மதியப் பொழுதில்தான் விஜயலட்சுமியை முதலில் பார்த்தேன். முதல் மாடிக்கும் இரண்டாவது மாடிக்குமான படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்தாள். மஞ்சள் பூசிக் குளித்திருந்த, லேசாய் பருக்கள் காய்ந்திருந்த வட்ட முகம். சந்தன நிறம். சற்றே பெரிய நெற்றிப் பொட்டு. வகிட்டில் குங்குமக் கீறல். அவசரமாய் கழுத்தை நோக்குகையில் மஞ்சளில் குளித்திருந்த தாலிக் கயிறு. கிடைத்த குறுகிய நேரத்தில் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. ஒருவரை ஒருவர் கடந்த பின்னர் முதுகின் பின்னால் அவள் குரல் கேட்டது

“புதுசா வந்திருக்கிங்களா?”
“ம்ம் ஆமா”
“பேமிலி இன்னும் வரலயா?”
“பேமிலிலாம் இல்ல”
“ஓ! ஏதாவது உதவின்னா கேளுங்க நாங்க உங்க பக்கத்து வீடுதான்”
“கண்டிப்பா. ரொம்ப நன்றி”

உள்ளே வந்து கதவடைத்த போது அவள் குரல் காதுகளின் வழியிறங்கி உள்ளே அதிர்ந்தது. போதை என முணுமுணுத்தபடி தூங்கிப் போனேன்.

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். நேரம் பனிரெண்டைக் கடந்திருந்தது. புழுக்கமும் இறுக்கமும் அதிகமாக இருக்கவே சிகரெட்டை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போகும் படிக்கட்டுகளில் ஏறினேன். நல்ல விஸ்தாரமான மாடியிது. எதிரில் ஒரு பூங்கா முழுக்க மரங்களிருப்பதால் நல்ல காற்றும் வீசிக் கொண்டிருக்கும். சிகரெட்டைப் பற்ற வைக்க தீக்குச்சியை உரசும்போதுதான் கவனித்தேன். இரண்டு உருவங்கள் கட்டித் தழுவியபடி வெற்றுத் தரையில் உருண்டு கொண்டிருந்தன. என் அரவத்தில் பதறியடித்து எழுந்து, ஆணுருவம் பக்கத்து கட்டிடத்தினுக்கு தாவிக் குதித்து, படிக்கட்டுகளில் அவசரமாய் இறங்கி ஓடியது. பெண்ணுருவம் அசையாது படுத்திருந்தது. மெல்லிதாய் ஒரு புன்னகையுடன் நான் கீழிறங்கி வந்துவிட்டேன். ஒரு ஆர்வக் கோளாறில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டுப் புகைத்தேன். நான்கு நிமிடம் கழித்து நைட்டியுடன் விஜயலட்சுமி மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் தலை குனிந்தபடி மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு நொடி அவளை இமைக்காமல் பார்த்தேன். அவமானம் அப்பியிருந்த அவளின் முகமும், மிகுந்த காமத்தைத் தேக்கியபடி தளும்பின அவளின் கனத்த முலைகளும் உயிரைப் பிழிய அவசர அவசரமாய் கதவைச் சாத்தினேன்.

அந்த இரவு எனக்குத் தூங்க சிரமமாய் இருந்தது. வலுக்கட்டாயமாய் விஜயலட்சுமியை நினைவிலிருந்து துரத்தினேன். நைட்டியில் அவளுடல் பார்த்த இரண்டுநிமிடம் மிகுந்த தொந்தரவினை ஏற்படுத்தியது. இரவில் எல்லாப் பெண்களுமே பேரழகிகளாகிவிடுகிறார்கள். அதுவும் இந்த இரவு ஆடை அணிந்த பெண்களைப் பார்க்கும்போது காமம் ஒரு காட்டாற்றினைப் போல சீற்றம் கொள்கிறது. நான் தலையை உலுக்கிக் கொண்டேன். இந்தப் பெண் அபாயத்தைத் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறாள். முதலில் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே விசாரித்துத் தெரிந்து கொண்ட லாஸ்பேட் விலாசத்தினுக்கு ஒரு முறை சென்று வரவேண்டும். அதிக விருப்பமில்லை என்றாலும் கூட பெண்களின் மீதான கவனக் குவிப்பை குறைக்க உதவும் என நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

நான்கு நாட்கள் கழித்து காலை எட்டு மணி வாக்கில் என் கதவு வேகமாய் தட்டப்பட்டது. எழுந்து கதவைத் திறந்தேன். விஜயலட்சுமி நின்று கொண்டிருந்தாள். அவளின் பெரிய கண்கள் குளமாயிருந்தன. அன்று இரவு அணிந்திருந்த அதே நைட்டி.

“நேத்து நைட்ல இருந்து அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்ல.. தம்பியும் ஊர்ல இல்ல… விடிகாலைல கீழ்வீட்டக்காவும் நானும் அம்மாவ ஆஸ்பிடல்ல சேர்த்துட்டோம்.. அவசரமா ஒரு நாலாயிரம் தேவபடுது இருக்குமா?.. தம்பி வந்ததும் ஒடனே கொடுத்திர்ரேன்” என்றாள். நான் உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தேன்.

“இப்ப எப்படி இருக்காங்க?” என்றேன்.
“பரவால்ல. எந்திரிச்சி உட்கார்ந்துட்டாங்க” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டாள்.
“அழாதீங்க எதுவும் ஆகாது” என்றதற்கு இன்னும் அழுதாள்.
“உதவிக்கு யாருமே இல்ல விடிகாலைல உங்க கதவ தட்டலாமா வேணாமான்னு யோசனையா இருந்தது….கீழ் வீட்டக்கா கதவ தட்டி அவங்கள எழுப்பி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்”
“இனிமே ஏதாவது உதவின்னா கூப்டுங்க” என்றேன்.

தலைகுனிந்தபடி பேசிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து என் கண்களை ஆழமாய் பார்த்தாள். நான் சற்று விதிர்த்துப் போய் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். அவள் ‘வரேன்’ எனச் சொல்லி விலகினாள். அப்படிச் சொல்லியபோது அவள் மெல்லிதாய் புன்னகைத்த மாதிரி இருந்தது. நான் மீண்டும் போய் தூங்கி விட்டேன்.

குழப்பமாய் சில சிதறல்கள் தூக்கத்தின் இடையிடையே வந்து போயின. விஜயலட்சுமி இரத்தம் தோயந்த கத்தியொன்றினை வலது கையில் பற்றியபடி என்னைத் துரத்துகிறாள். நான் பயந்தும், பாய்ந்தும் ஓடிக் கொண்டிருக்கிறேன். நீளமான இருள் சந்து முடிவேயில்லாது நீண்டுகொண்டிருக்கிறது. வளைவோ, வெளிச்சமோ வருமென்கிற நம்பிக்கைகளோடு உயிர் பயம் கவ்வ அந்தச் சந்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன். நெருங்கி விடும் தூரத்தில் விஜயலட்சுமி துரத்திக் கொண்டிருக்கிறாள். இடையிடையே ஆங்காரமாய் கர்ஜிக்கிறாள். அந்த குரல் நேரடியாய் இதயத்தின் மீது மோதி என் பதட்டத்தை அதிகமாக்குகிறது.

இதோ.. இதோ.. நெருங்கிவிடும் தொலைவில் ஒளி. மிகப்பெரிய பிரகாசம் இல்லையெனினும் வெளிச்சத்தின் கீற்று அல்லது வெளிச்சத்தின் நிழல் கண்ணில் பட்டது. சந்தின் முடிவினை நெருங்கிவிட்டோம். இனி தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தோடே ஓட்டத்தின் வேகத்தை இன்னும் கூட்டினேன். ஒளியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அது திடீரென இருண்டது. காணாமல் போனது. யாரோ சரக் கென ஜிப்பை இழுத்த சப்தம் கேட்டது. நின்று மூச்சிரைத்தேன். பின்னால் விஜயலட்சுமியின் குரலோ ஓடிவரும் சப்தமோ கேட்கவில்லை. வெகுநேரம் மூச்சிரைத்த பின்பு உடல் நிதானமானது. கண்கள் இருளுக்கு பழகின. திரும்பிப் போயிருப்பாள் அல்லது வழியில் எங்காவது விழுந்து விட்டிருக்கலாம் என நினைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நன்றாக மூச்சை உள்ளிழுத்து விட்டுக்கொண்டு நடக்கத் துவங்கினேன். மூன்றடி நடந்ததும் ஒரு உருவத்தின் மீது மோதி நின்றேன். ஏதோ ஒரு பெண்ணுடல் நின்று கொண்டிருந்தது. அது கண்களைத் திறந்தபோது அந்த இருளில் வெண்ணிற வெளிச்சப் புள்ளிகளாக அவை மினுங்கின. அந்த வெளிச்சத்தில்தான் நின்று கொண்டிருப்பது விஜயலட்சுமி என தெரிய வந்தது. அவசரமாய் கைகளைப் பார்த்தேன் கத்தியைக் காணவில்லை. அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். வா! என அருகில் அழைத்தாள்.

என்ன நிறம் என எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அதே நைட்டியினை அணிந்திருந்தாள். கசங்கலான அந்த நைட்டியின் தோள்பகுதியில் மண் அப்பியிருந்தது. வா! என்றாள் ஆழமாக. நான் பயந்துப் பின் வாங்கினேன். அவள் மெல்லத் தன் நைட்டியின் ஜிப்பினைக் கீழே இழுத்தாள். மிகப்பெரும் ஒளிவெள்ளம் அந்த நீளமான இருள் சந்தில் பாய்ந்தது. என் கண்கள் வெளிச்சத்தைத் தாங்க இயலாது பார்வையை இழந்து விடுமோ? என அஞ்சத் துவங்கின. உள்ளாடை அணிந்திராத அவளின் முலைகள் இரு பெரும் சூரியன்களாகின. தக தக வென மின்னியபடி அவை உமிழ்ந்த வெளிச்சத்தின் வெப்பம் தாங்காது நான் கண்களை மூடிக் கொண்டேன். அவ் வெளிச்சத்திலிருந்து தப்பி ஓட எண்ணி,முனைந்து, துவண்டு கீழே விழுந்து மூர்ச்சையானேன்.

ஓவியம் : Rembrandt

- மேலும்

2 comments:

Mohan said...

படிக்கும் வாசகனை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிறது உங்கள் எழுத்து நடை!

ய‌சோத‌ர‌ன் said...

அருமையான‌ ந‌டை, அருமையான‌ விவ‌ரிப்பு

Featured Post

test

 test