Monday, June 28, 2010

காட்சி கண்


நிறை மது தளும்பும்
வாயுத் தொந்தியின்
மேல்
ஸர்ப்ப சுழலிறுக்கம்
உள்
மூச்சடைத்த
செம்மண் குளம்

மரமில்லா ஊரில்
இலையில்லா மரம்
நள்ளிரவில் சருகுகளை
உதிர்க்கும்
ஸப்தம் கேட்ட கொடுநாவு
சொற்களைக் குழறும்

வெட்கைப் பாலை
சாலையோர மதியத்தில்
இலைத் தெரியாப் பூச்செடி
மென் சிறு வேருக்கு
மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்.

Saturday, June 5, 2010

துப்பறியும் சுகுணாவும் துரோகங்களின் பட்டியலும்

கடந்த ஒரு வார காலமாக உளைச்சலும் எரிச்சலுமாய் கலந்த மன நிலையில் தவிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கழுத்தில் கணினியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுகிறேன். சதா மூளையில் இந் நிகழ்வுகளே அழுத்திக் கொண்டிருக்கின்றன. சரியாய் தூங்குவதுமில்லை. இது பற்றி எழுதவே கூடாது என்கிற தற்காலிக ‘நல்ல’ தனங்களை தூக்கிலிட்டுவிட்டு இதோ இன்னொரு கொள்ளி.

சுகுணா திவாகரின் மீது நான் உள்ளிட்ட பல வலைப்பதிவர்களுக்கும் நெடுநாள் பதிவுலக வாசகர்களுக்கும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன இடமிருக்கிறது. அதனால்தாம் வலையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அவரின் கருத்து என்ன? என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக பெரும்பாலும் அவர் தமிழ் சினிமாவில் பார்ப்பனியக் கூறுகளை துப்பறிவதோடு தம் எல்லைகளை சுருக்கிக் கொண்டாலும் அவரின் ‘கருத்து’ மீது ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த முறையும் சுகுணா, அவரின் இரசிகர்களான எங்களை டொக்டர் விஜயைப் போல் ஏமாற்றியிருக்கிறார்.

இவர் பார்ப்பனியத்தையும் ஆண் திமிரையும் குழந்தையிலிருந்தே எதிர்த்து வருவதால் நர்சிம்மையும் அவர் எதிர்ப்பார் என்பதை நாமாகவே புரிந்துகொள்ள வேண்டும். நர்சிம் செய்தது ’பக்கா பார்ப்பனியம்’ மற்றும் ’ஆண்திமிர்’ தான் என்பதை சொல்லிவிட்டு அதிமுக்கியப் பிரச்சினையான அவரது சொந்தப் பிரச்சினைக்குத் தாவுகிறார். பொதுவில் வெளியிடப்படாத, பொதுவில் பகிராத, ஏதோ ஒரு பச்சை நம்பிக்கைத் துரோகியின் மூலம் வெளிக் கொணரப்பட்ட சிவராமனின் மடலை வெளியிடுகிறார். அதில் சுகுணாவைப் பற்றிய அவதூறுப் பகுதியை பார்த்ததும் கொதித்துப் போய் சிவராமனை பயங்கர பஞ்ச் டைலாக்குகளின் மூலம் (பார்ப்பனியம்,ஆண்திமிர்) திக்கு முக்காட வைக்கிறார். நர்சிம்மை தாக்கி சிவராமன்+ வினவு எழுதி இருந்த பதிவின் ஸ்டைலிலேயே (லாஜிக் அபத்த புரிந்துணர்வோடு) சிவராமனைத் தாக்குகிறார். டொக்டர் விஜய் பறந்து பறந்து சண்டை போடும் காட்சி கண் முன் வந்து போகிறது. கடைசியில் ரசிகர்கள் படபடவென கைத் தட்டுகிறார்கள். “சூப்பர் ஸ்டார் ரசினிகாந்த் வாழ்க!” என்கிற கோஷத்தைப் போல “வினவு நான் தான் தான் ஒரிஜினல்.. சிவராமன் டூப்ளிகேட்.. என்ன நம்பு..” என பம்முகிறார். பின்பு எரிந்து கொண்டிருந்த கொள்ளியின் மீது எச்சிலைத் துப்பி அணைத்து விட்ட புளகாங்கிதத்துடன் அறிமுகப் பாடல் ரிப்பீட்டோடு வெளியேறுகிறார். போகிற போக்கில் ’தளபதி’ ’தலை’யை நொட்டுவது போல ’அய்யனாரின் ஆண் திமிர்’ என்ற இன்னொரு ’பஞ்ச்’சையும் வைக்கிறார். இனிமேல் அடுத்த பதிவை இராவணன் வந்தவுடன் பல துப்புகளோடு விரிவாய் எழுதுவார். அதுவரை எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள். சுபம். மங்களம். டொண்டொண்டொய்ங். கருத்து வேண்டிக் காத்திருந்த நாம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதிவை விட்டு வெளியேறுகிறோம்.

நிகழ்த்தப்பட்ட துரோகங்களின் பட்டியல் நீளமானது. அதில் முதலாவதாய் நான் சுகுணாவைச் சேர்க்கிறேன். தன்னை ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என முன் நிறுத்திக் கொள்வதாலேயே அவருக்கு இந்த முதலிடம். எந்த அரசியல் செயற்பாட்டாளனும் எழுதப்படாத பகிரப்படாத அவதூறுக்கெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியை எச்சில் துப்பி அணைப்பதில்லை. இவர் எவ்வித தார்மீக உணர்ச்சியுமில்லாமல் இதை செய்திருக்கிறார். அவருக்கு சமமான துரோகத்தை சிவராமனின் மின்னஞ்சலை வெளியிட்ட அவரது நம்பிக்கையாளரும் நிகழ்த்தியிருக்கிறார். எத்தனை மோசமான துரோகம் இது?

அடுத்த இடம் நர்சிம்மின் இந்த இடுகையை ஆதரித்து அவரது பதிவில் கும்மியடித்த அவரைத் தொடர்ச்சியாய் தாங்கிப் பிடித்த /பிடித்துக் கொண்டிருக்கும் அவரின் நண்பர்கள். நட்பு என்பதற்கான வியாக்கியானங்களை எழுத போரடிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நர்சிம்மை சொறிய ஒரு கூட்டம் இருந்தது. அம்மாதிரியான ஒரு கூட்டம் வளர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அதன் விளைவுதான் இது. எந்த ஒரு நல்ல நண்பனும் இந்த வக்கிரத்தை ஆதரித்து இருக்க மாட்டான். அதைச் செய்தவர்கள் உங்களுக்கு நண்பர்களும் அல்ல. பதிவர் நர்சிம்மை பிரபல பதிவர் ஆக்கிய அதே நண்பர்கள்தாம் இன்று ’பொறுக்கி’ நர்சிம் ஆகவும் மாற்றி இருக்கிறார்கள்.வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது.

மூன்றாவதாய் ”நர்சிம் செய்தது தவறுதான் முதலில் ஏன் அவர்கள் சீண்ட வேண்டும்” என்றபடி நசுங்கிய சொம்பைத் தூக்கிக் கொண்டு நாட்டாமை செய்ய முயன்ற பதிவர்கள். சக பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எவ்வித உணர்வுமில்லாமல் எல்லாப் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்துக் கொண்டு ”அவர் பாவம் ஏன் இப்படி அடிஅடின்னு அடிக்கறாங்க” என பரிதாபப்படும் சக பதிவர்கள். எல்லாவற்றுக்கும் உச்சமாய் தமயந்தி என்றொரு எழுத்தாளினி. அவர் புத்தகம் வெளியிட்டிருக்காராம். அத விமர்சித்த கவிஞன் குடிகாரனாம். மேலாண்மை பொன்னுச்சாமிய பிடிக்காதாம். நர்சிம் செய்தது தப்புத்தானாம்.பஞ்சாயத்துலாம் ஒண்ணும் செய்ய தேவையில்ல ’ஹலோ மிஸ்டர் வலையுலக நாட்டாமைகளே’ன்னு எள்ளலோட ஒரு பதிவிட்டிருக்கார். அவரது எழுத்தில் தெறித்த அலட்சியத்தைப் படிக்கையில் திக்கென்கிறது. நல்லது தமயந்தி.காலம் உங்களின் புரிதல்களை விரிவுபடுத்தட்டும்.

நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.

Featured Post

test

 test