Monday, May 31, 2010

தில்லி 06 : 2

நேற்று: 29.05.2006 : ஜிபி ரோட் – தில்லி

எல்லா வேலையும் முடிந்தது. யுஏஇ எம்பசியில் பின்புறம் ஸ்டாம்ப் ஒட்டின என் பட்டத்தை வாங்கும்போது பெரிய விடுதலையை உணரமுடிந்தது. எத்தனை அலைச்சல்! எவ்வளவு நீண்ட காத்திருப்பு! வெயில், பசி என எல்லா கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. விஜியும் கொண்டு வந்திருந்த தலையணை புத்தகங்களும் இல்லையென்றால் இன்னும் அதிகமாக சிரமப்பட்டிருப்பேன். கையில் புத்தகம் இருந்தால் எவ்வளவு நீளமான வரிசையிலும் நின்றுவிடலாம். நின்றபடியே அந்த உலகத்தில் தொலைவதில் எனக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. விஜியால் ஒரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருப்பான். மழையில் எருமைக் கணக்காய் நிற்கும் என்னை சற்று எரிச்சலாகத்தான் அவ்வப்போது வந்து பார்த்துப் போவான். ஒரு வழியாய் எல்லாம் முடிந்தது. மிக உற்சாகமாய் புறா கூண்டு லாட்ஜிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். திடீரென நினைவு வந்தவனாய் ”ஆக்ரா பக்கம்தான தாஜ்மகாலை பார்த்துட்டுப் போய்டலாமே..” என்றேன். உடனே சம்மதித்தான். ரயில் நிலையத்திற்கு போய் பயணச் சீட்டுகளை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினோம். ஒரு இயல்பான மன நிலை திரும்பியிருந்தது. உணவிற்கு சொல்ல சிப்பந்தியை அழைத்தோம்.

விஜி மூன்று நாட்களில் கத்துக் கொண்டிருந்த இந்தி உதவியுடன் ”ரூமுக்கு பொண்ணு வருமா” என்றான். ”ஜிபி ரோட் சலோ பூரா லடுக்கி ஹெ” என்றார். எங்கள் இருவருக்குமே மெல்லிதான குறுகுறுப்பு ஒன்று தொற்றிக் கொண்டது. எப்படிப் போவது என்பதை அவரிடமே கேட்டுப் புரிந்து கொண்டோம். லேசாய் தூங்கிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வெகுநேரம் குளித்துத் தயாரானோம். சிவப்பு விளக்குப் பகுதியெல்லாம் சினிமாவில் பார்த்திருந்ததுதான். லேசான பயமும் இருந்தது. ”பெண்ணுடன் இருக்கும்போது போலீசு வந்தால் எப்படி தப்பிப்பது?” என விஜியிடம் கேட்டேன். அவன் இந்த கோணத்தில் சிந்தித்திருக்க மாட்டான் போல. “அய்யோ மச்சான் உள்ள கிள்ள உக்கார வச்சுட்டானுங்கனா துபாய் எப்படிடா போவறது?.. வேணாம் வுடு.. சரக்கடிச்சிட்டு தூங்கிடலாம்.. ஏன் வம்பு” என்றான். எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது இருப்பினும். சும்மா கொஞ்ச தூரம் நடக்கலாமே என வெகு தூரம் நடந்து ஜிபி ரோடுக்கு வந்து விட்டோம்.

தமிழ் சினிமாக்களில் பார்த்திருந்தது போலதான் இருந்தது. மக்கள் நெரிசல் மிகுந்த, குறுகிய, நீளமான சாலை. நெடுகிலும் மிகப் பழைய வீடுகள். முதல் மாடியின் நீள வராண்டா முழுக்க பெண்கள். மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் முழுக்க பெண்கள். இத்தனை அடர்த்தியான முகப்பூச்சுகளையோ குறைவான ஆடையணிந்த பெண்களையோ இருவருமே பார்த்திருக்க வில்லை. சின்ன பதட்டத்தோடே அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். நான்கைந்து பெண்கள் “ஏ மதராஸி இதர் ஆவ்” எனக் கிண்டலடித்தனர். நானும் இவனும் வேகமாய் நடந்தோம். பின்னாலேயே இரண்டு சிறுவர்கள் தொடந்து கொண்டிருந்தனர். ஒருவன் என் கைப் பிடித்து நிறுத்தினான். உடைந்த தமிழில் “தமில் கேரளா ஆந்திரா எல்லா ஸ்டேட்டும் இருக்கு. மஸ்த் பிகர். நூறு ரூபாதான்” என்றான். பதின்மத்தை தொட்டிராத சிறுவன் அவன். “நை நை ஜஸ்ட் வாக்கிங்” என்றேன். அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றான் பின்பு கையை விட்டுவிட்டு போய்விட்டான். விஜி இன்னொரு சிறுவனுடன் தீவிரமாய் மூன்று நாள் இந்தியில் பேசிக் கொண்டிருந்தான். எனக்காய் திரும்பி “மச்சான் சும்மா போய் எடத்த பாக்கலாண்டா... புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம்.. . சும்மா ஒரு டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்” என சிரித்தான். பயம், ஆசை, தயக்கம், சபலம் என எல்லாம் ஒருமித்த மன நிலை அது. போலாம் என தலையசைத்தேன்.

அந்தச் சிறுவன் முன்னால் நடக்க நாங்கள் பின் தொடந்தோம். பிரதான சாலையிலிருந்து குறுக்கு சந்தில் நடக்கத் துவங்கினான். மிக சிடுக்கான வீதி அது. முழுக்க கடைகளும் மனிதர்களும் அடைத்துக் கிடந்தனர். அவன் மிகச் சுலபமாய் கூட்டத்தில் நீந்திச் சென்றான். எங்களால் தொடர முடியவில்லை. அவ்வப்போது நின்று எங்கள் தலைகள் தெரிந்தவுடன் மீண்டும் நீந்திப் போய் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எனக்கு பயமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாம் என இவனை நிறுத்தினேன். திரும்ப யத்தனிக்கும்போது சிறுவன் அருகில் வந்து விஜியின் கையைப் பிடித்துக் கொண்டான். வந்துவிட்டோம் என சொல்லியபடியே அருகில் பிரிந்த இருள் சந்திற்குள் நுழைந்தான். வெளிச்சம் மிகக் குறைவான சந்து அது. மனித நடமாட்டம் இல்லை. பத்தடி நடந்ததும் ஒரு சிதைந்த வீட்டின் பின் கதவின் முன் நின்றான். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதைப் போலிருந்தது. “விஜி வாடா ஓடிடலாம்” என்றேன். சிறுவன் கதவுகளைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். நாங்களும் தொடர்ந்தோம். வெளிச்சமற்ற நீள வழி அது. சுரங்கப் பாதை போல மண்ணால் கட்டப்பட்ட இரு சுவர்களுக்கு மத்தியில் நீண்டு கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்தோம். திடீரென வெளிச்சம் பாய்ந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்தது பிரதான சாலையை ஒட்டியிருந்த பழைய கட்டிடம் ஒன்றினுள்தான். சிறுவனை முறைத்தோம் ஆனால் கடிந்து கொள்வதற்கு வாய் வரவில்லை.

அவன் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினான். வளைந்த குறுகிய அரை இருள் படிக்கட்டுகள். இடைவெளியே இல்லாது முழுக்க பெண்கள் நின்று கொண்டிருந்தனர். வியர்த்துப் போய் மேலே வந்தோம். இரண்டு தூண்கள் வைத்திருந்த ஒரு கூடம். படிக்கட்டு முடியுமிடத்தில் ப வடிவ சிமெண்ட் திட்டு. அதில் காலி குடங்கள் அழுக்குப் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. கூடத்தின் நடுவில் திரி ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி சப்பாத்தியை தேய்த்து ஸ்டவ்வின் மேலிருந்த வாணலில் போட்டபடியிருந்தாள். அவளுக்கு சமீபமாய் ஒரு சிமெண்ட் திண்ணை. அதில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தொப்பியையும் லத்தியையும் அருகில் கிடத்தியிருந்தார். கூடத்தின் வலது புறத்தில் மூன்று அறைகள் வரிசையாய் கட்டப் பட்டிருந்தன. இரும்புக் கதவுகளைக் கொண்ட அவ்வறைகள் மூடியிருந்தன. கூடத்தின் இடது பக்கம் ஒரு நார் கட்டில் அதில் ஒரு கூன் விழுந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள்.

நாங்கள் தயங்கியபடி சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். போலீஸ்காரரும் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணும் எங்கள் இருவரையும் சட்டை செய்யவில்லை. சிறுவன் திடீரென மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். பாட்டி எங்களை அருகில் அழைத்தாள். நடுங்கும் குரலில் ”மதராஸி?” என்றாள் தலையசைத்தோம். ”ஆளுக்கு இருநூறு ரூபாய் எடுங்கள்” என்றாள். அதே நேரத்தில் ஒரு இரும்புக் கதவு பல் கூசும் சப்தத்துடன் திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் உடைகளை சரிசெய்தபடி உள்ளிருந்து வெளியே வந்தாள். பேண்டை தோளில் போட்டபடி ஒரு நோஞ்சான் ஆள் பின்னாலயே வெளியில் வந்தான். நான் “போய்டலாம் விஜி” என அவன் கைகளை பிடித்து இழுத்தேன். வெளியில் வந்தப் பெண் “க்யா” என்றாள். “நை கமிங் ஆப்டர் ஆப்டர்” என்றேன். மீண்டும் நடுங்கும் குரல் “சாலா மதராஸி பணத்த எடு” என்றது. விஜி “நோ பைசா நோ பைசா ஆப்டர் கமிங்” என உளறினான். இன்னொரு இரும்புக் கதவும் திறந்தது. சற்று கனத்த உடம்போடு நடுத்தர வயதுப் பெண் உள்ளாடைகளோடு வெளியில் வந்தாள். ஓடப் பார்க்கிறோம் எனப் புரிந்து கொண்டாள். நெருங்கி வந்து என் சட்டையை கொத்தாக பிடித்து உலகத்தின் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்தாள். “பை மிஸ்டேக் கேம் சாரி சாரி” என்றேன். “திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” என உதறிவிட்டு சிரித்தாள்.

விடுவிடு வென வெளியில் வந்தோம். அவமானம் பிடுங்கித் தின்றது. எதுவும் பேசாமல் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். எந்த வழியில் போகிறோம் என்று கூட தெரியவில்லை. திடீரென சூறைக் காற்று அடிக்கத் தொடங்கியது. பிரதான சாலையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டிருக்கிறோம். தலை முகம் உடைகள் எல்லாமும் மண்ணால் நிரம்பியது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன். திடீரென மழை கொட்டத் துவங்கியது. அருகிலிருந்த பெஞ்சில் கண் மூடி வானம் பார்த்து படுத்துக் கொண்டேன் விஜி எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்தான். மழை எங்கள் இருவரையும் ஆக்ரோஷமாய் தழுவியது

30.05.2006 இன்று : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை பெயர் தெரியா நிறுத்தம்

நேற்றைய இரவை நினைக்க நினைக்க அவமானமாய் இருந்தது. நினைவை உதறிக் கொண்டேன். கடந்த அரை மணி நேரமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. அவ நம்பிக்கைகள் மெதுவாய் எங்களின் முகங்களில் படரத் துவங்கின. கல்லூரிக்குத் தொடர்பு கொண்டு மாற்று சான்றிதழ்களை வழங்குவார்களா என கேட்கலாமா என்றான் விஜி. கிடைச்சிடும்டா என்றேன். அந்த குரலில் எனக்கே சுத்தமாய் நம்பிக்கையில்லை. பஞ்சரான வண்டி தயாராகி விட்டது போலிருக்கிறது. நடத்துனர் சிதறிக் கிடந்த பிரயாணிகளை அழைக்கத் துவங்கினார். இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்றபடியே பேருந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். படியில் நின்றிருந்த நடத்துனர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு முன்பு ஏறின விஜி ”டேய் மச்சான் ”என சந்தோஷமாய் கத்தினான். ”என்னடா” என்றபடியே உள்ளே வந்தேன். எங்களின் பைகள் இருக்கைகளில் பரிதாபமாய் அமர்ந்திருந்தன. இருவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனோம். நாங்கள் வந்த வண்டி இதுதான். வேறேதோ வண்டியை பார்த்து நான் தான் குழம்பி பதறியடித்திருக்கிறேன். விஜி என் கழுத்தை நெறிக்க வந்தான். நான் “ரண்டக ரண்டக ரண்டக” என உற்சாகமாய் கத்தினேன்.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

எழுத்து நடை அருமை, ஆனால் பாலினத் தொழிலாளியிடம் போய் இருப்பதை எல்லா எழுத்தாளர்களும், பதிவர்களும் எழுதி விட்டதால் எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட வில்லை.

ஒருவேளை பர் துபாய் சந்துகளில் முடுக்குகளில் திரியும் ரஷ்ய, சீன தேசத்து பாலின தொழிலாளிகள் (குறிப்பாகா அதிகாலை ஆறு மணிக்கே தொழில் தொடங்கும் அவர்களின் கடமை ஈடுபாடு எனக்கு பிடித்து இருக்கிறது) பற்றி நீங்கள் எழுதினால் எனக்கு சுவாரஸ்யம் ஏற்படுமோ என்னவோ.

Featured Post

test

 test