Friday, April 23, 2010

லீனா

..............
தொடர்ந்து புலியின் வாயை
மிக அகலமாகவும் பற்களை மிக நேர்த்தியாகவும்
வரையத்தொடங்கும் அச்சிறுமி என் கடவுள்
என் மகள் என் உயிர்
என் நேற்றைய பிம்பம்
- சன்னாசி


படைப்புகளைக் காட்டிலும் பிரச்சினைகளை படிப்பதில் திருப்தியடையும் கிசுகிசு மனம் கிடைக்கும் சொற்ப நேர இணைய வாசிப்பில் கூட கடந்த இரண்டு மாதங்களாக லீனா விவகாரத்தையே தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறது. இது இன்னொரு வகையில் மிகுந்த மன உளைச்சலையும் உண்டாக்குகிறது. இம்மனநிலை குறித்து நான் வெட்குகிறேன். இதை எழுதுவதற்கான காரணம் இம்மனநிலையில் இருந்து முற்றிலும் வெளிவருவதற்கான சுயநலம்தான். நடுநிலைமை என்கிற நிலைப்பாட்டின் மீதெல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. சார்புத் தன்மை அற்ற, சார்ந்த என்கிற இரண்டு புள்ளிகளையும் விலக்க முற்படுவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கீழ்கண்ட என் பகிர்வுகள் முழுக்க முழுக்க இணையத்தில் படித்த, சம்பந்தப்பட்ட நபர்களால் எழுதப்பட்ட தரவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு / நம்பி எழுதப்பட்டது. எழுதப்படாதவைகள் எழுதப்பட்டவைகளை நிராகரித்தால் இக் கட்டுரையும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.

1. செங்கடல் படப் பிடிப்பில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணம் கொடுக்காமல் லீனா தகராறு செய்ததாக வெளிவந்த தினத் தந்தி செய்தியை முன் வைத்து வினவில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரையை வளர்மதி முகப்பு பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கட்டுரையின் தலைப்பை பார்த்தவுடன் இதே போன்றதொரு சம்பவம் வளர்மதிக்கும் லீனாவிற்கும் இடையே நிகழ்ந்தது நினைவிற்கு வந்தது. எனவே பின்னூட்டமாக ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டு ஒரு சிறிய பணியை முடித்து விட்டு வந்து வினவுப் பக்கத்தில் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த கட்டுரை முழுக்க முழுக்க கிசுகிசு பாணியில் எழுதப் பட்டிருந்தது. மேலும் லீனாவின் தனிப்பட்ட வாழ்வையும் மிகக் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டும் எனக்கு ஒவ்வாத உணர்வைத் தரவே பின்னூட்டத்தில் என் வருத்தத்தைப் பதிவு செய்தேன். சற்று நேரத்தில் ரோசாவசந்தின் கண்டனப் பதிவும் என் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகவே அங்கேயும் என் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு நகர்ந்தேன். லீனாவின் இரண்டு கவிதைகளுக்கும் எதிரான விமர்சன அர்ச்சனைகளும் வினவின் அதே பதிவில் எழுதப்பட்டிருந்தது. அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை. மேலும் கவிதையை வைத்தே பெண்ணை அலைபவளாக நிறுவ முயல்வது வன்முறையாகத்தான் தோன்றியது. இடையே பின்னூட்டத்தில் வளர்மதி சுட்டியிருந்த unlimited semiosis கருத்தாக்கத்தின் அபத்தம் குறித்தும் யோசிக்க வேண்டியிருந்தது. கவிதையில் துருத்திக் கொண்டிருந்த 'நானும்' 'புரச்சிப் பாலியல் பெண் கவிதைகள்’ முன்னிறுத்தலும் அக் கவிதைகள் குறித்து தொடர்ந்து யோசிக்க இடையூறாக இருக்கவே தொடர்ந்து பேச முடியாது விலகிவிட்டேன்.


2. இந்து மக்கள் கட்சியின் புகாருக்கு எதிரான கண்டன ஒன்று கூடல் அறிவிப்பைப் பார்த்ததும் அதில் இடம்பெற்றிருந்த ஏராளமான படைப்பாளர்களின் சிந்தனையாளர்களின் பெயர்களைப் பார்த்ததும் சற்றுத் திகைப்பாக கூட இருந்தது. லீனாவின் கவிதைக் குறி சுட்டும் சம்பந்தப் பட்ட நபர்கள் இதை வேறெப்படி எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? இணையத்தில் தோழர்கள் அவர்களுக்கு உரித்த தடாலடி மொழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்து மக்கள் கட்சியினருக்கு கவிதையோ கட்டுரையோ எழுத தெரியாமல் போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறைக்கு பரிதாபப் பட வேண்டுமே ஒழிய கண்டனக் கூட்டம் நடத்துவது இரு தரப்பு விளம்பர நோக்கங்களையும் நிறைவேற்றி வைப்பது போலாகும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. சற்றுத் திருப்பங்களுடன் இந்த கண்டனக் கூட்டம் இ.ம.க மற்றும் ம.க.இ.க தீவிர தொண்டர்களால் நிஜமான அச்சுறுத்தலானது என்பதை உண்மைத் தமிழன் பதிவில் படித்தபோது வருத்தமாக இருந்தது. லீனாவின் கவிதைக்கு இவ்வளவு பெரிய சர்ச்சையோ விமர்சனமோ தேவையில்லாத ஒன்றாகத்தான் படுகிறது. லீனா போன்ற செவி வழியாய் அரசியல் ஞானமடைந்த புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளை?! கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்த வழி. ஆனால் இலக்கிய கூட்டங்களை எதிர்த்து புரச்சி செய்வதின் வாயிலாக தங்களை, தங்களின் சித்தாந்தங்களை காப்பாற்றி விட்டதாய் எண்ணி புளகாங்கிதம் அடையவும் இன்னொரு கூட்டம் நம் சூழலில் இருப்பதும் தமிழ் சூழலின் சாபக் கேடாய்த்தான் இருக்க முடியும்.


3. லீனாவின் இரு கவிதைகளை ஜமாலனும் பெருந்தேவியும் மிகுந்த சிரத்தையுடன் விமர்சனப் பூர்வமாக அணுகியிருந்தனர். கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” இரண்டும் ஒருமித்து ஒற்றைத் தன்மையாகிவிடும் சிக்கலையும், பொதுப் புத்தியிலிருந்து விலகாத, உடல் பற்றிய பிரக்ஞையில்லாத, அரசியல் புரிந்துணர்வில்லாத கவிதைகளின் சாராம்சத்தையும் கிளிப் பிள்ளைக்கு விளக்குவது போல் போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்திருந்தும் லீனா மிக எளிதாக இவ் விமர்சனத்தைக் கடந்து போகிறார். அந்தக் கவிதைகள் கச்சா மொழியிலிருப்பதால் இத்தனை எதிர்ப்பு வருகிறது என பலமாக நம்புகிறார். அதையே ரோசா வசந்தின் விமர்சனத்திற்கும் பதிலாய் வைக்கிறார். மொழி பற்றிய பிரம்மைகளிலிருந்து, வார்த்தைகளில் நல்லது கெட்டது என்பதிலிருந்தெல்லாம் நம் சூழல் வெகு தொலைவு பயணித்து வந்து விட்டது என்பதை லீனாவிற்கு எப்படிப் புரியவைப்பது என்பதுதான் அறிவு தளத்தில் இயங்குபவர்களின் சவாலாக இருக்கிறது. அத்தோடு நில்லாமல் சோவியத் யூனியன், பிரஸ்திரோய்கா கிளாஸ்நாஸ்ட்,பெர்லின் தோழி, குழந்தை கம்யூனிஸ்ட் என்றெல்லாம் வார்த்தைகளைத் தூவுகிறார். விமர்சனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வார்த்தை தூவல்களைப் படிக்கும்போது ’சப்பான்ல சாக்கிசான் கூப்டாக’ என கோவை சரளா உச்சக் குரலில் கத்தும் பிம்பம் தான் நினைவில் இடறுகிறது. அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும். மேலும் நட்பு வட்டாரங்கள் அவ்வப்போது உதிர்க்கும் அரசியல் கருத்துக்களை கேட்டே ஞானமடைபவர்களால் மட்டுமே தன் குறித்தான பிம்பங்களை மிகையாக கட்டமைத்துக் கொள்ள முடியும். தீவிர வாசிப்பும், கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறையும், தன்னையே பிரதானப்படுத்திக் கொள்ளாது ’பிற’ பற்றிய புரிந்துணர்வும் கொண்டவர்களால் லீனாவின் ஸ்டண்டுகளை சகித்துக் கொள்ள இயலாது. ஓரிரண்டு வருடங்களுக்கு முன் தமிழச்சி லீனாவை விட மிகப் பிரமாதமாக கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார். சாம்பிளுக்கு ஒன்று.

யோனிகள் இங்கே வாடகைக்கு கிடைக்கும்!
வந்தவன் விலை கேட்டான்
சிறிதும், பெரிதுமாக
சுருங்கி விரிந்த
யோனிகளுக்கு
ஓவ்வொரு ரேட்டாம்.

வந்தவன் சொன்னான்.
"மலஜலக்கழிப்பிடங்களை விட
காமக்கழிவுகளை கொட்டும்
இந்த யோனிகளுக்கு
கிராக்கி அதிகம் தான்."



4. மேலும் லீனாவின் கவிதைகளை எப்படி அணுகுவதென்றும் அவரே சொல்லித் தருகிறார் /ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும்/ இதைப் படித்தவுடன் புல்லரித்தது. சென்ற வருடம் ஊருக்குப் போயிருந்த போது லீனாவின் கவிதைப் படம் ஒன்றைக் காண நேரிட்டது. அதாவது அவரின் கவிதை பின்னால் ஒலிக்க படம் ஓடும். படத்திலும் அவரே நடித்திருந்தார். ’தீர்ந்து போயிருந்த காதல்’ என்பது கவிதைப்படத்தின் தலைப்பு. வாரமலர், குடும்பமலர் போன்ற இலவச இணைப்புகளில் வெளிவரும் பின்னுள்ளட்டைக் கவிதைத் தேர்வாளர்கள் கூட பிரசுரிக்கத் தயங்கும் கவிதை அது. ஒரு பெண் (லீனா) வேலையிலிருந்து திரும்புகிறார். சமைக்கிறார். கணவருக்காக காத்திருக்கிறார். லேட் ஆகிறது. அப்படியே கை நீட்டி மேசையில் கவித்துவமாக கவிழ்கிறார். கணவர் தாமதமாக வருகிறார். அப்போது காத்திருந்த பெண்ணுக்கு அவர் மீதிருந்த காதல் தீர்ந்து போய் இருக்கிறது. வராமலே இருந்திருக்கலாம் என நினைத்துக் கொள்கிறார். நான் அவ்வ்வ் என அழாத குறையாக அதைக் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்க ஓடினேன். அதை அவர் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லி வெகு நேரம் சிரித்தார். ஒரு மோசமான கவிதை எழுதுவது, அதை படமாக்குவது, அப்படத்தில் தானே நடிப்பது இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விசயங்கள். ஆனால் அதை குறுந்தகடாக வெளியிட்டு விற்பதுதான் எனக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. அதைக் காசு கொடுத்து வாங்குபவனை கேணயனாக்கும் முயற்சிதானே இது. இம் மாதிரியான பின்புலமும் லீனாவினுடையதுதான். அவரை விமர்சிக்கும்போது இந்த அபத்தங்களையும் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதையும் அவரே சொல்லட்டும்.

5. கீற்றில் வெளிவந்த மினர்வா கட்டுரையில் பின்னூட்டமாக சங்கரராம சுப்பிரமணியன் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார். சங்கர், விக்ரமாதித்யன், லக்ஷ்மி மணிவண்ணன் மூவரும் எழுதிய கவிதைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்கள் சங்கரின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் வைத்து மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியிருக்கின்றனர். நம்முடைய தமிழ் சூழல் ஒன்றும் அறிவு முதிர்ந்த சூழலல்ல. மிகவும் எளிமையான நம்பிக்கைகளையும், குடும்பம் என்கிற பலகீனமான அமைப்பை ஆதாரமாகவும் கொண்டுள்ள வாழ்வு முறை. இதில்தான் ஒட்டு மொத்த மனிதர்களும் இயங்கியாக வேண்டியிருக்கிறது. இங்கு ஒவ்வொரு கலைஞனுமே இயல்பிற்கும் கற்பனைக்கும் இடையே மிகப் பெரும் ஊசலாட்டமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இம்மாதிரியான சூழலில் ஒரு கவிஞனின் வீடு புகுந்து அவனிடம் யோனி என்பதற்கு அர்த்தம் சொல் என்பதும், அவனின் சுற்றத்தினருக்கு பிரதியைப் படிக்கத் தந்து திடீர் அதிர்ச்சி தருவதும், கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்குவதும் தோழர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் செயல்களாய் தெரியவில்லை. தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எம்மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கான அடிப்படை உரிமைகளை எவ்வளவு சுலபமாக இந்த வலியவர்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யோசிக்க யோசிக்க அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ஏன் இந் நிகழ்விற்கு எதிராக கருத்தளவில் கூட எவரும் எதையும் பதியவில்லை என்பதை நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது.

23 comments:

ராம்ஜி_யாஹூ said...

நான் உங்கள் படைப்புக்களியே விரும்புகிறேன்

தனிப்பட்ட நபர்களின் பிரச்னைகள், தனி நபர் சார்ந்த பிரச்னைகள் எனக்கு படிக்க சுவையாக இல்லை.

AkashSankar said...

நடப்பவைகளை பார்த்து எனக்கும் சங்கடந்தான்... என் பார்வையை அப்படியே பதிவு செய்தது போல் இருக்கிறது..

Sabarinathan Arthanari said...

//தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எம்மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கான அடிப்படை உரிமைகளை எவ்வளவு சுலபமாக இந்த வலியவர்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யோசிக்க யோசிக்க அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது.//

வருத்த படவும் வைக்கிறது :(

கே.என்.சிவராமன் said...

அன்பின் அய்யனார்,

இந்த இடுகையிலுள்ள 5வது எண்ணின் கீழ் எழுதப்பட்ட விஷயம் தொடர்பாக இந்த மறுமொழி.

நண்பர் சங்கரராமசுப்ரமணியத்தின் மறுமொழியை மட்டுமே கணக்கில் எடுத்து தோழர்கள் குறித்தும், எந்த மாதிரியான சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்பது குறித்தும் கவலைப்பட்டிருக்கிறீர்கள்.

இணையத்தில் புழங்கும் தோழர்களிடம் அவர்கள் தரப்பை கேட்டு அறிந்திருக்கலாம்.

லீனா விஷயத்தில் பல தரப்பு இடுகைகளை வாசித்து, 'பிறவற்றை' யோசித்து அதற்கு லிங்க் தந்திருக்கும் நீங்கள், இந்த விஷயத்தில் 'ஒற்றைப் பார்வையுடன்' இருப்பது ஏனோ?

இந்த சம்பவம் நடந்தபோதே சிறுபத்திரிகைகளில் எதிர்வினைகள் வந்தன. அடுத்தமுறை தமிழகத்துக்கு நீங்கள் வருகையில், நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்த இதழ்களை காண்பிக்கிறேன்.

ஆனால், இத்தனை வருடங்களாக பதிவு செய்யாத, குறிப்பிடாத ஒரு விஷயத்தை, இந்த மறுமொழியில் உணர்ச்சிப்பூர்வமாக நண்பர் சங்கர் பதிவுசெய்திருக்கிறார்.

//விக்ரமாதித்யனின் பொறுப்பற்ற வரிகள் அவை. ஆனால் அவர் பொறுப்போடு எழுதிய கவிதைகள் 30 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடப்பதையும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். அதை உங்களுக்கும் சொல்வதில் எனக்கு சங்கடம் இல்லை. அதில் ஒரு சிறுவன் தொடர்பாக வரிகளை மட்டும்தான் நான் எழுதினேன். கிட்டத்தட்ட அது ஒரு அபத்த நிகழ்வு அது. அக்கவிதை சர்ச்சைக்குள்ளாகாமல் புகழ்பெற்றிருந்தாலும் இதையேதான் சொல்வேன். விக்ரமாதித்யனிடன் அதை பிரசுரிக்க அனுப்பியதற்காக சங்கடமும் பட்டேன்.//

இதுவரை நண்பர் சங்கர் எங்குமே பதிவு செய்யாத - சொல்லாத விஷயம் இது. மூவரும் சேர்ந்து எழுதிய கவிதை என இதுநாள்வரை அறியப்பட்டது, சங்கரும் பல இடங்களில் அப்படியே சொன்னது, இன்று ஒருவர் மீது 'அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது'.

'அடையாளங்களின் அரசியல்' ஆபத்தானவை அல்லவா?

உண்மையில் வெட்கி தலைகுனிய வேண்டியது இதற்காகத்தான். இத்தனை வருடங்கள் கழித்து நண்பர் சங்கர் ஏன் 'காட்டிக் கொடுக்கவேண்டும்?'

அண்ணாச்சி விக்கிரமாதித்தன் இதை ஏற்கிறாரா?

தவிர, 'கீற்றி'ல் நண்பர் மினர்வா எழுதியது லீனாவின் சுயமோக பாசிசம் குறித்து. அதைக் குறித்து எதுவும் பேசாமல், பல வருடங்கள் கழித்து 'உணர்ச்சிப்பூர்வமாக' 'தன்' தரப்பை நண்பர் சங்கர் வைத்ததற்கு என்ன காரணம்?

லீனாவின் பாசிசத்திலிருந்து மற்றவர்களை திசை திருப்பவா? அல்லது தோழர்களின் 'அராஜகத்தை' மேலும் பூதாகரமாக காண்பிக்கவா? அல்லது வேறு ஏதேனுமா?

//நாம் எம்மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கான அடிப்படை உரிமைகளை எவ்வளவு சுலபமாக இந்த வலியவர்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யோசிக்க யோசிக்க அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது.//

நீங்கள் எழுதிய இந்த வாசகத்தை, சற்றே மாற்றுகிறேன்...

இலக்கியம் மட்டுமே பேசி எழுதி வருபவர்களின் 'அரசியல்' அதிர்ச்சியும், ஆயாசமும் தருபவைதான்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழ்நதி said...

அய்யனார், படித்தேன்:)

Anonymous said...

அய்யனார், மழுப்பல் மொழி ஏதுமின்றி மிக தெளிவாக தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். லீனாவுக்கு எதிராக தமிழச்சி சாட்டை சுழற்றிய சூழலில் அவருடைய கவிதை பற்றிய நினைவூட்டல் மிக முக்கியமானது.

இங்கு மறுமொழியாக வந்திருக்கும் திரு.பைத்தியக்காரன் அவர்களுடைய பின்னூட்டம் சங்கர் விசயத்தில் தோழர்களை கேட்காமலேயே அவர்களை பற்றி முடிவுக்கு வந்துவிட்டீர்களே என வருந்துகிறது. தோழர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் என்ன விளக்கம் சொல்லியிருப்பார்கள் என்பது பலருக்கும் அவர்கள் கூறியிருக்கும் பின்னூட்டங்களாக இணையவெளியில் இருக்கிறது. லீனா விசயத்திலும் அந்த கவிதையை ஆதரிப்போர் வீடுகளுக்கெல்லாம் சென்று அக்கம்பக்கத்தாரிடம் அக்கவிதையை பிரதியெடுத்துக் கொடுக்கப்போவதாக இப்போது தோழர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்ப்பாக வேறு ஒரு தளத்தில் நான் போட்டிருந்த பின்னூட்டத்தை பைத்தியக்காரன் அவர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.


'உங்கள் வீட்டிற்கு வருவோம், லீனா மணிமேகலையின் கவிதையை காப்பி எடுத்து அக்கம்பக்கத்தாரிடம் கொடுப்போம், போஸ்டர் அடித்து ஒட்டுவோம்' என்று லீனாவுக்காக பரிந்து பேசுவோருக்கெல்லாம் ஒரு பகிரங்க மிரட்டலை ம.க.இ.கவினர் தங்கள் பதிவின் வாயிலாக விடுத்துள்ளனர். மக்களுடைய பொதுபுத்தியினை சாதகமாக்கிக் கொண்டு விடப்படும் இது போன்ற மிரட்டல் அபத்தமானது அருவெறுப்பானது.

இப்படி பேசுகின்ற ம.க.இ.க காரர்கள் தங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் வசிப்போரிடம் முதலில் தாங்கள் 'நக்சலைட்டுகள்' என்றும்(நக்சல்பாரிகள் என்றல்ல‌) ஆயுத போராட்டத்திற்கான அரசியல் அணிதிரட்டலில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் தெளிவாக நோட்டீஸ் அச்சடித்துக் கொடுப்பார்களா?

ஒரு ம.க.இ.க காரனை கைது செய்யும் போது மக்களிடம் பீதி உண்டாக்கவும் அல்லது அவர் மீது அந்த பகுதி மக்களுக்கு வெறுப்பை வரவழைக்கவும் காக்கி சட்டை போலீசு இவர்களை நக்சலைட்டுகள் என்றுதானே பிரச்சாரம் செய்கிறது. இவர்கள் தங்களை எப்படித் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ அப்படித்தான் போலீசுக்காரன் சொல்கிறான்.

எனினும் அவனது நோக்கம் பொதுமக்களின் பொதுபுத்தியில் 'ஊடகங்கள்' புகுத்தியிருக்கும் 'நக்சலைட்டு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்' என்ற பதத்தோடு இவர்களை அடையாளப்படுத்தும் வேலை. அது போன்றதொரு வேலைதான் லீனாவின் கவிதையை பிரதியெடுத்து பக்கத்துவீட்டுக்காரனுக்கு கொடுப்பது. இதன்மூலம் செக்ஸ் பரபரப்புகளை கவனித்து படிக்கும் தமிழகத்து பொது புத்திக்கு அங்கமாக இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் 'பார்தேளா கொடுமைய‌, நம்ம வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு 'செக்ஸ்' எழுத்தாளர் அல்லது 'செக்ஸ்' எழுத்து வாசிக்கிறவன்' இருந்திருக்கிறான்' என்ற பேசிக்கொள்வார்கள், 'இதெல்லாம் நல்ல பேமிலி இருக்குற இடம், இந்த இடத்துல போயி' என்று பேசுவார்கள். இந்த பொது புத்தியின் பலத்தில்தான் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ம.க.இ.கவினர். இது எவ்வளவு அருவெறுப்பானது என்பதை அவர்கள்தான் உணர வேண்டும்.

மேலே இருக்கும் பின்னூட்டத்தை வாசிக்கும் போது, 'நக்சலைட்டுகள் என்று பகுதி மக்களிடம் பீதி கிளப்பியது போலீசு' என்றவாறான செய்தியை எத்தனை முறை புதிய ஜனநாயகத்தில் நாம் வாசித்திருக்கிறோம் என்பதனை நினைத்து பாருங்கள்.

Anonymous said...

(மேலுள்ள பின்னூட்டத்தின் தொடர்ச்சி)

இரயாகரன் இதனை புலியிசத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கிறார் என்றால் அ.மார்க்ஸும் அப்படித்தான் பார்க்கிறார். அதாவது கூட்டத்தில் கலகம் செய்தது புலி ஆதரவாளர்கள் என்று ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்து ம.க.இ.கவினரை புலி ஆதரவாளர்களாக்கி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் அ.மார்க்ஸ், “யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று ஒரு தோழர் கேட்டதாக வினவு தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறது. உண்மையில் அ.மா யாரை கண்டித்து கூட்டம் போடுகிறோம் என்று மட்டுமல்ல, யார் அந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியது என்று கூட சொல்லத் துணிவில்லாத கோழை என்றே சொல்ல‌ வேண்டியிருக்கிறது.,


//அனானி அப்போ லீனா செக்ஸ் எழுத்தாளரா?? சொல்லவேயில்ல???//

பக்கத்துவீட்டுக்காரர்கள் பொது புத்தியிலிருந்து அப்படியொரு முடிவுக்குத்தானே வருவார்கள், ஊடகங்களால் உருவாக்கப்படும் இது போன்ற பொதுபுத்தியைத்தானே 'நக்சலைட்டு பயங்கரவாதிகள்' என்று பீதி கிளப்புவதற்கும் போலீசுக்காரன் பயன்படுத்திக்கொள்கிறான்.

சமூகத்தின் இது போன்ற பொதுபுத்தி சார்ந்த மதிப்பீடுகளை உடைத்து சமூக சிந்தனை போக்கையே மாற்றவேண்டிய புரட்சிக்காரர்கள், தம்முடைய கருத்தியல் எதிரிகளை வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு பக்கத்துவீட்டுக்காரனுடைய அசிங்கமான பொதுபுத்தியை சார்ந்திருப்பது மிகவும் மோசமானது அல்லது வருந்தத்தக்கது என்பதே எனது கருத்து.


//ஐயா இந்த ஆராய்சிக்கு பொது புத்தியெல்லாம் தேவையில்லை..அவங்க எழுத்த வாசிச்சா சரோசாதேவியாரே வெக்கப்படுவார்...//

ஒரு ம.க.இ.க தோழர் அல்லது ஆதரவாளர் இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது ஏழர.

பொது புத்தியெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் சொல்வதை பார்த்தால் 'பொது புத்தி' என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் சிறப்பானதாகவோ அல்லது பிரத்யேகமானதாகவோ எண்ணிக்கொண்டு 'அதெல்லாம் தேவையில்ல, சாதரணமாவே சரோஜதேவியே வெட்கப்படுற மாதிரித்தான் இருக்கு..' என்று சொல்வது போல தெரிகிறது. ஆனால் இந்த சாதரணமாகவே, இயல்பாகவே என்று சமூகத்தில் சொல்லப்படுபவைகள்தான் பொதுபுத்தி எனப்படுவது.. இன்றைய சமூகத்தினுடைய பெரும்பாண்மையின் சிந்தனைபோக்கு தான் பொதுபுத்தி எனச் சொல்லப்படுவது என்பது உங்களை போன்ற மார்க்சியவாதிகளுக்கு தெரியாமலிருக்குமா என்ன?

Anonymous said...

"விமர்சனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வார்த்தை தூவல்களைப் படிக்கும்போது ’சப்பான்ல சாக்கிசான் கூப்டாக’ என கோவை சரளா உச்சக் குரலில் கத்தும் பிம்பம் தான் நினைவில் இடறுகிறது. அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும். மேலும் நட்பு வட்டாரங்கள் அவ்வப்போது உதிர்க்கும் அரசியல் கருத்துக்களை கேட்டே ஞானமடைபவர்களால் மட்டுமே தன் குறித்தான பிம்பங்களை மிகையாக கட்டமைத்துக் கொள்ள முடியும். தீவிர வாசிப்பும், கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறையும், தன்னையே பிரதானப்படுத்திக் கொள்ளாது ’பிற’ பற்றிய புரிந்துணர்வும் கொண்டவர்களால் லீனாவின் ஸ்டண்டுகளை சகித்துக் கொள்ள இயலாது."

well said.

and I like the word

சுயமோக பாசிசம்

thank you sivaraman.

வால்பையன் said...

உங்களுக்கு எத்தனை கண்ணு!

ஏழர said...

அனானிக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் வெளியே மிதக்கிற ஐயா கொஞ்சம் வெளியே வாரும். தியாகு தளத்திலேயே உங்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம்தான் ஆனால் சொந்த அடையாளத்தையே ம்றைக்கும் உங்களிடம் நக்சலைட்டுகள் அடையாளத்தை பற்றி கூற எனக்கு கூசுகிறது.

வினவு said...

// நடுநிலைமை என்கிற நிலைப்பாட்டின் மீதெல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. சார்புத் தன்மை அற்ற, சார்ந்த என்கிற இரண்டு புள்ளிகளையும் விலக்க முற்படுவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது.//

அய்யனார் எழுதும் போது உணர்ச்சியா, உணர்வா எது நன்கு வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்க நினைப்போருக்கு மேலே உள்ள சேம் சைடு கோல் நன்கு உதவும். புரியலைன்னு யாராவது சொன்னா புரியர மாதிரி எழுதுனாப் போச்சு.

// எழுதப்படாதவைகள் எழுதப்பட்டவைகளை நிராகரித்தால் இக் கட்டுரையும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.//

சீமாட்டி குறித்த வினவு கட்டுரைக்கு நீங்கள் எழுதிய நாசுக்கானா விமரிசனத்திற்கும், ரோசா வசந்தில் நீங்கள் போட்ட பகிரங்க கண்டனத்திற்கும் பதிலளித்து எழுதப்பட்ட கட்டுரை இரு மாதங்களாக வெளியிடப்படவில்லை. அது வந்தாலும் நீங்கள் உங்களை நிராகரிக்க மாட்டீர்கள் என்பது வேறு விசயம். இந்த உலகிலேயே மிகவும் கடினமான விசயம் இலக்கியவாதிகளிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுவதுதான். என்ன செய்வது, சகாரா பாலைவனத்தில் பூந்தோட்டம் பூக்குமா என்ன?

// அந்த கட்டுரை முழுக்க முழுக்க கிசுகிசு பாணியில் எழுதப் பட்டிருந்தது. மேலும் லீனாவின் தனிப்பட்ட வாழ்வையும் மிகக் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்தது.//

வினவு கட்டுரையில் ஒரு சில விவரப்பிழை தவிர கிசு கிசு என்று எதுவுமில்லை. உங்களது இது நிச்சயமாக ஒரு தட்டையான விமரிசனம். முக்கியமாக தீபக் என்ற உதவி காமராமேனை ஷோபா சக்தி அடித்ததும், அதை நியாயப்படுத்தி அவர் எழுதியதும், அந்த எழுத்தை சீமாட்டி மீள்பிரசுரம் செய்த பிறகும் அய்யா அய்யனார் அதை கிசு கிசு என்றால் சிரிப்புத்தான் வருகிறது. அடுத்து சீமாட்டியின் தனிப்பட்ட வாழ்வை எழுதுவதோ, இல்லை தாக்கி எழுதுவதோ ஏன் தவறென்று சொல்லாமல் இப்படி ஒழுக்கவாத வரையறைக்குள் நின்று ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது ஏனோ? எங்கள் விமரிசனம் சீமாட்டியின் கவிதையின்படியும், சொல்லொன்று செயலொன்று வாழ்பவரின் முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறது என்பதால் சரிதான். தயிர் சாதம் சாப்பிட்டு சமர்த்தாய் படுத்துறங்கும் அக்கிரகாரத்து குஞ்சுகளுக்கு மாட்டுக்கறியின் மகத்துவம் எப்படித் தெரியும்? என்னது மாட்டுக்கறியா என்று வாந்தி எடுப்பதைத்தவிர?

// அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை.//

அய்யனார் சாமி இதை விட காட்டமாக நாங்கள் ஜெயலலிதாவை தாக்கியதுண்டு. அதையெல்லாம் பிட்டுப்படம் கூட பார்க்காத சமர்த்தான உங்களைப் போன்ற அசடுகள் கண்டால் ரத்த வாந்தி எடுத்தாலும் எடுக்கலாம். அரசியல் ஜெயல்லிதாவையோ, இலக்கிய ஜெயல்லிதாவையோ நாங்கள் சலுகை காட்டி அடிப்பதில்லை. ஜெயலலிதான்னு வந்து விட்டால் பெண் என்ற அழுகாச்சி காவியமெல்லாம் எங்களைப் போன்ற மக்களை நேசிக்கும் காட்டான்களுக்கு இல்லை. அடுத்து ஒரு நபரை விமரிசிக்கும் போது பெண் என்ற முறையில் பதட்டமாக விமரிசிக்கிறார்கள் என்று அய்யன்கள் சொன்னால் அது உண்மையில் விமரிசிப்பவர்களின் ஆணாதிக்கத்தை சுட்டுவதை விட விமரிசிக்கப்படுபவரின் பெண்ண்டிமைத்தனத்தையே காப்பாற்ற முனைகிறது. அதாவது விமரிசனத்தில் எது தவறு என்று சொல்லுங்கையா மேதைகளா!! (இது பதட்டத்தில் எழுதியதில்லை. சும்மா ஜாலிக்காக ஆனால் சரியாக எழுதியது)

வினவு said...

// இந்த கண்டனக் கூட்டம் இ.ம.க மற்றும் ம.க.இ.க தீவிர தொண்டர்களால் நிஜமான அச்சுறுத்தலானது என்பதை உண்மைத் தமிழன் பதிவில் படித்தபோது வருத்தமாக இருந்தது.//

முருகா, முருகா...... இந்த அச்சுறுத்தலில் இந்து மக்கள் கட்சி எங்கே இருந்து வந்தது? கூட்டத்தில் கலந்து கொண்டு 'அச்சுறுத்தியது' ம.க.இ.க காட்டான்கள்தான். அப்பாவி உண்மைத்தமிழன் கூட இ.ம.க வந்த்தாக எழதவில்லை என்றுதான் ஞாபகம். அது கிடக்கட்டும் அது என்ன, ம.க.இ.க தீவிர தொண்டர்கள்? ம.க.இ.கவில் என்ன சாதா, ஸ்பெஷல் சாதா, மசாலா, ஸ்பெஷல் மசாலா, ஆனியன், ரவா என்றா தொண்டர்கள் இருக்கிறார்கள்? ம.க.இ.கன்னா ஒரே மாதிரி தொண்டன்தான். அவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள்தான். ராத்திரி மூன்றுமணிக்கு ரொம்ப கஷ்டம் முருகா!

// ஆனால் இலக்கிய கூட்டங்களை எதிர்த்து புரச்சி செய்வதின் வாயிலாக தங்களை, தங்களின் சித்தாந்தங்களை காப்பாற்றி விட்டதாய் எண்ணி புளகாங்கிதம் அடையவும் இன்னொரு கூட்டம் நம் சூழலில் இருப்பதும் தமிழ் சூழலின் சாபக் கேடாய்த்தான் இருக்க முடியும்.//

இலக்கியவாதிகளிடம் இரண்டு கேள்வி கேட்டால் அது புரச்சின்னு நினைச்சு புளகாங்கிதமோ, புள்ளு காங்கிதமோ, இல்ல புல்லாங்குழகாங்கிதமோ அடைவதற்கு நாங்க என்ன பொழுது போகாம எழுதனதை எண்டரை தட்டி கவிதையாக்குற முட்டாள்களா? பிறகு இந்த சூழல், தமிழ்சூழல், சாபக்கேடு எல்லாம் ரொம்ப ஓவர். இருக்கட்டும் அய்யனார், இந்த சாபக்கேடான தமிழக சூழலை மாற்றுவதற்கு உங்கள மாதிரி எவரெஸ்ட் இலக்கிய உன்னதங்கள் என்ன செஞ்சு கிழிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே? ஏதோ நீங்க தமிழச்சூழலை கழுவி ரங்கோலி கோலம்போட்டு அழகு பார்ப்பது போலவும் ஏதோ நாங்க அங்க வந்து ஆய் போவது போலவும் ஏதோ அதை நீங்க உலகத்துக்கு துக்கத்தோட சொல்வது போலவும் ஏதோ அதுக்கு நாங்க வந்து நடுராத்திரியில விளக்கம் சொல்வதும்.........

// அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும்.//

லீனா ஒரு அடிமுட்டாள் என்பது போலவும், அய்யனார் ஒரு அதிபுத்திசாலி போலவும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த பத்தியில்தான் அய்யா அய்யனார் ஒரு அப்பட்டமான ஆணாதிக்கவாதி என்பதை அய்யா அய்யனாரால் ஆணாதிக்கவாதி என்று பழிசுமத்தப்பட்ட ஐய்யோ பாவம் வினவு அய்யோ அய்யோன்னு உரக்க சொல்லி நியாயம் கேட்கிறார். புரியலையா? ஐயா அந்தக்கவிதை சரியில்லைன்னு சொல்லுங்க, அது என்ன ஒட்டுமொத்தமாக சீமாட்டியை முட்டாள் என்று சாராம்சாத்தை கண்டு பிடித்து சொல்ல வேண்டிய தேவை என்ன? இதை நாங்க எழுதுனா கிசுகிசு இல்லேனா தனிப்பட்ட தாக்குதல், அய்யனார் சொன்னால் அது சாகா வரம்பெற்ற இலக்கியம். நல்லாருக்கையா உங்க ஞாயம்!

வினவு said...

மேதகு அய்யனார் அவர்களே சங்கரராமசுப்பிரமணியன் விசயத்தில் என்ன நடந்தது என்று என்ன முடி (மயிறு) உங்களுக்குத் தெரியும்? அது என்ன யோனி அல்லது கம்யூனிச 'மதம்' குறித்த 'வெறியர்களின்' பிரச்சினையா? ஏதோ அரைகுறையாக கேட்டுவிட்டு தீர்ப்பை மட்டும் கம்பீரமாக எழுதுவீர்களோ? இதுதான் நீங்கள் இதுவரை இலக்கியத் தவத்தில் பெற்ற நல்ல பிள்ளை வேடமா?

முதலில் அது ஆபாசக்கவிதை என்பதற்காகவோ, இல்லை கம்யூனிசத்தை திட்டி எழுதியது என்பதெல்லாம் உண்மை இல்லை. எங்கள் கோபமும் அது இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்து இலட்சக்கணக்கான மக்களை அழித்து வந்த காலமது. எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.

அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்த்து. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.

ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்கதூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.

இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது கூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்? கவிஞரின் முகத்தில் ஆசிட் ஊற்றவேண்டும் என்று சொல்கிறாரா அய்யனார்? அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் அய்யனார். நீங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்தில்தான் ஈராக் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அடைந்த துன்பத்தை உணர்வதற்கு உங்களைப் போல புத்தகம்போட்ட ஒரு கவிஞனால் முடியாது. ஏன்னா உங்களுக்கெல்லாம் இலக்கியம் ஒரு ஃபேஷன். ஆனா கவிதை எல்லாம் எழுதிப் பெயரெடுக்காத எங்கள் தோழர்களுக்கு ஈராக்கும் இன்னும் ஒடுக்கப்படும் எல்லா நாடுகளும் இரத்தமும் சதையுமான வாழ்க்கை. இதுதான் அந்தமூன்று சொறிநாய்களின் கவிதை மீது கோபம் கொண்டதற்கு காரணம். அதை வைத்து நீங்கள் எங்களை காறி உமிழ்வதற்கும் அதுவே காரணம்.

நல்லது. பிரச்சினை என்று வெளியே வந்தால்தான் எல்லா முகங்களின் இலட்சணம் எல்லாம் எப்படி என்று தெரிகிறது.

மற்றபடி அய்யனார் தனது அழகிய திருமுகத்தை வெளிப்படுத்தியமைக்கு ஈராக் மக்களின் சார்பில் வினவின் நன்றிகள். தொடர்ந்து கவிதை எழுதவதற்கும் வாழ்த்துக்கள். என்ன இருந்தாலும் நீங்களும் இங்கே அனானியாக பேசும் அ.மார்க்சின் சீடப்பிள்ளையும்தானே தமிழக சூழலை டெட்டால் ஊத்தி கழுவி புனிதப்படுத்துகிறீர்கள். அதற்கும் வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

Ayyanar, well said and gave the exact picture of the issue.if people ignored this means she won't get this much attention.she got attention seeking attitude. People bite bait and fell into the trap. Talking about this is utter waste of time.engum itha pathi comment podama irunthen, unga pativula poda vachitinga. Itula comedy tamilachi j.v la leena pathi solrathu than.

Ayyanar Viswanath said...

குமரி சித்தார்த் இங்கு பின்னூட்டம் போட உண்டாக்கிய ப்லாக்கில் உங்கள் கருத்துக்களை நீங்கள் சேமிக்கலாம்.

Kavitha said...

அய்யனார், நானும் படித்தேன் :) :)

காமராஜ் said...

அன்பின் அய்யனார்.
இந்தக்கட்டுரையின் வழியாக
ஒன்றைத்தெளிவாக புரியமுடிகிறது. லீனாவின் the goddess பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போன யாரும் அந்தக் கவிதையின் பக்கம் முகம் காட்ட முடியாது.இன்னும் கூட இரந்தவர்களை புதுத்துணி போர்த்தி
வழியனுப்புகிற பழக்க வழக்கம் உலகம் முழுக்க நீக்கமற நிறைந்திருக்கிறது.

பெண்கள் கேள்விகளை தூக்கி வீசவேண்டிய ஒரு கோடிப்பிரச்சினைகள் கெட்பாரற்றுக்கிடக்கிறது.எப்படி கவிதையும் கவிஞரும் வேறு வேறோ அதே போல் இயக்கமும்,அரசியலும் அந்தப்படுக்கையில் இருந்து
வேறானதாகவே இருக்கமுடியும். இரண்டையும் குழப்பிப் பேசவரும் இந்தக்கவிதை.பெரும் உமட்டலைத்தான் தருகிறது.

எங்கள் வங்கியில் நிர்வாகத்துக்கு ஆதரவாக எழும்புகிற சங்கமெல்லாம் இடது சாரிகளின் மேல் குப்பையள்ளி வீசி பெரும் ஆதாயம் அடைந்து கொள்வார்கள் அது போல மட்டுமே இந்தப்பிரச்சினையை அனுக முடியும்.

புரட்சியை எப்படிவேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.கேவலப்படுத்தலாமா ?
எல்லாவற்றின் பேரிலும் கருத்திருக்கும் அதை அப்படியே சொல்லமுடியுமா? அதற்கு மொழியிருக்கிறதில்லையா ?

ஆனால் இதைச்சாக்காக வைத்துக்கொண்டு குடும்பங்குட்டியைதெருவிற்கு இழுப்பதும்,இதைப்பேசுவதர்குப்பதிலாக வேறு வேறு பிரசினைகள் மேலெழும்புவதும் ஆயசமாக இருக்கிறது.

தாயும் தகப்பனும் போட்டுக்கொள்ளும் சண்டையில் மலங்க மலங்க முழிக்கும் குழந்தையின் ஊசலாட்டத்தோடு படிக்கிறேன் பதிவுகளையும் பின்னூட்டங்களையும்.

உண்மைத்தமிழன் said...

[[[மேதகு அய்யனார் அவர்களே எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.
அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்த்து. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.]]]

மேதகு வினவு..

நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள்.. கருத்தில் உறுதியாய் இருக்கிறீர்கள் என்பதற்காக மற்றவர்களும் அதேபோல் இருக்க வேண்டுமா என்ன..?

மற்றவர்கள் எடுத்திருக்கும் நிலைமை சரியோ, தவறோ அப்படியெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்..! இது அவர்களது தனிப்பட்ட உரிமை. இதில் நீங்கள் அத்துமீறி நுழைந்திருக்கிறீர்கள்.. நுழைகிறீர்கள்..!

[[[ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்க தூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.]]]

ஆஹா.. என்ன ஒரு ஜனநாயகம்..? நீங்கள் சொல்வதையும், நீங்கள் போதிப்பதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது..? ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்..!

மூன்று சொறி நாய்கள் என்ற வார்த்தைகள் வினவு தோழர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு..?

முதலில் நாகரிகமாக பேசவும், எழுதவும் மற்றவர்களை அழைக்கவும் கற்றுக் கொண்டுவிட்டு பின்பு அடுத்தவர்களுக்கு அறிவுரை போதிக்கவும்..!

[[[இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இதுகூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்?]]]

இதற்கு மேலேயே தெரிந்துவிட்டது உங்களுடைய ஜனநாயகம் என்னவென்று..? அந்த வார்த்தையை நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் வினவு..?

[[[அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல.]]]

ஆசிட் பாட்டிலாக இருக்க வேண்டுமென்றில்லையே.. இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் சொறி நாய்கள் என்கிற வார்த்தைகள்கூட பாசிச ஆசிட் வார்த்தைகள்தான். அவர்கள் பாட்டிலை வீசினார்கள். நீங்கள் வார்த்தைகளை வீசுகிறீர்கள். அவ்வளவுதான் உங்கள் இருவருக்கும் வித்தியாசம்..!

[[[ஈராக் மக்களின் சார்பில் வினவின் நன்றிகள்.]]]

இது வேறயா..? யார் உங்களுக்கு இந்த அத்தாரிட்டியைக் கொடுத்தது.. இப்படியே ஒவ்வொருத்தரும் நான்தான் ஒவ்வொருத்தருக்கும் அத்தாரிட்டி என்றால் நாடு எங்கே போகுது..? முருகா..!

Anonymous said...

வினவு அய்யா பேசற லா பாயிண்டுலாம் கரெக்ட் தான்.ஆனா பேசுற விதம் தான் தெலுகு பட வஜனம் ரேஞ்சுக்கு இருக்கு...படம் பாத்த சூட்டோடலாம் கமெண்ட் போடாதீங்கயா.சயிக்கல.

உத்தரவாமில்ல..கொய்யால சூனாவால சிரிச்சோம்யா.

- X

ராம்ஜி_யாஹூ said...

u must be knowing this news but still want to share with happiness. Our friend Leka (yaalisai 1 ilakkiya payanam) got sujatha uyirmmai, award for her blog judged by es raamakrishnan.

Anonymous said...

நெப்போலியனை மிஞ்சிய மாவீரன் அய்யனாரே, வினவின் 'அராஜகப் பின்னூட்டத்தை' திரை கிழிக்க, பாய்ந்து வா! பறந்து வா!

இளங்கோ கிருஷ்ணன் said...

u too ayyanar.

Anonymous said...

இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.
- வினவு

எத்தனை பேர் இவ்வாறு கிளம்பி இருக்கிறீர்கள் பித்தலாட்டப் போலித் தோழர்களே?

Featured Post

test

 test