Sunday, February 14, 2010

காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்


இன்றைய தினத்திற்கான வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை. பழைய குப்பைகளிலிருந்து ஒன்றை மீள்வாசித்து நிறைவடைகிறேன். உங்களுக்கும் அப்படியே எனில் மகிழ்வு.
0
ஒரு கடற்கரை நகரமொன்றின் மிக அழகான சாயந்திரத்தில்தான் அது நிகழ்ந்தது. கிளைகள் விரித்து நெடிதுயர்ந்து வளர்ந்த விருட்சமொன்றின் பக்க வாட்டிலிருந்த வெளிச்சம் மெதுவாய் குறைந்துகொண்டு வந்தபடியிருந்தது. இருளென்பது மிகவும் குறைந்த ஒளி என்கிற பாரதியின் வசனக் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.அவளின் முகத்திலிருந்து மறைந்த வெளிச்சம் கண்களினுள் புகுந்தது.எப்போதும் பயத்தை மட்டுமே வெளிக்காட்டிய அக்கண்களிலிருந்து எல்லையில்லாததொன்று நீரின் வடிவம் பெறத் துவங்கியது.வெடித்துச் சிதறிய விம்மல்களோடு அவள் என் மார்பின் வசம் புகுந்தபடி திக்கித் திணறி தன் நெடுங்காலக் காதலைச் சொன்னபோது பாறைகளுக்குள் மெதுவாய் அலையடித்துக் கொண்டிருந்த கடல் நீர் தன் எல்லைகளை விரிவுபடுத்தியது.நாங்கள் மிதக்கத் துவங்கினோம்.எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிட்டுக்குருவியும் இன்னொரு தேன்சிட்டும் தம் இறக்கைகளை எங்களுக்குத் தந்துவிட்டுப் போனது மிதந்து சலித்த பொழுதொன்றில் சிறகுகளை அணிந்துகொண்டு பறக்கத் துவங்கினோம்.

அவளை முத்தமிடும்போது மயிர்க்கால்களில் பூக்கள் முளைக்கத் துவங்கின.விரல்களைத் தீண்டும்போது இதயம் தன் வீணையின் நரம்புகளை சுண்டி விட்டது.அவள் தன் தோள்களிலும் உள்ளங்கையிலும் என் அம்மாவின் சாயல்களைத் திருடி வைத்திருந்தாள்.மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகுதான் அவளின் உதடுகள் எனக்குக் கிடைத்தது,இல்லை எடுத்துக் கொண்டேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.உதடுகள் என் வசமான பின் அவள் தனது நம்பிக்கைகளை,அடையாளங்களை முற்றிலுமாய் இழந்துபோனாள். என் 'தான்' திருப்தி பெற்றது என் 'தான்' நிறைவடைந்தது. என் 'தான்' கடைசியில் காணாமல் போனது. நாங்கள் இன்னும் உயரப் பறக்கத் துவங்கினோம்.

ஒரு மலைப் பிரதேசத்திற்கு பனிக்கால விடியலில் சென்றடைந்தோம்.புகையெனப் பனி அவளின் கேசம் படிந்தது.குளித்து முடித்த சின்னஞ் சிறு பூனைக்குட்டியினைப் போல அவளின் உடல் நடுங்கிப் போனது. ஒரு தாய் பூனையின் அரவணைப்புகளோடு அவளை என்னில் பொதிந்து கொண்டேன்.என் மார்பில் நீள வாக்கில் கூர்மையான கத்தியினைக் கொண்டு கிழித்து உள்ளே தஞ்சமடைந்தாள். தான் எப்போதுமே பெற்றிராத கதகதப்பினை நான் தருவதாய் உள்ளிருந்து முனகியபடியிருந்தாள். பின்பொரு நந்தவனத்திற்குச் சென்றோம் பிரபஞ்சத்தின் புதிர்களை, முடிச்சுகளை அவள் தன் உள்ளாடை கொண்டு மறைத்து வைத்திருந்தாள்.ஆடைகளையும்,ரகசியங்களையும் ஒருமித்துத் தளர்த்தினோம். இயற்கையின் அதி அற்புத ரகசியங்களை நாங்கள் தட்டுத் தடுமாறியபடி கண்டறியத் துவங்கினோம். அஃதொரு கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களையும் தேனுன்ட வண்ணத்துப் பூச்சியின் கிறக்கத்தினையும் ஒத்திருந்தது.புதிர்கள் விடுபட்ட பொழுதுகள் மிகுந்த மயக்கத்தையும் விடுவித்த பொழுதுகள் சலிப்பையும் தந்தன.

இறக்கைகளை கழற்றி எறிந்து விட்டு நடக்கத் துவங்கினோம்.பிறகு அவள் இன்னொருத்தனையும் நான் இன்னொருத்தியையுமாய் கல்யாணம் செய்துகொண்டோம்.

00
காத்திருத்தலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?..இந்த உலகத்தின் உன்னதமான செயல் அதைத் தவிர வேறெதுவுமில்லை என்பது என் திண்ணம்..என்னவளைப் பார்ப்பதற்கு எப்போதும் இரண்டு மணி நேரங்கள் முன்னால் வருவது எப்போதுமெ எனக்குப் பிடித்திருக்கிறது.அவள் என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறாள். ஆம்! என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே...அவளிடம் மொத்தம் பதினெட்டு நிற சுடிதார்கள் இருக்கின்றன.. மூன்று நிறப் புடவைகள்.. ஓரே ஒரு முறை மட்டும் தாவணியில் பார்த்திருக்கிறேன்.. அதன் பிறகு அதை அவள் அணிவதில்லை...எனக்கும் அவளுக்கும் திருமணமான இரவில் அந்த ஆடையைத்தான் அணியச் சொல்லப் போகிறேன்...கொலுசுகளில் மூன்று விதம் அவளிடம் இருக்கிறது.. வெண்ணிறப் பாதங்களில் வெள்ளி நிறக் கொலுசுகள் எத்தனைக் கவிதை!! இல்லை...ஆம்! எத்தனை பேர் எத்தனையோ முறை சொல்லி சலித்துப் போனாலும் அவளின் பாதங்களுக்கு கொலுசுகள் அழகுதான்... இன்னமும் மல்லிகைப் பூக்கள், கண் மை, இரட்டைப் பின்னல் எனச் சொல்லிக் கொண்டு போக அவளிடம் ஏராளம் உண்டு.. ஆனால் அவற்றை எல்லாம் என்னால் அதிக நேரம் பார்க்க முடியாது. அவள் கண்களை எத்தனை நொடிகள் பார்த்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. இமைக்கும் நேரத்திற்கு கூடுதலாய் சில நொடிகள் இருக்கலாம் அவ்வளவுதான்.. ஒரு முறை என் அத்தனை வீரத்தையும் வரவைத்துக் கொண்டு நேரம் கேட்டேன் அவளிடம் ஒன்பது பதினைந்து என்றாள் என் கைக் கடிகாரம் எப்போதும் அந்த நேரத்தைத்தை தான் காட்டுகிறது ..

எனக்கு முன்னால் சில இலட்சம் ஆணகள் எப்படி காதலித்தார்களோ அதே சாயலில்தான் அவளைக் காதலித்தேன்.. எனக்கு எதெல்லாம் காதல் என சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே முறையில்தான் நானும் அதை அணுகினேன்...நான் அந்தப் பெண்ணின் மீது பைத்தியமானேன்...அவள் உயிர் வாழ்வதே எனக்காகத்தான் என நம்பத் துவங்கினேன்... உணர்வுகளைக் கடத்த அன்பினைப் பரிமாற வார்த்தைகள் அத்தனை முக்கியமில்லை என்பது என் துணிபு.நான் கண்களால் பேசத் துவங்கினேன்.. அவள் எனக்கு பதிலும் சொன்னாள்.. மிக நிறைவாய் இருக்கிறேன் நான்.இதுவரை அவளுக்காய் எழுதப்பட்ட கடிதங்கள் மொத்தம் இருநூற்றை தாண்டிவிட்டது கவிதைகள் கூட சிலதை எழுதியிருக்கிறேன்.ஒரு நாள் சொல்ல வேண்டும்.. என் காதலை, தவிப்பை, காத்திருத்தலை சொல்லிவிடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால் மொத்தமாய் காதலித்து விடுவதென தீர்மானித்திருக்கிறேன்.. ஒருவேளை அவள் என்னை மறுத்தாள் கொல்வதற்கு ஒரு கத்தியினையும் கால் சட்டைப் பையினுள் தயாராய் வைத்திருக்கிறேன்..அந்த அழகான வயிற்றில் சதக் சதக் எனக் கத்தியால் குத்துவது குரூரமானதுதான்.. என்றாலும் எனக்கு வேறுவழியில்லை..

ஏனெனில் நான் அவளைக் காதலிக்கிறேன்.

காதலிப்போர்/படுவோர் களுக்கு காதலர் தின நல்வாழ்த்துக்கள்..எதுவுமில்லாதோருக்கு அன்பும் அனுதாபங்களும்

7 comments:

கென் said...

hmm அன்பும் அனுதாபங்களுமாவது கிடைக்குதே நன்றி அய்யனார் :)

sankar said...

hello h ru? my name is shankar my blog www.tcln.blogspot.com

sankar said...

hello h ru? my name is shankar my blog www.tcln.blogspot.com

Nathanjagk said...

அரு​மையாயிருக்கு!

தமிழன்-கறுப்பி... said...

அய்யனார் இதையே நான் எடுத்து போடலாம்னு இருந்தேன் சொல்றதில்லையா முன்னாடியே?

:)

பகிர்வுக்கு நன்றி.

உயிரோடை said...

க‌தைக‌ளும் உரையாட‌லுக‌ளும் எங்கே? காத‌ல் ம‌ட்டும் தான் இருக்கு. ந‌ல்ல‌ எழுதி இருக்கீங்க‌ அய்ய‌னார்

ஆடுமாடு said...

//இறக்கைகளை கழற்றி எறிந்து விட்டு நடக்கத் துவங்கினோம்.பிறகு அவள் இன்னொருத்தனையும் நான் இன்னொருத்தியையுமாய் கல்யாணம் செய்துகொண்டோம்//

எல்லோருக்குமானதாகவே இருக்கிறது.

Featured Post

test

 test