Tuesday, April 28, 2009

கிம் கி டுக் கின் The Isle : நீர் மோகினி



The Isle (2000)




இத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இப்படி இருக்கும்

நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த பசும்புற்களும்,அவளின் காதலனும் பத்திரமாய் இருப்பதாக இந்த திரைப்படம் முடியும்.புனைவுகள் தொடும் உயர் எல்லைகள் பார்வையாளனுக்கு / வாசகனுக்கு பெரும் கிளர்வுகளைத் தருவதாய் இருக்கின்றன.திரையில் இப்புனைவின் உச்சம் வந்து போவது இரண்டு நிமிடத்திற்கும் வெகு குறைவானதே.ஆனால் அந்தக் காட்சி ஏற்படுத்திய தாக்கம் அல்லது ஆச்சர்யம் இன்னமும் நீடித்திருக்கிறது.ஒரு திரைப்படத்தை ஒரே காட்சியின் மூலம் இன்னொரு தளத்திற்கு நகர்த்துவது என்பது அசாத்தியமானது.



கொரிய இயக்குனரான கிம்கிம்கிடுக்கின் திரைப்படங்கள் பெரும்பாலும் கனவுத் தன்மையை ஒட்டியவை.தியானத்திற்கு நிகரானவை.இவரது திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியும் புதிர்,தியானம்,அமைதி மூன்றும் கலந்த கலவையை கண்முன் கொண்டுவரும்.இயற்கையை அதன் அழகோடும்,கம்பீரத்தோடும்,சாந்தத்தோடும் இவரால் திரையில் கொண்டு வர முடிகிறது. Spring Summer fall Winter and spring திரைப்படம் இயற்கையை அதன் தூரிகை கொண்டே திரையில் வரைந்த உணர்வைத்தான் தந்தது.இவரது இன்னொரு திரைப்படமான 3 iron இன்னொரு உச்சத்தை தொட்டிருக்கும்.காதல்,மனிதம்,வினோதம் இதனோடு myth ஐயும் வெகு ஆழமாக இவரால் திரையில் கலக்க முடிகிறது.

The isle (தீவு) என்கிற இந்தத் திரைப்படம் உலகின் பார்க்கவே முடியாத குரூரமான முதல் பத்து படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியல்கள் மீதெல்லாம் எனக்கு பெரும்பாலும் நம்பிக்கை இருப்பதில்லை.சில காட்சிகள் பார்க்க கடுமையாய் இருந்தாலும் என்னால் அதை குரூரமாகவெல்லாம் அணுகமுடியவில்லை.ஒரு காட்சியில் மீன் பிடிக்க உதவும் கொக்கிகளை hee-jin னின் காதலன் முழுங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பான்.அவள் ஒரு கொறடாவைக் கொண்டு அவன் தொண்டையினுள் சிக்கி இருக்கும் கொக்கிகளை வெளியில் எடுப்பாள்.இன்னொரு காட்சியில் அவன் பிரிவினை தாங்க முடியாது மீன் கொக்கிகளை அவள் தன் யோனிக்குள் செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலுவள் அதை அவளின் காதலன் கொறடாவைக் கொண்டு எடுப்பான்.படம் முழுவதும் நீரால் நிறைந்திருப்பதால்,அவள் எப்போது வேண்டுமானாலும் நீரிலிருந்து தோன்றுவாள் என்றுமாய் படம் நகர்வதால் நான் இருவரையும் மீனாகக் கருதிக் கொண்டேன்.மீனின் உடலுக்குள் சிக்கிய கொக்கியை விடுவிப்பது குரூரமாகுமா என்ன?

கிம் கி டுக்கின் பிரதான பாத்திரங்கள் பெரும்பாலும் பேசுவதில்லை.(3 iron இல் இருவருமே பேசுவதில்லை)இத்திரைப்படத்தின் கதாநாயகியும் பேசுவதில்லை.உணர்வுகளை உடல்/செயல் மூலமாக கடத்துவதையே கிம் கி டுக் விரும்புவார் போலும்.


நமது சூழலில் மோகினி,யட்சி,நீலி என பல்வேறு பெயர்களில் காடுகளில் எப்போதும் வசிக்கும் பெண்ணைப் பற்றியக் கதைகள் உலவுவது உண்டு.கிட்டத் தட்ட அதே குணாதிசியங்களுடனான பெண்தான் இக்கதையின் நாயகி.நமது சூழல் வனமென்றால் இங்கே நீர்.ஏரியில் மிதக்கும் வீடுகளைக் கொண்ட ஒரு சுற்றுலா இடத்தில் இக்கதை நிகழ்கிறது.படகில் அவ்வீடுகளுக்கு மனிதர்களையும்,உணவுகளையும்,இன்பத்தையும் கொண்டு செல்வது இப்பெண்ணின் தினசரியாய் இருக்கிறது.மனைவியைக் கொன்றுவிட்டு அங்கே பதுங்கி இருக்கும் hyun-shik ன் மேல் இவள் காதல் வயப்படுகிறாள்.இருவருக்கும் இடையூறுகளாக குறுக்கிடும் காவலர்கள்,பாலியல் தொழிலாளி,மற்றும் அவளின் முதலாளி போன்றவர்களை இருவரும் கடந்து வருகிறார்கள்.இருப்பினும் விடாது துரத்தும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து தீவில் தொலைந்து போகிறார்கள் அல்லது தீவாய் மாறுகிறார்கள்.அவனையும் அத் தீவினையும் தனது யோனிக்குள் மறைத்துக் கொண்டு அவள் நதியினில் மிதந்து கொண்டிருக்கிறாள்.


கிழக்காசிய படங்களின் மீது மேற்கத்தியர்களுக்கு எப்போதும் ஒரு இளக்காரமான பார்வை இருக்கிறது.கிம் கி டுக் கின் திரைப்படங்கள் பிராணி வதையை பிரதானப்படுத்துகிறது என்கிற ரீதியிலான அமெரிக்கர்களின் விமர்சனங்கள் மொன்னை வாதத்தின் உச்சம்.உலகின் எல்லாப் பாகத்திலிருந்தும் எடுக்கப்படும் திரைப்படங்கள் அமெரிக்காவினையே அடியொற்றி இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அளவுகோல்களாக இருக்கக் கூடும்.கொரியர்கள் மாமிசங்களை பச்சையாக உண்பது வழக்கம்.அவர்களின் திரைப்படங்களில் அவர்களின் உணவுப் பழக்கத்தைக் காண்பிப்பது பிராணி வதையாகுமா? Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.நமது சாரு imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.

ஒரு படைப்பை கண்டடைய சிறந்த விமர்சகன் அவசியம்தானென்றாலும் உன்னதங்களை எந்தச் சிறந்த விமர்சகனாலும் இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதற்கு கொரியத் திரைப்படங்கள் சிறந்த உதாரணம்.சமீப காலமாய் கொரியத் திரைப்படங்களின் மீதும் கிழக்காசியத் திரைப்படங்களின் மீதும் உலகின் கவனம் திரும்புவதையும் நல்ல மாற்றாக நாம் அணுகலாம்.

இறந்தவர்களின் முணுமுணுப்பு


வெளிறிய வீட்டின் சுவர்கள்
அகால வேளையில்
இறந்தவர்களின் முணுமுணுப்புகளை
உதிர்த்தது.

அவை
ஈக்களின் வடிவம் கொண்டு
கலவிப் பெருந்தூக்கத்தின்
நிசப்த வெளியெங்கும்
பேரிரைச்சலோடு
மொய்க்கத் துவங்கின.

“நிலா ஒளியிரவில்
வேம்படிக் குளுமையில்
நிச்சலனமாய் கிடப்பதில்
இவர்களுக்கு என்ன பிரச்சினை?”
என்றபடி
சலித்தெழுந்தேன்.

அருகிலிருந்தவளைத்
தவிர்த்துவிட்டு
உறங்கிக் கொண்டிருந்த
இன்னொருத்தியின்
கனவில் புகுந்து
முயங்கி
அவளின் கனவிலேயே
தூங்கிப் போனேன்….

Sunday, April 19, 2009

கம்யூனிச சிவப்பில் உறைந்திருக்கும் சாமான்யர்களின் இரத்தம் : To Live(1994)



சீன இயக்குனரான ஷாங் யூமு(Zhang Yimou) வின் திரைப்படங்கள் நெகிழ்வையும் அழகியலையும் பிரதானமாகக் கொண்டவை.நான் பார்த்திருந்த அவரின் மற்ற திரைப்படங்களான The Road Home,Red Sorghum திரைப்படங்களைக் காட்டிலும் To live என்கிற இத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதிகார வர்க்கங்களால் சீர்குலையும் சாமான்யர்களின் வாழ்வை மிகுந்த வலிகளோடு முன் வைக்கிறது இத்திரைப்படம்.மாவோ தலைமையிலான கம்யூனிச அரசினை ஒரு சாமான்யனின் உலகத்திலிருந்து அழுத்தமான காட்சிப் பதிவுகள் மூலம் மிகக் கடுமையாய் விமர்சிக்கிறது.சில காட்சிகளின் அழுத்தம் தாங்கவே முடியாது இடை இடையில் திரைப்படத்தை நிறுத்த வேண்டியும் வந்தது.அழகியலோடு கவித்துமாய் பதிவிக்கப்படும் சுயசரிதைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.Forrest Gump, The cindrella man போன்ற ஹாலிவுட் நெகிழ்வுகளில் லேசாய் எட்டிப்பார்க்கும் இயல்பு மிகைகளும் கூட சீனத் திரைப்படங்களில் நாம் காண முடிவதில்லை.சீனத் திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்வுப் பூர்வமானவை.

இத்திரைப்படத்தில் இரண்டு காட்சிகள் மறக்கவே முடியாத சித்திரமாக மனதில் நின்று போனது.

போரில் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு வீடு திரும்பும் Xu Fugui ஒரு அதிகாலையில் தான் வாழந்த நகரத்தினுக்கு வருகிறான்.ஓரு சிறுமி வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருகும் வெந்நீர் குடுவைகளை தன் சின்னஞ்சிறு கைகளால் சுமக்க முடியாமல் சுமந்து செல்வதை காண்கிறான்.ஒரு கண நேரத்திற்கு பின்பு அவள் தன் மகள் என்பதை உணர்ந்துகொண்டு ஓடிப்போய் அணைத்துக் கொள்கிறான்.அந்தக் குறுகிய தெரு முனையில் அவன் மனைவி வெந்நீரைக் கொதிக்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து விடுகிறான்.அவள் பெயரைக் கூவியபடியே தலை தெறிக்க ஓடிப்போய் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான்.இந்தக் காட்சியின் பின்னனி இசை,இருளும் வெளிச்சமுமான அந்த அதிகாலைச் சூழல்,மக்கள் நடமாட்டமில்லாத குறுகிய தெரு,என படு கச்சிதமாக பதிவாக்கப்பட்டிருந்தது.கவித்துவ சினிமா என்பதற்கு இந்த ஒரு காட்சி மட்டுமே போதுமானதாய் இருக்கிறது.
.

சீனா தைவானை வெற்றிக்கொள்ள ஆயுதங்கள் தேவைப்படும் காலகட்டத்தில் இரும்பு மிக அத்தியாவசியமான பொருளாகிறது.மக்கள் அவரவர் வீட்டிலிருக்கும் இரும்பை அரசுக்கு கொடுக்கின்றனர்.தெருக்களில் இரும்பு உலைகள் வைத்து அவற்றினை உருக்கும் பணிகளில் சிறுவர்களையும் ஈடுபடுத்துகின்றனர்.இரண்டு மூன்று நாட்களாய் தூங்காத தன் மகனை வலுக்கட்டாயமாய் தூக்கத்திலிருந்து எழுப்பி வேலைக்கு அனுப்புகிறான் Fugui.அன்று மாலை அவன் மகனின் உடல் மட்டுமே இரத்த வெள்ளமாய் திரும்பி வருகிறது.தூக்க கலக்கம் வண்டியில் விழுந்து அடிபட்டு இறக்க காரணமாய் அமைந்து விடுகிறது.மூடப்பட்டிருந்த வெள்ளைத் துணி விலக்கி இரத்தம் தோய்ந்த தன் மகனின் முகத்தை பார்க்கும் அந்த தந்தையின் கேவல் படத்தை தொடர்ச்சியாய் பார்க்க விடாமல் செய்துவிட்டது

திரைப்படம் 1940 களில் தொடங்கி 1970 ல் முடிகிறது.மாவோ அரசின் வெற்றி,கம்யூனிசத்தின் வளர்ச்சி,தொழிற்சங்க புரட்சிகள்,முதலாளிகள் ஒழிக்கப்படுதல் என திரைப்படத்தினோடு கம்யூனிசத்தின் வளர்ச்சியும்,தேய்வும் பதிவு செய்யப்படுகிறது.கம்யூனிச அரசின் பல்வேறு முடிவுகளை,அதிரடி சட்டங்களை படம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. மக்களை மொத்தமாய் அரசினுக்கு அடிமையாக்குதல்,யாரை வேண்டுமானாலும் நிலப்பிரபுக்கள் என அறிவித்து அவர்களை அழித்தல், அனுபவம் மிகுந்த வயதான அரசு ஊழியர்களை அடித்து துரத்திவிட்டு இளம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல் என்பன போன்ற பல்வேறு சட்டங்கள் ஒரு சாமான்யனின் வாழ்வை எந்தளவிற்கு சீர்குலைக்கின்றன என்பதைத்தான் இத்திரைப்படத்தில் பதிந்திருக்கிறார்கள்.மக்களிடத்தில் எப்போதும் ஒரு பதட்டமும் பயமும் நிலவி இருந்திருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நம்பிக்கைகள் அவர்களிடம் வேரூன்றிப் போயிருந்திருக்கின்றன.ஆனாலும் மக்கள் மாவோ வை கடவுளாக கொண்டாடி இருக்கிறார்கள்.கம்யூனிச கேண்டீன்கள்,எல்லாருக்கும் போதுமான உணவு,நேர்மையான தலைவர்கள்,புரட்சிகர நல்லிதயம் படைத்த இளைஞர்கள் என்பன போன்ற சாதகமான விதயங்களையும் படம் பதிவு செய்யத் தவறவில்லை.

தன் வாய்ப்பேச முடியாத மகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் Fugui தம்பதிகள்.அங்கு எல்லாருமே மாணவிகளாக இருக்கின்றனர்.அறுபது வயதினுக்கு மேற்பட்ட மருத்துவர்களை அரசாங்கம் வேலையை விட்டு எடுத்து விட்டிருக்கிறது.அந்த செவிலிகளின் வயதும் உருவமும் அவனின் மனைவிக்கு பயத்தை தரவே அனுபவமிக்க மருத்துவரை அழைத்து வருமாறு Fugui யின் மனைவி வற்புறுத்துகிறாள்.தொழிற்சங்க தலைவனான அவள் மகளின் கணவன் சாலையோரத்தில் கழுத்தில் அட்டை மாட்டி கிடத்தப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த விரிவுரையாளர் ஒருவரை கண்டுபிடித்து கூட்டி வருகின்றான.அவர் மூன்று நாட்களாய் சாப்பிடாமல் துவண்டு போய் வருகிறார்.செவிலிகள் அவரை பிரசவ அறைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் எதற்கும் ஒரு ஓரமாய் இருக்கட்டும் என அவர்களிடத்தில் அனுமதி பெற்று இருக்கையில் அமர வைக்கிறார்கள்.அந்த விரிவுரையாளர் பசி எனவும் போய் பன் ரொட்டிகளை வாங்கித் தருகிறான்.மிகுந்த பசியில் அத்தனை பன்களையும் விழுங்கி விடுகிறார் மருத்துவர்.அதே நேரத்தில் குழந்தையும் பிறந்து விடுகிறது.நல்ல முறையில் பிறந்துவிட்டது என மகிழும்போதே அவள் மகளுக்கு இரத்தப் போக்கு அதிகரிக்கிறது.செவிலிகள் செய்வதறியாமல் திகைக்கிறார்கள்.கொடுத்திருந்த எல்லா பன்களையும் சாப்பிட்டுவிட்டு மூச்சிரைத்துக் கிடக்கும் விரிவுரையாளரை எழுப்பவே முடியாமல் போய்விடுகிறது.அதிக இரத்தப் போக்கேற்பட்டு அவர்களின் மகளும் இறந்து போகிறாள்.


மிகுந்த செல்வந்தனான Fugui தன் சூதாட்டம் காரணமாக எல்லாவற்றையும் இழந்து தெருவிற்கு வருகிறான்.உழைத்து சாப்பிட வேண்டுமென திருந்தும்போது அவனை விட்டு விலகியிருந்த அவளின் மனைவியும் குழந்தைகளும் அவனோடு சேர்ந்து கொள்கின்றனர்.இன்னொரு நண்பனுடன் சேர்ந்து shadow puppet என்றழைக்கப்படும் கலையினை தெருக்களில் நடத்திப் பிழைக்கிறார்கள்.மூளும் போர் அவனையும் அவன் நண்பனையும் இன்னொரு விளிம்புக்கு துரத்துகிறது.Fugui இல்லாத போது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் அவனின் மகள் பேசும் தன்மையை இழக்கிறாள்.அதிர்ஷ்டவசமாய் போரில் மீண்டு வீடு திரும்புகிறவன் மீண்டும் அமைதியான வாழ்வைத் துவங்குகிறான். அரசியல் சூதாட்டங்களில் சட்ட திட்டங்களில் தன் மகனையும் மகளையும் இழக்கிறான்.எஞ்சி இருக்கும் தன் பேரனுடன் கடைசி காலத்தில் மக்களின் கல்லறைக்கு சென்று திரும்புவதோடு படம் நிறைவடைகிறது.

உலகின் எல்லா அரசியல் கோட்பாடுகளும் சிந்தாந்தங்களும் சிந்தனைத் தளத்திலிருந்து அதிகாரத்தினுக்கு நகரும்போது அவை ’மனித’த்தை விழுங்காமல் தன் உருவத்தை வளர்த்துக் கொள்வதில்லை.பெரும்பாலான உலக வரலாறுகள் சாமான்யனின் இரத்தத்தில்தான் எழுதப்பட்டன.அதற்கு சீனாவில் வேரூன்றிய கம்யூனிசமும் விதிவிலக்கில்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது.ஒரு சாமான்யனின் முப்பது வருட வாழ்க்கையின் மூலமாக அத் தேசத்தின் கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள்,அரசியல் இவற்றைப் பதிவித்திருப்பது தூய சினிமாவிற்கான சரியான உதாரணமாய் இருக்கமுடியும்.

இந்த திரைப்படத்தை சீன கம்யூனிச அரசு தடை செய்தது.ஷாங்க் யூமோ இரண்டு வருடங்கள் திரைப்படங்களை இயக்க தடை விதிக்கப்பட்டார்.

Saturday, April 18, 2009

7.மலை நதிச்சுழல் ; வ.வெ.தொ.அ.வெ.கு


”என்னோட பால்யம் முழுக்க மலைகளோடதான் சுத்திட்டிருந்தேன்.மலைகளும் காடுகளும் தான் என்னோட முதல் இருபது வருசத்தை நிறைச்சிருக்கு. அதனாலதானோ என்னமோ எப்பவுமே மிருக நினைவுகளை சுமந்துட்டு அலைஞ்சிட்டிருக்கேன்.ஒழுங்குகளுக்கு கட்டுப்படாத, பழக்கத்துக்கு/பயிற்சிக்கு அடிமையாகுற ஒரு விலங்குதான் நான்னு நெனச்சுப்பேன்.எப்பவாச்சிம் எனக்கே எனக்குன்னு சில நாட்கள் கெடைச்சா ஏதாவது ஒரு மலைப் பிரதேசத்துக்கு ஓடிப்போய்டனும்னு தோணும். ஆனா எனக்கே எனக்குன்னு ஒரு நொடி கூட இப்பலாம் கெடைக்கிறதே இல்ல.அப்படி கெடைக்கிற நொடிகள் கூட எனக்கானதுதானான்னு ஒரு சந்தேகம் எப்பவும் இருந்திட்டே இருக்கு்...இவ இன்னிக்கு சொல்ரா ”உனக்குன்னு பிற எதுவுமே இருக்க முடியாது உனக்குன்னு உனக்கு தான் இருக்கமுடியும்”னு...இது தேய்ஞ்ச வார்தைதான் என்னோட இருன்னு நான் அவகிட்ட கேட்டதுக்கு அவ அடிச்ச டைலாக் இது.கொஞ்சம் சிரிப்பு வந்தது.யாரையும் நம்பாதேன்னு வேர ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிரா என்ன கொடும ஏற்கனவே வெறும் அவநம்பிக்கைகளை மட்டும்தான் வச்சிட்டிருக்கேன் இதுல இவ சங்காத்தம் வேற.சமயத்தில எல்லாம் வெறுக்குது.இப்படி வெறுக்குதுன்னு எழுதுறது கூட வெறுக்குது.ஓஷோவும் எங்க அண்ணனும் சொல்றாங்க "போர்டம் ஈஸ் குட்" ஆம்!!.அவங்களுக்கு எல்லாமே குட் தான். சலிக்கிறவனுக்கு இல்ல தெரியும்.சலிக்கிறதோட இல்லாம வெறுக்கிறவனுக்கு இல்ல தெரியும். போர்டம் மோட கஷ்டம் என்னான்னு..”

”என் வட்டத்துல வாழ்க்கைல இருக்க வந்துட்ட மனிதர்கள் மேல எனக்கு எந்த கம்ப்ளைய்ண்ட்ஸ்ம் இல்ல. நெஜமாவே என்னால என் நண்பர்கள்கிட்டயோ, எதிரிகள்கிட்டயோ, நண்பிகள்கிட்டயோ, காதலிகள்கிட்டயோ குறைகளலாம் ஒக்காந்து கண்டுபிடிச்சிட்டு இருக்க முடியாது...ஏதாவது பிரச்சினனா ஒடனே கத்தி தீர்த்துடுறது... இல்லனா பேசி கரெக்ட் பண்ணிக்கிறதுதான் என் வழக்கம். ஆனா பாருங்க என் மேல எல்லாருக்கும் அப்படி ஒரு கோவம்!.ஏன் என்கிட்ட இவ்ளோ எதிர்பாக்கிராங்கன்னு தெரில.நான் அவங்க கிட்ட இருந்து ஒண்ணுமே எதிர்பாக்கிரது இல்லயே.என் காதலி தொடர்ச்சியா ஆறு மாசம் பேசல அப்புறமா வந்து ”எப்படி இருக்கடா”ன்னு கேட்டா நானும் அதே உணர்வுகளோடதான் திரும்ப பேசினேன்.சுயநலம்,அன்பு,பயன்படுத்துதல் இதலாம் சரியா புரிஞ்சிட்டா இந்த மாதிரி அடுத்தவங்கள குற சொல்றது குறையும்னுதான் தோணுது.”நீ என்கிட்ட நடிக்கிறியா ஒனக்கு நெஜமாவே என் மேல கோவம் இல்லையா?”ன்னு கேட்டா.இல்லன்னுதான் சொன்னேன்.நம்ம அன்புங்கிற பேர்ல நம்மோட ஈகோவுக்குதான் தீனி போட்டு வளர்க்கிறோம்.அடுத்தவன் தன்ன மதிக்கிறான் அப்படிங்கிறதே நம்மோட குரூரமான ஈகோ தான்.எனக்கு ஏதாவது ஒரு பாறை மேல ஏறி நின்னு கத்தனும்போல இருக்கு.. ”உறவுகள சரியா புரிஞ்சிக்கோங்க” ”வாழ்க்கைய சரியா அணுகுங்க” ”போலித்தனங்கள களைய பாருங்க” ”முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருக்க பாருங்க” ”எப்பவுமே நடிக்காதீங்க” ”நீங்க எதுலாம் பெரிசுன்னு நெனக்கிறீங்களோ அதுலாம் இந்த ஒலகத்துக்கு முன்னாடி ரொம்ப தூசுங்கோஓஓஓஓஓஓஒ.”

”இந்த நவீன வாழ்வு எவ்ளோ குரூரமா இருக்கு தெரியுமா?.தெரிஞ்சே தப்பு பண்றதுன்னு சொல்வாங்களே..கான்சியஸா கொல பன்றது...ரொம்ப தெளிவா அடுத்தவன நசுக்குறது ..திருட்டு, வன்மம், காழ்ப்பு, பொறாமை, எரிச்சல், காண்டு ன்னு இந்த வாழ்வு ரொம்ப குரூரமா இருக்கு...சில டைம் என்ன பண்ணலாம்னு யோசிக்க யோசிக்க குழப்பமா ஆகுது...எதையாச்சும் பண்ணனும்.இவ்ளோ நாள் பண்ணதலாம் ”சடார்” னு தூக்கி தூர கடாசிட்டு வேற எதாச்சும் புதுசா பண்ணலாமா? சின்ன வயசுல எனக்கு நாட்கள் லாம் ஏன் பின்நோக்கி நகர்ரதில்லன்னு தோணும். துங்கி எந்திரிச்ச உடனே நாளைக்கு பதிலா நேத்து நமக்கு கெடச்சா எவ்ளோ நல்லாருக்கும்!!.நேத்திக்கு பண்ண தப்பையெல்லாம் நாளையான இன்னிக்கு சரி பண்ணிக்கலாம்.அப்புறம் நேத்திக்கும் எப்பவும் சரியாவே இருக்கும்.எனக்கு அப்பலாம் எல்லாத்துலயும் ரொம்ப சரியா இருக்கனும் இல்லனா பயங்கர குற்ற உணர்வா இருக்கும்.. தப்பே இல்லாத விசயத்தலாம் நானா கற்பன பண்ணிட்டு பெரிய தப்பு பண்ணிட்டாமாதிரி கெடந்து துடிப்பேன்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்வுகளலாம் தூக்கி போட ஆரம்பிச்சேன்.தெளிவா தப்பு பண்ண ஆரம்பிச்சேன்.

கன/கரு தேகத்தில் கருநிற மை கொண்டு எழுதுவது சரியாய் தெரியாது. பாஸ்பரஸ் தேகத்தினுக்கே கருநிற மை.கருநிற உடலுக்கு நீல மைதான்.நீல மை.நீல மைக்குச்சி. அல்லது நீல மையிட்ட எழுதுகோல்.வெற்றுடலின் எப்பகுதியில் இருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்.நீள வாக்கில், குறுக்குவெட்டில்,வட்டம் வட்டமாய், உடலின் வடிவினுக்கேற்ப எழுத தொடங்கலாம்.சந்தியாவின் கன/ரு த்த தேகத்தில் ஓர் இரவு முழுவதும் நீல நிற மையினால் எழுதிக்கொண்டிருந்தேன்.முதுகில் இணுக்கி இணுக்கி ஒன்பது கவிதைகள் எழுதினேன்.பாஸ்பரஸ் தேகத்தவள் போல் இவள் நெளியவோ, கூச்சத்தில் கத்தவோ, சிலிர்க்கவோ இல்லை.அசையாது அமர்ந்திருந்தாள்.நானும் மிக நிதானமாய் எழுதினேன்.சந்தியாவை விட நான் குறைவாகவே குடித்திருந்தேன்.ஆனாலும் ஒவ்வொரு கவிதையை முடிக்கையிலும் நிதானமிழந்தேன்.அவள் என்னை விட இரு மடங்கு குடித்திருந்தாள் எப்போதும் நிதானம் தவறாதிருந்தாள்.முலைகளில் வட்டமாய் என் பெயர் எழுதினேன் .. ”சராசரி இந்திய ஆண் மனோபாவம்” என என் காதில் வழக்கமாய் கத்துகிறவள் கத்தினாள்.'ஆம் ஆண் மனோபாவம்தான்' என முணுமுணுத்தபடி இன்னொன்றிலும் எழுதினேன்.அவள் சிரித்தாள். ”என்ன மொழி இது என்றாள்?.எனக்கு 'திக்' என்றது ”அடிப்பாவி இது தமிழ்” என்றேன்.அவள் 'எனக்கு தமிழ் படிக்க தெரியாது' என்றாள்.”ஆங்கிலத்தில் எழுது அல்லது இந்தியில் எழுது” என்றாள்.நான் அந்த ஒன்பது கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முன் பக்கம் எழுதத் துவங்கினேன்.

நெடிய வறண்ட கொடும் பாலையில் பயணிக்கையில் நதியில் மூழ்கி மரணிப்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.நதியில் மூழ்கி மரணிக்க வாய்ப்பு கிடைக்குமெனில் நான் நதிச்சுழலில் சிக்கி உயிர் தொலைய விரும்புகிறேன். சுழல்,நதிச்சுழல்.கடல் அலைச்சுழல்களைப் போலிருக்காது. நதிச்சுழல். ஆம்!! நதிச்சுழல்.அமைதியாய்,வசீகரமாய், சத்தமில்லாது,கிறுகிறுக்க வைக்கும் நதிச்சுழல்.கரையிலிருந்து நதி பார்க்கையில் நான் சுழலில் மய்யம் கொள்வேன். குழிவாய்,வளைவாய்,வேகமாய்,பயமாய்,அழகாய் நதிச்சுழல். சுழலில் சிக்குறும் உடலை கற்பனை செய்ய பயமாகவும் ஆசையாகவுமிருக்கிறது. சுழலில் சிக்கும் உடல்.குழலில் சிக்கும் உடலைப் போலிருக்குமா?குழலில் சிக்கியிருக்கிறதா உடல்?.நான் சிக்கி இருக்கிறேன்.குழலில்.கார்குழலில்.கருநீளக் கூந்தலில் சிக்குண்டிருக்கிறேன்.ஓர் பிற்பகலில் அவள் தன் தொடை தொடும் நீள்முடி கொண்டு என் கழுத்தினை இறுக்கினாள்.என்னுடலை செவ்வகத் துண்டுகளாக்கி அவள் கூந்தலிழைகளின் இடைவெளியில் புதைத்தும்,விடுவித்துமாய் விளையாடினாள்.எனக்கு மூச்சு முட்டியது. அவளின் விளையாட்டிலிருந்து விடுபட முடியாமல் போராடித் துவண்டு மயங்கினேன்.இதழ் ஈரம் கொண்டு அவள் என்னை உயிர்ப்பித்திருக்க வேண்டும்.ஆனால் இந்நதிச்சுழல் மீளமுடியாதது.துவண்டால் மீண்டும் உயிர்த்தெழ முடியாதது.நதிச்சுழலே கடைசி. நதிச்சுழலே சகலத்தின் முடிவு.நதிச்சுழலே டெஸ்டினி.சுழலே எக்ஸ்டசி.சுழல்,சுழல் எல்லாம் கிறுகிறுக்க சுழல்.வான் பூமி எல்லாம் ஒன்றாக்குகும் சுழல்.பிரபஞ்சத்தை என்னை சகலத்தையும் ஒரே புள்ளியில் குவிக்கும் சுழல்.நதிச்சுழல்.

( ..... சி.மணிக்கு)

Tuesday, April 14, 2009

மெனி மோர் ஹாப்பி ரைட்டன்ஸ்,பவா,ஜெயந்தன் மற்றும் நான் கடவுள்

என் அம்மாவைப் பொறுத்தவரை சித்திரை முதல் தேதிதான் என் பிறந்தநாள். ஆங்கிலத் தேதியையெல்லாம் அவள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இன்றைய விழிப்பு அம்மாவின் வாழ்த்தோடு தொடங்கியது.எனக்கு நேற்றுதான் பிறந்தநாள் என்றாலும் அவள் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. தொலைபேசியில், மின்னஞ்சலில், குழுமத்தில்,வலைப்பதிவில்,ஆர்க்குட்டில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த/தெரிவிக்காத/தெரிவிக்க விரும்பாத அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்.சந்தோஷ் many more happy writtens of the day என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.ஹாப்பி ரைட்டிங்கையெல்லாம் இனிமேல்தான் துவங்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.உரையாடலினி இருபத்தொன்பது மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தாள்.தொலைபேசியில் அழைப்பதோ, நேரில் சந்திப்பதோ, இனிமேல் நடக்காதென்று இதற்கு முன்பு நடந்த கைகலப்பில் தீர்மானமாய் சொல்லிவிட்டதால் நேற்று மின்னஞ்சலோடு தன் அன்பை நிறுத்திக்கொண்டாள்.முதல் நாவலுக்கான முதல் பத்தியை நேற்று எழுதுமாறு கேட்டிருந்தாள்.எழுதி அனுப்பினேன்.

ஒரு வாரத்தில் ஊருக்கு சென்று திரும்பி மீண்டும் வேலைக்கு போவதெல்லாம் மிகவும் துன்புறுத்தலானது.வேலைக்கு போவதே இப்போதெல்லாம் துன்பமாகத்தான் இருக்கிறது.தேவைச் சாத்தானின் பல்லைப் பிடுங்கமுடியாமல், வலியோடு சிவ்விடும் இன்பத்தை துய்த்தபடி ஓடிக்கொண்டிருக்கிறேன்.வெகு சீக்கிரத்தில் நிறுத்திவிட வேண்டும் எல்லாவற்றையும்.ஊரிலிருந்த சொற்ப நாள்களின் கடைசி இரண்டு மணி நேரத்தை பவா செல்லதுரையுடன் கழிக்க முடிந்தது.இவர் வெகு காலமாக இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும் எழுதியதென்னவோ வெகு சொற்பமான கதைகள்தாம். எளிமையான அன்பான மனிதர்.எல்லாருடனும் நட்பாய் இவரால் எப்படி இருக்க முடிகிறதென நினைத்துக் கொண்டேன்.பவா விற்காக ஒரு வலைப்பூவை தொடங்கியிருக்கிறேன் 19.டி.எம்.சாரோனிலிருந்து என்கிற இந்த வலைப்பூவில் அவர் இதுவரை எழுதியவற்றைப் பதிந்தும் தொடர்ந்து எழுதச் சொல்லியுமாய் கேட்டிருக்கிறேன். தமிழ்செல்வன், மாதவராஜ், காமராஜ் என தமுஎச படைப்பாளிகள் வலைப்பூவில் மலர்வது மகிழ்வாய் இருக்கிறது.

பாலுமகேந்திராவின் கதை நேரத்தை இரண்டு மாதத்திற்கு முன்பு டிவிடியில் பார்த்தேன்.பாஷை என்கிற ஜெயந்தனின் கதையை படமாக்கியிருந்த விதமும் கதையும் மனதிற்கு மிக நெருக்கமாய் இருந்தது.சில கதைகளை வலையில் தேடிப் பிடித்து படித்தேன். வெகு சாதாரண தளத்தில் இயங்கும் துல்லியமான எழுத்து ஜெயந்தனுடையது.சாரு கிண்டலடிக்கும் குமாஸ்தா மனோபாவத்தின் சஞ்சலங்கள்தாம் பெரும்பாலான கதைகளாக இருக்கின்றன.குமாஸ்தாக்கள் என ஒரேயடியாய் ஒதுக்கிவிட்டவர்களின் படபடப்புகளும், ஊமைக் கோபங்களும்தான் பெரும்பாலான கதைகளில் விரவி இருக்கிறது.ஆத்மாநாம் சொல்லும் புல்லைக் கொண்டு குண்டர்களின் வயிற்றைக் கிழிப்பதுதான் ஜெயந்தனின் கதைகள்.நிராயுதபாணியின் ஆயுதங்கள் என்கிற தலைப்பில் வம்சி வெளியிட்டிருக்கும் ஜெயந்தனின் முழுக் கதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன்.முழுவதுமாய் படித்துவிட்டு விரிவாய் பகிர்கிறேன்."ஜெயந்தனை பெரிசா யாரும் பேசலை" என வருத்தத்தோடு குறிப்பிட்டார் பவா.பெரிதாகப் பேசப்பட விரும்பாதவர்களாலேயே உன்னதங்கள் சாத்தியமாகின்றன என நினைத்துக் கொண்டேன். புத்தகத்தை பார்த்தவுடன் ஆசிப் வியந்தார்.”ஜெயந்தன் கதைகளலாம் புத்தகமா போட்ட அப்பாவி யாருய்யா?” என்றார்.பவா செல்லதுரை என்றேன்.

நான் கடவுள் படத்தை திரையில் பார்க்க முடியவில்லை.தியேட்டரில் நல்ல கேமராவைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு டிவிடியை ஆசிப்புடன் பார்த்தேன். படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தை தவிர்த்திருந்தால் இன்னும் கச்சிதமாய் இருந்திருக்கும்.அதாவது ஏழாம் உலகத்தை மட்டும் படமாக்கி இருந்தால் படம் தமிழ்சினிமாவின் அடுத்த கட்ட நகர்வாய் இருந்திருக்க முடியும்.விளிம்பு நிலை மனிதர்களை இந்த அளவு தமிழ் திரையில் எவரும் பதிவித்ததில்லை. உன்னதங்கள்,நம்பிக்கைகள்,புனித பிம்பங்கள் என எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருப்பது மகிழ்வையும் ஆச்சரியத்தையும் தந்தது. இம்மாதிரி திரைப்படங்களும் கூட ஹீரோயிச பிடியிலிருந்து முற்றாய் விலகவில்லை என்கிற வேதனையும் படம் பார்த்து முடிந்தவுடன் எழுந்தது. ஆர்யா மூன்று வருடங்களாக உழைத்தது/ஒளிந்திருந்தது தலைகீழாய் நிற்க மட்டும்தானா? என்கிற ரீதியில்தானிருந்தது அவரது நடிப்பு.பாலா மாற்றுச் சினிமாக்களை சாத்தியப்படுத்தும் முன் அவரின் சினிமாக்களில் பிரதானமாய் துருத்தி நிற்கும் ஹீரோயிசத்திலிருந்து வெளிவருவது அவசியம்.

ஏகப்பட்ட பில்ட் அப்போடு வெளிவந்த சாருவின் நான் கடவுள் விமர்சனத்தோடு ஓரளவு ஒத்துப் போக முடிந்தது.ஆனால் Lower depths படத்தை நான் கடவுளோடெல்லாம் ஒப்பிடுவது சற்று அதீதம்தான்.அகிராவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களாக dreams ஐயும் Lower depths ஐயும் சொல்லலாம்.(எல்லா படங்களுமே பிடித்தவைகள்தாம் என்றாலும் கூட) புனிதம் அ.புனிதம் இரண்டினையும் ஒரு பொந்துக்குள் அகிரா நிகழ்த்திக் காட்டியிருப்பார்.பொந்து போன்ற ஒரு இருப்பிடத்தில் வாழும் விளிம்புகளின் உரையாடல்கள்தாம் lower depths.வயதான பயணியின் மூலமாய் ஜென்/பெளத்த/கடவுள் நம்பிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டு குடிகாரன்,வேசி,கொலைகாரன்,திருடன் பாத்திரங்கள் மூலமாய் புனிதங்களை நிர்மூலமாக்கியிருப்பார் அகிரா.

ஜப்பானில் அகிராவின் திரைப்படங்கள் வெகு சன சினிமாவாகத்தான் அணுகப்பட்டன/படுகின்றன.நாம் கலைப்படங்கள் எனக் கொண்டாடும் சொற்பமான படங்கள் கூட இன்னும் வெகு சன சினிமாவிற்கான தரத்தை எட்டவில்லை என்பதுதான் வருத்தமான நிதர்சனம். பாட்டு, சண்டை, அடித்துநொறுக்கும் ஹீரோ என எல்லா சகிப்புகளோடும் ஒரு மணி நேர உன்னதமாக நான் கடவுள் இருந்தது. சமீபமாய் மனதில் நின்றுபோயிருந்த இறுதிக் காட்சிகளான ”பருத்திவீரன்” பிரியா மணியின் அவலம் மற்றும் ”பூ” பார்வதியின் இறுதிக் காட்சி கேவல்,இவற்றினோடு பூஜாவின் இறுதிக் காட்சி சிதைந்த மரணமும் மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.புதுப்பேட்டை பாலகுமாரன் வசனத்திற்கு பிறகு நான் கடவுள் ஜெமோ வின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

Friday, April 10, 2009

பிரளயனின் பாரி படுகளம்


வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடகங்களை திருவண்ணாமலையில் அவ்வப்போது கண்டதுண்டு.மேடை நாடகமாக இருக்கையில் அமர்ந்து முழுமையாய் பார்த்தது இதுவே முதன்முறை.நிகழ்விற்கு அ.மார்க்ஸ் வந்திருந்தார்.பாண்டிச்சேரி நாடகத்துறை மாணவர்கள் நடித்திருந்த இந்நாடகம் மூவேந்தர்கள் அழித்த பாரி மன்னனின் வாழ்வைப் பேசுகிறது.பாரியின் கதையோடு மூவேந்தர்கள் காலத்தில் மிகுந்திருந்த குடி வேற்றுமைகள் அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த கொலைகள் மற்றும் சொந்த நிலம் சார்ந்த வாழ்வியல் போராட்டங்களை இந்நாடகம் முன்வைக்கிறது.


முதல் காட்சியில் பாரி மன்னனின் மிகும் புகழை விரும்பாத சோழமன்னன் பாரியின் நாடான பறம்பிற்கு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்புகிறான்.வேவு பார்க்கச் செல்லும் ஒற்றர்களில் ஒருவனான அனிருத்தன் அங்கிருக்கும் வேடுவர் குலப்பெண் ஆதிரையின் அழகில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான்.திரும்பி வராதவனை விசாரிக்கையில் அவன் தாழ்குடியை சார்ந்தவன் என்பது தெரியவருகிறது.அவன் நண்பனைக் கொண்டே அனிருத்தனைக் கொல்கிறான் காவிரி நாடன்.

அடுத்தடுத்து வரும் காட்சிகள் பாரி மன்னனின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன.பாரி தன் மகள்களான அங்கவை சங்கவைகளுடன் ஆட்சி புரியும் காட்சிகள்,பறம்பு நாட்டின் இயற்கை வளங்களை அழித்திடாமல் காப்பதை தலையாய கடமையாகக் கொள்வது, எல்லா உயிர்களுக்குமான பாதுகாப்பைத் தருவது என பாரியின் நல்லாட்சி நேர்த்தியாய் காட்சிப்படுத்தப்படுகிறது.கபிலரின் பாடல்களும் ஆடல் மகளிரின் சிலாகிப்புகளும் பிற திசைகளுக்கும் பாரியின் புகழை கொண்டுச் செல்கிறது.இயற்கை வளமுள்ள நாடும், மிக அழகான பெண்களும் மற்ற பெருநில மன்னர்களுக்கு உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.அதனோடு பாரியின் புகழும் சேர்ந்து கொள்ளவே மூவேந்தர்களும் ஒன்றிணைந்து அவன் நாட்டின் மீது போர்தொடுத்து பாரியை அழிக்கின்றனர்.

போர் காட்சிகள் மிக நேர்த்தியாய் பதிவு செய்யப்பட்டன.நிலம் சார்ந்த வாழ்வு சார்ந்த கூர்மையான வசனங்கள் ஈழத்தில் நிகழும் அவலங்களை கண்முன் நிறுத்தியது.மண்ணை, இயற்கையை, மக்களை தங்கள் சுய இலாபத்திற்காக அழிக்கும் அதிகார கரங்களுக்கான எதிர்ப்பாகவும் இந்நாடகத்தை நவீன சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.நாடகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கவிதைகள்,இசை,வசனங்கள் மாணவர்களின் உடல் மொழி என எல்லாம் எனக்கு நிறைவைத் தருவதாய் இருந்தது.

அ.மார்க்ஸ் மாணவர்களின் நடிப்பை அற்புதமான உடல் மொழி என சிலாகித்தார்.கபிலர் பாத்திரத்தின் பொருத்தமில்லாத உடையலங்காரத்தை நெருடலாக குறிப்பிட்டார்.மேலும் நாடகத்தின் முதல் காட்சி மய்ய நாடகத்தினுக்கு எந்த வகையில் தொடர்புள்ளது என்கிற கேள்வியும் எழுப்பினார்.மொத்தத்தில் நாடகம் நிறைவைத் தருவதாக குறிப்பிட்டார்.
மூவேந்தர்கள் காலத்தில் புரையோடிப்போயிருந்த குடிவேற்றுமைகளை பதிவு செய்யவே முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம்.முல்லைக்குத் தேர் கொடுத்ததைத் தவிர நமது பாடபுத்தகங்கள் பாரியை பெரிதாய் பதிவு செய்திருக்கவில்லை.அங்கவை சங்கவை எனப் பெயரிட்டு நம் வேர்களின் மீது மலத்தை அள்ளிப் பூசிய சங்கர் வகையறாக்கள் நிறைந்திருக்கும் இச்சூழலில் இதுபோன்ற நாடகங்களின் மூலம் என்னால் மகிழ்ச்சியடையவே முடிகிறது.

விழாவில் என் தமிழாசிரியரைப் பார்த்தேன் பார்வையாளர்களை கருத்துக்கூற அழைத்தபோது மேடைக்கு சென்று இந்த வயதிலும் கணீரெணப் பேசியது நெகிழ்ச்சியாய் இருந்தது.தலைவன்,தலைவி,தூது, காதல்,காமம், தோழிப் பெண்கள்,பசலைக் கொடி, குவளை மலர்கள் வயல்வெளிகள் என்றெல்லாம் இவரின் குரல் என் பதின்மங்களில் என்னை சங்க காலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.தமிழ் செய்யுள் பகுதியை இவரைப் போல் எவராலும் நடத்த முடியாது.சண்முக அருணாசலம் என்கிற இவர்தான் பிரளயனின் சகோதரர்.எனக்கு சங்க காலத்தை அறிமுகம் செய்து வைத்தவருடன் பாரி நாடகம் கண்டது தற்செயலானதாய் இருந்தாலும் மகிழ்வாய் இருந்தது.நாடகம் துவங்குவதற்கு முன்பு ஜெயமோகன் இந்நாடகத்தை கடுமையாய் விமர்த்திருப்பதாக பவா செல்லதுரை சொன்னார்.ஜெயமோகனுக்கு இந்நாடகம் பிடிக்காமல் போனதில் எனக்கு பெரிதாய் ஆச்சரியம் ஒன்றுமில்லை.சிவன் பார்வதி உடலிலிருந்து குமரியை கொற்றவையில் உண்டாக்கிய ஜெமோ விரைவில் தமிழ்நாட்டின் மொழி சமஸ்கிருதம் என்றோ தமிழ் நாட்டை ஆண்டதெல்லாம் பார்ப்புகள்தாம் என்றோ புது வரலாறு எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.அவர் எதை எழுதினாலும் மண்டையாட்டும் பெரும் மந்தையாட்டுக் கூட்டம் நம் சூழலில் பெருத்திருக்கும்போது எடுக்கும் வாந்தியெல்லாம் அமிர்தம்தான்.

தொடர்புச் சுட்டிகள்

1இந்நாடகம் குறித்தான பதிவர் சந்திப்பின் பார்வை..
2.எஸ்.கருணாவின் பகிர்வு
3.பிரபஞ்சனின் பகிர்வு
4.அருட்பெருங்கோவின் பகிர்வு

Featured Post

test

 test