Wednesday, December 30, 2009

வனமழிக்கும் தீயின் ஊற்று - நதியலை

இரவின் நிசப்தமாய் அணைப்பின் கதகதப்பாய் முத்தத்தின் ஈரமாய் அடக்கவியலா கண்ணீரின் ஊற்றாய் அந்தி மேகத்தீற்றலாய் குழைத்து குழைத்து ஊட்டப்படும் உணவின் ருசியாய் பகிரப்பட்டிருக்கின்றன அய்யனாரின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். பிரம்மாண்டமான மாளிகைகள் தராத சுகத்தைச் சின்னஞ்சிறு மரக்குடில் தந்துவிடுவதைப்போன்றது இக் குறுங்கவிதைகள். அந்தந்த நேரத்து நெகிழ்வை, ஆசையை, நினைவை, விரக்தியை, சோகத்தை எவ்வித பூச்சும் வர்ணனைகளுமில்லாமல் அப்படியே வார்த்தைகளை கோர்த்து அளித்திருக்கின்றார். ஏக்கத்தை, தவிப்பை, அன்பை சொல்லும் கவிதைகளை பெரும்பாலும் காதல் கவிதைகள் என்றே முத்திரை பதித்து விடுகின்றோம். இப்பதிவில் உள்ள பெரும்பாலான கவிதைகள் காதல் என்ற சட்டத்திற்குள் அறையப்படாது பொதுவாக நேசத்தை மொழியும் கவிதைகளாகவே பார்க்கத்தோன்றியது.

உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடிவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் அப்படி தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவதாலேயே சில உணர்வுகள் மலிந்து விட்டன. அதிகமாக பயன்படுத்திப் பயன்படுத்தியே அதன் வீர்யத்தை குறைத்துவிட்டோமோவென எண்ணத்தோன்றுமளவுக்கு பல வார்த்தைகளை சக்கையாக்கிவிட்ட நிலையில் இதையெல்லாம் சொல்லத்தான் வேணுமா? என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குகின்றது. இப்படி சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பநிலையில் சொல்லாமல் விடுவதின் விளைவுகளை அழகாக ஒப்பிட்டுள்ளார் இவ்வரிகளில்
‘சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது’
இப்படி உணர்வுகளை வெளிக்காட்டிவிடுவதின் நலன்களை அறிந்திருந்தும் தனது ப்ரியங்களை சொல்லிவிட முடியாமல் தவிக்கும் மனதினுக்கு மயிலிறகால் நீவிவிடுவதையொத்த சுகத்தை, ஆறுதலை இவ்வரிகளில் தேக்கி வைத்திருக்கிறார்.
“சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
-----------
-----------
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'”
மேலும் ‘நமக்கான இதில் மெளனங்களே மிகவும் வசதியானது’ என்கிறார். வசதி கருதி மௌனமாக இருப்பதா அல்லது சொல்லிவிடுவதே நல்லதா என்பவையெல்லாம் அனுபவத்தால் நன்கு அறிந்திருந்தாலும் அன்றாட வாழ்வில் சொல்லவேண்டுவதை சொல்ல முடியாமல்போவதாலும் சொல்ல வேண்டாமென்று நினைப்பவற்றை கொட்டித்தீர்ப்பதாலும் இழக்கும் முத்தங்கள் பெருகிக்கொண்டேயிருப்பதான விபரீதங்கள் தொடரத்தானே செய்கின்றன.

அன்பில் திளைக்கும் மனதினுக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அள்ளித்தர ஒரு சிறு நகர்வு போதுமானதாக இருக்கின்றது. நேசம் நிறைந்திருக்கும் உள்ளத்தில் மொத்தமாக குழைவும் நெகிழ்வும் குடிகொண்டுவிடுகின்றது. கிளர்வு புத்துணர்ச்சி படபடப்பு என எல்லாம் கலந்த உணர்வில் தளும்பும் மனதை அதே கோட்டில் உணர முடியாதவர்களுக்கு இத்தகைய அதீத நேசங்கள் சலிப்பானதாகவே இருந்துவிடுவது சாபமென்றாலும் எக்காரணத்திற்காகவும் விரிந்து நீளும் அன்பின் பரப்பை மடங்கி சுருட்டுவது இயலாக் காரியமாகத்தானாகின்றது என்பதை சொல்கின்றன இவ்வரிகள்.
“உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும்
விரித்தாயிற்று
ஒரு புள்ளியில் குவிய
இனிமேல் சாத்தியமில்லை”

ஆனால் ஒப்பற்று ஓங்கி உயரும் நேசங்கள் விளங்கிக்கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியை சுகமான பாரத்தை தாங்கொனா களிப்பை எதிர்கொள்வது சற்று திக்குமுக்காட வைக்கும் சங்கதிதான் என்பதை சொல்கிறார் இப்படி

“தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை”
ஒருமித்து கலக்கும் இதயங்கள் சாதாரணமாக பேசும் மொழிகள் கூட கவிதையாகிவிடுகின்றன என்பதாக தோன்றியது மீன் தொட்டியில் இருக்கும் அழகான மீனுக்கு அவளின் பெயரை சூட்டியதாகவும் அதை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன் என்று அழைப்பதாக இருக்கும் கவிதை. நாமும் சென்று ரகசியமாக அம்மீனை கண்டுவரலாமோவென ஆவல் எழுப்பும் கவிதையது.

நுண்ணுணர்வுள்ள எந்த ஒரு இதயத்தையும் தனிமை தீண்டாமல் இருந்ததில்லை. நீங்காமல் உடனிருக்க பலரிருந்தும் தனிமையில் ஏங்கிக்கிடக்க எங்கிருந்தோ காரணமில்லா சோகம் தொத்திக்கொள்ள பலவேளைகளில் எதுதான் வேண்டுமென அறியாமல் மருண்டு அவளின் அருகாமை மட்டுமே நாடும். தன்னை சரியாக புரிந்துக்கொள்ள மாட்டாளாவென இடைவிடாத நிரந்தரமான தவிப்பு தங்கிவிடும். அப்படியான பொழுதுகளில் தன் நேசத்தை, வேட்கையை, ஊசலாட்டத்தை இத்தனை கச்சிதமாகவும் வடித்துவிடமுடியுமோ!

“நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்”
தனிமையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டு திணிக்கப்படும் வாழ்வில் கசங்கும் மனிதர்கள் ஏராளம். அப்படி தனிமை மட்டுமே வாய்க்கப்பெற்ற மனங்களின் மன்றாடல்கள் எத்தனை வேதனை மிகுந்ததாக இருக்கும். தனிமையின் இசையென தன் வலைபக்கத்துக்கு தலைப்பு வைத்திருக்கும் அய்யனார் அத்தனிமையிலிருந்து தப்பிக்க தனக்கான வழியாக சொல்வது…

“வேண்டுவதெல்லாம் வெதுவெதுப்பான
ஒரு மென் தொடுகை
அல்லது
விழிக்கையில் சிரிக்கும்
வெள்ளைப் பின்னனி கொண்ட
மிகப்பெரு இரு கரு நிற விழிகள்...”
வார்த்தைகளால் விளங்கச்செய்ய முடியாத அன்பை, தர முடியாத நம்பிக்கையை, உணரமுடியாத நெருக்கத்தை முத்தத்தின் அழுத்தமோ அணைப்பின் இறுக்கமோ எடுத்துரைத்துவிடுகின்றன. அதேபோல் முத்தங்களை மொழியும் கவிதைகள் முத்தங்களை போன்று கிளர்ச்சியூட்டவும் செய்கின்றன. அப்படியான சில வரிகள்…

“அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது”

“இப்போது உன் உதடுகளிலிருந்து
துவங்குவதே மிகச்சரியானதாயிருக்கக்கூடும்”
எதிர்ப்பார்ப்பதோ ஆசைபடுவதோ தானாக நிறைவேறிடுவது சுகம்தானெனினும் கேட்டு வாங்கி கொள்வதும் சுகமானதாகவே இருக்கின்றது காதலின் கொஞ்சல்களிலும் கெஞ்சல்களிலும். தனக்கான தேவையை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியங்கள் காதலில் இருப்பதில்லையென்றாலும் மறுப்புகளும் சிணுங்கள்களும் விலகல்களும் அதற்கான வித்துக்களாகின்றன. அப்படியான அழகான கெஞ்சலாக இருக்கின்றது ‘முத்தங்களிட்டு மலரச் செய்யேன் முதல் பூவை’ என்னும் வரிகள். ஆனால் அதையே வேறோர் கவிதையில் இப்படியும் பதிவு செய்கின்றார்.

“வனமழிக்கும்
தீயின் ஊற்று
உன் உதடுகளாய் இருக்கலாம்”
நேசிக்கும் உயிர்கள் எல்லாம் தொடர்ந்து ஒன்றாக வாழ நேரிடமுடியாமல் போவதுகூட என்றென்றைக்குமாக அக்காதலை நீடிக்கச்செய்கின்றதோ என்றே தோன்றுகின்றது. சேர்ந்து வாழ முடிந்தவர்கள் கூட தங்கள் காதலை வாழ்க்கைவோட்டத்தில் எங்கேனும் தொலைத்துவிட நேரிடலாம் ஆனால் பிரிந்தவர்களோ காலத்துக்கும் அக்காதலை சுமந்துக்கொண்டு நினைவுகளால் நீருற்றி வளர்த்துவருகின்றனர். காலத்துக்குமான வலிதான் இப்பிரிவு என்றாலும் அவ்வேதனைகளை கவிதைகளில் தவழவிட்டுப்பார்ப்பது சற்று ஆறுதலானதுதான். உருகி உருகி நேசிக்கும் தன்னவளை

“ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்”
என்பதைவிடவும் உயர்வாக கூறிவிடவும் முடியுமோ? பார்ப்பதோ பேசுவதோ அத்தனை எளிதில் நடக்கக்கூடிய காரியமில்லாமலிருந்தாலும் தவித்திருந்து காத்திருந்து பேசி பழகியவளை பிரிய நேரிட்டதை எவ்வித அழுகையோ புலம்பல்களோ இல்லாமல் கச்சிதமாக அந்த ரணத்தை சாதாரணமான வரிகளைக்கொண்டு அசாராதாணமாக சொல்லிவிடும் கவிதையில் அப்பிரிவின் வேதனையோடு வியப்பாகவும் இருந்தது இவ்வரிகளை வாசிக்கும்பொழுது.

“அவள் கடைசியாய் தொலைபேசியபோது
எங்களிருவரிடமும் சொந்தமாய் தொலைபேசி இருந்தது”

மனம் அடையும் முதிர்ச்சியும் மாற்றமும் தான் எத்தனை விசித்திரமானது. துக்கத்தையும் ஆனந்தத்தையும் சுழற்சிமுறையில் சுகிக்கும் வினோதங்களை நம்முள்ளேயே நிகழ்த்திக்காட்டி நம்மை வியக்கவைக்குமல்லவா காலம். பிரிவுத்துயரின் ஆற்றாமையால் வாடும் பிம்பங்களின் ரணங்களை சொல்லாமல் சொன்னவர் இதோ இக்கவிதையில் பிரிவும் ஆனந்தமென்கின்றார்.

"துளை வழி வந்த
உன் குரலின் வெம்மைகளை
எனதறை முழுக்க
நிரப்பித் தூங்கிப்போகிறேன்
நினைவுகளை வாரியணைத்தபடி
நீ தூங்குவதாய் சொல்கிறாய்
எவர் சொன்னது
பிரிவு
வலிகள் மிகுந்ததென?"
பற்றோ அல்லது ஈர்ப்போ எந்த ஒன்றிலும் முழுமையாக ஈடுபடச்செய்கின்றது. இதுதான் இதைநோக்கித்தான் இப்படி முடிவடையுமென்றுதான் என்ற எதோ ஒரு நம்பிக்கையில் தொடர்வது பல காரணங்களால் தடைப்படக்கூடும். அப்படி தானாக தடைப்படும் சந்தர்ப்பங்களில் எப்படியோ மனது சமாதானம் அடைந்துக்கொண்டு மாற்று வழிகளை கண்டடைந்து விடுகின்றது. ஆனால் நாமாக முடிவு செய்ய வேண்டிய தருணங்களில் தொடர்ந்துக்கொண்டிருப்பதை துண்டிப்பதா அல்லது தொடர்வதா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. வெகு தொலைவு நகர்ந்துவிட்ட பின்பு அதை துண்டித்துக்கொள்ள மனம் என்றுமே விழைவதில்லை. அதற்கான காரணங்கள் பலவாக இருந்துவிடுகின்றன அவற்றில் ஒரு காரணத்தை விளக்குவதாக இவ்வரிகள்

“இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்”
இதைப்போலவே பறவை என்ற படிமத்தைக்கொண்டு அழகாக வடிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கவிதை வரிகளில் எதேதோ எண்ணங்களிலும் கனவுகளிலும் கடந்து வந்த நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்க கையிலிருக்கும் காலம் விலக்கிக்கொண்டிருப்பதாக சொல்கின்றார்.

“உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி”
மென்மையானவர்கள் எல்லோருக்கும் காதல் அனுபவம் வாய்த்து விடுகின்றதா அல்லது காதலிப்பதால் மென்மையானவர்களாக மாற்றப்பட்டுவிடுகின்றார்களா என்று தோன்றுமளவுக்கு இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் மென்மையானவை. அடைமழைப்போல் பொழியாமல் மெல்லிய சாரலாக வருடுபவை. உள்ளம் பூரித்து பரவசிக்கும் நிலையில் உருகி உதிர்க்கும் வார்த்தைகளாகவே பட்டது இவ்வரிகளை வாசிக்கும் பொழுது

“அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென”
இவ்வளவு மென்மையை தன்னுள் தேக்கிக்கொண்டவரால் மட்டுமே இப்படியும் தீ கக்க முடியும் என்று உணர்த்தியது “கண்களுக்கெதிரில் நுரையின் பின் விரிந்திருக்கிறது எல்லைகளற்ற நீலம்” என்ற வரிகளை கொண்ட சிறப்பான கவிதை. தன் கவிதைகளில் நெகிழ்வை கொண்டுவருவதற்காக மெனக்கெட வைத்த முயற்சிகளை சொல்வதாக அமைந்த கவிதையும் சிறப்பு. அதில் “இப்போதெல்லாம் உங்களால் நெகிழ்வை உணரமுடிகிறதல்லவா என் கவிதைகளில்?” என்ற வரிகளை வாசிக்கும்போது ஆமென்று புன்னகையோடு பூரணமாய் ஒப்புக்கொள்ளமுடிகின்றது.

மென்தொடுகைக்கும் இறுக அணைத்தலுக்கும், நெற்றி முகர்தலுக்கும் இதழ் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகளான நானிலும் நுழையும் வெளிச்சமும் தனிமையின் இசையும். இதிலுள்ள கவிதைகள் எல்லாம் நேசத்தை மென்மையாக மிதமாகச்சொல்பவை. எந்த திருகலும் இசங்களும் உள்நுழையவிடாமல் எதார்த்தமாய் நிகழம் உள்ள வெளிப்பாடாக தன் மனவோட்டத்தை பதிவித்திருக்கிறார். அடர்த்தியாக கட்டிய பூமாலைக்களுக்கிடையில் இது போன்று மணம்வீசும் உதிரிப்பூக்களும் தேவையாகத்தானிருக்கின்றன.

‘நானிலும் நுழையும் வெளிச்சம்’ என்ற இக்கவிதை தொகுப்புடன் ‘உரையாடலினி (சிறுகதை)’, ‘தனிமையின் இசை (கவிதைகள்)’, என்ற புத்தகங்களை வெளிகொண்டுவரும் அய்யனார் இலக்கிய பரப்பில் மேலும் பல அடர்த்தியான படைப்புகளை கொண்டுவரவும், விரைவில் தன் முதல் நாவலை எழுதி முடித்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.

நதியலை
20 நவம்பர் 2009

Monday, December 28, 2009

கலைந்து பரவும் காதலும் காமமும் - அய்யனாரின் சிறுகதைகள் - ஜமாலன்

அய்யனாரை எனக்கு பதிவுகள் வழியாக மட்டுமே தெரியும். பதிவுகளில் எழுதத் துவங்கிய காலத்தில் அய்யனார் பதிவுலக பிரபலங்களில் ஒருவராக இருந்தார். இன்றும்கூட தமிழ் பதிவுலகில் அய்யனாருக்கு என்று ஒரு வாசக தளம் உள்ளது. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது வளைகுடாவில் வசிக்கும் இலக்கிய எழுத்துலக அனாதைகள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதிலும் அய்யனாருக்கு வாய்த்த அமீரகத்தின் சுதந்திரங்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்பவன் நான். புத்தக கடைகள் இல்லாத, திரை அரங்குகள் இல்லாத, பார்-கள், பஃப்-புகள் இல்லாத ஏன் முகந்தெரிய பெண் நடமாட்டம் இல்லாத பிரேமின் “புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்” நாவலில் வரும் வறண்ட “இருள்நகர்“தான் நான் வசிக்கும் நாடு. சங்கத் தமிழகத்தின் திணை திரிந்த பாலையைப்போல இணை திரிந்த பாலையிது. அந்தவகையில் அய்யனாரின் உலகம் இளைப்பாறலுக்கான ஓடைகளும், சோலைகளும் நிறைந்தது, ஈரம் படர்ந்தது, விசாலமானது, பரந்து விரிந்தது. இலக்கியமும், உணர்வுகளும் வறண்ட இந்த பாலையில் திடிரென என்னிடம் அவரது சிறுகதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி தரும்படி கேட்டபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. முன்னுரை, பின்னுரை போன்ற உரைகூறும் பழக்கம் இல்லை என்பதைவிட இலக்கிய வாசிப்பும், எழுத்தும் எனக்கு மிகவும் அரிதானவையும்கூட. அய்யனார் எழுத்து புரிவதில்லை என்கிற பதிவுலகில் உள்ள பெயரால், புரியாமல் எழுதும் என்னிடம் முன்னுரை கேட்க எண்ணியிருப்பார் போலும்.

அவரது 30 கதைகளை ஒரேசேர வாசித்தபோது, அவரது இலக்கிய வளர்ச்சியின் படிநிலைகளை புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லா இலக்கியவாதிகளைப் போலவே தமிழில் சிறுவர்கதை, படக்கதை எனத்துவங்கி கல்கி, சுஜாதா, பாலகுமாரன் என கற்பணாவாதத்தில் (ரொமாண்டிசத்தில்) வளர்ந்து, பாய்ச்சலாக தமிழில் பின்னைய-நவீன எழுத்து முயற்சிகளை இடைவிடாது செய்துவரும் பிரேம்-ரமேஷை வந்தடைந்திருக்கிறார். அய்யனாரின் எழுத்துலகம் என்பது இந்த இரண்டு கடைக்கோடி புள்ளிகளிலும் பேசுபொருளாகக் கொண்டிருப்பது பெண்கள், காதல், காமம் மற்றும் உடல்கள். விடலைப்பருவத்தின் அல்லது அய்யனாரின் வார்த்தைகளில் பதின்மப் பருவக்காதலின் ஏக்கம் தொனிக்கும் கதைகளாகத் துவங்கி, காதல், பிரிவு, துயரம் என்று விகசிக்கும் அந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக காமத்திற்கு தாவி இறுதியில் உடலின் இருத்தலியல் வாதைகளில் முடிவதாக உள்ளன. கதைகளில் வரும் மீராவும், சாராவும் இந்த இரண்டு நிலைகளின் பெண் சித்தரிப்புகளாக உள்ளன. மீரா பாலகுமாரனின் முதிர்-பெண்களை நினைவூட்டுபவள்.

முதல் சிறுகதை தொகுப்பு என்றவகையில் அய்யனாரின் இக்கதை முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. இக்கதைத் தொகுதியில் முதல் 9 கதைகள் சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்து நடைகளைக் கொண்ட கதையாடலாக எழுதப்பட்டிருந்தாலும், அதன் கரு அல்லது கதையின் பேசுபொருள் காதல் மற்றும் பதின்மப் பருவ காதல் முனுமுனுப்புகள் எனலாம். “சாமியார் செத்துப்போனார்” (கதைசொல்லியும் சாமியாரும் இரட்டைகளைப்போல இறுதி வாக்கியங்களில் ஏற்படுத்தும் தடுமாற்றம் கதையினை அடுத்த தளத்தில் நகர்த்திச் செல்கிறது. கதையே சாமியாரின் குறிப்பேட்டின பக்கங்களாக மாறிவிடுகிறது இறுதியில்.) மற்றும் ”சந்தோஷின் கிளி” தவிர மற்றவை காதலை மையமாகக் கொண்டவையே. இவைகள் பெரும்பாலானவர்களின் பதின்மப் பருவ அனுபவங்கள் என்றாலும் அய்யனார் அவற்றை தனக்கென வாய்த்த நேர்ப்பேச்சு தன்மையிலான ஒரு மொழிநடையில் செய்துள்ளார். வழக்கமான வர்ணனைகள் தத்துவ உரையாடல்கள் மூலம் வாசகனுக்கு புதிய உலகையும் தனது தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்துவிடும் அளப்பரைகள் போன்ற தமிழின் பெரும் கதாசிரியர்களின் பழகிய பாணிகளைக் கைக்கொள்ளாமல் நேர்ப்பேச்சில் எழுதிச் செல்வது ஆசுவாசமானது. அதனால் வாசிப்பு எளிமையாக உள்ளது. பேச்சும் அனுக்கமாக உள்ளது. ரொமாண்டிசத்தை தாண்டிச் செல்லாத கதைகள் என்றபோதிலும், கதையாடலைவிட உரையாடலை (அதாவது பேச்சை) அதிகம் பயன்படுத்தும் ஒரு உத்தி இவருக்கு வாய்த்துள்ளது. எல்லாக் கதைகளிலும் கதாசிரியன் என்பவனின் தன்கூற்றாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. இது வாசிப்பிற்கு ஒரு இதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அல்லது தன்முனைப்பின் அறிக்கையிடலாகவோ அல்லது பகற்கனவின் ஒரு எடுத்துரைப்பாகவோ இவை வெளிப்பட்டுள்ளன.

பொதுவாக, இக்கதைகளின் உள்ளார்ந்துள்ள நுட்பம் என்பது இருத்தலியல் வாதை என்பதாக கதாசிரியன் செய்துகொண்டுள்ள கற்பிதம் எனலாம். இக்கற்பிதத்தின் விளைவாகவே, ஆசரியனின் தன்னடையாளக் கதைகளாக இவை வெளிப்பட்டுள்ளது. ரொம்பவும் ஆசுவாசமான விசயம் இக்கதைகளில் தமிழ்ச் சினிமா தந்துள்ள செண்டிமெண்ட என்கிற “உணர்வெழுச்சிகள்“ இல்லை. தனது கதைக்கூறுகளின் எழுத்துருக்களாக படைக்கப்பட்ட பாத்திரங்கள் பற்றி தனது மதிப்பீடுகளை முன்வைப்பதில்லை. 10 வது கதை துவங்கி பின்வரும் கதைகள் சிலவற்றில் பிரேம்-ரமேஷின் பாதிப்பு இருப்பதையும், அப்படி இருப்பதை வாக்குமூலமாகவும் சொல்லிச் செல்கிறது ஒரு கதை. இந்த கடைசி 20 கதைகளில் அய்யனார் பின-நவீனத்துவக் கதைக்கூறலுக்கான முயற்சியில் இறங்கியிருப்பதை வாசிக்க முடிகிறது. துவக்கம் என்றவகையில் இது வரவேற்கத்தக்கது என்றாலும், இவற்றிலும் காதல், காமம் என்கிற எதிர்வுகளுக்கிடையிலேயே கதையாடல் நகர்த்தப்படுகிறது.

இக்கதைகளில் அய்யனாரின் வாசிப்பனுபவம் மற்றும் அரசியல் நுட்பங்களை அறியமுடியும். குறிப்பாக ”பதினான்காம் நகரம்” கதையில் வரும் மதங்களுக்கு எதிரான கதையாடல் மற்றும் ”மூங்கில்பூ” கதையில் வரும் கடவுளரின் உருவகங்கள் முக்கியமானவை. இக்கதைகளில் அய்யனாரின் இலக்கிய வளர்ச்சிக்கான தடத்தை உணர முடிகிறது. இக்கதையாடல்களில் சித்தரிக்கப்படும் சங்கமித்ரா, வீணா, தீவிலிருந்து வந்தப் பெண், உரையாடலினி, கரிபியன் கபேஃவின் கருப்புப் பெண், இரவு முழுக்க டிண்டோ பிராஸ் துவங்கி பலவற்றைப் பேசும் தோழியான பெண், ஆணுடலிலிருந்து அப்புறமாகி பெண் உடலிலும் அப்புறமாகி சாலை நடுவில் அழும் இறகு முளைத்த சாரா - என தமிழ்ச்சமூகத்தில் உள்ளே அழுத்தப்பட்டு மீறிக்கிளம்பும் பெண்கள் அல்ல இவர்கள், இயல்பாக காமத்தையும் தோழமையும் ஏற்கும் பெண்களாக உள்ளனர். இயல்பு மற்றும் இயற்கை இவற்றுடனான ஆசிரியனின் பற்றுருதி ஒரு காரணமாக இருக்கலாம். மனித உடலும், விலங்கின் சுதந்திரத்தை தரும் இறகும், வாலும் என இறகு முளைத்த மீன்-கன்னி என எண்ணத் தோன்றும் சாரா ஒரு தொன்மப் பாத்திரமாக வெளிப்பட்டு பெண்-காமத்தின் உச்சமாக மாறுவதாக ஒடுக்கப்பட்ட உடலின் மீட்பாக எழுதப்பட்டுள்ளது அக்கதை. நிர்வானம், போதை, தியானம், எழுத்து, காமம் என தனது இருத்தலின் வாதையை பதிலீடு செய்ய தவிப்பதாக பெரும்பாலான கதையாடல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. காதல் என்கிற முதற்பகுதி கதைகளைவிட காமத்தைப் பேசும் இந்த இரண்டாவது பகுதி கதைகள் பல அவதானங்களைத் தரக்கூடியவை. சுயஇன்பம், லெஸ்பியானிஸம் துவங்கி பெண் உடலின் காமம் பற்றிய விஷயங்கள் இக்கதைகளில் பேசப்படுகின்றன.

90-களுக்குப்பிறகான தமிழ்ச் சமூகத்தில் உடலைப் பேசுதல் என்கிற ஒரு இலக்கிய வகைமை முதன்மைப் பெற்றது. கெட்டது, அசிங்கம், பொது இடத்தில் பேசக்கூடாதவை என்கிற சமூகத் தணிக்கைக்கு உட்பட்ட பல விடயங்கள் இன்று இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்தாக மாறி உள்ளன. அத்தகைய எழுத்துக்கள் வழி உடலையும், காமத்தையும் முதன்மைப்படுத்தும் பாலியல் அரசியல் மற்றும் உடலரசியல் போன்றவை இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. எல்லாமே உடல் குறித்தனவே, உடலுக்கு அப்பால் எதுவும் இல்லை எனத்துவங்கும் இவைகள் தமிழ்ச் சமூகத்தின் காமத்தை முன்னுக்கு கொண்டு வந்து அலசி ஆராய்ந்து கொண்டுள்ளன. அவற்றின் விளைவாக இன்றைக்கான இலக்கிய படைப்புகளான கவிதை, நாவல், கதைகள் எல்லாம் காமத்தை ஒரு முக்கியப் பேசுப்பொருளாக கொண்டுள்ளன. கதைகள் மற்றும் இலக்கிய வாசிப்பின் வழியாக முன்னுக்கு வந்த இந்த அரசியல்கள், இன்று கதைகள் மற்றும் வாசிப்புகளை கட்டமைப்பதாக மாறியுள்ளன. ஆக, காமம் என்பதை உள்ளடக்கியோ விலக்கியோ இந்தவகை எழுத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

பெண்ணின் காமத்தை ஒரு ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் முக்கியமானவை. பெண்ணின் காமத்தை பெண்ணே எழுதுவதற்கான சூழலை உருவாக்க இத்தகைய கதைகளும், வாசிப்பும் முன்நகர்த்தப்பட வேண்டியது அவசியம். அத்தைகய ஒரு எழுத்து முயற்சியே அய்யனாரின் இச்சிறுகதைகள். இவற்றில் சில கதைகளாக, பேச்சாக, நிகழ்வுகளாக, கவிதையாக மற்றும் சக இலக்கிய உலக அறிவுஜீவிதத்தின் போலியாக, புல்லரிப்பாக, உடல்மீதான இச்சையாக, உடலை உள்ளடக்கிக் கொள்வதற்கான ஈர்ப்பாக வெளிப்படுகிறது. அத்தகைய ஒரு வெளிப்பாட்டிற்கான முயற்சியே இக்கதைகள். இவற்றை வாசிப்பதன்மூலம் எழுத்தின் ஒரு உடல்சார் தடத்தை பற்றிச் செல்வதற்கு வாசகர்களுக்கு ஒரு வாசலாக இருக்கும். இக்கதைகளை இங்கு விளக்கி விமர்சிப்பது திறந்த ஒரு வாசிப்பனுபவத்தை பாதிக்கும் என்பதால் இந்த அறிமுகக் குறிப்புகளோடு நிறுத்திவிட்டு இனி கதைகளை நீங்களே வாசிக்கத் துவங்கலாம்.

- அன்புடன்
ஜமாலன்
ஜெத்தா - சவுதி அரேபியா
07-12-2009

Saturday, December 26, 2009

தனிமை இசைத்த குறிப்புகள் சில…- தமிழ்நதி

அன்புள்ள அய்யனாருக்கு,

உனது கவிதைக்கு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தாய். பழகிய வடிவங்கள் முன்னுரையிலும் சலித்துவிட்டன. அதிலும், நண்பன் ஒருவனைப் படர்க்கையில் விளித்து எழுதுவதில் சிரமம் இருக்கிறது. நண்பன் மீதான அபிமானம் அவனது கவிதைகள் மீதான அபிமானமாகாது என்பதை நீயும் அறிவாய். எனினும்,

அவஸ்தைகள்
எதுவுமற்ற கவிஞன்
சூல்கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக் கொண்டு
அழிக்கிறான்…
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்.
என்ற உனது சொற்களை வாசித்த பிற்பாடு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. ‘சூல்கொண்ட மேகத்தைக் காற்று கலைப்பது’மழையின் பொருட்டே என நீ அறியமாட்டாயா?

எழுத்துள் நுழைய முயலும் வாசகனை-வாசகியை வழிமறித்துப் பேசி, முன்முடிவுகளுடன் உள்ளே அனுப்பிவைக்கிற செயலாக முன்னுரை எழுதுவதென்பது சிலசமயங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதை அறிமுகம் என்றும் நுழைவாயில் என்றும் சொல்கிறார்கள். அதிலும் கவிதையானது அதை எழுதுபவர்களுக்கு நெருக்கமானதும் அந்தரங்கமானதும்கூட. மனதின் நுண்ணிய வரிகளால் நெய்யப்பட்ட மெல்லிய பட்டுத்துகில் அது. அதை அனுபவிக்க மட்டுமே முடியும். முன்னுரை, விமர்சனம் என்ற பெயரில் அதை உதறி விரித்து உரசிப் பார்ப்பது கொஞ்சம் குற்றவுணர்வைத் தருகிறது.

உன் கவிதைகளை மனதொன்றி முழுவதும் வாசித்தேன். ஒரு வகைமைக்குள் மட்டும் சிக்கிவிடாமல் தனிமை, உறவுகளின் பிரிவு, பிழைப்பின் பொருட்டு நிலம் பிரிந்த துயரம், காதல், காமம், சுயவிசாரணை மற்றும் எள்ளல், கழிவிரக்கம், மாயத்துள் விழுத்தி மயக்கும் கற்பனாவுலகம், சமூகத்தின் போலித்தனங்கள் குறித்த கசப்பு, இயற்கை, நெகிழ்ந்து கரைதல், எழுத்தெனும் பிடிமானம் எனப் பரந்துபட்ட தளங்களில் உன் கவிதை உலவியிருப்பது பிடித்திருந்தது. உபரியாக வாசிக்கும்போது தென்படாத கவித்துவத்தை தொகுப்பாக வாசித்தபோது உணரமுடிந்தது. இல்லாவிட்டாலுமென்ன? முதல் தொகுப்பு பெறும் ‘மன்னிப்பு’க்கு நீயும் உரித்துடையவனே. இன்றைக்குத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நீயும் இணைந்துவிடும் ‘விபரீதத்தை’முன்மொழிவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. என்னை வழிமொழிந்து சொல்வது அவரவர் பாண்டித்தியத்தையும் விருப்புவெறுப்பையும் வட்ட-சதுரச் சார்பு நிலைகளையும் கவிதை குறித்த மனச்சித்திரங்கள் மற்றும் வகுத்திருக்கும் வரைவிலக்கணங்களைப் பொறுத்தது.

அவரவர்க்கான மொழியைக் கண்டடையும் அலைச்சல் பொதுவாக முதல் தொகுப்புகளில் துருத்தித் தெரியும். உன்னுடைய கவிதைகளில் ஏதோவோர் ஒருங்கிணைந்த மொழியமைவு கூடியிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நாம் படித்த கவிதைகள் நமக்குள்ளிருந்தபடி நாமறியாதபடி நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றனவோ என்று உன்னுடைய சில கவிதைகளை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். நீ சிலசமயங்களில் பிரேம்-ரமேஷ் ஐ, கல்யாண்ஜியை, கலாப்ரியாவை, ஏன் என்னைக்கூட (ஆற்றின் உட்பரப்பு – நதியின் ஆழத்தில்) நினைவுபடுத்துகிறாய்.
காதலெனும் சொல்லின் மீதேறி காமத்தளத்தில் சென்று இறங்கும்- ‘விழி மூடிப் பால் குடிக்கும்’ பாசாங்குப் பூனைகளைப் பற்றி எழுதியிருந்தாய்.

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும்
குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற
பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதன்
கிறங்குவதன்
மீதிருக்கும் வேட்கைகள்தான்
என்பது எனக்கும்
தெரியும்.
---
பசிகொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளரவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்றுதீர்க்கிறது
---
எல்லாக் காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப்
பார்ப்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆண்-பெண்களின்
ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை.
---

‘காதலின் மீது உனக்கேன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?’என்று நான் கேட்கப் போவதில்லை. ‘காதல் உலகத்தை ஒரு நொடியில் அழகாக்கிவிடுகிறது, மனிதர்களைக் கனியச்செய்கிறது’ என்று நான் சொன்னால் அதை நீ ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நான் கேட்பதெல்லாம், ‘காதல் என்பது காமத்தைச் சென்றடையும் வழியென’எத்தனை தடவைதான் எழுதுவாய் என்பது மட்டுமே. ‘கூறியது கூறல்’என்றுன்னைக் குற்றம் சொல்லப்போகிறார்கள்.

சாதாரண வழிசெல்லும் வார்த்தைகள் கடைசி வரியில் திடும்மெனக் கவிதையாகிவிடுவதை பல சமயங்களில் உணர்ந்தேன். ‘நேற்றுப் பெய்த மழை’என்ற கவிதையில் ‘நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்’என்று முடியும்போது உள்ளுக்குள் துயரமழையொன்று அடித்துப் பொழிய ஆரம்பித்தது. மழைக்கென ஐந்து கவிதைகளை தந்துவிட்டபோதிலும், பெரும்பாலான உன் கவிதைகளில் ஒரு வரியாவது மழையின் சில்லிப்பில் சிலிர்க்கத்தான் செய்கிறது.

பெண் ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல்,
விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாவற்றின் மீதும்
மது நுரை பொங்கப் படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.
என்ற வரிகளினூடாக, எல்லாவிதமான ஒப்பனைகளும் கலைந்து சுயம் வெளிப்படும் தருணம் மதுவருந்தியிருக்கிறபோதே சாத்தியம் என்பதைச் சொல்வதற்கு முற்றிலும் தகுதியானவன்தான் நீ.

‘மய்யம்’என்ற பகுதியுள் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் பலவற்றுள் மாயா யதார்த்தவாதம் என்ற சித்து விளையாட்டை வாசிக்க நேர்ந்தது. நீலிகளும் தேவதைகளும் சாத்தான்களும் கடவுளரும் வெகு சாதாரணமாக உலவும் - மூத்திரமும் குருதியும் ஸ்கலிதமும் அளவுக்கதிகமாக வழியும் - கவிதைகளை நான் அவசரமாகக் கடந்தேன். ஒரே சமயத்தில் அதியதார்த்தத்தினுள்ளும் அதிமாயத்தினுள்ளும் உலவுவது, உனக்கு மட்டுமே சாத்தியம் அய்யனார். வகைதொகையில்லா சில உரையாடல்கள், உண்மைகளைப் பேசுதல், கண்டறிதல் மற்றும் எழுதுதல், மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை போன்ற பின்னவீனத்துவ நினைவுபடுத்தல்களுடன் கூடிய தலைப்புகளுடனும் வழக்கம்போல ஒரு ஒவ்வாமையை உணர்ந்தேன்.

ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக் கொடுத்தாள்
“ஏன்?”என்றதற்கு
முனகலாய்ப் பதில் வந்தது
“அசிங்கமாய் இருக்கு”
எது அசிங்கமென்றதற்குப் பதில் எதுவும்
சொல்லாமல் போய்விட்டாள்
நான் பாலகுமாரனைக் கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்
என்று சராசரிப் பெண்களின் வாசிப்பு ரசனையைச் சாடியிருந்தாய். ஆண் அறிவுஜீவி என்னும் மிதப்பு அதிலிருந்ததைக் கவனித்தேன். பாலகுமாரனை வாசிக்கும் பெண்கள் எல்லாம் இழுத்தவுடன் வந்து நெஞ்சில் விழுந்து முத்தம் கொடுக்குமளவிற்குக் கவிழ்ந்துபோகக்கூடியவர்களா என்ற எண்ணமும் எனக்குள் வந்துபோனது. மறுவளமாக, கோபியைப் படிக்கிறவர்கள் உறுதியானவர்கள்! ம்! சிலசமயங்களில் நம்மையறியாமலே நமது கசடுகளை வெளியில் கொட்டிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?

உண்மையைச் சொன்னால், உனது தொகுப்பை நான் கொஞ்சம் அசிரத்தையாகவே வாசிக்க ஆரம்பித்தேன். இணையத்தில் கொட்டிக்கிடக்கிற கவிதைகள் தந்த மிரட்சி அந்த அசிரத்தையைத் தந்திருக்கலாம். ஆனால், தேறக்கூடிய (எனது அளவுகோலில்) சில கவிதைகளை நீ எழுதியிருப்பதாக வாசித்து முடித்ததும் உணர்ந்தேன். ‘நாள்தோறும் நிறம் மாறும் தேவி’என்ற கவிதையில் கணந்தோறும் தளும்பும் பெண்மனதையும் அவளது மிகமெதுவான தந்திர விலகலையும் அழகாகச் சொல்லியிருந்தாய்.

‘வெறுமை கசப்பு வெறுப்பு மற்றும் தனிமை’, ‘பொதுப்படுத்தி மகிழ்தல்’ போன்ற ‘வெறும்’கவிதைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முன்மாதிரிகளின்
பிரமாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும் எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்
இருப்பினும்…
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?
முன்மாதிரிகளின் பிரமாண்டங்களைக் கண்டு நீ மிரட்சியடைய வேண்டியதில்லை. மேலும், பிரமாண்டம் என்பதன் வரையறைதான் என்ன? எழுதும்போது நீ உன்னளவில் உள்மனதுள் பூக்கிறாய். எழுது… எழுது… அதுவொன்றே நமக்குப் போதும்.

நட்புடன்
தமிழ்நதி
01-10-2009

Friday, December 25, 2009

வம்சி வெளியீடுகள் - 2010



இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு வம்சி புக்ஸ் நாற்பது புத்தகங்களைக் கொண்டுவருகிறது. நூல் விவரங்கள்..

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
2. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
3. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

Tuesday, December 22, 2009

தனிமையின் இசை - என்னுரை

கடந்த மூன்று வருடங்களாய் என் வலைப்பூவில் எழுதப்பட்ட கவிதை வடிவ மாதிரிகளின் தொகுப்புதாம் இவை. எழுதப்பட்ட தருணங்களில் இவை அச்சிற்கானவை என்கிற தயாரித்தல்கள் எனக்கில்லாமல் இருந்தன. சுய புலம்பல்களாகவும், மிகவும் தன் வயமான உலகின் வெளிப்பாடாகவும், இருத்தலின் ஆசுவாசமாகவும் இவ்வடிவங்கள் என்னிலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கலாம். எழுதப்படும் வரையிலிருந்து எழுதப்பட்ட பின்பு வரை அதே வார்த்தைகள் தரும் உணர்வு வெவ்வேறாய் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெருமித மகிழ்வுணர்வைத் தரும் இதே வார்த்தைக் கோர்வைகள் பின்பொரு நாளில் ஏளனத்தையும் சலிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.

இக்கவிதைகளில் மிகப் பிரதானமாய் இருப்பது நான் தான். என்னிலிருந்து என்னைக் கண்டறிவதே மிகக் கடினமாய் இருக்கிறதெனக்கு. மற்றவர், மற்றது இவைகளின் மீதெல்லாம் எனக்குப் பெரிதாய் அக்கறையோ வருத்தமோ இல்லாமலிருந்திருக்கிறது என்பதை இத் தொகுப்புகள் அறியத் தருகின்றன. போலித்தனம் குறைவான நார்சிச மனம் என்கிற சுய மதிப்பீடுகள்தாம் தொடர்ந்து இயங்க குறைந்த பட்சக் காரணமாய் இருக்கிறது. இதற்கானதென்று அறியாத என் புற அலைவுகளில் கிடைத்த ஏமாற்றமும் அந்நிய வாழ்நிலங்கள் தந்த அயற்சியும் அக அலைவுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. புறம் அகம் இரண்டையும் ஒரே கோட்டில் சமன் செய்வதுதான் இக்கவிதைகளின் உயர்ந்த பட்ச சாத்தியமாக இருக்கிறது.

பிறழ்ந்த மனதின் பல்வேறு இடுக்குகளிலிருந்து வெளியேறும் வார்த்தை பூதங்கள் வெளித்துப்பும் கோர்வைகள் மயக்கத்தையும் பயத்தையும் இரு தரப்பிலும் உண்டாக்குகின்றன. எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வார்த்தைகளில் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகள் கவிதை வடிவத்தின் மீதான காதலை வலுவூட்டுகின்றன.

அலைந்து திரிந்து பிறழ்ந்து தற்போது மய்யமாகிப் போன விளிம்பு மனதின் அந்தந்த நிலைப்பாடுகள் இவைகள் என்பதைத் தவிர்த்து இக்கவிதைகள் குறித்து எழுதியவனாய் சொல்ல வேரெதுவுமில்லை. இதுவே மிகையாகவும் இருக்கலாம். மற்றபடி எவரும் பேசாததையோ எவராலும் சொல்லிவிட முடியாததையோ நான் பேசிவிட மெனக்கெடவில்லை. என் வாழ்வு எனக்குத் தந்ததை வன்மமாகவும், குரூரமாகவும், இரகசியக் கிசுகிசுப்பாகவும் உங்களிடம் கடத்த முயன்றிருக்கிறேன். அந்தந்த உணர்வுகளை அந்தந்த மாதிரியே இவைகள் உங்களுக்குள் கடத்தியிருந்தால் அதுவே இதற்கான நிறைவாய் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனாலும் அஃது எவரின் குறைபாடுமில்லை.

வலைப்பூ வாசகர்களுக்கு, இணைய நண்பர்களுக்கு, சக வலைப்பதிவர்களுக்கு, வலைப்பூத் திரட்டிகளுக்கு என் முதல் நன்றியும் அன்பும். எனக்கான ஆசுவாசத்தை, நிறைவை அல்லது அதைப் போன்ற ஒன்றை இக்காலகட்டங்களில் எனக்குக் கிடைக்க இவ்விணைய வெளி உதவியாய் இருந்திருக்கிறது. எப்போதும் விழிப்பாய் இருந்த எழுத்துச் சோம்பலனை சக வலைப்பூக்களும் பதிவர்களும் எழுந்து சோம்பல் முறிக்க உதவியிருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளற்ற அன்பை எல்லா விதங்களிலும் எனக்குத் தந்துகொண்டிருக்கும் பவாவும் ஷைலஜாவும் இப்புத்தத்தின் மூலமாய் இவ்வுலகில் பிரவேசிக்க வைத்திருக்கிறார்கள். என்னுள் புதிய நம்பிக்கைகளை, துளிர்ப்புகளை மலரச் செய்திருக்கும் இவர்கள் என் வாழ்வில் அபூர்வமானவர்கள்.

நூறு பக்கங்களுக்கு மேல் விரல்கள் நோகத் தட்டச்சி, நேர்த்தியான முகப்பு அட்டையை மிகுந்த சிரத்தையுடன் உண்டாக்கி இவ் உள்ளடக்கத்தில் குறைந்திருக்கும் அழகியலை புத்தக வடிவத்தின் மூலமாய் கூட்டிய வம்சி நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

வலையெழுத வந்ததிலிருந்து இன்று வரை என்னை வாசித்தும், விமர்சித்தும் சகித்தும் கொண்டிருக்கும் தமிழ்நதிக்கு என்னுடைய அன்பு.

நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யனார்
துபாய்
30 நவம்பர் 2009

Monday, December 21, 2009

மூன்று புத்தகங்கள் : என் முப்பரிமாண உலகம்


இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்கிற தலைப்புகளில் வர இருக்கின்றன. வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நேற்று வரை இங்கு எழுதப்படுபவைகள் புத்தகங்களுக்கான தயாரிப்புகள் அல்ல என்பதுதான் என் நம்பிக்கையாக இருந்து வந்தது. பவா மற்றும் ஷைலஜாவின் மிகுதியான அன்பே இப்புத்தகங்களுக்கான பிரதான காரணமாகும். இந்த மூன்று புத்தகங்களும் நண்பர்களின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிவிட்டுத்தான் நேர்த்தியாய் வெளிவருகின்றன.பவா அய்ந்து புத்தகங்களை கொண்டுவர விரும்பினார் என் சோம்பலும் பயமுமே அய்ந்தை மூன்றாக்கியது. இதுவரைக்கும் எழுதப்பட்ட கவிதைகளை கதைகளை தொகுத்ததில் நதியலையின் பங்கு மிக முக்கியமானது. தொகுக்கப்பட்டவற்றை புத்தக வடிவமைப்பினுக்கு மாற்ற முடியாமல் போனது யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டு வர நண்பர்கள் சகிதமாய் தலைகீழாய் நின்றும் முடியவில்லை. வம்சி நண்பர்கள் இம்மூன்று தொகுப்பையும் விரல்கள் நோக மீண்டும் தட்டச்சியிருக்கின்றனர். இறுதி கட்டத்தில் கதிர் தன் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டுவந்திருக்கிறான். புகைப்படக் கலைஞர் பினு பாஸ்கர் புத்தக அட்டைகளை வடிவமைத்ததுத் தந்ததுடன் என் புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தார். தனிமையின் இசைக்கு தமிழ்நதியும் நானிலும் நுழையும் வெளிச்சத்திற்கு நதியலையும் உரையாடலினிக்கு ஜமாலனும் தங்களது பகிர்வுகளைத் தந்திருக்கின்றனர்.

இத்தனை பேரின் நேரமும் ஆற்றலும் என் தனியொருவனின் தம்பட்டங்களுக்காக வீணாகி இருப்பதை நினைக்கும்போது லேசாய் குற்ற உணர்வு எழுகிறது. புதியதொரு வாசகனை இப்புத்தகங்கள் கண்டடைய வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை முயற்சியும் என்பது சற்று ஆறுதலானதுதான். ஆனால் புதிய வாசகனுக்கு/வாசகிக்கு புதிய கிளர்ச்சிகளை என் பழைய உணர்வுகள் தந்துவிடமுடியுமா என்கிற சந்தேகங்கள் இருந்தன. அது நேற்று இரவு சற்றுக் குறைந்தது. க.சீ.சிவக்குமார் தன் பக்கத்தில் என் இரண்டு தொகுப்புகளை படித்து முடித்ததும் என் அருகாமையை விரும்பியதாக குறிப்பிட்டிருந்தார். என் தொகுப்புகள் குறித்தான லேசான நிம்மதியை அக்குறிப்புகள் வரவழைத்தன. அவருக்கு என் நன்றி. மற்றபடி என்னைத் தொடர்ந்து நகர்த்தும் விசை நண்பர்களின் அன்பாக இருந்து வருகிறது.

இங்கு கொட்டப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பின்னாலிருக்கும் பெண்களை, காதலிகளை, ஸ்நேகிதிகளை, நண்பர்களை, துரோகிகளை, எதிரிகளை, அலைக் கழித்த வாழ்வை, அள்ளிக் கொடுத்த வாழ்வை மிக நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

Thursday, December 17, 2009

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா

அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகள்:

ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

Tuesday, December 15, 2009

அழுகை

பெருமழையின் சப்தங்களைப்
போலிருந்ததாய் சொன்னாள்
விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி
என முறுவலித்தாள்
பாறைப் பிளவிலிருந்து கசிந்த நதி
எனச் சொல்லிச் சிரித்தாள்
….
எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை
அவளின் பெருங்கருணை முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தேன்.

Monday, December 7, 2009

ஒரு புகைப்படக் கலைஞனும் பூனைகளால் நிறைந்த வீடும்

திருவண்ணாமலையில் பவா வுடன் ஓவியர் காயத்ரியின் ஸ்டூடியோவில் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்க்க நேர்ந்தது. ஓவியமா ஒளிப்படமா என குழம்ப வைக்கும் அளவிற்கு ஒளியுடன் விளையாடியிருந்த அப் புகைப்படங்களை எடுத்தவர் யார் எனக் கேட்கையில் பவா பினு பாஸ்கரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பினு பாஸ்கர் மிக நேர்த்தியான புகைப்படக் கலைஞன். சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் வாழப் பழகியவன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவன். என்றெல்லாம் பவா சில உதாரணங்களோடு சொல்ல ஆரம்பித்ததும் பினுவை எனக்குப் பிடித்துப் போனது. பினு கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தற்போது தோஹாவில் வசிக்கிறார் என்றதும் விரைவில் பார்த்து விடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசுகையில் பினு துபாய் வருவதாகத் தெரிவித்தார். ஒரு பிற்பகலில் ballentine சகிதமாய் அவர் தங்கியிருந்த கடற்கரையோர வில்லா ஒன்றினுள் நுழைந்தேன். இரண்டு நவீன அழுக்கான ஹார்லி டேவிட்சன்கள், அதைச் சுற்றிச் சிதறிக் கிடந்த பேட்டரிகள், தட்டு முட்டு இரும்பு சாமான்கள், வண்ணம் உலர்ந்து உதிர்ந்த பெயிண்ட் காலி டப்பாக்கள் என எல்லாம் சேர்ந்து வில்லாவின் முகப்பில் என்னை வரவேற்றன. உள்நுழைந்தால் வரவேற்பரை முழுக்க இசைக் கருவிகள். கிதார்கள், மிகப் பெரிய ட்ரம்ஸ், கீபோர்ட் இன்னும் பல வகை தந்திக் கருவிகள் (ஸ்பானிய கிதாராக இருக்கலாம்) இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்தன. இரண்டு பிரெஞ்சு நபர்கள் மேல் சட்டை இல்லாமல் கணினி முன் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் கைக்குலுக்கி உள் நுழைந்தால் கூடம். நடுக்கூடத்தில் ஒரு சலவை யந்திரம். அதைச் சுற்றி அழுக்குத் துணிகள். அதையும் கடந்தால் ஒரு சமயலறை. அதன் நடுவில் ஒரு பெரிய மகாகனி உணவு மேசை. அதன் மீது மடிக் கணினியை வைத்தபடி ஜூலியா அவரின் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார். ஜூலியா பினுவின் ஸ்பானியத் தோழி. திருவண்ணாமலையில் சிறிது காலம் வசித்திருந்திருக்கிறார். பவா மற்றும் காயத்ரியின் நலன் விசாரித்துவிட்டு பின் இணைந்து கொள்வதாக விடைபெற்றார்.

சமயலறையிலிருந்து வீட்டின் தோட்டம் துவங்குகிறது. சில மரங்கள் நடப்பட்டிருந்தன. புற்கள் வளர்க்கப்பட்டிருந்தன. வில்லாவைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம். அங்கங்கே சிகெரெட் துண்டுகள் நிரம்பி வழியும் சாம்பல் கிண்ணங்கள். உடைந்த, நெளிந்த, தூசுபடிந்த இருக்கைகள். இவற்றோடு சுலபத்தில் எண்ணிவிட முடியாத எண்ணிக்கையில் பூனைகள். அந்த வில்லாவின் முகப்பு இரும்பு கேட்டிலிருந்து தோட்டத்துப் புற்செடிவரை எங்கும் நீக்கமற பூனைகள் நிறைந்திருந்தன. சின்னஞ்சிறு குட்டியிலிருந்து முதிர்ந்த பூனை வரை பல்வேறு வடிவில் பூனைகள் அவ்வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தன. பூனைகளுக்கான உணவு அங்கங்கே தட்டுக்களில் சிதறிக் கிடந்தது. அதுதவிர்த்து சமயலறை மேசையின் மீது யாராவது உணவருந்தும்போது அவரை குட்டிப் பூனைகள் மொய்க்கத் துவங்கிவிடும். ஜூலியா மேசையின் மீது உணவருந்திக் கொண்டிருந்தபோது சுமார் பத்து பூனைக்குட்டிகள் அவரின் மீதும் மேசையின் மீதும் ஒன்றன் பின் ஒன்றாய் ஏறியபடி உணவுத் தட்டினை நெருங்கின. ஜூலியா சிறிதும் சப்தமெழுப்பாது, சலிக்காது ஒரு கையினால் உணவருந்தியபடி இன்னொரு கையினால் மேசையிலிருந்து ஒவ்வொரு பூனைக்குட்டியையும் இலகுவாய் கீழிறக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியை சற்றுத் தொலைவில் அமர்ந்தபடி நானும் பினுவும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வசிப்பிடங்களில் சுதந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. சுத்தமான ஒழுங்கான வீடுகளைக் காட்டிலும் சுதந்திரத் தன்மையை இயல்பாய் கொண்டிருக்கும் இவ்வீடு உண்மையான கலைஞர்களுக்கானது. இந்த வீட்டின் உரிமையாளர் தேர்ந்த இசைக் கலைஞர். உலகின் பல பாகங்களிலிருந்து வரும் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என எல்லாரின் தங்குமிடமும் இதுவாய் இருக்கிறது. பினுவால் இம்மாதிரியான இடங்களில் மட்டுமே தங்க முடிவதாய் சொன்னார். இம்மாதிரியான சூழல் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வதற்கு உகந்ததாய் இருக்கிறது என்றார்.

பிற்பகலுக்கு சற்று முன்னர்தான் பினு விழித்திருக்கிறார். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தூங்காது நேற்று முழுக்கத் தூங்கியதாய் சொன்னார். இருவரும் கிளம்பி மெக்டொனால்டில் அமர்ந்தோம். பினு இதுநாள் வரைக்குமான தன் கதைகளை, பயணங்களை, வாழ்வை என்னிடம் சொல்லத் துவங்கினார்.

பட்டப் படிப்பிற்கு பிறகு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென்று மிகவும் யோசித்துப் பின்பு திரைப்படம்தான் தனக்கான துறையெனத் தீர்மானித்து அடையாறு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பித்திருக்கிறார். காலியாகவிருக்கும் எட்டு இடங்களில் ஒரு இடம் மட்டுமே மற்ற மாநிலத்தினருக்கானது. அந்த இடத்தினுக்கான நேர்முகத் தேர்வு மிகக் கடினமாக இருக்கும் என்பதினால் பினு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நேர்முகத் தேர்வை திருப்தியாக செய்தும் ஜூரிகளின் பாராட்டு பெற்றும் அந்த இடம் ஆந்திரா தயாரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு சென்றுவிட்டிருக்கிறது. வெறுத்துப் போன பினு தன் பயணத்தை துவங்கியிருக்கிறார். ஒரு வருடம் முழுக்க வீட்டைத் துறந்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து அவர் வீட்டுக்குத் தொலைபேசுகையில் பினுவின் அச்சன் ஆஸ்திரேலியாவிலிருக்கும் புகைப்படக் கல்லூரியில் சேரச் சொல்லி பினுவிற்கு அழைப்பு வந்திருக்கும் தகவலை சொல்லியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் படிப்பு வேலையென பத்து வருடங்கள் வாழ்ந்துவிட்டு துபாய் வந்திருக்கிறார். சாச்சி & சாச்சி என்ற விளம்பர நிறுவனத்தின் முதன்மை புகைப்படக்காரராய் வேலை பார்த்திருக்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பு துபாயை விட்டுப் போன அந்த நாளை மிகவும் வேடிக்கையும் குதூகலமுமான குரலில் பினு விவரித்தார். தான் பார்த்து வந்த வேலை சலிப்பை ஏற்படுத்தவே ஒரு நாள் இங்கிருந்து ஓடிவிடத் தீர்மானித்திருக்கிறார். தன் நண்பன் ஒருவனை காரில் ஏற்றிக் கொண்டு விமான நிலையம் வந்திருக்கிறார் கார் சாவியை நண்பனிடம் கொடுத்துவிட்டு விமானம் ஏறிப் போய்விட்டிருக்கிறார். மிக அதிக வருமானம், வீடு, கார், நண்பர்கள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுச் செல்லும் துணிச்சல் வெகு சொற்பமானவர்களுக்குத்தான் வருகிறது. இப்போது மீண்டும் விளம்பரத் துறையின் மீது பினுவிற்கு ஆர்வம் வந்திருக்கிறது. நிறுவனங்களின் விளம்பரங்கள், நிகழ்வுகள் இவற்றை நண்பர்கள் உதவியுடன் வடிவமைக்கிறார். துபாயில் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியை வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்.

தமிழில் ஒரு படம் பண்ண வேண்டுமென்பது பினுவின் ஆசையாய் இருக்கிறது. சமீபத்தில் பூ படம் பார்த்து பிடித்துப் போனதாம். சிறந்த கதைகளை படமெடுக்கத் துணியாத தமிழ் சினிமாவின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

பினுவை சந்திக்கப் போவதற்கு முன்பு வரை எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. நட்பு நிமித்தமோடு மட்டுமில்லாமல் அவரின் மூலமாய் எனக்கு இரண்டு உதவிகள் தேவைப்பட்டன. ஒன்று என்னுடைய வரவிருக்கும் புத்தகங்களுக்கான முகப்பிற்குத் தேவைப்பட்ட அவரெடுத்த புகைப்படம் மற்றொன்று புத்தகப் பின்பக்கத்திற்கான அவரால் எடுக்கப் படப் போகிற என் புகைப்படம். முதலாவதைக் கூட கேட்டுவிடலாம் இரண்டாவதைக் கேட்கத்தான் நான் மிகவும் தயங்கினேன்.

உணவு முடித்து வீட்டிற்கு வந்ததும் நான் அதைக் கேட்டுவிட்டேன். இதற்கா இத்தனைத் தயக்கம் என்றபடி தன்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து வந்தார். சூரியன் அமிழும் நேரமாதலால் ஒளி குறைவாக இருந்தது. அவரின் புகைப்படப் பெட்டிக்கு சார்ஜ் தேவைப்படவே ஜூலியாவின் நிக்கானினால் என்னைப் புகைப்படமெடுக்கத் துவங்கினார். ஒரே ஒரு புகைப்படத்திற்காக அவர் செலவிட்ட நேரம் முப்பது நிமிடங்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளிக்குகள். அவற்றிலிருந்து சிலவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்புவதாய் சொன்னார்.

பினுவிற்கு சிதிலமடைந்த பிரதேசங்களின் மீது பெரும் காதலிருக்கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத இடங்கள், மறைக்கப்பட்டக் காட்சிகள் இவற்றை தனது புகைப்படங்களாக்க பெரிதும் விரும்புகிறார். அவரின் மடிக்கணினியில் அவரெடுத்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். உலகின் பல்வேறு பாகங்களில் நடத்திய கண்காட்சிகள் அவற்றில் இடம்பெற்ற படங்கள் என எல்லாம் பார்த்து முடித்த பின்பு என் எழுத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். நான் என் எழுத்தின் மீது வைத்திருக்கிற சுய மதிப்பீடுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். நானிலும் நுழையும் வெளிச்சம் என்கிற தலைப்பை ஆங்கிலத்தில் விளக்கியபோது பினு மகிழ்ந்து போனார். அப்போது ballentine யையும் பூனைகள் புடைசூழ ஆரம்பித்திருந்தோம். இலேசாய் கூச்சம் விலக தலைப்புக் கவிதையை சொல்ல ஆரம்பித்தேன்.
விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..
பினு இந்த அவள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்றதற்கு ஆம் என்றேன் (வாழ்க போமோ!)

நன்கு இருட்டின பின்பு பினுவிடம் விடைபெற்று வந்தேன். கடற்கரை சாலையில் விரைகையில் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். Bernardo Bertolucci திரைப்படம் ஒன்றினுக்குள் நுழைந்து அவரின் கதாபாத்திரங்களை சந்தித்துவிட்டு வந்த உணர்வைத்தான் அந்த வீடும் மனிதர்களும் பினுவும் தந்திருந்தனர். இம்மாதிரியான மனிதரை எனக்கு அறியத் தந்த பவாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

Featured Post

test

 test