Wednesday, September 16, 2009

குவாண்டின் டராண்டினோ - வசீகர வன்முறையாளன்



குவாண்டின் டராண்டினோ எனக்குப் பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். மிகக் குரூரமான வன்முறையை வார்த்தையாகவும் காட்சியாகவும் மிக நேர்த்தியான விளையாட்டாய் நிகழ்த்திக் காட்டுவதில் தேர்ந்தவர். வெகுசனம், கலை என்கிற இருவேறு எதிரெதிர் துருவங்களை தங்களது திரைப்படங்களின் மூலம் ஒரே புள்ளியில் குவிக்கச் செய்த இயக்குனர்களாக அகிரா குரசோவா வையும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கையும் சொல்லலாம். நான் டராண்டினை ஹிட்ச்காக்கின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். கொல்வது கலை என்கிற அணுகுமுறைதான் ஹிட்ச்காக்கினுடையது இவருக்கு கொலை அல்லது வன்முறை என்பது வசீகரமானதொரு விளையாட்டாய் இருக்கிறது.சன்னாசி சொல்வது போல “நான் சொல்லநினைப்பது இப்படி” என்கிற கோணம்தான் டராண்டினோ.

இவரின் சமீபத்திய திரைப்படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் இன்னும் இங்கு வரவில்லை. தலைப்பின் வில்லங்கத்தை நினைவில் கொண்டு இந்நாட்டில் வெளிவராதென நானாகவே நினைத்துக் கொண்டே தரவிரக்கம் செய்தேன். சென்ற வாரத்தில் கமினே திரைப்படம் பார்க்கச் சென்றபோது இன்குளோரியஸ் விரைவில் வருகிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. திரையில் இரத்தத் தெறிப்புகளை காண்பது அலாதி உற்சாகமாக இருக்குமென்பதால் திரையில் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தரவிறக்கம் செய்ததைக் கிடப்பில் போட்டாயிற்று.

டராண்டின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக Pulp Fiction (1994)பல்ப் பிக்சனையும் ரிசர்வாயர் டாக்ஸையும் சொல்லலாம். சில வலைப்பதிவுகளில் பல்ப் பிக்சனைப் புரிவிக்க நண்பர்கள் கட்டம் கட்டி விளக்கியிருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டேன். ஒரு திரைப்படத்தை பகிரவே இவ்வளவு மெனக்கெடல்கள் தேவைப்படும்போது அதை இயக்கியவன் எந்த அளவு மெனக்கெட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பல்ப் பிக்சன் எனக்கு சிரமமான படமாகத் தோன்றவில்லை. அமரோஸ் பெர்ரோஸ், ரன் லோலா ரன், ப்ளைண்ட் சான்ஸ், இர்ரிவர்சிபிள், சங்கிங் எக்ஸ்பிரஸ் போன்ற வித்தியாசமான கதை சொல்லலைக் களமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது பல்ப் பிக்சன் யுக்தி எளிமையானதே.

நான் லீனியர் கதை சொல்லல் என்பது திரையை விட புத்தகத்தில் எளிதாக இருக்கலாம். பல்ப் பிக்சன் திரைக்கதையை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் பல்ப் பிக்சன் படம். இதில் கவனிக்க வேண்டிய ஒரே விதயம் என்னவெனில் இந்த புத்தகத்தை எங்கிருந்து படித்தாலும் அது வாசிப்பின்பத்தை தர வேண்டும் மற்றபடி ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையில்லை. முதல்,இரண்டு,மூன்று,கடைசி அத்தியாயங்கள் எனச் சொல்வது கூட ஒரு புரிதலுக்காகத்தானே தவிர முதல் கடைசி என்கிற அடிப்படைகள் எதுவும் இல்லா வடிவமாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(க்ளைமாக்சில் உயிரோடு இருக்கும் ஜான் ட்ரவோல்டாவை ப்ரூஸ் வில்லிஸ் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொன்று விடுவார்) இந்த நான் லீனியர் வடிவம் பின் நவீனக் கூறுகளில் ஒன்றாக அணுகப்படுகிறது. பன்முகத் தன்மை, வாசிப்பின்பம் போன்றவைகளையும் இத் திரைப்படம் உள்ளடக்கியிருப்பதால் பல்ப் பிக்சனை சிறந்த பின்நவீனத்துவ படங்களில் ஒன்றாக தைரியமாய் சேர்த்துவிடலாம்.

கசாமுசா திரைக்கதையை மெருகூட்ட ப்ரூஸ் வில்லிஸ்,சாமுவேல் ஜாக்சன், ஜான் ட்ரவால்டோ போன்ற தேர்ந்த நடிகர்கள், பாலியல் வார்த்தைகளை மட்டுமே கொண்டு நிரப்பிய சுவாரஸ்ய உரையாடல்கள், அவ்வப்போது வெடிக்கும் திடீர் துப்பாக்கிகள் , உடலிலிருந்து பீறிட்டடிக்கும் குருதித் தெறிப்புகளென காட்சியின்பத்தின் உச்சமாக ஒவ்வொரு காட்சியுமிருக்கும். இந்தப் படத்தினை உரையாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே..
Jules: What does Marcellus Wallace look like?
Brett: What?
Jules: What country you from?
Brett: What?
Jules: What ain't no country I ever heard of! They speak English in What?
Brett: What?
Jules: ENGLISH, MOTHERFUCKER! DO-YOU-SPEAK-IT?
Brett: Yes!
Jules: Then you know what I'm saying!
Brett: Yes!
Jules: Describe what Marcellus Wallace looks like!
Brett: What, I-?
Jules: [pointing his gun] Say what again. SAY WHAT AGAIN. I dare you, I double dare you, motherfucker. Say what one more goddamn time.
Brett: He's b-b-black...
Jules: Go on.
Brett: He's bald...
Jules: Does he look like a bitch?
Brett: What?
[Jules shoots Brett in shoulder]
Jules: DOES HE LOOK LIKE A BITCH?
Brett: No!
Jules: Then why you try to fuck him like a bitch, Brett?
Brett: I didn't.
Jules: Yes you did. Yes you did, Brett. You tried to fuck him. And Marcellus Wallace don't like to be fucked by anybody, except Mrs. Wallace.

இன்னொரு அட்டகாசமான காட்சி
Fabienne: Whose motorcycle is this?
Butch: It's a chopper, baby.
Fabienne: Whose chopper is this?
Butch: It's Zed's.
Fabienne: Who's Zed?
Butch: Zed's dead, baby. Zed's dead.

மொத்த உரையாடல்களையும் படிக்க இங்கே

போதை மருந்து கடத்தல், ஆட்களைக் கடத்துதல், கொலை, கொள்ளை, கொண்டாட்டம் , பழிவாங்கல் போன்றவைகள்தாம் டராண்டினோ இயங்கும் தளமாக இருக்கிறது. நல்ல/ஹீரோயிச மாதிரிகளை எல்லாம் இவர் திரையில் கொண்டுவர மெனக்கெடுவதில்லை. கெடுதலை கெடுதலாகவே நம் முன் கொண்டுவருவதுதான் இவரது தனிச்சிறப்பாக இருக்கிறது.



ரிசர்வாயர் டாக்ஸ்
Reservoir Dogs (1992)சாதாரண கதையொன்றை மிகப் புத்திசாலித்தனமான திரைக்கதையாக எப்படி மாற்றுவது என்பதற்கான சரியான உதாரணம். வழமையான ஒரு கொள்ளைக் கூட்ட பாஸ், கை தேர்ந்த ஆறு திருடர்கள், ஒரு கொள்ளைத் திட்டம், பின்பு அத்திட்டத்தின் சொதப்பல். இவ்வளவுதான் இத்திரைப்படம். ஆனால் பார்வையாளன் காட்சியமைப்பில் திகைத்துப் போகிறான். திரைப்படங்களில் ஊறிய பார்வையாளனும் மேலோட்டமான பார்வையாளனும் தத்தம் பார்வைகளில் திருப்தியடைகிறார்கள். இந்த யுக்தி டராண்டினோவிற்கு எளிதாக வருகிறது. மிஸ்டர் வொயிட்/ப்ளூ/ப்ரவுன்/பிங்க்/ஆரன்ஞ்/ப்ளாண்ட் எனப் பெயரிட்டுக் கொண்ட ஆறு திருடர்கள் வைரத்தைக் கொள்ளையடித்துவிட்டு திட்டமிட்ட இடத்தில் சந்திக்கும் திட்டம் போலிஸின் இடையூறால் சொதப்பலாகிறது. ஒருவர் சுடப்பட்டு இறந்து போகிறார்.இன்னொருவர் மோசமாக காயமடைகிறார். இதில் ஒருவர் போலிஸ் இன்பார்மர் அவர் யார் என்கிற சந்தேகத்தினுக்கு அனைவரும் பலியாகின்றனர்.

போலிஸ் திருடனையும், திருடன் போலிஸையும் ஒருவரையொருவர் மிகக் குரூரமாகத் தாக்கிக் கொள்ள பிரதானமாய் புறக் காரணங்கள் எதுவுமே தேவையில்லை.அவன் திருடனாக/போலிஸாக இருப்பதே போதுமானது. இத்திரைப்படத்தில் சிக்கிக் கொண்ட போலிஸ் ஒருவனைத் துன்புறுத்தும் காட்சிகள் உளவியல் ரீதியிலாக சமூக அடையாளத்தின் சிக்கலைப் பேசுகிறது. சக மனிதன் என்ற பொதுவையெல்லாம் அடையாளங்களுக்காக தூக்கி எறிந்து விட்ட வன்முறையை குரூரமாய் நம் முன் வைக்கிறார் டராண்டினோ.தான் இயக்கும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் டராண்டினோ இதில் மிஸ்டர் ப்ரவுன் ஆக வந்து சுடப்பட்டு இறந்து போவார்.மிஸ்டர் பிங்க் ஆக நடித்திருக்கும் Steve Buscemi மிக அட்டகாசமான நடிகர்.fargo வில் இவரது முக பாவணைகளை பார்த்து பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.

இவரது மற்றத் திரைப்படங்களான கில் பில் 1 & 2 சின்சிட்டி போன்றவைகளின் அடிநாதமும் வன்முறையும் பழிவாங்கலும்தான். தனது மாஸ்டர் பீஸ் இன்குளோரியஸ்தான் எனச் சொல்லிக் கொள்ளும் டராண்டினோ அந்தப் படத்தின் மீதான என் ஆர்வத்தினை இன்னும் அதிகரித்திருக்கிறார். பல்ப் பிக்சன் தந்த கிளர்ச்சியை இன்குளோரியஸ் தருகிறதா? என்பதைப் பார்த்துவிட்டுப் பகிர்கிறேன்.

Tuesday, September 15, 2009

இந்தி திரைப்பட இசையும் அற்புத ரகுமானும்

என்னுடைய இந்தி மொழியறிவைப் பொறுத்தவரை இன்னமும் ஏ காவ் மே! ஏ கிஸான்! என்ற அளவில்தான் இருக்கிறது. மலையாளத்தை தடம் பிடித்த அளவிற்கு இன்னமும் இந்தியை முழுமையாய் பிடித்து விட முடியவில்லை. பதின்மங்களில் இந்திப் பாடல் கேட்பதில் ஒரு வித பெருமிதம் இருந்தது. என்னுடைய சகோதரன் நல்ல பாடல்களாய் தேடித்தேடி பதிந்து வைக்கும் கேசட்டுகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பிலிம் காட்டுவதில் எனக்கு அப்போது அலாதி மகிழ்ச்சி இருந்தது. இந்தி பாட்டு கேக்குறான்! இங்கிலீஷ் புக் படிக்கிறான்! என்றெல்லாம் பெண்கள் என்னைப் பற்றிச் சொல்வதாய் கற்பனை செய்து கொண்டு மகிழ்வேன். பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய் பாட்டும் புத்தகமும் மட்டும் ஒட்டிக் கொண்டன. தொண்ணூறாம் வருட இறுதிகளில்தான் நான் "தேரே மேரே பீச்சுமே" வைக் கேட்டு உருகினேன். ஒரு வார்த்தை கூட புரியாதெனினும் உயிரைப் பிழியும் சோகம் அந்தப் பாடலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் "ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்?" படத்தையும் பார்த்தேன். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்தி மசாலா திரைப்படங்களின் இசை, கதை, காட்சியமைப்புகளை பத்து வருடங்களுக்கும் மேலாக வேறு தளத்தினுக்கு நகர்த்தாமல் வைத்திருந்தது. மெகா பேமிலிகள், எக்கச்செக்க பாட்டுகள், ஒரு காதல், ஒரு கல்யாணம், ஒரு சாவு என்கிற மசாலா பார்முலாக்களுக்கு முன்னோடியாக இருந்த படமிது. மேலும் இதில் வரும் "தீதி தேரா" வை விட "பெஹலா பெஹலா" பாடலும் "ஹம் ஆப்கே" என்கிற டைட்டில் பாடலும்தான் எனக்கு அதிகம் பிடித்தது. ஒரு படத்தின் பிரபலமான பாடலை விட அதிகம் பேசப்படாத பாடலே என்னை எப்போதும் ஈர்க்கிறது.

ஹம் ஆப்கே விற்குப் பிறகு நான் வசித்த நகரங்களில் வெளியான வணிக இந்தித் திரைப்படங்கள எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கினேன். "தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது. ஒரு கட்டத்தில் "என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!" என இந்தியை முற்றாக புறக்கணித்துவிட்டேன். ஆனாலும் இந்திப் பாடல்கள் கேட்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடத்தின் துவக்கத்தில் "ஏக் லடுகி கோ தேகா சோ ஏசா லகா" தான் விழித்தெழுந்ததும் கேட்கும் பாடலாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் நன்றாக இருக்கும். இப்படிப் பட்டும் படாதவாறு இருந்த என் இந்தி இசை ஆர்வம் ரகுமானின் இந்தி நுழைவினுக்குப் பிறகு ஒரு வடிவத்தினுக்கு வந்தது. ரகுமான் இசையமைக்கும் எல்லா இந்தி பட கேசட்டுகளையும் வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.

நான்கு மாதத்தினுக்கு முன்பான ஒரு இரவில்தான் தில்லி 6 பாடல்களை கேட்டேன். பத்து பாடல்களையும் முழுதாகக் கேட்டபின்பு இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போயிருந்தேன். ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்சை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது. கேட்ட உடனே பிடித்த பாடல் மஸாக்களி தான். அதில் திளைக்கும் உற்சாகத்தினையும் பொங்குதல்களையும் முழுமையாய் அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். "மெளலா மேரே!" பாடல் பித்த நிலையின் உச்சம். சூபி தியான நிலையின் இன்னொரு வடிவம் இந்தப் பாடலின் ஆன்மாவினை ஒத்திருக்கலாம். கொண்டாட்டமும், மகிழ்வும், குழைவும், உருகுதலும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட பாடல் இது. நான்கு மாதத்தினுக்கும் மேலாய் என்னைக் கட்டிப் போட்ட பாடல் இதுவெனச் சொல்லலாம். 'தில் கீரா கஹி பல் தஃபதன்' என்கிற பாடல் இன்னொரு அற்புதம். கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதத்தின் உச்சம். மெதுவாய் ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகம் கூட்டி நம்மை நிறைக்கும் தந்தி அதிர்வுகள் உடலுக்குள்ளும் பாய்வதை எதைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இந்தப் பாடல் முடிந்த பின்னும் உடல் அதிர்வதை ஒவ்வொரு முறையும் உணரமுடிகிறது. ரகுமானின் மீது மிகப்பெரிய காதலை வரவழைத்த பாடல் "ரெஹ்னா து!" காற்றில் வார்த்தையை லயத்தோடு அடிவயிற்றிலிருந்து துப்பும் வித்தையைத்தான் ரகுமான் அவரது குரலில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலை விட, இசையை விட, ரகுமானின் குரல் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற ஆறு பாடல்கள் என்னை வசீகரித்ததே தவிர இந்த நான்கு பாடல்களைப் போல பைத்தியம் பிடிக்க வைக்க வில்லை.

இதற்கு முன்பு ஒரே திரைப்படத்தின் பாடல்களை அல்லது ஒரே ஆல்பத்தை தொடர்ச்சியாய் நான்கு மாதங்களுக்கு மேலாய் கேட்டதில்லை. தில்லி 6 பாடல்களை கேட்டிராத நாளே இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இன்றைய தினம் வரை குறைந்துவிடாத ஈர்ப்புடன் இவ்விசை இருக்கிறது. இதுவரைக்குமான ரகுமானின் இசை வாழ்வில் தில்லி 6 ஒரு அற்புதம். இதை அவராலே தோற்கடிக்க முடிந்தால் அதுவே ரகுமானின் சாதனையாகவிருக்கும். இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வமே எனக்கு இல்லாமலிருந்தது. இந்த இசைக்கு முகங்களையோ, நடன அசைவுகளையோ பொருத்திப் பார்க்க நான் விரும்பவில்லை. டிவிடி வாங்கி வெகு நாள் கழித்து கடந்த வாரம்தான் நண்பர்களோடு பார்த்தேன். இசையை சிதைக்காமல் படமாக்கியிருந்த விதம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது. "ரெஹ்னா து" இசையும் "மெளலா மேரே" பாடலும் படம் முழுக்க சிதறியிருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது. படத்தில் நிறைய விசயங்களை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். எதையும் திணிக்காமல் காட்சிகளை அதன் போக்கில் விட்டிருப்பது நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. " தில் கீரா கஹி பல் தஃபதன்" பாடலுக்கான கற்பனையும் ரசிக்கும்படி இருந்தது. மஸாக்களி பாடல் படு கச்சிதமாய் படமாக்கப்பட்டிருந்தது. தில்லி 6 இந்தி(ய) சினிமாக்களில் நல்லதொரு மாற்றமாகத்தான் இருந்தது.

தில்லி 6 தந்த அதே கிறக்கத்தை அன்வர் படப்பாடல்களும் தந்தன. சொல்லப்போனால் அன்வரில் வரும் "மெளலா மேரே மெளலா" பாடலை தில்லி 6 க்கு முன்பிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் ரகுமானின் பிரம்மாண்டத்தின் முன்பு Mithoon Sharma, Pankaj Awasthi க்களின் இசை காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அர்ஸியோனுக்கு சற்றும் குறைந்திடாத பாடல்தான் "துசே நைநோ" நண்பர் வெங்கியின் மூலம்தான் இப்பாடலை நான் தவறவிட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு என் நன்றி. மேலும் இப்படத்தில் வரும் மூன்று நிமிட பாடல் வரிகளில்லாத இசை ஆலாபணைகள் இந்த இரவுகளை அழகாக்கிவிட்டுப் போகின்றன.

இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது. இப்பெயர்களை கஜல் மற்றும் உருதுக் கவிதைகளில் நன்கு பரிச்சயமான ஆசாத்திடம் சொன்னபோது
அவர் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றார். விரைவில் வரப் போகும் ஓய்வு நாட்களில் இந்த இசைகள் என் அமைதிப் பொழுதுகளை நிரப்பலாம்.

Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகத் தொடர்களில் பங்கு பெறுவது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. இவ்விளையாட்டுக்கள் பதிவுலகை ஆரோக்கியமாய் வைத்திருக்கின்றன என்றெல்லாம் சல்லியடிக்க விரும்பவில்லை. என்னைப் பற்றி நானே ‘டமாரம்’ அடித்துக் கொள்ள இத் தொடர்கள் மிகுந்த உதவியாய் இருப்பதால் இதில் நான் ஆர்வமுடன் பங்குகொள்கிறேன். இம்முறை என்னுடைய பதிவுலக வரலாறை எழுத தீபா அழைத்திருக்கிறார் அவருக்கு என் நன்றி.

அந்நிய வாழ்வில்தான் இணையத்தில் தமிழைக் காண முடிந்தது. இந்தியாவில் இருக்கும் வரை எனக்கும் கணினிக்கும் பெரிதாய் தொடர்பு ஒன்றுமில்லை. ”இரும்படிக்கிற பயல்!” என கணினியிடமிருந்து என்னைப் பிரித்து வைத்திருந்தனர். வீட்டில் வைத்திருந்த கணினியைப் பாட்டு கேட்கவும் படம் பார்க்கவும் மட்டுமே பயன்படுத்தினேன். மேலும் நாட்கள் ஒரு விதமான வழமைக்குப் பழகியிருந்தன.செய்து முடிக்கப்பட வேண்டியவைகள் மிகுதியாகவிருந்தன. எப்போதும் ஏதாவது ஒன்று காத்துக் கொண்டிருந்தது. இந்த அயல் வாழ்வில் வழமைகள் முற்றிலுமாய் மாறியதும் நிறைய இடைவெளிகள் உருவாகின. எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாத இடைவெளிகளாய் அவைகள் உருமாறத் துவங்கும் முன் என்னை இவ்வெளியில் திணித்துக் கொண்டேன்.

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் இது. இணையத்தில் முதலில் தமிழில் படித்த இடுகை சித்தார்த்தின் சொர்கத்தின் குழந்தைகள். கணினியில் தமிழைப் பார்த்த வியப்பை விட இத்திரைப்படம் குறித்தெல்லாம் எழுத ஆட்கள் இருக்கிறார்களா? என்கிற வியப்புதான் எனக்கு அதிகமாக இருந்தது. (அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம் இருந்தது.மேலும் அத்திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பே பார்த்துமிருந்தேன்.) பாசோலினி, குப்ரிக்கை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா ? என அறிவுஜீவித்தனமாய் அவருக்கு ஒரு மடலிட்டேன். சித்தார்த் உடனே தொடர்பு கொண்டு பேசினார். அவரின் மூலம் தமிழ்மணம், தேன்கூடு, வலைப்பதிவு என இவ்வுலகம் மெல்ல அறிமுகமானது.

தனிமையின் இசை என்கிற பெயருக்கு காரணங்கள் பெரிதாய் ஒன்றுமில்லை. நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லாம் ஒண்ணுங்கீழ ஒண்ணாய் சில வரிகளை எழுதியிராவிட்டால் கவிஞர் உலகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ? என்கிற லேசான பய உணர்வு என்னிடமிருந்ததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். ஆரம்பகாலத்தில் எழுதுவதை விட வாசிக்க அதிகம் பிடித்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஏராளமான புது எழுத்துக்களைப் பார்க்க முடிந்தது. சிற்றிதழ், வெகுசன இதழ் போன்ற பழகிய நமுத்த வாசமில்லாமல் வலை எழுத்துக்களில் ஒரு வித சுதந்திரத் தன்மையை, ஆசுவாசத்தை, குறைந்த போலித்தனத்தை உணரமுடிந்தது.

இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வெகு சன இதழ்களில் எழுதிப் புகழ்பெறுவதற்கான ஐந்தாண்டுத் திட்டங்களோடுதான் பெரும்பாலான வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன. வலைஞர்களுக்கு வெகுசன இதழ்களில் எழுவது எப்படி? என முகாமிட்டு சொல்லித் தருபவர்களும் இங்கு கிடைப்பதால் வருங்கால வெகுசன எழுத்தாள சந்ததிகளின் பெருக்கம் ஆரோக்யமானதாகவே இருக்கிறது. பலமான முதுகு சொறிதல்களும் பெருகிவருவதால் வலைப்பக்கங்களில் இரத்த ஆறு ஓடுவதாக புளகாங்கிதமடைந்து கொள்ளலாம். ஒரு மொக்கைப் படத்தை மொக்கை படமென்றே தெரிந்துகொண்டு, முதல் நாளே பார்த்து விட்டு, இந்தப்படம் மொக்கையாக இருக்கிறது என அவசரம் அவசரமாய் எழுதுவதைத்தான் முந்நூறுக்கும் அதிகமான தமிழ் வலைப்பக்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன என முன்பொருமுறை நண்பர் ஒருவர் சொன்னதற்காக அவருடன் அரை மணி நேரம் சண்டையிட்டேன். இப்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டுகிறார்.

புரியாத எழுத்து, கெட்ட வார்த்தைக் கவிதைகள் என இந்தப் பக்கம் ஆரம்ப காலத்தில் பெரும்பாலான சக பதிவர்களால் விமர்சிக்கப் பட்டது. சீனியர் கெட்ட வார்த்தைப் பதிவர்களிடம் உடனே நட்பு அல்லது அங்கீகாரம் கிடைத்ததும் அதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். இம்மாதிரியான முத்திரை அல்லது அடையாளம் தவிர்க்க நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்தன.ஆனாலும் உள்ளூர அவர்களுக்கு என் மீது அவநம்பிக்கைகள் இருந்ததைப் பிறிதொரு முறை தெரிந்து கொள்ள முடிந்தது.

எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையுமில்லை.கீதைக்கு விளக்க உரை எழுதுபவன் சரக்கடிக்க கூடாதென்றும், சரக்கடிப்பதைப் பற்றி எழுதுபவன் கீதை படிக்கக் கூடாதென்றும் எதுவுமில்லை. இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல. அவனின் பிம்பங்களை நோண்டி நுங்காகாமல் தன்னையும் தான் வாசிப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வது படிப்பவனின் கையில்தான் இருக்கிறது.

மாசோசிஸ்ட், நார்சிஸ்ட், சைக்கோபதிக் என வலையில் ஏராளனமான பிம்பங்களிருக்கின்றன. இந்த நார்சிஸ்ட் பிரிவில் என்னையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பலரிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. உன்னத மனிதர்கள், அற்ப மனிதர்கள் என அறிமுகமானவர்களை என் நம்பிக்கையளவில் தரம் பிரித்துக் கொண்டு இருவரிடமிருந்தும் விலகி வாழ்வதுதான் எனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

சுகுணாவிடம் மாய்ந்து மாய்ந்து சண்டையிட்டது, தமிழச்சியைத் திட்டி வாங்கிக் கட்டிக் கொண்டது,ஜெமோ சாரு இவர்களை அவ்வப்போது கிண்டலடித்தது போன்ற சாகசங்கள்தான் வலை வாழ்வில் உடனே நினைவுக்கு வருகின்றன. மேலும் தூக்கம் வராத மிக அழுத்தமான இரவுகளில் என்னுடைய சில வரிகளை, சில கவிதைகளை, சில கதைகளை, சில வார்த்தை ஜாலங்களை மீண்டும் மீண்டும் படிக்கப் பிடித்திருக்கிறது. “இத நீதான் எழுதினியா கண்ணா!” என புளகாங்கிதமடைந்து கொள்ள முடிகிறது. “எவ்ளோ மொண்ணையா எழுதியிருக்கடா!” என சத்தமாய் சிரித்துக் கொள்ள முடிகிறது.

இதை வேரெது அல்லது வேறெவர் எனக்குத் தந்துவிட முடியும்?

இத்தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்…

தமிழ் நதி
லேகா
உமாசக்தி
ரெளத்ரன்

Wednesday, September 9, 2009

சுய ‘நலம்’

காற்று மணலில் கீறிச் செல்வது போல், நதியில் சூரியனின் வண்ணங்களை மினுமினுத்தபடி பயணிக்கும் நீர்க்குமிழி போல தற்காலிக வசீகர உறவுகள் அமைவதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதில்லை. நிரந்தரத் தன்மையின் மீதிருக்கும் பிடித்தம் மற்றும் “என்றென்றைக்குமான" “ஏழேழு ஜென்மத்துக்கும்” என்பன போன்ற நாடக வாசகங்களின் மீதிருக்கும் நம்பிக்கைகள் ஏகப்பட்ட பொய்களோடு எல்லா உறவுகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் மீதான பயங்களே நிரந்தரம் என்கிற போலிச் சொல்லினை மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒன்று நிரந்தரமாக இருக்கத் தேவையில்லையோ அதை நாம் மிகச் சுதந்திரமாக அணுகுகிறோம். இஃதெனக்கு நிரந்தரமாய் இருக்கத் தேவையில்லை என்கிற எண்ணத்தோடு ஒன்றை அணுகுவது அதன் மீதான வீண் பயங்களையும் அவசியமில்லா நமது நாடக அணுகுமுறைகளையும் குறைக்கிறது.

திருமணம் என்கிற நிர்பந்தமில்லாது ஒரு பெண்ணை/ ஆணை க் காதலிப்பது மிகச் சுதந்திரமான செயலாய் இருக்கக்கூடும். அந்தக் காதலில் மிக அதிக நேர்மையையும் தடம் பிடிக்கலாம். போலிச் சமூகத்தின் காவலர்களுக்கும் மீட்பர்களுக்கும் இஃதொரு அதிர்ச்சியூட்டக்கூடிய செயல்தான் என்றாலும் அவர்களை எவையெல்லாம் அதிர்ச்சியூட்டுகின்றனவோ அவையே உன்னதங்களாக இருக்கக் கூடும்.

உதிரி வாழ்வு மற்றும் நாடோடித் தன்மை கொண்ட வாழ்வியல் அணுகுமுறைகளின் மீதெல்லாம் மிகுந்த விருப்பங்கள் இருக்கிறதென்றாலும் அவற்றை எதிர் கொள்ளும் துணிவு மட்டும் விருப்பத்தின் தொடர்ச்சியாய் உதிப்பதில்லை. மிதமான வெளிச்சத்தில் மெல்லிதாய் இசை கசிந்து கொண்டிருக்க பேரழகுப் பெண்கள் ஊற்றித் தந்த எரியாத மதுவினை உறிஞ்சியபடி “இயந்திர வாழ்க்கை” “செம்ம போர்” “I HATE” “I H A T E this fuckin life” “LIFE sucks” என விதம் விதமாய் வாழ்வு அலுப்பதாக நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் வாழ்வு வார்த்தையில் மட்டும் அலுக்கும் போலித்தனத்தை, வார்த்தையாய் உச்சரிக்கும்போதே உணர்ந்து கொண்டு சத்தமாய் சிரித்து விட முடிகிறது.

ஒரேயடியாய் வாழ்வை அற்பத் தளத்திலிருந்து உண்மைத் தளத்திற்கு நகர்த்திவிட முடியாதுதான் என்றாலும் மெதுமெதுவாய் நகர்ந்து போய்விட வேண்டும். எது உண்மைத் தளம் என்பதையெல்லாம் விவரிக்கத் துவங்கினால் அது மிக நீளமான விவாதத்திற்கு கூட்டிச் செல்லுமென்பதால், உண்மை என்பதை நாடகத்தனமாக இப்படிச் சொல்லலாம் “எங்கெல்லாம் நடிப்புகள் தேவையில்லையோ, எங்கெல்லாம் மிகைகளும் பூச்சுகளும் அவசியமில்லையோ, எங்கெல்லாம் எளிமையான அன்பு சாத்தியமாகிறதோ, எங்கெல்லாம் சுயநலம் குறைவாய் இருக்கிறதோ, அங்கெல்லாம் உண்மைத் தன்மை இருக்கிறது.”

சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டையுமே சூழலும் சுயநலங்களும்தான் தீர்மானிக்கின்றன. நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் பொய்க்கும்போது இரண்டாலுமே நாம் பழிவாங்கப்படுகிறோம். வலிகள், காயங்கள், ஏமாற்றங்கள் என எல்லாவற்றுக்குமான அடிப்படை நிறமிழக்கும் நம்பிக்கைகளாக இருக்கின்றன. குற்ற உணர்ச்சி,கழிவிரக்கம் போன்றவைகளுக்கான பின்புலம் பொய்க்கும் அவநம்பிக்கைகளாக இருக்கின்றன. அடுத்தவர் மீதான நமது நம்பிக்கைகள் எப்போது பொய்க்கின்றனவோ அப்போதே புன்னகையுடன் விலகுவதும், பிறவற்றின் மீதான நம்முடைய அவநம்பிக்கைகள் நீர்த்துப் போகும் புள்ளியில் அதற்காக வருந்துவதும்தான் ஓரளவிற்கு நேர்மையான செயலாக இருக்க முடியும். எவ்விதத் தீர்மானங்களும், முன்முடிவுகளும் இல்லாமல் உறவுகளை, சக மனிதர்களை எதிர்கொள்வதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனித உயிரும் சுயநலத்தால் நிரம்பியதுதான். மேலும் அதில் தவறெதுவும் இருப்பதாகப் படவில்லை. தானொரு முழுமையான சுயநலவாதி என்பதை புரிந்துகொள்வது தன்சார்ந்த மிகைகளையும், அனைவரும் சுயநலமிகள் என்கிற புரிதல்கள் பிம்ப உருவாக்கங்களையும் தனிநபர் துதிக்களையும் அடிவருடித்தனங்களையும் சிறிது குறைக்கலாம்.சுயநலத்தை ஒத்துக் கொண்டால் ஏமாற்றம், துரோகம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமுமிருக்காது. நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது? இது போன்ற வார்த்தைகள் இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். அடுத்த விநாடியைக் கூட தயாரித்தல்களோடு எதிர்கொள்ளும் குரூரமான வாழ்வைத்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Monday, September 7, 2009

நடிகைக் கடவுளர்களும் பத்திரிக்கைச் சாத்தான்களும்


மற்றவர்களின் அந்தரங்கம், மற்றவர்களின் ரகசியங்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினுக்கான காரணங்கள் எவையாய் இருக்குமெனத் தெரியவில்லை. பிராட் பிட்டும் ஏஞ்சலினா ஜூலியும் சமீபமாய் தனித்தனி படுக்கையறையில் உறங்குவதற்கான காரணங்களை இங்குள்ள ஆங்கிலப் பத்திக்கை ஒன்று வண்ணப் புகைப்படங்களுன் அலசி ஆராய்ந்துள்ளது. என் இன்றைய காலையை அச்செய்தியுடன் தான் துவங்கினேன். அந்தப் பக்கத்தை முழுவதுமாய் படித்து முடிக்கும்வரை என் தேநீரை ஒரு மிடறு கூட அருந்தியிருக்கவில்லை. இருக்கைக்குத் திரும்பிய பின்னர் என் செயலின் அபத்தம் உணர்ந்து வெட்கினேன்.

கிசுகிசு உலகத்திலிருந்து தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது. அதே போல் இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என மாற்றி மாற்றி நம் முன் உரிக்கப்படும் பிறரின் அந்தரங்கத் தகவல்களையும் தவிர்க்க முடிவதில்லை. அந்தரங்கம் முழுமையாய் தெரிந்தவனே சிறந்த நண்பன் என்கிற நம்பிக்கைகள் நம்மிடையே பொதுவாக இருப்பதால் “எனக்கும் என் நண்பன் / நண்பி / காதலன் /காதலி / மனைவி / கணவனு க்கும் இடையே ரகசியங்களே இல்லை” என சொல்லிக் கொள்வதே நம் அனைவரின் பெருமையாகவிருக்கிறது. அதில் தெறிக்கும் அவநம்பிக்கைகளும் போலித்தனங்களும் ஒருபோதும் நம்மை உறுத்துவதில்லை. இயல்பாக மாறிப்போய்விட்ட இந்தக் கிசுகிசுக் கலாச்சாரத்திலிருந்து அத்தனை சீக்கிரம் வெளியே வந்து விட முடியாதெனத்தான் தோன்றுகிறது.

அயல் வாழ்வு எனக்குச் செய்த நன்மைகளில் மிகவும் முதன்மையானது தமிழ் சூழலில் வெளிவரும் தினசரிப் பத்திரிக்கைகள், இலவச இணைப்புகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவைகளின் தொடர்பைத் துண்டித்ததுதான் அல்லது என்னை அவற்றிலிருந்து காப்பாற்றியதுதான். கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக வலைப்பதிவுகள் மட்டுமே என்னை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் தமிழ் நடிகைகளின் உள்ளாடை அளவுகள், சம்பள விபரங்கள், காதல்கள், படுக்கையறை ரகசியங்கள் போன்ற அரிய தகவல்களை பெற முடியாமல் போனது. அந்தக் குறையைத் தீர்க்கவும் முளைத்திருக்கும் பல வலைப்பதிவுகளை அவ்வப்போது கடந்து போக முடிகிறது. வெகுசனக் குப்பை இதழ்களில் கிசுகிசுக்கள் எழுதிக் கொண்டிருந்த மகாத்மியங்கள் வலைப்பதிவு ஆரம்பித்து அதிலேயும் தங்களின் வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் பக்கமொன்றைச் சமீபத்தில் காண முடிந்தது. நடிகைகளின் அந்தரங்கத்தை கிசுகிசுக்களாக எழுதுபவனின் சட்டைக் காலரைப் பிடித்து “நடிகைக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே” என அடித் தொண்டையிலிருந்து கத்த வேண்டும் போலிருந்தது. அப்படிக் கத்த இயலாமல் போனதால் கோபி கிருஷ்ணன் சிறுகதையொன்றில் வரும் “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்ற வாசகத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேன்.

தமிழ்சூழலைப் பொறுத்தவரை சாமான்ய சினிமா ரசிகனுக்கு நடிகைகள் மீது பெரும் காதலிருக்கிறது. கட்சித் தலைவியிலிருந்து கடவுள் வரைக்குமான அங்கீகாரங்களை சாமான்யன் நடிகைகளுக்குக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறான். ஆனால் சாமான்யனுக்கும் சினிமாவிற்கும் பாலமாய் இருக்கும் அல்லது இருவரையும் தனது பிழைப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளும் வெகுசன/மஞ்சள் பத்திரிக்கைகளும் அதில் தனது வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் எழுத்தாள/நிருப புண்ணாக்குகளும் இரண்டு உலகத்திலும் நஞ்சைக் கலக்கின்றனர். சினிமாச் செய்திகள் என்ற பெயரில் எல்லா தமிழ் பத்திரிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் பெரும்பாலும் வக்கிரத்தைத் தவிர வேரென்னவாய் இருக்கிறது?

குமுதம், விகடன் (குங்குமம் உள்ளிட்ட பிறவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) என்கிற இரண்டு வெகுசனப் பத்திரிக்கைகளும் தமிழ் சினிமாவிற்காக ஆற்றிவரும் தொண்டு அளப்பறியாதது.’ நடிகையின் கதை’ என்கிற பெயரில் குமுதம் கொட்டித் தீர்த்த வக்கிரங்களை நம்மால் அத்தனை எளிதில் மறந்து விட இயலாது. குமுதத்தைப் பொறுத்தவரை வாசகனிடத்தில் எப்போதும் ஒரு நமைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்க வைப்பதுதான் அதனது விற்பனைச் சூத்திரமாக இருக்கிறது. நமீதா, சோனா போன்ற பெருத்த உடல் கொண்ட நடிகைகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் இல்லாமல் போனால் விகடன் என்னவாகுமெனத் தெரியவில்லை. விகடனின் எப்போதைக்குமான விற்பனைச் சூத்திரமான ரஜினியை நமீதா இந்நேரம் ஓரங்கட்டியிருக்கக் கூடும்.

பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் சினிமாவின் தொழில் நுட்பத்தை, அதன் பின்னாலிருக்கும் நுணுக்கங்களை, எது நல்ல சினிமா என்கிற அடிப்படைத் தகவல்களை, வாசகனிடத்தில் / பார்வையாளனிடத்தில் ஏன் கொண்டு சேர்ப்பதில்லை? ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமிடும் நடிகையின் உடல் மீது மொய்க்கும் புகைப்பட ஒளிகள் ஏன் அத்திரைப்படத்தில் முக்கியப் பங்காற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மீது விழுவதில்லை?

தமிழ் நடிகைகளின் உடல் இங்கு அனைவருக்குமான மூலதனமாக இருக்கிறது. ஒரு வேளை அனைத்து நடிகைகளும் போர்த்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தால் நம் சூழலில் நிறைய பத்திரிக்கை அலுவலகங்களை மூட வேண்டியிருக்கும். கணிசமான அளவில் வேலை வாய்ப்புகள் பறிபோகும். ஆண்கள் தத்தம் சுய புணர்ச்சி பிம்பத்திற்கான பற்றாக்குறைகளால் நிறைந்து அவரவர் காதலிகளின் / மனைவிகளின் பிம்பத்தையே நினைவில் தருவிக்க வேண்டி வரும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படலாம். இப்படிப் பல வகையில் ஆண் சமூகத்தை உய்விக்கும் கடவுளர்களான நடிகைகளை நம்முடைய ஆழ்மன வக்கிரங்களின் வடிகாலாகவே பார்க்கப் பழகியிருப்பது எத்தனை குரூரமானது! தமிழ் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தத்தம் அலுவலகங்களில் வைத்திருக்கும் கடவுள் புகைப்படங்களுக்கு மாற்றாய் கவர்ச்சி நடிகைகளின் சிலைகளை நிறுவுவதே நியாயமானது.

Tuesday, September 1, 2009

குறிஞ்சி

குறிஞ்சி ஹவுசிங் போர்டில் இருக்கிறாள். அவள் குறிஞ்சி மலரைப் போல இருக்கிறாளா? என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் குறிஞ்சி மலரைப் பார்த்ததில்லை. பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் பூவென்பது தெரியும். தினத் தந்தியில் இப்பூவின் படம் பார்த்திருக்கிறேன். மற்றபடி இவள் பெயருக்கும் மலருக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அழகான பெயர் இல்லையா!? உருவம், அழகு இதெல்லாம் நபருக்கு நபர் வேறுபடும். எனக்கு கருப்பு நிறப் பெண்களைப் பிடிக்கும் உங்களுக்குச் சிவப்பு நிறப் பெண்களைப் பிடிக்கலாம். எது அழகென்பது கூட தனிப்பட்ட ரசனையைப் பொறுத்ததுதான், ஆனால் ஒரு பெயர் அழகா இல்லயா என்பது பொதுவானதுதானே!? அய்யனார் என்பது உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு மோசமான பெயராகத்தான் இருக்க முடியும். ஆனால் குறிஞ்சி என்ற பெயர் அழகு என்பதை நம் இருவராலுமே மறுக்க முடியாது. இதுவரை சொல்ல வந்தது என்னவெனில் குறிஞ்சி என்கிற அழகான பெயரையுடைய பெண் ஹவுசிங் போர்டில் இருக்கிறாள்.

1. எந்த ஊர் ஹவுசிங் போர்ட்?
2. ஹவுசிங் போர்ட்க்கு தமிழ்ல என்ன?
3. குறிஞ்சிக்கு என்ன வயசு? எப்படி இருப்பா? அவள வச்சி நீ கத கித எதாச்சும் சொல்ல போறியா? குறிஞ்சிதான் இந்த கதைக்கு ஹீரோயினா? தயவுசெய்ஞ்சி இவ என் இத்தனாவது காதலிங்கிற உன் வழக்கமான ரீல இதிலயும் விடாதே.

திருவண்ணாமலை.
வீட்டு வசதி வாரியம்.
இருபத்தி இரண்டு . நல்லா இருப்பா. தெர்லயே. அதுவும் தெர்ல. ஹிஹிஹி!!.

”குறிஞ்சிக்கு அப்பவும் சரி இப்பவும் சரி என்னத் தெரியாது. தினம் சாயந்திரம் ஐந்தரை மணிக்கு அவள பாக்கிரதுக்காகவே கோரி மேட்டுத் தெருவில போய் நிப்பேன். அப்ப அந்த இடம் நல்ல மேடா இருந்தது.அதுனால சைக்கிள் ல வர்ர எல்லாரும் இறங்கி தள்ளிட்டுதான் வருவாங்க. நான் மேட்ல நின்னுட்டு பார்த்துட்டிருப்பேன். குறிஞ்சி அவளோட BSA SLR சைக்கிள தள்ளிட்டு வருவா. அந்த மேடு மேற்கு பார்த்தபடி இருக்கும். வெய்யில் சரியா முகத்தில அடிக்கும். புருவம் சுருக்கி, நெற்றில இருந்து கோடு மாதிரி இறங்குற வியர்வையோட என்ன கடந்து போவா. குறிஞ்சி பி எஸ்.சி பிசிக்ஸ் படிச்சிட்டு ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சரா வேல பாத்திட்டிருந்தா. நான் அவள காதலிச்சேன்.”

1.கோரிமேட்டு தெருவுல சிக்கன் கட ஒண்ணு இருந்ததா சாரு சொன்னாரே அந்த கட அப்பவும் இருந்ததா?
2.இடத்த குறிப்பிடுற நீ காலத்த ஏன் சொல்ல மாட்டேங்குற அதாவது அப்ப நீ இன்னா பண்ணிகிட்டு இருந்த?
3.இதுலயும் ஆரம்பிச்சிட்டியா கொடும. நீ எப்பதாண்டா காதலிக்காம இருந்த?

அப்ப அந்த கட இல்ல. சிலாகிக்கிற அளவுக்கு சுவையான கடைன்னும் எனக்கு படல. தொண்ணூத்தி மூணுல சிக்கன் கபாப் கடைகள்லாம் கிடையாது. அரசு மருத்துவமனைக்கு எதிர்க்க பீப் பிரியாணி, பீப் வறுவல் கடைங்கதான் இருந்தது.

நான் ஆண்கள் மேனிலைப் பள்ளில ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன்.

காதலிக்காமலாம் இருக்க முடியாது கண்ணு!. அப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு எங்காச்சும் ஒயரமான எடத்தில இருந்து குதிச்சி செத்து போலாம்.

”மேடு ஏறினதும் குறுக்கிடுற மணலூர் பேட்டை ரோடை த் தாண்டி ஏறி மிதிக்க ஆரம்பிப்பா. நானும் பின்னாலயே போவேன்.தாமரைக் குளம் தாண்டினதும் முதல் இறக்கம். தாமரை நகருக்குள்ள போய் இரண்டாவது வலது திருப்பத்துல அவ வீடு. இரண்டாவது வலது திரும்புற இடத்தில நான் நேரா போய்டுவேன். பத்தாவது காலாண்டுத் தேர்வுக்கு முன்னால ஷீலா அறிமுகமாகிற வரை இப்படித்தான் வந்துட்டிருந்தேன்.கிட்டதட்ட ஒண்ணர வருஷம். அதே இடம் அதே சைக்கிள் பின் தொடரல்னு இருந்தேன். ஷீலா நட்பு கிடைச்சதும் அதே ஐந்தரை மணிக்கு நான் அவளோட இருக்க வேண்டியதா இருந்தது. அதுனால குறிஞ்சிய பாக்கிறது கட் ஆச்சி. நான் பாக்க தம்மா தூண்டு இருந்ததால குறிஞ்சிக்கு என் மேல சந்தேகம் எதுவும் வந்திருக்காதுன்னுதான் நெனைக்கிறேன். சனி ஞாயிறுல சாயந்திர டைம்ல யாரோட டிவிஎஸ் 50 யாவது மாட்டும். அத எடுத்துட்டு குறிஞ்சி வீட்டுத் தெருவுக்கா போவேன். குறிஞ்சி வீட்டு முன்னால முல்லை பூக் கொடி ஒண்ணு இருக்கும். அந்த கொடிய அவங்க வீட்டு மாடில ஏத்தி விட்டிருப்பாங்க எங்க வீடு மாதிரியே. குறிஞ்சி பாவாட சட்ட போட்டுட்டு பூவ மாடிப்படிக்கட்டில இருந்து எட்டி எட்டி பறிச்சிட்டிருப்பா. அப்பலாம் எனக்குள்ள பூபூக்குற மாதிரி இருக்கும்.”

1. மணலூர் பேட்டை உஸ்மான் சித்தர் ஃப்ராடாமே உனக்கு தெரியுமா அவர?
2. தாமர குளத்தில நெறய தாமரை பூ இருக்குமா?
3. குறிஞ்சிக்கும் உனக்கும் எட்டு வயசு வித்தியாசம். ஷீலாக்கும் உனக்கும்? அதுவும் இல்லாம நீ காதல் ங்கிற வார்த்தய ரொம்ப தேய்க்கிற. பாக்கிற பொண்ணுங்க மேலலாம் வர்ரதுக்கு பேர் காதல் இல்ல. இந்த வார்த்தய பயன்படுத்த உனக்கு எந்த அருகதையும் இல்ல. தயவுசெஞ்சி இனிமே இந்த வார்த்தய பயன்படுத்தாத.

தெரில. எனக்கு இந்த மாதிரி சாமியாருங்க மேலலாம் நம்பிக்க இல்ல. நித்யானந்தம் என்னோட க்ளாஸ்மேட்தான் ஆனாலும் போய் பாக்கனும்னு கூட தோணினதில்ல.

அந்த குளத்தில பூவே இருக்காது. தாமர பூ ஒரு காலத்தில இருந்ததாம். நான் பொறக்கறதுக்கு முன்னாடி. இப்ப இல்ல. ஆனா அது ரொம்ப பெரிய குளம்.

ஷீலா என்ன விட 2 வயசு பெரியவ. சரியா படிக்க மாட்டா அதுனால 2 வருஷம் பெயிலாகி கேர்ல்ஸ் ஸ்கூல்ல பத்தாவது படிச்சிட்டு இருந்தா. என் ஏரியா பொண்ணுதான். ஆனா பேசினதில்ல. திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு வந்து எனக்கு கணக்கு சொல்லித் தர்ரியா ன்னு கேட்டா. அப்ப இருந்து தினம் சாய்ந்திரம் என் வீட்டு மாடில அவளுக்கு கணக்கு சொல்லித் தந்தேன். நீ யூகிக்கிற மாதிரி நான் முதன் முறையா முத்த மிட்ட பெண் அவதான். ஒரு நாள் சாயந்திரம் பபுள்கம் மென்னுட்டு இருந்தா நான் எனக்குன்னு கேட்டேன் இந்தா எடுத்துக்கன்னு நாக்குல பபுள்கம் வச்சி நீட்டினா. நான் எடுத்துகிட்டேன். காதல்னா புனிதம் அப்படிங்கிற உன் மிகைப்படுத்தல் புண்ணாக்குத் தனங்கள எப்படி உன் கிட்ட இருந்து துரத்தி அடிக்கிறதுன்னு எனக்குத் தெரில. நான் உன்னயும் காதலிக்கிறேன் அப்படிங்கிறது உனக்கு தெரியும்தான? நீ வாய்கிழிய சொல்ர இல்ல, ஒருத்தனதான் காதலிச்சேன் இனிமேலும் அப்படித்தான்னு, நீ சொல்லும்போதெல்லாம் உன்னோட போலித்தனம் பிரம்மாண்டமா முன்னால வந்து நிக்குது. நான் அடிச்சி சொல்ரேன் இந்த ஒலகத்துல எவனாளும் இல்ல எவளாலும் ஒருத்தனோட ஒருத்தியோட லாம் தன் காதல் உணர்வுகள நிறுத்திக்க அல்லது திருப்திபட்டுக்க முடியாது. அப்படி கிட்டேன், பட்டுட்டேனு சொல்ர உன்ன மாதிரி ஆளுங்கள விட போலிங்க யாருமில்லன்னுதான் தோணுது…

”குறிஞ்சிய காதலிச்சிட்டு இருக்கும்போதுதான் மோகமுள் படிச்சேன். என்ன விட எட்டு வயசு பெரிய பொண்ண காதலிக்கிறனேன்னு இருந்த சின்ன குற்ற உணர்வும் காணாம போய்டுச்சி. எப்பலாம் குறிஞ்சி நினைவு வருதோ அப்பலாம் மோகமுள் படிச்சேன். யமுனா குறிஞ்சி மாதிரியே இருக்கிறதா நெனச்சிகிட்டேன். தன்ன விட அதிக வயசு உள்ளவங்கமேல காதல் வயப்பட்டா தப்பா? அது ஏதாவது மன வியாதியா? இந்த சைக்காலஜிஸ்டுங்க எல்லா இயல்பான உணர்வுக்குமே வாய்ல நொழயாத பேர ஒண்ண வச்சிடுவாங்களே! இந்த உணர்வுக்கு அவங்க என்ன பேர் வச்சிருக்காங்களாம்?. அப்ப இதயம் னு ஒரு படம் வேற பார்த்தேன். ஹீரா இடத்தில குறிஞ்சி, காட்டன் சாரியோட மண் மீது நடக்க கூடாத பாதங்களோட, தினம் என் கனவில நடந்திட்டிருந்தா. சைட்ல ஷீலா வேற தினம் பபுள் கம் திங்க ஆரம்பிச்சா. நான் அப்ப ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்திருந்ததால உதட்டு முத்தத்துல எக்ஸ்பர்ட் ஆகி இருந்தேன்.”

1.சில டைம் என்ன நானே நொந்துக்குறேன்.உன்ன மாதிரி ஒரு ஜென்மத்தோடலாம் சவகாசம் வச்சிருக்கேன்னு
2.நீ சொல்ரதுலாம் சுத்தப் பொய் 2 வருஷம் முன்னால ஒரு நாள் நைட் நல்லா குடிச்சிட்டு எனக்கு போன் பண்ணி அழுத ”ஐ லாஸ்ட் மை விர்ஜினிட்டி”ன்னு இப்ப என்னடான்னா ஒம்பதாங்க்ளாஸ்லயே ஜேம்ஸ்பாண்ட் ஆனேன்னு கத வுட்ற.அடங்கு மவனே!.
3.வயசு அதிகமான பெண் மேல வர்ர ஈர்ப்புக்கு பேர் தெரில.ஒரு வேள ஆண்ட்டி போபியாவா இருக்குமா :)

நல்லா நொந்துக்கோ
முத்தம் கொடுத்தாலாம் விர்ஜினிட்டி போகுமா? என்னடி கொடும? ? ஒம்பதாங்க்ளாஸ் இல்ல பத்தாங்க்ளாஸ்.
நல்லா வைக்கிறடி பேர!.
சரி ரொம்ப வளவளன்னு போகுது இந்தா க்ளைமாக்ஸ்.....

போதும் நிறுத்து!! என்ன பெரிய க்ளைமாக்ஸ்?! அவளுக்கு கல்யாணமாகி இருக்கும். நீ உடனே வேற ஒரு பொண்ணு பின்னால சுத்த ஆரம்பிச்சிருப்ப. இல்லனா அந்த பொண்ணு ஆக்சிடன்ல செத்துட்டா, காதல் தோல்வில தற்கொல பண்ணிகிட்டான்னு ஏதாச்சிம் சோ கால்ட் ஷாக்கிங் ரீல் விடுவ. ஐ டோடலி ஹேட் யுவர் சோ கால்டு ரைட்டிங்!! ஓடிப்போஓஓஒ... வந்துட்டான் கத சொல்ரன்னு. கெட் லாஸ்ட்!!!

image :
Henri Rousseau's dream

Featured Post

test

 test