Monday, July 27, 2009

தாழிடப்பட்ட உள்ளறைகளிலிருந்து விசும்பும் குரல்கள்

MILK திரைப்படத்தை முன் வைத்து,

"If I'm killed, let that bullet destroy every closet door." - Harvey Milk

நிறம்,மொழி,சாதி,ஆரோக்கிய உடல் போன்ற வெளிப்புற சிறப்புத் தோற்றங்கள் மட்டுமே மனிதனை மனிதனாய் வாழ அனுமதிக்கின்றன. பெரும்பான்மைகளிலிருந்து ஏதோ ஒரு புள்ளியில் விலகும் சக மனிதர்களை விளிம்பிற்குத் துரத்தியடிப்பதே இப்பெரும்பான்மைக் கூடாரத்தின் உலகப் பொதுச் சமத்துவமாக இருந்து வருகிறது.சக மனிதனின் மேல் வன்முறையைத் திணிப்பதில் உலகின் எப்பாகத்தவரும் சளைத்தவர்கள் இல்லை.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாய் ஓரினச் சேர்க்கையாளர் ஹார்வி மில்க் 1977 ஆம் வருடம் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் “முதல் ஓரினச் சேர்க்கையாள” நகர மேற்பார்வையாளராக பொதுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்திய ஒபாமாவின் வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைந்திடாத வெற்றி அது.வெள்ளை மாளிகையில் முதல் கருப்பர் என்பதுபோல் சமூகத்தால் துரத்தியடிக்கப்படுபவர்களின் ஒட்டு மொத்த வெற்றியாக ஓரினச் சேர்க்கையாளர் மில்க்கின் வெற்றி கருதப் பட்டது.

தனி மனித சுதந்திரத்தைக் கொண்டாடுவதாய் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருக்கும் அமெரிக்காவில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் துன்புறுத்தப் பட்டார்கள். அவர்களுக்கான எந்த உரிமையையும் அரசும் அதிகாரிகளும் வழங்கியிருக்கவில்லை.மத வாதிகள் புனிதர்கள் என எல்லா தரப்பினராலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.எழுபதுகளின் ஆரம்பத்தில் ’சான் பிரான்சிஸ்கோ’ வரும் மில்க் அங்கு மக்கள் தொகையில் இருபது சதவிகிதத்தினருக்கு மேலிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஒன்று திரட்டுகிறார்.

தன் பால் உணர்வு குறித்தான குற்ற உணர்வு கொண்டு இருண்ட அறைகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியில் வர உதவுகிறார்.கூட்டங்கள், பேரணிகளென சக நண்பர்களை குழுவாய்த் திரட்டி சமுகத்தில் தங்களின் அங்கீகாரத்திற்காக தொடர்ச்சியாய் போராடுகிறார். ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த வெகு சன மிகை வெறுப்புகளை,ஓரினச் சேர்க்கையாளர்கள் பிடோபில்கள் என்பது போன்ற தவறான புரிதல்களை அவர்களிடையே இருந்து நீக்க பெரிதும் மெனக்கெடுகிறார்.மெல்ல மக்களின் ஆதரவைத் திரட்டி நகர மேற்பார்வையாளர் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்.

விளிம்புகளின் வெற்றிகளுக்கு அதிகார வர்க்கங்கள் பரிசளிக்கும் மரணத்தை ஏற்று தனது நாற்பத்தி ஒன்பதாவது வயதில் மடிந்து போகிறார்.அவர் பதவியேற்று ஓராண்டு கழிந்து சக மேற்பார்வையாளன் ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு அலுவலகத்திலேயே இறந்து போகிறார் மில்க்.

இந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே Milk என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் Gus Van Sant.ஹார்வி மில்க் கதாபாத்திரத்தில் ஷான் பென் நடித்திருக்கிறார். ஷான்பென் திரை வாழ்வில் இது மறக்க முடியாத கதாபாத்திரமாய் இருந்திருக்க கூடும்.இந்த வருட ஆஸ்கரை இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிப்பினுக்காகத் தனதாக்கிக் கொண்டிருக்கும் ஷான் பென் இதில் ஹார்வி மில்க் ஆக வாழ்ந்திருக்கிறார்.ஓரினச் சேர்க்கையாளனின் உடல் மொழி, குரல், லாவகம், குழைவு,என எல்லா வெளிப்பாட்டிலும் மிகக் கச்சிதமான நடிப்பை சாத்தியப்படுத்தி இருக்கிறார். In to the wild திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட ஷான் பென் தன்னுடைய திரை வாழ்வின் உச்சத்தை இக்கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எட்டியிருக்கிறார்.

இயக்குனர் Gus Van Sant இதுவரை இயக்கிய எல்லா படங்களும் உண்மைச் சம்பவங்களை அடி நாதமாக கொண்டவைகள்தாம்.உண்மையும் புனைவும் ஒரே திசையில் பயணிக்கும் லாவகமான திரைப்படங்களாகவே இவரது முந்தைய திரைப்படங்கள் இருக்கின்றன.ராபின் வில்லியம்ஸ் நடித்திருந்த Good Will Hunting திரைப்படம் எனக்குப் பிடித்த சிறந்த ஆங்கில க்ளாசிக்குகளில் ஒன்று.இவரது death trilogy (Gerry, Elephant and Last Days) பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.

எந்தக் காட்சியிலும் கதாபாத்திரங்களை தனித்துக் காட்டாததே இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.காதல் காட்சிகள் முத்தக் காட்சிகளென பெரும்பான்மைப் படங்களையும் இத்திரைப்படத்தையும் எவ்வகையிலும் வித்தியாசப்படுத்தாது மிகுந்த மகிழ்வை உண்டாக்கியது.

மக்களிடையே இருந்த ஓரினச் சேர்க்கை குறித்த தவறான பிம்பத்தைக் களைய தன் உயிரைக் கொடுத்துப் போராடிய ஹார்வி மில்க்கின் வாழ்வை திரைப்படமாக்கியதன் மூலம் பார்வையாளனிடமும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மிக அதிக உழைப்பும் ஈடுபாடும் கலைத் திறமையும் இது போன்ற ஒரு மாற்றக் கடத்திகளுக்கு அத்தியாவசியமானவை.அதை இத் திரைப்படம் மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.

வலைச்சூழலில் லிவிங் ஸ்மைல் வித்யா வின் பதிவுகளும் பகிர்வுகளும் வலைப்பதிவர்களிடைய இருந்த திருநங்கை பிம்பம் குறித்தான சரியான புரிதல்களை ஏற்படுத்தியதையும் இத் திரைப்படத்தினோடு தொடர்பு படுத்தலாம்.மேலும் வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினாலும் நம் பொதுச் சூழலில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் என நம்பலாம்.

*கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில்க்

Friday, July 24, 2009

முகமூடிக்காரர்களும் ஒப்பனைக்காரிகளும்


குற்ற உணர்வே இல்லாது நாட்களை நகர்த்த நான் இப்போது பழகிவிட்டிருக்கிறேன்.வெப்பம் மிகுந்த தனி மாலைகளில் எப்போதாவது என் சார்ந்த துக்கங்கள் பொங்கிப் பெருகும்.”வாழ்தல்” “இருத்தல்” குறித்தான கேள்விகளின் முன் நிகழ் கூசிச் சுருங்கும்.எதன் நிமித்தமான அலைவுகள் இவை?யாருக்காக இந்த வேடங்கள்?என குமைந்து போவேன். ஒரு முகமூடிக் கலைஞனின் சாமர்த்தியத்திற்கு எவ்விதத்திலும் குறைந்து விடாது கடந்து போகும் இந்நாட்கள்தாம் எத்தனை போலித்தனமானவை!.

சந்தடிகள் நிறைந்த வீதிகளிலிருந்து சப்தங்கள் பெருகிக் கொண்டிருக்கும் முன்னிரவில் எவருக்கும் கேட்டுவிடாதென உறுதி செய்தபடி அடித் தொண்டையிலிருந்து ஆங்காரமாய் என் நிகழின் மீது காறி உமிழ்கிறேன். போலித்தனமான, வெப்பம் மிகுந்த, தேவைகள் பெருத்த, சோம்பேறித்தனமான, ஒரே மாதிரியான, சூம்பிப்போன இந்த நாட்கள் எவ்வித உயிர்ப்புமில்லாமல் இவ்வெளியில் என்னைத் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை இவ்வலிந்து வாழ்தலின் துயரம் என்னை எழுத வைத்திருப்பின், இத்தளத்திற்கு என்னைக் கொண்டு வந்திருப்பின் அவைகளுக்கு என் நன்றிகள்.

ஒப்பனைகள் மிகுந்த லெபனான் தேசத்துப் பெண்ணொருத்தியை தினந்தோறும் பயணங்களில் பார்ப்பதுண்டு.முகத்திலறையும் காலை வெய்யிலில் முகம் முழுக்கச் சிவப்புச் சாயம் பூசி, கண்களை மையில் குளிவித்து, இதழ்களை சாயத்தில் முக்கியெடுத்து,இறுக்கமான உடையணிந்து, பெருகி வரும் வியர்வையினூடாய் பேருந்தினுக்காக காத்திருக்கும் அப்பெண்ணை என் வாகனம் கடக்கும்போது லேசான பரிதாப உணர்வொன்று மேலெழும்.அதே போல் விதம் விதமாய் புகைப்படமெடுத்துக் கொள்ளும் என் தோழிகளின் மீதும் வாஞ்சையொன்று பெருகும்.என் பிரியத்திற்குரிய ஒப்பனைக்காரிகளே!, தோழிகளே! ஏற்கனவே மிகுதியான ஒப்பனைகளால் நம் ஒவ்வொருவர் வாழ்வும் அழுகிக் கொண்டிருக்கும்போது இன்னுமெதற்கு இத்தனைப் பிரயத்தனங்கள்? தன்னை அழகென முன் நிறுத்திக் கொள்பவைகளின் பின்னிருப்பதெல்லாம் தோற்பதின் பயங்களாக மட்டுமே இருக்க முடியுமென்பது என் நம்பிக்கை.மேலும் அழகிற்கு ஒப்பணைகள் எதற்கு?

இந்த வகையில் உரையாடலினி தனித்தவள்.அவளுக்கு அலுவலகம் கிளம்ப பத்து நிமிடங்கள்தான் தேவைப்படும்.அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் ஆடைகளும் கண்ணாடியில் பதித்து வைக்கப்பட்ட ஒரு கருப்பு நிறப் பொட்டுமே அவளது ஒப்பனை வஸ்துக்கள். கண்ணாடி,லிப்ஸ்டிக்,சீப்பு,காண்டம்,நாப்கின்,இன்ன பிற எந்தக் குப்பைகளையும் அவளது கைப் பையில் காணமுடியாது.மன நிலைக்கு ஏற்றார் போல் வாசிக்கும் வழக்கம் அவளுக்கிருப்பதால் ஒரு தமிழ் புத்தகத்தையும் ஒரு ஆங்கில புத்தகத்தையும் எப்போதும் வைத்திருப்பாள்.

ஆரம்ப கால கரிபு கஃபே நாட்களில் இந்தப் பக்கத்தில் எழுதப்பட்டவைகளை அச்செடுத்து படித்துக் கொண்டிருப்பாள்.தினம் இருபத்தைந்து பக்கங்களென அச்செடுத்ததில் எழுநூறு பக்கங்கள் சேர்ந்து விட்டிருந்தன.ஒரு நாள் “தமிழ் சூழலுக்கு நீ எந்த அளவிற்கு குப்பைகள் சேர்த்தாயென்பது எனக்குத் தெரியாது ஆனால் உன்னால் என் வீடு குப்பையாகி விட்டது” என சிரித்தபடியே சொன்னாள். நல்லவேளையாய் அவள் இரு பேரெழுத்தாளப் பிதாமகர்களுக்கு வாசகியாய் இருக்கவில்லை.அவர்களின் வலைப் பக்கத்தையெல்லாம் அச்செடுத்தால் இந்த நகரத்தை அக்காகிதங்களைக் கொண்டே மூடி விடலாமெனத்தான் தோன்றுகிறது.

பின்பொரு நள்ளிரவில் எதையோ படித்துவிட்டு அவளிடம் கத்திக் கொண்டிருந்தேன்.”இவ் வெழுத்தாளர்கள் தத்தம் மனைவியரை கற்பில் சிறந்த, ஒழுக்கமான, ஆன்மீகமயமான, பக்திப் பழமாக ,உத்தம பத்தினிகளாக சித்தரிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. உலகத்தில் தன் மனைவியரைத் தவிர பிற பெண்களெல்லாம் அலைபவர்கள் எனச் சித்தரிப்பதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”

நல்ல தூக்கத்தில் இருந்த அவள் எழுந்துபோய் தன் மடிக் கனிணியை உயிர்பித்து என் கூகுல் ரீடரில் இருந்த அவர்களின் பக்கங்களை விலக்கிவிட்டுத் தூங்கி விட்டாள்.என்னிடம் என்னைப் பற்றிய எந்த ரகசியத் தகவல்களும் இல்லை என்பதை இந்த இடத்தில் சொல்லத் தேவையில்லைதானே.மறு நாள் விடிந்தும் விடியாததுமாய் என் அறை வந்தவள் என்னை எழுப்பாமல் என் மடிக்கணினியைத் திறந்து நெருப்பு நரியில் அவர்களின் பக்கங்களை தடை செய்துவிட்டுப் போய்விட்டாள்.அந்த நாளிலிருந்து இன்று வரை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்று காலை தொலைபேசினாள்.

“சாருவோட சமீபத்திய அந்தர் பல்டி ஒண்ணு”

“என்னவாம்?”

“மனுஷ்யபுத்திரன் சு.ரா ஸ்கூல சேர்ந்தவர்னு அவருக்கு இப்பதான் தெரியுமாம்”

“அடப் பாவமே”

“அனுப்பி வைக்கவா?”

“ம்ம்ம்”

சாரு ஒரு அப்பாவியா? அல்லது தன்னை உலகமறியாச் சிறுவன் என முன்னிறுத்திக் கொள்ள விழைகிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.அவ்வப்போது அவருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் கலகக்கார பிம்பம் விழிப்படைவது கண்டு மகிழ்வுதான் என்றாலும் பாபாக்கள் சித்து வேலை செய்து அவரை வடிகட்டின பூர்ஷ்வாவாக மாற்றிவிடுவதுதான் மிகப் பெரிய சோகம்.சுஜாதாவை நைசாக நகுலன் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார் சாரு.சம்பந்தப் பட்ட இரு ஆவிகளுக்கும் இவ்விசயம் தெரியாமலிருக்க பாபா உதவுவாராக.

Wednesday, July 22, 2009

ப்ரம்மரம் – மோகன்லாலின் உணர்ச்சிக் குவியல்



மலையாளத் திரைப்பட இயக்குனர் blessy யின் இயக்கத்தில் இதற்கு முன்பு ”தன்மாத்ரா” வும் ”காழ்ச்சா”வும் பார்த்திருக்கிறேன்.இரண்டு திரைப்படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. ப்ரம்மரம் வந்திருப்பதாய் தெரிந்ததும் நானும் ஆசிப்பும் சனிக்கிழமை மதியக் காட்சிக்கு சென்றிருந்தோம்.மிகப் பெரிய திரையரங்கில் எங்களைத் தனியாய் அமர்ந்து பார்க்க விடாமல் உடன் பத்து பேர் அமர்ந்திருந்தனர்.

மோகன்லால் தன்னுடன் ஏழாம் வகுப்பு சேர்ந்து படித்த நண்பனைத் தேடிக் கொண்டு கோயமுத்தூர் வருகிறார்.கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த ஒரு நாளில் அவரது வருகை நிகழ்கிறது.முரட்டுத் தனமான உருவமும், சந்தேகமான அணுகுமுறையும் அவ்வப்போது அதிரும் பின்னணி இசையும் படத்தின் துவக்க காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கின்றன.

சிறு வயது மோகன்லாலின் பள்ளி நினைவுகளாக காட்சிகள் விரிகின்றன. பள்ளிப் பொதுப் பணத்தை அலெக்ஸ்,உன்னி எனும் இரு மாணவர்கள் திருடிவிடுகின்றனர்.அதை எண்ணிக் கொண்டிருக்கும்போது உடன் படிக்கும் மாணவி பார்த்துவிடுகிறாள்.ஆசிரியரிடம் சொல்லப்போவதாய் திமிறும் அவளை குளத்தினுள் பிடித்துத் தள்ளி விட்டு ஓடிவிடுகிறார்கள்.அவ்வழியே வரும் மோகன்லால் குளத்தினுள் இறங்கி அச்சிறுமியை தூக்கி கரைசேர்க்கிறான். ஆனால் அச்சிறுமி இறந்துபோகிறாள்.அவளைத் தள்ளி விட்ட மாணவர்கள் மோகன்லால் தான் அச்சிறுமியை தள்ளிவிட்டதாய் பழி சுமத்தி சிறைக்கு அணுப்பி விடுகிறார்கள்.ஏழு வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வரும் மோகன்லால் சுற்றத்தாரின் பழிப்பு தாளாமல் ஒரு மலைப்பிரதேசத்தில் விஷ்ணு என்கிற பெயரில் வசிக்கத் துவங்குகிறார்.மனைவி மகள் என சந்தோஷமாய் நகரும் மோகன்லாலின் வாழ்வு ஒரு நாள் நிலைகுலைகிறது.ஒரு திருமணவீட்டில் இறந்துபோன அச்சிறுமியின் தாயார் மோகன்லாலை அடையாளம் கண்டறிந்து தூற்றுகிறார்கள்.தன் மனைவியிடம் மோகன்லால் தன்னுடைய பழைய வாழ்வை சொல்லியிராததால் பிரச்சினை வெடிக்கிறது.அவனொரு கொலைகாரன் என அவன் மகளே அவனிடம் வர பயப்படுகிறாள்.

இப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையாய் குற்றம் புரிந்த உன்னி கிருஷ்ணனையும் அலெக்ஸையும் தேடி மோகன்லால் கோயமுத்தூர் வருகிறார்.அவர்களை தன் மகளிடம் வந்து அவளின் அப்பா குற்றமற்றவன் என்பதை தெரிவிக்க வேண்டுகிறார்.ஆரம்பத்தில் வர மறுக்கும் உன்னிகிருஷ்ணனை மிரட்டிப் பணியவைத்து தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துப் போவதுதான் முதல் பாதி கதை.

சாலைப் பயணத்தை களமாக கொண்ட திரைப்படங்கள் இந்தியச் சூழலில் வெகு குறைவு.ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான சம்பவங்கள் சாலையில் நிகழ்வதாய் காட்டப்படுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கலாம்.இதற்கு முன்பு நான் பார்த்திருந்த சில தமிழ் படங்களாக மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அன்பே சிவம் போன்றவற்றை நம் சூழலில் வெளிவந்த சிறந்த On road படங்களாக சொல்லலாம்.ப்ரம்மரத்தில் இரண்டாவது பாதி முழுக்க சாலைப் பயணக் காட்சிகள் தாம்.

முழுக் கதையையும் முதல் பாதியில் சொல்லிவிட்டு எல்லாரும் எதிர்பார்க்க கூடிய ஒரு சோகமான திருப்பத்தை இறுதியில் வைத்துவிட்டு இரண்டாவது பாதியை நகர்த்துவதென்பது மிகச் சவாலான ஒன்று.தேர்ந்த திரைக்கதையாளர்களால் மட்டுமே சம்பவங்களை சுவாரசியமாக்க முடியும் என்பதற்கு blessy ஒரு நல்ல உதாரணம். வெகு சுலபமாய் யூகிக்க கூடிய, சாதாரண முடிவை தன்னுடைய அபரிதமான நடிப்பினால் வேறு தளத்திற்கு நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார் மோகன்லால்.இரண்டாவது பாதியில் விசுவரூபம் எடுக்கும் அவரது நடிப்பு பார்வையாளனைத் திகைப்படைய வைக்கிறது. மோகன்லாலை திரையில் இத்தனை உணர்ச்சிக் குவியலாய் நான் பார்த்ததில்லை.இத்தனை கச்சிதமான உடல் மொழி கொண்ட நடிகனை இந்தியச் சூழலில் பார்க்க மகிழ்வாய் இருந்தது.

தன் மகள் தன்னை கொலைகாரன் இல்லை என நம்பினால் மட்டும் போதும் என இறைஞ்சும் நெகிழ்வான அப்பாவாக முதல் பாதியில் மனதைத் தொடும் மோகன்லாலை விட இரண்டாம் பாதியில் ஒட்டு மொத்தமாக இழந்து போன வாழ்வின் மீதான கழிவிரக்கத்தையும், ஏமாற்றங்களையும் குரூரமாகவும், வன்முறையாகவும்,கேலியாகவும் வெளிப்படுத்தும் மோகன்லாலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மோகன்லாலின் மனைவியாக இரண்டு காட்சிகளில் மட்டும் பூமிகா வந்திருக்கிறார்.கச்சிதமான ஒளிப்பதிவு சாலைக் காட்சிகளை விறுவிறுப்பாய் படம் பிடித்திருக்கிறது. மிகையோ பூச்சோ இல்லாத, கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் நேர்த்தியாய் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சியில் நண்பனின் வீட்டு முகவரியை தேடிக்கொண்டிருக்கையில் விலாசம் சொல்லும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும், அவரை கீழே தள்ளி விட்டு வாகனம் விரையும் அக்காட்சியும் தேவையற்றது.Blessy போன்ற இயக்குனர்கள் இது போன்ற அபத்தமான துருத்திக் கொண்டிருக்கும் காட்சிகளை நம்பாமலிருப்பது நல்லது.

இந்த திரைப்படத்தை சிறந்த on road படம் அல்லது சிறந்த பழி வாங்கும் படம் என இரண்டு சட்டகத்திலும் அடைக்க தயக்கமாய் இருக்கிறது.எடுத்துக் கொண்ட கதைக் களத்தை நேர்த்தியாய் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் ஒற்றை வரி விமர்சனமாக இருக்கிறது. ஆனால் blessy போன்ற இயக்குனர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது நேர்த்தியான படங்களை அல்ல ”காழ்ச்சா” போன்ற கலைப் படைப்புகளைத்தான்.

Monday, July 20, 2009

முப்பத்தைந்து டிகிரி விடியல்

தகிக்கும் அதிகாலையில்
விழித்தெழ வேண்டியிருக்கிறது
முப்பந்தைந்து டிகிரி உஷ்ணச் சூரியனை
ஒற்றைக் கையால் மறைத்தபடி
சிற்றுந்தை அடைவதற்குள்
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன.
செல்லுமிடமெல்லாம் விழுங்கிக் கொள்ளும்
குளிரூட்டப்பட்ட அறைகள்
சவப் பெட்டியை நினைவூட்டுகின்றன.
ஈரப்பதம் அடர்ந்த இக்காற்றில்
உன் கிசுகிசுப்புகளை கேட்பது எங்கனம்?


நினைவில்
உன் ரோஸ் நிற உதடுகள்
கனவில்
உன் வெள்ளை நிற முயல்கள்
நிகழில்
முப்பந்தைந்து டிகிரி
அதிகாலை வெய்யில்.

Friday, July 17, 2009

வலைப்பூக்கள் சில பரிந்துரைகள்

”பிரபல பதிவர்” ”மூத்த பதிவர்” ”ஓட்டு போடுங்க” ”பின்னூட்டம் போடுங்க“ ”வாசகர் கடிதம்” ”சுய சொறி” ”முதுகு சொறி” ”விளம்பர வெறி” ”பிரபல வெறி” ”நாங்கலாம் ஒரு கேங்” என வலையுலகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சூழலிலும் எந்த ஒரு எழவெடுப்புகளிலும் கலந்துகொள்ளாது வலைப்பூக்களில் சாத்தியப்படுத்த இயலும் சுதந்திரத் தன்மையை படைப்புகளாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும் பின்னூட்டமிட இயலவில்லை.சென்ஷி அழைத்திருக்கும் இத்தருணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி.

1.யாத்ராவின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை.பெரும்பாலும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கவிதைகள்தாம்.(ஒரு வேளை புதியதாய் எழுத எதுவுமே இல்லையோ?)ஆனாலும் இவரது கவிதைகள் இயங்கும் தளம் நான் கடந்து வந்த பாதை மற்றும் நான் சிக்கிக் கிடந்த மனநிலை என்பதால் இவரது கவிதைகளில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

சென்ற வார போதை இரவில் இவர் பக்கத்தை முழுமையாய் படிக்க முடிந்தது.இதே மனநிலையோடு தொடர்ந்து இருக்க முடியாது.இருக்கும்போதே நிறைய எழுதிவிடுவது நல்லது.

2.நந்தா விளக்கு
இவரது தளமும் கவிதைகள்தாம் என்றாலும் மொழிச் சிக்கலற்ற ஆனால் உணர்வுச் சிக்கல் கொண்ட கவிதைகள்.ஆங்கில வார்த்தைகளை கவிதையில் பயன்படுத்துவதையெல்லாம் இவர் பொருட்படுத்துவதில்லை.மேலும் அசாதரண மன நிலைகள் இவரது கவிதைகளில் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

முன்னோரு காலத்தில் மரங்களும்
நடந்து கொண்டிருந்தன என்ற
சுவாரஸ்யமான கற்பனையை
நம் தர்கங்களால் சிதறடிக்காமல்
அடுத்த தலைமுறைக்கும்
காப்பாற்றித் தருவோம்
என் வீட்டுத் தோட்டத்தில்
சரிந்து கிடக்கும்
பூக்களின் பிணங்களின் மீது
நீ நடந்து வந்தாய்
பூமியை மதித்து மிதிக்கும்
ஒரு குழந்தையின் கால்களோடு



3.முத்துவேல்

முத்துவேலைப் போலவே அவரது கவிதைகளும் எளிமையானவை.எந்தச் சிக்கலுமற்ற பார்வையாளனின் விழியில் தெண்படும் காட்சிகளே இவரது கவிதைகள்.இலேசான மனநிலை வாய்ப்பதென்பது அபூர்வமானதுதானே அந்த வகையில் இவரது கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை.
நெரிசலான பேருந்தில்
யாரோ ஒருவன்
யாரோ ஒரு அம்மாவின்
பின்புறத்தில் தன்
ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்
பிறகு
அவ்வம்மாவின் மகளிடம்
அரைகுறையாக
அம்மாவைப் புணர்ந்தது
மகளுக்குத் தெரியாது
மகளைப் புணர்ந்தது
அம்மாவுக்குத் தெரியாது
என்று
அம்மூவரும் நம்பியிருக்கக் கூடும்
அல்லது
நடித்திருக்கக் கூடும்.



4.மதன் - பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்

மதனின் கவிதைகள் கொண்டாட்டமும் காமமும் நிரம்பியவை.இவரது வார்த்தைகளில் சிக்குறும் நிலைகள் உச்சமானவை.வாசிப்பின்பத்திற்கு இவரது பக்கத்தை உதாரணமாக சொல்லலாம்.
உள்சென்ற துவார வாயில்களின்
வழியாகவே பிதுங்கி வழிவது
வாழ்வின் சங்கீதம்
அதன் லயத்தோடு ஒட்டாமல்
ஆடுகிறேன்
கூத்தாடுகிறேன்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைக்கிறேன்
போட்டுடைத்துப் போட்டுடைத்துக்
கூத்தாடுகிறேன்.


5.லக்‌ஷ்மி சாஹம்பரி
என் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்... உணர்வுகளும் வார்த்தைகளும் நிரம்பிய என் உலகிற்கு உங்களை கூட்டிச்செல்கிறேன் ...என கிசுகிசுப்பான குரலில் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் கவிதைகள் இவருடையது.கவித்துவம் தாங்கும் மென் சொற்கள் காதலும் இணக்கமும் கொண்ட இவரின் வார்த்தைகள் வெறுமைகளை விரட்டியடிக்கச் செய்பவை.

இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை


6.நேயமுகில் - கார்த்திகா
கார்த்திகாவின் கவிதைகளும் சம தளத்தினுக்கானவையே.ஆனாலும் இவர் வார்த்தைகளில் கொண்டு வரும் சித்திரங்கள் கவித்துவமானவை.தாமிரபரணித் தண்ணீரின் மகிமையோ என்னவோ இவரின் கவிதைச் சித்திரங்களிலும் அதே தெருவும் மனிதர்களும் விரவிக் கிடக்கிறார்கள்.
அணில்கள் விளையாடும்
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.


அறுவரை மட்டுமே குறிப்பிட வேண்டுமென்பது செந்தழல் ரவியின் விதியாதலால் இவர்களோடு நிறுத்திக் கொள்கிறேன்.மேலும் எனக்குப் பிடித்தமான பக்கங்கள் இவர்களுடையதாய் இருக்கிறது.
அகநாழிகை,பிரவின்ஸ்கா,நேசமித்ரன் மண்குதிரை சேரல்

குறிப்பிடாதவர்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் என அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே.மேலும் புதிய பதிவர்களை பகிரும் நோக்கத்திலே இது எழுதப்பட்டது விடுபட்டுப்போன பிடித்தமானவர்கள் குறித்து பின்பொரு முறை.

Thursday, July 9, 2009

யதார்த்த தமிழ் சினிமா

திரையில் தமிழ்படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டிருந்தது.கடைசியாய் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது தொடர்ச்சியாய் சில தமிழ்படங்கள் பார்த்ததோடு சரி.இங்கு நாடோடிகள் திரைப்படம் வந்திருப்பதாக தெரிந்ததும் வார நாளிலேயே தியேட்டருக்குப் போனேன்.நல்ல திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது எப்போதுமே மகிழ்வானது.

தமிழ்சினிமா ‘நட்பு’ ‘காதல்’ என்கிற புளித்துப் போன அக்கப்போர்களிலிருந்து எப்போது வெளிவரப்போகிறதோ தெரியவில்லை.படத்தின் முதல் முக்கால் மணி நேரம் உட்காரவே முடியவில்லை.குண்டான பெண்ணை குடிக்க வைத்து குத்து போடவிடும் காட்சியில் எழுந்து ஓடிப்போய்விடத் தோன்றிற்று.சசி, பரணி மற்றும் அனன்யா மூவரும் மாய்ந்து மாய்ந்து நடிக்க மெனக் கெட்டிருக்கிறார்கள்.செயற்கையான நடிப்பென்பது எப்போதுமே கொட்டாவியை வரவழைக்குமொரு அபத்தம்.

இடைவேளைக்கு முன்பான பதினைந்து நிமிடம் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் தூக்கி உட்கார வைக்கிறது.ஒரு பதட்டத்தை விறுவிறுப்பை மிக நேர்த்தியாய் பதிவுசெய்திருக்கிறார்கள்.இந்தப் பதினைந்து நிமிடம்தான் மொத்தப் படத்தின் ஆறுதலான விசயமாகவும் இருக்கிறது.

’ஹீரோயிசம்’ ‘அட்வைசிசம்’ எனப் பிற்பாதி இன்னும் இம்சையாக இருந்தது. மேலதிகமாய் 4 x 4 காரை குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டுவது, காதைப் பிளக்கும் இசையை பின்னனியில் சேர்த்துவிடுவது போன்றவற்றின் மூலமாகவே விறுவிறுப்பை கொண்டுவந்துவிட முடியும் என நம்பியிருப்பது பரிதாபத்தையே வரவழைக்கிறது.சிம்பு,விஜய்,அஜித் படங்களில் தலைவிரித்தாடும் ஹீரோயிச அபத்தங்களுக்கான மாற்றாய் குறைவான அபத்தங்களோடு அதே ஹீரோயிசத்தைத்தான் சசியும் செய்திருக்கிறார்.கல்யாணம் செய்து கொண்டு போகும் அனன்யாவைப் பார்த்துக் கண்கலங்குவது, க்ளைமாக்சில் ‘வாழ்க்கை’ டைலாக் பேசுவதெல்லாம் மினி டி.ராஜேந்தரையே நினைவுபடுத்தியது.படத்தின் ஆறுதலாய் அந்த அல்டாப்பு அரசியல்வாதி குறைவான காட்சிகளில் வந்தாலும் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார். அவரின் பாத்திரத்தையாவது இன்னும் நீட்டிக்கச் செய்திருக்கலாம்.

சித்திரம் பேசுதடிக்கு பின்பு அஞ்சாதே தந்த மிஷ்கினைப் போல சுப்பிரமணியபுரத்திற்கு பின்பு நாடோடிகளை தர மெனக்கெட்டு வீணாகி / வீணடித்திருக்கிறார்கள் சசி& கோ.மிஷ்கினின் திரைக்கதையில் லேசாய் ஒரு பய உணர்வு எல்லா காட்சிகளிலும் தங்கியிருக்கும்.அந்த ஈர்ப்பை அந்த பயத்தை பார்வையாளனிடம் தக்க வைத்திருப்பதே தேர்ந்த திரைக்கதாசிரியனின் வெற்றியாய் இருக்க முடியும்.

மாயாண்டி குடும்பத்தாரை டிவிடியில்தான் பார்க்கமுடிந்தது.Ballentine சகிதமாய் பார்த்ததாலோ என்னமோ நாடோடிகளை விட மா.கு எனக்குப் பிடித்திருந்தது.அண்ணன் தம்பி செண்டிமெண்ட் என்பது இன்னும் அரதப் பழசான கொடுமைதான் ஆனாலும் நிஜ வாழ்வில் நானும் என் அண்ணனும் பாசப் பிணைப்பில் தமிழ் சினிமா அண்ணன் தம்பிகளையெல்லாம் ஓரம்கட்டுவோம் என்பதால் பல காட்சிகளில் நெக்குருகிப் போக முடிந்தது.படத்தின் ஒட்டு மொத்த திருஷ்டிப் பொட்டும் கடைசித் தம்பியான தருண் கோபி.சில காட்சிகளையெல்லாம் பார்க்கவே முடியவில்லை.அவர் மட்டும் கையில் கிடைத்தால் மண்டையில் நறுக் நறுக் கென்று நாலு கொட்டு வைக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.மற்றபடி இந்த படத்தில் எந்த பெண்ணுமே சிவப்பில்லை.திருவிழா,சாவு,காதுகுத்து என அசலான கிராமத்து வாழ்வை மண்வாசத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.தருண்கோபி பாத்திரத்தை சற்று செதுக்கியிருந்தாலே நிறைவான படமாய் வந்திருக்கக் கூடும்.கடைசி அரை மணிநேரம் உலக மகா அவஸ்தையாய் இருந்தது

நமது தமிழ்மூளைகள் எல்லா வடிவத்திலும் எல்லா இடங்களிலும் ஒரு கதாநாயகத் தன்மையை வேண்டி நிற்கிறது அல்லது வலுக்கட்டாயமாக அத் தன்மையை நுழைத்து விடுகிறது.பின்பு அந்தக் கதாநாயகத் தன்மை நிகழ்த்தும் சாகசங்களை வியந்து, தன்னுடையதாய் மகிழ்ந்து சுய புணர்ச்சி செய்து கொள்கிறது.இந்த இறுக்கமான கட்டமைப்பிலிருந்து நமது மூளைகள் எப்போது இளகுமெனத் தெரியவில்லை.

சிறுவர்களை சிறுவர்களாகவே நடிக்க வைத்திருக்கிறார்கள் ரீதியிலான விமர்சனங்களை வலைப்பக்கங்களில் படித்திருந்ததால் சற்று எதிர்பார்ப்போடுதான் பசங்க திரைப்படத்தைப் பார்த்தேன்.ஆனால் இதிலும் ஹீரோயிச சிறுவர்களை உருவாக்க நாம் தவறவில்லை.
பசங்க திரைப்படத்தில் பசங்களை விட எனக்கு பெரியவர்களையே பிடித்திருந்தது.ஒரு லேசான காதல் கதையை நயமாய் சொல்லியிருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது. தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் ஆன யதார்த்த சினிமாவிற்குள் பசங்க படத்தை தாராளமாய் பொருத்தி விடலாம்.இராமநாராயணன்,மணிரத்னம் பாக்கியராஜ் வகையறாக்கள் சிறுவர்களை வைத்து படமெடுப்பதாய் நம்மைத் துன்புறுத்தியதை விட இதில் துன்புறுத்தல்கள் சற்றுக் குறைவுதான். அந்தக் குட்டிப் பயல் ‘எப்பூடி’ எனச் சொல்லும்போது அள்ளிக் கொள்ளத் தோன்றுகிறதா இல்லையா!

சமீபத்திய திரைப்படங்களில் வெண்ணிலா கபடிக் குழு மிகவும் முக்கியமானதொரு பிரச்சினையைத் தொட்டிருந்தது.சக மனிதர்களிடம் புரையோடிப் போயிருக்கும் சாதி அடையாளத்தை மிகச் சரியாய் வெளிப்படுத்தியிருந்த விதம் பாராட்டப்பட வேண்டியது.ஆனால் இறுதிக் காட்சியுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.அதிர்ச்சி மதிப்பீடுகள் மூலமாய் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிடலாம் என நினைத்துவிட்டார்களோ என்னமோ? ஆனால் அதுவே இந்தப் படத்தை நிராகரிக்க இன்னொரு காரணமாகவும் அமைந்து விட்டது.ஆதிக்க சாதியினருக்கு தலித் இளைஞன் சாதிப்பதை ஏற்றுக் கொள்ள மிகப் பெரும் தயக்கங்கள் இருந்துவருகிறது. ஒரு விளிம்பிற்கு மரணத்தின் மூலமாய் வெற்றியை அல்லது வெற்றியின் பரிசாய் மரணத்தை தரும் தாராள மனதே ஆதிக்க மனோபாவங்களுக்கிறது.அதையே இத்திரைப்படம் வலியுறுத்துவதால் என்னால் இதனுடன் ஒத்துப் போக முடியவில்லை.நமக்கேன் வம்பு என ஒதுங்கிப் போயிருந்தால் அவன் சந்தோசமாய் வாழ்ந்திருக்க முடியும் என்கிற தொணியும் இத் திரைப்படத்தில் துருத்திக் கொண்டிருந்தது.மற்றபடி தமிழ் சினிமாவின் யதார்த்த சினிமாக்களில் இத்திரைப்படமும் முக்கியமானதுதான்.

கல்லூரி திரைப்படத்தின் இறுதிக் காட்சி தந்த எரிச்சல் வேறெந்த படமும் தராதது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிக கோரமான துன்பியல் நிகழ்வொன்றை திரைப்படமாக்கும்போது அது நிகழும் களமாக ஆந்திராவைக் காட்டியது எத்தனை கோழைத்தனம்!.இந்த அளவிற்கு கூடவா நமது இயக்குநர்களுக்கு முதுகு நிமிர்வில்லை எனத்தான் வருந்த முடிந்தது.

காதல்,பருத்தி வீரன்,சுப்பிரமணியபுரம் போன்றவை நம் சூழலில் யதார்த்தத்தின் உச்சத்தைத் தொட்ட படங்கள்.தமிழ் சூழலிலும் தரமான படங்களை ஓட வைக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை இத்திரைப்படங்கள் தந்தன.ஆனால் அதற்கு பின்னால் வரும் திரைப்படங்கள் யதார்த்த சினிமா போர்வையில் அபத்தங்களைத்தான் முன் நிறுத்துகின்றன.மேலும் ‘ஓடும் குதிரையில் சவாரி’ என்கிற வியாபார மனமும் நம்மவரிடையே பிரதானமாய் இருப்பதால்
“ஓப்பனிங் பஞ்ச் டைலாக்” “நாலு சண்ட” “நாலு குத்து” “அம்மா தங்கச்சி செண்டிமெண்ட்” என மசாலாக்களை கூட்டாக தயாரித்தவர்கள் அதே மனநிலையோடு “ஒரு கிராமம் (பெரும்பாலும் மதுர)” “லவ்வு “ “பிரண்ட்ஸ்” “தாவணி பிகர்” எனக் கதை பண்ண கிளம்பி இருப்பதும் இன்னொரு வகையிலான அபத்தமே.

உலகமே தலைகீழானாலும் தமிழ் மூளைகளை கிஞ்சித்தும் வளர விடாத பணியை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் சன் டிவி குழுமங்கள் நம் சூழலின் மிகப் பெரிய சாபக்கேடுகள்.அரசியல்,கலை,இலக்கியம்,சினிமா என எல்லா வடிவத்திலும் நம்மை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த வல்லூறுகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?

Friday, July 3, 2009

சாமியார் செத்துப் போனார்


தணிகாசலம் என் மடியில்தான் உயிரை விட்டார்.இரத்தக் குழம்பலாய் சிதைந்து போன உடலொன்று என் மடியில் தன் கடைசி நொடியை சுவாசித்தது.என்னுடல் முழுக்க தணிகாசலத்தின் இரத்தம்.பச்சை இரத்தம்.அதன் வாடை மூச்சு முட்டுவதாக இருந்தது.எனக்குள் பொங்கி வரும் உணர்வுகளை அந்த நிமிடத்திலும் பார்க்க முயன்றேன்.எப்போதுமே உள்ளே ஒருவன் விழித்துக் கொண்டிருப்பதாலோ என்னமோ என்னால் கதறி அழவோ,கண்ணீர் சிந்தவோ முடிவதில்லை.லேசான அதிர்ச்சி அல்லது லேசான துக்கத்தை மட்டுமே இப்போதெல்லாம் உணர முடிகிறது.

அவர் உயிரைப் பறித்த மண்பாடி லாரியின் டயர்களில் இரத்தம் தோய்ந்திருந்தது.கருநிற தார்சாலையில் இரத்தமும் சதையும் சிதறிக் கிடந்தன.வாகனத்தை ஓட்டி வந்த இளைஞன் புளிய மரத்தடியில் அமர்ந்து உரத்தகுரலில் அழுது கொண்டிருந்தான்.நான் நடு சாலையில் அவர் உடலை மடியில் கிடத்தியபடி செய்வதறியாமல் திகைத்துப் போயிருந்தேன். உள்ளிருப்பவனின் நினைவில் மஜித் மஜித்தின் "Father" திரைப்படக்காட்சி வந்து போனது.

போன ஞாயிற்றுக் கிழமை காலை பதினோரு மணிக்கு நடந்த சம்பவம் இது.எப்போதும் போல் நான் தணிகாசலத்தை சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்தேன்.இந்த வாரம் அவர் சிங்க தீர்த்ததிற்கு எதிரிலிருக்கும் மண்டபத்தினுக்கு தன் ஜாகையை மாற்றியிருந்தார்.போன ஞாயிற்றுக்கிழமை அவரை இரமணர் ஆசிரமத்திற்கு பின்புறமிருக்கும் பலாக்குளத்தில் சந்தித்தேன்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை இங்கு சந்திக்கலாமென சொல்லிருந்தார்.ஒரு அய்ந்து நிமிடம் முன்பு வந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாமோ என்கிற குமைச்சல்களும் அவர் என்னை எதிர்பார்த்துதான் பிரதான சாலைக்கு வந்தாரோ? என்கிற சந்தேகங்களும் இன்னும் என்னை குற்ற உணர்வில் மூழ்கடித்தன.

போக்குவரத்துக் காவலர்களும் மருத்துவமனை வாகனமும் என்னை நெருங்கியபோதுதான் சமதளத்தினுக்கு வர முடிந்தது.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செந்திலுக்கு தொலைபேசினேன்.உடலை என்னிடம் ஒப்படைக்கச் சொன்னேன்.ராஜேஷை கூப்பிட்டு புதிய உடைகள் எடுத்து வரச் சொன்னேன்.சிவாவை அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லிவிட்டு சிங்க முக குளத்தினுள் விழுந்தேன்.

பாசி விலகிய குளத்தினுள் விலகாப் பாசியாய் என்னுடல் மிதந்தது.ஆடைகளிலிருந்து இரத்தம் கரைந்து பசிய நீரை லேசாய் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது.நினைவு அவரின் நினைவில் அமிழ்ந்தது.எனக்கும் அவருக்குமாய் ஏதோ ஒரு இழை நெருக்கமாய் பின்னியிருந்திருக்கக் கூடும்.அவரின் கண்கள் உறைந்த அந்த நொடி என் விழித்திரையின் முன் விடாது மோதிக்கொண்டிருந்தது.நிச்சலனமான அக்கண்களில் சுத்தமாய் பயம் இல்லை.வலி இல்லை.மாறாய் நிறைவு இருந்தது.நன்றியுணர்விருந்தது.நான் சில நிமிடங்கள் உறைந்த அக்கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் பின்பு மெல்ல அப்பெருமித விழிகளை மூடினேன்.

தணிகாசலத்தை எனக்கு மூன்று வருடங்களாகத் தெரியும்.அவருக்கென்று நிரந்தர இடம் எதுவுமில்லை.திருவண்ணாமலையில் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்.நாற்பது வயதுக்கும் குறைவுதான்.அவரின் ஊர், விலாசம், குடும்பம்,இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதற்காக இப்படி அலைகிறார்? என்றெல்லாம் நான் அவரிடம் கேட்டதில்லை.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவரை சந்திப்பேன்.தொடர்ச்சியாய் புகைத்தபடி இரமணர், உண்மை, தேடல், இலக்கியம், பக்தி, ஞானம் எனப் பேசிக்கொண்டிருப்போம்.சுற்றி நிகழும் போலித்தனங்களை கேலி செய்வது அவருக்குப் பிடித்தமானது.அவரது எள்ளல்களை, சக மனிதன் மீதிருக்கும் பிடிப்பை, பிரபஞ்சத்தின் மீதிருக்கும் காதலை, வாழ்வின் மீதான பெரும் விருப்பை, நன்றியை, விருப்பங்களோடு கேட்டுக் கொண்டிருப்பேன்.பேச்சு இலக்கியம் பக்கம் திரும்பும்போது மட்டும் என் குரல் சற்று உரத்து ஒலிக்கும் மற்ற நேரங்களிலெல்லாம் அவர்தான் பேசிக் கொண்டிருப்பார்.

அவருக்குக் குடிப்பழக்கமில்லை.எது கிடைத்தாலும் புகைப்பார்.தியானம், வழிபாடு, ஒழுங்கு என எல்லாவற்றுக்கும் எதிராகவிருந்தார்.”சும்மா” இருப்பதை அவர் வலியுறுத்தினார். ”சும்மா” இருக்கவே அவர் சும்மாவாக பல வருடங்களாய் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் ”சும்மா” இருக்கமுடியவில்லையெனவும் சொல்லிக்கொண்டிருப்பார்.அதிகபட்சமாய் அவர் அவரைப் பற்றி சொன்னது இதுதான்.எனக்கு சும்மா இருப்பதன் மீது ஆர்வமிருக்கவே அவர் மீதும் அன்பிருந்தது.புகையைத் தவிர நான் எது கொடுத்தாலும் அவர் வாங்கி கொள்வதில்லை.ஒருமுறை உணவருந்த வீட்டிற்கு அழைத்ததையும் மறுத்துவிட்டார்.மற்றபடி இந்த மூன்று வருடத்தின் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளை அவரும் அவரின் பேச்சுமே என்னை நிறைத்திருந்தது.

வெகு நேரம் நீரில் கிடந்தேன்.ராஜேஷ் எனக்கான ஆடைகளை கொண்டு வந்தான்.செந்தில் அவரது உறுப்புகளை மருத்துவமனை எடுத்துக் கொள்ள தயங்கியபடி அனுமதி கேட்டான்.அவரின் அடக்க வேலைகளை கவனித்த சிவா அவரின் உறவினர்கள்,வீடு பற்றிய தகவல்களை சேகரிக்க முடியவில்லை எனத் திரும்பவந்தான்.எனக்கும் தெரிந்திருக்கவில்லை.அவரிடம் ஒரே ஒரு பை இருந்தது. ஜோல்னா பை. அந்த மண்டபத்தினுள் இருந்தது.பையினுள் இரண்டு வேட்டி சட்டையும் மூன்று கோடு போட்ட நோட்டு மட்டுமே இருந்தது.நோட்டு புத்தகத்தில் எந்த ஒரு எண்ணும் விலாசமும் இல்லை.ஏதோ கிறுக்கலாய் எழுதி வைத்திருந்தார்.எதையும் படிக்கும் மனநிலையில் இல்லை.

மாலையில் அவரது உடல் பொட்டலமாய் கைக்குக் கிடைத்தது.மலை சுற்றும் வழியிலிருக்கும் இடுகாட்டிலேயே அவரைப் புதைத்தோம்.மிகுந்த சோர்வுகளோடும் ஆயாசத்தோடும் ஒரு வார்த்தை கூட பேசாமல் நண்பர்களோடு குடித்த நாள் அதுவாகத்தான் இருந்தது.

அந்த ஜோல்னாப் பையிலிருந்த நோட்டுக்களை நேற்றுதான் வெளியில் எடுத்தேன்.எங்களின் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டிய சிங்க தீர்த்த குளத்துப் படிக்கட்டுகளில் அமர்ந்து படிக்கத் துவங்கினேன்.

”எனக்கு எதிலயுமே திருப்தி இல்ல...எனக்கு எதுவும் தொடர்ச்சியா பிடிச்சும் தொலய மாட்டேங்குது...ஏதாவது ஒரு புள்ளில திடீர்னு சகலமும் வெளிறிப் போகுது...நிஜமாவே எனக்கு எது பிடிச்சிருக்குன்னு தெரில...நான் எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டிருக்கனுன்னும் தெரில...நான் யாருக்காக இந்த அந்நிய நிலங்களில அலையனும்..இப்பலாம் தல வலிக்குது பயங்கரமா!..”

“எனக்கு இப்ப எப்டி தெரியுமா இருக்கு?யாரயாச்சும் நாலு அறை விட்டா நல்லாருக்கும் போல இருக்கு...இல்லனா யார்கிட்டயாச்சும் நாலு அறை வாங்கனாலும் நல்லா இருக்கும் போலத்தான் இருக்கு...இந்த ஒலகத்திலயே ரொம்ப நல்லவன இல்ல நல்லவள தேடிப் பிடிச்சி நாலு மிதி மிதிக்கலாம் போல இருக்கு.”

"நேத்து நைட் பயங்கர போதைல இந்த ஒலகத்திலயே என்னயும் மனுசன்னு மதிக்கிற அவளுக்கு போன் பண்ணி "உன்ன சுத்தமா பிடிக்கலடி"ன்னு கத்தனேன்.அப்ரமா அவள பயங்கரமா வெறுக்குரேன்னும் சொன்னேன்.அவளும் பதிலுக்கு கத்தினா நான்லாம் ஒரு ஈனப் பிறவின்னா “சரிடி ஐ லவ் யூ” ன்னு சொன்னேன் அவ அழுதிட்டா."

"பாஸ்! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னோட இந்த பைத்திய மனநிலைக்கு இவதான் பாஸ் காரணம்...நேத்து தனியா உக்காந்து யோசிச்சப்பதான் எனக்கு வெளங்குச்சு...நானாதான் நெனச்சிகிட்டேன் இந்த ஒலகத்திலயே நாந்தான் சந்தோசமான பிராணி ன்னு ஆனா அது அப்படி இல்ல பாஸ்!நான் நல்லா ஏமாந்துட்டேன்.அவமானமா இருக்கு எங்காச்சும் ஒயரமான எடத்தில இருந்து குதிச்சி செத்துடனும் போல இருக்கு."

“யோசிக்க யோசிக்க பயம் வருது.. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் யாருக்காக வாழ்ந்திட்டு இருக்கேன்ன்னுலாம் யோசிக்கும்போது செம வெறுப்பு வருது...இத எல்லாத்தயும் நிறுத்திட்டு எங்காச்சிம் ஓடிப்போய்டலாம் போல இருக்கு.”

“எனக்கு கதறி அழனும் போல இருக்கு ஆனா என்னால அழ முடியல...வாழ்நாள் முழுக்க என்னால அழாமலே போய்டும் போல இருக்கு...நான் கல்லு மாதிரி ஆகிட்டேன்...சாதா கல்லு கூட இல்ல.. பாறாங்கல்.. இல்லனா மரக்கட்ட ன்னும் வச்சிக்கலாம்.”

“சிலரலாம் பாக்கும்போது பயங்கர பொறாமயா இருக்கு.எவ்ளோ மென்மையா பேசுராங்க.எவ்ளோ மென்மையா பழகுறாங்க.வாழ்க்க மேல அவங்களுக்குலாம் எவ்ளோ நம்பிக்க இருக்கு.அடிக்கடி நெகிழுறாங்க.எப்டி இவங்களாலலாம் நல்லத மட்டுமே பாக்க முடியுதுன்னு தெர்ல.நான் ரொம்ப மோசம்.என்னால யாரையுமே சந்தேகப்படாம ஏத்துக்க முடியுறதில்ல.எனக்கே என்ன நெனச்சா கேவலமா இருக்கு. “

“நான் அடிப்படைல மென்மையான ஆள்தான்.. எப்படி இப்படி மாறிட்டேன்னு தெரில..எனக்கு யாரையுமே பிடிக்கல பாஸ்! உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன் இல்ல உங்க மேலயும் எனக்கு பெரிசா ஒண்ணும் பிடிப்பு கெடயாது.இப்படி மொத்தமா ஒளறிக் கொட்டிட்டு நான் பாட்டுகினு எந்திரிச்சி போய்ட்டே இருப்பேன்.அவ்ளோதான்.”

“என்ன நான் ரொம்ப மோசமா சுமந்திட்டு அலையுறனனோன்னு தோணுது.என்னோட பாரம் தாங்க முடியாததா இருக்கு.என்ன சுத்தி எனக்கே தெரியாம பின்னப்பட்ட இந்த வலைகளலாம் அறுத்தெறிஞ்சிட்டு எங்காச்சிம் ஓடிப்போய்டனும் போல இருக்கு.ஆனா எங்கயோ முழிச்சிட்டு இருக்க சுயநலம் அப்புறம் இந்த ஸோ கால்டு பொறுப்பு என்ன இந்த வலைக்குள்ளயே இழுத்துப் பிடிச்சிட்டு இருக்கு.”

“என்னால ஏன் யாரையுமே நிஜமா,சந்தேகமில்லாம,உண்மையான, அன்போட,அடிமனசுல இருந்து, மிகுந்த விருப்பத்தோட, நெகிழ்வோட ,நேசிக்கமுடியல?”

“எனக்குள்ள இருந்த காதல் உணர்வுலாம் எப்ப காணாம போச்சுன்னு தெரில.எல்லாரையும் வெறுக்கிறேன் நான்.யாரையுமே பிடிக்கல எனக்கு.எங்காவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்னு நான் இதுவர தேடி சலிச்சி ஏமாந்துதான் போனேன்.அப்றம்தான் இங்க வந்தேன்”

“ஒரு மத்தியானத்துல தோணுச்சி.அன்பு,நேசம்,காதல்,பரிவு இதெல்லாம் மொதல்ல மத்தவங்க கிட்ட தேடுரதே எவ்ளோ பெரிய தப்புன்னு.நான் இன்னும் ஆழமா எனக்குள்ள பயணிக்கனும்.”

”இன்னிக்கு நல்லா சிரிச்சேன்… சத்தம் போட்டு,ஆழமா,பைத்தியம் மாதிரி.. நடுராத்திரில ஏன் இப்படி சிரிப்பு வந்ததுன்னு தெர்ல…அடக்க மாட்டாத சிரிப்பு..வயிறு வலிக்க வலிக்க.. இருமல் பயங்கரமா பொங்கனுதுக்கப்புறம்தான் சிரிப்பு அடங்கிச்சு.நான் கஞ்சா அடிச்சா கூட ரொம்ப இறுக்கமா இருக்கிற ஆளு.. நான் எப்படி இப்படி சிரிச்சேன்னு தெரில.. சொல்லப்போனா இன்னிக்கு பீடி கூட புடிக்கல...சிரிப்படங்கினதுக்கப்புறம் ரொம்ப லேசா இருந்துச்சி.. நான் எப்பவுமே உணராத லேசு.. இவ்ளோ லேசா என்ன உணர்ந்ததே இல்ல…அப்படியே காத்துல மெதக்குற மேகம் மாதிரி ஆகிடுச்சி ஒடம்பும் மனசும்…இவ்ளோ நாளா கண்ணாமூச்சி ஆடிட்டிருந்த ஒண்ணு பளிச் னு கையும் களவுமா மாட்னா மாதிரி இருந்தது… அப்புறம் இதுநாள் வரைக்குமான என் வாழ்க்கைய நெனச்சி பார்த்தேன்.செம சிரிப்பு வந்தது…அவ்ளோதான் பாஸ் முடிஞ்சி போச்சு.”


மூன்று கோடு போட்ட நோட்டுகளிலுமே இவ்வளவுதான் இருந்தது.தேதிவாரியாகவெல்லாம் இல்லை.பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் எழுதப்பட்டிருந்தது.படித்து முடித்ததும் என்னை பயம் தொற்றிக் கொண்டது.செத்துப் போனது தணிகாசலமா? நானா என குழம்பிப் போனேன்.அவர் மடியில் என்னுயிர் போனதா? இல்லை என் மடியில் அவர் உயிர் போனதா? என நினைவுகள் அடுக்குகளை மாற்றியமைக்கத் துவங்கின.நான் எழுந்து நின்று தலையை உதறிக் கொண்டேன்.இல்லை நான் இன்னும் சாகவில்லை.செத்துப்போனது தணிகாசலம் சாமியார்தான்.

Featured Post

test

 test