Friday, January 16, 2009

நான் எழுத வந்திருக்காவிட்டால் குடிமுழுகிப் போயிருக்காது.-ஆதவன் தீட்சண்யா



கீற்றில் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தபோது ஓசூர் நினைவுகள் ஆக்ரமிக்கத் துவங்கின.கவிதைகள் அழகியல் சார்ந்தவை என்பதான என் நம்பிக்கைகள் உடைந்த கணம் நன்றாய் நினைவிலிருக்கிறது.ஆதவன் தீட்சண்யாவின் சுயவிலக்கம் கவிதையை படித்த கணம்தான் அது.திரும்ப திரும்ப வாசித்து என் கவிதை பிம்பங்களை உடைத்துக்கொண்டிருந்தேன்.
சுய விலக்கம்
நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக ..."
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்
கண்டுபிடிக்கக்கூடும்....

இக்கவிதையை நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டேன்.ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து என்ற வரிகள் மட்டும் என்னை திரும்பத் திரும்ப இம்சித்துக் கொண்டே இருந்ததன.அக்கவிதை படித்த காலகட்டத்தில் நான் ஓசூரில் வாழ்ந்திருந்ததாலும் ஆதவனின் நண்பர்கள் எனக்கும் நண்பர்களாய் இருந்ததாலும் தமுஎச கூட்டங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.ஆதவன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குறிஞ்சி திரைப்பட இயக்கம் என்றொரு இயக்கத்தை துவங்கினார்கள்.உலகத் திரைப்படங்களை நண்பர்கள் அனைவரும் கூடி ஒரு இடத்தில் திரையிடுவது, பின்பு அத்திரைப்படம் முன் வைக்கும் 'மாற்று'க்களை விரிவாய் உரையாடுவதென எனக்கான ஆரம்ப சன்னல் திறப்புகள் அற்புதமானதாய் இருந்தது.

சின்னண்ணன்,பா.வெங்கடேசன்,போப்பு,க.சீ.சிவக்குமார் என பெரும் கூட்டமே அங்கிருந்தது.எல்லாவற்றையும் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். மேலும் நான் அங்கிருந்த காலகட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளாக பலவற்றைக் குறிப்பிடலாம்.குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு கிட்டத் தட்ட இருபது நபர்களுக்கும் மேல் ஒரே அறையில் கூடி நண்பரொருவர் வாங்கிவந்திருந்த ஒரே புட்டி மதுவினை பகிர்ந்துகொண்டோம். பத்து மில்லி அளவிற்கு எனக்கும் வந்தது.அதை கையில் வைத்தபடியே சுயவிலக்கம் கவிதை தந்த உணர்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். டி.அருள்எழிலனின் ஒரு ராஜாங்கத்தின் முடிவில் குறும் படத் திரையிடல், பெயர் மறந்து போன ஒருவரின் கவிதை தொகுப்பு வெளியீடு (அவ்விழாவிற்கு பிரபஞ்சன் வந்திருந்தார்.அவர் சொன்ன ஜென் கதை நினைவிலிருக்கிறது), Children of Heaven பார்த்துக் கசிந்துருகியது என என் ஓசூர் காலங்கள் மறக்க இயலாதவை.மேலும் இங்கு எழுத்து போல் ஒன்றை கிறுக்கிக் கொண்டிருப்பதற்கான நன்றியுடைய துவக்கங்களாகவும் அவை இருக்கின்றன.

எழுத்தோடு மட்டும் நின்றுவிடாது களப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆதவனின் சமூகப் பங்களிப்பு சம காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.விளிம்பிலிருந்து எழும் விசும்பலான குரல்களுக்கிருக்கும் கழிவிரக்கமோ பச்சாதாபமோ ஆதவனின் குரலுக்கில்லை.ஆதவனின் குரல் அதட்டலானது.

வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும்
தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னை விட
ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்
அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத்
தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே
சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.

'மாற்று' அரசியல் மாற்றுச் சமூகமென தங்களுக்கான அடையாளங்களைத் துவக்கியவர்கள் மிகப் பெரும் நிறுவனங்களாக மாறிப் போய்விட்ட/போய்விடும் அபத்தங்கள் தொடர்ந்து நம் சூழலில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணங்கள் அங்கீகாரமின்மை என்கிற புள்ளியில்தான் முடியக் கூடும் அல்லது வாழ்வியல் தேவைகளாகவும் இருக்கலாம். நமது சூழல் எழுத்தாளனுக்கான போதிய அங்கீகாரத்தை தருவதில்லைதான் எனினும் அங்கீகாரமோ,புகழோ தனது நிழல்களைக் கூட தொட அனுமதியாத ஆதவன் தீட்சண்யாக்களும் நம் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் / இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றது.

முலையுதிர்சிறகு



புறாவின் இறக்கைகளைப்போன்று
அவளுக்கு
இரண்டு முலைகள்
இருந்தன
அத்தனை மிருது
அத்தனை இதம்
அத்தனைக் குளிர்ச்சி
இடைவெளியில்லா
இடைவெளியில்
முகம் புதைத்துச் சொன்னேன்
”முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
முகம் விலக்கி
சொற்களைச் சேகரித்துக் கொண்டு
வந்த வழி மறைந்தாள்
விழிக்கையில்
காணக்கிடைத்தது
பால்கனியில்
ஓர் ஒற்றைச் சிறகு

Thursday, January 8, 2009

அடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை



நேற்றும் எமிரேட்ஸ் சாலையை ஒட்டியிருக்கும் ஏரிக்குப் போய் வெகு நேரம் காத்திருந்து திரும்பினேன்.அந்தப் பறவை வரவே இல்லை.சென்ற வருடம் அதை இங்குதான் சந்தித்தேன்.சாம்பல் நிற உடலும்,வெள்ளை நிற இறக்கைகளும் கொண்ட பறவை அது.இறக்கைகளுக்கு உட்புறத்தில்,தூரிகையால் பட்டைக் கோடிழுத்ததைப்போல அடர் நீலத்தில் ஒரு தீற்றல் இருக்கும்.நீரிலிருந்து அப்பறவை மேலெழும்பும்போது,அதன் உட்புற நீலம் நில நீரில் பிரதிபலித்தது. குளிர்கால சாயந்திர சூரியனோடு அந்தப் பறவையின் பறத்தல்களை, படபடப்புகளை பார்த்துக்கொண்டிருக்க ரம்மியமாய் இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் என்னால் அந்தப் பறவையின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்பறவையை மிகக் கவனமாய் அவதானித்து அதன் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என இந்தக் குளிர்காலத்திற்காய் காத்திருந்தேன்.

சிறுவயதிலிருந்தே என்னை இந்தப் பெயர்கள் அறிந்து கொள்ளும் வியாதி பாடாய் படுத்தி வருகிறது.கண்ணில்படும் மரம்,செடி,பறவை,விலங்கு,ஊர்வன,நெளிவன என அத்தனைக்கும் பெயர் தெரிய வேண்டும். இல்லையெனில் மண்டை வெடித்து விடுவது போலிருக்கும்.இந்தப் பிடிவாத பழக்கத்தால் நான் வாழ்வில் இழந்தைவைகளை பட்டியலிட ஆரம்பித்தால் அது இச் சிறுகதையை சலிப்பான குறுநாவலாக மாற்றிவிடும்.அதனால் எனக்கெப்படி இந்த பழக்கம் வந்தது என்பதை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்புகிறேன்.

என் தந்தை வழிப் பாட்டிக்கு மூலிகை வைத்தியம் தெரியும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் என் பாட்டியின் பெயர் மிகவும் பிரபலம். அவள் மூலிகைகள் சேகரிக்கச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துப் போவாள். குறுங்காடுகள், ஏரிக்கரைகள், வயல் தோப்புகள், மரங்கள் அடர்ந்த மலையடிவாரங்களென நானும் என் பாட்டியும் மூலிகைகளைத் தேடி அலைவோம்.என் பாட்டிதான் எனக்கு எல்லா செடி கொடிகளின் பெயர்களையும் சொல்லித் தந்தாள். நூற்றுக்கும் அதிகமான மூலிகைச் செடிகளின் பெயர்கள் எனக்கு மனப்பாடமாகியிருந்தன.எந்தச் செடியினைப் பார்த்தாலும் அதன் பெயரை உடனே சொல்லிவிடுவேன்.இரண்டு இலைகள் ஒரே போல இருந்தாலும் அவைகளுக்கிடையிலான துல்லியமான வேறுபாடுகளை கண்டறியும் அளவிற்கு என்னைத் தயார்படுத்தியிருந்தாள்.மேலும் வழியில் தென்படும் மரங்கள்,பறவைகள் என எல்லாவற்றின் பெயரையும் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.என் பாட்டிக்கு எல்லாவற்றினுக்கும் பெயர் தெரிந்திருந்தது அல்லது இவளாகவே புதிது புதிதாய் பெயர்களையும் வைத்திருக்கக்கூடும். ஆனால் கடைசி வரை விஷத்தை முறிக்கும் இலைச்செடியின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்ட்டாள்.சிலவற்றின் பெயர்களை வெளியில் சொன்னால் அது பலனளிக்காமல் போய்விடும் என்கிற நம்பிக்கைகளும் என் பாட்டியிடம் இருந்தன.மொத்த விஷமுறிவு இலைகளையும் அவள் பச்சிலை என்கிற ஒரே சொல்லால் குறிப்பிட்டாள்.ஆனால் தேள் கடிக்கும்,பாம்பு கடிக்கும் வெவ்வேறு இலைகளைத் தரவேண்டும்.

இவ்வாறு துவங்கிய என் பெயர் அறிதல் பழக்கம் பதின்மங்களில் வியாதியாய் மாறத் துவங்கியது. கண்ணில் படும் எல்லாப் பெண்களின் பெயர்களும் எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என்கிற எண்ணங்கள் முதலில் எழ ஆரம்பித்தன.என் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை எல்லா பெண்களின் பெயரும் எனக்கு மனப்பாடமாகி இருந்தன.இனிஷியல் பிசகாமல் எதிர்ப்படும் ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் துல்லியமாய் சொல்வேன். இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை சொல்ல ஆரம்பித்தால் அது மிகவும் சலிப்பானதொரு நாவலாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. மேலும் நானொரு சிறுகதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வதன் மூலம் என்னுடைய கவனமும் உங்களுடைய கவனமும் பிசகிவிடாமல் இருக்கலாம்.

பின்பு என் பிரச்சினைகள் குறித்து நானே தீர்க்கமாய் சில முடிவுகள் எடுத்தேன்.ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். மனிதர்கள் அதிகமாய் புழங்கும் இடங்களைத் தவிர்த்தேன்.சராசரி மனிதனுக்கு நிறைவையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய எல்லாச் செயல்களிலும் விலகித் தனித்திருந்தேன்.நகரம் சார்ந்து வாழத் தொடங்கிவிட்டதால் கண்ணில் தென்படும் பறவைகள்,மரங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்தன.பெண்கள் கண்ணில் படாதபடி மட்டும் மிகவும் தற்காப்பாய் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.இரண்டு வரியில் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டதை நான் எழுதியிருந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள என் சிரமங்கள், இழப்புகள் உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

இந்த நாட்டிற்கு இடம் பெயர்ந்த பிறகு அலுவலகத்திலும் வீட்டிலுமாய் அடைந்து கிடைக்க இணையம் உதவியது.எழுத்து போல ஒன்று என் கைவசமானதும் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தார்கள்.குறிப்பாய் பெண்களுக்கு என் எழுத்து மிகவும் பிடித்தது.எந்த ஒன்றினை விட்டு விலகியும் பதுங்கியுமாய் இருந்தேனோ அந்த ஒன்று எழுத்து வடிவங்களில் என்னுடன் பேச ஆரம்பித்தது.இறுக்கமாய் அடைக்கப்பட்ட குப்பிகளிலிருந்து பீறிட்டெழும் மதுவைப் போல பெண்களின் எழுத்துக் குரல்கள் என்னில் மிகப்பெரும் பொங்குதல்களை சாத்தியமாக்கிக் காட்டின.அடைந்த என் நெடுந்தனி வாழ்வின் புதுவித சன்னல் திறப்பு என மகிழ்ந்து போனேன்.இந்த மகிழ்ச்சியையும் நீடிக்க விடாமலிருக்க அவள் என் உலகத்தில் பிரவேசித்தாள்.வினோத எண்கள் மற்றும் குறியீடுகளைப் பெயர்களாக வைத்துக்கொண்டு என்னை அணுகினாள்.என் எழுத்துக்கள் பித்த நிலையின் துவக்கமெனவும் எழுதுபவனுக்கோ, தொடர்ச்சியாய் படிப்பவனுக்கோ மன நிலை பிறழலாம் எனவும் எச்சரித்தாள்.நான் அவள் பெயரை சொல்லும்படி வலியுறுத்தினேன்.அவள் பிடிவாதமாய் மறுத்தாள்.என் இயல்பு நிலை மீண்டும் குலைந்து போனது.நான் அவளை விடாது வற்புறுத்தினேன். கெஞ்சினேன். கத்தினேன். மிரட்டினேன்.கடைசியில் பெருங்குரலெடுத்து அழுதேன்.அவள் மிகவும் பிடிவாதமாக தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டாள்.

கிட்டத் தட்ட எழுபத்தெட்டு நாட்களாக தொடர்ச்சியாய் நான் அவளையே சிந்தித்தேன்.அவள் இருக்கும் இடம் குறித்தும் என்னால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பறவையின் நகர்வுகளைப் போல அவள் பிரவேசங்களிலும், விடைபெறல்களிலும் எவ்வித தடயங்களும் மீதமிருக்கவில்லை.கடைசியில் அவளொரு வினோதப் பறவை என நம்பத் துவங்கினேன்."எந்தப் பறவைக்குத் தெரியும் தம் பெயர் இன்னதென்று?" எனவே நானே அவளுக்கொரு பெயர் சூட்டினேன்.பின்புதான் என் உலகம் சம நிலைக்குத் திரும்பியது.இந்த அலைக்கழிப்பிற்கு பிறகு அவளுடனான என் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.

சென்ற ஒரு வருடமாகத்தான் மீண்டும் பறவைகள் பக்கம் திரும்பியிருக்கிறேன். குளிர்காலங்களில் இந்த நாட்டிற்கு நெடுந்தொலைவிலிருந்து பெருமளவு பறவைகள் வரும்.சாலையோரப் புல்வெளிகள், பூங்காக்கள், கார்னீஷ்கள், ஏரிகள்,கோட்டைச் சுவர்களென பறவைகள் எல்லா இடங்களிலும் கூட்டமாய் சிறகடித்துக் கொண்டிருக்கும்.தினம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்வேன்.வடிவம்,நிறம்,அலகு இவற்றைக் கொண்டே அப்பறவையின் பெயர்,திசை எல்லாவற்றையும் சொல்லிவிடலாம்.கண்முன் நகரும் ஒவ்வொன்றின் பெயரையும் சன்னமாய் உச்சரித்தபடி பார்த்துக்கொண்டிருப்பேன். புதிதாக ஒரு பறவையை பார்க்க நேரிடின் பரபரப்படைவேன்.அதன் பறக்கும் விதம், வடிவம் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்.அது சாப்பிடும் முறை, அதன் பிரத்யேக குணாதிசயங்கள் இவற்றையும் கவனமாய் குறிப்பெடுத்துக் கொள்வேன்.இணைய தளங்கள் அல்லது பறவை ஆராய்ச்சியாளர்களை பாடாய் படுத்தி அப்பறவையின் பெயரைத் தெரிந்துகொள்வேன்.சென்ற வருடத்தில் இந்த அடர் நீலத் தீற்றல் கொண்ட பறவையை சரியாய் புகைப்படமெடுக்காமல் விட்டுவிட்டேன்.கடந்த ஒரு வருடமாக இந்த அடர் நீலத் தீற்றல் கனவிலும் நினைவிலுமாய் மின்னிக் கொண்டிருக்கிறது.இந்த வருடத்தில் எப்படியும் இதன் பெயரைக் கண்டறிந்து விட வேண்டும்.

ஒருவேளை இந்தக் குளிர்காலத்தில் அப்பறவை வராவிடின் இன்னொரு பறவைக்கும் நானே பெயர்சூட்ட வேண்டி வரலாம். ஆனாலும் என் பாட்டியினைப் போல நான் இன்னமும் பொருத்தமான பெயர்களை வைக்கக் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெயர்கள் கிளைக்கும் வேர்கள் திகைத்த பின்னர்தான் நான் பெயர் சூட்ட முனைகிறேன்/முனைவேன். அதுவரையிலும் வேரெங்கிலாவது உயிர் கொண்டிருக்கும் அடையாளங்கள் என்னை நோக்கி வரும் வரையிலும் நான் காத்துக் கொண்டிருப்பேன் அல்லது தேடிக்கொண்டிருப்பேன்.

சில குறிப்புகள்...

1.அந்தப் பெயர் சொல்ல விரும்பாத பறவைக்கு/பெண்ணுக்கு நான் வைத்தப் பெயர் உரையாடலினி.

2.இந்த ஒரு பிரதி முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகளுக்கான கருவைக் கொண்டிருக்கிறது. அல்லது இப்பிரதியிலிருந்து இன்னும் முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகள் எழுதப்படலாம்.

3.இப்பிரதியிலிருந்து "குறியீட்டு வடிவினளுடன் நிகழ்ந்த எழுபத்தெட்டு நாள் உரையாடல்கள்" என்கிற தலைப்பில் ஒரு நாவல் எழுதப்படலாம்.அதன் பக்க அளவு பரவலாய் எல்லோராலும் பயமுறுத்தப்படும் அசோகவனம் நாவலை விட அதிகமாக இருக்கலாம்.

Tuesday, January 6, 2009

தூங்கும் ஏரிகள்


சிறுவர்கள் சறுக்கிக்
குதூகலிக்கும்
இப்பனித் தரையின் கீழ்
ஏரிகள்
உறைபனி போர்த்தித்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.

கீஸ்லோவெஸ்கியின்
திரைப்படமொன்றில்
விழித்தெழும்
உறைபனி ஏரியொன்று
பசியில் சில சிறுவர்களை
விழுங்கி விடும்.

கவனம்,
உறைபனிக் காலங்களில்
சிறுவர்களை
விளையாட அனுப்பும் முன்
அவர்களின் இறக்கைகளை
சரிபாருங்கள்.

மிடில் க்ளாஸ் கேனயன்

"யோவ் வாராவாரம் சரக்கடிக்கிறியா?"
"இல்லடா.. நிறுத்தி மாசக்கணக்காவுது"
"தம்மு"
"அதையும்தான்"
"அடப்பாவி!.. சரி ஆபிசுக்கு சோத்து மூட்ட கொண்டு போறியா?"
"ஆமாம் "
"என்ன செலவு பன்றோம்னு எழுதி வைக்கிறியா?"
"ஆமாண்டா"
"அப்ப நீ மிடில் க்ளாஸ் கேனயன் தான்யா"
"போடாங்க்க்க்க்…"

கதிரின் இந்த மதிப்பீடு சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.நான் ஒன்றும் பெரிய்ய கலகக்காரனோ, புரட்சிப் பகுத்தறிவு பாவலனோ இல்லையெனினும் சராசரி முத்திரைகள்/அடையாளங்கள் மீது போதிய வெறுப்புள்ளவனாகத்தான் என்னை நம்பிக்கொண்டிருந்தேன்.இப்போது நாமும் சராசரி வட்டத்தினுக்குள் மாட்டிக்கொண்டோமா என்கிற பயமும்,கலக்கமும் சிறிது நேரம் நீடித்திருந்தது. பிரான்சில் moron என்பது மிகப்பெரிய கெட்ட வார்த்தை.French new wave திரைப்படங்களில் you moron என்றுதான் பெண்கள் ஆண்களைத் திட்டித் தொலைக்கிறார்கள். கதிர் கெக்கலித்துவிட்டுப் போனது சிறிது நேரம் காதிலேயே ஒலித்துக் கொண்டிடுந்தது.பின்பு yes I’m a moron.. typical… middle class… morrrrrronnnnnn!!!!!! என சத்தமாய் கத்தினேன்.சக அப்பாவி ஜீவனுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்ததை எந்த எதிரசைவும் இல்லாமலிருந்ததில் இருந்து புரிந்தது கொள்ள முடிந்தது.

சாரு, ஜெமோ பக்கங்களை நண்பர்கள் பரிந்துரைத்தாலொழிய எட்டிப் பார்ப்பதில்லை.எஸ்.ரா,நாகார்ச்சுனன்,பிரம்மராஜன் பக்கங்கள் மன நலத்திற்கு தீங்கிழைக்காதவைகளாய் இருப்பதால் பாதுகாப்பான வலை வாழ்வையும் வாழ்ந்து விட முடிகிறது.சுரேஷ் கண்ணன் பரிந்துரைத்த ஜெமோ வின் மத்தகம் குறுநாவல் ஒரு அத்தியாத்தினுக்கு மேல் கொட்டாவி விட வைத்தது. ஜெமோவை இனிமேல் என்னால் படிக்கவே முடியாதோ என்கிற எண்ணங்களும் எழுந்தன.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அடர்பனி நாளின் பின்னிரவில் படித்து முடித்த,ஏழாம் உலகம் நாவல் அனுபவம் நினைவில் வந்தது.ஷார்ஜா வந்தப் புதிதில் வார இறுதி இரவுகளை புத்தகங்களுக்காக ஒதுக்கியிருந்தேன்.ஒரு வியாழக்கிழமை இரவு பத்து மணி வாக்கில் துவங்கி, இரண்டு மணிக்கு ஏழாம் உலகத்தை முடித்தேன்.மிக அரூபமான கசப்புகளும், குரூரங்களும் என்னை ஆக்ரமிக்கத் துவங்கின.என் இயல்பு நிலை சுத்தமாய் தொலைந்து போய்,தூங்கவே முடியாத ஒரு நிலைக்குத்தில் உட்கார வைத்தது அந்த எழுத்து.சிகெரெட் பெட்டியும் பல்லை இளிக்கவே, நடுங்கும் மூன்று மணிக்குளிரில் அறை விட்டிறங்கி,எதிர்ச்சாலை கடந்து, இருபத்தி நான்கு மணி நேர மதீனாவில் சிகெரெட் வாங்கிப் புகைத்தேன்.அதைப் போன்றதொரு இரவை ஜெமோவால் எனக்கு இனிமேல் தரவே முடியாது என்பதுதான் உண்மை.

நான் கடவுள் பாடல்கள் திருவண்ணாமலை கிரி வல நினைவுகளைத் தூண்டின.மலை சுற்றும் பாதை,அண்ணாமலையார் கோவில்,இரமணாசிரமம் என எங்கும் ஒலிக்கும் பாடல்களை நினைவூட்டியது.பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடலை நான் ஏற்கனவே இளையராஜா குரலில் கேட்டுள்ளேன் அல்லது அதே போன்றதொரு பாடலாகவும் இருக்கலாம்.படம் ஏழாம் உலகத்தின் தழுவலாய் இருக்கும்பட்சத்தில் தமிழில் நல்லதொரு முயற்சியாய் இருக்கக் கூடும்.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வணிக ரீதியிலான வெற்றி தோல்வியே ‘நல்ல’ ‘கெட்ட’ திரைப்படங்களைத் தீர்மானிக்கிறது.ஒரு படம் தோல்வியுற்றால் தயாரிப்பாளரை விட பார்வையாளன்தான் அதிகம் வருத்தப்படுகிறான்.பண முதலைகளான ஆதர்சப் புருசர்கள் திரைப்படங்கள் மூலமாக நட்டமடைவது ரசிகக் குஞ்சுகளின் வருத்தத்தை இன்னமும் அதிகரிக்க வைக்கிறது.”நாலு ‘செழித்த’ குத்து,ரெண்டு சுறுசுறு பன்ச் வைச்சா போதும் படம் மினிமம் கேரண்டி” ரீதியிலான வணிகக் ‘குறி ‘கள் எப்போது உட்சுருங்குமெனத் தெரியவில்லை. சினிமாவை, நம்மைத் தவிர்த்த உலகம் வெகு காலமாய் கலை வடிவமாகவும் அணுகிக் கொண்டிருக்கிறது என்பதை நம் பார்வையாளனின் புத்தியில் உறைக்கச் செய்ய எங்கிருந்தாவது கடவுளர்கள் முளைத்தெழட்டும்.

இஸ்லாம்,அராபிய இலக்கியம்,அராபிய வாழ்வு குறித்தான விரிவான பகிர்வுகளை கொண்ட சாருவின் தப்புத் தாளங்கள் எனக்குப் பிடித்தமான தொகுப்பு.அராபிய பயணி இபன் பதூத்தா குறித்தான பகிர்வுகள்,(சில குறிப்புகளை இந்த பக்கத்தில் முன்பு எழுதியிருந்தேன்)சார்லஸ் ப்யூக்கோவெஸ்கி பற்றிய பகிர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.இந்த வருடத்தில் அராபிய இலக்கியத்தை படிக்க திட்டமிட்டிருக்கிறேன். சென்ற வருடத்தில் பார்த்த / பிடித்த திரைப்படங்கள்,புத்தகங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். கோபி கிருஷ்ணன்,சம்பத் இருவரும் சென்ற வருடத்தில் மறக்க முடியாதவர்கள்.கோபியிடம் கண்ட இணக்கமும், உண்மைத் தன்மையும் வேறெங்கிலும்,வேறெதிலும் கண்டிராதது.கடந்த வருடத்தில் மூன்று சிறுகதைகள் நினைவின் அடுக்குகளில் தெளிவாய் படிந்தவையாகச் சொல்லலாம்.ஆதவன் தீட்சண்யாவின் இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை, எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, இளங்கோவின் ஹேமா அக்கா.

இந்த வருட புத்தாண்டு நண்பர்களின் குடும்பத்தினரோடும் ஏராளமான குழந்தைகளின் உற்சாகக் கத்தல்களோடும் துவங்கியது.சென்ற வருட, அதற்கு முந்தைய வருடங்களின் துவக்கங்கள் தந்ததுபோல் அடுத்த நாள் அயர்ச்சிகள் ஏதும் இந்த வருடத்தில் இருக்க வில்லை.சடுதியில் மாறிப்போய்விட்ட வாழ்வின் வண்ணங்களில் கரைந்து போவதோடு, எல்லாவற்றையும் உள்ளிருந்தபடி, சலனமில்லாமல் பார்க்கும் ஒருவனையும் உயிர்ப்பாய் வைத்திருக்க மெனக்கெடுவதுதான் moron னின் அதிகபட்ச நகர்வாய் இருக்க முடியும்.

நெடுங்காலமாய் தொடர்பிலிருக்க விரும்பாத நண்பியொருத்தி தொலைபே(ஏ)சி என்னைக் கோழையென்றாள்.மேலும் அக்கோழைத்தனம் எனது இரத்தத்திலேயே கலந்திருப்பதாகவும் சொன்னாள்.நானொரு சமூகப் பிராணி என்பதால், எனது சமூகம் சக இனத்தவரின் பிணங்களைத் தின்று அரசியல் வயிறு வளர்க்கும் பூதங்களை கொண்டிருப்பதால், அவர்கள் பேசும் மொழியையே நானும் பேசுவதால், அவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் நான் வாழ்ந்திருப்பதால், இக்கோழைச் சமூகத்தின் இரத்தம் என்னுடம்பிலும் கலந்திருப்பதில் வியப்பு ஏதுமில்லையெனச் சொன்னேன்.மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம் சொல்லவில்லை.

Sunday, January 4, 2009

1996 ஜனவரி 04

கங்கா,
இந்த நாளில் எழுதுவதற்கென என்னிடம் வார்த்தைகள் இல்லை.எப்போதோ படித்த இந்த கவிதை இந்த நாளினை கண்முன் நிறுத்துவதால் ..

கிழிக்கப்படாத நாட்காட்டி
புதுப்பிக்கப்பட்ட வலியைப்
பூசிக்கொண்டு வளையவரும் வீடு
உனக்குப் பிரியமானவை
பற்றிய எங்களின் பரிமாறல்கள்.

நீ வளர்த்த இன்னும்
பூக்கும் செடிகள்.
நாம் படித்த புத்தகங்கள்
நீ வாழ்ந்ததின் அறிகுறிகள்
தொலைக்கும் உலகம்.

பூஜைக்காய் பிரத்யேகமாய்
தேய்த்து அலம்பிய
பித்தளை,வெள்ளி.

நிஜம் தேய்ந்து
தெய்வமாகிப் போன
நீயற்று விடிந்த
இன்னும் ஒரு தினம்

- நன்றி கனிமொழி:கருவறை வாசனை..

Saturday, January 3, 2009

மார்க்சின் குழந்தைகளும் கோ-கோ கோலாவின் குழந்தைகளும்


Masculin, féminin (1966)

பவழமல்லி பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்களைப் படித்துவிட்டு அண்ணன் தொலைபேசினார்.கோடார்டின் Masculin féminin படத்தின் ஒரு காட்சி நினைவில் வந்து போனதாகச் சொன்னார்.நான் அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கவில்லை.சென்ற வாரத்தில் அத்திரைப்படம் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தேன்.கிட்டத்தட்ட இத்திரைப்படக் கதாநாயகனின் மனநிலையைத்தான் அந்த உரையாடலில் நிகழ்த்திக் காட்ட விரும்பினேன்.காபிக் கடையின் கதவினுக்குச் சமீபமாய் அமர்ந்தபடி,உள்ளே நுழைந்த பின்பு கதவை சாத்த மறந்தவர்களின் பணியை நினைவூட்டியபடி,அறிமுகமில்லாத பெண்ணொருத்தியுடன் paul தொடர்ச்சியாய் பேசியபடி இருக்கிறான். அரசியல்,காமம்,கலவியென அவளிடம் விடாது (கழிவறையிலும் பின் தொடர்ந்து பேசுவான்)பேசியபடியே இருக்கும் அவனுடைய கதாபாத்திரம் வினோதமானது. பிரான்சின் புதிய அலை திரைப்பட காலகட்டத்தில் வெளிவந்த படமிது. இதே காலகட்டத்தில் (1959- 1967) வெளிவந்த இவரின் பிற படங்களான Bande à part (Band of Outsiders) மற்றும் À bout de souffle (Breathless) திரைப்படங்களிலும் வியாபித்திருக்கும் 'இளமை' இத்திரைப்படத்திலும் மிக நேர்த்தியாய் வந்திருந்தது.

கோடார்டின் திரைப்படங்கள் மிக அழுத்தமான அரசியல் கூறுணர்வு கொண்டவை.இவர் அடிப்படையில் ஒரு மார்க்சிஸ்ட்.The man of future என சக கலைஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்.ஒரு கதைக்கு ஆரம்பம், மத்தி்,முடிவு இருக்கவேண்டும்தான் ஆனால் அதே வரிசையில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்கிற நம்பிக்கைகளை இவரது திரைப்படத்தில் நிகழ்த்திக் காட்டியவர்.பிரான்சின் புதிய அலை காலகட்டத்தில் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து தொடர்ச்சியாய் படமெடுத்தவர். இத்திரைப்படம் மார்க்சியத்திற்கும் அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் இடையிலான உரையாடல்களை நிகழ்த்திக் காட்டுகிறது.

வியட்நாம் போருக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டுதல்,அமெரிக்க கொடி தாங்கிய கார்களில் பெயிண்டால் எழுதுதல்,யூனியன் போராட்டங்கள் என இயங்கும் Paul, நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிய (தொடர்ச்சியான ஒப்பணைகள்/பெப்சி) பாப் பாடகியான மேடலைன் மீது காதல் வயப்படுகிறான்.Paul மற்றும் அவன் நண்பன், மேடலைன் மற்றும் அவளது இரண்டு அறைத்தோழிகள் இந்த அய்வரை சுற்றி நிகழும் உரையாடல்களே இத்திரைப்படம்.பிரான்சின் ஒட்டு மொத்த வாழ்வும் இவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களாக காட்சிப் படுத்தப்படுகிறது.படம் முழுவதும் காபிக் கடைகளும், உணவு விடுதியும், மக்கள் உலவும் வீதிகளாக மட்டுமே இருக்கின்றன.

காபிக் கடையில் அமர்ந்தபடி புத்தகங்களை(போர்னோ) சத்தமாய் வாசிப்பவர்கள், ஹூக்கர்கள், ஹோமோசெக்சுவல்கள், முலைகளை தொடாமல் பார்க்க நூறு ஃப்ராங்க் கேட்கும் பெண், இருப்பிடம் இல்லாது வாழ நேரிடும் அவலங்களென புரட்சிக் காலகட்டத்தின் பல்வேறு வாழ்வுமுறைகள் sub-text களாக படம் முழுதும் சிதறியிருக்கிறது.இயல்பு வாழ்வைச் சுற்றிலும் பரவியிருக்கும் வன்முறைகளையும் படம் சுட்டத் தவறவில்லை.மண விலக்கிற்குப் பிறகு குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்கிற பிரச்சினையில் ஒரு பெண் தன் கணவனை காபிக் கடைக்கு வெளியில் துப்பாக்கியால் சுடுகிறாள்.வியட்நாமின் அமைதிக்காக ஒருவன் தன் உடலுக்கு தீ வைத்துக் கொள்கிறான். அதற்கு முன்பாக மனைவியிடம் குழந்தைகளுக்கு தன்னுடைய முத்தத்தை வழங்கிவிடுமாறு சொல்லியப்டி paul இடம் தீப்பெட்டி வாங்கிப்போகிறான். நுகர்வுக் கலாச்சாரத்தினூடாய் உள்புகும் வன்முறைகளையும் படம் பதிவு செய்திருக்கிறது.

கோடார்டின் எள்ளல்கள்,கிண்டல்கள் தனித்துவமானவை.மேடலைன், அவள் அறைத்தோழி மற்றும் paul மூவரும் ஒரே படுக்கையில் உறங்கியபடி பின்புறத்தினுக்கு சரியான சொல் அல்லது வெவ்வேறு சொற்களைத் தேடிப்பிடிக்கிறார்கள்.சமூக வாழ்வினை பதிவு செய்யும் பணிக்காக தொடர்ச்சியாய் பெண்களிடம் கேள்விகளை வைக்கிறான். அதிகாரத்தின் முன் கேள்விகளை எழுப்புவதுதானே கலகத்தின் அடையாளம்.

நுண்ணுனர்வு, பிடித்தமான வாழ்க்கை, அரசியல், கலை, கலகம், கவிழ்ப்பு என்பதெல்லாம் தேய்ந்த பழைய ரெக்கார்டுகளாகிவிட்டனவோ என்கிற சந்தேகங்கள் இந்தப் பொழுதை நிறைக்கத் துவங்குகின்றன.மனிதனும், உலகமும் யந்திரத்தின் வடிவத்தை எப்போதோ அடைந்து விட்டிருக்கிறோமெனத்தான் தோன்றுகிறது.இன்னமும் பிரான்சின் காபிக் கடைகளில் சத்தமாய் வாசிக்கிறார்களாவெனத் தெரியவில்லை. பெருகிய மீடியாக்கள், தீவிர வலது சாரித் தன்மையை மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம் மீது திணிக்கத் துவங்கிவிட்டன என வளர்மதி எப்போதோ குறிப்பிட்டிருந்தார்.அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

Thursday, January 1, 2009

உரையாடலினி

உரையாடலினி என் எழுத்தினுக்கு முதல் வாசகி.என் காதல் கவிதைகளையும் எப்போதாவது எழுதும் குறிப்புகள் மாதிரியான வார்த்தைத் தோரணங்களையும் மட்டுமே ரசிப்பவள்.கருமம் என்ற வார்த்தையைப் படிக்க நேர்ந்துவிட்டாலே தலையடித்துக்கொள்வாள்.இப்படிப்பட்ட மகோன்னதமான பெண்ணுடன் வார இறுதிகளில் caribou cafe வில் அமர்ந்தபடி Caribbean coffee குடிக்க நேர்வது என்னுடைய அதி உன்னத வாழ்வியலில் நிகழ்ந்த மிக அற்புத நிகழ்வாகத்தான் இருக்க முடியும்.இந்த கரிபு கஃபே எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.கார்னீஷை ஒட்டியபடி இருக்கும் கஃபேவும்,அப்டவுன் மிட்ரிஃப் லிருக்கும் கஃபேவும் நான் வடிவமைத்தது.இதற்கு முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் நான் அப்பணியை செய்து முடித்திருந்தேன்.மேசைகளுக்கு டார்க் மகாகனி ஃபினிஷிங்கைக் கொடுத்திருந்தேன்.வளைவான குட்டி நாற்காலிகளை பீச் உட்டில் செய்தேன்.நாற்காலியின் கால்களில் சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கார்விங்க் பினிஷ் இருக்கும்.இந்தக் கார்விங்கை மட்டும் துலிப் உட்டில் செய்து நாற்காலியோடு இணைத்திருந்தேன்.பீச் உட்டிற்கு டார்க் செர்ரி பினிஷ் எத்தனை வினோதமானது!ஆனாலும் நான் அதைத்தான் வடிவமைத்தேன்.புதுமையாக இருந்தது.பனி இருளோடு கலந்தபடி மெல்ல கடலின் கிளைப்பாகத்தை மூடும் அற்புதத்தை மிகக் கசப்பான காபிக்கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட குழம்பியோடு பார்த்துக்கொண்டிருப்பேன்.எத்தகைய குளிரிலும் ஐஸ்கிரீமை கடித்துத் திண்ணும் வினோதியவள்.அவள் தின்பதைப் பார்க்கையில் எனக்குப் பல் கூசும்.முகத்தை சுருக்கியபடி "எப்படி இத திங்குற?" என்றால் அவளும் என் முகத்தை இமிடேட் செய்து "எப்படி இத குடிக்கிற?" என்பாள்.

உரையாடலினி குறும்புகளால் நிறைந்தவள்.பெரிய்ய்ய்ய்யய கண்களைக் கொண்டவள்.நல்லக் கறுப்பு நிறம்.அலையலையலையலையாய் கூந்தலவளுக்கு.நீ ஆப்பிரிக்க தேசத்தவளா? என முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கேட்டாள் ஆமாமென்பாள்.நானும் அவளுக்கு அப்படித்தான் அறிமுகமானேன்.இதே கார்னிஷ் கரிபு கஃபேவில்தான் அவளைப் பார்த்தேன்.பத்து நிமிடம் தொடர்ச்சியாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.பின்பு எவ்வித தயக்கமும் இல்லாமல் எழுந்துபோய் ஆங்கிலத்தில் உரையாடலைத் துவங்கினேன்.

"நீங்கள் ஆப்பிரிக்க தேசத்தை சார்ந்தவரா?"
"ஆம்.அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?"
"இல்லை நீங்கள் அசாதரண அழகாய் இருக்கிறீர்கள்.என்னால் உங்களிடம் பேசாமல் கடந்து போக முடியவில்லை.நான் பேசும் மொழியில் தேவதை எனும் சொல்லால் உன் போன்ற அழகுடையவர்களை குறிப்பிடுவோம்."
"அட த்தூ! பேமானி!! யார்கிட்ட கத உடுற? கருப்பா இருந்தா தேவதன்னு நம்ம ஊர் பசங்க சொல்லிட கில்லிட போறானுங்க.. கருவாச்சினுதான் கூப்டுவானுங்க" என சிரிக்காமல் கண்ணிமைக்காமல் சொன்னபோது நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.
"அட! நீங்க தமிழா?"
"நார்த் மெட்ராசுய்யா நானு.. வான்ரபேட்" எனச் சத்தமாய் சிரித்தாள்.
நான் சிறிது நேரம் திகைத்து நின்றேன்.பின் மெல்ல அவளருகில் சென்று அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டேன்.
"உனக்காகத்தான் இத்தனை வருட தவம்.ஒழுங்காய் காதலித்து விடு!".
என் அணைப்பிலிருந்து விலகியபடி சொன்னாள்
"சாரி! குண்டு பையா எனக்கு கல்யாணமாகிடுச்சி."
"அதுனால என்ன?என்னையும் காதலி"
"செருப்பு பிஞ்சிடும். நான் சீதையோட கடேசி வாரிசு.. நீ வேற ஆள பாரு.."
"ஒரே ஒரு தப்பு மட்டும் பண்ணிட்டு தீக்குளிச்சிக்கோ.ப்ளீஸ்! என்ன காதலி"
"ம்ம்ம்..உன்ன காதலிக்க உன்கிட்ட என்ன தகுதி இருக்கு?"
"நான் கவிதலாம் எழுதுவேன்.."
"அட! அப்டியா!! அப்ப ஓகே.. ஐ லவ் யூ!!"
இருவரும் சத்தமாய் சிரிக்கத் துவங்கியதில் நான் வடிவமைத்திருந்த மேசைகள் நொருங்கும் தன்மைக்கு சமீபமாய் சென்றதை என்னால் அக்கணத்தில் உணரமுடிந்தது.

அதற்குப் பின் அவளுக்கு உரையாடலினி எனப் பெயர் வைத்தேன்.உடல் ரீதியிலான தொடர்புகளுக்கு அவளின் சீதை பிம்பங்கள் தடையாய் இருந்ததால் அத்தடையை இருவருமே ஏற்றுக்கொண்டோம்.என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்ததும் என்னை அவளுக்கு இன்னும் பிடித்துப் போனது.அவளுக்கு சுமாரான இலக்கிய ஆர்வமும் இருந்தது.ஹவுஸ் ஆஃப் சாண்ட் அண்ட் ஃபோக் மாதிரியான படங்களுக்கு தேம்பித் தேம்பி அழும் மென்மையான மனம் கொண்டவள்.அவள் சிரிக்காமலிருந்த நொடிகள் வெகு அபூர்வம்.ஒரு விடுமுறை நாளின் அதிகாலையில் தொலைபேசியில் கூப்பிட்டாள்."ரெடியா இரு கோபர்கான் போறோம்!" என தொடர்பைத் துண்டித்தாள்.இங்குள்ள இன்னொரு எமிரேட்சிலிருக்கிறது அக்கடற்கரை.கிட்டத்தட்ட கோவா கடற்கரைக்கு நிகரானது.லக்சஸ் எடுத்து வந்திருந்தாள்.நான் சில பியர் போத்தல்களை எடுத்துக்கொண்டேன்.பெப்ஸி பாட்டிலில் சிறிது பாலண்டைனை அவளுக்கு தெரியாமல் கலந்துகொண்டேன்.

"உனக்கு கார்ல வேகமா போக பிடிக்குமா அய்யனார்"
"ம்ம்..பிடிக்கும்"
"200 ல போகவா"
"எக்கச்செக்கமா ஃபைன் கட்ட வேண்டி வரும்."
"பரவால்ல உனக்கு என் ட்ரைவிங்க் ஸ்கில்ல எப்படி காமிக்க"
"ஆத்தா 120 தாண்டாதே வேணும்னா ஒனக்கு கார்மங்கைன்னு பட்டம் கொடுக்கிறேன்"
"போர்..லைஃப் னா த்ரில் வேணும்டா"
"தனியா போய் செத்து தொல..என்ன கொன்னுடாதே"
"நேத்து நீ அனுப்பின பாட்ட கேட்டேன்..செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..செம பாட்டுடா..இதான் மேஜிகல் ரியலிசம் இல்ல"
"எது?"
"இந்த பாட்டு.."
"நீ எம்.ஜி சுரேஷ் எதாச்சும் படிச்சியா?"
"இல்லையே ஏன்?"
"அவன மாதிரியே பேசுற"
"போடா வெண்ண.. போர்ஹேஸ் எழுதினாதான் மாஜிக்கல் ரியலிசமா என்ன?வாலியோ வைரமுத்தோ எழுதினா கூட அதே இசம்தான்"
"நீ ஆள விடு.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல"
"அப்ப உன்ன பொறுத்தவர எது மேஜிக்கல் ரியலிசம்?"
"கருத்த பெண்களுக்கு கனத்த முலைகள் இருப்பதுதான் மே.ரியலிசம்"
"தூ கருமம் புடிச்சவனே! பின்னால போய் ஒக்காரு.இந்த பனியன் போடும்போதே நெனச்சேன்"

நண்பகல் பனிரெண்டு மணிக்கு அக்கடற்கரையைச் சென்றடைந்தோம்.கடலினுக்கு எதிராய் அமர்ந்தபடி அவளின் கண்களின் வழியாய் நீலம் வரைந்திருந்த கடலினைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.நொடிக்கொருதரம் இமைகளினை மூடிப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவளின் முகத்தில் சிதறிய அலைத்துளிகள் வந்தமர்ந்தன.பொறுத்திராத என் கிளர்வுகளின் உத்வேகத்தில் அவளை அப்படியே அள்ளி கடலில் வீசினேன்.உரையாடலினி... உரையாடலினி.. உரையாடலினி..இவளுக்காக உயிரையும் தரலாம். உரையாடலினி... உரையாடலினி...

ஓர் இரவு முழுவதும் அவளோடு இருக்க விரும்பினேன்.நெடுநாள் காத்திருப்புகளுக்குப் பிறகு சரியென்றாள்.முன்னிரவில் டெய்ராவின் குறுகலான,நெரிசலான தெருக்களில் சுற்றியலைந்தோம். ஆப்பிரிக்கர்கள்,பாகிஸ்தானியர்கள்,தமிழர்கள், மலையாளிகள் இன்னும் பல லட்ச விதவிதமான முகக் கூட்டங்களுக்கிடையிலும் அவள் தனித்துத் தெரிந்தாள்.வீதியோர நாற்காலிகளில் அமர்ந்தபடி ஷவராமாவும் கட்டன் சாயாவும் பருகினோம்.பெரும்பாலும் ஆப்பிரிக்கர்கள் மட்டுமே புகைக்கும் இடுக்கும் சிடுக்குமான புகைவிடுதிகளில் ஹூக்கா புகைத்தோம்.எனக்குக் கமறிக்கொண்டு வந்தது.அவள் நிதானமாய் உள்ளிழுத்து, உதடுகளைக் குவித்து மிக நிதானமாய் புகையை வெளியேற்றினாள்.நளினங்களின் மொத்த உருவமவள்.இன்னொரு கூட்டமான மதுநடன விடுதிக்கு அழைத்துப் போனேன்.இந்த நகரத்திலிருக்கும் பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் கூடும் இடமது. ஆப்பிரிக்க,சைன,பிலிப்பைன்ய தேசத்துப் பெண்களை பின்னிரவுத் துணைக்கு அழைத்துப் போகலாம்.மதுவை உறிஞ்சியபடி நிதானமாக பேரம் பேசலாம்.உன் இடமா? என் இடமா? என்பதில்தான் பேச்சு அதிக நேரம் நிலைகொண்டிருக்கும்.இவன் இடமென்றால் இவளும், இவள் இடமென்றால் இவனும் ஏமார்ந்துபோவார்கள்.பெரும்பாலான பேரங்களின் இழுபறியே இடச் சிக்கலாகத்தான் இருக்கும்.வெகு சுவாதீனமாய் அணைத்தபடி பேரம் பேசும் ஆண்களையும் பெண்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர்கள் பேசுவதற்கு மிக அருகில் சென்று காது வைத்துக் கேட்டாள்.பின் என் பக்கமாய் திரும்பி வந்து என் தோளில் கைபோட்டு அணைத்தபடி
"வர்ரியா! ஜஸ்ட் ஆயிரம் திராம்தான் பட் என்னோட இடம் ஓகே?"
எனச் சொல்லி சத்தமாய் சிரித்தாள்.திடீரென ஹரே ராம்! ஹரே ராம்!! ஹரே கிருஷ்ணா! ஹரே ராம்! என்கிற இந்திப் பாடல் சத்தமாய் அதிரத் துவங்கியது.குடித்திருந்த பியர் கிறுகிறுக்கவே அவளை இழுத்துக்கொண்டு நடன மேடைக்கு ஓடினேன்.இருவரும் படு வேகமாய் நடனமாடினோம்.அவளுக்கு மூச்சு வாங்கியது.சற்று நின்று,மூச்சை உள்ளிழுத்து, ஆடிக்கொண்டிருந்த என்னை நிறுத்தும்படியாய் அழுத்தினாள்.வலதுபுறமாய் இருந்த இருள் மறைவிற்காய் இழுத்துப்போனாள்.சீதாப் பிராட்டி மன்னிப்பாளாக என முணுமுணுத்தபடி என் உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசி,அலுவலக நிமித்தமாய் தான்சானியா போவதாய் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.நாளை வருகிறாளாம்.நாளையும் நான் அதே கார்னிஷ் கரிபு கஃபேவில் அமர்ந்திருப்பேன்.பின்னால் வந்து தலையில் லேசாய் தட்டுவாள்.எனக்குக் கோபம் தலைக்கேறும்.

"யார் நீங்க?"
"உன் உரையாடலினி"
"அப்படின்னா?"
"அப்படின்னா பூதம்"
"அலோ யார் நீங்க? என்ன வேணும் ஒங்களுக்கு?"
"ஏய் விளையாடாதே"
"நீங்க தப்பான ஆள்கிட்ட பேசுறீங்கன்னு நெனைக்கிறேன்"
"ஆமா நீ ரொம்ப மோசமானவன்"
"அட நெஜம்மாவே நீங்க தப்பான ஆள் கிட்ட பேசுறீங்க"
"ஆமாண்டா நீ தப்பான ராஸ்கல்தான்"
"கொஞ்சம் மரியாதையா பேசுங்க"
"உனக்கென்னடா மரியாத.. எரும"
"நான் போலிச கூப்டுவேன்"
அவள் சன்னமாய் அதிர்ந்தபடி "என்ன ஆச்சு ஒனக்கு?"
"நீங்க யார்னே தெரியாதுங்குறேன் திரும்ப திரும்ப பேசிட்டிருந்தா எப்படி?..ஐ திங்க் யூ ஆர் மிஸ்டேக்கன்"
அவள் முகம் வெளிறி வெளியில் நடப்பாள்.எனக்கு பரிச்சயமான அந்தக் கஃபேவின் குறுக்கில் நுழைந்து அவள் எதிரினில் போய் நிற்பேன்.கண்ணீர் துளிகள் தெறிக்க என்னை நிமிர்ந்து பார்ப்பாள்.நான் சுற்றம் மறந்து அவளை நெருங்கி அவளின்.. அவளின்.. அவளின் உதடுகளைக் கவ்விக் கொள்வேன்.

Featured Post

test

 test