Saturday, September 27, 2008

ஜே.பி.சாணக்யாவின் கனவுப் புத்தகம்

திருவண்ணாமலையிலிருந்தும் பவா செல்லதுரையை சந்தித்திருக்கவில்லை.அவரின் முற்றம் இலக்கிய கூட்டங்களுக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்வதோடு சரி.சென்ற வாரத்தில் ஒரு நாள் அவர் நடத்தும் வம்சி புத்தக கடைக்குச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலையில் அத்தனை
பெரிய கடையை எதிர்பார்த்திருக்கவில்லை.மேலதிகமாய் எளிதில் கிடைக்காத உலக சினிமாக்களையும் தேடிப்பிடித்து வைத்திருக்கிறார்.அவரின் துணைவியாரும் நன்றாய் அறியப்பட்ட எழுத்தாளரே.மலையாள மொழிபெயர்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இருவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி வந்தேன்.இணைய எழுத்துக்களின் பரிச்சயம் இல்லாவிடினும் ஜெமோ, சாரு, எஸ்ரா, கீற்று வலைப்பக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அவருக்கும் எனக்குமான நண்பர்கள் பொதுவாக இருந்ததால வெகு நேரம் பேச வசதியாய் இருந்தது.கோபிகிருஷ்ணனை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்திக் கொண்டார்.இவர்களின் மூன்று வயது மகன் இறந்தபோது இரண்டு தினங்கள் கோபி ஒரே இடத்தில் அசையாது அமர்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.தமிழினி பதிப்பகம் கோபியின் மொத்த படைப்புகளையும் ஒரே நூலாக கொண்டு வரும் முயற்சிகளில் இருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.

ஜேபி சாணக்யாவின் கனவுப் புத்தகம்-சிறுகதை தொகுதியும்,அரசியலறிவு அரைவேக்காட்டுத் தனமாய் இருப்பதால் அ.மார்க்சின் புத்தகங்கள் இரண்டும் (அ.மார்க்சை படித்தாலே அகில அரசியல் ஞானமும் கிட்டும் என்கிற முழுவெந்த ஞானமும் எனக்கு சமீபத்தில்தான் கிட்டியது)பவா செல்லதுரை மற்றும் அவரின் துணைவியார் ஷைலஜா எழுதிய புத்தகங்களையும் வாங்கினேன்.old boy திரைப்படமும் ஏழுமலை ஜமா என்கிற குறும்படமும் உடன் வாங்கினேன்.

சாணக்யாவின் கதைகளை இதற்கு முன்பு படித்திருக்கவில்லை.மோகன்தாஸ் ஒரு முறை கேட்டிருந்தது நினைவில் வரவே கனவுப் புத்தகத்தை முதலில் படித்தேன். காலச்சுவடு, தீராநதி, தலித் போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகள் இவை.கடவுளின் நூலகம்,கோடை வெயில்,பதியம், கண்ணாமூச்சி, கறுப்புக் குதிரைகள், ஆண்களின் படித்துறை, இரண்டாவது ஆப்பிள், அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம் வெள்ளை,கனவுப்புத்தகம் ஆகிய பத்து சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.கடவுளின் நூலகம் ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டு விட்ட கதைச்சூழல்தான் என்றாலும் வினோதங்களின் வண்ணங்களை சற்றே குழைத்துக் கொடுக்கப்பட்ட புனைவு 'மாதிரி'தான்.எழுத்து நடையிலும் அத்தனை வசீகரமில்லை.

இரண்டாவது கதையான கோடை வெயிலை படித்து முடித்ததும் புத்தகத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொல்லொணா கசப்பும,எரிச்சலும்,
கோபமும் மண்டியது.இப்படி ஒரு மனநிலைக்கு வாசகனைத் தள்ளுவது எழுத்தின் வெற்றியாக கருதப்படலாமெனினும் அடிப்படை நம்பிக்கைகளை தூக்கி எறியச் செய்யும்,சகல புனிதங்களையும் வெகு சுலபமாய் தீக்கிரையாக்கும் இது போன்ற முடிவுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி மிகவும் வன்மமானது.பிரதான சாலையை ஒட்டிய அரசுத் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மனிதர்களின் வாழ்வு, கோடை வெய்யிலின் உக்கிரத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. பி.ஏ படித்தும் வேலை கிடைக்காத சேகர், தன் மனைவி வசந்தாவோடு வறுமையில் உழலுகிறான்.ஒரு நாள் வீட்டிற்கு வரும் அவர்களின் போலீஸ்கார உறவினர், சேகருக்கு வேலை ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கிறார்.இருவரும் கள்ளருந்திவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்புகிறார்கள்.சமைப்பதற்காக கறியெடுக்க வெளியில் செல்லும் சேகர் திரும்பி வருகையில் அந்த வீட்டின் அறை உட்புறமாய் தாழிடப்பட்டிருக்கிறது.சன்னல்களும் இறுக சாத்தப்பட் டிருக்கின்றன.குமைந்து போகும் சேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ அலைந்து விட்டுத் திரும்புகிறான்.கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட வசந்தா தேவையின் நிபந்தனைக்காக அண்ணன் என விளிக்கும் உறவுக்காரனோடு உறவு கொள்கிறாள்.இயலாமைகளை சுமந்து திரியும் சேகர் மனதில் அவனை கொலை செய்கிறான்.இயல்பில் அழக்கூட முடியாமல் உறைந்து போகிறான்.இக்கதையின் கடைசிப் பக்கம்
ஏற்படுத்திய அழுத்ததிலிருந்து விடுபட வெகுநேரமாயிற்று.

வாசலில் வேண்டுமென்றே தீவிரத்துடன் சைக்கிளைச் சத்தம் அதிர நிறுத்தி ஒயர் கூடையை உருவி எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான.அவர் ஒருக்களித்துப் படுத்துக்கிடந்தார்.அவர் முதுகைப் பிரதானப்படுத்தும் அக்கோணம் அவர் உடலை ஒரு விலங்கு போலக் காட்டியது.அவர் வேண்டுமென்றே முகம் காட்டாமல் கண்மூடிப் படுத்திருப்பது போன்றிருந்தது.உள்ளே சென்றான்.தோட்டத்தில் வசந்தா ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது.அவள் முகத்தைத் தேடிப்பற்றியபடி முன்நகர்ந்தபோது அவள் அவனைப் பார்த்துவிட்டு புளிச்சக்கையை வெளியே வீசினாள்.கறிக்கூடையை அவளின் பக்கமாய் வைத்துவிட்டு சட்டையைக் கழற்றினான்.அவள் முகம் அலம்பியிருந்தாள்.கன்னத்திலும் காதோர மேற்புரங்களிலும் முடிக்கற்றைகள் ஈரப் பளபளப்புடன் ஒட்டிக் கொண்டிருந்தன. மேலுடம்பில் பளிச்சென மாற்றம் தெரிவதைப் பார்த்தான்.ஜாக்கெட் மாற்றியிருந்தாள். வெள்ளை நிறம்.அவள் முகத்தை மிக அருகில் பார்த்தான.அது ஆண்டு அனுபவித்த ஒரு பெரிய மனுஷியின் முகம் போலிருந்தது.அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் சோர்வுற்றிருந்தன. அவனைப் பார்த்துச் சிரித்தாள.ஓரு குழந்தையைப் போல இந்த க் கறிய அரிஞ்சி குடு என்றாள்.அவன் எங்கோ பார்த்தபடி நகர்ந்தான.பின்பு அவளே தோட்டத்திற்கு சென்று கவிச்சி அரிவாள்மணை எடுத்து வந்து திட்டமான துண்டுகளாக அறியத் தொடங்கினாள்.

அவன் திறந்திருந்த சன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டு நட்சத்திர வெளியை வெறித்தான்.அவனை யாரோ பலவந்தமாக அடித்துப் போட்டதுபோல் களைப்பாக உணர்ந்தான்.எவற்றையும் எதுவும் செய்து விட முடியாத இயலாமை அழுத்திப் பிடித்தது.எல்லாரும் பதறி பதறிக் கேட்க ஒன்றும் சொல்லாமல் கத்தி அழுதி தீர்க்க வேண்டும் போலிருந்தது.


பதியம் கூலி வேலைக்கு செல்லும் இளம் பெண்ணின் தீவிர காதலை சொல்கிறது.உழைப்பும், இறுமாப்பும், காதலும், விளிம்பு வாழ்க்கையும், இன்னும் நன்றாய் சொல்லப்பட்டிருக்கலாம்.

கண்ணாமூச்சி
யின் சூழல் ஜி.நாகராஜனுடையது.குப்பத்து வாழ்வை சில பக்கங்களின் கண்முன் கொண்டு வரும் எழுத்து.சக்களத்திகளாகும் தாயும் மகளும் மோதிக்கொள்கிறார்கள.கேட்கும்போதே பதறும் வாழ்வுதான் ஆனாலும் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எழுத்துக்களினூடாய் பார்ப்பதே மிகுந்த வலியுடையதாய் இருக்கிறது.

ஆண்களின் படித்துறை
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை.
இக்கதையில் வரும் அன்னம் பாலியல் தொழிலாளி இல்லை.உழைத்து வாழும் பெண். மிக அழகானவள.அந்த கிராமமே வாயைப் பிளந்து பார்க்குமொரு அழகு.அவளிடம் வருபவர்களிடம் அவள் உறவு வைத்துக்கொள்வாள். அவளை, அவளுடம்பை பார்த்து வியப்பவருக்கு தன்னைக் கொடுப்பாள. பதிலுக்கு பணத்தையோ, தயவையோ எதிர்பார்க்க மாட்டாள்.இக்காதாபாத்திரமும் இன்னும் இத்தொகுப்பில் வரும் சில கதாபாத்திரங்களும் இதற்கு முன்பு அறிமுகமில்லாதது.முற்றிலும் புதிய மனிதர்களை முற்றிலுமொரு புதிய அலைக்கழிப்பை கதைகளுக்குள் பொருத்தியிருக்கும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் அல்லது விளிம்பு நிலை எழுத்துக்கள் என வகைப்படுத்த
எனக்கு தயக்கமாய் இருக்கிறது.

சமீபத்தில் சோ தர்மன் இதுவரை தலித் எழுத்துக்கள் என நாம் சொல்லி வந்ததெல்லாம் கதாநாயகி லேசாய் சோரம் போவதாய் எழுதப்பட்டவை மாத்திரமே என்பதாய் ஒரு முத்தை உதிர்த்திருந்தார் இதைப் படித்த எழுச்சியே என்னால் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் என்கிற அடையாளததோடு பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க விரும்புகிறது.இக்கதைகளில் ஒழுக்கம் தவறுவது என்பது பிரதானமாய் இருக்கிறது (இவை ஒருவகையில் புனிதங்களை கட்டவிழ்க்கின்றன என்றாலும்) ஒழுக்கமென்பது உயர்குடிகளுக்கு மாத்திரமே எனக் கட்டமைக்கப்பட்ட புனிதங்களோடு பொருத்திப் பார்க்கையிலும, சோ தர்மனின் முத்து் நினைவுக்கு வருவதாலும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் எழுத்துக்களாக என்னால் அணுக முடியவில்லை. மாறாய் இதுவரை காட்சிப்படுத்திடாத சில அபூர்வ தளங்களை, அலைவுறும் மனிதர்களை சாணக்யா சாதாரண மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்கவியலாது.

அமராவதியின் பூனை சிலம்பாட்ட கலைஞன் ஒருவனின் ஆண்மையையும் அதன் அவமானத்தையும் சொல்லும் கதை.பூனைபடிமங்களாலும், நுட்பங்களாலும், பாலுறவு விவரிப்பின் தெறிப்புகளாலும்
இன்னொரு தளத்திற்கு வாசகனை கொண்டு செல்லும் கதை.இதிலேயும் அமராவதியின் பிறழ்விற்கு அழுத்தமான காரணங்களில்லை.வீரமான, ஊரே போற்றும் ஆண்மகனைத் தாண்டியும் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் காசி அமராவதிக்கும் அவளின் பூனைக்கும் தேவைப்படுவது வினோதமாய் இருக்கிறது.இவை வலிந்து எழுதப்பட்டவையா? அல்லது தான் கண்ட மனிதர்களை புனைவுகளினூடாய் பதிவிக்கும் முயற்சியா? அல்லது கட்டமைக்கப்பட்ட உறவப் புனிதங்களை கலைத்துப் போடும் முயற்சியா? என தெளிவுகளற்றிருப்பினும் இன்னொரு மனிதர்களை, இன்னொரு வாழ்வை தனது கதைகளினூடாய் காட்சிப்படுத்திய ஜே.பி சாணக்யாவை வரவேற்போம்.

Friday, September 26, 2008

தர்ஷியும் பேரரசுக்களும்


'ஆடுங்கடா என்னச் சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி'

இடுப்பில் ஒரு கையை வைத்தபடியும்
ஒரு காலை தரையில் லேசாய் உதைத்தபடியும்
தலையை இடமும் வலமுமாய்
அசைத்தபடியுமாய்
என் முன்னிருந்தபடி பாடிக்கொண்டிருக்கிறாள் தர்ஷி
இரண்டாவது முறையும் அதே வரிகளை
சத்தமாய் பாடுகிறாள்
இந்த முறை அய்யனாருவில்
சிறிது அழுத்தம் சேர்த்து
லேசாய் தலை சாய்த்துச் சிரிக்கிறாள்
வாரியெடுத்துக்கொள்கிறேன்
வயிற்றிலிருந்து பீறிட்டெழும் அவளது சிரிப்பில்
தளும்புகிறது வீட்டின் கூடம்
பேரரசுக்களையும் அக்கணத்தில்
நேசித்துவிடலாம் போலத்தானிருக்கிறது...

Monday, September 1, 2008

சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்...


ஒவ்வொரு தொடரலிலும்
வழி தப்புகிறேன்
மின்னலின் ஒளியுமிழ்ந்து
நீலங்களின் பின் மறைகிறாய்
எந்நொடியிலும் முகம் தொடலாம்
ரகசியங்கள் கரைந்த
முதல்
மழைத்துளி...

தொடர்ச்சியாய் உனது பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னிருப்பு இரவுகளில் ஆசுவாசமானதாகவும், விடியல்களில் புத்துணர்வுகளாகவும், பின் மதியங்களில் கசப்புகளாகவும், மாலையில் வெறுப்புகளாகவும், பொழுதிற்கொன்றாய் வடிவம் கொள்கின்றது.மழை பிடித்துக்கொண்ட மாலையில்,வீடு திரும்ப தாயின் வருகையினுக்காய் காத்திருக்கும் பள்ளிச் சிறுவனின் எதிர்பார்ப்புகளோடு, எவருமற்ற இவ்விடத்தில் அமர்ந்து, உதிர்ந்த புங்கம் பூக்களை மழைநீர் அடித்துப்போகும் காட்சியை சலனமில்லாது பார்த்தபடியிருக்கிறேன்.பூமியணைத்த மழையின் கரங்களையொத்து, உன் வளைக்கைகள் இடறும் கத கதப்பான அவ்வணைப்பை நினைவில் தருவித்து, குளிரும் இவ்வுடலை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.குடை கொண்டு வரும் யாரோக்கள் யார்யாரையோக்களை அணைத்தபடி அவ்வப்போது கடந்து செல்கின்றனர்.எனக்கான முறைக்கு இன்னும் சிறிது காலமாகலாம்.

அவநம்பிக்கைகளின் மொத்த உருவம் நான்.சந்தேகித்தலின் கூரிய நகங்களையும் துவேசங்களின் வலிமையான பற்களையும் ஒருமித்து வளர்த்திருந்தேன்.உனது புன்னகைகளின் மூலம் ஒவ்வொன்றாய் காணாமல் போகச் செய்தாய்.லாவகமான விலகலில் நீல வானில் ஒளிழ்ந்து மறையும் மின்னல்களைக் கண்முன் கொண்டுவந்தாய்.இரகசியங்களின் மொத்த விருப்பிடம் நீ!.புதிர்களின் பின்னலைந்து தோற்கும் ஒவ்வொரு முறையும், இன்னுமதிகமாய் புன்னகைகளையும், புதிர்களையும், உருவாக்கிக் கொண்டு போனாய்.எலிவேட்டைக்காரனின் இசைக்கு மயங்கிய எலியென, உன் வசீகரம் நிரம்பி வழியும் தெருக்களெங்கிலும், உன் இசையினை உள்ளுக்குள் நிரப்பியபடி பின் தொடர்கிறேன்.மங்கிய மாலைகளில் காணாமல் போகும் அவ்விசையை இரவெங்கிலும் நகரத்தின் முடுக்குகளில் தேடியலைந்து பித்தம் கொண்டேன்.இதுவரை கேட்டிராத, இதுவரை சந்தித்திராத, இதுவரை உணர்ந்திராத, இதுவரை அறிந்திராத, எத்தனையோக்களின் பிம்பங்கள் உனது நிழல்களின் தடங்களில் மிக மெளனமாய் படர்ந்திருந்தன.

எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளையும் துணைக்கழைத்தேன்.நானறிந்த அத்தனை வழிகளும் சுழல் வடிவங்களாகி, துவங்கிய இடத்தினுக்கே மீண்டும் கொண்டு வந்து சோர்ந்தன.எதைக் கொண்டும் நெருங்க முடியாத அபூர்வ மலர்களை, உனது கிளைகள் பிரசவித்திருந்தன.தெரிந்த பறவைகளிடம் சிறகுகள் வாங்கி பறக்கத் துவங்கினேன் அஃதொரு திரும்பவியலா இடங்களில் என்னைத் தொலைத்து, தன்னையுதிர்த்திக் கொண்டது.செடிகளின் துளிர்த்தல்களை மனதில் வாங்கி இதோ இவ்வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன். எதைக்கொண்டும் சமன் செய்துவிடா முடியா என் துயரங்களைப் போலவே எவ்வடிவம் கொண்டும் உன்னிடம் சேர இயலவில்லை.ஆனால் உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.

மூடப்பட்ட நுழைவுகளின் முன்பு
கைகளின் பின்னால்
உனக்கான மலர்களை
மறைத்துவைத்தபடி
காத்திருக்கிறேன்
ஒரே நேரத்தில் நிகழலாம்
இரு திறப்புகள்
-------------------------------------------------------

எந்த ஒன்று தொடர்ச்சியாய் இப்படி அலைக்கழிக்கிறது?எதை நோக்கிய நகர்வுகள் என்னுடையது?இந்தக் காத்திருப்புகளின் மீது போர்த்தியிருக்கும் இயலாமைகளின் விசும்பல்களை எதைக் கொண்டு மறைக்க?.எந்த ஒன்றின் பின் தொடரும் இருண்மை இது?
பாலை மணலில் தங்க ஊசியைத் தேடியலைகிறேன். எங்காவது ஒளிந்திருக்கலாம் ஊசியின் சாயல்களில் ஒரு இழை.நகர்வுகளுக்கான,வெற்றியின் சாயல்களுக்கான விலைகள் மிகவும் அதிகமானவை.அவை தரும் அயர்ச்சியும் அலைவும் தாங்கொணா வலி தருபவை.வெறுமைகளடர்ந்த இந்த இரவினில் நம்பிக்கைகளின் வெளிச்சப் புள்ளியாய் எங்காவதிருக்கலாம் என்னை நிரப்பித் தூங்கும் இன்னொரு உயிர்.

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.
---------------------------------------------------

இயலாமைகளின் உச்சங்கள்
வன்மங்களின் தாழினைத் திறக்கின்றன
வலிந்து திறக்கப்பட்ட
மதுக்குப்பியின் நுரைப்புகளென
பொங்கிப் படர்கிறது
திசையெங்கும் விந்து
நகரமெங்கிலும் விழித்திருக்கும்
ஆண்குறிகள் சபிக்கலாம்
இந்த இரவை
இந்தத் தனிமையை
இந்தக் காமத்தை
இந்தக் கடவுளர்களை

Featured Post

test

 test