Thursday, August 21, 2008

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...


சாரா
விற்கு பனிப்புகை விலகியிராத காலைகளில் பசிய இலைகளில் தேங்கியிருக்கும் பனித்துளியைப் பருக மிகவும் பிடிக்கும்.ஜோ இந்த வினோத பழக்கத்தை கிண்டலடிப்பான்.'பூனைக்குட்டிகளின் சாபம் வாங்கிக்கொள்ளாதே' என பயமுறுத்துவான். சாரா தன் கண்களிமைத்துப் புன்னகைப்பாள்.இரு கண்களையும் வேகமாய் இமைத்துவிட்டு புன்னகைப்பது சாராவின் தனியடையாளம்.அவள் இந்த நளினங்களை எங்கிருந்து, யாரிடமிருந்து பெற்றாள் என ஜோ சில தேநீர் அருந்தும் மாலைகளில் யோசித்துக் கொண்டிருப்பான்.

சாரா கோபித்தோ,முகம் சுருங்கியோ,ஒருபோதும் கண்டதில்லை.பிடிக்காத ஒன்றினை எதிர்கொள்ளும் நொடியில் சின்னதாய் ஒரு நெற்றிச்சுருக்கம் உடனே அதையும் அவசரமாய் மாற்றிக்கொள்வாள்.ஜோ விற்கு சாராவுடன் வசிப்பது மிகவும் இணக்கமாயிருந்தது.அதீத அன்போ, அதீத வெறுப்போ, எதிர்பார்ப்போ, ஏமாற்றங்களோ, இல்லாமல் இயல்பாய், மிருதுவாய் நகரும் நாட்கள் வெகுசுவாதீனமாய் இருந்ததவனுக்கு. ஜோவிற்கும் சாராவிற்குமான பொதுப்புள்ளிகள் இருவருமே மாற்றங்களை பெரிதாய் விரும்புவதில்லை. தினந்தோறும்களில் சலிப்பும் ஏற்படுவதில்லை.விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையினை இருவருமே வெறுத்ததால் வாலசைத்து நகரும் நாய்குட்டியினைப்போல் நாட்கள் ஓடிப்போனது.

ஒரு நாளில் மழை துவங்கிய விடியலின் நசநசப்பில் ஜோ விற்கு சாராவும், சாராவிற்கு ஜோ வும் பரஸ்பரம் அலுத்துப்போனார்கள்.(இப்போது இந்த வீட்டில் யாரை அனுப்பிவிட்டு யாரை வைத்துக்கொள்வதென கதை சொல்லி சிறிது குழம்பினான் பின்பு தானொரு ஆண் என்பதினை உணர்ந்து சாராவை அனுப்பிவிட்டான்)

சாரா போன பத்து நிமிடத்தில் நசநச மழை நின்றது.விட்டுக்கொடுத்தல் என்ற நேரடிப் பெயரில் இல்லாமல் நிறைய விசயங்களை சாராவிற்காக மாற்றிக் கொண்டது அப்போதுதான் அவனுக்கு உறைக்க ஆரம்பித்தது.நடு வீட்டில் அமர்ந்து சிகரெட் பிடித்தான்.அவனுக்கு மிகவும் பிடித்தமான, இசைத்து வெகுநாளாகியிருந்த, குளிரில் ஒரு மூலையில் ஒண்டிக்கிடந்த பியானோ வை எவ்வித இசைக்குறிப்புகளின் துணையில்லாமல் அதிர்க்க ஆரம்பித்தான்.பியானோ அதிர்வில் வீடு தலைகீழானது.அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டான்.பியானோவின் மீது கால் தூக்கிப்போட்டுப் புகைத்தபடி சுயமாய் இன்பித்தான்.உச்சதிர்வில் உள்ளடங்கிய எழுச்சிகளை மீண்டுமெழுப்பும் பொருட்டு எழுந்து நின்றுக்கத்தினான். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.........ஏற்கனவே தலைகீழான வீடு இப்போது ஒட்டிக்கொண்டிருந்த இடத்திலிருந்து உதிர ஆரம்பித்தது.உதிர்வுகளிலிருந்து ஒரு துகளென செந்நிறப்பூனையொன்று பியானோவின் மீது குதித்தது.தன் கூறிய நகங்களினால் பியானோவை இசைக்க ஆரம்பித்தது.விட்டிருந்த நசநச மழை பெருமழையின் வடிவம் கொண்டு நேரடியாய் அறை நிறைத்தது.

சாராவிற்கு நிறைய நண்பர்கள்.சிறிது நேரம் யோசித்து ஆனெட் வீட்டிற்குப் போவதாய் முடிவெடுத்தாள்.ஆனெட் சாராவினை எதிர்பார்க்காதது அவளின் விரிந்த சிறுவிழியில் தெரிந்தது.கடற்கரைக்கு வெகு சமீபமான ஆனெட்டின் வீடு சாராவிற்குப் பிடித்திருந்தது.மிகப்பெரும் சன்னல்கள் வழியே மழை சிறு கோடுகளாய் கடலில் இறங்கிக் கொண்டிருந்தது.சாராவிற்கு கடைசியாய் எப்போது அழுதோம் என யோசிக்கத் தோன்றியது. சன்னல் திரைச்சீலைகளை கெட்டியாய் பிடித்தபடி கடலைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள்.நினைவில் வரவில்லை.அறைக்கதவை சாத்தி விட்டு அதிரும் இசையை நிரப்பினாள்.சத்தம் வெளியில் கேட்காதென உறுதிபடுத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.பல வருடங்களாய்த் தேங்கி இருந்த த/கண்ணீர் விழிகளின் வழியிறங்கி அறையை நிறைத்தது. அறையிலிருந்த அனைத்தும் எடையிழந்து மிதக்கத் துவங்கின.

அறை வெகு நேரமாய் தட்டப்படுவதை உணர்ந்த சாரா நிரம்பியிருந்த கண்ணீரை வழித்தெடுத்து சன்னல்வழிக் கொட்டினாள்.திரைச்சீலைகளை அகல விரித்தாள் கண்ணீர் கழுவிய அறையும் சாராவும் சூரிய ஒளி பட்டு மினுமினுத்தனர். திருப்தியாக கதவைத் திறந்தாள்.ஆனெட் உணவிற்காக அழைக்க வாயெடுத்தவள் திடீரெனப் பிரகாசிக்கும் சாராவைப் பார்த்துப் பிரம்மித்தாள்.சாராவின் கண்கள் நீல நிற ஒளி யினை உமிழ்ந்தன.ஆனெட்டின் இதயம் பனிக்கட்டியாக உருகத் துவங்கியது.தாங்க இயலாத பிரம்மிப்போடு சாராவினை அணைத்துக் கொண்டாள்.சாரா ஆனெட்டின் முகமேந்தி உதடுகளில் மென்மையாய் முத்தமிட்டாள்.

ஜோ இந்த யாருமில்லாத கணத்தை நேசித்தான்.எதனிலிருந்தோ விடுபட்ட உணர்வை உணரமுடிந்தது. இது இத்தனை நாளாய் எங்கிருந்தது எனப் பிதற்றினான்.'பெண் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சுமை' எனக் கத்தினான். வைன்கள் மட்டுமே இருந்த குளிர்ப்பெட்டியை எட்டி உதைத்தான்.அலமாரி கலைத்து. அவளுக்குப் பிடிக்காத உடையணிந்து கிளம்பினான். தானின்று மிக வசீகரமாயிருப்பதாய் நம்பினான்.ஸ்ட்ரிப்டீசை வெறித்தபடி பியரும் ரம்மும் கலந்ததாய் இரண்டு ரவுண்ட அடித்தான். மேலதிகமாய் நாலு ஷாட் டகீலா அடித்தான்.பேரரிடம் தாட்டியான கருப்பு தேசப் பெண்ணொருத்தி வேண்டுமென்றான். பேரர குனிந்து ஆசோல் எனத் திட்டியதில் வெளிறி வெளிவந்தான்.ரத்தம் தெறிக்க ஒரு வலிமையான பெண்ணைப் புணர வன்மம் கொண்டான்.சாலையோரப் பெண்ணொருத்தி அவனின் நிலை கொள்ளாமையுணர்ந்து அவளிருப்பிடம் அழைத்துப் போனாள்.மிகுந்த எழுச்சிகளோடு அவளை உண்ண வெறிகொண்டான்.உடல் சுத்தமாய் அவன் எண்ணங்களோடு ஒத்துழைக்கவில்லை.போராடித் தோல்வியுற்றவனைப் பார்த்து அவள் சிரிக்கவாரம்பித்தாள்.அவளின் வெண்கலச் சிரிப்பு அக்குறுகலான அறையின் சுவர்களில் மோதிப் பட்டுத் தெறித்தது.காதுகளைப் பொத்திக் கொண்டான்.வாரிச்சுருட்டிபடி வெளிவந்தான். மிகவும் அவமானமாய் உணர்ந்தான்.நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினான்.

சாரா இப்போதெல்லாம் பனித்துளி குடிப்பதில்லை.ஆனெட் வீட்டில் செடிகளோ மரங்களோ இல்லை சன்னல்களின் முன்பு விரிந்திருந்தது கடல்.விழித்தெழுந்தவுடன் புகைக்கும் பழக்கமும் எப்படியோ வந்து விட்டிருந்தது. புகையும் தேநீருமான காலைகள் பனித்துளி காலைகளைப் போலவில்லை என்றாலும் இந்த மெல்லிய போதையும் பிடித்தமானதாகத்தான் இருந்தது. ஆனெட் சாராவைக் கொண்டாடினாள்.தானெப்போதும் சந்தித்திராத பேரழகியென நள்ளிரவுகளில் புலம்பினாள்.தன் நாவுகள் மிகப்பெரும் புனிதம் செய்தவை எனப் பிதற்றினாள்.சாராவிற்கும் ஆனெட்டின் பைத்தியம் பிடித்திருந்தது. புதுமையாகவிருந்தது.மிக விடுதலையாய் உணர்ந்தாள்.இருப்பினும் பழகிய உச்சங்களில்லாத நொடிகளில் அவளுக்கு ஆனெட்டை எட்டி உதைக்கத் தோன்றியது.ஒரு நாள் விடியலில் எட்டி உதைத்தே விட்டாள்.சற்றுத் தள்ளி விழுந்த ஆனெட் ,மிக அவமானமாய் உணர்ந்தாள்.சாராவின் துணிகளை பெட்டியில் அடைத்து, அவள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிக் கதவை மூடினாள்.

இரவு ஆடையோடு வெளிவிழுந்த சாரா நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினாள். ஏற்கனவே அவளால் வழித்தெடுத்து வெளிக்கொட்டப்பட்டிருந்த கண்ணீர், தரையிலிருந்து கண்களுக்குள் பாயவாரம்பித்தது.

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் சாரா நடுச் சாலையில் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்லச் சிரிப்படங்கி மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த மீன் வாலையும், இறக்கைகளையும், சாரா அணிந்திருந்தாள்.அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவள் கடலில் நீந்தி, வானத்தில் பறந்தாள். ஒரே சமயத்தில் வானத்திலும், கடலிலும் சாராவிருந்தாள்.கடல் விரிந்து வானம் தொட்டதா இல்லை வானம் குறைந்து கடல் தொட்டதா என்பதை உணர அங்கே எதுவுமில்லை.கடலும் வானமும் சேர்ந்து மொத்தமும் நீலமாயிருந்தது.

Saturday, August 16, 2008

திரை இசை பாடல்கள்- வெகு சன ரசனை-காதல் கவிதைகள் மற்றும் திரைப்படங்கள்

திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்
நம்மைத் தொலைத்தது அந்த இசை
வீணையின் அதிர்வுகளில்
நினைவு
முடிவிலியின் சுவர்களில் மோதி
இரத்தமிழந்தது
இப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதே
மிகச்சரியானதாயிருக்கக்கூடும்


வெகுசன ரசனைகள் குறித்தான புரிதல்களையும் திரையிசையின் மீதும் திரை இசைப் பாடல்களின் மீதும் விருப்பம் கொண்ட நண்பர் ஒருவருடனான உரையாடல் திரை இசை பாடல்கள் மீதிருந்த சில இறுக்கங்களை விடுவித்தது போலிருந்தது.குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு நிகரான ஒரு கட்டமைப்பிலேயே கவிஞர்களுக்குப் பாடல்களெழுத சுதந்திரம் வழங்கப்படும் சூழலில் கவிஞன்/ பாடலாசிரியன் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாடல்களைச் செய்துகொண்டிருக்கிறான்.கவிஞர்களை விட திறமைசாலிகளை வளர்த்தெடுக்கும் இடமாக அல்லது திறமைசாலிகள் மட்டுமே கோலோச்சும் இடமாக திரை இசைப் பாடல்கள் உருக்கொண்டுள்ளன.இத்தகைய வெளி யிலிருந்து சில நல்ல பாடல்கள் வெளிவருவதைக் கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும்.சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சில நல்ல பாடல்களும்,இசையும் தமிழ்த்திரையிசையை இன்னும் உயிர்ப்பாக வைத்துக்கொண்டிருக்கின்றது.பெரும்பான்மைக் குப்பைகளை கண்டிக்காமலிருக்கவும் முடியவில்லை.சமீபத்தில் சத்யம் எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் நயனை பால்பப்பாளி என விளித்து ஒரு குத்துப் பாடல்.எழுதியவனைச் சொல்வதா? எழுதத் தூண்டியவனைச் சொல்வதா? கேட்டு இன்புறுவனைச் சொல்வதா? இந்தக் கருமாந்திரங்களை வெகுசன ரசனை என பொத்தாம் பொதுவாக வகைப்படுத்தி தன் சுய அரிப்புகளுக்கு கூட்டம் சேர்க்கும் புல்லுருவிகளினை எதைக் கொண்டும் அடிக்கலாம்.வெகு சன ரசனை என்பது கீழ்த்தரமானதாய் ஒரு போதும் இருக்கமுடியாது.வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்.அதிக ஆபத்தில்லாத ராமராஜன் திரைப்படங்கள் குறித்து இப்போது நாம் பேச ஆரம்பித்திருப்பது வெகு சன ரசனைக்கு சரியான புரிதல்களாய் இருக்க முடியும்.

ADNAN SAMI யின் "bhigi bhigi rato mein..." பாடலை இசையுடன் மொழிபெயர்க்க நண்பர்களுடன் ஓர் இரவைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இந்தி,உருது போன்ற பிற மொழிப் பாடல்களை தமிழில் இசையோடு மொழிபெயர்ப்பது சிறிது கடினமானது.சந்தத்துடனும்,பொருள் மாறாமலும், மூலத்தைச் சிதைக்காமலும் மொழிபெயர்க்க வேண்டுமென்கிற எங்களின் ஆவல் ஓரளவிற்கு நிறைவேறியது.ஆனால் பாடல் மிகச் சாதாரண பிற தமிழ்பாடலைப் போலத்தானிருந்தது. பெரிதாய் கவித்துவமில்லாமல் போனது குறித்து எனக்கு சிறிது வருத்தமே ஆனால் மூலத்தை மாற்றுவதில் / சிதைப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.என் அறிவுக்கெட்டியவரை பிற மொழிப்பாடல்கள் / கவிதைகளில் தெறிக்கும் கவித்துவத்தை விட தமிழில் நாம் எட்டிய கவித்துவ உச்சம் சிறிது அதிகமாகத்தான் தோன்றுகிறது.நமது மொழியின் ஆளுமை அல்லது நமது மொழியின் மிக அதிக வார்த்தைகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஒரே வார்த்தைகளை கையாள வேண்டிய சிக்கல்களில்லாதிருக்கின்றது.நிறைய வார்த்தைகளை பல்வித உணர்வுகளுக்கு வழங்க ஏதுவாக அமைந்திருப்பது நமது மொழியை இன்னமமும் நேசிக்கத் தூண்டுகிறது.

பண்புடனில் தொடர்ச்சியாய் காதல் கவுஜை/கவிஜை/கவிதை களை எழுதிக்கொண்டிருப்பது இலகுவான மனநிலையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தது.ஒரு வித கிண்டலடிக்கும் மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன்.சில சுமாராய் வந்திருப்பதால் தொடரும் எண்ணமும் இருக்கின்றது.

கூடுகளை விரும்பிடாத பறவையொன்றின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இளைப்பாறல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனெனினும்
பறவையின் வசீகரம் இளைப்பாறல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்....


காதல், உறவு, வாழ்வு என எல்லாவற்றையும் இதனுள் பொருத்திக்கொள்ளலாம் போலத்தானிருக்கிறது.

ட்விட்டர் பக்கம் ஒதுங்கியதில் நிறைய சுட்டிகளைப் பெறமுடிந்தது.சுரதா கொடுத்திருந்த கடவுளின் குழந்தைகள் எனும் பாலுமகேந்திராவின் குறும்படம் மனதைத் தைத்தது.தொடர்ச்சியாய் மனநலம் குறித்தாய் கண்ணில் பட்டு இம்சிக்கிறது.உள்ளே இருந்து சில குரல்கள் தந்த அயர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகு நாட்களாய் பார்க்காமல் வைத்திருந்த One Flew Over the Cuckoo's Nestதிரைப்படத்தையும் கடந்த வாரத்தில் பார்த்தேன்.முடிவை ஏனிப்படி குரூரமாக்கினார்கள் என புலம்பியபடியிருந்தேன்.சில நெருடல்களிருப்பினும் இந்தப் படம் எனக்குப் பிடித்தேயிருந்தது.இத்திரைப்படத்தில் வரும் குழு உரையாடல்கள் மிகச் சிறந்த முறையில் வந்திருந்தன.கோபியும் இந்த அணுகுமுறையை விரிவாய் பேசியிருப்பார்.தொடர்ச்சியாய் பேச முடியாத billy கதாபாத்திரம் ஏற்படுத்திய பரிதாபம் வெகுநேரம் நீடித்திருந்தது.

ஜெய மோகனின் காமரூபினி படித்தேன்.ஜெமோவின் அடுத்த படியென நண்பர் ஒருவரால் சிலாகிக்கப்பட்டிருந்த அளவிற்கு இதில் ஒன்றுமில்லை.பெண்ணை தொடைகளாய், முலைகளாய், யட்சியாய், காமாந்தகியாய் மட்டுமே பார்க்கத் தெரிந்த புனிதர்.ரப்பர், எசமாடன், டார்த்தீனியமென இவரது புனைவுகளிலிருந்தே சுட்டு எழுதப்பட்டிருந்த இன்னொரு புனைவாகத்தான் என்னால் இதை அணுகமுடிந்தது.வார்த்தைகளைக் கொட்டி ஜெமோ படைக்கும் பிரம்மாண்ட படையல்களின் மீது உண்மை சாவகாசமாய் கால் தூக்கி ஒன்றுக்கிருந்து போகிறது.மாறாய் உயிர்மை ஜீலை இதழில் வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன சிறுகதை மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.அகம் புறம் என சிறுமியின் வினோத உலகத்தை பறவைகள் கொண்டு புனைந்திருந்தது அற்புதமாய் வந்திருந்தது.சுகி திடீரென சொல்லும் புல் புல் லில் சிறிது அதிர்ந்து போனேன்.

AKira வின் Dreams படத்தை இரண்டாம் முறையாக பார்க்கவாரம்பித்து முடிக்க முடியாத மன உணர்வில் நிறுத்திவிட்டேன்.நிகழிலிருந்து பிடுங்கி பெருங்கனவொன்றில் எறிந்தார்போன்ற உணர்வைத்தான் இத்திரைப்படம் தருகிறது.சிறுவனின் கனவுகளில் உயிர்கொள்ளும் peech மரங்கள்,மழையும் வெய்யிலும் அடிக்கும் பொழுதொன்றில் நரியின் திருமணம் பார்க்கபோய் வினோத மனிதர்களை பார்த்து ஆபத்தில் சிக்கும் இன்னொரு சிறுவன்,வான் கோவின் ஓவியங்கள் வழிப் பயணித்து வான்கோ வை சந்தித்து திரும்பும் பார்வையாளன், போரில் இறந்த வீரர்கள் உயிர்கொண்டு கமாண்டரினை கலங்கடிக்கும் வினோத tunnel என வினோதங்களாலும் பிறழ்வுகளாலும் நிரம்பிய வெளி.பிரம்மிப்பையும் அயர்ச்சியையும் ஒன்றாய் தரவல்ல tarkoyevski யின் திரைப்படங்களினையொத்த Akira வின் படம். காட்சியூடகத்தின் வலிமையை அழுத்தமாய் சொன்ன படமிது.பிரம்மிப்பொழிந்த மனநிலையில் இத்திரைப்படத்தை விரிவாய் பதியவும் எண்ணம்.

ஒரு மாலையின்
மேகக் கவனித்தலின்போது
நினைவை அசைத்தது
அந்தியின் பொன்னிறம்
மேகத்தை விட்டு
அடிவான நிறங்களில் கரையும்போது
இரவுப்பெண் தன் நீளக் கருங்கூந்தலினால்
வானத்தை மூடவாரம்பித்தாள்
அது உன் கூந்தலிழைகளில் புதையும்
என் முகத்தினையொத்தபடி
நிறங்களை விடுவித்து
கருமையில் புதைந்து கொண்டது...

Friday, August 8, 2008

சில குரல்களும் நிறைய பம்மாத்துக்களும்


நிகழ் எப்போதும் யாராலாவது,எதனாலாவது பழிக்கப்பட்டோ பழிவாங்கப்பட்டோதான் வந்திருக்கிறது.எதையாவது ஒன்றினை சமாதானத்திற்காக,ஆறுதலுக்காக துணைக்கழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது."நீ அப்படி பண்ண!அதுக்கான தண்டனை இது" இப்படி எதையாவது சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.கிட்டத்தட்ட நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கிப்படித்தான் நேர்கிறது.சில பொழுதுகளில் "எனக்கு மட்டும்தான் இப்படியா?" என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.கவிழ்ந்த மாலையில், தூக்கம் போன அதிகாலைகளில், இப்படி தன் சார்ந்த இரக்கங்களும் புலம்பல்களும் அதிகமாக இருக்கும்.என் நிகழை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோன்றும் சுய பச்சாதாபம் தாங்க இயலாதது.ஆரம்பகாலத்தில் சிகெரெட் புகைத்தேன்.அதன் எண்ணிக்கைதான் கூடியதே தவிர என்னை சமதளத்திற்கு கொன்டு வர அதனால் இயலவில்லை.பின்பு மது.இது கொஞ்சம் உதவி புரிந்தது.ஆனால் அது அடுத்த நாள் காலையில் இன்னும் குற்ற உணர்வுகளை அதிகப்படுத்தும்.என் குடும்பத்தில் யாருக்கும் எந்த பழக்கமும் இருந்திராததால் என் குடும்ப பரம்பரையையே இழிவுபடுத்தியதாய் உணர்வேன்.அடுத்த முறை குடிக்கும் தருணத்திற்கு முன்பு வரைக்கும் அந்த எண்ணங்கள் இருக்கும்.குடிக்கும்போது மட்டும் அந்த எண்ணங்களோ,குற்ற உணர்வுகளோ ஏற்படுவதில்லை.ஆனால் அடுத்த நாள் காலையில் மீண்டும் அதே எண்ணங்கள். இன்னும் அடர்த்தியாய்.இந்த தாங்கொணா வேதனையை என்னால் சரியாய் எழுத முடியவில்லை.ஒரு கட்டத்தில் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன். இப்போது 'மாற்று'க்கான எந்த வழியும் இல்லை.

இது போன்ற ஒரு சூழலில் நான் என்ன செய்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?.

0.தியானம் செய்வது.
அ.தற்கொலை பண்ணி செத்துப்போவது.
ஆ.காதலிப்பது.
இ.திருமணம் செய்துகொள்வது.
ஈ.திருமணமாகி இருந்தால் டைவர்ஸ் செய்வது.

0.தியானம் செய்வது:
முதலில் இந்த தியானம் என்னவென்றால் என்ன இழவென்று எனக்கு சரியாய் புரியவில்லை. ஒரு முறை சூப்பர் ஸ்டார் தியானம் செய்ததால்தான் சூப்பர்ஸ்டாரானேன் என ஒரு டிவி பேட்டியில் சொன்னாராம்.அதை அடியொற்றி எண்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்குடிமகன்/ள் கள் தியானம் செய்தார்களாம்.பெரும்பாலான மகன்களின் மனத்திரையில் முலைகளும்,மகள்களின் மனத் திரையில் குறிகளுமாய் நினைவில் மோத,சிறிது நாட்களில் அதைக் கைவிட்டு வழமைக்கு திரும்பினார்களாம்.இதைச் செவி வழி கேட்டிருந்த நான் அந்த கருமத்தை முயற்சிக்காமலேயே இருந்தேன்.ஆனால் இந்த எண்ணங்களின் இம்சை பொறுக்கமாட்டாமல் இதை செய்துதான் பார்க்கலாமே என ஒரு முடிவினுக்கு வந்தேன்.எதையும் முறையாக தொடங்குவதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.மொறையா சரக்கு ஊத்தி சைட்டிஷ் தொட்டு ச்சீ கருமம்..

ஒரு குருவின் மூலமாய் கற்றுக்கொள்வது சரியாயான வழி் என நண்பர் ஒருவர் சொன்னபடியால் நகரின் பிரதான குப்பைத்தொட்டி,குட்டிச்சுவர் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் சினிமா, மூல, பவுத்திர போஸ்டர்களோடு போஸ்டர்களாய் ஒட்டப்பட்டிருக்கும் தியான சாமியார்களின் விளம்பரங்களை வரிவிடாமல் படிக்கத் துவங்கினேன்.எல்லா சாமியார்களின் பெயர்களும் ஆனந்தாவில் முடிந்தது.ஒரு வேளை அவர்களிடம் போகும் நமக்கும் ஆனந்தம் பொங்குமோ என்னவோ?.

இறுதியாய் ஒரு சாமியாரைத் தேர்ந்தெடுத்தேன்.அவர் இளைஞராக இருந்ததும் ஒரு காரணம். ஒரு இளைஞன் மனச இன்னொரு இளைஞனாலதான் புரிஞ்சிக்க முடியும்..சாமியாருக்கு வயசு 24.ரொம்ப சின்ன வயசுலே ஞானம் அடைஞ்சிட்டாராம்.இந்த ஞானம் அப்படிங்கிறது இன்னாங்கிறதுதான் அடுத்த பெரிய டவுட்..மொதல்ல தியானம் அடுத்து ஞானம்..மலை சுற்றும் வழியிலிருக்கும் அவரின் ஆசிரமத்துக்குப் போனேன்.உள்ளே எங்கெங்கு காணினும் பெண்கள்.18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்கும் பெண்களின் ஆடைகள் பச்சை நிறத்திலும், 25ல் இருந்து 35 வயதிற்குள்ளான பெண்களின் ஆடைகள் இளஞ்சிவப்பு நிறத்திலேயும், 35 ல் இருந்து 45 வயதுவரை அடர் நீலத்திலுமாய் ஆடைகள் (புடவை)அணிந்திருந்தார்கள்.இந்த கும்பல்ல என்னத்த தியானம் பண்ரது?..சரி இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு அந்த நீளமான வரிசைல நிக்க ஆரமிச்சேன்.ரொம்ப தூரத்தில சாமியார் உட்கர்ந்திட்டிருக்கார்.சுத்தி கட்டை வேலி கட்டப்பட்ட நீளமான வரிசைல மெதுவா நகர்ந்து, நகர்ந்து கிட்ட போனேன்.கொஞ்ச தூரத்தில அவர் முகம் தெரிஞ்சது.அட! இந்த முகத்த எங்கயோ பார்த்திருக்கேன். இந்த சிரிப்பு,பேச்சு,முகம் எல்லாம் பழக்கமானதுதான்.இது..இது...இது... அய்யோ!! இளங்கோ அடப்பாவி!! இளங்கோ!! கண்டிப்பா இது இளங்கோதான் ..எனக்கு இவன நல்லா தெரியும். சண்முகா ஸ்கூல்ல படிச்சான்..அப்பவே யார்கிட்டயும் ஒட்ட மாட்டான்.என்ன விட ஒரு க்ளாஸ் கம்மி..ரமணாஸ்ரமத்துக்கு பின்னால இருக்க குளக்கரைல உட்கார்ந்து படிச்சிட்டிருப்போம். அப்ப இந்த பையனும் அங்க படிக்க வருவான்..என் கிட்ட நல்ல பேசுவான் ரெண்டு மூணு பேச்சு போட்டில கூட இவன பார்த்திருக்கேன்..இவன் எப்படி திடீர்னு இவ்ளோ பெரிய ஆளா ஆனான்?..என்ன நடக்குது நம்ம ஊர்லனே தெரிலயே..இதோ கிட்டக்கப் போய்ட்டேன்..இ..இ..இள..பேச்சு வரமாட்டேங்குது ..அவன் புன்னகைக்கிறான்.ஆசிர்வாதம் பன்றான்.ஒரு 23 வயசு பொண்ணு என்ன "நகர்ந்து போய்ட்டே இருங்க சார்!" ன்னு தள்ளுது.நான் வந்துட்டேன்.ரொம்ப குழப்பமா இருக்கு. இவன் எப்படி சாமியாரா ஆனான்?.ஏன் இத்தன பெண்கள் இந்த ஆசிரமத்துல?.ஒண்ணும் புரியல.தியான பயிற்சிக்கான அட்மிசனுக்கு தனி அலுவலகம் இருந்தது.அங்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி இருந்தாங்க. சொல்ல விட்டுப்போச்சு,இந்த வெள்ளைக்கார பெண்களுக்கு அடர் சிவப்பில் புடவை.அவங்க கலரும் புடவை கலரும் சேர்ந்து ஒரு மாதிரி பண்ணிடுச்சி.எனக்கு இதுலாம் சரிப்படாது. ஒரு வார பயிற்சிக்கு என் ஒரு மாச சம்பளத்த வேற கேட்டாங்க.ஒண்ணும் பேசாம வந்திட்டேன்.

அ. தற்கொல பண்ணி செத்துப்போவது.

இத பத்தி ஏற்கனவே நெறய சொல்லியிருக்கேன்.இப்பலாம் சொன்னதையே,எழுதினதயே திரும்ப திரும்ப சொல்றனான்னு ஒரு பிரம்மை வருது.எங்கனாச்சிம் போனா இந்த எடத்துக்கு ஏற்கனவே வந்திருக்கமோன்னு நிழலா சில எண்ணம் வருது.எனக்கு ஒரு மலையருவில இருந்து குதிச்சி செத்துப்போகனும்னு ஆசை.என் ஆத்மார்த்த ஸ்நேகிதியிடம் ஒரு முற இத பத்தி சொன்னேன்.அவ சொன்னத வச்சி ஒரு கவிதை கூட எழுதினனே.படிச்சிருப்பிங்கன்னு நெனைக்கிறேன்.திரும்பவும் அவகிட்ட இந்த ஆசைய சொன்னேன்.சரி செத்துப்போ ன்னு சொன்னா.நான் ஆவியா வந்து உன்ன பிடிச்சிக்கவான்னு கேட்டேன்.வந்தா பார்த்துக்கலாம் நீ மொதல்ல செத்துப்போன்னு சொன்னா.அப்புறம் நான் பேச்ச மாத்திட்டேனா இல்ல அவ கெளம்பி போய்ட்டாளான்னு தெரில.தற்கொலைலாம் சும்மா பேச்சுக்குதான் பாஸ்!.சும்மா கொஞ்ச நேரம் ஏதாச்சிம் பேசனுமேன்னு பேசனும்.அவ்ளோதான்.என் ஸ்நேகிதிக்கு தெரியும் என்ன பத்தி. இந்த மாதிரி ஏதாச்சிம் உளறினா கண்டுக்க மாட்டா.நீங்களும் பெரிசா கண்டுக்காதீங்க..

ஆ.காதலிப்பது

இது மேட்டர்.இந்த அய்டியா வ சொன்னவங்கள நான் ரொம்ப லைக் பண்றேன்.எனக்கு காதலிக்க பிடிக்கும்ங்க.இதுவரை எத்தனை பேரை காதலிச்சிருக்கேன்னு யாராச்சிம் டக் னு கேட்டா ஒடனே சொல்ல வராது.பத்து நிமிசமாவது டைம் எடுத்துக்குவேன்.உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்லவா? நான் காதலிச்ச எல்லாரும் என்னையும் காதலிச்சிருக்காங்க.அட ஆமாங்க.நெசமாத்தான் சொல்றேன்.காதல் ஒரு ஆர்ட் பாஸ்!.அட்டகாசமான கலை!!.மனச தொடனும் பாஸ்! மனச தொடனும்!!.ஒரு குழந்தைகிட்ட பெரிய மனுசத்தோரணை இல்லாம பேசினாத்தான் உங்ககிட்ட ஒட்டும்.அது மாதிரிதான் பெண்களும்.பெரும்பாலான மக்க என்னா பன்றாங்கன்னா பெண் அப்படின்னவுடனே ஏதோ வேற்று கிரக ஜந்து ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எக்கச்செக்கமா பதறி, உருகி, வழிஞ்சி, காத்திருந்து, பொலம்பி, கத வுட்டு, பந்தா பண்ணி, பிகு பண்ணி,.. இயல்பாவே எந்த ஆணும் ஒரு பெண்கிட்ட பேசுறதில்ல.சாதாரணமா எந்த உறவு நிலையிலும் உண்மையா இருந்தாவே அதில ஒரு 'க்ரிப்' இருக்கும்.எல்லார்கிட்டவும் எப்பவும் உண்மையா இருக்க முடியாது.ஆனா ஒரு பெண்கிட்ட பழகும்போது பெரும்பாலும் உண்மைய பேசினா அந்த பெண் சுலபமா நம்ம நம்ப ஆரம்பிக்கும். ஒருமுற நம்பிக்கை வச்சிட்டாங்கன்னா அதுக்கு பிறகு லேசில அது போகாது.ஆனா எல்லாமே டக் னு கலைஞ்சிடும் பாஸ்!. அதிகபட்சம் ஒரு ஆணும் பெண்ணும் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருசம் பழகுவாங்க. அப்புறம் சூழல், வேற மனிதர்கள் னு தடம் மாறி போய்டும். நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்.இப்படி சொல்ரனேன்னு கோச்சிக்காதீங்க நம்ம இயல்பு அதான்.இவ்ளோ தெளிவா பேசுற. அப்புறம் இன்னாயா உனக்கு கொழப்பம்னு கேக்குறீங்களா?.அது அப்படித்தாங்க. எனக்கு எதில ஆர்வமும் அனுபவமும் இருக்கோ அதில நான் சுமாரான தெளிவா இருப்பேன்.இந்த அய்டியா எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒண்ணுதாங்கிறதால இதாலயும் ஒண்ணும் பிரயோசனமில்ல பாஸ்!.

இ.திருமணம் செய்துகொள்வது
அட போங்க..அதான் மேலயே சொன்னனே.. தியான பயிற்சிக்கு போகற அளவுக்கு கூட சம்பாதிக்கல.அப்புறம் எந்த லட்சணத்தில கல்யாணம் பண்ணிக்கிறது?.எனக்குலாம் காதலோட சரிங்க.கல்யாணத்துக்குலாம் வழியில்லை.யாராச்சிம் வீட்டோட மாப்ளைன்னு கேட்டு வந்தாங்கன்னா ரெடியா இருக்கேன்.உங்களுக்கும் அப்படி யாரையாச்சிம் தெரிஞ்சதுன்னா சொல்லுங்க.

. இ க்கே வழியில்லை அப்புறம் எங்க ஈ?

இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க.

Monday, August 4, 2008

சில காதல் கவிதைகள்



விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்.
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்.
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது.
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது.
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..

*************************

கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

*************************

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

*************************

தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

*************************

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது

*************************

புத்தகங்களாலும் அழுக்குத் துணிகளாலும்
நிரம்பிக் கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் உலவுகின்றன.
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்..

Featured Post

test

 test