Saturday, November 8, 2008

வா.மு.கோமு வின் கள்ளி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது.வா.மு.கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு.இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி.

எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது.காமம் கரைபுரண்டோடுகிறது.கற்பு,ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள்.நள்ளிரவு,விடியல்,முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி,பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது.விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல்.முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது.எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது.ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது.லேசான எரிச்சலும் மண்டியது.எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார்.போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி/மனைவிக்கு சமர்பித்திருக்கிறார்.மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும்.




21 comments:

பாண்டித்துரை said...

கள்ளி சமீபத்தில்தான் படித்தேன்.
கடைசி அத்தியாயம் துண்டுபட்ட ஒன்றாக தோன்றியது.
கடைசி அத்தாயத்தின் புரிதலுக்காக
கென்னிடம் தொடர்பு கொண்டபோது கள்ளி பற்றி பேசினேன்.

////பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்./////

கூகை இன்னும் நான் படிக்கவில்லை.

கள்ளியை ஓரே மூச்சில் படித்து முடித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அப்படி நான் ஓரே மூச்சில் படித்ததது எஸ்ரா வின் நெடுங்குருதி.

Anonymous said...

வா.மு. கோமு கொண்டாட படவேண்டியவர் தான்.
சாரு அவரை தனது வாரிசு என்று விளிப்பது கொடுமை..
வா.மு.கோமு.வின் கவிதை தொகுப்பு - "வெறும் குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம்"- அற்புதமான "கவிதா"னுபவத்தை தரக்கூடியது..
- மயில்வண்ணன்.

Unknown said...

வாமுவின் மண் பூதம் சிறுகதை தொகுதி வாசித்தீர்களா? இதெல்லாம் கூட பரவாயில்லை இந்த மாத உயிர்மையில் அவரின் கவிதை...yuck...தீராநதியில் ஜமாலன் அவர்களின் கட்டுரையும் வாமுவின் கவிதையையும் ஒரு சேர வாசிக்க வேண்டும்,ஜமாலனின் கட்டுரை மிகவும் அருமை. இவரின் கவிதையை வாசித்து ஏற்பட்ட கோபம் அவரின் கட்டுரையை வாசித்ததும் தான் ஓரளவிற்கு தணிந்தது...

லேகா said...

கள்ளி நாவல் அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்.வா.மு.கோ.மு குறித்து சாருவின் தளத்தில் படித்த நியாபகம்.

//இந்த 'வாரிசு' களின் மீது ஏற்படும் பரிதாபமும் வாரிசுகளை உருவாக்கும் மகோன்னதர்களின் மீது ஏற்படும் எரிச்சல்களும் அத்தனை சீக்கிரம் அடங்குவதில்லை//

:-))

//எந்தப் பெண்ணை புணர்கிறாரோ அப்பெண்ணின் கணவன் அவருக்கு சாராயம் வாங்கி வந்து கொடுப்பாராம்.(தானும் கொஞ்சம் குடித்துக்கொள்வாராம்)ஆண்டை வீட்டில் மனைவியை புணர்ந்து கொண்டிருக்கையில் கணவன் வீட்டுத் திண்ணையில் தன் வயதுக்கு வந்த மகளோடு உட்கார்ந்து அழுவாராம்.//

ஆரம்ப கால கே.எஸ்.ரவிக்குமார் திரைப்பட காட்சி போல உள்ளது!! :-)
படிக்க வேண்டிய புத்தகங்களை மட்டும் அல்லாது அவசியமற்ற புத்தகங்களை சொல்லி இருப்பதற்கும் நன்றி.

anujanya said...

அய்ஸ்,

வா.மு.கோமுவின் ஒரு கதை உயிர்மையில் படித்தேன். 'சின்ன பாப்பா' என்று ஞாபகம். நடை இயல்பாக இருப்பினும், அதிலும் நுட்பமாக சாதியம் அமர்ந்திருந்தது என்றும் ஞாபகம். வாரிசுகள் பற்றி நீங்கள் எழுதியது முறுவல் தந்தது. கென் பலமுறை நெளிவதை உணர்ந்திருக்கிறேன்.

விளிம்பு மாந்தர்கள் காதை என்றால் அவசியம் கட்டுங்கடங்கா காமம் வந்தே தீர வேண்டுமா? ஒன்றும் புரியவில்லை.

அனுஜன்யா

KARTHIK said...

//ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.//

இந்த ஒரு காரணத்துக்காவது இந்த நாவலை வாசிக்கனும்.

Anonymous said...

இந்த இரு நாவல்களையும் ஒரே நேரத்தில் படித்து நானும் நொந்திருக்கிறேன்.

நீங்கள் சொல்லியபடி, பெருமாள் முருகன் வட்டார வழக்கில் எழுதினாலும் இவ்வளவு அப்பட்டமாக எழுதவில்லை. அவரது சமீபத்திய நாவல் ’கங்கணம்’ ஓரளவுக்குப் பரவாயில்லை.

வா மு கோமுவின் குட்டிப் பிசாசு கதையை படித்திருகிறீர்களா? இந்த நாவலின் சுருக்கம் போலத்தான் இருக்கும்.

ஆனால் நாவலில் அவர் எழுதிவாறேதானிருக்கிறது மாதாரிகளின் வாழ்வு. முகத்தில் அறையும் விதமாக எழுதியிருப்பது ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும் போகப் போக அயர்ச்சியாகவும் இருப்பது உண்மை.

ஆனால் இதனுடன் ஒப்பிடும் போது சோ.தர்மனின் தூர்வை சுமாருக்கும் ரெம்பக் கீழ். நம்ப முடியாத பாத்திரப் படைப்புகளும், சம்பவங்களும் ஒட்டவேயில்லை.

MSK / Saravana said...

நெறைய புத்தங்களை படிகறீங்க.. கொஞ்சம் பொறாமையாய் தான் இருக்கு..
கள்ளி நாவல் அறிமுகத்திற்கு நன்றி.

அடுத்தவாரம்தான் நான் நகுலன் நாவல் தொகுப்பு வாங்கலாம் என்று இருக்கிறேன்.

Ayyanar Viswanath said...

பாண்டித்துரை கடைசி அத்தியாயத்தின் அபத்தத்தை தவிர்த்திருக்கலாம்தான்..நெடுங்குருதி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி மயில்வண்ணன்..

உமாசக்தி மண்பூதம் வாசிக்கவில்லை.பெண்களுக்கு இவர் எழுத்து பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை :)

Ayyanar Viswanath said...

லேகா
கே.எஸ் படங்களோடு ஒப்பிடும் உங்கள் தமிழ்சினிமா பார்வை வியக்க வைக்கிறது :D

அனுஜன்யா
கட்டுக்கடங்கா காமம் என்பதை ஒரு இலக்கிய உடைப்பாய் அணுக முயற்சிப்பது வரவேற்கத் தகுந்தது.அதை வலிந்து திணிப்பதே எரிச்சலை வரவழைக்க கூடியது.க.கா இல்லாத பல படைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.யுகத்தினை புரட்டிபோடும் எழுத்தாளக் குஞ்சுகளாலேயே இத்தவறான அணுகுமுறை இவ்வாறாக ஆகிவிட்டது.

Ayyanar Viswanath said...

கார்த்திக் உங்கள் வட்டாரமொழி என்பதால் உங்களுக்கு இந்நாவல் மிக நெருக்கமாக இருக்கலாம்.

வேலன்
நம்பமுடியாத படைப்பாக்கங்களை விளிம்பு சார் மொழியாக பிரதானப்படுத்துகையில் ஏற்படும் அயர்ச்சியை தவிர்க்க முடியவில்லை.கூகை குறித்து தட்டையாய் விமர்சித்தோமோ என்கிற உறுத்தல் எழுந்தது.உங்களின் பார்வையும் ஒத்திருப்பதால் நன்றி

சலம் said...

கூகை நாவல் பற்றிய உங்கள் புரிதல் தவறென்றே நினைக்கிறேன். ஆதிக்க சாதி இந்துக்கள் பிராமணர்களைக் காட்டிலும் பயங்கரமானவர்கள் என்பதை இதை விட சிறந்த மொழியில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

சுகுணாதிவாகர் said...

/புனைவிலக்கியத்தில் சாருவின் சாதனைகள் எல்லாம் மேல்தட்டு/நடுத்தர வர்க்கத்து போர்னோ மாதிரிகள் மட்டுமே/

இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக சாருவின் எழுத்துக்களை மதிப்பிட்டு விட முடியாது என்றே கருதுகிறேன். சாரு தமிழ்ச்சூழலில் ஒரு முக்கியமான எழுத்தாளர்.

Ayyanar Viswanath said...

வெங்கடாசலம்

தலித் எழுத்து என்கிற அடையாளத்தை முன் நிறுத்தும் எழுத்துக்களுக்கான அடிப்படை தேவை பிரம்மாண்டங்களிலிருந்து வெளிவருவதே..நேரடி மொழி அல்லது மிகச்சரியான வட்டார மொழியில் எழுதப்படுவதே என்னளவில் சிறந்த படைப்பாக இருக்க முடியும்..

கூகை பக்கம்:22 இதை வாசித்துப் பாருங்கள் அடைப்புகுறிகளுக்குள்ளாய் தத்துவ விசாரங்களை வேறு நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்..(விழுதுகள் சடையென்றால் தலையெது?மரமே தலையா?தலையே மரமா)இதைப் படிக்கும்போது பற்றிக்கொண்டு வந்தது எனக்கு ஆதிக்க சாதியினருக்கு எதிரான ஒரு இலக்கியத்திலும் ஏன் ஆதிக்க சாதி எழுத்து நடை?.. அடுத்த பத்தியை படித்துப் பாருங்கள் இதை விட கொடுமையாக இருக்கும்...

இயல்பு வாழ்வை பிரதிபலிக்க வேண்டிய படைப்புகள் மிகப்படுத்தபட்ட கற்பனைகள் கொண்டிருந்தாலும் அவற்றினோடு என்னால் ஒட்ட முடியவில்லை..

மற்றபடி இப்படைப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்வே...

Ayyanar Viswanath said...

சுகுணா..

சாருவை இங்கே விமர்சித்திருப்பது அவரின் வாரிசு அரசியலை முன் வைத்தே..அவரின் வாரிசாக அறிவிக்கப்பட்ட வா.மு.கோமு புனைவு சார் உடைப்புகளில் முதல் படைப்பில் தொட்டிருப்பதே மிகவும் காத்திரமான ஒரு தளம்.இன்றளவிளும் சாரு தொட்டிராத ஒரு தளமாகவும் இருக்கிறது.ராஸலீலாவும் ஜீரோ டிகிரியும் மேல்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தோடு தன் எல்லைகளை குறுக்கிக் கொண்டு விடுகிறது.ஆனால் கோமுவின் தளம் விளிம்பிலிருந்தே தொடங்குகிறது.

புனைவு என்கிற புள்ளியில் சாருவின் பங்களிப்பை குறித்தே எனது விமர்சனமிருந்தது.

நிலாரசிகன் said...

வா.மு.கோமுவின் சிறுகதை தொகுப்பான "அழுவாச்சி வருதுங் சாமி"யும் மண்பூதமும் படித்திருக்கிறேன். படிக்க வேண்டிய லிஸ்டில் கள்ளி இருக்கிறது.

சமீபத்தில் உயிர்மையில் வெளியான "சின்னபாப்பா குட்டிசரிதை" க்கு பின்னாலிருக்கும் வலி அதை ஒரு மிகச்சிறந்த சிறுகதையாக எண்ணத்தோன்றியது.

அதற்கு சம்பந்தமே இல்லாததுபோல் அமைந்திருந்தது இம்மாத உயிர்மையில் வெளியான அவரது கவிதைகள்.

நல்லதொரு விமர்சனம் அய்ஸ்.

தமிழ்நதி said...

"பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்."

எனக்கு இது புரியவேயில்லை அய்யனார். 'பெண்மைத்தனங்கள்'என்றால் என்ன? :)

Ayyanar Viswanath said...

நன்றி நிலா ரசிகன்

தமிழ் ஒரு ஆணாதிக்கவாதியிடம் கேட்கிற கேள்வியா இது :)

Karthikeyan G said...

Hi.. "INIYA UDHAYAM" november Magazine has Mr.Komu's detailed interview.. Very intresting..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ராஸலீலாவும் ஜீரோ டிகிரியும் மேல்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தோடு தன் எல்லைகளை குறுக்கிக் கொண்டு விடுகிறது/

அப்படியா? நல்ல கண்டுபிடிப்பு :))

Karthikeyan G said...

"INIYA UDHAYAM" november Magazine has Mr.Komu's detailed interview

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=316

Featured Post

test

 test