Monday, August 4, 2008

சில காதல் கவிதைகள்



விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்.
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்.
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது.
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது.
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..

*************************

கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

*************************

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

*************************

தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

*************************

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது

*************************

புத்தகங்களாலும் அழுக்குத் துணிகளாலும்
நிரம்பிக் கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் உலவுகின்றன.
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்..

18 comments:

KARTHIK said...

கலக்குங்க.
:-))

anujanya said...

அய்யனார்,

நல்லா இருக்கு எல்லாமே. 'பாஸ்பரஸ்' என்ன சரியான பிரயோகம்! இருளில் ஒளி மட்டுமில்லாது விரைவில் 'பற்றிக்கொள்ளவும்' செய்யும். 'சிதறும் கருமையும்' 'நுழையும் வெளிச்சம்' அருமை.

மழையில் 'கரைந்து' வாசம் கொடுத்த நாகலிங்கப் பூக்கள். செம்ம form ல இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

MSK / Saravana said...

அத்தனை கவிதைகளும் மிக்க அருமை.. கலக்கல் கவிதைகள்..
ரொம்ப நல்லா இருக்கு..

குசும்பன் said...

சூப்பர்

தமிழன்-கறுப்பி... said...

தல அடிக்கடி எழுதுங்க தல காதல் கவிதைகளும்...

தமிழன்-கறுப்பி... said...

இப்படியான காதல் கவிதைகளில் தொலைந்தபோகிறது என் மனதின் இறுக்கங்கள் அனைத்தும்...

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு அய்..!

காதல் தாண்டி வந்தாலும் உள்ளே இழுத்து போட்டிருதுல்ல...

தமிழன்-கறுப்பி... said...

மனதின் அடியில் கிடக்கிற என்னவென்று தெரியாத சொற்களை நீங்கள் எழுதியிருப்பதைப்போன்று திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

கலக்கியிருக்கிங்க...

Unknown said...

மிக நல்ல கவிதை.
நீங்கள் எழுதி எனக்கும் புரிகிறதே!
நான் உயர்ந்து விட்டதா?
நான் அளவுக்கு நீங்கள் துவங்கி விட்டீர்களா?

Jayakumar said...

அட்டகாசமான கவிதைகள்

லேகா said...

//தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம் //

வார்த்தைகளே வாசனை அனுபவத்தை தருகின்றது!!

//நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்..//

பூனை சென்று மீனா?? அழகிய ஒப்பீடுகளே. மலரோடும்,கொடியோடும் பெண்களை ஒப்பிட்டு படித்து சலித்துவிட்டது!!

Ayyanar Viswanath said...

நன்றி கார்த்திக்

அனுஜன்யா : மிக்க நன்றி

சரவணகுமார் : நன்றி

Ayyanar Viswanath said...

குசும்பன்,தமிழன்,ஆடுமாடு,சுல்தான்,ஜேகே மற்றும் லேகா கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.... காதல் கவிதையை கொஞ்சம் பயத்தோடதான் எழுதினேன் மக்கள் குமுறிடப் போறாங்கன்னு பார்த்தா நேர்மாறா இருக்கு மிக்க நன்றி நண்பர்களே :)

Sathis Kumar said...

வணக்கம்,

படத்தைப் பார்த்து கவிதைக் கூறுங்கள் எனும் பதிவு இட்டுள்ளேன்.

பதிவர்களும் வாசகர்களும் கவிதைகளை இங்கு சமர்ப்பிக்கலாம். இதோ அதன் சுட்டி :

http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html

Anonymous said...

அன்பின் அய்யனார்

கொன்றை, நாகலிங்கப்பூக்களோடு இந்த முறை பாஸ்பரஸும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் 'முழுமை'யான கவிதைகள் என்று இதனை வகைப்படுத்துவேன். மிக்க மகிழ்ச்சி மற்றும் அன்பு

சிவா.

Ayyanar Viswanath said...

நன்றி சிவரமன் ஜி

நன்றி சதீசு

நித்தி .. said...

ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
wow... ipadi kooda rasikka mudiyuma?
epathum pol unga rasanai ithilum
palLich!!!!
romba alagu...

Featured Post

test

 test