Wednesday, July 16, 2008

சமையல் குறிப்புகள் : காங்கோ வின் கிழக்கு முனையிலிருந்து ஒரு கடிதம்

சென்ற இடுகைக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கடிதங்களாய் வந்து குவிந்தன.வழக்கம்போல் ஏகப்பட்ட திட்டுகளும்,பாராட்டுகளுமாய் நிறைந்திருந்ததில் ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்பும், பண்பும், பாசமும், கொண்ட எழுத்தாளர் அய்யனார் அவர்களுக்கு, உங்கள் அன்பை என்றும் மறவாத கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரி சேர்ந்து எழுதிக்கொள்ளும் மடல்.உங்கள் சமையல் குறிப்புகளை படித்ததிலிருந்து எங்களின் நாவில் நீர் சுரந்த வண்ணம் இருக்கிறது.முருங்கை,மாங்காய் சாம்பார் என்பது எத்தனை சுவையானதென்பதை மறந்தே போயிருந்தோம்.உங்களின் பதிவு எங்களின் கிளர்ச்சியைத் தூண்டி விட்டது.ஆப்பிரிக்காவின் வெகு அடங்கிய பிராந்தியமான காங்கோவின் கிழக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருவதால்,நீங்கள் சொல்லியிருக்கும் சமையல் குறிப்பின்படி எதையும் சமைத்துப் பார்க்க முடியவில்லை.காய்கறிகளை கண்ணில் பார்த்தே பல வருடங்களாகி விட்டன.கம்பு,கேழ்வரகு,கடலைப் பிண்ணாக்கு,எள்ளுப்பிண்ணாக்கு போன்றவைகளே இங்கு பெருமளவு கிடைக்கின்றன.அரிசி அபூர்வமாய் கிடைக்கும்.இறைச்சியே எங்களின் பிரதான உணவாய் இருப்பதால் காய்கறிகளை மறந்தே போயிருந்தோம்.ஆனால் உங்களின் பதிவு எங்களுக்குள் என்னவோ செய்தது.என் மனைவி திரிபுர சுந்தரி நேற்று கனவிலும் முருங்கை மாங்காய் சாம்பார் என புலம்பினாள்.என்னால் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு வருந்தினேன்.சரி உங்களுக்கு கடிதம் எழுதினாலாவது மனது ஆறுதல் அடையலாம் என்றே இக்கடிதம் எழுதினோம்..நீங்கள் தொடர்ச்சியாய் இதுபோன்ற பதிவுகளிட்டு இந்த வாழ்வை சிறிது கனவிடை தோய்ங்கள் என அன்போடு வேண்டுகோளிகிறோம்.

இப்படிக்கு
தங்களை என்றும் மறவாத
கோவிந்தசாமி மற்றும் திரிபுர சுந்தரி


இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் என் நினைவு பதின்மம் தப்பிப் போனது.என்றுமே தீராத பதின்மத்தின் கவர்ச்சிகளில் மூழ்கிப்போனேன்.ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை யாருக்கு கடிதம் எழுதினாலும் அன்பும், பண்பும், பாசமும், கொண்ட என்றுதான் ஆரம்பிப்பேன்.பனிரெண்டாம் வகுப்பில் கவிஞனானதால் ப்ரியமுள்ள என எழுத ஆரம்பித்தேன்.நான் ஒரு எழுத்தாளனாவதற்கு ப்ரியமுள்ள எனத் தொடங்கி எழுதப்பட்ட என் காதல் கடிதங்களே உறுதுணையாய் இருந்திருக்கலாம்.இதுவரை நானூற்றிச் சொச்சக் காதல் கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவை பெரும்பாலும் என்னிடமே திரும்பி வந்தன.பெண்கள் இந்த வகையில் பத்திரிக்கை அலுவலகங்களை விட நேர்மையானவர்கள்.ஒரு பெண் மட்டும் என் கடிதம் படித்து,மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு ஏற்கனவே எடை அதிகமான காதல் கடிதத்தில்,ஒரு கல்லையும் சேர்த்துக் கட்டி,நான் அவள் வீட்டுப்பக்கமாய் போகும்போது சன்னலிலிருந்து என் மீது வீசியெறிந்தாள்.எனக்கு சிறிது விழிப்புணர்வு அதிகம் என்பதால் கல்லடியிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

பதின்ம நதியின் கரைகளில் எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு வழியாய் மீண்டு, கோவிந்தசாமிக்கும் திரிபுரசுந்தரிக்கும் பதில் கடிதம் எழுதினேன் அதுவும் உங்களின் பார்வைக்காக.

அன்புமிக்க நண்பர் கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரிக்கு

வணக்கம்.தங்களின் மடல் கிடைக்கப் பெற்றேன்.உங்களுக்கு என் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு எல்லாம் வல்ல இறையிடம் நன்றி சொல்கிறேன்.உங்கள் பிரதேசத்தில்
காய்கறிகள் கிடைக்காமல் போனதிற்காக வருந்துகிறேன்.இருப்பினும் இறைச்சி அற்புதமானது. இளம் மிருகங்களின் சுவை அபரிதமாய் இருக்கும்.பெரிய தீயில் அவற்றை வாட்டி லேசான கருகலோடு உண்பதை நினைத்தால் வாயில் சுவையூறுகிறது.நீங்கள் காய்கறிகளுக்காக எச்சிலூறுவதும் நாங்கள் இறைச்சிக்காய் எச்சிலூறுவதும் தவிர்க்க இயலாதது.

உங்களிடம் கிடைக்கும் பொருள்களை வைத்து வேறுவித சுவை கொண்ட உணவுகளை எப்படி சமைப்பதென இங்கே பகிர்கிறேன்.கம்பும்,கேழ்வரகும் கிடைக்கும் இடங்களில் தவிடும் கிடைக்கலாம்.கொஞ்சம் முயற்சித்து தவிடையும் வாங்கிவிடுங்கள்.தவிடில் இரண்டு வகை, ஒன்று பச்சரிசி தவிடு, இரண்டு புழுங்கலரிசி தவிடு, எப்படியாவது பச்சரிசி தவிடை தேடிப் பிடிங்கள்..

இப்போது சமையலைத் துவங்கலாம். இந்த உணவை எங்கள் ஊர்பக்கம் எருமாட்டுக் கஞ்சி என அழைப்பர்.இப்போது நாகரீக வடிவங்களுக்கு மெல்ல நாம் மாறிக்கொண்டிருப்பதால் எருமாமிர்தம் எனப் பெயரிட்டு அழைக்கலாம்.

தேவையான பொருட்கள்.

மல்லாட்டைப் பிண்ணாக்கு - 4 அன்னம் (நீங்கள் சொன்ன கடலைப் பிண்ணாக்குதான்)
எள்ளுப் பிண்ணாக்கு - 3 அன்னம்
கம்பு - 2 கப்
கேழ்வரகு - 2 கப்
பச்சரிசி தவிடு - தேவையான அளவு

கம்பு,கேழ்வரகு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.உங்கள் ஊரில் உரல், உலக்கை இவையெல்லாம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இரண்டையும் ஒரு பதமான மசிந்த நிலை வரும்வரை உலக்கை கொண்டு மசிக்கவும். மிக்ஸியினால் மசியச் செய்வது அத்தனை ருசியாய் இருக்காது.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்த பின் மசிந்த கம்பு + கேழ்வரகை கொட்டவும்.கொதிக்கத் துவங்கியதும் மல்லாட்டைப் பிண்ணாக்கு மற்றும் எள்ளுப் பிண்ணாக்கை போடவும். பிண்ணாக்கும்,கம்பும்,கேழ்வரகும் சேர்ந்து கொதிக்கத் துவங்கும்போது, ஒரு அற்புத மணம் உங்கள் நாசியினை நிறைக்கும்.தன்னிலை மறப்பதற்கு முன்பாக தவிட்டைக் கொட்டிக் கலக்கவும்.அவ்வளவுதான் சுவையான எருமாமிர்தம் தயார்.

இதை சூடாக உண்டால் நாக்கு தட்டிப்போகும்.சிறிது நேரம் ஆரவைத்து குடிப்பது ஆரோக்யமானது..இவ்வுணவை முயற்சித்துப் பார்த்துக் கடிதமெழுதுங்கள்.நான் எதற்கும் ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் இவர்களை ஆலோசித்து உங்கள் பகுதியில் கிடைப்பதைக் கொண்டு வேறுவகை இலக்கியச் சமையலேதேனும் செய்ய முடியுமாவென விசாரித்து வைக்கிறேன்.

ஆப்பிரிக்க காடுகளுக்கு போவது குறித்த என் ஆசைகள் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் மீண்டும் அரும்பியிருக்கின்றன.உங்களின் தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்தின் மூலமே அரும்பின ஆசைகள் மலர்கின்றனவா எனப்பார்க்க வேண்டும்.எப்போது அவ்வாசைகள் மலர்கின்றனவோ உடனே அங்கு என் மனைவி,குழந்தைகளோடு வருகிறேன்.பிஸினஸ் க்ளாஸ் அவசியமில்லை நான் மிகச் சாதாரணனன்.

மிக்க தோழமையுடன்,
முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன்

அய்யனார்


***சமகால இலக்கியத்தை வேறொரு நிலைக்கு தனியாய் தள்ளிக்கொண்டு போகும் பிரியமுள்ள ஆசான் ஜெயமோகனுக்கு.

17 comments:

Anonymous said...

முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன்.

ஆகா.. ஆகா..!!

கோவிந்தசாமி மற்றும் திரிபுர சுந்தரிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

:)

கே.என்.சிவராமன் said...

அய்யனார்,

உங்களுக்கே இது ஓவரா தெரியல... பாவம்யா ஜெயமோகன்... தொடர்ந்து இந்த அடி அடிக்கறீங்க.... :)

ஆனாலும் நல்லாத்தான் இருக்கு... இன்னும் நண்பர் குசும்பன், இதுக்கு விளக்கவுரை எழுத ஆரம்பிக்கலையே? ஏன்? :(

KARTHIK said...

:-))

Unknown said...

உண்மையிலே சில ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள், தங்கள் மூதாதைகளின் கலாச்சாரத்தை மீண்டும் பெறுவான் வேண்டி, தமிழை, அவர்கள் அந்நாட்டு மொழியில் எழுதி வைத்துக் கொண்டு, கோயில்களிலும் தாங்கள் ஒருவரோடொருவர் கலந்து பேசும் சபைகளிலும் பேசுவதாகவும், அவர்களுக்கு தமிழ் சொல்லித் தர தமிழகத்திலிருந்து சில குழுக்கள் உதவுவதாகவும் கேட்டுள்ளேன் அல்லது படித்துள்ளேன். அவர்களிலொரு தம்பதியர் உண்மையிலேயே உமக்கு எழுதியிருக்கவும் கூடும் அய்யனார்.

நந்து f/o நிலா said...

படிச்சிட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல அய்யனார்.
கடைசியா ஆசான் பேர வேற சொல்லனுமா?

ஒரே நக்கல் மூட்லயே இருக்கீங்களே என்ன விஷயம்>?

Ayyanar Viswanath said...

நன்றி பொற்கொடி :)

பைத்தியக்காரன்
ஜெமோ ரொம்ப நல்லவரா இருக்காரா அதான் :)

நன்றி கார்த்திக்

Ayyanar Viswanath said...

தகவலகளுக்கு நன்றி சுல்தான்..ஆனா இது அப்படி இல்ல :)

நந்து சும்மா லுலு..:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

அது ஏன் சமகால இலக்கியமா இருக்கட்டும், சமையாலாகட்டும், இல்ல வாசகர்!!!!!!! கடிதத்துக்கான பதிலாகட்டும் உங்க காதல் கடித பிராதபத்த விட மாட்டீங்களா.... குடும்பஸ்தன் ஆயாச்சு... கொஞ்சம் வெளில வாங்கப்பா.. (வீட்டம்மா கிட்ட அடிவாங்க கூடாதில்ல):)

Ayyanar Viswanath said...

அக்கறைக்கு நன்றி கிருத்திகா :))

வளர்மதி said...

குசும்பன் பதிவில் நான் அறிவித்திருந்த போட்டிக்கு “பணமாகப் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களுக்கு அய்யனாரின் கவிதை ஒன்று இலவசமாக வழங்கப்படும்” (விட்டுப் போன தகவல்: அவரே நேரில் வழங்குவார்) என்று அறிவித்திருந்தேன்.

இப்படி ஒரு ஃபுல் மீல்ஸ் தான் தருவேன் என்றால் பதிவர்கள் போட்டிக்குள் இறங்குவார்களா?

:(
வளர் ...

Ayyanar Viswanath said...

வளர் ஏன் இந்த விசப்பரிட்ச :)

Anonymous said...

அய்யனார், உங்க‌ள் ச‌மைய‌ற்குறிப்பைப் பார்த்து உங்க‌ள் துணை என்ன‌ சொல்ல‌ப்போகின்றார் என்று யோசித்துப் பார்க்கின்றேன் :-).

Anonymous said...

அய்யனார், உங்க‌ள் ச‌மைய‌ற்குறிப்பைப் பார்த்து உங்க‌ள் துணை என்ன‌ சொல்ல‌ப்போகின்றார் என்று யோசித்துப் பார்க்கின்றேன் :-).

Ayyanar Viswanath said...

வேற என்ன டிசே அப்பாடா! வேல மிச்சம் னு தான் :))
வருகைக்கு நன்றி..

தமிழன்-கறுப்பி... said...

அவரு பாவம்ணே...;)

bogan said...

சக்கைப் பிரதமனுக்கே சக்கை கொடுக்க முயற்சிக்கும் உங்கள் தீய எண்ணத்தைக் கொடுமையாக கண்டிக்கிறேன்

தமிழ்நதி said...

அய்ஸ்,

என் வலைப்பக்கத்தில் “உலோகம்“வாங்கியதன் பயனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.:))உருக்கிடுவாய்ங்க போலிருக்கு.

நீ இங்க திரிபுரசுந்தரிக்கு முருங்கைக்காய் சாம்பார் கற்பித்துக்கொண்டிருக்கிறாய். கல்பனாவுக்கு இந்த விபரம் தெரியுமா?

Featured Post

test

 test