Monday, February 11, 2008

காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்



0
அழகான கடற்கரை நகரமொன்றின் மிக அழகான சாயந்திரமொன்றில்தான் அது நிகழ்ந்தது. கிளைகள் விரித்து நெடிதுயர்ந்து வளர்ந்த விருட்சமொன்றின் பக்க வாட்டிலிருந்த வெளிச்சம் மெதுவாய் குறைந்துகொண்டு வந்தபடியிருந்தது. இருளென்பது மிகவும் குறைந்த ஒளி என்கிற பாரதியின் வசனக் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.அவளின் முகத்திலிருந்து மறைந்த வெளிச்சம் கண்களினுள் புகுந்தது.எப்போதும் பயத்தை மட்டுமே வெளிக்காட்டிய அக்கண்களிலிருந்து எல்லையில்லாததொன்று நீரின் வடிவம் பெறத் துவங்கியது.வெடித்துச் சிதறிய விம்மல்களோடு அவள் என் மார்பின் வசம் புகுந்தபடி திக்கித் திணறி தன் நெடுங்காலக் காதலைச் சொன்னபோது பாறைகளுக்குள் மெதுவாய் அலையடித்துக் கொண்டிருந்த கடல் நீர் தன் எல்லைகளை விரிவுபடுத்தியது.நாங்கள் மிதக்கத் துவங்கினோம்.எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிட்டுக்குருவியும் இன்னொரு தேன்சிட்டும் தம் இறக்கைகளை எங்களுக்குத் தந்துவிட்டுப் போனது மிதந்து சலித்த பொழுதொன்றில் சிறகுகளை அணிந்துகொண்டு பறக்கத் துவங்கினோம்.

அவளை முத்தமிடும்போது மயிர்க்கால்களில் பூக்கள் முளைக்கத் துவங்கின.விரல்களைத் தீண்டும்போது இதயம் தன் வீணையின் நரம்புகளை சுண்டி விட்டது.அவள் தன் தோள்களிலும் உள்ளங்கையிலும் என் அம்மாவின் சாயல்களைத் திருடி வைத்திருந்தாள்.மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகுதான் அவளின் உதடுகள் எனக்குக் கிடைத்தது,இல்லை எடுத்துக் கொண்டேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.உதடுகள் என் வசமான பின் அவள் தனது நம்பிக்கைகளை,அடையாளங்களை முற்றிலுமாய் இழந்துபோனாள். என் 'தான்' திருப்தி பெற்றது என் 'தான்' நிறைவடைந்தது. என் 'தான்' கடைசியில் காணாமல் போனது. நாங்கள் இன்னும் உயரப் பறக்கத் துவங்கினோம்.

ஒரு மலைப் பிரதேசத்திற்கு பனிக்கால விடியலில் சென்றடைந்தோம்.புகையெனப் பனி அவளின் கேசம் படிந்தது.குளித்து முடித்த சின்னஞ் சிறு பூனைக்குட்டியினைப் போல அவளின் உடல் நடுங்கிப் போனது. ஒரு தாய் பூனையின் அரவணைப்புகளோடு அவளை என்னில் பொதிந்து கொண்டேன்.என் மார்பில் நீள வாக்கில் கூர்மையான கத்தியினைக் கொண்டு கிழித்து உள்ளே தஞ்சமடைந்தாள். தான் எப்போதுமே பெற்றிராத கதகதப்பினை நான் தருவதாய் உள்ளிருந்து முனகியபடியிருந்தாள். பின்பொரு நந்தவனத்திற்குச் சென்றோம் பிரபஞ்சத்தின் புதிர்களை, முடிச்சுகளை அவள் தன் உள்ளாடை கொண்டு மறைத்து வைத்திருந்தாள்.ஆடைகளையும்,ரகசியங்களையும் ஒருமித்துத் தளர்த்தினோம். இயற்கையின் அதி அற்புத ரகசியங்களை நாங்கள் தட்டுத் தடுமாறியபடி கண்டறியத் துவங்கினோம். அஃதொரு கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களையும் தேனுன்ட வண்ணத்துப் பூச்சியின் கிறக்கத்தினையும் ஒத்திருந்தது.புதிர்கள் விடுபட்ட பொழுதுகள் மிகுந்த மயக்கத்தையும் விடுவித்த பொழுதுகள் சலிப்பையும் தந்தன.

இறக்கைகளை கழற்றி எறிந்து விட்டு நடக்கத் துவங்கினோம்.பிறகு அவள் இன்னொருத்தனையும் நான் இன்னொருத்தியையுமாய் கல்யாணம் செய்துகொண்டோம்.

00
காத்திருத்தலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?..இந்த உலகத்தின் உன்னதமான செயல் அதைத் தவிர வேறெதுவுமில்லை என்பது என் திண்ணம்..என்னவளைப் பார்ப்பதற்கு எப்போதும் இரண்டு மணி நேரங்கள் முன்னால் வருவது எப்போதுமெ எனக்குப் பிடித்திருக்கிறது.அவள் என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறாள். ஆம்! என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே...அவளிடம் மொத்தம் பதினெட்டு நிற சுடிதார்கள் இருக்கின்றன.. மூன்று நிறப் புடவைகள்.. ஓரே ஒரு முறை மட்டும் தாவணியில் பார்த்திருக்கிறேன்.. அதன் பிறகு அதை அவள் அணிவதில்லை...எனக்கும் அவளுக்கும் திருமணமான இரவில் அந்த ஆடையைத்தான் அணியச் சொல்லப் போகிறேன்...கொலுசுகளில் மூன்று விதம் அவளிடம் இருக்கிறது.. வெண்ணிறப் பாதங்களில் வெள்ளி நிறக் கொலுசுகள் எத்தனைக் கவிதை!! இல்லை...ஆம்! எத்தனை பேர் எத்தனையோ முறை சொல்லி சலித்துப் போனாலும் அவளின் பாதங்களுக்கு கொலுசுகள் அழகுதான்... இன்னமும் மல்லிகைப் பூக்கள், கண் மை, இரட்டைப் பின்னல் எனச் சொல்லிக் கொண்டு போக அவளிடம் ஏராளம் உண்டு.. ஆனால் அவற்றை எல்லாம் என்னால் அதிக நேரம் பார்க்க முடியாது. அவள் கண்களை எத்தனை நொடிகள் பார்த்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. இமைக்கும் நேரத்திற்கு கூடுதலாய் சில நொடிகள் இருக்கலாம் அவ்வளவுதான்.. ஒரு முறை என் அத்தனை வீரத்தையும் வரவைத்துக் கொண்டு நேரம் கேட்டேன் அவளிடம் ஒன்பது பதினைந்து என்றாள் என் கைக் கடிகாரம் எப்போதும் அந்த நேரத்தைத்தை தான் காட்டுகிறது ..

எனக்கு முன்னால் சில இலட்சம் ஆணகள் எப்படி காதலித்தார்களோ அதே சாயலில்தான் அவளைக் காதலித்தேன்.. எனக்கு எதெல்லாம் காதல் என சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே முறையில்தான் நானும் அதை அணுகினேன்...நான் அந்தப் பெண்ணின் மீது பைத்தியமானேன்...அவள் உயிர் வாழ்வதே எனக்காகத்தான் என நம்பத் துவங்கினேன்... உணர்வுகளைக் கடத்த அன்பினைப் பரிமாற வார்த்தைகள் அத்தனை முக்கியமில்லை என்பது என் துணிபு.நான் கண்களால் பேசத் துவங்கினேன்.. அவள் எனக்கு பதிலும் சொன்னாள்.. மிக நிறைவாய் இருக்கிறேன் நான்.இதுவரை அவளுக்காய் எழுதப்பட்ட கடிதங்கள் மொத்தம் இருநூற்றை தாண்டிவிட்டது கவிதைகள் கூட சிலதை எழுதியிருக்கிறேன்.ஒரு நாள் சொல்ல வேண்டும்.. என் காதலை, தவிப்பை, காத்திருத்தலை சொல்லிவிடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால் மொத்தமாய் காதலித்து விடுவதென தீர்மானித்திருக்கிறேன்.. ஒருவேளை அவள் என்னை மறுத்தாள் கொல்வதற்கு ஒரு கத்தியினையும் கால் சட்டைப் பையினுள் தயாராய் வைத்திருக்கிறேன்..அந்த அழகான வயிற்றில் சதக் சதக் எனக் கத்தியால் குத்துவது குரூரமானதுதான்.. என்றாலும் எனக்கு வேறுவழியில்லை..

ஏனெனில் நான் அவளைக் காதலிக்கிறேன்.

000
அவன் உரையாடல் வழி என்னிடம் வந்தடைந்த போது மிகவும் சோர்ந்திருந்தான்... களைத்திருந்தான்.. தொடர்ச்சியான ஏமாற்றங்களின் குருதி அவன் மொழியில் கலந்திருந்தது... இறக்கைகள் வெட்டப்பட்ட ஒரு பறவையினை நினைத்துக் கொண்டேன்...அவனுடைய பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. நல்ல குரல்.. கிறக்கமும் தவிப்புமாய் ..படக் என காதலை சொல்வது எரிச்சலானது (இதற்கு முன்பு ஒருத்தனை நடுரோட்டில் செருப்பால் அடித்தேன்)அவன் சொல்லவில்லை.. நானே சொன்னேன்.. அவன் உடனே ஒத்துக்கொள்ளாதது தவிப்பாய் இருந்தது.. வெட்கம் விட்ட பெண்மை வேறு இம்சித்தது.. இருப்பினும் அவனுக்கு அன்பென்றால் என்னவென்று புரிவித்து விடவேண்டும்.. நான் மிக அன்பானவள்.. மிக மிக அன்பானவள்.. என்னை மொத்தம் இருபத்தேழு பேர் காதலித்தார்கள்... என்னால் எல்லாருக்கும் தோழியாய் மட்டுமே இருக்க முடிந்தது.. ஏனெனத் தெரியவில்லை.. இவனைப் போன்ற ஒருத்தனுக்காய்த்தான் காத்திருந்தோனோ? என்னமோ..அவன் விலக விலக எனக்கு வெறியேறியது.. பைத்தியம் பிடித்தது..என்னை ஏன் அவனுக்கு பிடிக்காமல் போனது..என்ன குறை என்னிடம்?அவன் என்னை சுத்தமாய் புறக்கணித்தான்.. என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் போன ஒரு சாயந்திரத்தில் மொத்தம் முப்பது மாத்திரைகளை முழுங்கி நடு வீட்டில் வாந்தியெடுத்தேன்...மருத்துவமனை பக்கம் கூட அவன் வரவில்லை.. குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பு கூட இல்லை..எனக்கு வெறுத்துப் போனது.. அவன் ஒரு கர்வி!.. திமிர் பிடிச்ச கம்மனாட்டி..ஒரு நாள் அவன் வீட்டிற்கு போய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.. என்னடா பிரச்சின என்கிட்டே?ன்னு அழுதேன்...

உன் முலை சின்னதா இருக்குன்னு சொல்லி இறுக்க கட்டிகிட்டான் ..அப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்..

காதலிப்போர்/படுவோர் களுக்கு காதலர் தின நல்வாழ்த்துக்கள்..எதுவுமில்லாதோருக்கு அன்பும் அனுதாபங்களும்

5 comments:

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

KARTHIK said...

//உணர்வுகளைக் கடத்த அன்பினைப் பரிமாற வார்த்தைகள் அத்தனை முக்கியமில்லை என்பது என் துணிபு.நான் கண்களால் பேசத் துவங்கினேன்.. அவள் எனக்கு பதிலும் சொன்னாள்.. //
காதலர்களுக்கு மொழி அவசியமில்லை உணர்வுகளே உணர்த்திவிடும்.
அழகான வரிகள்

//எதுவுமில்லாதோருக்கு அன்பும் அனுதாபங்களும்//

அனுதாபங்களுக்கு நன்றி.

வால்பையன் said...

வித்தியாசமான கோணங்களில் மொழியை பயன்படுத்துகிறீர்கள்.
நான் உங்கள் ரசிகன். உங்கள் பதிவை மீண்டும் மீண்டும்!!? படித்து பலமுறை மகிழ்ந்திருக்கிறேன். உங்களுடைய பதிவை படித்து விட்டு இது என்ன ரகம் என்று ஆராய்ச்சி செய்து மிக நீண்ட பதிவாக போட்டிருக்கிறேன்,
வந்து பார்த்து பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை. குறை, நிறை என்னவென்று சொல்லிவிட்டு போகலாம் அல்லவா!


வால்பையன்

Ayyanar Viswanath said...

கோபி,கார்த்திக் மற்றும் வால் பையன் நன்றி

பாண்டித்துரை said...

முக்கோணங்களில்
தனினத்தனியே துண்டுபட்டதாக
இரண்டாவது பகுதி நன்றாக உள்ளது

Featured Post

test

 test