Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற நோக்கிலும் இத்திரைப்படத்தை அணுகலாம்.திரையீடலுக்கு அடூரும் பத்மப்ரியாவும் வந்திருந்தது எதிர்பாராத மகிழ்ச்சி.திரைப்படம் துவங்குவதற்கு முன் சிறு அறிமுகம் ஒன்றைத் தந்த அடூர் படத்திற்கு பின்பு விரிவாகப் பேசலாம் என்றார்.1935 லிருந்து 1945 வரைக்குமான காலகட்டத்தில் கேரளாவின் கிராமத்து வாழ்வியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசும் படமாக இது இருக்கும் என்ற அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டார்.
முதல் சிறுகதை The Prostitute சாலையோர வேசியாக நடித்திருப்பது பத்மப்ரியா படபடக்கும் விழிகளும் அழுக்கான ஆடைகளுமாய் முழுமையான கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருந்தார்.வேசி என தலைப்பிடபட்டிருந்தாலும் இந்த திரைப்படம் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை.சாலையோரங்களில் வசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் எவ்வித அடையாளமுமில்லாமல் போவதை, சமூக ஒழுங்குகள் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இம்மனிதர்களுக்கு எவ்வித அலைக்கழிப்பைத் தருகிறது என்பதை மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.நீள வசனங்கள் இல்லாதது பிரச்சார நெடியை குறைக்கிறது அதே சமயம் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது படத்திற்கு ஒரு வித நாடகத் தன்மையைத் தந்துவிடுகிறது.குறைவான வசனங்கள், மேல் சட்டையில்லாத ஆண்கள், மிக மெதுவான காட்சியமைப்புகள் என அடூரின் 'ட்ரேட் மார்க்' திரைப்படமாக இருந்தாலும் மிக முக்கியமான விதயம் ஒன்றை பதிவு செய்திருப்பதால் இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது.பத்மப்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இன்னொரு சாலையோர மனிதனிடம் தன் பழைய விதயங்களை நோண்டக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு சேர்ந்து வாழ்கிறாள்.அவன் மூட்டை சுமக்கும் வேலைக்கும் இவள் கல் சுமக்கும் வேலைக்குமாய் போகிறார்கள்.இரவில் சாலையோரங்களில் படுத்து உறங்குகிறார்கள்.ஒரு நாள் போலிசார் தூங்கிக் கொண்டிருந்த இவர்களை பொது இடத்தில் விபச்சாரம் செய்ததாக சொல்லி கைது செய்கிறார்கள்.நீதிபதியிடம் தாங்கள் கணவன் மனைவி என்பதை மட்டும்தான் அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லமுடிகிறது.எவ்வித நிரூபணங்களும் அவர்களிடம் இல்லை. அவள் வேசி என்பதற்கு நிறைய சாட்சிகள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைப்பதோடு படம் முடிகிறது.இருவருக்குமே அவரவர் தந்தையின் பெயர் தெரியவில்லை. இருவருக்குமே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இருவருக்குமே வசிப்பதற்கு வீடெதுவும் இல்லை.ஆதலால் அவர்கள் குற்றவாளிகள்.

இரண்டாவது சிறுகதை The Virgin கீது மோகன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சாப்பாட்டு ராமனுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண் ஒருத்தியின் துயரங்களையும் சுற்றுப் புற மனிதர்கள் ஒரு பெண்ணின் மீது அவதூறுகளைப் பரப்புவதால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார்கள்.எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தின்கிற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படும் கீது கச்சிதமாய் நடித்திருக்கிறார்.எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவன் திருமணமான முதல் நாளிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குப் போய்விடுகிறான்.இரண்டவது சினிமாவிற்கு போய்விட்டு தாமதமாக வந்து குளிக்கப்போகிறான் உட்கார்ந்தபடியே அவளின் முதலிரவு முடிந்து போய்விடுகிறது.மிக அசூசையாய் தின்பதும் மிக இறுக்கமான முகத்தோடும் திரும்பிப்படுத்து தூங்குவதுமாய் இருப்பவனோடு ஒரு நாளை கழித்த பின்பு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளோடு தாய் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறாள்.அவள் கணவன் நான்கு நாட்கள் நன்றாய் வயிறு புடைக்கத் தின்கிறான் தூங்குகிறான் ஒரு நாள் பின்பு வந்து அழைத்துப் போவதாய் கிளம்பிப் போய்விடுகிறான்.அவன் திரும்பி வருவதே இல்லை.அதற்குள் சுற்றுப் புற மனிதர்கள் இவள் தப்பானவள் அதனால்தான் அவன் வந்து அழைத்துப் போகவில்லை என அவதூறு பரப்புகிறார்கள்.அவன் அவளை விவாகரத்து செய்யப் போவதாய் ஒருவன் கீது வின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.கீது அதற்கு அவசியமே இல்லை ஏனெனில் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என சொல்வதோடு இத்திரைப்படம் முடிகிறது.இதில் சொல்லப்பட்ட்வைகளை விட சொல்லப்படாதவைகளே அதிகம்.சொல்லப்படாதவைகள் மிக அதிகமாய் இருந்ததினால் இந்தக் கதை ஒட்டாமலே போய்விடுகிறது.

மூன்றாவது கதை The Housewife ஆறுமுறை கருத்தரித்து இரண்டு குழந்தைகள் பெற்று அவை சில மாதங்களிலேயே இறந்து போன துக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சு பிள்ளையின் பக்கத்து வீட்டு மனிதராக முகேஷ் தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் அவ்வப்போது தன் தாயை வந்து பார்த்து விட்டுப் போவார்.அந்த கிராம மனிதர்களை மறந்துவிடாமல் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவதாகவும் ஏழைகளுக்கு உதவும் தயாள மனம் படைத்தவர் என்றுமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் மஞ்சு பிள்ளையு ம் அவள் வேலைக்காரியும்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே முகேஷ் அவளைப் பார்க்க வருகிரான்.இருவரும் பழங்கதைகளை பேசி மகிழ்கிறார்கள் அவளின் நிலையறிந்த முகேஷ் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான்.அவள்மீது எதுவும் குறையில்லை எனவும் அவள் கணவன் மீதுதான் குறையிருக்கலாம் என்று சொல்லியுமாய் அவளை மாற்ற முயற்சிக்கிறான்.குழந்தையில்லாததால் குதிரைக்காரனை பயன்படுத்திக்கொண்ட ராணியின் கதையை பூடகமாக சொல்கிறான் மறுநாள் மதியம் வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறான்.வழக்கத்திற்கு மாறாய் அன்று சீக்கிரம் வீடு திரும்பும் அவள் கணவன் முரளி அவளோடு உறவு கொள்கிறான்.அடுத்த நாள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வரும் முகேஷை திருப்பி அனுப்பி விடுகிறாள் தனக்கு குழந்தைகளே இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் நேர்மையாக வாழ விரும்புவதாய் சொல்கிறாள்.இந்தக் குறும்படம் மிகக் க்ச்சிதமாய் இருந்தது தேவையற்றவைகள் எதுவுமில்லாது ஒரு குடும்பப் பெண்ணின் அலைவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்திருப்பது சிறப்பு.


நான்காவது கதை The Spinster நந்திதாசை பெண்பார்க்க வருபவன் அவளின் தங்கையான காவ்யா மாதவனை மணந்து கொள்கிறான்.எத்தனை முயற்சித்தும் நந்திதாவிற்கு திருமணம் கைகூடாமலே போய்விடுகிறது அவளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும் அவளின் சகோதரனும் வெகுநாட்கள் காத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே ஆதரவான தாயும் இறந்துபோகவே அவளின் தங்கையான காவ்யா மாதவனோடு வசிக்கப் போகிறாள்.காவ்யாவின் இரண்டு குழந்தைகளும் நந்திதாவின் மீது அன்பாயிருந்தாலும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து திரும்பி பழைய வீட்டிலெயே தனியாக வசிக்க ஆரம்பிக்கிறாள்.ஒரு நாள் ஏதோ ஒரு அசைவில் வழியில் சந்திக்கும் ஒருவனை இரவு வரச்சொல்லி அவன் வந்து கதவைத் தட்டும்போது மறுத்துவிட்டு அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.கடைசி வரை திருமணமாகாத ஒரு பெண்ணின் துயரங்களை பேசும் படம் இது நந்தாதாசுக்கு நடிக்க சொல்லித் தர வேண்டுமா. மிக அழகான மிகைப்படுத்தாத நடிப்பு.

திரைப்படம் முடிந்த பின்பான உரையாடல்கள் மற்றும் அடூரின் பகிர்வுகள் அடுத்த பதிவில்

9 comments:

குசும்பன் said...

மிக அருமையான படமாக இருக்கும் போல் இருக்கே!

உரையாடல் பதிவு எங்கே!!!

இது மாதிரி இடத்துக்கு போகும் பொழுது கேமிரா எடுத்து போங்க அய்ஸ்.

கானா பிரபா said...

வாக்களித்தபடி கடமையைச் செய்தமைக்கு நன்றி. நல்ல பதிவு.

Anonymous said...

இந்த படங்களுக்கேல்லாம் நிஜமாவே ஆங்கிலப்பெயர் தானா. மலையாளப்பெயர் இருக்கிறதா? (கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற ஆசையில்தான் கேட்கிறேன்)

M.Rishan Shareef said...

நிச்சயமாக நல்ல திரைப்படமாக இருக்கும்.இங்கு பார்க்கும் வாய்ப்புகள் இல்லை.இத்திரைப்படத்தைப் பார்ர்க்கக் கூடிய ஏதாவது இணையத் தளங்கள் இருக்கிறதா?

Ayyanar Viswanath said...

குசும்பர் கலந்துரையாடல் பதிவு வந்துட்டே இருக்கு

தல நன்றி

சின்ன அம்மிணி இந்த படத்திற்கு நாலு பெண்கள் என்று பெயர் அதற்குள் கிளைக் கதைகளாக நான்கு பெயர்களில் கதைகள் சொல்லப்படுகிறது.இந்த படத்தில் நாலு அத்தியாயங்கள் நான்கிற்கும் ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்..

ஷெரிப்
எனக்கு தெரிந்து இல்லை..கிடைத்தால் தெரிவிக்கிறேன்

Anonymous said...

கொன்னே போடுவேன்
அவங்க என்ன தமிழ் ஆட்களா ஆங்கிலத்தில் பெயர் வைக்க?

நாலு பெண்ணுங்கள் என்பதுதான் படத்தின் தலைப்பு. வேசி, கன்யக,நித்ய கன்யக சின்னுவிண்டெ அம்மு என்பனதான் பிற படங்களின் தலைப்புகள்

மக்களே என் பதிவை ஆவலா எதிர்பாருங்க. பத்மப்ரியா கூட சேர்ந்து ப்டம் எடுத்ததுல இருந்து அய்ய்னார் ஒரு மார்க்கமாத்தான் இருக்காரு

(யாருக்கெல்லாம் காதுல புகை வருதோ தெரியலியே)

சாத்தான்குளத்தான்

SurveySan said...

அருமையா கோத்திருக்கீங்க கதைகள!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

good reporting.

ஹரன்பிரசன்னா said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அடூரின் திரைப்படம் பற்றிய உரையாடல்களைப் பகிர்ந்துகொள்ளவும்.

இதைப் பற்றிய கட்டுரை ஒன்று காலச்சுவட்டில் வந்தது. சுகுமாரன் எழுதியது. சுட்டி: http://www.kalachuvadu.com/issue-96/page59.asp

Featured Post

test

 test