Tuesday, November 20, 2007

மாலாவிற்கு மல்லிகா என்றும் பெயர்..



எனக்கு வயது முப்பத்தி மூன்று.என் பெயருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் அது அவசியமில்லை.பஜாரிலிருக்கும் என் அரிசி மண்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோரிமேட்டுத் தெரு இறக்கத்தில்தான் அந்த சிந்தனை தோன்றியது.கல்நகரை கடந்து முகல்புறா தெருவிற்குள் நுழையும்போது தீர்மானித்துவிட்டேன்.நாளையிலிருந்து குடிப்பதை நிறுத்திவிடவேண்டும்.பஜாருக்குள் நுழைந்தபோது சிகரெட்டையும் நிறுத்திவிடத் தோன்றியது.சைக்கிளை மண்டிக்கு முன்னால ஸ்டாண்ட் போடும்போது நாட்களைத் தோராயமாக கணக்கிட்டு செய்யும் அதையும் நிறுத்திடவிடவேண்டும் என கறுவியபடி முடிவெடுத்தேன்.எப்போதிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கணக்கிட்டுப்பார்த்ததில் பதினாறு வருடங்கள் ஓடிப்போயிருந்தது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இன்று இந்த சிந்தனையும் கழிவிரக்கமும் தோன்ற நேற்று என் கடைச் சிப்பந்திகளை அவர்கள் மனைவி சகிதமாய் பாலசுப்பிரமணி தியேட்டரில் பார்த்ததே காரணமாய் இருந்திருக்க வேண்டும். என்னை எதிர்பார்த்திராத சிப்பந்திகள் நெளிந்ததும்,நானும் ஒப்புக்குப் புன்னகைத்து தியேட்டருக்கு உள்ளே போனதும்,படம் போட்ட பத்து நிமிடத்தில் எழுந்து வீட்டுக்கு வந்ததும் ஏன் எனத் தெரியவில்லை.நான் ஒன்றும் அந்த அளவிற்கு பொறாமைக்காரனும் இல்லை.என் இயலாமைகளின் தாங்க முடியாத கழிவிரக்கம் நேற்று முழுக்க தூங்க விடாமல் செய்துவிட்டிருந்தது.

சொன்னால் நம்புவீர்களா?என் முப்பத்தி மூன்று வருட வாழ்வில் எந்த ஒரு பெண்ணையும் நேசித்ததில்லை நேசிக்கப்பட்டதுமில்லை.பெண்ணொருத்தியின் வாசமோ,தீண்டலோ எதுவும் தெரியாதெனக்கு.ப்ளஸ் டு படிக்கும்போது கவிதாவும் நானும் அதிகாலையில் டியூசனுக்கு போகும் வழியில் தொடர்ச்சியாய் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்வோம்.அந்த நிகழ்வை கனவில் நீட்டிக்கொண்டதோடு என் இளமைக்காலம் முடிந்துபோய்விட்டது.அம்மாவோ,சகோதரியோ, சகோதரனோ யாருமில்லாத தனி ஆள் நான்.ப்ளஸ் டு முடித்த கையோடு மண்டியில் என்னை ஏற்றிவிட்டு என் அப்பா இறங்கி கொண்டார்.அவரை வாரத்தில் ஒரு நாள் வீட்டில் பார்ப்பதே அதிசயம் அதுவும் நிலைகொள்ளா போதையிலிருப்பார்.சக்தி தியேட்டர் மேட்டிலோ,முருகர் கோயில் பள்ளத்திலோ எனக்கு சித்தியோ சித்திகளோ இருக்கலாம்.
நண்பர்களென்று பெரிதாய் யாருமில்லை வெல்ல மண்டி சிவா மட்டும் கொஞ்சம் நெருக்கமாக பழகுவான் வயதில் சிறியவன் என்பதால் அவனோடும் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல்களிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவனோடுதான் குடிப்பேன்.(குடியைப் பற்றி அதிகம் பேசுவதால் குடிகாரனென நினைத்துவிடாதீர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிப்பேன் அவ்வளவுதான்.)

ஒருமுறை குடித்துக் கொண்டிருக்கும்போது சிவாவிடம் சொல்லிவிட்டேன்,அவன் அந்த போதையிலும் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான்.
"நீயெல்லாம் எதுக்கு ஒரு மனுசன்னு கீற! பேசாம செத்துடு!" என எக்களித்தான்.
"சரி இன்னா பொண்ணுதான இரு" என யாருக்கோ தொலைபேசினான்.நடுவில் வந்தான்
"இந்தா பார்ணா ஒரு புது பீஸ் வந்துகீதாம்! கொஞ்சம் செலவாவும் ஓகே வா?" என்றான் எனக்கு படபட வென இருந்தது.போதை குப்பென இறங்கி விட்டதாய் உணர்ந்தேன்.ஒரு திடத்திற்கு வந்து
"எவ்ளோ ஆனாலும் பரவால்ல சிவா!" என்றேன் அவன் மறுபடி வெகுநேரம் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
"செரி மல்லிகா நம்பர் கொடு! என யாரிடமோ நம்பர் வாங்கி யாரிடமோ வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான் எனக்கு நிலைகொள்ளாமலிருந்தது.கடைசியாய் வந்து
"நாளைக்கு பாத்துக்கலாம்ணா..புதுசு பிக்ஸ் ஆயிடுச்சாம்.. என் ரெகுலர் ஒண்ணு இருக்கு மல்லிகான்னு..அவளும் இன்னிக்கு ஃப்ரீயா இல்லையாம்..செரி வுடு! அப்புறம் பாத்துக்கலாம்" என்றபோது எனக்கு எங்கிருந்தோ ஒரு ஆசுவாசம் வந்து படர்ந்தது.அதுவரை அடித்துக்கொண்டிருந்தது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பியது.ஒருவகையான திருப்தியோடு வீட்டுக்குப் போய்விட்டேன்.அதற்கு பிறகு சிவாவும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

உத்தமனாக தீர்மானித்த இன்றைய நாள் சந்தோசமாயிருந்தது.காலையிலிருந்து பிடித்திருக்க வேண்டிய ஐந்து சிகரெட்டுகளைத் துறந்திருந்தேன்.சாயந்திரம் ஏழு மணி வாக்கில் பெரிய கோயிலுக்குப் போனேன்.இதே ஊரிலிருந்தும் கோயில் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. கடைசியாய் எப்போது பெரிய கோயிலுக்கு வந்தேன் என தெரியவில்லை.இப்போதெல்லாம் கோவிலில் கூட்டம் அதிகரித்து விட்டது.எங்கு பார்த்தாலும் கம்பித் தடுப்புகளும் மரத்தடுப்புகளுமாய் கோயிலின் அழகையே இந்த பெருங்கூட்டம் சிதைத்து விட்டிருந்தது.பிரகாரத்திற்கு போகாமல் ஆயிரங்கால் மண்டப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போதுதான் என் வாழ்வில் முதன்முதலாய் அது நிகழ்ந்தது.குட்டை கோபுரத்திலிருந்து வீழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.ஒடிசலாய் சாதாரண உயரத்தில் தலைநிறைய மல்லிகைப்பூவோடும் கண்களுக்கு அடர்வாய் மையோடும் என் பக்கமாய் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.வெகு நாட்கள் கழித்து ஒரு பெண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கே தெரியாமல் எங்கே அந்த பெண்ணை நெருங்கி விடுவேனோ என பயந்துபோனேன்.(ஒரு முறை என் மண்டியில் சாப்பிட்ட மத்தியான மயக்கத்தில் அமர்ந்துகொண்டிருந்தபோது வழக்கமாய் மண்டி கூட்ட வந்த தாட்டியான பெண்ணை அதிக நேரம் உற்றுப் பார்த்தேன் பின்பு எனக்கே தெரியாமல் அவளை மூர்க்கமாய் அணைக்க அவள் திமிறி கையிலிருந்த விளக்குமாற்றால் என்னை அடித்துவிட்டு வெளியேறினாள்)ஆனால் அவள் என்னை நோக்கி வந்தாள்.உலக அதிசயங்களில் இந்த நிகழ்வையும் தாராளமாய் சேர்க்கலாம்."என்னை உங்களுக்கு தெரியுமா? ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே" என அவள் கேட்டபோது என் காலடியில் தரை நழுவியது.நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

ஒரு வழியாய் பதட்டத்தை ஒதுக்கி இளித்தேன்."நீங்க ரொம்ப அழகு" என உளறிக் கொட்டினேன்.அவள் மென்மையாய் சிரித்தாள் அப்படியா? என்றாள்.எனக்கு சற்று தைர்யம் வந்தது."நீங்க எங்க இருக்கிங்க?..உங்க அப்பா அம்மா யார்?.. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு சம்மதமா? என்ற போது அவள் பெருங்குரலில் விடாமல் சிரித்தாள்."என் பேராவது தெரியுமா உங்களுக்கு? என்றபோது அந்த சங்கடத்திலிருந்து என்னை மீட்டெடுக்க நான் பார்த்திருந்த தமிழ் சினிமாக்கள் அத்தனையும் கை கொடுத்தன.பெயர் முக்கியமா?போன ஜென்ம தொடர்பு என்றெல்லாம் விடாமல் பேசினேன்.ஒருவழியாய் என் வாழ்வில் அந்த மேஜிக் நிகழ்ந்தது.அவளின் விலாசம் வாங்கினேன் நாளை வருவதாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது கடைத்தெருவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு 'இருளோ' வென இருந்தது ஆனால் மனசில் மட்டும் வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது.அத்தோடு மாலா! மாலா! என மனம் பிதற்றியபடியிருந்தது,அதுதான் அவள் பெயர்.. எத்தனை இனிமை பாருங்கள்! இரண்டே எழுத்து.. இந்த பெயரில் எந்த பெண்ணையும் இதுவரை கேள்விப்பட்டிராததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.

எனக்கு வெகு நாட்களாய் சமைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் தூரத்து பாட்டி சகிதமாய் அவள் வீட்டிற்கு போனது கூட தேவையில்லாத ஒன்றாய்த்தான் பட்டது. ஒரே ஒரு பாட்டியைத் தவிர அவளுக்கும் யாருமில்லை.அவளை நான் பேசவே விடவில்லை இரண்டே நாளில் திருமணம் என சொல்லி சம்மதிக்க வைத்தேன்.அவள் எதையோ சொல்ல வரும்போதெல்லாம் அவள் வாயை அடைத்தேன்.("என்ன மிஞ்சி மிஞ்சி போனால் பணமில்லை என்பாள் அல்லது யாரையாவது காதலித்து ஏமார்ந்ததாய் சொல்வாள் அவ்வளவுதானே!) அன்று என் கண்ணில்பட்டவர்களுக்கு மட்டும் என் திருமண செய்தியை சொன்னேன்.சிவா வெளியூர் வசூலுக்குப் பாண்டிச்சேரி போயிருந்தான் அவனுக்கு இந்த திடீர் காதல் கல்யாணம் எல்லாம் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.முதலிரவு பற்றிய சங்கதிகளை எல்லாம் நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை ஆனால் இந்த உலகத்தில் பெண்ணைத் தவிர உசத்தி வேறெதுவும் இல்லை.

மூன்று நாள் கழித்து சிவா வந்தான் கலக்கிட்டணே! என்று கட்டிக்கொண்டான்.மாலாவைக் கூப்பிட்டு சிவாவிற்கு காபி எடுத்து வரச்சொன்னேன்.மாலா காபி கொடுத்து விட்டு அவசரமாய் உள்ளே போய்விட்டாள் சிவா முகம் திடீரென இறுகிப்போனது.
"ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசுண்ணே! என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை.கொஞ்ச நேரம் முழித்தேன்.சிவா மெல்ல சகஜமாகி "இவங்க பேரையும் மாத்திட்டிங்களா மல்லிகாவே நல்லாருந்ததே" என கண் சிமிட்டினான் எனக்கு இருட்டிக்கொண்டு வந்தது பொதுவாய் சிரித்து வைத்தேன் அவன் போனபிறகு உள்ளே வந்தேன் மல்லிகா என்ற மாலா கதவிற்கு பின்னால் தலைகுனிந்த படி நின்றுகொண்டிருந்தாள்.

எனக்கு நினைவழிந்து போகும் வரை குடிக்க வேண்டும் போலிருந்தது.

22 comments:

Anonymous said...

nalla joke ponga!!!!

Mathi said...

நன்றாயிருக்கு.

நாகை சிவா said...

நல்லா இருக்கு அய்யனார் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்னாச்சு, இப்படி ஒரு குட்டிகரண சிறுகதை (அதாங்க .."அந்தர் பல்டி") ஆனாலும் மொழி வளத்திற்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

அவ வாயைத் தடுத்து விட்டேன்னு சொல்லும்போதே மாலாதான் மல்லிகான்னு புரிஞ்சு போச்சு. போதாக்குறைக்கு தலைப்பு வேற அதே மாதிரி. என்னய்யா, இது பின்நவீனத்துவக்குமுதம் பிரிவுல வர்ற கதையா?

ஒருத்தனை திருந்த விடாம பழையபடியும் குடிச்சே சீரழிய வச்ச்சிருவீங்களே, கதையில் கூட :-)
நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Ayyanar Viswanath said...

அனானி ஒருத்தனுக்கு கஷ்டம்னா உங்களுக்கு ஜோக்கா :@

அலைன் னா ஏலியனா? ஒண்ணும் பிரியல

நன்றி புலி

Ayyanar Viswanath said...

கிருத்திகா

நன்றி..அதென்னங்க அந்தர் பல்டி :)


அண்ணாச்சி

திருப்பங்களோட கதை சொல்ல வேணாம்னு முடிவு பண்ணிதான் தலைபை அந்த மாதிரி வச்சேன்..

எங்க வாழ்வு யாரையும் திருந்த விடுறதில்ல நானென்ன செய்ய :)

Mathi said...

ஏலியன்தான்.

கோபிநாத் said...

அய்ஸ் கதை நல்லாயிருக்கு :)

கதிர் said...

கோபிக்கு ரிப்பீட்டேய்!

குசும்பன் said...

அய்ஸ் கதையின் முடிவு பாதி படிக்கும் பொழுதே தெரிந்தாலும் படிக்கும் சுவாரஸ்யம் மட்டும் குறையவில்லை.
அருமை!

(ஆனா ஒரு பாவம் செஞ்சிட்டேன்யா உன்னோட பிளாக் லிங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுத்துவிட்டேன் நேற்று:((((

Anonymous said...

//அண்ணாச்சி

திருப்பங்களோட கதை சொல்ல வேணாம்னு முடிவு பண்ணிதான் தலைபை அந்த மாதிரி வச்சேன்..

எங்க வாழ்வு யாரையும் திருந்த விடுறதில்ல நானென்ன செய்ய :)
//

முதலிலிருந்தே எல்லாம் எதிர்பார்த்த மாதிரி தான் இருந்தது., என்ன திருப்பங்களோ போங்க!

Unknown said...

கதையின் நடை ரசிக்கும் படி உள்ளது அய்யனார்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்களின் இந்தக் கதை சொல்லும் பாணியும் பிடித்திருக்கிறது. இப்படித்தான் வேறு வேறு விதமாய்க் கதை சொல்ல வேண்டும். தலைப்பிலேயே சொன்னதன் மூலம், திடுக் திருப்பத்தைப் பிரக்ஞை பூர்வமாக மறுத்திருக்கிறீர்கள்.

/வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிப்பேன் அவ்வளவுதான்.)/

இந்த‌ வ‌ரிக‌ள் ம‌ட்டும் பிடிக்க‌வில்லை.)))

ஆடுமாடு said...

கதையும் நடையும் நன்றாக இருக்கிறது. ஆனால் முடிவை யூகித்துவிட முடிகிறது. நன்றி.

கிருத்திகா said...

G நாகராஜன், கோபி கிருஷ்ணண் லெவலுக்கு வாசிப்பணுபவம் உள்ள உஙகளிடமிருந்து இன்னும் தரமான படைப்பை எதிர்பார்க்கிறேன். கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" படித்ததுண்டா? படித்து பாருஙகள் வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்" ஏன் காவியமல்ல என்பது புரியும்.

Ayyanar Viswanath said...

ஏலியன் கோபி தம்பி குசும்பன் வள்ளி தேவ் சுந்தர் மற்றும் ஆடுமாடு பகிவுக்கு நன்றிகள் பல

ராஜா
காவியமா வைரமுத்தா என்ன சொல்றிங்க :D

ila said...

நான் கதையோட தலைப்பை ஒரு முறை தான் படிச்சேன்.உடனே கதைய படிக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் படிச்துமே தலைப்பை உடனே படிக்கணும்னு தோணிச்சு.ஆனா நானே கதை படிச்துக்கபுரம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டன்.அதனால நாலா இருந்துச்சோ என்னவோ!... சொல்ற விதம் நல்லா இருந்துச்சு....வாழ்த்துக்கள்.....

ila said...

நான் கதையோட தலைப்பை ஒரு முறை தான் படிச்சேன்.உடனே கதைய படிக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் படிச்துமே தலைப்பை உடனே படிக்கணும்னு தோணிச்சு.ஆனா நானே கதை படிச்துக்கபுரம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டன்.அதனால நாலா இருந்துச்சோ என்னவோ!... சொல்ற விதம் நல்லா இருந்துச்சு....வாழ்த்துக்கள்.....

Anonymous said...

இந்த கதைக்கும் பின்னூட்டம் போட வேணாம்னு தான் இருந்தேன். ஆனா நிறைய பேர் இது நல்லா இருக்குன்னு சொன்னதால இந்த பின்னூட்டம். இப்ப எழுதறேன்னு கோச்சிக்காத. கதை நல்லா இல்ல. உன் கதை மாதிரியே இல்ல இது. படிச்சதும் குமுதம் கதைன்னு தோனிச்சு. ஆசிப் அண்ணாச்சியும் அத தான் சொல்லி இருக்கார். பாத்துக்கோ,.... பழைய அய்ஸ் வேணும்...

Prathap, Tvmalai said...

nalla story machi...

vella mandi siva name romba popular pola...

enakennavo ithu un story-o nu doubt..

prathap

Anonymous said...

குமுதம் கதை மாதிரியில்லை. குமுதம் கதையே தான். எண்பதுகள் வாக்கில் நான் மிகச் சிறுவனாக இருந்தபோது குமுதம் அல்லது விகடனில் இதே மாதிரி கதையைப் படித்தேன். ஒரு சிறிய வித்தியாசம். இந்தக்கதை நாயகன் பெண்வாசம் படாமல் வளர்ந்தவர். அந்தக் கதையின் நாயகன் கற்புள்ள சீதை மாதிரிப் பெண்ணைத் தேடியவர் இறுதியில் இருவரும் மணந்தது பாலியல் தொழிலாளியை.

இன்னொரு கோணத்தில் பாலியல் தொழிலாளர்களை அவமதிக்கும் போக்கும் கதையூடு காணப்படுகிறது. வலைப்பூக்களுள் வாசிக்கக் கூடியவற்றுள் அய்யனாருடையதும் இடம் பெற்றிருந்தது. எங்கே அது தவறாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

Featured Post

test

 test