Wednesday, September 12, 2007

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு



பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்கு மட்டுமே உரித்தான புழக்கத்தில் உள்ள மொழியை நாம் நாகரீகம் என்னும் பெயரில் கொன்று புதைத்து விடுகிறோம்.தமிழேயானாலும் நம் சொந்த பேச்சு மொழியில் உள்ள இணக்கத்தை நாகரீகம் கருதி பேசப்படும் வலிந்த பேச்சு வழக்கில் காணமுடிவதில்லை வேறொரு சூழலில் பண்பாட்டு ஒத்திசைவிற்காக பேச விழையும்போது நமக்கான அடையாளத்தை நாம் மறைமுகமாய் இழக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்கும்போது நமது பேச்சு வழக்கத்தில் பேசிக்கொள்வது எத்தனை திருப்தியம் மகிழ்ச்சியுமளிக்கிறதோ அத்தனை திருப்தி இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தபின் ஏற்பட்டது.

கதைகள் நமக்கு தெரிந்த நாம் புழங்கிய இடத்தை மய்யமாக கொண்டு எழுதப்படும்போது அந்த புத்தகம் வெகு சீக்கிரம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது.கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பு நான் வாழ்ந்த சூழலைப்பற்றி பேசுவதால் புத்தகத்தோடு சுலபமாய் ஒட்டிக்கொள்ள முடிந்தது.மண் சார்ந்து எழுதப்படும் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் கி.ராஜநாராயனின் எழுத்துக்களே முதலில் நினைவிற்கு வருகிறது.வெவ்வேறு மண் சார்ந்த மொழி வழக்குகளை பிரதானப்படுத்தி பல நாவல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கண்மணி குணசேகரனுக்கு முக்கியமான இடமொன்றைத் தரலாம்.

விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளியாக பணிபுரியும் கண்மணி குணசேகரன் 1993 லிருந்து எழுதி வருகிறார்.இதுவரை வெளிவந்த நூல்கள்
தலைமுறைக்கோபம் கவிதைகள்(1994)
உயிர்தண்ணீர் சிறுகதைகள் (1997)
அஞ்சலை நாவல் (1999)
ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைகள்(2000)
காற்றின் பாடல் கவிதைகள்(2001)

பதினான்கு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் நேரடியான கதையாடல்களை வட்டார மொழியின் வீச்சோடு முன் வைத்திருக்கிறார்.விருத்தாசலம்,பண்ருட்டி, விழுப்புரம்,திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறம் சார்ந்த மொழிநடையையும் மக்களையும்,மண் வாசத்தையும் தனது கதைகளில் உலவவிட்டிருக்கிறார் குறவர்கள், நாவிதன், ரெட்டியார்கள், குடியானவர்கள், படையாச்சிகள், என்பன போன்ற பின்புலங்களோடு உயிர்ப்பான கதாபாத்திரங்களின் மூலம் விளிம்பின் வாழ்வையும் குடியானவர்களின் அவலத்தையும் ஆதிக்க சக்திகளையும் எவ்வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.

இந்த தொகுப்பில் கொடிபாதை,ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு, ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் போன்ற சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.பேருந்தில் நிகழும் பிரசவத்தினை விவரித்திருக்கும் கொடிபாதை சிறுகதை கிராமத்து சூழலில் வறுமையில் உழலும் மனிதர்களின் வலிகளை சரியாய் தடம்பிடித்திருக்கிறது.குண்டும்குழியுமான ஒற்றையடி சாலையில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்படும் நிறைமாத கர்ப்பிணி ஓடும் பஸ்ஸிலேயே மிகுந்த போராட்டங்களுக்குப் பின் தனது குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.இந்த சிறுகதையில் உலுக்கிப்போட்ட நிதர்சனம் கீழ்கண்ட வரிகள் தான்

ஆஸ்பத்திரில நிறுத்தட்டுமா...முன்னாலிருந்து ஓட்டுகிறவன் குரல் வந்தது

கூட்டத்தில் குனிந்து பணிக்கை பண்ணிக்கொண்டிருந்தவள் பட்டென்று நிமிர்ந்து சொன்னாள் "வேணாம் சாமீ பாவம் இல்லாதபட்டவன் ஆஸ்பத்திரிக்கு போனா தொட்டு தொட்டு பார்த்தாலும் ஆயிரம் ஐநூறுன்னு ஆவும் எந்த சிக்கலும் இல்லாம ஆண்டவன் புண்ணியத்துல தாய் வேற புள்ள வேற ன்னு சுத்தபடியா பூட்டுது.இனிமே அநேவசியம்தே..அந்த நெழல் கொடையில நிறுத்துங்க எறங்கிக்கறோம்.திரும்புகாலுக்கு இதே வண்டியில ஊருக்கு இட்டுகிட்டுப் பூடறோம்."


மழிப்பு எனும் சிறுகதை ரத்னவேல் என்கிற நாவிதனைப்பற்றி பேசுகிறது.கட்டையன் என்கிற குடியானவன் அவனிடம் சவரம் செய்துகொள்ள வரும் சம்பவத்தோடு விரியும் சிறுகதை அதிகாரத்திற்கெதிரான ஒரு சின்ன குரலை பதிவிக்கிறது.குடியானவப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் நாவிதனின் கலகம் காலம் காலமான அடிமைத்தனத்தை, விளிம்பை சார்ந்து வாழும் நிர்பந்தத்தை ஆங்காரமான குரலில் சொல்கிறது.

"இம்மாங் குடியானவன் இருக்கிற ஊர்ல ஒருத்தனாவுது என்ன நெனச்சி பாத்தீங்களா.ஏம் பொண்டாட்டிப் புள்ளிவள நெனச்சி பாத்திங்களா.நம்பள சுத்திதான இருக்கிறான் அவம் பொழுது எப்படிப் போகும் காசி கன்னிய படி பண்டத்த குடுப்பம்னு நெனச்சிங்களா.நா என்னடா கடனா கேட்டன் செஞ்ச வேலக்கி கூலியதான கேட்டன்..எவன் கொடுத்திங்க..எவங் குடுக்கிறீங்க."மண்ணில் கையால் அடித்து அடித்து பேசினான்.."குடுக்கிற மகராசன் மோம்பிரிக் குப்பத்தில இருக்கறான் அங்க போறேன்..ஏண்டா போறேன்னு எதுக்குடா கேக்குறீங்க"...

கட்டையனுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது குடிபோதயில் உளறுகிறவனிடம் என்னபோய் பேசுவது.அதைவிட அவன் வீட்டுப் படி நெல்லே இன்னும் கொடுக்கப்படாமல் இருந்தது அவன் பேசுவது பாரயால் செருகி இழுப்பதுபோல் அவனுக்குள் வலி தெறித்தது.

அப்படியே அவனை விட்டுப்விட்டுப்போகவும் கட்டையனால் முடியவில்லை.காலையிலிருந்து அவனுக்காக அலைந்த அலைச்சலை எண்ணி நொந்த படி கிட்டப் போணான் கீழே கிடந்த கத்திப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் கையைப் பிடித்து தூக்கினான்.

யார்ரா அது..உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியபடி லேசாய் கண்களைத் திறந்து மூடியபடி கேட்டான்.
.............
கையில் திணித்த கத்திப் பெட்டியை பட்டென்று பிடுங்கி படுத்த நிலையிலேயே தூக்கி எறிந்தான்.."ஆமா மயிர வெட்றான் ..போடா"...
கத்திப் பெட்டி பை முந்தரிச்சருகில் ஓடி பொத்தென்று விழுந்தது.


வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
பதிப்பாளர்: தமிழினி
விலை : Rs.90.00
பக்கம்:208

(...புத்தகம் தந்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு)

15 comments:

Ayyanar Viswanath said...

test

பிச்சைப்பாத்திரம் said...

அய்யனார்,

பதிவிற்கு நன்றி. இப்போதுதான் இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் சிறுகதையே (கொடி பாதை) சிறப்பாக இருக்கிறது. அரை மணி நேரத்திற்குள் பக்கத்து நகரத்திற்கு சென்றடைய முடிகிற அதே நாகரிக உலகில்தான், இன்னொரு மூலையில் பிரசவத்திற்கு மருத்துவமைன செல்லக்கூடிய அவசர நிலையிலும் குண்டும் குழியுமான சாலையில் நெரிசலான பேருந்தில் செல்கிற கிராமத்து மக்களின் உலகம் முகத்தில் அறைகிறது.

இவரின் 'கோரை' என்கிற நாவலைப் பற்றிய என்னுடைய பார்வையை வாசிக்க:

http://www.maraththadi.com/article.asp?id=1341

தமிழ்நதி said...

இந்தப் பதிவின் முதல் பந்தி என்னைப் பாதித்தது. பிறந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து எங்கெங்கோ பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் வாழ்நிலங்களின் மொழியையும் பேச்சுவழக்கையும் கற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது. நாளடைவில் சொந்த மொழியும், பேச்சு அடையாளமும் இழந்துபோவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இப்போதெல்லாம் 'கதைப்பது'என்பது தேய்ந்து 'பேசுவது'என்றாகிவிட்ட நிலை மாறல் மிரட்சியைத் தருகிறது. ஏதோ ஒரு பத்தி எதையோ எழுதத் தூண்டியது எழுதினேன் அவ்வளவே.

சிவா said...

நல்ல தகவல் அய்யனார்
புத்தகம் கிடைத்தால் பார்ப்போம்.
அதெல்லாம் சரி இதற்கு முந்தைய சில பதிவுகளில் என்ன கூற்று என்பதே சரிவர புரியவில்லை பின் வருபவைகளை விளக்குங்கள் ??

தனிமையின் இசையா இம்சையா?
பிறழ்வு- அப்படின்னா என்ன?
கருத்தொற்றுமை இல்லையெனில் நட்பென்பதில்லை இருப்பினும் அது ஒரு மண் பூச்சு. ஒன்று விரியும் அல்லது கரையும்.கருத்தொற்றுமை உள்ள நண்பர்கள் அனைவரிடமும் நாம் ஒரே மாதரி பழகுவதில்லை.
\\உன்னிடம் பேசும்போது நான் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்னை அப்படியே விட்டுவிடுகிறேன்\\
இது மிகைப்பட்டுவிட்டதோ எனவெண்ணுகிறது என் மனம் ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் நாம் சுட்டிக்காட்டும்பொழுது அதன் வீச்சு நம் புலனுக்கு எட்டுமுன்னரே வார்த்தை வெளிவந்துவிடுகிறது. ‘ யாகாவாராயினும்...’
\\ஒரு உண்மையான உள்மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்வது எத்தனை அற்புதமானதென்பது அவளுக்குப் புரியவில்லை.\\
உள் மனதை புரிந்து கொள்வது எளிதல்ல. மற்றும் புரிந்த சிலரோடு மட்டும் கலாய்து மடிவதில்லை இவ்வுடல். வாழ் நெடுங்காலமும் வினைகள் எத்தனையோ செய்வதிருக்க, முகங்கள் எத்தனையோ காணவிருக்க, பழகவிருக்க, புரிந்த சிலரை மட்டும் கண்டு கலாய்து மடிவதில்லென்ன பயன்
\\ பெருங்கதையாடல்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தமிழ்பரப்பை ஏன் ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாக்க கூடாது?வெறும் சிறுகதையாடல்களை கொண்டு மட்டும் இந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய சரித்திரப் பொய்களை கட்டவிழ்த்துவிட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.\\
இது அனாவசியமானதெனெண்கிறேன் உண்மையல்லாதது என்றும் வரலாறாகாது, அது வெறும் கதையே இதில் சிறிது பெரிதென்பதேன்? ஒரு சிறு பொய் வரலாற்றையே தலைகீழாக புரட்டிய சம்பவங்களுள்ளன. பொய் இன்றல்லவெனில் என்றாவது ஒரு நாள் வெளிவரவேண்டும், வரும்.
\\ நானே என் கைப்பட 'அரசியல் பேசாதீர்' என எழுதியும் வைத்ததாய் நினைவு\\
அது கடைக்குத்தான் பொருந்தும் மேலும் வியாபாரம் நடக்குமிடத்தில் அரசியல் பேசினால் வியாபாரம்தான் பாதிக்கும் உம் தந்தை சரியாகத்தான் செய்திருக்கிறார் அதன் அர்த்தம் அரசியலே பேசாதே என்பதல்ல.
\\அரசியல் ஒரு சாக்கடை கல்லெறிந்தால் மேலே தெறிக்கும் என எவனோ ஒரு புனிதன் சொன்னதுதான் என் சிறு பிராயங்களில் வேத வாக்காய் இருந்து வந்தது.அந்தப்புனிதன் யாரென்று தெரியவில்லை இப்போது மட்டும் அவனை அடையாளம் கண்டு கொண்டால் எத்தனை வயதாகியிருப்பினும் அவனை செருப்பாலடிப்பேன்\\
தாங்கள் அரசியல் என்பதை உங்கள் கண்ணோட்டத்திலிருந்தே பாருங்கள் நிகழ் கால அரசியல் சாக்கடையில்லையா? எங்கும் அப்படித்தான். சுத்தம் செய்வது தனி மனித காரியமா? பண்டைய காலங்களில் கல்வியறிவில்லாதவர்கள் அதிகமாய் இருந்த அரசியலிலும் தற்பொழுது கல்வியறிவுள்ளவர் அதிகமாய் உள்ளனர். இருப்பினும் நாறுவதேன்? மக்களாட்சி என்றால் என்னவன்பதை நாம் சரியாக புரிந்து கொண்டோமா என்னும் அய்யம் எனக்குள்ளது.
\\அன்பென்பதின் சரியான பெயர் சுயநலமாய் மட்டும்தான் இருக்கமுடியும்\\
விளக்கமுடியுமா அய்யனார்? மிருகங்களிடம் அன்பு செலுத்திப்பாருங்கள். கண்ணை மூடி வாலாட்டும். மானிட குலம் எங்கிருந்து வாலை கொண்டு வரும். நம்மிடம் உள்ள பேச்சாற்றலை ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என எண்ணுகிறீர்கள். தூய அன்பு என்னவென்பதை இன்னுமா கண்டுகொள்ள இயலவில்லை? அகத்தின் அழகு... மிகவும் சரியானதே அய்யனார்.
\\எனக்கொரு அறிவு சீவி தோழியிருந்தாள்\\
\\பேசிய இரண்டாம் மணி நேரத்திற்குள் இருவரும் தத்தம் ஆடைகளை களைந்தெறிந்து விட்டோம்\\
அறிவு ஜீவி என்றால் மட்டுமா ஆடை களைந்திருக்க முடியும்? மிருகங்களிடமிருந்து வேறு பட்டு காணத்தான் மானிடன் உடையணிந்திருப்பானோ என்ற ஒரு கேள்வி என்னுள் எழுந்ததுண்டு இல்லையென்றுதான் எண்ணுகிறேன். மனிதனைத்தவிற மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையாகவே ஆடை (தோல் அமைப்பு) உள்ளதால் தேவையற்றதாகிறது.

\\ஒரு நாள் எல்லாம் சலித்துபோனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவள் எங்கேயோ போய்விட்டாள்\\
(இது கற்பனையா அல்லது உள் மனதின் பிதற்றலா என என் புலன்களுக்கு எட்டவில்லை) ஏன் எங்கேயோ போய்விட்டாள்? ஆடையணிந்த எத்தனையோ உறவுகள் இன்னும் நீடிக்கவில்லையா? எதுவும் மிகையானால் கசப்புதானே?

\\ நிர்வாணத்தில், கனவின் கைப்பிடியை நெகிழ விட்ட வெட்டவெளியில், தனக்கான பயங்களின் பிறழ்வில் உண்மை மிகுந்த வெறுமைகளோடு சலிப்புகளை பதிவிக்கிறது. இருப்பினும் உண்மையை நேசிக்க ஆரம்பி.உண்மை மட்டுமே உண்மையானது.\\
உண்மையே நிர்வாணம்தான் எல்லா பொய்களும் கலைந்த நிலை, அதற்கென ஆடை களைய வேண்டுமென்பதில்லை.
\\ மறைமுகமாய் நிர்வாணத்தின் மீது வெறுப்பை அல்லது ஈடுபாடின்மையை புனைந்து கொள்ள உள்மனதிற்கு ஊக்கிகளாக இருந்தது தமிழ்சினிமாவும் புனிதர்களும் மட்டும்தான்\\
நிஜ வாழ்கையையும் மாயா தோற்றத்தையும் பிரித்தறியா மனதின் பிதற்றலிது.

பாரதி தம்பி said...

எனக்கு மிகப்பிடித்த சிறுகதை கண்மணி குணசேகரனுடையது. இயல்பான மொழி நடையும், சென்னையையொத்த வட்டார மொழியும் அவரது கதைகளில் எங்கெங்கும் காணக்கிடைக்கும். கண்மணியின் 'ஆதண்டாங்கோயில் குதிரை'(இந்த தலைப்புக் குறித்து சின்ன சந்தேகம் இருக்கிறது..) வாசித்திருக்கிறீர்களா..?

வீரமணி said...

அய்யனார் அவர்களுக்கு வணக்கம்..கண்மணியின் அனைத்துபடைப்புகளையும் உங்கள் பார்வையில்தான் நானும் பார்க்கிறேன்...அதேபோல் சு.தமிழ்செல்வியின் அனைத்து நாவல்களும் மிக நன்றாக இருக்கிறது....இமயத்தின் "செடல்" இதே பட்டியலில் வருகிறது ....எங்கள் பகுதியின் அனைத்து எழுத்தாளார்களும் மண்னை கவுச்சியோடு எடுத்து வந்து சேர்க்கிறார்கள் என்கிற பெருமை எங்களுக்கு இருக்கிறது அதை மேலும் உங்கள் பதிவு உறுதி செய்கிறது.நன்றி அய்யானார்....

வீரமணி

Ayyanar Viswanath said...

சுரேஷ்
உங்கள் அறிமுகம் படித்தேன்..கண்மணி குணசேகரனின் எழுத்துக்களை முதன் முறையாய் வாசிக்கிறேன்..மிகவும் இணக்கமான மொழி நடை மிகவும் பிடித்திருக்கிறது

/ஒரு மத்திய அரசில் பணிபுரியும் கடைநிலைத் தொழிலாளிக்கு கிடைக்கும் பொருளாதார பாதுகாப்பும், நிம்மதியும் கூட ஒரு சிறு விவசாயிக்குக் கிடைக்காதது துரதிர்ஷடமே./

உண்மை..

Ayyanar Viswanath said...

தமிழ்நதி

பகிர்தல்களுக்கு நன்றி

Ayyanar Viswanath said...

வாசி
இந்தகால கட்டத்தில் எழுதப்படும் பிரதிகளை வாசகன் மட்டுமே தீர்மானிக்கிறான்.உங்களுக்கு எப்படி புரிகிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்...எழுதப்படும் பிரதிகளுக்கும் எழுதுபவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை..நான் எனக்குறிப்பிட்டு எழுதப்படுபவை எல்லாம் அய்யனார் இல்லை..சொல்லப்போனால் எனக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தமே இல்லை..நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்..

தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி

Ayyanar Viswanath said...

ஆழியூரான்
ஆதண்டார் கோயில் குதிரை படித்ததில்லை..இனிதான் தேட வேண்டும் படித்து முடித்ததும் மடலிடுகிறேன்

Ayyanar Viswanath said...

வீரமணி

இமயத்தின் கோவேறு கழுதைகள் படித்திருக்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று..தமிழ்செல்வி இன்னும் படித்ததில்லை..கிட்டத்தட்ட உங்கள் பகுதியிலதான் நானும் வருவேன்..:)

ஆடுமாடு said...

மண்ணை வண்ணங்களாக குழைத்து எழுதப்படும் எழுத்துக்களில் மட்டுமே உயிர் இருப்பதாக நினைக்கிறேன். கண்மணி குணசேகரனின் கதைகளில் இருக்கிற ஆழமும், அழுத்தமும வெறும் மண்ணின் மனம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதில் ஆண்டாண்டுகளாக முங்கி கிடக்கும் மனிதர்களின் அடையாளம் பதிந்து கிடக்கிறது. முடிந்தால் இதையும் படியுங்கள். பெருமாள் முருகனின் கூள மாதாரி, தமிழ்செல்வியின் கீதாரி, அளம்...இன்னும் பட்டியல் இருக்கிறது. அடுத்து வருகிறேன்.
ஆடுமாடு

ஹரன்பிரசன்னா said...

ஏதோ அவசரத்தில் சட்டென்று முடித்துவிட்டது போல இருக்கிறது பதிவு. இன்னும் எழுதியிருக்கலாம். புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதவும்.

Ayyanar Viswanath said...

ஆடுமாடு
பெருமாள் முருகனின் கூளமாதாரியும் ஏறுவெயிலும் வாசித்திருக்கிறேன்.குறிப்பாய் ஏறுவெயிலில் ஏரி உடைப்பெடுக்கும் அத்தியாயத்தை அடிக்கடி படிப்பதுண்டு..தமிழ்செல்வியை இன்னும் படிக்கவில்லை நிச்சயம் தேடிப்பிடித்து படிக்கிறேன்

Ayyanar Viswanath said...

பிரசன்னா விரிவாய் எழுத முயற்சிக்கிறேன் நன்றி..

Featured Post

test

 test